03.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, தகுதிவாய்ந்த, சேவாதாரிக் குழந்தைகளாகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
கேள்வி:
தர்மராஜின் தண்டனையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்கு, எந்த இறை கோட்பாடுகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
கடவுளுக்கு ஒரு சத்தியம் செய்த பின்னர், அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்காதீர்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். கோபப்படுபவர்கள் அல்லது பிறரை விரக்தி அடையச் செய்பவர்கள் அல்லது கடவுளின் பெயருக்கு அவதூறு ஏற்படும் விதத்தில் நடந்து கொள்பவர்கள், பெருமளவு தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே, அத்தகைய செயல்கள் எதையும் செய்யாதீர்கள். நோய் ஏதாவது வந்தாலென்ன, மாயையின் புயல்கள் எத்தனை வந்தாலென்ன, உங்கள் புத்தியைப் பயன்படுத்தி எது சரி, எது பிழையெனத் தீர்மானிப்பதன் மூலம் தவறான செயல்கள் செய்வதில் இருந்து சதா விடுபட்டிருங்கள்.பாடல்:
எனது இதய வாயிலுக்கு வந்திருப்பவர் யார்?ஓம் சாந்தி.
“ஓம் சாந்தி” எனக் கூறியவர் யார்? பாபாவும், தாதாவும். பரமாத்மா பரமதந்தை சிவனே இவ்வுலகிற்கு அப்பாலிருக்கும் எங்கள் தந்தை என்பதிலும், இவர் (பிரம்மா) குழந்தைகள் அனைவரினதும் சூட்சுமமான தந்தை என்பதிலும் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். இவர் மாத்திரமே பிரஜாபிதா பிரம்மா என்று அழைக்கப்படுகின்றார். பிரஜாபிதா பிரம்மாவைத் தவிர வேறு எவராவது பல குழந்தைகளைக் கொண்டிருக்க முடியுமா? இவர் முன்னர் அவர்களைக் (குழந்தைகள்) கொண்டிருக்கவில்லை. எல்லையற்ற தந்தை இவரினுள் பிரவேசித்த பொழுதே, இவர் தாதா ஆகினார். இந்த தாதாவே கூறுகின்றார்: இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையின் சொத்துக்களை நீங்கள் பெறுகின்றீர்கள். பேரக் குழந்தைகளே எப்பொழுதும் தமது பாட்டனாரின் வாரிசுகளாவர். அவர்கள் அவரது சொத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பதால், அவர்களின் புத்திகளின் யோகம் அவர்களது பாட்டனாரை நோக்கிச் செல்கின்றது. ஓர் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்ததும், அது அவரது மூத்தோரின் சொத்து என்று அவருக்குக் கூறப்படுகின்றது. அவர்கள் நிச்சயமாகத் தங்கள் மூத்தோரின் சொத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து அனைத்திலும் மகத்தான சொத்தான, சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அத்தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது அவருக்கு நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். பாபாவிற்கு நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றோம் என்ற போதை உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே அனுபவம் செய்யப்படுகின்றது. சிலர், இந்தப் பௌதீகமான தாயும் தந்தையுமானவர் (பிரம்மா) மூலம் அதிமேலான கடவுளுக்குத் தாம் வாரிசுகள் ஆகுகின்றோம் என்று, தமது இதயங்களில் பெருமளவு அன்பு கொண்டுள்ளனர். எல்லையற்ற தந்தை எங்களை ஓர் இராச்சியத்திற்குத் தகுதியானவர்கள் ஆக்கும் வகையில், மிகவும் இனிமையானவர். மாயை உங்களை முற்றிலும் தகுதியற்றவர்கள் ஆக்கிவிட்டாள். நேற்று, ஒருவர் பாபாவைச் சந்திப்பதற்கு வந்தார். ஆனால் அவர் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பாபா அவருக்கு விளங்கப்படுத்தினார்: இவர்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்கள், நீங்களும் பிரம்மாவினதும், சிவனினதும் குழந்தையே. அவர் கூறினார்: நீங்கள் அவ்வாறு கூறுவதால், நான் நிச்சயமாக அப்படித்தான் இருக்க வேண்டும். இதைக் கேட்டதும் அவர் ஏற்றுக் கொண்டாலும், அது அவரது இதயத்தைத் தொடவில்லை. தான் உண்மையிலேயே அவரது குழந்தைதான் என்ற அம்பு அவரைத் தைக்கவில்லை. இவரும் அவரது குழந்தையே, இவரும் ஓர் ஆஸ்தியைக் கோருகின்றார். இங்குள்ள பல குழந்தைகளின் புத்திகளில் மிகச் சிறிதளவே பதிகின்றது. சந்தோஷமோ அல்லது ஆன்மீகப் போதையோ கண்ணுக்குத் தென்படுவதில்லை. உங்களுக்குள் சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். இவை அனைத்தும் முகத்திலும் வெளிப்பட வேண்டும். மணவாட்டிகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தால் அலங்கரிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மணவாளனின் மணவாட்டிகள் என்பதை அறிவீர்கள். ஒரு விவசாயியின் புதல்வியின் கதை உள்ளது: ஓர் அரசன் ஒரு விவசாயியின் புதல்வியைத் திருமணம் செய்தான். ஆனால் இராச்சியத்தில் இருப்பதில் அவள் எந்தச் சந்தோஷத்தையுமே அனுபவிக்கவில்லை. எனவே அவன் அவளைத் திரும்பவும் அவளது கிராமத்திற்கே அனுப்பி வைத்தான். அவள் இராச்சியத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவள் என அவன் கூறினான். இங்கும் உங்களை எதிர்கால சக்கரவர்த்தினிகள் ஆக்குவதற்காகத் தந்தை உங்களை அலங்கரிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் பெண்களை இராணிகள் ஆக்குவதற்காகக் கடத்திச் சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை; அவர்கள் அனைவரும் சமயப்பற்று இல்லாத மனம் உடையவர்கள். இந்த உலகம் அவ்வாறே தொடர்கின்றது என்றும், அது இயற்கையானது என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆலயங்கள் போன்றவற்றிற்குச் செல்லாமலும், சமயநூல்களைக் கூட நம்பாமலும் உள்ள பலர் இருக்கின்றனர். அரசாங்கமும் சமயத்தை நம்புவதில்லை. பாரதத்தில் என்ன தர்மம் இருந்தது, இப்பொழுது என்ன சமயம் இருக்கின்றது என்பதையேனும் அவர்கள் அறியாமல் உள்ளனர். குழந்தைகளான நீங்கள் இப்பொழுது தேவ குலத்திற்கு உரியவர்கள். அவர்கள் கிறிஸ்தவ குலத்திற்கு உரியவர்களாக உள்ளதைப் போன்று, நீங்கள் பிராமண குலத்திற்கு உரியவர்களாக உள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: முதலில், நான் குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையற்ற சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாற்றுகின்றேன். தூய்மையாகிய பின்னர், நீங்கள் 21 பிறவிகளுக்குத் தேவ சமுதாயத்தினர் ஆகுவீர்கள். நீங்கள் தேவர்களின் மடிக்குச் செல்வீர்கள். முன்னர் நீங்கள் அசுரர்களின் மடியில் இருந்தீர்கள். நீங்கள் அசுரர்களின் மடியிலிருந்து கடவுளின் மடிக்கு வந்துள்ளீர்கள். ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள் ஆவர். இது ஓர் அற்புதம்! நீங்கள் அனைவரும் பிராமணக் குலத்திற்கு உரியவர்கள் எனக் கூறுகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்து, அவர்களுக்குப் பாதையைக் காட்டவும் வேண்டும். எவ்வாறு எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவது என்பதை உலகிலுள்ள எவருமே உங்களுக்குக் கூற மாட்டார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டீர்கள். இப்பொழுது நீங்கள் அவரின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். முன்னைய கல்பத்தில் தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைக் கோரியவர்கள் மீண்டும் அவ்வாறு செய்வார்கள் எனப் புரிந்து கொள்வதற்கு, நீங்கள் உங்களுடைய புத்தியைப் பயன்படுத்துகின்றீர்கள். அவர்களின் புத்தியில் இந்த ஞானம் சிறிதளவே இருந்தாலும், அவர்கள் ஏதோவொரு