10.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சதோபிரதானாகி வீடு திரும்ப வேண்டும். எனவே, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சதா தந்தையை நினைவு செய்வதைப் பயிற்சி செய்யுங்கள். எப்பொழுதும் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருங்கள்.

பாடல்:
நீங்கள் உங்கள் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேறிச் செல்கின்றீர்களா அல்லது பின்னோக்கிச் செல்கின்றீர்களா என்பதற்கான அடையாளம் என்ன?

பதில்:
உங்கள் கல்வியில் நீங்கள் முன்னேறிச் செல்கின்றீர்களாயின், இலேசாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். இது அழுக்கான சரீரம் என்பதும், இப்பொழுது நீங்கள் அதனை நீக்க வேண்டும் என்பதும், நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கும். நீங்கள் தொடர்;ந்தும் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பீர்கள். நீங்கள் பின்னோக்கிச் செல்வீர்களாயின், உங்கள் செயற்பாடுகளில் அசுரக் குணங்களே தென்படும். நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் தந்தையின் நினைவு இருக்க மாட்டாது. அத்தகைய ஓர் ஆத்மாவினால் ஒரு மலர் ஆகவும் முடியாது, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கவும் முடியாது. அத்தகைய குழந்தைகள் பின்னர் காட்சிகளைக் காண்பதுடன் பெருமளவு தண்டனையையும் அனுபவம் செய்வார்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் இங்கு கீழிறங்கி வந்தபோது சதோபிரதானாக இருந்தீர்கள் என்ற எண்ணம் உங்கள் புத்தியில் இருக்கட்டும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் மத்தியிலும் சிலர் ஆத்ம உணர்வுடையவர்களாகவும், சிலர் சரீர உணர்வுடையவர்களாகவும் இருக்கின்றீர்கள். சிலர் ஒரு விநாடியில் சரீர உணர்வுடையவர்களாகவும், மறு விநாடியில் ஆத்ம உணர்வுடையவர்களாகவும் ஆகுகின்றார்கள். நீங்கள் இங்கு முழு நேரமும் ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்கள் என நீங்கள் எவருமே கூறமுடியாது, இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சில வேளைகளில் ஆத்ம உணர்வுடையவர்களாகவும், சில வேளைகளில் சரீர உணர்வுடையவர்களாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் சரீரங்களை நீக்கி, உங்கள் வீட்டிற்குச் செல்வீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்துடன் வீடு திரும்ப வேண்டும். நாள் முழுவதும் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய ஒரே எண்ணம்: தந்தை எனக்கு வழியைக் காட்டியிருப்பதால், நான் சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். மற்றயவர்கள் இத்தகைய எண்ணத்துடன் இருக்கமாட்டார்கள். வேறு எவருமே இக்கற்பித்தல்களைப் பெறமாட்டார்கள். அவர்கள் ஒருபோதுமே அவ்வாறான எண்ணத்தையேனும் கொண்டிருக்கமாட்டார்கள். இது துன்ப பூமி என்பதை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். தந்தை இப்பொழுது உங்களுக்குச் சந்தோஷ பூமிக்குச் செல்வதற்கான பாதையைக் காட்டியிருக்கின்றார். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களின் சக்திக்கேற்ப நீங்கள் சம்பூரணமடைந்து சாந்திதாமத்திற்குச் செல்வீர்கள். அது முக்தி எனப்படுகின்றது. அதற்காகவே மக்கள் குருமாரை ஏற்றுக்கொள்கின்றனர். இது ஒரு புதிய விடயம் என்பதால் முக்தி அல்லது ஜீவன் முக்தி பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நினைவு யாத்திரை மூலம் தூய்மையாகுங்கள். நீங்கள் முதலில் மேன்மையான உலகிற்குச் சென்றபோது சதோபிரதானாக இருந்தீர்கள். ஆத்மாக்கள் சதோபிரதானாக இருந்தார்கள். பின்னரே மற்றவர்களுடன் தொடர்புகள் ஏற்பட்டன. நீங்கள் ஒரு கருப்பையினுள் பிரவேசிக்கும்போது, ஓர் உறவுமுறையை ஏற்படுத்துகின்றீர்கள். இப்பொழுது இது உங்கள் இறுதிப் பிறவி என்பதையும், நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தூய்மையாகாமல் நாங்கள் வீடு செல்ல முடியாது. நீங்கள் உள்ளார்த்தமாக உங்களுடன் பேசவேண்டும்: தந்தையின் கட்டளைகள்: நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் உங்கள் புத்தியில் இந்த எண்ணம் இருக்கட்டும்: நாங்கள் சதோபிரதானாகவே வந்தோம், இப்பொழுதும் சதோபிரதானாகி வீடு திரும்ப வேண்டும். நாங்கள் தந்தையின் நினைவு மூலமாகவே சதோபிரதான் ஆகவேண்டும். ஏனெனில், தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவராவார். அவர் குழந்தைகளாகிய எங்களுக்கு எவ்வாறு தூய்மையாகுவது எனக் காட்டு;கின்றார். தந்தை மாத்திரமே முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவார்.வேறு எந்த அதிகாரியும் இல்லை. தந்தை மாத்திரமே மனித உலக விருட்சத்தின் விதையாவார். பக்தி எவ்வளவு காலம் நீடிக்கின்றது என்பதையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இன்னென்ன காலப்பகுதியில் ஞான மார்க்கமும், இன்னென்ன காலப்பகுதியில் பக்தி மார்க்கமும் உள்ளது. இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியினுள் சுழன்றுகொண்டிருக்க வேண்டும். தந்தையின் ஆத்மாவில் எவ்வாறு ஞானம் உள்ளதோ, அதேபோன்று ஆத்மாக்களாகிய உங்களுக்குள்ளும் ஞானம் இருக்கின்றது. நீங்கள் செவிமடுத்து, சரீரத்தின் மூலமாக அதனை உரைக்கின்றீர்கள். சரீரமின்றி ஓர் ஆத்மாவால் பேச முடியாது. இதில் தூண்டுதல் அல்லது “வானத்திலிருந்து அசரீரி ஒலி” போன்ற கேள்விக்கே இடமில்லை. இவை இறை வாசகங்கள் என்பதால், வாய் ஒன்றும், இரதம் ஒன்றும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. உங்களுக்குக் கழுதை லண்டியோ அல்லது குதிரை வண்டியோ தேவையில்லை. இக்கலியுகம் மேலும் 40,000 வருடங்களுக்குத் தொடரும் என்றே நீங்களும் முன்னர் நினைத்தீர்கள். நீங்கள் அறியாமை உறக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தீர்கள். பாபா இப்பொழுது உங்களை விழித்தெழச் செய்துள்ளார். நீங்களும் அறியாமையிலேயே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். பக்தி அறியாமை எனப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு முன்னேறி, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவது என்பது பற்றி இப்பொழுது சிந்திக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று, பின்னர் புதிய இராச்சியத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற விரும்புகின்றீர்கள். அதற்காகவே நினைவு யாத்திரை உள்ளது. நீங்கள் நிச்சயமாக உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். பரமாத்மாவே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். இது மிக எளிதானது. எவ்வாறாயினும், மக்கள் இந்தளவிற்;கேனும் புரிந்துகொள்ளமாட்டார்கள். இது இராவண இராச்சியம் என்றும் அதனாலேயே அவர்களின் புத்தி சீரழிந்துள்ளது என்றும் நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். விகாரத்தில் ஈடுபடாதவர்கள் தூய்மையானவர்கள் என்றே மக்கள் நினைக்கின்றார்கள். உதாரணமாக, சந்நியாசிகளைப் பற்றித் தந்தை கூறுகின்றார்: அவர்கள் தற்காலிகமான காலத்திற்கே தூய்மையாக இருக்கின்றார்கள். எனினும், உலகம் இன்னமும் தூய்மையற்றதாகவே உள்ளது. சத்தியயுகம் தூய்மையான உலகமாகும். சத்தியயுகத்தில் தூய்மையாக இருப்பதைப் போன்று, தூய்மையற்ற உலகில் எவருமே தூய்மையாக இருக்க முடியாது. அங்கு இராவண இராச்சியம் இல்லை. அங்கு விகாரம் என்ற கேள்விக்கும் இடமில்லை. எனவே, சுற்றுலாச் செல்லும்போதும், உலாவித் திரியும்போதும் உங்கள் புத்தியில் இந்த எண்ணங்கள் இருக்கட்டும். பாபாவிடம் இந்த ஞானம் உள்ளது. அவரே ஞானக்கடல், ஆகவே அவரிடமிருந்து நிச்சயமாக ஞானம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஞானக்கடலில் இருந்து தோன்றிய ஆறுகள். அவர் எப்பொழுதும் கடல் ஆவார். நீங்கள் எப்பொழுதும் கடல்களாக இருப்பதில்லை. நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் கற்கின்றீர்கள். உண்மையில், ஆறுகள் போன்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஆறுகளைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் கங்கை, ஜமுனை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் எல்லையற்றதில் நிற்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள், ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். இப்பொழுது நாங்கள் வீடு திரும்ப வேண்டும், அங்கிருந்து பின்னர் கீழிறங்கி சரீரங்களினுள் பிரவேசித்து, எங்கள் சிம்மாசனத்தில் (நெற்றி) அமர்ந்துகொள்வோம். ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவர். நீங்கள் ஏதோ ஒன்றின் காட்சியைப் பெற்றாலும், எதனையும் நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள். ஆத்மா சரீரத்தை நீக்கும்போது, சிலவேளைகளில் தலை மூலமாகவும், சிலவேளைகளில் கண்கள் மூலமாகவும், சிலவேளைகளில் வாய் மூலமாகவும் நீங்கிச்செல்கின்றார் என அவர்கள் கூறுகின்றனர். பின்னர், வாய் திறந்தவாறு இருக்கின்றது. ஆத்மா சரீரத்தை விட்டுப் பிரிந்ததும், சரீரம் உயிரற்றதாகுகின்றது. இது ஞானமாகும். இக்கல்வி நாள் முழுவதும் மாணவர்களின் புத்தியில் நிலைத்திருக்கும். நீங்களும் நாள் முழுவதும் இக்கல்வி பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். நல்ல மாணவர்கள் எப்போதும் தங்கள் கரங்களில் ஏதொவொரு புத்தகத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் தொடர்ந்தும் கற்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இது உங்கள் இறுதிப் பிறவியாகும். நீங்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றி, இப்பொழுது இறுதிப் பகுதிக்கு வந்தள்ளீர்கள். எனவே, இத்தகைய எண்ணங்கள் உங்கள் புத்தியில் இருக்கட்டும். இவற்றைக் கிரகித்து, மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். சிலரால் எதையும் கிரகிக்க முடியாதுள்ளது. பாடசாலையிலும் மாணவர்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். அங்கு பல பாடங்கள் உள்ளன. இங்கு, உங்களுக்கு ஒரேயொரு பாடமே உள்ளது. நீங்கள் தேவர்கள் ஆகவேண்டும். இக்கல்வி மீது அக்கறை இருக்கட்டும். நீங்கள் கற்பதை மறந்து, தொடர்ந்து வேறு எண்ணங்களைக் கொண்டிருப்பதாக இருக்கக்கூடாது. வியாபாரிகள் எப்பொழுதும் தங்கள் வியாபாரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். மாணவர்கள் எப்பொழுதும் தங்கள் கல்வியில் மும்முரமாக இருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் கல்வியில் மும்முரமாக இருக்க வேண்டும். பாபா சர்வதேச யோக மாநாட்டிற்கான ஓர் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டார். அவர்களுடையது ஹத்தயோகம் என நீங்கள் எழுத்து மூலம் அவர்களுக்குக் கூறலாம். அதன் இலக்கும், இலட்சியமும் என்ன? அதனால் ஏற்படும் நன்மை என்ன? நாங்கள் இராஜயோகம் கற்கின்றோம். ஞானக்கடலாகிய பரமாத்மாவான பரமதந்தையே படைப்பவர். அவரே எங்களினதும், படைப்பினதும் ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். இப்பொழுது நாங்கள் வீடு திரும்ப வேண்டும். எங்கள் மந்திரம் “மன்மனாபவ” என்பதாகும். நாங்கள் பாபாவையும், அவரிடமிருந்து நாங்கள் பெறும் ஆஸ்தியையும் நினைவு செய்கின்றோம். நீங்கள் ஹத்தயோகம் போன்றவற்றைச் செய்துவந்தீர்கள். எனினும், அதன் இலக்கும், குறிக்கோளும் என்ன? நாங்கள் எங்களுடையதைப் பற்றி உங்களுக்குக் கூறியுள்ளோம். இதற்காகவே நாங்கள் இதனைக் கற்கின்றோம். உங்கள் ஹத்த யோகத்தின் மூலம் எதனைப் பெற்றுக்கொள்ள முடியும்? அத்தகையதோர் பதிலை நீங்கள் இரத்தினச் சுருக்கமாக எழுத வேண்டும். நீங்கள் அத்தகைய பல அழைப்பிதழ்களைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு அகில இந்திய சமய மாநாட்டிற்கான அழைப்பிதழைக் கொடுத்து, உங்கள் இலக்கும், குறிக்கோளும் என்ன என்று உங்களிடம் அவர்கள் கேட்டால், அவர்களிடம் கூறுங்கள்: இதைத்தான் நாங்கள் கற்கின்றோம். நீங்கள் என்ன செய்கின்றீர்கள், ஏன் இந்த இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள் என்பதை நிச்சயமாக அவர்களுக்குக் கூறவேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இதனைக் கற்கின்றோம். கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் எங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றோம். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் விநியோகிப்பதற்காக அச்சடிக்கப்பட்ட பிரதிகளை வைத்திருக்க வேண்டும். மாநாடுகள் நடைபெறும் இடங்களுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். நீங்கள் அவர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களைக் கற்பிப்பதாக அவர்கள் கூறுவார்கள். இந்த இராஜ யோகத்தின் மூலம் நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்களாகவும், உலகின் அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். ஒவ்வொரு 5000 வருடங்களும் நாங்கள் தேவர்களாகி, பின்னர் மனிதர்களாகின்றோம். நீங்கள் இவ்வாறாக ஞானக் கடலைக் கடைந்து, முதற்தரமான கட்டுரைகளை எழுத வேண்டும். உங்கள் இலக்கு என்ன என்று எவரும் உங்களைக் கேட்கலாம். எனவே, நீங்கள் இக்கட்டுரைகளை அச்சடித்து வைத்திருக்க வேண்டும்: இதுவே எங்கள் இலக்கும், இலட்சியமும் ஆகும். நீங்கள் இதனை எழுதும்போது, அவர்கள் ஈர்க்கப்படுவார்கள். இதில் ஹத்த யோகம், சமய நூல்களைப் பற்றி விவாதித்தல் போன்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் தங்கள் சமய நூல்களிலுள்ள ஞானத்தையிட்டுப் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தாங்களே சமய நூல்களின் அதிகாரிகள் எனக் கருதுகின்றார்கள். உண்மையில், அவர்கள் பூஜிப்பவர்கள். பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களையே அதிகாரிகளாகக் கருத முடியும். பூஜிப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்? நீங்கள் என்ன கற்கின்றீர்கள் என