14.04.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.03.99     Om Shanti     Madhuban


உங்களின் கர்மாதீத் ஸ்திதியை அடைவதற்கு, உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியை அதிகரித்து உங்களையே ஆட்சி செய்பவர் ஆகுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது விசேடமாக நேசிக்கப்படும் இராஜாக் குழந்தைகளை (இராஜ் துலாரே) இறைவனால் நேசிக்கப்படும் குழந்தைகளைப் பார்த்தார். வெகு சில குழந்தைகளே இறைவனின் கனிவையும் அன்பையும் பெறுகிறார்கள். மிகச் சில குழந்தைகளே இத்தகைய பாக்கியத்தைப் பெறுகின்ற தகுதி உடையவர்கள் ஆகுகிறார்கள். இத்தகைய பாக்கியசாலிக் குழந்தைகளைப் பார்க்கும்போது பாப்தாதா மிகவும் களிப்படைகிறார். இராஜா குழந்தை (முடிக்குரிய இளவரசன்) ஆகுவதென்றால் அரச குழந்தை ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் உங்களை அரசர்களாகக் கருதுகிறீர்களா? உங்களின் பெயரே இராஜயோகி என்பதாகும். ஓர் இராஜயோகி ஆகுவதென்றால், அரசனைப் போன்றதொரு குழந்தை ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் தற்சமயமும் அரசர்கள். எதிர்காலத்திலும் அரசர்கள். நீங்கள் உங்களின் இரட்டை அரச அந்தஸ்தை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் ஓர் அரசரா என நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களையே உங்களால் ஆள முடிகிறதா? உங்களின் வேலையாட்கள் எல்லாமே உங்களின் இராச்சியத்தில் உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயல்படுகின்றனவா? ஓர் அரசனின் சிறப்பியல்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? உங்களுக்குள் ஆளுகின்ற சக்தியும் கட்டுப்படுத்தும் சக்தியும் என இரண்டு சக்திகளும் இருக்கின்றனவா என உங்களே கேட்டுப் பாருங்கள். உங்களின் இராச்சியத்தில் உங்களின் வேலையாட்கள் எல்லாம் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா?

இன்று, பாப்தாதா குழந்தைகளின் கட்டுப்படுத்தும் சக்தியையும் ஆள்கின்ற சக்தியையும் சோதித்துப் பார்த்தார். அவர் எதைக் கண்டார்? நீங்கள் எல்லோரும் இதை அறிவீர்கள். இன்னமும், எல்லோரிடமும் நிலையான, இடையூறு இல்லாத இராச்சியம் இல்லை என்பதையே பாப்தாதா கண்டார். அது நிலையாக இருக்க வேண்டும். ஆயினும், அவ்வப்போது அது குழம்பிக் கொண்டே இருக்கிறது. ஏன்? சதா உங்களை ஆள்வதற்குப் பதிலாக, நீங்கள் மற்றவர்களை ஆள முயற்சி செய்கிறீர்கள். இது உங்களின் இராச்சியத்தையும் குழப்புகிறது. உங்களின் பௌதீகப் புலன்கள் புற விடயங்களில் தங்கியிருப்பவை ஆகும்போது, நீங்கள் மற்றவர்களை ஆள முயற்சி செய்கிறீர்கள் என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் மாயையின் இராச்சியத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறீர்கள், மற்றவர்களில் தங்கியிருக்கிறீர்கள் என்பதையே அது குறிக்கிறது. தற்சமயம், சிறுபான்மையினர் ஓகே யாக இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையினர் மாயையின் தற்போதைய விசேடமான ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறார்கள். அதன் பலனாக, துவாபர யுகத்தில் இருந்து கலியுக இறுதிவரையுள்ள சம்ஸ்காரங்கள் வெளிப்பட்டு, உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களுக்கு இடையூறு செய்கின்றன. உங்களின் சொந்த