04.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆரம்பத்திலிருந்து பக்தி செய்தவர்களும், 84 பிறவிகள் எடுத்தவர்களுமே, உங்களுடைய ஞானத்தை அதிகளவு ஆர்வத்துடன் செவிமடுப்பார்கள். அவர்கள் அனைத்தையும் சமிக்ஞைகளில் இருந்தே புரிந்து கொள்வார்கள்.
கேள்வி:
ஓர் ஆத்மா தேவ குடும்பத்திற்கு நெருக்கமானவரா அல்லது தொலைவானவரா என்று எவ்வாறு உங்களால் அடையாளம் காணமுடியும்?பதில்:
உங்களுடைய தேவ குடும்பத்திற்குச் சொந்தமான ஆத்மாக்கள் இந்த ஞானத்தின் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்வதுடன், குழப்பம் அடையவும் மாட்டார்கள். அவர்கள் எந்தளவிற்கு அதிக பக்தி செய்துள்ளனரோ, அந்தளவிற்கு புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் முதலில் ஒவ்வொருவரினதும் நாடித்துடிப்பை உணர்ந்த பின்னரே அவர்களுக்குச் சேவை செய்யவேண்டும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தை அசரீரியானவர், அவர் இந்தச் சரீரத்தின் மூலமாக எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நானும் அசரீரியானவன், நான் இந்த சரீரத்தின் மூலம் செவிமடுக்கின்றேன். இப்பொழுது இரு தந்தையரும் ஒன்றாக உள்ளனர். இரு தந்தையரும் இங்கே இருக்கின்றார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மூன்றாவது தந்தையையும் உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், இவர்(பிரம்மாபாபா) அவரிலும் (லௌகீகத் தந்தை) பார்க்கச் சிறந்தவர். ஆனால் மற்றவரே(சிவபாபா) அதி சிறந்தவராவார். அதுவும் வரிசைக்கிரமமே ஆகும். ஆகையினால் இப்பொழுது நீங்கள் உங்களுடைய லௌகீகத் தந்தையின் உறவுமுறையில் இருந்து அப்பால் விலகி இந்த இரு தந்தையருடனும் உறவுமுறையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டுமெனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து கூறுகின்றார். கண்காட்சிகள், விழாக்கள் போன்ற இடங்களில் பல மக்கள் உங்களிடம் வருவார்கள். அனைவருமே 84 பிறவிகள் எடுக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவர் 84 பிறவி எடுத்தவரா, அல்லது 10 பிறவி அல்லது 20 பிறவி எடுத்தவரா என எவ்வாறு உங்களால் தெரிந்து கொள்ள முடியும்? ஆரம்பத்திலிருந்து பெருமளவு பக்தி செய்தவர்கள் அதற்குச் சமனாக சிறந்த பலனை விரைவாகப் பெறுவார்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் குறைந்தளவு பக்தி செய்திருந்தால் அல்லது சற்றுத் தாமதமாக ஆரம்பித்திருந்தால் அவர்கள் தாமதமாகவும் குறைந்தளவு பலனையுமே பெறுவார்கள். பாபா சேவை செய்யும் குழந்தைகளுக்கு இதை விளங்கப்படுத்துகின்றார். “நீங்கள் பாரத தேசத்து மக்கள், எனவே நீங்கள் தேவர்களில் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?” என அவர்களிடம் வினவுங்கள். பாரதத்திலே இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. 84 பிறவிகள் எடுத்தவர்களும், ஆரம்பத்தில் இருந்தே பக்தி செய்தவர்களும், ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் உண்மையில் இங்கே இருந்தது என மிக விரைவாகப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் பெருமளவு ஆர்வத்துடன் செவிமடுப்பார்கள். மற்றவர்கள் வந்து சுற்றிப் பார்த்துவிட்டு எதுவுமே கேட்காமல் சென்றுவிடுவார்கள். இது அவர்களது புத்தியில் எதுவுமே பதியாதது போன்றதாகும். ஆகையினால், அவர்கள் இதுவரை இங்கு சொந்தமானவர்கள் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. பின்னர் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடும். சிலர் புரிந்து கொண்டு உடனடியாகவே தலையை ஆட்டுவார்கள். இந்த 84 பிறவிகளின் கணக்கு மிகச்சரியானது. “நான் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளேனா என எவ்வாறு நான் புரிந்துகொள்ள முடியும்?” என அவர்கள் வினவுவார்கள். அச்சா, நீங்கள் 84 பிறவிகள் இல்லாவிடின், 82 பிறவிகளாவது எடுத்திருப்பீர்கள். ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் தேவ தர்மத்துக்குள்ளாவது வந்திருப்பீர்கள். அவர்களுடைய புத்தியால் இந்தளவாவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் 84 பிறவிகள் எடுக்கவில்லை என நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதற்கும் அப்பால் இருப்பவர்கள் குறைந்தளவு ஞானத்தையே செவிமடுப்பார்கள். பெருமளவு பக்தி செய்தவர்கள், கடின முயற்சி செய்து, ஞானத்தைச் செவிமடுத்து, மிக விரைவில் புரிந்து கொள்வார்கள். சிலர் குறைவாகப் புரிந்துகொண்டால், அவர்கள் சிறிது காலத்துக்குப் பின்னரே பக்தி செய்ய ஆரம்பித்தவர்கள் எனவும், அவர்கள் தாமதமாக வருவார்கள் எனவும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். பெருமளவு பக்தி செய்தவர்கள் சமிக்ஞைகள் மூலம் புரிந்து கொள்வார்கள். இந்த நாடகம் மறுபடியும் தொடரும். அனைத்தும் பக்தியிலேயே தங்கியுள்ளது. இந்த பாபாவே அதிகூடிய பக்தி செய்தவர் ஆவார். குறைந்தளவு பக்தி செய்தவர்கள் குறைந்தளவு பலனையே பெறுவார்கள். இந்த அனைத்து விடயங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மேலோட்டமான புத்தியைக் கொண்டவர்களால் இந்த விடயங்களைக் கிரகிக்க முடியாது. கண்காட்சிகளும் விழாக்களும் தொடர்ந்தும் இடம்பெறும். அவை அனைத்தும் வேறுபட்ட மொழிகளில் இடம்பெறும். நீங்கள் உலகிலுள்ள அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்களே உண்மையான தீர்க்கதரிசிகளும், தூதுவர்களும் ஆவீர்கள். அந்த மத ஸ்தாபகர்கள் எதையுமே செய்வதில்லை. அவர்கள் குருமார் அல்லர். அவர்கள் தங்களை குருமார் என அழைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஜீவன் முக்தியை அருள்பவர்கள் அல்லர். அவர்கள் வருகின்ற நேரத்தில், அவர்களுடைய சத்சங்கங்கள் இருப்பதில்லை. எனவே அவர்கள் யாருக்கு ஜீவன்முக்தி அளித்திருப்பார்கள்? ஒரு குரு என்றால் ஜீவன்முக்தி அளிப்பவரும், இந்தத் துன்ப உலகில் இருந்து ஆத்மாக்களை அமைதி தாமத்துக்கு அழைத்துச் செல்பவரும் ஆவார். கிறிஸ்து போன்றோர் குரு என அழைக்கப்படுவதில்லை. அவர்கள் மத ஸ்தாபகர்கள். அவர்களுக்கு வேறு எந்த அந்தஸ்தும் இல்லை. சதோபிரதானாக முதலில் வந்து, பின்னர் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் சென்றவர்களே, அந்தஸ்தைக் கொண்டிருக்கின்றார்கள். மற்றவர்கள் வந்து அவர்களின் மதங்களை ஸ்தாபித்துவிட்டு, தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கின்றார்கள். அனைவரும் மீண்டும் தமோபிரதான் நிலையை அடையும்போது, தந்தை வந்து அவர்களைத் தூய்மையாக்கி, திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் ஒருமுறை தூய்மையாகி விட்டால், தூய்மையற்ற உலகில் இருக்கமுடியாது. தூய ஆத்மாக்கள் முதலில் முக்திக்குச் சென்று, பின்னர் ஜீவன்முக்தி வாழ்க்கைக்கு வருவார்கள். அவரே விடுதலையளிப்பவர், வழிகாட்டி என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருந்தால், அவர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும். சத்திய யுகத்தில் “பக்தி