மிகத் தெளிவாக எழுத வேண்டும். பிரம்ம குமாரர்கள், குமாரிகளின் பெயர் மிகவும் பிரபல்யமாகியுள்ளது. இரு வகையான யோகம் உள்ளது: ஒன்று ஹத்த யோகம், மற்றையது இலகு யோகம். எந்தவொரு மனிதராலும் இதனைக் கற்பிக்க முடியாது. பரமாத்மா மாத்திரமே இராஜ யோகம் கற்பிக்கின்றார். ஏனைய யோகங்கள் அனைத்தும் மனிதக் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு, தேவர்களுக்கு எவரது வழிகாட்டல்களும் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் ஆஸ்தியைப் பெற்றுவிட்டார்கள். அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்ட தேவர்கள். தெய்வீகக் குணங்கள் எதனையும் கொண்டிராதவர்கள் அசுரர்கள் எனப்படுகின்றனர். அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. எனவே, அவர்கள் எங்கு சென்றனர்? எவ்வாறு அவர்கள் 84 பிறவிகளை எடுத்தனர்? நீங்கள் ஏணிப் படத்தை விளங்கப்படுத்த வேண்டும். ஏணிப்படம் மிகவும் சிறந்தது. உங்கள் இதயத்தில் உள்ளதெல்லாம் ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியே வருமானத்திற்கான மூலாதாரமாகும். இதுவே அதி மேலான கல்வியாகும். இதுவே அதி சிறந்ததாகும்! எந்தக்கல்வி அதி சிறந்தது என உலகம் அறியமாட்டாது. இந்தக்கல்வி மூலமாக நீங்கள் மனிதர்களிலிருந்து இரட்டைக் கிரீடம் அணிந்த தேவர்களாகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் இரட்டைக் கிரீடமணிந்தவராகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். கல்வி ஒன்றேயாயினும், சிலர் ஒன்றாகவும், சிலர் வேறொன்றாகவும் ஆகுகின்றனர். ஒரே கல்வி மூலமாக இராச்சியமொன்று ஸ்தாபிக்கப்படுவது ஓர் அற்புதமேயாகும். சிலர் அரசர்களாகவும், சிலர் ஆண்டிகளாகவும் ஆகுகின்றனர். எவ்வாறாயினும், அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அந்தஸ்தில் வெவ்வேறு மட்டங்கள் உள்ளன. இங்கு பலவகையான துன்பம் உள்ளது. பஞ்சம், நோய், உணவுப் பற்றாக்குறை, வெள்ளப் பெருக்கு போன்றன உள்ளன. கோடீஸ்வரர்களாயினும், பல்கோடீஸ்வரர்களாயினும் அவர்கள் விகாரத்தின் மூலமாகவே பிறக்கின்றார்கள். கீழே விழுதல், நுளம்பு கடித்தல் போன்ற அனைத்தும் துன்பத்தின் வகைகளேயாகும். இது ஆழ் நரகம் எனப்படுகின்றது. இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றனர்: இன்னார் இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். ஆ! ஆனால் சுவர்க்கம் இனிமேலதான் வரப்போகின்றது. எனவே, எவ்வாறு எவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்? எவருக்கும் விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. பாபா உங்களிடம் ஒரு கட்டுரை எழுதுமாறு கூறியுள்ளார். எனவே, அதை எழுதுவது குழந்தைகளாகிய உங்கள் கடமையாகும். நீங்கள் எதையாவது கிரகித்திருந்தால் உங்களால் எழுத முடியும். குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கும் பிரதான விடயம்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுவதாகும், ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் சதோபிரதானாக இருந்தபோது, எங்கள் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. இப்பொழுது நாங்கள் தமோபிரதான் ஆகிவிட்டோம். அது மிக இலகுவானது. பாபா உங்களுக்குப் பல கருத்துக்களைக் கூறுகின்றார், எனவே நீங்கள் அமர்ந்திருந்து அவற்றை மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் உங்கள் குலத்திற்குரியவர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். நீங்கள் நாளுக்கு