02.01.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஒருவருடன் ஒருவர் பெருமளவு ஆன்மீக அன்புடன் வாழ வேண்டும். அபிப்பிராய பேதம் எதுவும் ஏற்படுவதை என்றுமே அனுமதிக்காதீர்கள்.
கேள்வி:
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த இதயத்தைக் கேட்க வேண்டியது என்ன?பதில்:
உங்கள் இதயத்தைக் கேளுங்கள்:1) நான் கடவுளின் இதயத்தில் அமர்ந்திருக்கின்றேனா? 2) நான் எந்தளவுக்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளேன்? 3) நான் இறை சேவையில் ஏதாவது தடைகளை உருவாக்குகிறேனா? 4) நான் எப்பொழுதும் பாலும், சீனியும் போல் வாழ்கின்றேனா? நான் அனைவருடனும் ஒற்றுமையாக இருக்கின்றேனா? 5) நான் எப்பொழுதும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றேனா?பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இறை சமுதாயத்தினர். முன்னர் நீங்கள் அசுர சமுதாயத்துக்குச் சொந்தமாக இருந்தீர்கள். யார் கள்ளங்கபடமற்ற பிரபு என அசுர சமுதாயத்தினர் அறியார்கள். அவர்கள் சிவன், சங்கரரில் இருந்து வேறுபட்டவர் என்பதையும், சங்கர் ஒரு தேவர், ஆனால் சிவனோ தந்தை ஆவார் என்பதையும் அறியமாட்டார்கள். அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது இறை சமுதாயத்தினர், அதாவது, இறை குடும்பத்தினர். அது இராவணனின் அசுர குடும்பம். அதிகளவு வித்தியாசம் இருக்கின்றது! நீங்கள் இப்பொழுது இறை குடும்பத்தில் இருந்து, எவ்வாறு ஒருவரோடு ஒருவர் ஆன்மீக அன்பைக் கொண்டிருப்பதென இறைவனிடம் இருந்து கற்கின்றீர்கள். இங்கே, இந்தப் பிராமணக் குடும்பத்திலேயே, நீங்கள் உங்களை ஒருவர் மீது ஒருவருடனான ஆன்மீக அன்பினால் நிரப்பிக் கொள்ள வேண்டும். முழுமையான அன்பைக் கொண்டிராதவர்களால், முழுமையான அந்தஸ்தைக் கோர முடியாது. அங்கே ஒரு தர்மமும், ஓர் இராச்சியமும் இருக்கின்றன் அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை இடுவதில்லை. இங்கே எந்த இராச்சியமும் இல்லை. பிராமணர்களுக்கு இடையேயும் சரீர உணர்வின் காரணமாக அபிப்பிராய பேதங்கள் உள்ளன. அபிப்பிராய பேதங்கள் கொண்டவர்கள், தாங்கள் சித்தி அடைய முன்னர் தண்டனையை அனுபவம் செய்வார்கள். பின்னர், அங்கே அவர்கள் ஒரு தர்மத்தில் உள்ளபொழுது, அமைதி இருக்கின்றது. இங்கே மறுபுறத்தில் அசுர சமுதாயம் உள்ளது, அதாவது, அசுர குடும்பமுறை உள்ளது. இங்கோ இந்தப் புறத்தில் இறை குடும்பமுறை உள்ளது. நீங்கள் எதிர்காலத்திற்காகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள். தந்தை உங்களைச் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆக்குகின்றார். அனைவரும் அவ்வாறு ஆகுவதில்லை. ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் வெற்றி மாலையின் மணிகள் ஆகுகின்றார்கள். அவ்வாறு ஆகாதவர்கள், பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். அங்கே தேவர்களின் அரசாங்கம் இருக்கின்றது. அங்கே 100 சதவீதம் அமைதி, தூய்மை, செழிப்பு இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது இந்தப் பிராமண குலத்திலேயே தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். சிலர் மிக நன்றாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டுகின்றனர். