03.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இராச்சியத் திலகத்தைக் கோருவதற்கு உங்களைத் தகுதி வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவிற்குக் கற்று, எந்தளவுக்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் இராச்சியத் திலகத்தை, உங்களால் கோரிக்கொள்ள முடியும்.
கேள்வி:
இராவணனின் விழிப்புணர்வை மறந்து விடவேண்டுமாயின், எந்த விழிப்புணர்வை நீங்கள் பேண வேண்டும்?பதில்:
நீங்கள் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல, ஆனால், ஆத்மாக்கள் என்றும் நீங்கள் உங்கள் ஆஸ்தியைக் கனிஷ்ட தந்தை (பிரம்மா) மூலமாக, சிரேஷ்ட தந்தையிடமிருந்து (சிவபாபா) பெறுகின்றீர்கள் என்ற விழிப்யுணர்விலும் எப்போதும் இருங்கள். இந்த விழிப்புணர்வு, உங்களை இராவணனின் அசுர விடயங்களின் விழிப்புணர்வில் இருந்து அகற்றுகின்றது. நீங்கள் அனைவருமே ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்ற விழிப்புணர்வில் இருக்கும்பொழுது, அசுர விடயங்களின் விழிப்புணர்வு முடிவடைந்துவிடும். இது தூய்மையாக இருப்பதற்கு மிகச்சிறந்த வழி. எனினும் இதற்கு அதிக முயற்சி தேவை.பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதனால், நாங்கள் அனைத்தையும் கண்டு கொண்டுள்ளோம். பூமி, வானம், ஏனைய அனைத்தும் எங்களுக்கே சொந்தம்…….ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அனைவரும் தமது நெற்றியின் நடுவில் எவ்வாறு திலகம் இடுகின்றார்கள் என்று பாருங்கள். ஏனெனில், முதலில் ஆத்மா அங்கே இருப்பதாலும், இரண்டாவதாக இராச்சியம் என்று திலகம் அங்கு இடப்படுவதாலும் ஆகும். எனினும், இது ஆத்மாவையே குறிக்கின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற விரும்புகிறீர்கள். உங்கள் உலக இராச்சிய திலகத்தை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் சூரிய, சந்திர வம்சங்களின் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். கற்பது என்றால் நீங்களே உங்களுக்கு இராச்சிய திலகத்தை இடுவதாகும். கற்பதற்காகவே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இங்கே வாழும் ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: பாபா, எங்கள் உலக இராச்சியத்தை நாங்கள் நிச்சயமாகப் பெறுவோம். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிக் காட்டுகின்றோம். நாங்கள் எவ்வாறு முன்னேறுகின்றோம் என்பதை அறிய, எங்கள் நடத்தையை நீங்கள் தொடர்ந்தும் அவதானிக்கலாம். எங்களுக்கு இராச்சியத் திலகத்தை இடும் தகுதியை நாங்கள் பெற்றுள்ளோமா அல்லது இல்லையா என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எந்தளவிற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதைத் தந்தைக்குக் காட்ட வேண்டும். பாபா நிச்சயமாக உங்கள் பெயரை நாங்கள் புகழடையச் செய்வோம். நாங்கள் உங்கள் உதவியாளர்கள் ஆகுவோம், அதாவது எங்கள் சொந்த உதவியாளர் ஆகுவோம் என்பதே அதன் அர்த்தமாகும். அதன்பின்னர் நாங்கள் பாரதத்தில் எங்கள் சொந்த இராச்சியத்தை ஆட்சிசெய்வோம். பாரத மக்கள் அது தங்களது இராச்சியம் என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் தாங்கள் இப்பொழுது நச்சு ஆற்றில் இருக்கின்றோம் என்பதை அந்த அப்பாவிகள் அறியாமல் இருக்கிறார்கள். இப்பொழுது இது ஆத்மாக்களாகிய எங்களுக்குரிய இராச்சியமல்ல. ஆத்மாக்கள் இப்பொழுது தலைகீழாகத் தொங்குகிறார்கள். உண்பதற்குப் போதியளவு உணவு இல்லை. பாரதம் அத்தகைய நிலையை அடையும்போது, பாபா கூறுகின்றார்: எனது குழந்தைகளுக்கு உண்பதற்குப் போதியளவு உணவு கூட இல்லை. ஆகவே, நான் சென்று அவர்களுக்கு இராஐயோகம் கற்பிக்க வேண்டும். எனவே, தந்தை உங்களுக்கு இராஐயோகம் கற்பிப்பதற்காக வந்துள்ளார். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவர் புதிய உலகைப் படைப்பவர். தந்தை தூய்மையாக்குபவரும், ஞானக் கடலும் ஆவார். இது உங்களைத் தவிர, வேறு எவரது புத்தியிலும் இல்லை. உண்மையில் எங்கள் பாபா ஞானக்கடலும் சந்தோஷக் கடலும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். இப்புகழை உறுதியாக நினைவில் வைத்திருங்கள். அதனை மறந்து விடாதீர்கள். இது தந்தையின் புகழாகும். அத்தந்தை மறுபிறப்பிற்கு அப்பாற்பட்டவர். கிருஷ்ணரின் புகழ், அவரது புகழில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு ஜனாதிபதியின் புகழ், ஒரு பிரதம மந்திரியின் புகழிலிருந்து வேறுபட்டது. தந்தை கூறுகின்றார்: நான் இந்த நாடகத்தில் அதி மேன்மையான பாகத்தைப் பெற்றுள்ளேன். இந்த நாடகம் எவ்வாறு எல்லையற்றது என்பதையும், அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதையும் இந்த நாடகத்தின் நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை அவர்கள் அறிந்து கொள்ளாது விட்டால், விவேகமற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். எனினும், எவருமே இதனைப் புரிந்துகொள்ளவில்லை. மனிதர்கள் இப்பொழுது எவ்வாறு ஆகியுள்ளார்கள் என்பதற்கும் அவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதை மனிதர்கள் முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். பாரதம் எவ்வாறு அதிமேன்மையாக இருந்தது என்பதற்கான படமும் உள்ளது. சோமநாதர் ஆலயத்தில் இருந்து பெருமளவு செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டது. அங்கு பெருமளவு செல்வம் இருந்தது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையைச் சந்திப்பதற்காக இங்கே வந்துள்ளீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் இராச்சிய திலகத்தைப் பெறலாம் என்பதற்காகவே பாபாவிடம் வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். பிறவிபிறவியாக நச்சு ஆற்றில் மூச்சுத் திணறியதினால் நீங்கள் களைப்பு அடையவில்லையா? அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒரு பாவி, நான் நற்குணமற்றவன், என்னிடம் நற்பண்புகள் எதுவும் இல்லை. ஒரு காலத்தில் அவர்கள் நிச்சயமாக நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் அவை இப்பொழுது இல்லை. நீங்களே, உலக அதிபதிகளாகவும், நீங்களே நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவராகவும் இருந்தீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். இப்பொழுது உங்களிடம் நற்பண்புகள் எவையும் இல்லை. இவ்விடயங்களையும் கூட தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையே குழந்தைகளைப் படைப்பவர். ஆகவே தந்தை குழந்தைகள் அனைவர் மீதும் கருணை கொண்டுள்ளார். தந்தை கூறுகின்றார்: நாடகத்தில் எனக்கும் ஒரு பாகம் உண்டு. மக்கள் மிகவும் தமோபிரதானாகி விட்டார்கள். அதிகளவு பொய், பாவம், சண்டை போன்றன உள்ளன. பாரதக் குழந்தைகள் அனைவரும் ஒரு காலத்தில் தாங்களே இரட்டைக் கிரீடம் அணிந்த உலக அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். நீங்களே உலக அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். நீங்கள் 84 பிறவிகளையும் மறந்து விட்டீர்கள். அது ஓர் அதிசயமே! 84 பிறவிகளுக்குப் பதிலாக, அவர்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுகின்றார்கள். அத்துடன் அவர்கள் ஒவ்வொரு சக்கரத்தின் கால எல்லை, பல நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனவும் கூறுகின்றார்கள். அவர்கள் காரிருளினுள் உள்ளார்கள். அதிகளவு பொய்மையே உள்ளது. பாரதமே சத்திய பூமியாக இருந்தது. பாரதம் பொய்மை நிறைந்த பூமியாகி உள்ளது. யார் அதனைப் பொய்மையான பூமி ஆக்கியவர்? அதனைச் சத்திய பூமி ஆக்கியவர் யார்? எவருமே இதனை அறியார். இராவணனையும் எவருக்குமே தெரியாது. பக்தர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். மக்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் பற்றிச் சமய