சம்ஸ்காரங்களே உங்களின் சொந்த இராச்சியத்தை இடையூறு செய்கின்றன. குறிப்பாக, வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்கள், நேரத்தை வீணாக்கும் சம்ஸ்காரங்கள், வீணான தொடர்புகளின் சம்ஸ்காரங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அல்லது மற்றவர்களுக்குச் சொல்லுதல் என்ற சம்ஸ்காரங்கள் ஆகும். முதலில் உங்களின் வீணான சம்ஸ்காரங்கள். இரண்டாவதாக, உங்களின் கவனயீனமான சம்ஸ்காரங்களே உங்களின் இராச்சியத்தைப் பல்வேறு இராஜரீகமான முறைகளில் குழப்புகின்றன. இறுதி நேரம் இப்போது நெருங்கி வந்து கொண்டிருந்தாலும், ஆரம்பத்தில் ஒருபோதும் தோன்றாத சில சம்ஸ்காரங்கள், இப்போது வெளிப்படுகின்றன எனப் பல குழந்தைகள் இப்போதும் சொல்கிறார்கள். சம்ஸ்காரங்கள் இப்போதும் சூழலிற்குள் வெளிப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? இந்த முறையிலேயே மாயை உங்களைத் தாக்கி, இந்த இறைபாதையில் உங்களை மனச்சோர்வு அடையச் செய்து, உங்களைத் தனக்குச் சொந்தம் ஆக்கிக் கொள்கிறாள். நீங்கள் இப்போதும் அந்த வழியிலேயே செல்வதனால், சமமானவர் ஆகுவதில் வெற்றி அடைவீர்களா என நீங்கள் நினைக்கிறீர்கள். ஏதாவதொரு விடயத்தில், குறிப்பாக நீங்கள் பலவீனமாக இருக்கும் விடயத்தில், மாயை உங்களை மனச்சோர்வு அடையச் செய்ய முயற்சி செய்வாள். இதனாலேயே, மாயை உங்களின் சம்ஸ்காரங்களைத் தாக்குகிறாள். நீங்கள் மிக நன்றாக முன்னேறிச் சென்றாலும், உங்களின் பழைய சம்ஸ்காரங்களில் ஏதாவதொன்று வெளிப்பட்டு உங்களை மனச்சோர்வு அடைய முயற்சிக்கும் வகையில் மாயை ஏதாவதொரு ரூபத்தை எடுப்பாள். உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் அனைத்தும் முடிவில் அழிக்கப்படவே வேண்டும். ஆகவே, இன்னமும் எஞ்சியிருக்கும் சம்ஸ்காரங்கள் எவையும் சிலவேளைகளில் வெளிப்படக்கூடும். எவ்வாறாயினும், பாக்கியசாலிக் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும், பயப்பட வேண்டாம், ஆனால் மாயையின் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என பாப்தாதா சமிக்கை செய்கிறார். சோம்பேறித்தனம் மற்றும் வீணாக்குதல் என்ற இரண்டிலும் விசேட கவனம் செலுத்துங்கள். இதில் எதிர்மறையான தன்மையும் அடங்கியுள்ளது. இந்த இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்துங்கள். தற்சமயம், மாயை இந்த முறையிலேயே உங்களைத் தாக்குகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தந்தையின் சகவாசத்தையும் ஒன்றிணைந்த ரூபத்தின் அனுபவத்தையும் உங்களுக்குள் வெளிப்பட்ட நிலையில் வைத்திருங்கள். எப்படியோ தந்தை எனக்குச் சொந்தமானவர்தானே, அவர் என்னுடன் இருக்கிறார்தானே என நினைக்காதீர்கள். அவரின் சகவாசத்தின் நடைமுறை அனுபவத்தை வெளித்தெரியும் வகையில் நீங்கள் வைத்திருந்தால், மாயையின் இந்தத் தாக்குதல் ஒரு தாக்குதலாக இருக்காது. ஆனால், அதற்குப் பதிலாக அது மாயையின் தோல்வியாகவே அமையும். அது மாயையின் தோல்வியாகவே அமையும். அவளின் தாக்குதலாக அல்ல. ஒருபோதும் பயப்பட்டு, என்ன நடக்கிறது அல்லது ஏன் இது நடக்கிறது என நினைக்காதீர்கள். உங்களின் தைரியத்தைப் பேணுவதுடன், தந்தையின் சகவாசத்தைக் கொண்டிருப்பதை உணர்ந்தவராக இருங்கள். உங்களிடம் இன்னமும் தந்தையின் சகவாசம் உள்ளதா அல்லது