06.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் எதிர்கால மேன்மையான குலத்துக்கு நீங்கள் செல்வதற்கு இக்கல்வியே அடிப்படையாகும். இக்கல்வியால் மாத்திரமே உங்களால் யாசகர்களில் இருந்து இளவரசர்களாக மாற முடியும்.

கேள்வி:
எந்த இரு வழிகளில் உங்கள் வாயில் தங்கக் கரண்டியை நீங்கள் பெற முடியும்?

பதில்:
பக்தி மார்க்கத்தில் தானம் அளித்துப் புண்ணியம் செய்வது ஒரு வழியாகும். மற்றையது இந்த ஞானத்தைக் கற்பதாகும். பக்தி மார்க்கத்தில், நீங்கள் எதையாவது தானம் அளித்துப் புண்ணியம் செய்யும்பொழுது, ஓர் அரசருக்கு அல்லது ஒரு செல்வந்தருக்குப் பிறப்பெடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், அவ்விடயம் எல்லைக்கு உட்பட்டது. இந்த ஞானத்தைக் கற்பதால், நீங்கள் வாயில் தங்கக் கரண்டியைப் பெறுகிறீர்கள். இவ்விடயம் எல்லையற்றது. கற்பதால், நீங்கள் பக்தி மார்க்கத்தில் ஓர் இராச்சியத்தைப் பெற முடியாது. இங்கு, ஒருவர் சிறப்பாகக் கற்கும்பொழுது, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான, நீண்ட காலத்துக்கு முன்னர் தொலைந்து, இப்பொழுது கண்டு எடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகிறது. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுமாறு, தந்தை வந்து, பாரதக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார். தந்தை உங்களுக்கு இந்தக்கட்டளையைக் குறிப்பாகக் கொடுத்துள்ளார். ஆகவே, நீங்கள் அவர் கூறுவதைக் கேட்க வேண்டும். அதிமேன்மையான தந்தையின் ஸ்ரீமத் மிகவும் பிரபல்யமானது. சிவபாபா மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்படுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் எங்களை ஸ்ரீ ஸ்ரீ ஆக்குகிறார். ஸ்ரீ என்றால் மேன்மையானது என்று அர்த்தம். தந்தையே அவர்களை (இலக்ஷ்மியும் நாராயணனும்) அவ்வாறானவர்கள் ஆக்கினார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நாங்கள் புதிய உலகத்துக்காகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். புதிய உலகம் அமரத்துவ பூமியான, சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. அதைப் புகழ்வதற்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் சுவர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிப் பேசுகிறார்கள். இன்ன இன்னார் சுவர்க்கவாசி ஆகினார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, அவர் ஒரு நரகவாசியாக இருந்திருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். சுவர்க்கம் என்றால் என்ன அல்லது நரகம் என்றால் என்ன, புதிய உலகம் என்றால் என்ன அல்லது பழைய உலகம் என்றால் என்ன என்ற அடிப்படை புரிந்துணர்வு மக்களுக்கு இல்லை. அவர்கள் அவற்றில் எதையும் முற்றாகவே புரிந்து கொள்வதில்லை. அதிகளவுக்கு வெளிப்பகட்டு உள்ளது. நிச்சயமாகத் தந்தையே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பதைக் குழந்தைகளாகிய உங்களின் மத்தியிலும் சொற்ப அளவினரே புரிந்து கொள்கிறீர்கள். இலக்ஷ்மி அல்லது நாராயணனாக ஆகுவதற்கே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். நாங்கள் யாசகர்களில் இருந்து இளவரசர்களாக மாறுவோம். முதலில், நாங்கள் சென்று இளவரசர்கள் ஆகுவோம். இது ஒரு கல்வி. நீங்கள் ஒரு பொறியியலாளர் அல்லது சட்டநிபுணர் ஆகுவதற்குக் கற்கும்பொழுது, பின்னர் ஒரு புதிய வீட்டைக் கட்டுவீர்கள் என்பதும், இதையும் அதையும் செய்வீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளன. அனைவரும் தங்கள் கடமைகளைப் பற்றி அறிந்துள்ளார்கள். இந்தக்கல்வி மூலம் குழந்தைகளாகிய நீங்கள் சென்று மேன்மையான குடும்பங்களில் பிறப்பு எடுப்பீர்கள். நீங்கள் அதிகமாகக் கற்கையில், நீங்கள் பிறப்பெடுக்கும் குடும்பமும் மேலும் மேன்மையானதாக