சமயத்தில் நிச்சயமாக இங்கு வருவார்கள், அவர்கள் ஏதோவொன்றைப் பெறுவதற்கு வருவார்கள். உங்கள் மத்தியிலும்கூட, நீங்கள் இதை வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கின்றீர்கள். இன்று, நீங்கள் தூய்மை ஆகுவதற்கு இங்கு வந்துள்ளீர்கள், நாளையே நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விடுகின்றீர்கள். நீங்கள் தீய சகவாசத்தால் நிறமூட்டப்படும் பொழுது, தந்தைக்கு உரியவராகிய பின்னர் அவரை விட்டுச் சென்றால், மகாபாவி ஆத்மா ஆகுவீர்கள் என்பதை மறந்து விடுகின்றீர்கள். ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்தால், அந்தப் பாவம் அவரில் சேர்க்கப்படுகின்றது. இங்கு தந்தைக்கு உரியவராகிய பின்னர் அவரை விட்டுச் செல்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது, அந்தப் பாவம் சிறியதாகும். அவர்கள் தமது சத்தியத்தை மீறி, விகாரம் உடையவர்கள் ஆகுகின்றனர்; அவர்கள் பெருமளவு பாவத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த ஞானப் பாதையில் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு, அறியாமைப் பாதையில் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அறியாமைப் பாதையில் மக்கள் கோபப்படுவது பொதுவான விடயம். இங்கு, நீங்கள் ஒருவர் மீது கோபப்பட்டால், நூறு மடங்கு தண்டனை கிடைப்பதுடன், உங்கள் ஸ்திதியும் அப்படியே கீழிறங்கி விடுகின்றது. காரணம் நீங்கள் கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை. நீங்கள் தர்மராஜின் கட்டளைகளைப் பெறுகின்றீர்கள்: தூய்மை ஆகுங்கள்! கடவுளுக்குச் சொந்தமாகிய பின்னர், அவரது கட்டளைகளுக்கு நீங்கள் சிறிதளவு கீழ்ப்படியாமல் விட்டாலும், நூறு மடங்கு தண்டனை சேர்க்கப்படுகின்றது. அவரே (சிவபாபா) படைப்பவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும் அவரது படைப்புக்களே. தர்மராஜும் ஒரு படைப்பே ஆவார். பாபா உங்களுக்குத் தர்மராஜ் ரூபத்தின் காட்சிகளை வழங்குகின்றார். பின்னர் உங்களுக்குச் சாட்சிகளும் காட்டப்படும்: பாருங்கள், நீங்கள் ஒருபொழுதும் கோபப்படவோ அல்லது எவருக்கும் துன்பம் விளைவிக்கவோ மாட்டீர்கள் என்று சத்தியம் செய்தீர்கள். இருந்தும், நீங்கள் இன்னாருக்குத் துன்பம் விளைவித்தீர்கள் அல்லது இன்னாரை விரக்தி அடையச் செய்தீர்கள். எனவே, இது இப்பொழுது அதற்கான தண்டனையாகும். அவர் உங்களுக்குக் காட்சி கொடுக்காமல் தண்டனை வழங்குவதில்லை. அத்தாட்சி இருக்க வேண்டும். பின்னர் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள்: உண்மையிலேயே நான் தந்தையைக் கைவிட்டு, இந்தப் பாவச் செயல்களைச் செய்தேன். நீங்கள் கடவுளை அவமரியாதை செய்வதால், பலர் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பல அப்பாவிப் பெண்கள் பந்தனத்தில் உள்ளனர். அப்பொழுது தந்தையை அவமரியாதை செய்தவர்கள் மீதே தண்டனை அனைத்தும் சேர்க்கப்படுகின்றது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் மகாபாவி ஆத்மாக்களைப் பார்க்க விரும்பினால், அவர்களை இங்கே பாருங்கள்! ஒரு சலவைத் தொழிலாளியிடம் மிகவும் அழுக்கான துணிமணிகள் சலவை செய்வதற்காக இருந்தால், அவர் அவற்றைத் தடியினால் அடிக்கும் பொழுது அவை கிழிந்து விடுகின்றன. இங்கும் கூட, ஓர் அடியைச் சகித்துக் கொள்ள முடியாமலே அவர்கள் விலகிச் செல்கின்றனர். கடவுளின் மடிக்கு வந்த பின்னர், நீங்கள் அவருக்கு நேரடியாகக் கீழ்ப்படியாமல் இருந்தால், தண்டனை கிடைக்கும். பிறரை ஒரு குழுவில் அழைத்து வருகின்ற தலைமைப் பிராமண ஆசிரியருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதில் ஒருவர் பாபாவின் கரத்தைக் கைவிட்டு, விகாரம் உடையவர் ஆகினாலும், அந்தப் பாவமும் அவரை இங்கு அழைத்து வந்தவருக்கே சேரும். எவருமே அத்தகையவர்களை இந்திர சபைக்கு அழைத்து வரக்கூடாது. நீலம் பாரி, புக்ராஜ் பாரி (வெவ்வேறு தேவதைகள்) ஆகியோரின் கதைகள் உள்ளன. ஒருவர் இரகசியமாக இன்னொரு நபரை இந்திரசபைக்கு அழைத்து வந்தபொழுது, இந்திர சபையில் துர்நாற்றம் வீசியது. அந்த நபரை அழைத்து வந்தவர் பாவத்தைச் சேர்த்துக் கொண்டார். ஒருவர் கல்லாக மாறினார் போன்ற கதைகளும் உள்ளன. பாபா உங்களை தெய்வீகப் பிரபுக்கள் ஆக்குகின்றார். எவ்வாறாயினும், நீங்கள் அவருக்குக் கீழ்ப்படியாமல் விட்டால், நீங்கள் கல்லாகுவதுடன், ஓர் இராச்சியத்தைப் பெறுகின்ற பெரும் பாக்கியத்தையும் இழந்து விடுகிறீர்கள். உதாரணமாக, ஏழையொருவர் ஓர் அரசரால் தத்தெடுக்கப்பட்ட பின்னர் தகுதியற்றவர் ஆகும்பொழுது, அவ்வரசன் அவரை வெளியேற்றினால் என்ன நிகழும்? அவர் மீண்டும் ஏழை ஆகுவார். இங்கும் அவ்வாறே. பின்னர் பெருமளவு துன்பம் அனுபவிக்கப்படும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஒருபொழுதும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்காதீர்கள்! தந்தை ஒரு சாதாரண ரூபத்தில் இருப்பதாலேயே நீங்கள் சிவபாபாவை மறந்து விடுவதுடன், உங்கள் புத்தியும் சரீரதாரியிடம் திசை திரும்புகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். அசுத்தமானவர்கள் ஆகுபவர்களால் பின்னர் இந்திர சபையில் அமர முடியாது. ஒவ்வொரு நிலையமும் இந்த ஞானம் பொழியப்படுகின்ற, இந்திர சபையாகும். நீலம் பாரி, புக்ராஜ் பாரி போன்ற பெயர்கள் உள்ளன. நீலம் என்பது ஓர் இரத்தினம் ஆகும். இப்பெயர்கள் குழந்தைகளுக்கே வழங்கப்படுகின்றன. சிலர் மிகச்சிறந்த, பெறுமதி வாய்ந்த இரத்தினங்களும், மாசற்றவர்களும் ஆவர். சில இரத்தினங்கள் மாசு நிறைந்தவர்கள், ஆனால் சிலரோ மிகவும் தூய்மையானவர்கள். இங்குள்ள இரத்தினங்களும் வரிசைக் கிரமமானவர்களே. சில இரத்தினங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவர்களாக இருப்பதுடன், மிகவும் நன்றாகச் சேவையும் செய்கின்றனர். சிலர் சேவைக்குப் பதிலாக அவச்சேவை செய்கின்றனர். ஒரு ரோஜாவிற்கும், எருக்கலம் பூவிற்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. இரண்டுமே சிவனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. உங்கள் மத்தியில் மலர்களாக உள்ளவர்கள் யாரென்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்களையே மக்கள் தேடுகின்றனர். மிகச் சிறந்த மலர்களைத் தங்களிடம் அனுப்புமாறு அவர்கள் பாபாவிடம் கேட்கின்றனர். இப்பொழுது, நீங்கள் எங்கிருந்து சிறந்த மலர்களைப் பெறுவீர்கள்? ரத்தன் யோத் (நறுமணம் கமழும் மலர்) ஒரு பொதுவான மலராகும். இது ஒரு பூந்தோட்டம் ஆகும். நீங்கள் இந்த ஞான கங்கைகளும், பாபாவே கடலும் ஆவார். இந்தப் பிரம்மாவே அனைத்திலும் மிகப் பெரிய நதியான, பிரம்ம புத்திரா நதியாவார். கல்கத்தாவில், பிரம்ம புத்திரா நதியே மிகப் பெரிய நதியாகும். அங்கேயே கடலுக்கும், நதிக்கும் இடையில் மிகப் பெரிய சங்கமம் நிகழ்கின்றது. உண்மையில், பாபாவே ஞானக்கடல். அவரே உயிருள்ள ஞானக்கடல் ஆவார். நீங்கள் உயிருள்ள இந்த ஞான நதிகள் ஆவீர்கள். அது நீராலான கங்கை. உண்மையில், உங்களுக்குப் பின்னரே நதிகளுக்குப் பெயரிடப்பட்டன. எவ்வாறாயினும், அசுர சமுதாயம் இதைக் கூட மறந்து விட்டது. அவர்கள் ஹரித்துவாரிலுள்ள கங்கைகளில் நான்கு கரங்களாலான உருவத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் அதைக் கங்கை என்றும் அழைக்கின்றனர்! நான்கு கரங்களாலான உருவம் யாரென்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இந்நேரத்திலேயே நீங்கள் உண்மையில் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள். நீங்களே உண்மையான இந்த ஞான நதிகள். அவை, அவர்கள் சென்று நீராடுகின்ற, நீர் கொண்ட நதிகளாகும். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அது ஒரு தேவி என அவர்கள் நினைக்கின்றனர். மனிதர்கள் என்றுமே நான்கு முதல் எட்டுக் கரங்களைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் எதனுடைய அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. பாபா உங்களை என்னவாக ஆக்குகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் 100 சதவீதம் விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள். பாபாவின் மடிக்கு வருவதால் நாங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். ஒருவர் இங்கு அரசராக இருந்தாலும் கூட, சுவர்க்கத்திலுள்ள சந்தோஷத்திற்கும் இங்குள்ள சந்தோஷத்திற்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. உங்கள் மத்தியிலும், சில ஆத்மாக்கள் தந்தையையோ, தங்களையோ கூட புரிந்து கொள்ளாமல் உள்ளனர். எந்தளவு நறுமணத்தை நீங்கள் கொடுக்கின்றீர்கள் என்று உங்களையே சோதித்துப் பாருங்கள். நான் தவறான விடயங்களைப் பேசுகின்றேனா? நான் கோபப்படுகின்றேனா? ஒரு குறிப்பிட்ட குழந்தையின் செயற்பாட்டில் இருந்து அவர் எத்தகையவர் எனத் தந்தையால் மிக விரைவாகவே புரிந்துகொள்ள முடியும். தந்தை சேவாதாரிக் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றார். அனைவரும் ஒரேயளவிற்கு நேசிக்கப்பட முடியாது. அத்தகைய குழந்தைகளுக்கு, உள்ளிருந்து இயல்பாகவே ஆசீர்வாதங்கள் வெளிப்படுகின்றன. ஒரு குழந்தை கீழ்ப்படிவற்றவராக இருந்தால், அவரது தந்தை கூறுவார்: அவர் இறப்பதே மேல். அவர் தந்தையின் பெயரை அதிகளவு அவதூறு செய்கின்றார். இதுவே விதி எனப்படுகின்றது! ஒருவருக்கு என்ன நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி உங்களால் உடனடியாகவே கூற முடியும். பாபா விளங்கப்படுத்துகின்றார்: இவர் தகுதிவாய்ந்த குழந்தை, இவர் தகுதியற்றவர். ஒருவர் பாப்தாதாவை இனங்கண்டு கொள்ளாமலும், ஓர் ஆஸ்தியைப் பெறுகின்ற பாக்கியத்தைக் கொண்டிராமலும் இருந்தால் எவராலும் என்ன செய்ய முடியும்? இந்த ஞானப் பாதையின் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஒரு தந்தை தூய்மையாகி, அவரின் குழந்தை தூய்மை ஆகாது விட்டால், அப்பொழுது அக்குழந்தையால் எதற்கும் உரிமை கோர முடியாது. அவரது தந்தை அவரைத் தனது குழந்தையாகக் கருதமாட்டார். அவர் கூறுவார்: நான் சிவாபாபாவை எனது வாரிசாக ஆக்குவேன், அவர் 21 பிறவிகளுக்கு அதற்கான பலனை எனக்குக் கொடுப்பார். இதன் அர்த்தம் நீங்கள் இங்கே வந்து பாபாவுடனேயே தங்கிவிட முடியும் என்பதல்ல. இல்லை, நீங்கள் வீட்டில் வாழ்ந்தவாறு, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக அனைவரையும் பராமரிக்க வேண்டும். தந்தை உங்களின் குழந்தைகள் போன்றோரைப் பராமரிப்பார் என்றில்லை. இல்லை; அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் வழிதவறிச் செல்வார்கள். இங்கு, பாபாவுடன் சேர்ந்து, அனைவரும் முழுமையாகத் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையற்ற எவரும் இங்கு அமர்ந்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. இல்லாவிடில், புத்தி கல்லாகிவிடும். பாபா எவரையும் சபிக்கவில்லை; இதுவே நியதி ஆகும். தந்தை கூறுகின்றார்: எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் உங்களுடைய பௌதீக அங்கங்களினூடாக ஏதாவது