அந்தச் சகவாசத்தின் அனுபவம் உங்களுக்குள் அமிழ்ந்துள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். தந்தை உங்களுடன் இருக்கிறார் என்ற ஞானம் உங்களுக்குள் உள்ளது. எப்படியாயினும், இந்த ஞானத்துடன்கூடவே, உங்களுக்குத் தந்தையின் சக்தியையும் தெரியும். அவரே சர்வசக்திவான், சகல சக்திகளையும் கொண்டவர். ஆகவே, சகல சக்திகளின் சக்தியும் உங்களுக்குள் வெளிப்பட்டிருப்பதை அனுபவம் செய்யுங்கள். இதுவே தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்தல் எனப்படுகிறது. கவனயீனமாகி, ‘எனக்குத் தந்தையை விட யார் இருக்கிறார்கள்? தந்தை எப்போதும் எனக்காக இருக்கிறார்’ என நினைக்க ஆரம்பிக்காதீர்கள். அவர் உங்களுக்காக இருந்தால், சக்தியும் உங்களுடன் இருக்கிறதா? இறைவன் சர்வவியாபி என்றால், அவரின் நற்குணங்களையும் எங்கும் பார்க்க முடியும், அனுபவம் செய்ய முடியும் என நீங்கள் உலக மக்களுக்குச் சொல்கிறீர்கள். அதனால், பாப்தாதாவும் உங்களைக் கேட்கிறார், அதாவது, தந்தை உங்களுடன் இருந்தால், உங்களுடன் இணைந்திருந்தால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சக்தியை அனுபவம் செய்கிறீர்களா? ஏனையவர்களும் இந்தச் சக்தியை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரட்டை வெளிநாட்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு இந்தச் சக்தி இருக்கிறதா? உங்களுக்கு அது எப்போதும் இருக்கிறதா? எல்லோரும் முதல் கேள்விக்கு ‘ஆமாம்’ என்றே பதில் அளிக்கிறீர்கள். ஆமாம். எவ்வாறாயினும், அது நிலையானதா என உங்களிடம் இரண்டாவது கேள்வி கேட்கப்பட்டால், நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். எனவே, அது நிலையானதாகவும் துண்டிக்கப்பட முடியாததாகவும் இல்லைத்தானே? நீங்கள் என்ன சவால் விடுக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நிலையான இராச்சியத்தை உருவாக்குகிறீர்களா அல்லது இடையூறுகள் நிறைந்த இராச்சியத்தை உருவாக்குகிறீர்களா? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இது ஒரு நிலையான இராச்சியம், அல்லவா? ஆசிரியர்களே, பேசுங்கள்! இது நிலையானதா? ஆகவே, உங்களின் சொந்த இராச்சியம் நிலையானதா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு நல்ல இராச்சியத்தை, எல்லா வேளைக்குமான ஒரு வெகுமதியைப் பெற விரும்புகிறீர்களா? அல்லது, அவ்வப்போது உங்களின் இராச்சியம் குழப்பத்திற்கு உள்ளாகினால் பரவாயில்லையா? இந்த முறையில் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? எல்லா வேளைக்கும் பேறுகள் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினாலும், முயற்சிகளைப் பொறுத்தவரை, அது சிலவேளைகளில் மட்டும் இருந்தால் பரவாயில்லை என நினைக்கிறீர்களா? வெளிநாட்டவர்கள் தமது வாழ்வின் அகராதியில் இருந்து என்ன வார்த்தைகளை நீக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘சிலவேளைகளில்’ மற்றும் ‘ஏதாவது’. நீங்கள் இன்னமும் ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது அது முடிந்துவிட்டதா? ஜெயந்தி, கூறுங்கள்! பேசுங்கள்! உங்களால் பெறுபேற்றைக் கொடுக்க முடியும்தானே? ‘சிலவேளைகளில்’ என்பது முடிந்துவிட்டதா? ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தை எல்லா வேளைக்குமாக முடிவடைந்துவிட்டது என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அது முடிவடைந்துவிட்டதா அல்லது இப்போது முடிவடைகிறதா? உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! இங்கே உங்கள் எல்லோருடைய கைகளும் தொலைக்காட்சியில் புலப்படாவிட்டாலும், அவை அனைத்தும் சூட்சும வதனத்தில் உள்ள தொலைக்காட்சியில் தோன்றியுள்ளன. ஏனென்றால், இந்தத் தொலைக்காட்சி கலியுகத்திற்குரியது. ஆனால் அந்தத் தொலைக்காட்சி சூட்சுமவதனத்தின் மாயாஜாலத் தொலைக்காட்சி. அதனால் எல்லோருடைய கைகளும் அங்கே புலப்படும். மிகவும் நல்லது! உங்களில் பலர் கைகளை உயர்த்தினீர்கள். கைகளை உயர்த்திய எல்லோருக்கும் எல்லா வேளைக்கும் வாழ்த்துக்கள். அச்சா. இப்போது, பாரத மக்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இதை நடைமுறையில் செய்தவர்கள் மட்டுமே கைகளை உயர்த்த வேண்டும். வெறுமனே உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள். எல்லா வேளையும் தங்களை ஆளக்கூடியவர்களும் தமது பௌதீகப் புலன்களை சட்டத்திற்கும் ஒழுங்குமுறைக்கும் ஏற்ப வைத்திருக்கக்கூடியவர்களும் மட்டுமே உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உறுதியாக உயர்த்துங்கள். பலவீனமாக அல்ல. நீங்கள் ஒன்றுகூடலில் உங்களின் கைகளை உயர்த்தியுள்ளீர்கள் என்பதை சதா நினைவில் வைத்திருங்கள். நீங்கள் பாப்தாதாவிற்கும் மிக இனிமையான விடயங்களைச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள்: பாபா, உங்களுக்கு எல்லாமே தெரியும். சிலவேளைகளில் மாயை வருகிறாள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் உயர்த்திய கையின் கௌரவத்தைப் பேணுங்கள். குறைந்தபட்சம் நீங்கள் தைரியசாலியாக இருந்தீர்கள். ஆகவே, ஒருபோதும் உங்களின் தைரியத்தை இழக்காதீர்கள். நீங்கள் தைரியசாலியாக இருக்கும்போது, நிச்சயமாக பாப்தாதாவின் உதவியைப் பெறுவீர்கள்.

இன்று, தற்காலத்திற்கேற்ப, உங்களையும் உங்களின் பௌதீகப் புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப் பொறுத்தவரை, உங்களுக்குள் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பதைப் பொறுத்தவரை, இந்தச் சக்தி உங்களுக்குள் அதிகளவு தேவைப்படுவதை பாப்தாதா கண்டார். குழந்தைகளான உங்களின் இதயபூர்வமான உரையாடலைக் கேட்கும்போது, எப்படி உங்களால் நான்கு மணிநேரம் சக்திவாய்ந்த நினைவைக் கொண்டிருக்க முடியவில்லை என நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது, பாப்தாதா புன்னகைக்கிறார். பாப்தாதா எட்டு மணிநேரம் என்பதை நான்கு மணிநேரமாக மாற்றினார். ஆனால் குழந்தைகளான நீங்களோ இப்போது இரண்டு மணிநேரம் போதும் எனக் கூறுகிறீர்கள்! எனவே, இதுதான் உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியா? நீங்கள் இதை இப்பொழுதில் இருந்தே பயிற்சி செய்யாவிட்டால், எப்படி நீங்கள் திறமைச்சித்தி அடையப் போகின்றீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே ஆள்பவர் ஆகவேண்டும். குழந்தைகளே, நீங்கள் சிரிக்கிறீர்கள். ஏனென்றால், பாபா இன்று உங்களின் உரையாடல்கள் எல்லாவற்றையும் கேட்டுள்ளார். நீங்கள் பாபாவையும் சிரிக்கச் செய்கிறீர்கள். ஏனென்றால், உங்களால் மூன்று நிமிடம் எண்ணக்கட்டுப்பாட்டு வேளையைக் (டிரபிக் கொன்ட்ரோல்) கடைப்பிடிக்க முடியாமல் உள்ளது என நீங்கள் சொல்கிறீர்கள். அதற்குப் பதிலாக, அது