இருக்கும். நீங்கள் ஓர் அரசருக்குப் பிறப்பெடுத்து, பின்னர் ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள்: “வாயில் தங்கக்கரண்டி” என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. முதலில், இந்த ஞானத்தைக் கற்பதால், வாயில் தங்கக்கரண்டியை நீங்கள் பெறுகிறீர்கள். இரண்டாவதாக, நீங்கள் பெருமளவு தான தர்மம் செய்யும்பொழுது, ஓர் அரசருக்குப் பிறப்பு எடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், அந்த விடயம் எல்லைக்கு உட்பட்டது. இங்குள்ள விடயம் எல்லையற்றது. அனைத்தையும் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாதிருந்தால், நீங்கள் அதைப் பற்றி வினவ முடியும். நீங்கள் பாபாவிடம் வினவ வேண்டியவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின், அவர் அதைச் சீராக்குகின்றார். பக்தி மார்க்கத்தில் தான தர்மம் செய்வதால், நீங்கள் ஒரு செல்வந்தருக்குப் பிறப்பெடுப்பீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒருவர் ஏதாவது தீமையைச் செய்தால், அதற்கேற்பவே பிறப்பு எடுக்கிறார். பாபாவிடம் வரும் சிலருக்கும் அத்தகைய கர்ம பந்தனங்கள் உள்ளன, கேட்கவும் வேண்டாம்! கடந்த காலத்திலிருந்தே, அக்கர்ம பந்தனங்கள் அனைத்தும் வருகின்றன. சில அரசர்களுக்கு மிகவும் கடுமையான கர்ம பந்தனங்கள் உள்ளன. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் முற்றிலும் பந்தனம் இல்லை. அங்கு, யோகசக்தியின் மூலம் படைப்பு நடைபெறுகிறது. நாங்கள் யோகசக்தி மூலம் உலக இராச்சியத்தைக் கோர முடியுமானால், அவ்விதமாக, குழந்தைகள் பிறக்க முடியாதா? அவர்களுக்கு முற்கூட்டியே ஒரு காட்சி கிடைக்கிறது. அங்கு, அது ஒரு பொதுவான விடயம். பெருஞ் சந்தோஷத்துடன் முரசுகள் கொட்டப்படுகின்றன. ஒரு வயோதிப நபர் குழந்தையாக மாறுகிறார். ஒரு மகாத்மாவை விடவும் ஒரு குழந்தைக்குப் பெருமளவு மரியாதை கொடுக்கப்படுகிறது. ஏனெனில் வாழ்க்கையின் ஸ்திதிகள் அனைத்தையும் கடந்து செல்லும்பொழுது, மகாத்மாக்கள் முதுமை அடைகின்றார்கள். அவர்கள் விகாரம் பற்றிய அனைத்தையும் அறிவார்கள். ஆனால் சிறு குழந்தைகளுக்கோ அதைப் பற்றி எதுவும் தெரியாது. அதனாலேயே அவர்கள் மகாத்மாக்களை விடவும் மகத்துவமானவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். அங்கே (சத்திய யுகத்தில்), அனைவரும் மகாத்மாக்கள். ஸ்ரீ கிருஷ்ணரும் ஒரு மகாத்மா எனக் கூறப்படுகிறார்; அவர் ஓர் உண்மையான மகாத்மா. சத்திய யுகத்தில் மாத்திரமே மகாத்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போன்று இங்கு எவரும் இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் உள்ளாரப் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும், ஏனெனில் இப்பொழுது நீங்கள் அந்தப் புதிய உலகில் பிறப்பெடுக்கப் போகிறீர்கள். இந்தப்பழைய உலகம் அழியவுள்ளது. ஒரு வீடு பழையதாகும் பொழுது, நீங்கள் புதிய வீட்டுக்குச் செல்லப் போவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். பளிங்குக்கற்கள் போன்றவற்றால் அத்தகைய அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஜெயின்களிடம்(சமணர்கள்) பெருமளவு பணம் உள்ளது. அவர்கள் தங்களை மிகவும் உயர்ந்த குலத்தினர் எனக் கருதுகிறார்கள். உண்மையில், இங்கே உயர்ந்த குலங்கள் இல்லை. திருமணத்துக்காகத் துணைவரைத் தேடும்பொழுது, அவர்கள் ஓர் உயர் குலத்தவரைத் தேடுகிறார்கள். அங்கே குலங்கள் போன்றவற்றின் கேள்வியே கிடையாது. அங்கே தேவ குலம் மாத்திரம் உள்ளது, வேறு குலங்கள் கிடையாது. இதற்காக, சங்கமயுகத்தில், நீங்கள் பயிற்சி செய்கிறீர்கள்: நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள், ஒரு