09.04.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் இப்பொழுது உண்மையான விடயங்களை உண்மையான தந்தையிடம் இருந்து செவிமடுத்து ஒளிக்குள் வந்துள்ளீர்கள். உங்களுடைய கடமை அனைவரையும் இருளிலிருந்து அகற்றி ஒளிக்குள் கொண்டு வருவதாகும்.
கேள்வி:
குழந்தைகளான நீங்கள் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்கும் பொழுது நிச்சயமாக எதனை நினைவுசெய்ய வேண்டும்?பதில்:
உங்கள் வாயால் “பாபா பாபா” எனச் சதா தொடர்ந்தும் கூறுங்கள், ஏனெனில் நீங்கள் இவ்வாறு செய்வதனால் “என்னுடையது” என்ற உணர்வு முடிவடைந்து விடும். அத்துடன் ஆஸ்தியும் நினைவு செய்யப்படும். “பாபா” என்று கூறப்படும் பொழுது சர்வவியாபி என்ற கருத்தானது அற்றுப் போய் விடுகின்றது. கடவுள் சர்வவியாபி என எவரேனும் கூறினால் ‘எவ்வாறு தந்தை அனைவரிலும் இருக்க முடியும்?’ என அவரிடம் வினவுங்கள்.பாடல்:
இன்றைய மக்கள் காரிருளில் உள்ளனர்.ஓம் சாந்தி.
குழந்தைகள் என்ன கூறினார்கள், அவர்கள் யாரை “ஓ ஞானக்கடலே! ஓ ஞான சூரியனே! பாபா” என்று அழைத்தார்கள்? கடவுளே “பாபா” என்று அழைக்கப்படுகின்றார். கடவுளே தந்தை, எனவே நீங்கள் அனைவரும் குழந்தைகள். “நாங்கள் இப்பொழுது இருளினுள் வீழ்ந்து விட்டோம். எங்களை ஒளிக்குள் அழைத்துச் செல்லுங்கள்!” என்று குழந்தைகள் கூறுகின்றார்கள். “பாபா” என்று கூறுவதால் நீங்கள் தந்தையையே அழைக்கின்றீர்கள் என்பதை இது நிரூபிக்கின்றது. நீங்கள் “பாபா” என்று கூறும்பொழுது அன்பை அனுபவம் செய்கின்றீர்கள், ஏனெனில் தந்தையிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. “ஈஸ்வர்” அல்லது “பிரபு” என்று கூறும்பொழுது தந்தையின் ஆஸ்தியின் இனிமை இருப்பதில்லை. “பாபா” என்று கூறுவதால் நீங்கள் உங்கள் ஆஸ்தியை நினைவு செய்கின்றீர்கள். “பாபா நாங்கள் இருளினுள் வீழ்ந்து விட்டோம்! வந்து ஞானத்தினால் எங்கள் தீபங்களை ஏற்றுங்கள்!” என நீங்கள் அழைக்கின்றீர்கள். ஏனெனில் ஆத்மாக்களின் தீபங்கள் அணைந்து விட்டன. ஒரு நபர் மரணிக்கின்ற பொழுது மக்கள் 12 நாட்களுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைக்கின்றார்கள். தீபம் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கு ஒருவர் இரவு முழுவதும் விழித்திருக்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாரத மக்களாகிய நீங்கள் ஒளியில் அதாவது, பகலில் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் இரவில் இருக்கின்றீர்கள். 12 மணித்தியாலங்களுக்குப் பகலாகவும் 12 மணித்தியாலங்களுக்கு இரவாகவும் இருக்கின்றது. அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயம். இந்தப் பகலும் இரவும் எல்லையற்றவை. சத்திய, திரேதா யுகங்கள் பிரம்மாவின் பகல் எனவும் துவாபர கலியுகங்கள் பிரம்மாவின் இரவு எனவும் அழைக்கப்படுகின்றன. இரவில் மக்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்ற இருள் இருக்கின்றது. அவர்கள் சகல திசைகளிலும் கடவுளைத் தேடி அலைகின்றனர். ஆனால் அவர்களால் கடவுளை அடைய முடியவில்லை. அவர்கள் கடவுளை அடைவதற்குப் பக்தி செய்கின்றார்கள். துவாபர யுகத்திலேயே அதாவது, இராவண இராச்சியம் ஆரம்பமாகிய பொழுதே பக்தி தொடங்கியது. தசேரா (இராவணனை எரித்தல்) பற்றிய கதையும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது மனதின் கற்பனைகள் மூலமும் கதைகளை உருவாக்குகின்றார்கள். உதாரணமாக அவர்கள் படங்களையும் நாடகங்கள் போன்றவற்றையும் உருவாக்குகின்றார்கள். ஸ்ரீமத் பகவத்கீதையே உண்மையாகும். பரமாத்மா வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தார். பின்னர் அவர்கள் பக்தி மார்க்கத்தில் கதைகளை உருவாக்கினார்கள். வியாசர் கீதையை எழுதினார். அதாவது அவர் ஒரு கதையை உருவாக்கினார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உண்மையான விடயங்களைக் கேட்கின்றீர்கள். நீங்கள் எப்பொழுதும் தொடர்ந்தும் “பாபா பாபா” எனக் கூறவேண்டும். பரமாத்மாவே எங்களது பாபா. அவரே புதிய உலகைப் படைப்பவர், எனவே நாங்கள் நிச்சயமாக அவரிடம் இருந்து சுவர்க்கம் என்ற எங்களின் ஆஸ்தியைப் பெற வேண்டும். 