உங்களின் சரீரங்களின் கட்டுப்பாடாகவே உள்ளது. உங்களால் அசையாமல் நிற்க முடிகிறது. எவ்வாறாயினும், சிலவேளைகளில், உங்களால் உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முடிகிறது. ஏனைய வேளைகளில் முடிவதில்லை. ஏன்? நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டுச் சக்தியை அதிகரிக்க வேண்டும். உங்களின் கையை மேலே உயர்த்தும்படி நீங்கள் கட்டளை இட்டதும், அது மேலே உயர்கிறது. எனவே, உங்களின் மனதிற்கும் கட்டளை இடுங்கள். உங்களின் கையில் முறிவு இல்லாவிட்டால், உங்களால் அதை உயர்த்த முடியும். அதேபோல், உங்களின் மனமெனும் சூட்சுமமான சக்தி உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். நீங்கள் அதை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும். அதை ‘நிறுத்து’ என்று கட்டளை இட்டவுடனேயே, அது நின்றுவிட வேண்டும். அதைச் சேவையைப் பற்றிச் சிந்திக்கச் சொன்னவுடன், அது சேவையைப் பற்றிச் சிந்திப்பதில் மும்முரமாக ஈடுபட வேண்டும். அதைப் பரந்தாமத்திற்குச் செல்லும்படி நீங்கள் சொன்னதும், அது பரந்தாமத்திற்குச் செல்ல வேண்டும். அதைச் சூட்சும வதனத்திற்குச் செல்லும்படி கூறுங்கள். அது ஒரு விநாடிக்குள் அங்கே செல்ல வேண்டும். அதை என்ன சிந்திக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்களோ, அதனால் அதைச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். இப்போது இந்தச் சக்தியை அதிகரியுங்கள். உங்களின் நேரத்தைச் சிறிய சம்ஸ்காரங்களிலும் போராடுவதிலும் வீணாக்காதீர்கள். இன்று நீங்கள் இந்த சம்ஸ்காரத்தை விரட்டினீர்கள், நேற்று வேறொரு சம்ஸ்காரத்தை விரட்டினீர்கள் எனச் சொல்லாதீர்கள். கட்டுப்படுத்தும் சக்தி உங்களிடம் வந்தவுடன், வெவ்வேறு சம்ஸ்காரங்களுக்காக வெவ்வேறு காலப்பகுதிகளை நீங்கள் செலவிட வேண்டியதில்லை. உங்களின் மனதிடம், ‘சிந்திக்காதே, எதையும் செய்யாதே, பேசாதே’ எனச் சொன்னவுடன், அதை ‘நிறுத்து’ என்று சொன்னவுடனேயே அது நிறுத்த வேண்டும். உங்களின் கர்மாதீத் ஸ்திதியை அடைவதற்கான வழிமுறை இதுவேயாகும். நீங்கள் கர்மாதீத் அடைய விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் இப்படி ஆகவேண்டும் என பாப்தாதாவும் கூறுகிறார். இவ்வாறு ஆகுவதற்கு வேறு எவரும் இங்கே வரமாட்டார்கள். நீங்களே இப்படி ஆகவேண்டும். பாபா உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார். ஆனால், கர்மாதீத் ஆனவர்களை மட்டுமே அழைத்துச் செல்வார். நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்வீர்கள்தானே? அல்லது, நீங்கள் பின்னால் செல்வீர்களா? (நாங்கள் உங்களுடனேயே செல்வோம்). நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்வீர்கள் எனச் சொன்னபோது நன்றாகப் பேசினீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் கணக்குகளைத் தீர்த்துவிடுவீர்களா எனக் கேட்டபோது, ‘ஹா ஜி’ எனச் சொல்லவில்லை. நீங்கள் கர்மாதீத் ஆகியபின்னர் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள்தானே? தந்தையுடன் திரும்பிச் செல்வதென்றால், அவரின் சகபாடியாகத் திரும்பிச் செல்லுதல் என்று அர்த்தம். ஒரு தம்பதி நல்லதொரு ஜோடியாக இருக்க வேண்டும். அல்லது, ஒருவர் நெட்டையாகவும் மற்றவர் குட்டையாகவும் இருக்க முடியுமா? அவர்கள் சமமாக இருக்க வெண்டும். அதேபோல், நீங்கள் கர்மாதீத் அடைய வேண்டும். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்போது, உங்களின் இராச்சியத்தை மிக நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சபையைக் கூட்டுங்கள். நீங்களே உங்களின் இராச்சியத்தை ஆள்பவர், அப்படித்தானே, எனவே, உங்களின் சொந்தச் சபையைக் கூட்டி, உங்களின் வேலைக்காரர்களை அவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேளுங்கள். எல்லாம் ஒழுங்குமுறைப்படி நடக்கிறதா எனச் சோதியுங்கள். தந்தை பிரம்மாவும் ஒவ்வொரு நாளும் சபையைக் கூட்டினார். டயறியில் அதன் பிரதி உங்களிடமும் உள்ளது. அதை அவர்களுக்குக் காட்டுங்கள்! தந்தை பிரம்மாவும் முயற்சி செய்தார். ஒவ்வொரு நாளும் அவர் தனது சொந்த சபையைக் கூட்டியதால் மட்டுமே அவர் கர்மாதீத் ஆகினார். எனவே, இப்போது உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? அல்லது, நீங்கள் என்றும் தயாரா? இந்த ஸ்திதியைக் கொண்டிருப்பதன் மூலம், சேவை மிக விரைவாக இடம்பெறும். ஏன்? ஏனென்றால், உங்களின் எண்ணங்கள், உங்களின் வார்த்தைகள், உங்களின் முகங்களாலும் செயல்களாலும் தொடர்பாடும் விதம் அனைத்தும் ஒரே வேளையில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் செய்யும்போது அது நல்லதொரு பெறுபேற்றை ஏற்படுத்தும். நீங்கள் இந்த சாதானா (ஆன்மீக முயற்சி) செய்ய வேண்டியிருப்பதனால் மிகச் சிறிதளவு சேவையை இடம்பெறும் என நினைக்காதீர்கள். இல்லை. நீங்கள் செய்யும் சேவையில் இலகுவாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சேவை செய்யும் கருவிகள் எல்லோருக்கும் இத்தகைய ஸ்திதியை ஒன்றுதிரட்டிய முறையில் கொண்டிருந்தால், அங்கே குறைந்தளவு முயற்சியில் உங்களால் அதிகளவு வெற்றியை அடைய முடியும். எனவே, கட்டுப்படுத்தும் சக்தியில் விசேட கவனம் செலுத்துங்கள். உங்களால் உங்களின் எண்ணங்களையும் உங்களின் நேரத்தையும் உங்களின் சம்ஸ்காரங்களையும் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் அரசர்கள் என பாப்தாதா உங்களுக்கு எத்தனையோ தடவைகள் கூறியுள்ளார். நீங்கள் உங்களின் மனங்களையும் புத்திகளையும் நீங்கள் விரும்பும்போது, விரும்பியபடி, விரும்பிய இடத்தில், விரும்பிய அளவு காலத்திற்கு உங்களால் சட்டத்திற்கும் ஒழுங்குமுறைக்கும் ஏற்ப வைத்திருக்க வேண்டும். உங்களின் மனதிற்கு எதையாவது செய்ய வேண்டாம் என நீங்கள் கூறியும், உங்களின் மனம் அதைச் செய்யுமாயின், அது இன்னமும் நடக்குமாயின், அதை சட்டமும் ஒழுங்குமுறையும் எனச் சொல்ல முடியாது. எனவே, உங்களையே ஆள்பவர்களே, உங்களின் இராச்சியத்தை நடைமுறைப்படுத்துங்கள். நீங்கள் அவற்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் அவற்றை நடைமுறைப்படுத்துகிறீர்கள். ஆனால் பாப்தாதா ஏற்கனவே ‘சதா’ என்ற வார்த்தையைச் சேர்க்கும்படி உங்களுக்குக் கூறியுள்ளார். பாப்தாதா மேலும் ஒருதடவை, இந்தப் பருவகாலத்திற்குக் கடைசித் தடவையாக வருவார். இன்னுமொரு முறை எஞ்சியுள்ளது. இந்தக் கடைசித் தடவையின்போது பாபா உங்களின் பெறுபேற்றைக் கேட்பார். உங்களுக்கு பதினைந்து நாட்கள் உள்ளன. எனவே, நீங்கள் பதினைந்து நாட்களில் ஏதாவது பெறுபேற்றைக் காட்டுவீர்களா அல்லது மாட்டீர்களா? ஆசிரியர்களே, பேசுங்கள்! இந்தப் பெறுபேற்றை நீங்கள் பதினைந்து நாட்களில் கையளிப்பீர்களா?