தந்தையின் குழந்தைகள். முதலில், ஆத்மாவும் பின்னர் சரீரமும் உள்ளன. உலகில் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கும் பொழுது, உங்கள் ஸ்திதியை நீங்கள் சக்தி நிறைந்ததாக்க வேண்டும். பாபாவுக்குப் பல குழந்தைகள் உள்ளனர். பெரியதோர் இல்லறமும் உள்ளது. இவர் பலவற்றைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். இவரும் முயற்சி செய்ய வேண்டும். நான் ஒரு சந்நியாசி அல்ல. தந்தை இவரில் பிரவேசித்துள்ளார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் ரூபங்கள் உள்ளன, அவர்களில் பிரம்மாவே அதிமேன்மையானவர். ஆகவே, நீங்கள் இவரை நீக்கி விட்டால், தந்தை வேறு யாரில் பிரவேசிப்பார்? பிரம்மா புதிதாகப் பிறந்தவர் அல்லர். இவர் (பிரம்மா) எவ்வாறு தத்தெடுக்கப்பட்டார், நீங்கள் எவ்வாறு பிராமணர்கள் ஆகுகிறீர்கள் என்பதை உங்களால் காண முடிகிறது. நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களை அறிவீர்கள். மற்றவர்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் கூறுகிறார்கள்: இவர் ஒரு நகை வியாபாரியாக இருந்தார், இப்பொழுது நீங்கள் இவரை பிரம்மா என அழைக்கிறீர்கள்! பல பிராமணர்கள் எப்படி உருவாக்கப்பட்டார்கள் என்பதை இத்தகைய மக்கள் புரிந்துகொள்வார்களா? நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் மிகவும் ஆழமான விடயங்கள். இந்த பிரம்மா பௌதீகமானவர் (வியக்த்) ஆவார். (சூட்சும லோகத்தில் உள்ள) அவர் சூட்சுமமானவர் (அவ்யக்த்). இந்த பிரம்மா தூய்மையாகி, பின்னர் அந்த அவ்யக்த் ஆனவர் ஆகுகிறார். இவர் கூறுகிறார்: நான் இந்த வேளையில் தூய்மையாக இல்லை. நான் அவரைப் போன்றே தூய்மையாகிக் கொண்டிருக்கிறேன். பிரஜாபிதா (மக்களின் தந்தை) இங்கேயே இருக்க வேண்டும். வேறு எங்கிருந்து அவர் வருவார்? தந்தையே விளங்கப்படுத்துகிறார்: நான் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நிச்சயமாக, இவர் பிரஜாபிதா என அழைக்கப்படுவார். சூட்சும லோகத்தில் உள்ளவர் அவ்வாறு அழைக்கப்பட மாட்டார். அங்கே மக்கள் என்ன செய்வார்கள்? இவர் தனிப்பட்ட முறையில் தூய்மை ஆகுகிறார். இவர் முயற்சி செய்வதைப் போன்றே, நீங்களும் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து தூய்மையாக வேண்டும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சுவர்க்கமும், நரகமும் முற்றிலும் வேறுபட்டவை. இப்பொழுது அனைத்தும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 5000 வருடங்களுக்கு முன்னர் உங்கள் இராச்சியமாக இருந்தது. எவ்வாறாயினும், அம்மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு கல்பத்துக்கு முன்னர் இவ்விடயங்களைப் புரிந்துகொண்டவர்கள் மாத்திரம் இப்பொழுது அவற்றைப் புரிந்துகொள்வார்கள். முஸ்லிம்கள், பார்சிகள் போன்ற - அனைத்து விதமான மக்களும் இங்கே வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம், ஆனால் பின்னர் அவர்கள் இந்த ஞானத்தை இந்துக்களுக்குக் கொடுப்பார்கள். அது ஓர் அற்புதமே! உதாரணமாக, சீக்கிய சமயத்துக்குரிய ஒருவர், இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். மதம் மாற்றப்பட்டவர்கள் பின்னர் திரும்பவும் தேவ குலத்துக்கு மாற்றப்படுவார்கள். மரக்கன்று நாட்டப்பட்டு வருகிறது. உங்களிடம் கிறிஸ்தவர்களும், பார்சிகளும் வருகிறார்கள். பௌத்தர்களும் வருவார்கள். நேரம் அண்மித்து வரும்பொழுது, உங்கள் பெயர் எங்கும் போற்றப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரு சொற்பொழிவின் மூலம் உங்களிடம் பலர் வருவார்கள். இது அவர்களுடைய உண்மையான தர்மம் என அவர்கள் அனைவரும் நினைவூட்டப்படுவார்கள். எங்கள் தர்மத்துக்கு உரியவர்கள் நிச்சயமாக இங்கு வருவார்கள். அது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரிய விடயமல்ல. தந்தை இங்தே அமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார்: நேற்று, நீங்கள் தேவ குலத்துக்கு உரியவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுவதற்கு, நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். நீங்களே உண்மையான பாண்டவர்கள் ஆவீர்கள். பாண்டவர்கள் வழிகாட்டிகள். அந்த வழிகாட்டிகள் பௌதீகமானவர்கள். பிராமணர்களாகிய நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையுடன் கற்கிறீர்கள். உங்களுக்கு இதைப் பற்றிய அத்தகைய பெரும் போதை இருக்க வேண்டும். எங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைத் தருகின்ற தந்தையிடம் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். அந்தத் தந்தை எங்களுடைய ஆசிரியரும் ஆவார். இங்கே மேசைகள், கதிரைகள் போன்றவற்றிற்கான தேவையே இல்லை. நீங்கள் எழுதிக் கொள்ளும் (ஞானக்) குறிப்புக்கள் அனைத்தும் உங்கள் சொந்த முயற்சிகளுக்காகவே ஆகும். உண்மையில், இவை அனைத்தும் புரிந்து கொள்வதற்கான ஒரு விடயம். சிவபாபா ஒரு பேனா போன்றவற்றால் எழுதுவதில்லை. அவர் உங்களுக்கு எழுதுவதற்கு ஒரு பென்சிலை எடுக்கிறார். அந்தச் சிவப்பு நிற எழுத்துக்கள் உள்ள கடிதம் சிவபாபாவிடம் இருந்தே உங்களுக்கு வந்துள்ளதை அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை எழுதுகிறார்: ஆன்மீகக் குழந்தைகளே! அவர் உங்கள் ஆன்மீகத் தந்தை எனக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். அவரே அதிமேன்மையானவர். நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகிறார்: காமமே உங்கள் கொடிய எதிரி. அது ஆரம்பித்த நேரம் முதல் மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தை விளைவிக்கிறது. அந்தத் தீய ஆவியின் ஆதிக்கத்துக்கு உட்பட வேண்டாம். தூய்மை ஆகுங்கள்! “ஓ தூய்மையாக்குபவரே!” என மக்கள் அழைக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களை எவரும் வெல்ல முடியாத வகையில், ஆட்சிசெய்யும் பொருட்டு, பெரும் வலிமையைப் பெறுகிறீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறீர்கள்! ஆகவே, இக்கல்வியில் நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். “நாங்கள் எங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.” நீங்கள் என்னவாக இருந்ததிலிருந்து என்னவாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிகிறீர்கள். “நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன்” எனக் கடவுளின் வாசகங்கள் கூறுகின்றன. யார் கடவுள் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். “ஓ பாபா!” என ஆத்மாக்கள் அழைக்கிறார்கள். ஆகவே, எவ்வாறு, எப்பொழுது அவர் வருகிறார் என்பதை அவர்கள் அறிய வேண்டும். நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும், அதன் கால எல்லையையும் மனிதர்கள் மாத்திரம் அறிவார்கள். இதை அறிந்து கொள்வதால், நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். ஞானம் சற்கதியைப் பெறுவதற்கானது. இப்பொழுது கலியுக இறுதியாகும். அனைவரும் சீரழிந்த நிலையில் இருக்கிறார்கள். சத்தியயுகத்தில், சற்கதி உள்ளது. அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு பாபா வந்துள்ளதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் அனைவரையும் விழித்தெழச் செய்வதற்கு வந்துள்ளார். இது ஒரு மயான பூமியல்ல, ஆனால் அனைவரும் காரிருளில் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களை விழித்தெழச் செய்வதற்கு அவர் வருகிறார். தங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த குழந்தைகள், தாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் எனவும், தங்களுக்கு எவ்விதமான