சம்பந்தமான ஒருவருடன் பேசிப் பாருங்கள். கேளுங்கள்: சுவர்க்கம், வைகுந்தம் என்று அழைக்கப்படுகின்ற சத்தியயுகத்தில், அசுரனாகிய இராவணன் எவ்வாறு இருக்கமுடியும்? எவ்வாறு நரகவாசிகள் அங்கு இருக்க முடியும்? பின்னர் அது நிச்சயமாகத் தவறானது என்பதனை அவர் புரிந்துகொள்வார். நீங்கள் இராம இராச்சியத்தின் படங்களை உபயோகித்து விளங்கப்படுத்த முடியும். அவரிடம் கேளுங்கள்: இராவணன் எவ்வாறு அங்கே இருக்க முடியும்? நீங்கள் இவ்விடயங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அரிதாகவே சிலர் தோன்றுவார்கள். உங்களில் வெகு சிலரே இருப்பீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, எத்தனை பேர் எஞ்சியிருப்பார்கள் என்பதனை நீங்கள் காண்பீர்கள். ஆகவே சிறிய திலகமிடுவது ஆத்மாவின் அடையாளமாகவும் பெரிய திலகம் இடப்படுவது இராச்சியத்தின் அடையாளம் எனவும் பாபா விளங்கப்படுத்துகின்றார். தந்தை இப்போது வந்துள்ளார். அவர் உங்களிடம் வினவுகின்றார்: எவ்வாறு நீங்கள் உங்களுக்குப் பெரிய திலகத்தை இட்டுக் கொள்வீர்கள்? எவ்வாறு நீங்கள் சுய இராச்சியத்தைக் கோருவீர்கள்? அவர் உங்களுக்கு இதற்கான வழியைக் காட்டுகின்றார். அவர் அந்த வழிக்கு “இராஜயோகம்” எனப் பெயரிட்டுள்ளார். தந்தையே இதனை உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் தந்தையாக இருக்க முடியாது. அவர் ஒரு குழந்தை ஆவார். பின்னர் அவர் இராதையை மணந்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பல அரசிகள் இருந்தார்கள் எனக் கூறுவது பொய்யாகும். எவ்வாறாயினும், நாடகத்தில் அதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மீண்டும் ஒருமுறை அத்தகைய விடயங்களைச் செவிமடுப்பீர்கள். ஆத்மாவாகிய நீங்கள், மேலே இருந்து உங்கள் பாகத்தை நடிப்பதற்கு எவ்வாறு வந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. பின்னர் நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, உங்கள் அடுத்த சரீரத்தை எடுக்கிறீர்கள். இது மிகவும் இலகுவானது. ஒரு குழந்தை பிறந்ததும் நீங்கள் அந்தக் குழந்தையிடம் ‘இப்படிக் கூறுங்கள்’ என்று கற்பிக்கின்றீர்கள். கற்பிப்பதன் மூலம் அவர் கற்றுக் கொள்கின்றார். பாபா உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்? அவர் கூறுகின்றார்: தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் பாடுகின்றீர்கள்: நீங்களே தாயும், நீங்களே தந்தையும். ஆத்மாவே இதனைப் பாடுகின்றார். ஆத்மாவாகிய நீங்கள் நிச்சயமாக அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இங்கு சிவபாபாவிடம் வந்துள்ளீர்கள். “பாக்கிய இரதம்” (பாகிரத்) மனிதருடைய இரதமாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை, அந்த இரதத்தில் அமர்ந்திருக்கின்றார். அந்த இரதத்தின் பெயர் என்ன? பிராமணர்கள் பிரம்மாவினால் உருவாக்கப்படுவதால் அவரின் பெயர் “பிரம்மா” என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அனைத்துக்கும் மேலாக உச்சிக்குடுமியாகிய பிராமணர்களும் அதன்பின்னர் அங்கே தேவர்களும் உள்ளனர். அனைத்துக்கும் முதலில் பிராமணர்கள் தேவைப்பட்டார்கள். இது பல்வகை ரூபங்களில் காட்டப்பட்டுள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே தேவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை அனைத்து விடயங்களையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, ஆனால், ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வில் எப்பொழுதும் இருந்து, உங்கள் ஆஸ்தியை நீங்கள் கனிஷ்ட தந்தை (பிரம்மா) மூலமாக, சிரேஷ்ட தந்தையிடம் இருந்து (சிவபாபா) பெறுகின்றீர்கள். அப்போது நீங்கள் இராவணனின் அசுரத்தனமான விடயங்களின் விழிப்புணர்வை மறந்து விடுவீர்கள். இது தூய்மையாக