84 பிறவிகளை அனுபவம் செய்கையில் நாங்கள் நரகத்திற்கு வந்தோம். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, பாரத மக்களாகிய நீங்கள் சூரிய சந்திர வம்சங்களுக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்த பொழுது அங்கு வேறு எந்த மதங்களும் இருக்கவில்லை. அது கிருஷ்ணரின் பூமியாகிய சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. இங்கே இது அசுரர்களின் பூமியாகும். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது என பாப்தாதா உங்களுக்கு நினைவூட்டுகின்றார். கங்கையன்றி தந்தை மாத்திரமே ஞானக்கடலும் அமைதிக்கடலும் தூய்மையாக்குபவரும் ஆவார். மணவாட்டிகள் அனைவரும் மணவாளனான ஒரு கடவுளையே கொண்டிருக்கின்றனர். மக்கள் இதை அறியார்கள். இதனாலேயே சகல ஆத்மாக்களினதும் தந்தை யார் என அவர்களிடம் வினவும்பொழுது அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். நாங்கள் எதையும் அறிய மாட்டோம் என அவர்கள் பதில் அளிக்கின்றார்கள். ஓ ஆத்மாக்களே! ஆனால் எவ்வாறு நீங்கள் உங்களுடைய தந்தையை அறியாதிருக்க முடியும்? அவர்கள் தந்தையாகிய கடவுள் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவரது பெயர், ரூபம் என்ன என்றோ அல்லது அவர்கள் அவரை இனங்கண்டுள்ளார்களா என்றோ அவர்களிடம் வினவும் பொழுது அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளின் தந்தை ஒருவர் சர்வவியாபியாக இருக்க முடியுமா? இராவணனின் அசுர கட்டளைகளைப் பின்பற்றியதால் மக்கள் மிகவும் விவேகம் அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். சரீர உணர்வே முதல் இலக்க விகாரம். தாங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டிருப்பதில்லை. அவர்கள் ‘நான் இன்னார் இன்னார்’ எனக் கூறுகின்றார்கள். அது சரீரத்தையே குறிக்கின்றது. உண்மையில் தாங்கள் யார் என்பதையும் அவர்கள் அறியார்கள். “நான் ஒரு நீதிபதி, நான் இன்னார்” என அவர்கள் தொடர்ந்தும் “நான்” எனக் கூறுகின்றனர். ஆனால் அது தவறாகும். “நான்” “எனது” என்பது இரு வேறுபட்ட விடயங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் ஆவார்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. ஒவ்வொரு சரீரத்திற்கும் பெயர் கொடுக்கப்படுகின்றது. ஆத்மாக்களுக்குப் பெயர்கள் கொடுக்கப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: எனது பெயர் சிவன். மக்கள் சிவனின் பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். எவ்வாறு அசரீரியான ஒருவருக்குப் பிறந்த தினம் இருக்க முடியும்? அவர் யாரில் பிரவேசிக்கின்றார் என எவருமே அறியார். சகல ஆத்மாக்களினதும் பெயர் ஆத்மாவே. பரமாத்மாவின் பெயர் சிவன், ஏனைய அனைவரும் சாலிகிராம்கள். சகல ஆத்மாக்களும் குழந்தைகளே, சிவனே சகல ஆத்மாக்களினதும் தந்தையும் ஆவார். அவரே எல்லையற்ற தந்தை. அனைவரும் அவரை அழைக்கின்றார்கள்: வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! நாங்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றோம்! ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள். குழந்தைகள் அனைவரும் துன்பத்தில் இருக்கும் பொழுதே அவரை நினைவு செய்கின்றார்கள். ஆனால் அதே குழந்தைகள் சந்தோஷத்தில் இருக்கும் பொழுது அவர்களில் எவரும் அவரை நினைவு செய்வதில்லை. இராவணனே உங்களை சந்தோஷம் அற்றவர்கள் ஆக்கிவிட்டான். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அந்த இராவணன் உங்கள் பழைய எதிரி. இதுவே உருவாக்கப்பட்ட நாடகத்தின் விளையாட்டாகும். எனவே இப்பொழுது அனைவரும் இருளில் உள்ளனர். இதனாலேயே அவர்கள் அழைக்கின்றனர்: ஓ ஞான சூரியனே, வந்து எங்களை ஒளிக்குள் அழைத்துச் செல்லுங்கள்! பாரதம் சந்தோஷ பூமியாக இருந்த பொழுது எவருமே அழைக்கவில்லை. அங்கே எதுவும்; குறைவாக இருக்கவில்லை. இங்கே அவர்கள் தொடர்ந்தும் கதறி அழுகின்றார்கள்: ஓ அமைதியை அருள்பவரே! அமைதி உங்கள் ஆதிதர்மம் என்றும் உங்கள் கழுத்து மாலை என்றும் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் அமைதிதாம வாசிகள். நீங்கள் அமைதி தாமத்தில் இருந்து சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றீர்கள், அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. நீங்கள் விரக்தியில் அழ வேண்டியதில்லை. மக்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது கதறி அழுகின்றார்கள்: கருணை காட்டுங்கள்! துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருளுகின்ற பாபாவே வாருங்கள்! சிவபாபா, இனிய பாபா, மீண்டும் ஒருமுறை வாருங்கள்! அவர் நிச்சயமாக வருகின்றார். அதனாலேயே மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்கத்தின் இளவரசர். அவரது பிறந்த தினமும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் எப்பொழுது வந்தார் என எவருமே அறியார். இராதையும் கிருஷ்ணரும் திருமணம் செய்யும் பொழுது இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றனர். எவருமே இதை அறியார். “ஓ தந்தையாகிய கடவுளே!” என மனிதர்கள் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள். அச்சா. அவரது பெயர், ரூபம் என்ன என்று அவர்களிடம் கேளுங்கள். அவர் பெயர், ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள்! ஓ! அவர் தந்தையாகிய கடவுள் என்றும் பின்னர் அவர் பெயர், ரூபத்துக்கு அப்பாற்பட்டவர் என்றும் கூறுகின்றீர்கள். ஆகாயம் ஒரு வெற்றிடம். ஆனால் அதற்கு “ஆகாயம்” என்ற பெயர் உள்ளது. உங்களுக்குத் தந்தையின் பெயரையோ அல்லது ரூபத்தையோ தெரியாது என நீங்கள் கூறுகின்றீர்கள். அச்சா, நீங்கள் உங்களைப் பற்றி அறிவீர்களா? ஆம் நான் ஓர் ஆத்மா. அச்சா. ஓர் ஆத்மாவின் பெயரும் ரூபமும் என்ன? அவர்கள் ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே எனக் கூறுகின்றார்கள். ஓர் ஆத்மா பெயர், ரூபத்துக்கு அப்பாற்பட்டிருக்க முடியாது. ஓர் ஆத்மா, நெற்றியின் மத்தியிலே வசிக்கின்ற ஒரு நட்சத்திரம் போன்று புள்ளி வடிவானவர். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகங்கள் பதியப்பட்டுள்ளன. இவ் விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதனாலேயே ஏழு நாள் பத்தி நினைவு கூரப்படுகின்றது. துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பித்தது. அப்பொழுதில் இருந்தே விகாரங்களும் இருந்து வருகின்றன. நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்குகின்றீர்கள். அனைவரும் இப்பொழுது கிரகணத்தால் பீடிக்கப்பட்டு அவலட்சணமாகி விட்டார்கள். இதனாலேயே அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ ஞானசூரியனே வாருங்கள்! வந்து எங்களை ஒளிக்குள் அழைத்துச் செல்லுங்கள்! சற்குரு ஞானத் தைலத்தைக் கொடுக்கின்ற பொழுது அறியாமை (இருள்) அகன்றதாகக் கூறப்படுகின்றது. புத்தி தந்தையை நினைவு செய்கின்றது. வெறுமனே குரு தைலத்தைக் கொடுத்த பொழுது என்று கூறப்படவில்லை. பல குருமார்கள் உள்ளனர், அவர்களில் எவருக்கும் இந்த ஞானம் இல்லை; அவர்கள் நினைவு செய்யப்படுவதில்லை. ஒரேயொரு தந்தையே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். எனவே எவ்வாறு வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும்? கடவுளைச் சந்திப்பதற்குப் பல வழிகள் இருப்பதாகவும் சமயநூல்களைக் கற்பது, யாகங்கள் வளர்ப்பது, தபஸ்யா செய்வது போன்ற அனைத்தும் கடவுளைச் சந்திப்பதற்கான வழிகள் எனவும் சாதுக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் எவ்வாறு தூய்மை அற்றவர்களால் தூய உலகிற்குச் செல்ல முடியும்? தந்தை கூறுகின்றார்: நானே வரவேண்டும். ஒரேயொரு கடவுளே இருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள்; அவர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. அவர்களுடைய தந்தை சிவன் ஆவார். மக்கள் இங்கே இருப்பதால் மக்களின் தந்தையும் இங்கேயே இருக்க வேண்டும் இல்லையா? “பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் நிலையம்” என்ற பெயரே எழுதப்பட்டுள்ளது. எனவே நீங்களே குழந்தைகள். பல பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் இருக்கின்றனர். ஓர் ஆஸ்தி பிரம்மாவிடம் இருந்து அன்றி சிவனிடம் இருந்தே பெறப்படுகின்றது. ஆஸ்தி பாட்டனாரிடம் இருந்தே (தாதா) பெறப்படுகின்றது. அவர் இங்கிருந்து பிரம்மாவின் மூலம் உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார். அவர் பிரம்மாவின் மூலம் குழந்தைகளான உங்களைத் தத்தெடுக்கின்றார். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நான் உங்களுக்குச் சொந்தமானவர். நான் எனது ஆஸ்தியை உங்களிடம் இருந்து பெறுகிறேன். பிரம்மா மூலம் விஷ்ணு பூமி ஸ்தாபிக்கப்படுகின்றது. சிவபாபா உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். கீதையே கடவுளிடம் இருந்து பெறப்படும் மேன்மையான வழிகாட்டல்கள் ஆகும். அசரீரியான ஒரேயொரு கடவுளே உள்ளார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலம் பிரிந்திருக்கின்றார்கள். பாரத மக்களே நீண்டகாலம் பிரிந்திருக்கின்றார்கள். வேறு எந்த மதங்களையும் சார்ந்தவர்கள் நீண்டகாலம் பிரியவில்லை. நீங்களே முதலில் பிரிந்து சென்றவர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து பிரிந்து இங்கே உங்கள் பாகங்களை நடிப்பதற்கு வந்தீர்கள். பாபா கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே இப்பொழுது உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! இதுவே யோக அக்கினியாகிய நினைவு யாத்திரை ஆகும். இந்த யோக அக்கினியால் உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமை எரிக்கப்படும். ஓ இனிய குழந்தைகளே, நீங்கள் சத்திய யுகத்தில் இருந்து இந்தக் கலியுகத்துக்கு வந்துள்ளீர்கள். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள்! இது உங்கள் புத்தியால் செய்யப்பட வேண்டிய ஒன்று. உங்கள் சரீரங்களையும் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நீங்கள் ஆத்மாக்கள், அவை உங்கள் சரீரங்கள். “நான் நான்” என்று ஆத்மாவே கூறுகின்றார். இராவணன் உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்கிவிட்டான். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. தூய பாரதமும் தூய்மையற்ற பாரதமும் இருக்கின்றன. நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது உங்களுக்கு இராம இராச்சியம் வேண்டும் எனத் தந்தையை அழைக்கின்றீர்கள். அவர்கள் இதைக் கூறுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஒரேயொரு தந்தையே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற ஞானக்கடல் ஆவார். ஒரேயொரு தந்தையே வந்து ஒரு விநாடியில் உங்களுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். உங்கள் சூரிய சந்திர வம்சங்களின் ஆஸ்தியைப் பெறும்பொருட்டு நீங்கள் இப்பொழுது தந்தைக்குச் சொந்தமானவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் அமரர்களாக