பாவச் செயல்களைச் செய்வீர்களாயின், மரணித்து விடுகிறீர்கள்! இலக்கு மிக உயர்வானது. கடவுளின் குழந்தையாகிய பின்னர், நோய்கள் அனைத்தும் வெளிக்கிளம்பும். எவ்வாறாயினும், நீங்கள் பயப்படக்கூடாது. மூலிகை வைத்தியர்களும் கூறுகின்றனர்: இந்தக் குறிப்பிட்ட மருந்தை நீங்கள் எடுக்கும் பொழுது, உங்களின் உள்ளேயுள்ள நோய்கள் அனைத்தும் வெளிக்கிளம்பும், ஆனால் பயப்படாதீர்கள்! தந்தையே கூறுகின்றார்: நீங்கள் தந்தைக்கு உரியவர் ஆகியதும் இராவணனான மாயை உங்களைப் பெருமளவில் தொந்தரவு செய்வதுடன், பல புயல்களையும் கொண்டு வருவாள். சரி எது, பிழை எது எனப் பிரித்தறிந்து பார்க்கக்கூடிய புத்தியை நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளதால், தவறான செயல்கள் எதையும் செய்யக்கூடாது. மனிதர்கள் விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் மத்தியிலும், நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமான அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். அன்பான புத்தியைக் கொண்டவர்கள், தந்தைக்காக மிக நல்ல சேவை செய்வார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளின் குழந்தையாகிய பின்னர், சிறிதளவு கூட அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்காதீர்கள். உங்கள் பௌதீக அங்கங்கள் மூலம் பாவச் செயல்கள் எதையும் செய்யாதீர்கள். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தகுதிவாய்ந்தவராகி, தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.2. ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து, உங்களின் இல்லறத்தைப் பராமரியுங்கள். இந்த ஞான மார்க்கத்தின் நியதிகளை முழுமையாகப் பின்பற்றுங்கள். தவறானதில் இருந்து சரியானதைப் புரிந்துகொண்டு, மாயையையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
பரிதவிக்கும், தாகத்துடன் இருக்கும் யாசிக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தணிப்பதற்கு நீங்கள் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்கள் ஆகுவீர்களாக.எப்படி அலைகளால் அடிக்கப்பட்டு, மூழ்கிக் கொண்டிருப்பவர்கள் ஆதாரத்திற்காக ஒரு வைக்கோலையேனும் தேடுவார்களோ, அதேபோல், ஒரு துன்ப அலை வரும்போது, சந்தோஷம் அல்லது அமைதியை யாசித்தவண்ணம் எத்தனை பரிதவிக்கும் ஆத்மாக்கள் உங்களின் முன்னால் வருவார்கள் என்று பாருங்கள். இத்தகைய தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தணிப்பதற்கு, உங்களை அதீந்திரிய சுகம், சகல சக்திகள், சகல பொக்கிஷங்களால் நிரப்பிக் கொள்ளுங்கள். உங்களின் ஸ்திதியை எல்லா வேளைக்கும் பேணுவதற்கும் ஏனைய ஆத்மாக்களை சம்பூரணம் ஆக்குவதற்கும் அதிகளவு பொக்கிஷங்களைச் சேகரியுங்கள்.
சுலோகம்:
மற்றவர்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கும்போது, உபகார உணர்வுகளைக் கொண்டிருங்கள். அந்தக் கற்பித்தல்கள் அவர்களின் இதயங்களைத் தொடும்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
முகமலர்ச்சியுடன் இருப்பது இந்த ஞானத்தின் ஒரு நற்குணம் ஆகும். அதற்கு நீங்கள் ஆன்மீகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகமலர்ச்சியுடன் இருக்கும் சம்ஸ்காரம், தேவைப்படும் எந்த வேளையிலும் உங்களுக்கு அதிகளவில் உதவக் கூடியதோர் ஆசீர்வாதம் ஆகும். சதா மலர்ச்சியான ஸ்திதியில் இருப்பவர்களால் மற்றவர்களையும் அவர்களின் மனங்களின் நிலைமை என்னவாக இருந்தாலும், அவர்களை மலர்ச்சியாக ஆக்க முடியும். இலகுவான சுபாவத்தைக் கொண்டவர்கள், ஒரு பாரமான சூழ்நிலையையும் தமது மலர்ச்சி நிறைந்த, சந்தோஷமான முகத்தால் மிகவும் இலேசாக்க முடியும்.