இருப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். பல தம்பதியினர் பாபாவிடம் வருகின்றார்கள். அவர்கள் இருவரும் பாபா எனக் கூறுகின்றார்கள்: ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்ற உணர்வு உடையவராகி விட்டதால், இராவணனின் அனைத்து விடயங்களும் மறக்கப்பட வேண்டும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் முயற்சி செய்யாது விட்டால் எதுவுமே இடம்பெற மாட்டாது. நாங்கள் பாபாவுக்கு உரியவர்கள். நாங்கள் அவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். பாபாவும் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். 84 பிறவிகளின் கதை புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானது. முயற்சி தந்தையை நினைவு செய்வதிலேயே தங்கியுள்ளது. தந்தை கூறுகின்றார்: குறைந்தது 8 மணித்தியாலங்கள் ஆயினும் நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்துக்கேனும் வகுப்புக்கு வாருங்கள். அப்போது தந்தை உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வீர்கள். இப்போது நீங்கள் நேரடியாகவே தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை தொடர்ந்தும் உங்களை “குழந்தாய், குழந்தாய்” என அழைத்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அவர் கூறுவதைக் கேட்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: தீயவற்றைக் கேட்காதீர்கள்! இந்த விடயம் இக்காலத்துக்கே பொருந்தும். இப்போது நீங்கள் நேரடியாக ஞானக் கடலாகிய தந்தையிடம் வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஞானக் கடலான தந்தை, உங்களுக்கு முழு உலகின் ஞானத்தையும் கொடுக்கின்றார். நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விடுவதோ அது உங்களைப் பொறுத்ததாகும். இப்போது தந்தை வந்து எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நாங்கள் இப்போது இராஜயோகம் கற்கின்றோம். அதில் சமயநூல்களினதோ பக்தியினதோ சாயல் எதுவுமில்லை. பக்திமார்க்கத்தில் இந்த ஞானத்தின் சாயல் சிறிதளவும் இல்லை. இந்த ஞான மார்க்கத்தில் பக்தி மார்க்கத்தின் சாயல் சிறிதளவும் இல்லை. ஞானக்கடல் வரும் போதே அவரால் இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்க முடியும். அவருடைய ஞானம் சத்கதி அடைவதற்கானது. சத்கதியை அருள்பவர் ஒருவரே. அவரே கடவுள் என அழைக்கப்படுகின்றார். ஒரேயொரு தூய்மையாக்குபவரை அனைவரும் அழைக்கிறார்கள். ஆகவே எவ்வாறு வேறு எவரேனும் உங்களைத் தூய்மையாக்க முடியும்? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து சத்தியமான விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: நான் உங்களைச் செல்வந்தர்கள் ஆக்கியதும் சென்று விடுவேன். இது 5000 வருடங்களுக்கான விடயம். நீங்கள் இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் தூய்மைக் கிரீடம் இருந்தது. பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பித்ததும் நீங்கள் பூஜிப்பவராகி விட்டீர்கள். தந்தை இப்போது மீண்டும் உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார். ஆகவே அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தைக் கடனாக எடுக்க வேண்டியுள்ளது. அனைத்துப் புகழும் அந்த ஒருவருக்கே. நான் அவரது இரதம் மாத்திரமே. நான் ஓர் எருது அல்ல. எல்லாவற்றிலும் உயர்ந்த மகிமை உங்களுக்கு உரியதே ஆகும். பாபா உங்களுடன் உரையாடுகின்றார். நான் இடையில் இருந்து செவிமடுக்கின்றேன். அவர் எவ்வாறு என்னுடன் மாத்திரம் உரையாட முடியும்? அவர் உங்கள் அனைவருடனும் பேசும்போது, நானும் அவர் என்ன கூறுகின்றார் என்பதைச் செவிமடுக்கின்றேன். இவர் ஒரு முயற்சி செய்யும் மாணவன். நீங்களும் மாணவர்களே. இவரும் கற்கின்றார். இவருமே