அச்சா, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், பதினைந்து நாட்களில் இந்தப் பெறுபேற்றைக் காட்டுவீர்களா? இப்போதே ஆமாம் அல்லது இல்லை எனச் சொல்லுங்கள்! இப்போது உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் உயர்த்திய கைகளின் கௌரவத்தைப் பேணுங்கள்! அச்சா. நீங்கள் முயற்சி செய்வீர்கள் என நினைப்பவர்கள், முயற்சி செய்வோம் எனச் சொல்பவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள். ஞான சரோவரையும் சாந்திவானையும் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! (பாப்தாதா மதுவனத்தையும் ஞான சரோவரையும் சாந்திவானையும் சேர்ந்த பிரதானமான கருவிகளைத் தனக்கு முன்னால் அழைத்தார்.)

எல்லோரும் உங்கள் எல்லோரையும் பார்க்க முடியும் என்பதனாலேயே பாப்தாதா உங்களை அழைத்துள்ளார். உங்கள் எல்லோரையும் காண்பதில் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். (சபையினரிடம்) இப்போது பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என அவர் உங்களுக்குச் சொல்வார். நான்கு யாத்திரைத்தலங்கள் உள்ளன - பாண்டவபவன், சாந்திவான், ஞானசரோவர் மற்றும் வைத்தியசாலை. ஐந்தாவது சிறியது. பாப்தாதா இந்த நான்கிலும் நம்பிக்கை வைத்துள்ளார். மூன்று மாதங்களில், அரசர்களான உங்களின் பெறுபேறு, நிலையாக, குழப்பம் இல்லாததாக, தடைகள் அற்றதாக, அசைக்க முடியாத ஆட்சியாளர்களாக இருப்பதை பாப்தாதா காண விரும்புகிறார். மூன்று மாதங்களில், எங்கிருந்தும் வேறு எந்தவொரு சூழ்நிலையும் கேட்கக்கூடாது. நீங்கள் எல்லோரும் உங்களையே ஆளும் முதலாம் இலக்க ஆட்சியாளர்கள் ஆகவேண்டும். இந்தப் பெறுபேற்றை உங்களால் மூன்று மாதங்களில் கொடுக்க முடியுமா? (நிர்வேர் சகோதரரைக் கேட்கிறார்). நீங்கள் பாண்டவர்களைப் பிரதிநிதிப்படுத்துகிறீர்கள். இது சாத்தியமா? தாதி இங்கே இருக்கிறார். ஆனால் முன்னால் அமர்ந்திருக்கும் நீங்கள் எல்லோரும் அதில் அடங்குகிறீர்கள். இது சாத்தியமா? (ஆம், இது சாத்தியம் என தாதி கூறுகிறார்). பாண்டவபவனில் இருந்து இங்கே வந்திருப்பவர்கள், இது சாத்தியம் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள். அச்சா, யாராவது பலவீனமாக இருந்தால் அல்லது யாருக்காவது ஏதாவது நடந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களின் சகபாடிகளுக்கு சகவாசத்தைக் கொடுக்கும் அதேவேளை இந்தப் பெறுபேற்றைக் கையளிக்க முடியும் என நம்பும் தைரியம் யாருக்கு இருக்கிறது? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? இது சாத்தியமா? அல்லது, உங்களுக்கு மட்டுமே அந்தத் தைரியம் உள்ளதா? உங்களால் மற்றவர்களின் விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியுமா? மற்றவர்களின் தவறுகளை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? சூழலிற்குள் எதையும் பரப்பாதீர்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தளவை உங்களால் செய்ய முடியுமா? உரத்து ‘ஹா ஜி’ எனச் சொல்லுங்கள். வாழ்த்துக்கள்! பாபா உங்களின் பதிவேட்டை மூன்று மாதங்களில் பார்ப்பார். பிழையான பதிவேடுகளோ அல்லது முறைப்பாடுகளோ இருக்கக்கூடாது. இந்த அதிர்வலைகளை ஒருவருக்கொருவர் வழங்குங்கள். அன்பு நிறைந்த அதிர்வலைகளை வழங்குங்கள். எந்தவொரு சண்டைசச்சரவுகளும் இருக்கக்கூடாது.