இருக்கின்றீர்கள்; அங்கே நீங்கள் ‘இன்னார் இன்னார் மரணித்து விட்டார்’ எனக் கூற மாட்டீர்கள். சத்தியயுகத்தில் அகால மரணம் எதுவும் இருக்க மாட்டாது. நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள், அங்கே துன்பம் என்ற குறிப்பே இருக்க மாட்டாது. அதுவே சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். அங்கே சௌகரியத்திற்கான பலவிதமான வசதிகள் இருக்கும். பக்தி மார்க்கத்தில் மக்கள் அவ்வாறான ஆலயங்களைக் கட்டினார்கள்! அந்த நேரத்திலும் அவர்களிடம் அதிகளவு செல்வம் இருந்தது. பாரதம் எவ்வளவு செழிப்பாக இருந்தது எனப் பாருங்கள்! ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் இருந்தார்கள். அதிமேன்மையான பாபா இப்பொழுது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அதிமேன்மையானவர் சிவபாபா. பின்னர் சூட்சும உலகவாசிகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கின்றனர். பின்னர் இந்த உலகம் உள்ளது. குழந்தைகளான நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் சற்கதி பெறுகின்றீர்கள். நினைவு கூரப்படுகின்றது: ஞானம், பக்தி, விருப்பமின்மை. பழைய உலகில் விருப்பமின்மை உள்ளது, ஏனெனில் நீங்கள் சத்திய யுகத்து இராச்சியத்தைப் பெறவிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் என்னிடம் வருவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. யோக அக்கினி மூலம் உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமை எரிக்கப்படும். உங்கள் புத்தியிலிருந்து உங்கள் சரீரத்தையும் சரீர உறவினர்கள் அனைவரையும் அகற்றி ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள்.2. விரக்தியில் அழைப்பதற்கு அல்லது கதறி அழுவதற்குப் பதிலாக உங்கள் அமைதி எனும் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருங்கள். அமைதியே உங்களின் கழுத்து மாலை. சரீர உணர்வில் “நான்” “எனது” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சதோகுணிப் பார்வையால் ஏனைய பல ஆத்மாக்களின் பார்வையையும் மனோபாவத்தையும் மாற்றக்கூடிய காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்களாக.கூறப்படுகிறது: உங்களின் பார்வையால் உலகமே மாறும். உங்களின் பார்வை எந்தவோர் ஆத்மாவும் எவ்வளவுதான் தமோகுணியாகவோ அல்லது ரஜோகுணியாகவோ இருந்தாலும் அவரின் பார்வை, மனோபாவம், ஸ்திதியை மாற்றத்தக்க வகையில் உங்களின் பார்வை மிகவும் சதோகுணியாக இருக்க வேண்டும். உங்களுக்கு முன்னால் யார் வந்தாலும் உங்களின் திருஷ்டியினூடாக அவர்கள் மூவுலகங்களையும் தமது முழுமையான வாழ்க்கைக் கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே உங்களின் கணப்பார்வையால் ஒருவரை அப்பால் அழைத்துச் செல்லுதல் என்பதன் அர்த்தம். இறுதியில் இந்த ஞானத்தால் உங்களால் சேவை செய்ய முடியாமல் போகும்போது இந்தச் சேவையே தொடரும்.
சுலோகம்:
தூய்மையின் நடைமுறை ரூபம் சத்தியம் ஆகும், அதுவே தெய்வீகம் ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.
இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்கள் உங்களைத் தலைவணங்குவதற்குக் கற்பிக்கின்றன. நீங்கள் எந்தளவிற்கு உங்களின் சம்ஸ்காரங்களாலும் எண்ணங்களாலும் தலைவணங்குகிறீர்களோ அந்தளவிற்கு இந்த உலகமே அதிகமாக உங்களுக்குத் தலைவணங்கும். தலை வணங்குதல் என்றால் மற்றவர்களை உங்களைத் தலைவணங்கச் செய்வதாகும். உங்களின் சம்ஸ்காரங்களுக்கும் தலைவணங்குங்கள். மற்றவர்கள் எனக்குத் தலை வணங்க வேண்டும்! என்ற எண்ணமும் இருக்கக்கூடாது. நீங்கள் தலை வணங்கும்போது ஏனையவர்களும் தலை வணங்குவார்கள். உண்மையான சேவையாளர் குழந்தைகளால் அனைவருக்கும் தலைவணங்கும் போது மட்டுமே சேவை செய்ய முடியும்.