தந்தையின் நினைவில் இருக்கின்றார். அவர் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்கின்றார். இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைப் பார்க்கும்போது, நானும் அவர்களைப் போலவே ஆகப் போகின்றேன் என்பதால் அளவற்ற சந்தோஷம் இருக்கின்றது. நீங்கள் சுவர்க்கத்தின் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவதற்காகவே இங்கே வந்திருக்கின்றீர்கள். இது இராஜயோகம். அதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். உங்களுக்குக் கற்பிப்பவரும் இங்கே அமர்ந்திருக்கின்றார். எனவே ஏன் அந்தளவிற்குச் சந்தோஷம் இல்லை? உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நாங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் பாபாவிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகின்றோம். நாங்கள் இங்கே ஞானக் கடலிடம் வந்துள்ளோம். இங்கே தண்ணீர் போன்றவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. தந்தை உங்களுக்கு நேரடியாகவே விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இவ்வாறாக (தேவர்கள்) ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது வீடு திரும்பிச் செல்கின்றீர்கள் என்பதனால் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் இப்போது எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் விரக்தி அடையக்கூடாது. இந்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டு மிகப் பெரியது. இதனைப் புரிந்துகொண்ட பின்னரும் சிலர் வியப்பு அடைகின்றார்கள். அவர்கள் கற்பதை நிறுத்தி விட்டு ஓடிவிடுகின்றார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கு இராச்சிய திலகத்தை இட்டுக் கொள்வதற்கு, உங்களைத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குங்கள். தகுதி வாய்ந்த குழந்தையாகி, அதற்கான அத்தாட்சியைக் கொடுங்கள். உங்கள் செயல்களும், நடத்தையும் மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுங்கள்.2. நாங்கள் மாணவர்கள், கடவுள் எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தச் சந்தோஷத்துடன் கற்றிடுங்கள். ஒருபோதும் உங்கள் முயற்சியில் விரக்தி அடையாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் படைப்பவராகி, உங்களின் திரிமூர்த்தி படைப்பை ஒத்துழைக்கச் செய்வதற்காக உங்களின் உரிமைச் சக்தியைப் பயன்படுத்துவீர்களாக.திரிமூர்த்தி சக்திகள் (மனம், புத்தி, சம்ஸ்காரங்கள்) என்பவை மாஸ்ரர் படைப்பவர்களான உங்களின் படைப்பாகும். அவற்றை ஒத்துழைக்கச் செய்வதற்கு உங்களின் உரிமைச் சக்தியைப் பயன்படுத்துங்கள். எப்படி ஓர் அரசன் தான் எந்த வேலையும் செய்யாமல், மற்றவர்களைக் கொண்டு அதைச் செய்விக்கிறாரோ, இராச்சியத்தில் அந்தப் பணிகளைச் செய்யும் வேலையாட்கள் வெவ்வேறாக இருக்கிறார்களோ, அதேபோல், ஒவ்வோர் ஆத்மாவும் கரவன்ஹார் (சக்திகளைச் செயல்பட வைப்பவர்) ஆவார். விசேடமான திரிமூர்த்தி சக்திகளும் கரன்ஹார் (செயலைச் செய்பவை) ஆகும். எனவே, ஒரு மாஸ்ரர் படைப்பவர் என்ற உங்களின் ஆசீர்வாதத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, உங்களின் திரிமூர்த்தி சக்திகளையும் பௌதீக அங்கங்களையும் சரியான பாதையைப் பின்பற்றச் செய்யுங்கள்.
சுலோகம்:
அவ்யக்த பராமரிப்பைப் பெறுகின்ற ஆசீர்வாதத்தின் உரிமையைப் பெறுவதற்கு, ஒளிவுமறைவு அற்றவர் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
தூய்மை என்பது பிரம்மச்சரியம் மட்டும் அல்ல. அதுவே அத்திவாரம். ஆனால் அதனுடன் ஏனைய நான்கு விகாரங்களும் உள்ளன. பெரிய தீய ஆவிகளான கோபத்தையும் அதன் சகபாடிகளையும் துறவுங்கள். அவற்றுடன் கூடவே, அவற்றின் சந்ததிகளான சிறியவர்களையும் துறவுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் ஆன்மீகத் தூய்மையின் இராஜரீகத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்று சொல்ல முடியும்.