06.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு சக்தியின் மூலம் உங்கள் புத்தி சுத்தமாகுவதுடன், நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்கின்றீர்கள். எனவே, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, நீங்கள் எத்தனை தெய்வீகக் குணங்களை விருத்தி செய்துள்ளீர்கள் என்று உங்களையே கேளுங்கள்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக்கூடாத மாபெரும் அசுரத்தனமான குறைபாடு என்ன?

பதில்:
ஒருவருடன் மிகவும் கடுமையாகவும், முரட்டுத்தனமாகவும் பேசுவது மாபெரும், அசுரத்தனமான குறைபாடாகும். இதுவும் தீய ஆவி என்றே அழைக்கப்படுகின்றது. இந்தத் தீய ஆவி ஒருவரில் உட்புகும்போது, அது அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், நீங்கள் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும். இயன்றவரை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டியது: நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அதன் பின்னர் புதிய இராச்சியத்திற்குச் செல்லவேண்டும். இவ்வுலகிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தும், பார்க்காதிருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
உங்கள் சரீரத்தை நீங்கள் நீக்கிய பின்னர் வீடு திரும்ப வேண்டும் என்று தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இந்த உலகையும் மறந்துவிட வேண்டும். இதுவும் ஒரு பயிற்சியே ஆகும். சரீரத்தில் குழப்பங்கள் ஏற்படும்போது, உங்கள் சரீரத்தை மறக்க முயல்வதுடன், உலகத்தையும் மறந்திடுங்கள். மறத்தலுக்கான முயற்சி அதிகாலையில் செய்யப்பட வேண்டும். நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அவ்வளவே. நீங்கள் முழு உலகையும் துறந்து, வீடு திரும்ப வேண்டும் என்ற இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். அதிக ஞானத்திற்கான அவசியம் இல்லை. நீங்கள் முயற்சி செய்து அந்த அக்கறையைப் பேண வேண்டும். சரீரத்திற்கு எவ்வளவு சிரமம் இருந்தாலும், இப்பயிற்சியை எவ்வாறு செய்வது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அது, நீங்கள் இல்லாதிருப்பதைப் போன்றிருக்கும். இதுவும் நல்ல பயிற்சியாகும். இன்னமும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உங்களுக்குத் தந்தையின் உதவியும் உண்டு, இவரின் உதவியும் உண்டு. நிச்சயமாக உங்களுக்கு உதவி கிட்டுகின்றது. ஆனால், நீங்கள் சொந்த முயற்சியையும் செய்ய வேண்டும். நீங்கள் காண்பதெல்லாம் நிலைத்திருப்பவையல்ல. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அதன் பின்னர் உங்கள் சொந்த இராச்சியத்திற்குச் செல்ல வேண்டும். இறுதி நேரத்தில் எஞ்சியிருக்கப்போவது இரண்டு விடயங்கள் மட்டுமே: நீங்கள் செல்வதும், பின்னர் திரும்புவதும் மாத்திரமே. நினைவு செய்வதன் மூலம், உங்களைத் தொந்தரவு செய்த சரீரநோய் இயல்பாகவே குறைவடைந்து, சந்தோஷம் மட்டுமே எஞ்சியிருப்பது காணப்பட்டுள்ளது. சந்தோஷத்தைப் போன்று, போசாக்கு நிறைந்தது வேறெதுவும் இல்லை. ஆகையால் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உங்கள் இனிய வீட்டிற்கு நீங்கள் செல்லவேண்டும். இப்பழைய உலகை நீங்கள் மறக்க வேண்டும். இதுவே நினைவு யாத்திரை என அழைக்கப்படுகின்றது. இதனைப் பற்றி இப்பொழுதே குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். அவர் ஒரே விடயத்தையே கூறுகிறார், அதாவது, இன்னொரு கல்பத்தின் பின்னர் மீண்டும் அவர் உங்களைச் சந்திப்பார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது எதனைக் கேட்;கின்றீர்களோ, ஒரு கல்பத்தின் பின்னரும் அதையே கேட்பீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றேன். அப்பாதையைப் பின்பற்றுவதே குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும். தந்தை வந்து உங்களுக்குப் பாதையைக் காட்டுவதுடன், உங்களைத் தன்னுடன் மீண்டும் அழைத்தும்; செல்கின்றார். அவர் உங்களுக்குப் பாதையைக் காட்டுவது மாத்திரம் அல்ல, ஆனால் அவர் உங்களைத் தன்னுடன் அழைத்தும் செல்கின்றார். இறுதி நேரத்தில் இப்படங்கள் போன்றன பயன்படமாட்டாது என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை, தானே தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். எல்லையற்ற இராச்சியமே தந்தையின் ஆஸ்தி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நேற்று ஆலயங்களுக்குச் சென்று, இந்தக் குழந்தைகளின் (இலக்ஷ்மி நாராயணனின்) - பாபா ‘குழந்தைகளே, குழந்தைகளே’ என்றே அவர்களை அழைக்கிறார் - புகழைப் பாடியவர்கள், அவர்கள் மிக மேன்மையானவர்கள் ஆகுவதாகப் பாடினார்கள். இப்பொழுது தாமே மீண்டும் ஒரு தடவை மேன்மையானவர்கள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்கின்றார்கள். சிவபாபாவிற்கு இது புதிய விடயம் அல்ல. குழந்தைகளாகிய உங்களுக்கே இது புதியதாகும். குழந்தைகளாகிய நீங்களே யுத்த களத்தில் இருக்கின்றீர்கள். நீங்களே எதிர்மறையான மற்றும் வீணான எண்ணங்களினால் தொந்தரவு செய்யப்படுகின்றீர்கள். இந்த இருமலும் இவரது கர்மக்கணக்காகும். அதனால் அவர் வேதனைப்பட வேண்டியுள்ளது. பாபா சந்தோஷமாகவே உள்ளார். இவர் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். தந்தை (சிவபாபா) எப்பொழுதும் கர்மாதீத ஸ்திதியிலேயே உள்ளார். குழந்தைகளாகிய நீங்களும் நானுமே மாயை போன்றவற்றின் புயலையும் கர்ம வேதனையையும் அனுபவம் செய்கின்றோம். இது விளங்கப்படுத்தப்பட வேண்டும். தந்தை உங்களுக்கு வழியைக் காட்டுகின்றார். அவர் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த இரதத்திற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால், தாதாவிற்கு ஏதோ நடந்துவிட்டது என்று நீங்கள் உணர்கின்றீர்கள். பாபாவிற்கு எதுவும் நடப்பதில்லை. இவருக்கே நடக்கின்றது. இந்த ஞான மார்க்;கத்தில் குருட்டு நம்பிக்கை இருப்பதில்லை. தந்தை தான் எந்தச் சரீரத்திற்குள் பிரவேசிக்கின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் முடிவில் இந்தத் தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். ஏனைய குழந்தைகளைப் போன்று தானும் ஒரு குழந்தையே என்பதை தாதா புரிந்து கொண்டிருக்கின்றார். தாதாவும் ஒரு முயற்சியாளரே. அவர் முழுமை அடையவில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் விஷ்ணுவின் அந்தஸ்தைப் பெறவே முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் அல்லது விஷ்ணு என்று எப்படிக் கூறினாலும் எல்லாம் ஒன்றே. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஆனால் முன்னர் நீங்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. பிரம்மாவையோ, விஷ்ணுவையோ, அல்லது சங்கரரையோ அல்லது உங்களைப் பற்றியோ நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. இப்பொழுது, நீங்கள் தந்தையையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் சங்கரரையும் பார்க்கும்போது, இந்த பிரம்மா தபாஸ்யா செய்கின்றார் என்பது உங்கள் புத்திக்கு எட்டுகின்றது. அவர் அதே வெள்ளை ஆடையையே அணிந்துள்ளார். இங்கேயே நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைகின்றீர்கள். நீங்கள் முன்கூட்டியே காட்சிகளைப் பெறுகின்றீர்கள்: இந்த பாபா சூட்சும தேவதை ஆகுவார். உங்கள் கர்மாதீத அந்தஸ்தை அடைந்து, நீங்களும் வரிசைக்கிரமமாக சூட்சும தேவதைகள் ஆகுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் சூட்சும தேவதைகள் ஆகும்போது யுத்தம் ஆரம்பமாகும் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். ‘இரைக்கு மரணம், வேடனுக்குக் கொண்டாட்டம்’ என்று கூறப்படுகின்றது. இது மிகவும் உயர்ந்த ஸ்திதியாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வருகின்றீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இது புதியதொரு ஞானம். நீங்கள் தூய்மையாகுவதற்காகத் தந்தை உங்களுக்கு நினைவு செய்யக் கற்பிக்கின்றார். தந்தையிடமிருந்து நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் தந்தையின் குழந்தைகள் ஆகுகிறீர்கள். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பரமாத்மாவான பரமதந்தையே தந்தை என்பதையும் அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். இப்பொழுது அந்தத் தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுதே, தாமும் தெய்வீக இளவரசர்கள் ஆக வேண்டும் என்பதும், அதற்குரிய முயற்சியைத் தாம் செய்ய வேண்டும் என்பதும் அந்த மனிதர்களின் புத்தியில் புகும். நீங்கள் விகாரங்கள் போன்ற அனைத்தையும் துறந்துவிட வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: சகோதரன், சகோதரி என்றுகூட உங்களைக் கருதிக்கொள்ளாதீர்கள். உங்களைச் சகோதரர்கள் என்று மாத்திரமே கருதித் தந்தையை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிந்துவிடும். வேறு எந்தச் சிரமமும் இல்லை. இறுதியில், வேறு எதற்கான தேவையும் இருக்கமாட்டாது. நீங்கள் தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகவேண்டும். நீங்கள் அவர்களைப் போன்று எல்லா தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் படம் மிகவும் சரியானதாகும். தந்தையை மறந்துவிடுவதால், நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவும் மறக்கிறீர்கள். குழந்தைகளே, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, இதை நினைவுசெய்யுங்கள்: ‘நான் பாபாவை நினைவு செய்து, அவர்களைப் போன்றவர் ஆகவேண்டும். நான் அந்தத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும்’. இது மிகவும் சிறிய விடயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். சில குழந்தைகள் அதிகளவு சரீர உணர்வுடையவர் ஆகுகிறார்கள். தந்தை கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுவீர்களாக! உங்கள் ஆஸ்தியை நீங்கள் தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்தால், குப்பை அகற்றப்படும். பாபா இப்பொழுது வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் பிரம்மாவின் மூலம் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். ஸ்தாபனை இடம்பெறுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தச் சாதாரணமான விடயமே உங்களிடமிருந்து நழுவி விடுகின்றது. ஒரேயொரு அல்பாவே உள்ளார். நீங்கள் அந்த எல்லையற்ற தந்தையிடமிருந்தே இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் புதிய உலகை நினைவு செய்கிறீர்கள். கபடமற்ற, கூன் முதுகையுடைய தாய்மார்கூட மிகவும் உயர்ந்த அந்தஸ்தை அடையமுடியும். உங்களை நீங்கள் ஆத்மாக்கள் எனக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை உங்களுக்கு வழிகாட்டியுள்ளார். அவர் கூறுகிறார்: நீங்கள் ஓர் ஆத்மா என்பதில் நம்பிக்கை கொண்டிருங்கள். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளை நிறைவு செய்துள்ளீர்கள் என்பதும் நீங்கள் இப்பொழுது வீடு திரும்பவேண்டும் என்றும் பின்னர் சுவர்க்கத்திற்குச் சென்று உங்கள் பாகங்களை நடிப்பீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. ‘தந்தையை எங்கு நினைவு செய்வது?’ ‘எவ்வாறு நான் அவரை நினைவு செய்வது?’ போன்ற கேள்விகள் எழக்கூடாது. தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும் என்பதே உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை எங்கு சென்றாலும், நீங்கள் அவரின் குழந்தைகளே. நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, பேரானந்தத்தை அனுபவம் செய்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் தந்தையை தனிப்பட்ட ரீதியில், நேருக்குநேர் சந்திக்கின்றீர்கள். சிவபாபாவின் பிறப்பு எப்படி இடம்பெறும் என்பதில் மக்கள் குழப்பமடைகின்றார்கள். அது சிவராத்திரி என ஏன் அழைக்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. கிருஷ்ணரைப் பொறுத்தவரை அவரது பிறப்பு இரவிலே இடம்பெறுவதை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் அது இந்த (எல்லைக்குட்பட்ட) இரவைக் குறிக்கவில்லை. அரைக் கல்பத்தின் இரவு நிறைவடையும்போது, புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகத் தந்தை வரவேண்டும். அது மிக இலகுவானது. இது மிகவும் இலகுவானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். தவறினால், நூறு மடங்கு பாவம் சேமிக்கப்படும். எனக்கு அவதூறை ஏற்படுத்துபவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது. நீங்கள் தந்தையை அவதூறு செய்தால், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். கடுமையாகப் பேசுதல் தெய்வீகக் குணமல்ல. அது அசுரத்தனம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும்: இது