அதேபோல், இரட்டை வெளிநாட்டவர்களும் இதே பெறுபேற்றைக் கொடுப்பீர்களா? நீங்கள் எல்லோரும் இப்படி ஆகவேண்டும்தானே? இந்தப் பெறுபேற்றை மூன்று மாதங்களில் உங்களாலும் கையளிக்க முடியும், அத்துடன் உங்களின் சகபாடிகளையும் அவ்வாறு செய்ய வைக்க முடியும் என நம்பும் இரட்டை வெளிநாட்டவர்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இங்கிருக்கும் எவராவது நீங்கள் முயற்சி செய்வீர்கள், ஆனால், உங்களால் இந்தக் கணத்தில் உறுதியாகச் சொல்ல முடியாது என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களிடம் சுத்தமான இதயம் உள்ளது. சுத்தமான இதயத்தைக் கொண்டிருப்பவர்கள, உதவியைப் பெறுவார்கள். (அதன்பின்னர், பாப்தாதா சகல பிராந்தியங்களையும் சேர்ந்தவர்களைத் தமது கைகளை உயர்த்தச் செய்தார். அத்துடன் அவர்களின் இடங்களில் எழுந்து நிற்கும்படியும் செய்தார். முதலில் மகாராஷ்ராவைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், பின்னர் டெல்லி, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையும் எழுந்து நின்று ஒரு சத்தியத்தைச் செய்ய வைத்தார். அதன்பின்னர் உத்தரப்பிரதேசத்தில் சேவை செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கப்பட்டன.) அச்சா.

எங்கும் உள்ள உங்களையே ஆள்கின்ற ஆத்மாக்கள் எல்லோருக்கும், நிலையான இராச்சியத்திற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவர்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும் தந்தையைப் போல் தமது கர்மாதீத் ஸ்திதியை அடைபவர்களுக்கும் தந்தையைப் பின்பற்றும் தீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கும், மற்றவர்களுக்கு நல்லாசிகளை வழங்குவதுடன், நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் ஒத்துழைப்பை சதா வழங்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
உங்களுக்குத் தடைகளை ஏற்படுத்தும் ஆத்மாக்களை உங்களின் ஆசிரியர்களாகக் கருதி அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் அனுபவத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.

தடைகளை உருவாக்குவதற்குக் கருவிகள் ஆகும் ஆத்மாக்களைத் தடைகளை உருவாக்குபவர்களாகப் பார்க்காதீர்கள். ஆனால் இத்தகைய ஆத்மாக்களை நீங்கள் முன்னேறிச் செல்வதற்கான பாடங்களை உங்களுக்குக் கற்பிக்கும் கருவி ஆத்மாக்களாகக் கருதுங்கள். அவர்களை உங்களை அனுபவசாலிகள் ஆக்கும் உங்களின் ஆசிரியர்களாகக் கருதுங்கள். உங்களை இகழ்பவர்கள் உங்களின் நண்பர்கள் என நீங்கள் கூறுவதனால், உங்களைத் தடைகளினூடாகச் செல்ல வைத்து உங்களை அனுபவசாலிகள் ஆக்குபவர்கள் உங்களின் ஆசிரியர்களே. ஆகவே, தடைகளை உருவாக்கும் ஆத்மாக்களை அந்தப் பார்வையுடன் பார்ப்பதற்குப் பதிலாக, சதா அவர்களைத் தடைகளை வெற்றி கொள்ளச் செய்வதற்கான கருவிகளாகவும் உங்களை அசைக்க முடியாதவர்கள் ஆக்குவதற்கான கருவிகளாகவும் கருதுங்கள். இந்த முறையில் உங்களின் அனுபவத்தின் அதிகாரம் தொடர்ந்து அதிகரிக்கும்.

சுலோகம்:
முறைப்பாடுகளின் பைலை முடித்து, நன்றாகவும் தெளிவானவர்களாகவும் ஆகுங்கள்.