மார்க்கம்” என்ற பதம் இருக்கமாட்டாது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தமது சொந்தப் பாகங்களைத் தொடர்ந்தும் நடிக்கின்றனர். ஒருவர்கூட தான் நடிக்கும் பாகத்திலிருந்து விடுதலை அடைய முடியாது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமத்தில் வருகின்றேன். இது மேன்மையான, நன்மை பயக்கும் சங்கம யுகம் என அழைக்கப்படுகின்றது. மற்றைய எந்த யுகமும் நன்மை பயப்பதில்லை. சத்திய, திரேதா யுகங்களின் சங்கமத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சூரிய வம்சம் முடிவடைந்த பின்னர் சந்திர வம்ச இராச்சியம் இருக்கும். சந்திர வம்சம், வைசிய வம்சமாக மாறும்போது, சந்திர வம்சம் கடந்துவிடும். அதன் பின்னர் நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் என எவருக்குமே தெரியாது. சூரிய வம்சத்துக்குச் சொந்தமானவர்கள் எங்களுடைய மூதாதையர் என்றும், ஏனையவர்கள் சந்திர வம்சத்தினர் என்றும் எஞ்சியிருக்கும் ரூபங்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அவர்கள் (சூரிய வம்சத்தினர்) சக்கரவர்த்திகளாகவும், ஏனையவர்கள் (சந்திர வம்சத்தினர்) அரசர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால் இவர்களோ (சந்திர வம்சத்தினர்) தோல்வி அடைந்தார்கள். இந்த விடயங்கள் எந்தவொரு புராணங்கள் போன்றவற்றிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை இப்பொழுது இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். “எங்களை விடுதலை ஆக்குங்கள்! எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” என அனைவரும் கூறுகின்றனர். அவர்கள் சந்தோஷத்தை வேண்டுவதில்லை. ஏனெனில் புராணங்களில் சந்தோஷம் அவமதிக்கப்பட்டுள்ளது. “எவ்வாறு நான் மன அமைதியைப் பெறுவது?” என அனைவரும் வினவுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அமைதி, சந்தோஷம் இரண்டையும் பெறுகின்றீர்கள் எனப் புரிந்து கொள்கின்றீர்கள். எங்கே அமைதி இருக்கின்றதோ, அங்கே சந்தோஷம் இருக்கும். எங்கே அமைதியின்மை இருக்கின்றதோ அங்கே துன்பமே இருக்கும். சத்தியயுகத்தில் அமைதி, சந்தோஷம் இரண்டுமே இருக்கும். இங்கேயோ துன்பமும் அமைதியின்மையுமே உள்ளன. மாயையாகிய இராவணன் உங்களுடைய புத்தியை முற்றிலும் சீரழிந்ததாக ஆக்கிவிட்டான் எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். நான் இப்பொழுது எனது பாகத்தை நடிக்கின்றேன். அது இந்த நேரத்திலேயே இடம்பெறுகிறது. “பாபா, நீங்கள் மாத்திரமே ஒவ்வொரு கல்பத்திலும் வந்து தூய்மையற்று, சீரழிந்துள்ள எங்களைத் தூய்மை ஆனவர்களாகவும் மேன்மை ஆனவர்களாகவும் ஆக்குகின்றீர்கள்.” என நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் இராவணனின் மூலமே சீரழிந்தவர்கள் ஆகினீர்கள். தந்தை இப்பொழுது வந்து மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். தந்தை மாத்திரமே வந்து பாடலிலுள்ள புகழ்ச்சியின் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அந்த அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்பவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாக்களே அமரத்துவ ரூபங்கள் என பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். இச்சரீரம் இந்த ஆத்மாவின் இரதமாகும். மரணத்தை ஒருபோதும் அனுபவம் செய்யாத அமரத்துவ ரூபம் இதில் அமர்ந்திருக்கின்றார். சத்திய யுகத்தில் மரணம் உங்களிடம் வரமாட்டாது. அங்கே அகால மரணம் இடம்பெற மாட்டாது. அது அமரத்துவ உலகம், இது மரண உலகம். எவருமே அமரத்துவ உலகம் அல்லது மரண உலகம் என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் அனைத்தையும் இலகுவான முறையில் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். சாதுக்களும், புனிதர்களும் பாடுகின்றார்கள். ஓ தூய்மையாக்குபவரே! அவர்கள் தூய்மை ஆக்குபவரான தந்தையை அழைக்கின்றார்கள். நீங்கள் எங்கே சென்றாலும், அவர்கள் நிச்சயமாக “தூய்மை ஆக்குபவரை” அழைப்பார்கள். சத்தியம் ஒருபோதும் மறைந்திருக்க முடியாது. தூய்மை ஆக்குபவரான தந்தை வந்து, எங்களுக்கு பாதையைக் காட்டுகின்றார் என உங்களுக்குத் தெரியும். “உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்” என ஒரு கல்பத்திற்கு முன்னரும் அவர் கூறினார். நீங்கள் அனைவரும் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். அந்தக் காதலர்கள் ஒரு பிறவிக்கானவர்கள். ஆனால் நீங்கள் அனைவரும் இவரைப் பல பிறவிகளாகக் காதலிக்கின்றீர்கள். நீங்கள் அவரை நினைவு செய்து, ஓ பிரபு! எனக் கூறுகிறீர்கள். ஒரு தந்தை மாத்திரமே அருள்பவர். தந்தையிடமிருந்து மாத்திரமே குழந்தைகள் எதையாவது கேட்கின்றார்கள். ஆத்மாக்கள் சந்தோஷம் அற்றவர்கள் ஆகும்போதே அவர்கள் தந்தையை நினைவு செய்கின்றார்கள். சந்தோஷத்தில் எவருமே அவரை நினைவு செய்வதில்லை. அவர்கள் தமது குருவிடம் சென்று “எமக்கு ஒரு குழந்தையைக் கொடுங்கள்” என்று கேட்பது போன்று, அனைவரும் தாம் சந்தோஷமற்று இருக்கும்போது, “பாபா, வந்து முக்தியை அருளுங்கள்” என அவரை நினைவு செய்கின்றார்கள். அச்சா, அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தால், அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் ஒரு குழந்தையைப் பெறவில்லை என்றால் “அது கடவுளின் சித்தம்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் நாடகத்தைப் புரிந்து கொள்வதே இல்லை. அவர்கள் நாடகத்தைப் பற்றிப் பேசுவார்களாயின், அவர்களுக்கு அனைத்துமே தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு நாடகம் பற்றித் தெரியும். வேறு எவருக்கும் அது தெரியாது. அது எந்தப் புராணங்களிலும் குறிப்பிடப்படவில்லை. நாடகம் என்றால் நாடகமே. நீங்கள் அதன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்திருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறேன். நான்கு யுகங்களும், முழுமையாக சமனானவை ஆகும். சுவஸ்திகாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் வைத்திருக்கும் கணக்குப் புத்தகத்தில் சுவஸ்திகா ஒன்று வரையப்படுகிறது. இதுவும்கூட, எவ்வாறு நாங்கள் இலாபமீட்டி பின்னர் நட்டம் அடைகின்றோம் என்ற கணக்குப் புத்தகமாகும். இழப்பு ஏற்பட்டு இப்பொழுது நாங்கள் முற்றிலும் இழந்த நிலையை அடைந்து விட்டோம். இது வெற்றி, தோல்வி பற்றிய நாடகம். செல்வமும், ஆரோக்கியமும் இருக்கும்போது, சந்தோஷமும் இருக்கும். எவ்வாறாயினும் செல்வம் இருந்து ஆரோக்கியம் இல்லையெனில் சந்தோஷம் இருக்கமாட்டாது. நான் உங்களுக்கு செல்வம், ஆரோக்கியம் இரண்டையும் கொடுக்கின்றேன். எனவே நீங்கள் சந்தோஷத்தையும் கொண்டிருப்பீர்கள். ஒருவர் சரீரத்தை விடும்போது ஆத்மா சுவர்க்கத்திற்கு சென்றுவிட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். இருந்தும் உள்ளுர அவர்கள் துன்பத்தையே அனுபவம் செய்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் மேலும் சந்தோஷம் அடையவே வேண்டும். அவர்கள் ஏன் அந்த ஆத்மாவை இந்த நரகத்திற்குத் திரும்பி