தெய்வீகக் குணம் அல்ல. கலியுகம் முடிவடைகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது சங்கமயுகமாகும். மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னமும் 40000 வருடங்கள் உள்ளன என்றும் தாம் தொடர்ந்தும் வாழ்ந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்வோம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தாம் நாளுக்குநாள் தமோபிரதான் ஆகுகின்றோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் விநாசத்தின் காட்சிகளைக் கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மேலும் முன்னேற்றம் அடையும்போது, பிரம்மாவினதும், கிருஷ்ணரினதும் காட்சிகளைக் காண்பீர்கள்: பிரம்மாவிடம் செல்வதன்மூலம், நீங்கள் அவரைப் போன்று சுவர்க்கத்தின் இளவரசன் ஆகுவீர்கள். ஆகையாலேயே பொதுவாக பிரம்மாவினதும், கிருஷ்ணரினதும் காட்சிகளையே மக்கள் காண்கின்றனர். சிலர் விஷ்ணுவின் காட்சிகளைக் கண்டபோதிலும், அந்தக் காட்சியின் மூலம் அதிகளவில் எதனையும் புரிந்து கொள்ளமுடியாது. நாராயணனின் காட்சியைக் காண்பதன் மூலம், அவர்களால் எதனையாவது புரிந்துகொள்ளமுடியும். நாங்கள் தேவர்கள் ஆகுவதற்காகவே இங்கு வருகிறோம். நீங்கள் இப்போது உலகின் ஆரம்பம், நடு, இறுதியின் கல்வியையே கற்கிறீர்கள். நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதற்காகவே உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆத்மாவே கற்கிறார். சரீர உணர்வு அகற்றப்படுகிறது. ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். நல்ல, தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் 5000 வருடங்களின் பின்னர் என்னை வந்து சந்தித்துள்ளீர்கள். நீங்களே எப்போதும் என்னைச் சந்திப்பவர்கள். நீங்கள் அதே முகச்சாயலையே கொண்டிருக்கிறீர்கள். நீங்களே 5000 வருடங்களுக்கு முன்னரும் இருந்தவர்கள். நீங்களும் கூறுகிறீர்கள்: பாபா, 5000 வருடங்களுக்குப் பின்னரும் எங்களை வந்து சந்தித்தவர் நீங்களே, இப்பொழுது நீங்கள் எங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறீர்கள். நாங்கள் தேவர்களாக இருந்தோம். பின்னர் அசுரர்கள் ஆகினோம். நீங்கள் தேவர்களின் புகழைப்பாடுவதுடன், உங்கள் குறைபாடுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தேவர்கள் ஆகவேண்டும். ஏனெனில் நீங்கள் தேவ உலகிற்குச் செல்லவேண்டும். ஆகையால் இப்பொழுது நன்றாக முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தை அடையுங்கள். ஓர் ஆசிரியர் அனைவரையும் கற்றிடுங்கள் என்று கூறுவதுடன் அவர் கூறுவார்: நீங்கள் நல்ல புள்ளிகளுடன் சித்தியடைந்தால் எனது பெயர் போற்றப்படுவதுடன், உங்கள் பெயரும் போற்றப்படும். பல குழந்தைகள் கூறுகிறார்கள்: ‘பாபா, நான் உங்களிடம் வரும்போது, உள்ளே இருந்து எதுவும் வெளிவருவதில்லை. நான் அனைத்தையும் மறந்துவிடுகிறேன்’. நீங்கள் பாபாவிடம் வந்தவுடனேயே, மௌனமாகிவிடுகிறீர்கள். அதாவது, இவ்வுலகம் முடிவடைந்துவிட்டதைப் போன்று உணர்கிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள். அது மிகவும் அழகான புதிய உலகமாகும். சிலர் அமைதிதாமத்தில் ஓய்வு பெறுகிறார்கள். சிலர் எந்த ஓய்வையும் பெறுவதில்லை. அவர்கள் சகலதுறை பாகத்தை நடிக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தமோபிரதானில் இருந்தும் துன்பத்தை அனுபவம் செய்வதிலிருந்தும் விடுதலையடைகிறார்கள். இதன் பின்னர் அவர்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் அங்கே பெறுகிறார்கள். எனவே நீங்கள் மிக நன்றாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் விதிப்படி நடக்கட்டும் என்று எண்ணாதீர்கள். அவ்வாறு எண்ணக்கூடாது. நீங்கள் முயற்சி செய்யவேண்டும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்று, புரிந்துகொள்ளப்படுகிறது. நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், எங்களுக்கானதோர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். ஸ்ரீமத்தை எங்களுக்குக் கொடுக்கின்ற பாபா ஒருபோதும் அரசர்; ஆகுவதில்லை. நாங்களே அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி அவ்வாறு ஆகுகிறோம். இது புதியதொரு விடயம். வேறு எவரும் இதனைப் பற்றி முன்னர் கேள்விப்பட்டதும் இல்லை. கண்டதும் இல்லை. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இப்பொழுது வைகுந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எண்ணற்ற தடவைகள் இராச்சியத்தை ஸ்தாபித்துள்ளோம். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம், பின்னர் அதனை இழந்துள்ளோம். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. கிறிஸ்தவ போதகர்கள் உலாவச் செல்லும்போது, அவர்கள் பிறரைக் காணவும் விரும்புவதில்லை. அவர்கள் கிறிஸ்துவின் நினைவுடனேயே இருப்பார்கள். அவர்கள் மௌனமாக உலாவுவார்கள். அவர்களுக்கு அந்தப் புரிந்துணர்வு உள்ளது. அவர்கள் கிறிஸ்துவை அதிகளவு நினைவு செய்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகக் கிறிஸ்துவின் காட்சியைக் கண்டிருக்க வேண்டும். போதகர்கள் அனைவரும் அவ்வாறு என்றில்லை. பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினரே உள்ளார்கள். நீங்களும் அவ்வாறே. பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினரே அவ்வாறாக நினைவில் நிலைத்திருப்பார்கள். இதனை முயற்சித்துப் பாருங்கள். வேறு எவரையும் பார்க்காதீர்கள். தந்தையை நினைவு செய்வதனாலும், சுயதரிசன சக்கரத்தைத் தொடர்ந்து சுழற்றுவதனாலும், நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருப்பீர்கள். தேவர்கள் மேன்மையானவர்கள் என்றும் மனிதர்கள் சீரழிந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நேரத்தில் எவருமே தேவர்கள் அல்ல. ‘அரைச் சக்கரத்திற்குப் பகலும், அரைச் சக்கரத்திற்கு இரவும்;’ என பாரதத்தையிட்டே கூறப்படுகின்றது. தந்தை கூறுகிறார்: நான் வந்து அனைவருக்கும் சத்கதியை அருள்கின்றேன். ஏனைய சமயத்;தவர்கள் தமக்குரிய நேரத்தில் வந்து தமது சமயங்களை ஸ்தாபிப்பார்கள். அனைவரும் இங்கு வந்து, தங்களுடன் இந்த மந்திரத்தை எடுத்துச் செல்வார்கள்: நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவரை நினைவு செய்பவர்கள், அவர்களின் மதத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து ஒரு ஆன்மீக அருங்காட்சியகத்தையோ அல்லது கல்லூரியையோ திறக்க வேண்டும். எழுதுங்கள்: ஒரு வினாடியில் எவ்வாறு நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பதைப்பற்றி வந்து புரிந்து கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்வதனால் நீங்கள் வைகுந்தத்தின் ஆட்சியைப் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நடக்கும்போதும், உலாவித்திரியும்போதும் ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். அனைத்தையும் பார்த்தும், பார்க்காதிருக்கும் பயிற்சியைச் செய்யுங்கள். ஏகாந்தத்திலிருந்து உங்களையே சோதியுங்கள்: எந்தளவிற்கு நான் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளேன்?

2. தந்தையை அவதூறு செய்யும் வகையில் எந்தச்செயல்களையும் செய்யாதீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். உங்கள் புத்தியில் இருக்கட்டும்: நான் இப்பொழுது வீடு திரும்பி, பின்னர் இராச்சியத்திற்குச் செல்லவேண்டும்.

ஆசீர்வாதம்:
சேவையில் எல்லோருடைய நல்லாசிகளையும் மேலதிகமாகப் பெறுவதனால் வெற்றி சொரூபமாகுவதன் மூலம் சக்திவாய்ந்த பலனைப் பெறுவீர்களாக.

நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், அது சகல ஆத்மாக்களின் ஒத்துழைப்பெனும் உணர்வுகளாலும் சந்தோஷ உணர்வுகளாலும் நல்லாசிகளாலும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது சகல பணிகளும் இலகுவாக வெற்றிபெறும். ஆரம்ப நாட்களில், யாராவது விசேடமான பணியைச் செய்வதற்குச் செல்லும் முன்னர், குடும்பத்திலுள்ள எல்லோருடைய ஆசீர்வாதங்களையும் பெற்றே செல்வார். எனவே, இவ்வாறாக மேலதிகமாகப் பெறுவது, தற்போதைய சேவைக்குத் தேவையாக உள்ளது. எந்தவொரு பணியை ஆரம்பிக்க முன்னரும், எல்லோருடைய நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களை எல்லோருடைய திருப்தியின் சக்தியால் நிறைத்துக் கொள்ளுங்கள். அப்போது சக்திவாய்ந்த பலன் வெளிப்படும்.

சுலோகம்:
‘ஆம், எனது பிரபுவே’ எனத் தந்தை சொல்வதைப் போல், நீங்களும், ‘ஆம், எனது பிரபுவே! ஆம், எனது பிரபுவே!’ எனச் சொன்னால், நீங்கள் புண்ணியத்தைச் சம்பாதிப்பீர்கள்.