கவலைகளும் இல்லை எனவும் அறிந்து, பெரும் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். தந்தை எங்களை அழுகை என்பதன் குறிப்பே இல்லாத உலகின் அதிபதிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். இது அழுகையின் உலகம். அது முகமலர்ச்சியுடன் உள்ள உலகம். படங்களில் அவர்கள் முகங்கள் எவ்வளவு அழகானவையாகவும் முகமலர்ச்சியுடனும் உள்ளன எனப் பாருங்கள்! அவர்களின் முகச்சாயல்களை அதேபோன்று இங்கே உருவாக்க முடியாது. அவர்களின் முகச்சாயல்கள் இவ்வாறே இருக்க வேண்டும் என்பதை உங்கள் புத்தி புரிந்துகொள்ள முடியும். நீங்கள் அந்த அமரத்துவ பூமியின் எதிர்கால இளவரசர்கள் ஆகிக் கொண்டிருப்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நினைவுசெய்கிறீர்கள். இந்த வைக்கோற் போராகிய, இம்மரண பூமியானது தீ மூட்டப்பட்டவுள்ளது. ஓர் உள்நாட்டுப் போரில், தாங்கள் யாரைக் கொல்கிறோம் என உணராமலேயே அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் கொல்கிறார்கள். விரக்திக் கூக்குரலின் பின்னர், வெற்றிக் குரல்கள் இருக்கும். உங்களுக்கு வெற்றி ஏற்படுவதுடன், ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். நீங்கள் உருத்திராட்ச மாலையில் கோர்க்கப்பட்டு, பின்னர் விஷ்ணு மாலையில் கோர்க்கப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பக்தி அதிகளவுக்குப் பரவியுள்ளது. பக்தி பல இலைகளுடன் உள்ள, ஒரு விருட்சம் போன்று பரவியுள்ளது. இந்த ஞானம் விதை. விதை மிகவும் சின்னஞ் சிறியது. பாபாவே இந்த விதையாவார். இந்த விருட்சம் எவ்வாறு வளர்ந்து, எவ்வாறு பராமரிக்கப்பட்டு, பின்னர் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இது பல்வேறு சமயங்களுக்குரிய, தலைகீழ் விருட்சம். இது உலகிலுள்ள ஒரு நபருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்வதற்குப் பெருமளவுக்கு முயற்சி செய்தாலே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கீதையைக் கூறுகின்ற மக்களும் கூறுகிறார்கள்: “மன்மனாபவ! சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்!” எவ்வாறாயினும், அதன் உண்மையான அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. அது பக்தி மார்க்கத்திற்கு உரியது. இந்தப் பாதை இந்த ஞான மார்க்கத்திற்கானது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிதளவு ஞானத்தைக் கேட்டுள்ளவர்கள், பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். இந்த ஞானத்தை ஒருபொழுதும் அழிக்க முடியாது. இதை மிகச்சரியாக அறிந்து முயற்சி செய்பவர்கள், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். நாங்கள் அந்தப் புதிய உலகின் இளவரசர்களாகப் போவதை உங்கள் புத்தி புரிந்துகொள்கிறது. மாணவர்கள் தங்கள் பரீட்சைகளில் சித்தியடையும் பொழுது, மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். நீங்கள் ஓராயிரம் மடங்குகள் பெரும் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும்; நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஒருபொழுதும் முரண்படக்கூடாது. உங்கள் பிராமண ஆசிரியருடன் உங்களால் ஒத்துப் போக முடியாது விட்டால், அப்பொழுது நீங்கள் தந்தையுடன் முரண்படுகிறீர்கள். ஓ! தந்தையுடன் உங்கள் புத்தியின் யோகத்தை இணையுங்கள். அவரைப் பெரும் அன்புடன் நினைவுசெய்யுங்கள். “பாபா, நான் உங்களைத் தொடர்ந்தும் நினைவுசெய்து, வீடு திரும்பிச் செல்வேன்”. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். சதா முகமலர்ச்சியுடன் இருங்கள். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்றும் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்குத் தந்தை வந்திருக்கிறார் என்றும் சதா உணர்ந்தவராக இருங்கள்.