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராக இருக்கும் பொழுதே, இறை குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆன்மீக அன்பு இருக்க முடியும். இதனாலேயே நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். இறுதியில், அனைவரது ஸ்திதியும் நிலையானதாகவோ அல்லது ஒரேமாதிரியாகவோ இருக்க மாட்டாது. தண்டனையை அனுபவித்த பின்னர், சிலருடைய அந்தஸ்து அழிக்கப்பட்டு, அவர்கள் தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவார்கள். பிராமணர்கள் பாலும், சீனியும் போன்று ஒன்றாக வாழாமல், உப்புநீர் போன்று வாழ்ந்து, தெய்வீகக் குணங்களையும் கிரகிக்காது விடின், எவ்வாறு அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும்? உப்புநீர் போன்றிருப்பதால், அவர்கள் சிலநேரங்களில் இறைசேவையில் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். அதன் பலனாக அவர்களால் அந்தளவு உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. ஒருபக்கத்தில் அவர்கள் பாலும், சீனியும் போன்று ஆகுவதற்கு முயற்சி செய்கின்றார்கள், மறுபக்கத்தில் மாயை அவர்களை உப்புநீர் போன்று ஆக்குகின்றாள். இதன் காரணமாகவே, சேவைக்குப் பதிலாக அவச்சேவை இடம்பெறுகின்றது. தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இறை குடும்பத்தினர். நீங்கள் கடவுளுடனேயே வசிக்கின்றீர்கள். உங்களிற் சிலர் அவருடனேயே ஒன்றாக வசிக்கின்றீர்கள், ஏனையோர் மற்றைய நகரங்களில் வசிக்கின்றார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளீர்கள். தந்தை பாரதத்திலேயே வருகின்றார். மக்கள் சிவபாபா எப்பொழுது வருகின்றார் என்றோ அல்லது அவர் வருகின்ற பொழுது என்ன செய்கின்றார் என்றோ எதையுமே அறியார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியும் அறிவீர்கள். எவ்வாறு இந்தச் சக்கரம் சுழல்கின்றது என்றோ அல்லது இப்பொழுது சக்கரத்தின் என்ன காலகட்டம் என்றோ இந்த உலகிலுள்ள எவருமே அறிய மாட்டார்கள். அவர்கள் காரிருளினுள் இருக்கின்றார்கள். படைப்பவரான தந்தை வந்து, உங்களுக்குச் செய்திகள் அனைத்தையும் கூறுகின்றார். அத்துடன் அவர் கூறுகின்றார்: ஓ சாலிகிராம்களே, என்னை நினைவு செய்யுங்கள்! சிவபாபா இதனைத் தனது குழந்தைகளுக்குக் கூறுகின்றார். நீங்கள் தூய்மையாக விரும்புகிறீர்கள், இல்லையா? நீங்கள் அழைத்துக் கொண்டிருந்தீர்கள். நான் இப்பொழுது வந்துள்ளேன். சிவபாபா மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சிவாலயமாக மாற்றுவதற்கு வருகின்றார். இராவணன் அதை விபச்சார விடுதி ஆக்கியுள்ளான். தாங்கள் தூய்மை அற்றவர்களும், விகாரமானவர்களும் என்று அவர்களே பாடுகின்றனர். சத்தியயுகத்தில் பாரதம் முற்றிலும் விகாரம் அற்றதாக இருந்தது. விகாரமான மனிதர்கள் விகாரமற்ற தேவர்களைப் பூஜிக்கின்றனர். விகாரம் அற்றவர்களாக இருந்தவர்களே, பின்னர் விகாரமானவர்கள் ஆகினார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தவர்கள் விகாரம் அற்றவர்களாக இருந்தார்கள், பின்னர் அவர்களே விகாரமான பூஜிப்பவர்கள் ஆகினார்கள். அதனாலேயே அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களை விகாரம் அற்றவர்கள் ஆக்குங்கள்! தந்தை கூறுகின்றார்: இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, தமோபிரதானில் இருந்து நீங்கள் சதோபிரதான் தேவர்கள் ஆகுவீர்கள். அதன்பின்னர், நீங்கள் சந்திர வம்சத்து சத்திரிய குலத்திற்குள் செல்வீர்கள். இந்நேரத்தில் நீங்கள் இறைகுடும்பத்தவர், பின்னர் 21 பிறவிகளுக்கு நீங்கள் தேவ குடும்பத்துக்குள் செல்வீர்கள். நீங்கள் இந்த இறுதிப் பிறவியை இறை குடும்பத்தில் கழிக்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பிறவியில் முயற்சி செய்து, சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள். நீங்கள் ஆட்சிசெய்தீர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். கடவுளே தந்தை என்பதும், நாங்கள் அவரது குழந்தைகள் என்பதும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். எனவே இது ஒரு குடும்பம் ஆகும். பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும், தந்தையும், நாங்கள் உங்களின் குழந்தைகள்; உங்கள் கருணையினால் நாங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றோம். எனவே இது ஒரு குடும்பம் ஆகும். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நிச்சயமாக எனது குடும்பத்தினர், ஆனால் நாடகத்துக்கேற்ப, நீங்கள் இராவண இராச்சியத்திற்குள் பிரவேசித்தவுடன், துன்பத்திற்குள் சென்றதால், என்னை அழைக்கின்றீர்கள். இந்நேரத்தில் நீங்கள் மிகச்சரியான குடும்பத்தவர் ஆகுகின்றீர்கள். நான் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை உங்களுக்குத் தருகின்றேன். இந்த ஆஸ்தி தேவ குடும்பத்தில் 21 பிறவிகளுக்கு எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கும். தேவ குடும்பம் சத்திய, திரேதா யுகங்களினூடாக நீடிக்கின்றது. பின்னர், அது இராவண இராச்சியமாக ஆகும்பொழுது, நீங்கள் தேவ தர்மத்துக்குச் சொந்தமானவர்கள் என்பதை மறந்து விடுகின்றீர்கள். பாவப் பாதையில் செல்வதனால் நீங்கள் அசுர குடும்பத்தினர் ஆகுகின்றீர்கள். நீங்கள் 63 பிறவிகளாக ஏணியில் கீழே இறங்குகின்றீர்கள். இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். நீங்கள் ஆதியில் தேவ தர்மத்துக்குச் சொந்தமானவர்கள். சத்தியயுகத்துக்கு முன்னர் கலியுகம் இருந்தது. நீங்கள் சங்கமயுகத்தில் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றப்பட்டீர்கள். இடையிலேயே சங்கமயுகம் இருக்கின்றது. நீங்கள் பிராமண தர்மத்திலிருந்து, தேவ தர்மத்தவர் ஆகுகின்றீர்கள். எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணன் தங்களது இராச்சியத்தைக் கோரினார்கள் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னர் அசுர இராச்சியமே இருந்தது. எனவே எவ்வாறு, எப்பொழுது, அது தேவ இராச்சியம் ஆகியது? தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும், சங்கமயுகத்தில் வந்து உங்களைப் பிராமண, தேவ, சத்திரிய தர்மங்களினுள் எடுத்துச் செல்கின்றேன். இது இறை குடும்பம் ஆகும். அனைவரும் தந்தையாகிய கடவுள் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் தந்தையை அறிந்து கொள்ளாததால், அவர்கள் அனாதைகள் ஆகிவிட்டார்கள். இதனாலேயே தந்தை ஒளியை ஏற்றுவதற்கு, இந்தக் காரிருளினுள் வருகின்றார். சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் கற்று, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள். மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதால், சிவனின் பிறந்ததினத்தின் பின்னர் என்ன வருகின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவ இராச்சியத்தின் பிறந்ததினமே நிச்சயமாக இருக்க வேண்டும். தந்தையான சுவர்க்கக் கடவுள், சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்குச் சுவர்க்கத்தினுள் பிரவேசிப்பதில்லை. அவர் கூறுகின்றார்: நான் நரகத்துக்கும், சுவர்க்கத்துக்கும் இடையில் சங்கமயுகத்தில் வருகின்றேன். மக்கள் சிவராத்திரி (சிவனின் இரவு) பற்றிப் பேசுகின்றார்கள். எனவே நான் இரவிலேயே வருகின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் இதைப் புரிந்துகொள்ளலாம். இதைப் புரிந்து கொண்டவர்கள், இவ்விடயங்களைக் கிரகிப்பதற்கு ஏனையோரையும் தூண்ட வேண்டும். தங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் சேவை செய்வதில் மும்முரமாக இருப்பவர்களே, பாபாவின் இதயத்தில் அமரமுடியும். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் சேவைக்கேற்ப, இதயத்தில் அமரமுடியும். உங்களில் சிலர் சகலதுறை வல்லுனர்கள். நீங்கள் சகல திறன்களையும் கற்க வேண்டும். உணவு சமைப்பது, சப்பாத்திகள் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது: இந்த வகையான வேலைகள் அனைத்தும் கூட சேவையாகும். தந்தையின் நினைவே முதலாவதாகும். அவரை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இகேயே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அங்கே நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாக இருக்கின்றீர்கள். அரசர், அரசி எவ்வாறோ பிரஜைகளும் அவ்வாறே. அங்கே துன்பம் என்ற கேள்வியே இல்லை. இந்நேரத்தில் சகலரும் நரகவாசிகளே. இது அனைவருக்கும் இறங்குகின்ற ஸ்திதி ஆகும். இப்பொழுதே ஏறுகின்ற ஸ்திதி இருக்க வேண்டும். தந்தை அனைவரையும் துன்பத்தில் இருந்து விடுவித்துச் சந்தோஷத்திற்குள் அழைத்துச் செல்கின்றார், இதனாலேயே அவர் விடுதலை ஆக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். இங்கே நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்ற போதையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் தகுதியானவர்கள் ஆகுகின்றீர்கள். தகுதியானவர்களே ஏனையோரையும் அரச அந்தஸ்தைக் கோருவதற்குத் தகுதியானவர்களாக ஆக்குகிறார்கள். பலர் இங்கு கற்க வருவார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் 84 பிறவிகள் எடுப்பார்கள் என்று அர்த்தமில்லை என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். குறைவாகக் கற்பவர்கள், தாமதமாக வருவதனால், குறைந்தளவு பிறவிகளையே எடுப்பார்கள். சிலர் 80 பிறவிகளும், ஏனையோர் 82 பிறவிகளும் எடுப்பார்கள். எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே நீங்கள் முன்னதாக வருவதோ அல்லது தாமதித்து வருவதோ அனைத்தும் தங்கியுள்ளது. சாதாரணப் பிரஜைகள் பின்னரே வருவார்கள்; அவர்களால் 84 பிறவிகளை எடுக்க முடியாது. அவர்கள் தொடர்ந்தும் தாமதமாகவே வருகின்றார்கள். இறுதியில் வருபவர்கள், திரேதா யுகத்தின் இறுதியில் பிறப்பு எடுப்பார்கள். பின்னர் அவர்கள் பாவப் பாதைக்குச் சென்று, கீழிறங்கி வர ஆரம்பிப்பார்கள். இந்த ஏணிப் படம், பாரத மக்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது. இந்தச் சக்கரமானது ஒரு நாடகத்தின் வடிவில் உள்ளது. தூய்மையாக இருந்தவர்கள், இப்பொழுது தூய்மை அற்றவர்களாகி, பின்னர் தூய தேவர்கள் ஆகுவார்கள். தந்தை வருகின்ற பொழுது, அனைவரும் நன்மை அடைகின்றனர், இதனாலேயே இது மங்களகரமான யுகம் என அழைக்கப்படுகின்றது. அனைவருக்கும் நன்மை பயப்பதே தந்தையின் மகத்துவம் ஆகும். சத்தியயுகத்தில் அனைவருமே நன்மை அடைந்தவர்கள்; அங்கே துன்பம் இருக்கவில்லை. நாங்கள் இறை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விளங்கப்படுத்தப்பட வேண்டும். கடவுள் அனைவரதும் தந்தை ஆவார். ‘நீங்களே தாயும், நீங்களே தந்தையும்’ என இங்கேயே நீங்கள் பாடுகின்றீர்கள். வெளிநாடுகளில் அவர்கள் தந்தையைப் பற்றி மாத்திரம் பேசுகின்றார்கள். இங்கே, குழந்தைகளான நீங்கள் தாய், தந்தையைக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கே குழந்தைகளாகிய நீங்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள். தந்தையே படைப்பவர் ஆதலால், நிச்சயமாக ஒரு தாயும் இருக்க வேண்டும். வேறு எவ்வாறு படைப்பு இடம்பெறும்? தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், எவ்வாறு சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் எனப் பாரத மக்களோ அல்லது வெளிநாட்டிலுள்ள மக்களோ, புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது எவ்வாறு புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் நிகழ்கின்றன என்றும், அது நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே இடம்பெறுகின்றது என்றும் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்கள் பரமாத்மா