வருமாறு அழைக்கின்றார்கள்? அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. தந்தை இப்பொழுது வந்து இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் விதையினதும் விருட்சத்தினதும் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவ்வாறான விருட்சத்தின் படத்தை வேறு எவராலும் உருவாக்க முடியாது. இவர் அதை உருவாக்கவும் இல்லை, அதை ஒரு குருவிடமிருந்து கற்றுக் கொள்ளவும் இல்லை. அவர் குருவிடமிருந்து கற்றிருந்தால் அந்த குருவுக்கு மேலும் பல சீடர்கள் இருந்திருப்பார்கள்.ஒரு குருவே இவருக்கு அனைத்தையும் கற்பித்திருப்பார் என மக்கள் நினைக்கின்றார்கள். அல்லது பரமாத்மாவின் சக்தி இவரினுள் பிரவேசித்திருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும் எவ்வாறு பரமாத்மாவின் சக்தி இவரினுள் பிரவேசிக்க முடியும்? அந்த அப்பாவிகள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. தந்தை தானே அமர்ந்திருந்து உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார். நான் சாதாரண பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன் என அவர் கூறுகிறார். நான் உங்களுக்குக் கற்பிக்க வருகின்றேன். அவரும் செவிமடுக்கிறார். அவரது கவனம் என்மீது உள்ளது. அவரும் ஒரு மாணவரே. அவர் தன்னை வேறு எந்த விதமாகவும் அழைப்பதில்லை. மனித குலத்தின் தந்தையாக இருப்பதுடன், அவர் ஒரு மாணவரும் ஆவார். விநாசத்தின் காட்சிகளைக் கண்டபோதிலும், அவர் எதையுமே புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பது போன்று அவர் படிப்படியாக அனைத்தையும் புரிந்துகொண்டார்: தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும் போது இடையே இருக்கும் இவரும் தொடர்ந்து புரிந்துகொள்வார். அவர் தொடர்ந்தும் கற்கின்றார். ஒவ்வொரு மாணவரும் கற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். பிரம்மா, விஷ்ணு சங்கரர் ஆகியோர் சூட்சும உலக வாசிகளாவர். அவர்களுடைய பாகம் என்ன என்று எவருக்குமே தெரியாது. தந்தை ஒவ்வொரு விடயங்களையும் தானே விளங்கப்படுத்துகின்றார். எனவே நீங்கள் கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லை. பரமாத்மா சிவன் அதி மேலே இருக்கின்றார். பின்னர் தேவர்கள் இருக்கின்றார்கள். எவ்வாறு அவர்களை அவருடன் கலக்க முடியும்? தந்தை இவரினுள் பிரவேசிக்கின்றார். இதனாலேயே நாங்கள் பாப்தாதா என அழைக்கப்படுகின்றோம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். பாபா, தாதாவிலிருந்து (மூத்த சகோதரர்) வேறுபட்டவர். சிவன் தந்தையாவார். பிரம்மா, தாதா ஆவார். இவர் மூலமாக சிவனிடமிருந்து நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் ஆவார்கள். தந்தை நாடகத் திட்டத்திற்கேற்ப உங்களைத் தத்து எடுத்துள்ளார். தந்தை கூறுகின்றார்: இவர் முதலாம் இலக்க பக்தராக இருந்தார். அவர் 84 பிறவிகள் எடுத்துள்ளார். அவர் அழகானவரும், அவலட்சணமானவரும் என்றும் அழைக்கப்படுகின்றார். சத்தியயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அழகானவராக இருந்தார், அவர் கலியுகத்தில் அவலட்சணமானவர் ஆகிவிட்டார். அவர் தூய்மை அற்றவராக இருந்தார். இப்பொழுது, தூய்மை ஆகுகின்றார். இது உங்களுக்கும் பொருந்தும். இது கலியுக உலகம். அதுவோ சத்தியயுக உலகமாகும். ஏணி பற்றி எவருக்கும் தெரியாது. தாமதமாக வருபவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. அவர்கள் நிச்சயமாக சில பிறவிகளே எடுத்திருப்பார்கள். எனவே எவ்வாறு அவர்கள் ஏணிப்படத்தில் காட்டப்பட முடியும்? அதிகூடிய பிறவிகள் எடுத்தவர்கள் பற்றியும் அதிகுறைந்த பிறவிகள் எடுத்தவர்கள் பற்றியும் பாபா விளங்கப்படுத்துகின்றார். இது ஞானமாகும். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் பேசுகின்றார். அவர்கள் அனைவரும் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல அதுவுமல்ல) என்று கூறுகின்றனர். அவர்களுக்குத் தமது சொந்த ஆத்மாவையே தெரியாது. எனவே எவ்வாறு அவர்கள் தந்தையைத் தெரிந்து கொள்வார்கள்? அவர்கள் ஆத்மாவைப் பற்றி பெயரளவிலேயே பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஆத்மா அநாதியானவர் என்றும், அவரில் 84 பிறவிகளின் அழியாத பாகம் பதியப்பட்டுள்ளது என்றும் இப்போது உங்களுக்குத் தெரியும். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவினுள் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது! இதை மிகக் கவனமாகச் செவிமடுப்பவர்களும், புரிந்து கொள்பவர்களுமே நெருக்கமானவர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. இந்த ஞானம் அவர்களது புத்தியில் பதியவில்லை என்றால் அவர்கள் தாமதமாகவே வருவார்கள் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஞானத்தைக் கொடுக்கும் நேரத்தில் அவர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொள்ளுங்கள். விளங்கப்படுத்துபவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. இது உங்கள் கல்வியாகும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சிலர் அனைத்திலும் உயர்ந்த அந்தஸ்தான ராஜ அந்தஸ்தைக் கோரிக்கொள்வார்கள். ஏனையோர் பிரஜைகளுக்கு பணிப்பெண்களாகவும், வேலைக்காரர்கள் ஆகவும் ஆகுவார்கள். எவ்வாறாயினும், சத்திய யுகத்தில் எந்தவிதமான துன்பமும் இருக்காது என்பது உண்மையாகும். அது சந்தோஷ பூமியான சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. அது கடந்த காலத்தில் இருந்ததால், அவர்கள் அதை நினைவு செய்கின்றார்கள். மக்கள் சுவர்க்கம் மேலே இருப்பதாக நினைக்கிறார்கள். தில்வாலா ஆலயத்தில் உங்களுடைய சரியான ஞாபகார்த்தம் காட்டப்பட்டுள்ளது. ஆதிதேவனும், ஆதிதேவியும், குழந்தைகளாகிய நீங்களும் தரையிலே யோகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள், இராச்சியம் மேலே காட்டப்பட்டுள்ளது. மக்கள் சென்று அவற்றைப் பார்த்துவிட்டு பணம் கொடுக்கின்றார்கள். எனினும் அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அனைத்திற்கும் முதலில், நீங்கள் தந்தையின் வரலாற்றை அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு மேலும் என்ன வேண்டும்? தந்தையை அறிந்துகொண்டதன் மூலம், நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகையினால் சந்தோஷம் இருக்கவேண்டும். நீங்கள் இப்பொழுது சத்திய யுகத்திற்குச் சென்று தங்க மாளிகைகளைக் கட்டுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அங்கு நீங்கள் ஆட்சி செய்வீர்கள். இந்த ஆன்மீக ஞானம் ஆன்மீகத் தந்தையினால் கொடுக்கப்படுகின்றது என்பதை சேவாதாரிக் குழந்தைகளின் புத்தி அறியும். ஆத்மாக்களின் தந்தை, ஆன்மீகத் தந்தை என அழைக்கப்படுகின்றார். அவரே ஜீவன்முக்தியை அருள்பவர். அவர் அமைதி, சந்தோஷம் எனும் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம்: இந்த ஏணிப்படமானது 84 பிறவிகளை எடுத்த பாரத வாசிகளைப் பற்றியதாகும். நீங்கள் சக்கரத்தில் அரைவாசியில் வந்தீர்கள். எனவே நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கமுடியும்? நாங்களே அதிகூடிய பிறவிகளை எடுக்கின்றோம். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய மிக ஆழமான விடயங்களாகும். தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மை ஆகுவதற்காக உங்களுடைய புத்தியை யோகத்தில் இணைப்பதே பிரதான விடயமாகும். நீங்கள் தூய்மை ஆகுவதற்கான சத்தியம் செய்தபின்னர் தூய்மையற்றவர் ஆகினால், உங்களுடைய எலும்புகள் முற்றாக நொருங்கிவிடும். இது நீங்கள் ஐந்தாவது மாடியிலிருந்து விழுவது போன்றதாகும். உங்களுடைய புத்தி முற்றிலும் சுத்தமற்றதாகி உங்களுடைய மனச்சாட்சி உறுத்தத் தொடங்கும். பின்னர் உங்களால் எதையுமே பேச முடியாதிருக்கும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: எச்சரிக்கையாக இருங்கள்! அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த நாடகத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, மாயையின் பந்தனங்களில் இருந்து விடுதலை ஆகுங்கள். உங்களை ஓர் அமரத்துவ ரூபமான ஆத்மாவாகக் கருதுங்கள். தந்தையை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள்.2. உண்மையான தீர்க்கதரிசியாகவும், தூதுவராகவும் ஆகி, அனைவருக்கும் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான பாதையைக் காட்டுங்கள். இந்த நன்மை பயக்கும் சங்கமயுகத்தில் சகல ஆத்மாக்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையையும் உங்களின் சேவையையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டவராகி, நிலையான, ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.ஒரு வேலையாள் எப்போதும் தனது சேவையையும் தனது எஜமானனையும் நினைப்பார். அதேபோல், உலக சேவகர்களான நீங்கள், உண்மையான சேவையாளர் குழந்தைகளான உங்களால் தந்தையையும் சேவையையும் தவிர வேறு எதையும் நினைக்க முடியாது. இதன் மூலம் மட்டுமே நீங்கள் நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்கிறீர்கள். ஒரேயொரு தந்தையின் இனிமையைத் தவிர ஏனைய அனைத்து சுவைகளும் ருசியற்றவையாகவே இருக்கும். ஒரேயொரு தந்தையின் இனிமையை நீங்கள் ருசிப்பதால், உங்களால் வேறு எதை நோக்கியும் கவரப்பட முடியாது. நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பதற்கான தீவிர முயற்சி, உங்களை சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபடச் செய்யும்.
சுலோகம்:
இக்கட்டான சூழ்நிலைகள் என்ற பரீட்சையில் சித்தி அடைவதற்கு, உங்களின் சுபாவத்தைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
உண்மையற்ற எதையும் நீங்கள் பார்த்தால் அல்லது கேட்டால், அந்தப் பொய்யை சூழலில் பரப்பாதீர்கள். அது ஒரு பாவம், என்னால் அந்தப் பாவத்தை ஒருவர் செய்வதைப் பார்க்க முடியவில்லை எனப் பலர் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், உண்மையற்ற விடயங்களைச் சூழலில் பரப்புவதும் ஒரு பாவமே. நீங்கள் இப்படியான ஒன்றைப் பார்த்து அல்லது கேட்பதை உங்களின் லௌகீகக் குடும்பத்தில் பரப்ப மாட்டீர்கள். அதை உங்களின் காதுகளால் கேட்டு, இதயத்தில் மறைத்துக் கொள்வீர்கள். இங்கே யாராவது ஒருவர் வீணானவற்றைப் பரப்புவதும் ஒரு பாவத்தின் சுவடேயாகும். இத்தகைய சிறிய பாவங்கள் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதை இல்லாமல் செய்துவிடும். ஆகவே, கர்மத்தின் ஆழமான தத்துவத்தைப் புரிந்து கொண்டு சத்தியத்தின் சக்தியை அதன் உண்மையான ரூபத்தில் கடைப்பிடியுங்கள்.