2. உங்கள் ஸ்திதியை நிலையானது ஆக்குவதற்கு, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். இப்பழைய வீட்டிலிருந்து உங்கள் பற்றுக்கள் அனைத்தையும் அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கடைதல் சக்தி மூலம் உங்கள் புத்தியைச் சக்திவாய்ந்ததாக்கி, ஒரு மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.

கடையும் சக்தி உங்கள் புத்தியைத் தெய்வீகம் ஆக்குவதற்கான போஷாக்கைக் கொடுக்கின்றது. பக்தி மார்க்கத்தில், மக்கள் நினைவு செய்வதைப் பயிற்சி செய்வதைப் போல், இந்த ஞானத்திலும் கடைதலின் சக்தி உள்ளது. இந்தச் சக்தியைப் பயன்படுத்துவதால், நீங்கள் ஒரு மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுவீர்கள். ஒவ்வொரு நாளும், அமிர்த வேளையில். உங்கள் தலைப்புக்களில் ஒன்றை உங்கள் விழிப்புணர்வில் கொண்டு வந்து, தொடர்ந்தும் அதனைக் கடையுங்கள். இந்தக் கடைதலின் மூலம் உங்கள் புத்தி சக்திவாய்ந்ததாக இருக்கும். மாயையால் ஒரு சக்திவாய்ந்த புத்தியைத் தாக்க முடியாது - அதன்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. வீணான எண்ணங்கள் எனும் அம்பின் மூலம் மாயை முதலில் உங்கள் தெய்வீகப் புத்தியைப் பலவீனமாக ஆக்குகின்றாள். கடைதற் சக்தியைப் பயன்படுத்துவதே அந்தப் பலவீனத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.

சுலோகம்:
கீழ்ப்படிவான குழந்தைகள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள், அந்த ஆசீர்வாதங்களின் ஆதிக்கம் உங்கள் இதயத்தைச் சதா திருப்தியாக வைத்திருக்கின்றது.

அவ்யக்த சமிக்ஞை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். அகநோக்கில் இருங்கள்.

எல்லையற்ற ஆத்ம உணர்வுப் பார்வையையும், சகோதரத்துவ மனோபாவத்தையும் சதா உங்கள் உறவுமுறைகளில் கொண்டிருப்பதுடன், ஆத்மாக்கள் அனைவருக்காகவும் நல்லாசிகளையும் கொண்டிருங்கள், அப்பொழுது நீங்கள் நிச்சயமாக அதன் பலனைப் பெறுவீர்கள். ஆகவே, முயற்சி செய்வதில் களைப்பு அடையாதீர்கள். மனந்தளர்ந்து விடாதீர்கள். உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, ‘எனது’ எனும் உணர்விலிருந்து பற்றற்றிருங்கள், நீங்கள் தொடர்ந்தும் ஆத்மாக்களுக்கு அமைதியும், சக்தியும் எனும் ஒத்துழைப்பைக் கொடுப்பீர்கள்.