பரமதந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களும், பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள். எனவே, எங்கே இந்த அழகான சந்திப்பு இடம்பெறுகின்றது? இங்கேயே அழகான சந்திப்பு இடம்பெறுகின்றது. பரமதந்தை இங்கே வருகின்றார். இதுவே அழகான, நன்மை பயக்கின்ற சந்திப்பு என அழைக்கப்படுகின்றது. அவர் அனைவருக்கும் ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் பந்தன வாழ்க்கையில் இருந்து விடுபடுகின்றீர்கள். அனைவரும் அமைதி தாமத்துக்குச் செல்வார்கள், பின்னர் நீங்கள் இங்கே கீழே வரும்பொழுது, சதோபிரதானாக இருப்பீர்கள். அந்த மக்கள் தங்களது மதங்களை ஸ்தாபிப்பதற்கு, கீழிறங்கி வருகின்றார்கள். அவர்களது சனத்தொகை அதிகரிக்கும் பொழுதே, தங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்க அவர்கள் முயற்சி செய்கின்றார்கள். அதுவரைக்கும் சண்டை போன்றவை இருப்பதில்லை. அவர்கள் சதோபிரதானில் இருந்து, ரஜோ ஸ்திதிக்குச் செல்கின்ற பொழுது, சண்டை, சச்சரவுகள் ஆரம்பம் ஆகுகின்றன. முதலில் சந்தோஷமும், பின்னர் துன்பமும் இருக்கின்றன. இப்பொழுது அனைவரும் முழுமையாகச் சீரழிந்த நிலையில் உள்ளனர். சத்தியயுகத்தின் ஸ்தாபனையும், பின்னர் இந்தக் கலியுகத்தின் விநாசமும் இருக்க வேண்டும். தந்தையே பிரம்மாவின் மூலம் விஷ்ணு பூமியை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்ப, வெகுமதியை விஷ்ணு பூமியில் கோருகின்றீர்கள். இவை புரிந்து கொள்ள வேண்டிய மிக நல்ல விடயங்களாகும். இந்நேரத்தில், நீங்கள் கடவுளிடம் இருந்து உங்களது ஆஸ்தியை எதிர்கால 21 பிறவிகளுக்குக் கோருகின்றீர்கள் என்று பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்தளவுக்கு நீங்கள் முயற்சி செய்து மிகச்சரியானவர்கள் ஆகுகின்றீர்களோ… நீங்கள் இந்நேரத்தில் மிகச்சரியானவர்கள் ஆகவேண்டும். முட்கடிகாரங்களும், மணற் கடிகாரங்களும் இருக்கின்றன. முட்கடிகாரங்கள் மிகச் சரியானவை. சில குழந்தைகள் மிகச்சிறப்பானவர்கள் ஆகுகின்றனர், இதேவேளை மிகச்சிறந்தவர் ஆகாதவர்கள், தாழ்ந்த அந்தஸ்தையே கோருகின்றனர். முயற்சி செய்து மிகச்சிறப்பானவர் ஆகுங்கள்! இந்நேரத்தில் நீங்கள் அனைவரும் மிகச்சிறந்தவர்கள் அல்ல. ஒரேயொரு தந்தையே உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்யாது விட்டால், நீங்கள் ஒரு தாழ்ந்த அந்தஸ்தையே கோருகிறீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததாலும், அசுர குணங்களைத் துறக்காததாலும், யோகத்தில் நிலைத்திருக்காமல் இருப்பதாலுமே இவ்விடயங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. யோகத்தில் நிலைத்து இருக்காதுவிடின், நீங்கள் பண்டிதர்கள் போன்றவர்கள். சிவபாபாவில் அந்தளவு அன்பு இல்லாததாலேயே உங்கள் யோகம் பின்னடைந்து உள்ளது. பின்னர் நீங்கள் குறைவாகக் கிரகிப்பதுடன், அந்தச் சந்தோஷமும் இருப்பதில்லை. உங்கள் முகங்கள் பிணம் போன்று ஆகுகின்றன. உங்கள் முகச்சாயல்கள் எப்பொழுதும் தேவர்களுடையதைப் போன்று மலர்ச்சியானவையாக இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு அதிகளவு ஆஸ்தியைக் கொடுக்கின்றார்! ஓர் ஏழையின் குழந்தை, ஒரு செல்வந்தரிடம் செல்கின்ற பொழுது, மிகவும் சந்தோஷம் அடைகின்றார். நீங்கள் மிக ஏழைகளாக இருந்தீர்கள். தந்தை இப்பொழுது உங்களைத் தத்து எடுத்துள்ளார், எனவே நாங்கள் இப்பொழுது இறை சமுதாயத்துக்குச் சொந்தமானவர்கள் என்ற சந்தோஷம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் இது ஒருவரது பாக்கியத்தில் இல்லை என்றால், என்ன செய்ய முடியும்? அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. அவர்கள் அரசிகளாக ஆகுவதில்லை. தந்தை உங்களை அரசிகளாக ஆக்குவதற்கு வருகின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மூவரும் சிவனின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். அவர் மீண்டும் ஒருமுறை பிரம்மாவின் மூலம் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார். பழைய உலகம் சங்கரர் மூலம் அழிக்கப்படுகின்றது. பாரதத்தில் வெகுசிலரே மீதம் இருப்பார்கள். பிரளயம் ஏற்பட மாட்டாது, ஆனால் பலர் அழிக்கப்படுவதால், அது பிரளயம் ஏற்படுவதைப் போன்றுள்ளது. பகலுக்கும், இரவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் உள்ளது. அவர்கள் அனைவரும் முக்தி தாமத்துக்குச் செல்வார்கள். இது தூய்மையாக்குபவரான தந்தையின் பணியாகும். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! இல்லையெனில், நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பழைய உறவினர்களையே நினைவு செய்வீர்கள். நீங்கள் அவர்களைத் துறந்து விட்டீர்கள், ஆனால் உங்கள் புத்தி இன்னமும் ஈர்க்கப்படுகின்றது. நீங்கள் இன்னமும் பற்றை வெல்பவர்கள் ஆகவில்லை; அது கலப்படமான நினைவு என அழைக்கப்படுகின்றது. எனவே நீங்கள் சீரழிந்த நிலையில் இருப்பவர்களையே தொடர்ந்தும் நினைவு செய்வதால், உங்களால் சற்கதியைப் பெற முடியாதுள்ளது. அச்சா.இனிமையிலும், இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பாப்தாதாவின் இதயத்தில் அமர்வதற்கு, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் சேவை செய்யுங்கள். மிகச்சரியானவர்களாகவும், சகலதுறை வல்லவர்களாகவும் ஆகுங்கள்.2. உங்கள் பழைய உறவினர்கள் எவரையும் நினைவு செய்யாத வகையில், மிகவும் ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். உப்புநீர் போன்றில்லாது, பெருமளவு ஆன்மீக அன்புடன் ஒன்றாக வாழுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மகத்துவமாகவும் பணிவானவராகவும் இருந்து, உலக மாற்றத்தின் மேன்மையான பணிக்காக உங்கள் ஒத்துழைப்பு விரலைக் கொடுப்பீர்களாக.நீங்கள் எதனையாவது சமைக்கின்ற போது, சகல சேர்வைகளையும் நீங்கள் அதற்குள் இட வேண்டும். உப்பு அல்லது சீனி போன்ற ஏதாவது ஒன்றின் குறைபாடு அதில் இருந்தாலும் சுவையான ஒன்றுகூட உண்பதற்கு ஏற்றதாக இருக்க மாட்டாது. அவ்வாறாகவே, உலக மாற்றம் என்ற இந்த மேன்மையான பணிக்கு ஒவ்வோர் இரத்தினமும் தேவையாகும்: ஒவ்வொருவரது ஒத்துழைப்பு விரலும் அவசியமாகும். அனைவருமே தத்தமது வழிமுறையில் முற்றிலும் ஒரு மேன்மையான மகாரத்தியாக இருக்கிறார்கள், அனைவரும் தேவை. ஆகையாலேயே உங்களுடைய உன்னதத்தின் பெறுமதியை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்- நீங்கள் அனைவரும் மகாத்மாக்கள் எவ்வாறாயினும், நீங்கள் எந்தளவிற்கு மகத்துவமானவர்களோ அந்தளவிற்கு நீங்கள் பணிவானவர்களாகவும் இருக்க வேண்டும்.
சுலோகம்:
உங்களுடைய சுபாவத்தை நீங்கள் இலகுவாக்கிக் கொள்ளும் போது, உங்கள் சகல பணிகளும் இலகுவாகும்.அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்தில் இருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இந்தக் கடினமான காலப்பகுதியில், சூழ்நிலைகள், பிரச்சினைகள், சூழல் அனைத்தும் இரட்டிப்பாக மாசடைந்துள்ளது. ஆகையால், அவற்றின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டிருங்கள். இவ்வகையான பல்வேறு விடயங்களின் எந்தவொரு பந்தனத்தில் இருந்தும் உயிர் வாழும் வரை விடுபட்டிருங்கள். சூட்சும பந்தனம் ஒன்றேனும் இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் சங்கமயுகத்தில் பந்தனத்தில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தி அடைந்திருக்க வேண்டும். சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் ஜீவன்முக்தி ஸ்திதியின் வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள்.