நாள் கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் பின்னோக்கிச் செல்லக்கூடாது. தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்குப் பதிலாக, நீங்கள் அசுரக் குணங்களைக் கிரகிப்பீர்களாயின், அது பின்னோக்கிச் செல்வதாகும். தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் விகாரங்களைத் துறந்து, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் மிக இலேசாக இருக்க வேண்டும். இச்சரீரம் அழுக்கானது, அதனை இப்பொழுது துறந்துவிட வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிடின், மலர்கள் ஆகமாட்டீர்கள். பெருமளவு தண்டனையை அனுபவிக்க வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது காட்சிகளைப் பெறுவீர்கள். நீங்கள் என்ன சேவை செய்தீர்கள் என உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் நீதிமன்றத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர்கள் எவ்வாறு திருடர்களைப் பிடிக்கின்றார்கள், பின்னர் எவ்வாறு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது என்பது பற்றி அனைத்தையும் பாபா பார்த்திருக்கின்றார். அங்கே நீங்கள் அனைத்தினது காட்சிகளையும் காண்பீர்கள். தண்டனையை அனுபவித்து, பின்னர் நீங்கள் சில சதங்கள் பெறுமதியான ஓர் அந்தஸ்தையே பெற்றுக் கொள்வீர்கள். ஓர் ஆசிரியர் குறிப்பிட்ட மாணவர் ஒருவர் சித்தி எய்தாது விட்டுவிடுவாரோ எனக் கருணை உணர்வைக் கொண்டிருக்கின்றார். தந்தையை நினைவு செய்வது என்ற பாடம் மிகச் சிறந்தது. அதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார் – உலாவித் திரியும்பொழுதும் இதனைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். மாணவர்கள் தங்கள் ஆசிரியரை நினைவு செய்வதுடன், கல்வியையும் தங்கள் புத்தியில் கொண்டிருப்பார்கள். அவர்கள் நிச்சயமாகத் தங்கள் ஆசிரியருடன் யோகம் செய்வார்கள். சகோதரர்களாகிய எங்கள் அனைவரதும் ஆசிரியர் பரம ஆசிரியரே என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது பலருக்கும் தெரியவரும். அவர்கள் கூறுவார்கள்: ஓ கடவுளே, உங்கள் லீலை தெய்வீகமானது! அவர்கள் அவரின் புகழைப் பாடியவாறே மரணிப்பார்கள். எனினும், அவர்களால் எதனையும் அடைய முடியாது. சரீர உணர்வுக்கு வருவதால், நீங்கள் தவறான செயல்களைச் செய்கின்றீர்கள்;. ஆத்ம உணர்வுடையவர்கள் எப்பொழுதும் நற்செயல்களையே செய்வார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது உங்கள் அனைவரினதும் ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் வீடு திரும்ப வேண்டும். அனைவரும் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்ப வேண்டும். ஒருவர் விரும்புகின்றாரோ இல்லையோ அவர்; நிச்சயமாகத் திரும்பிச் செல்லவே வேண்டும். உலகம் வெறுமையாகி, பாரதம் மாத்திரம் எஞ்சுகின்ற ஒரு காலம் வரும். அரைக் கல்பத்திற்கு பாரதம் மாத்திரமே இருக்கும். உலகம் வெறுமையாக இருக்கும். அத்தகைய எண்ணங்கள் உங்களைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இருக்காது. அப்பொழுது உங்களுக்கு எதிரிகள் எவரும் இருக்கமாட்டார்கள். எதிரிகள் ஏன் வருகின்றார்கள்;? அவர்கள் உங்கள் செல்வத்தைத் துரத்தி வருகின்றார்கள். பாரதத்திற்கு ஏன் அதிகளவு முஸ்லிம்களும் பிரித்தானியரும்; வந்தார்கள்? அவர்கள் இங்குள்ள செல்வத்தைக் கண்டார்கள். இங்கே பெருமளவு செல்வம் இருந்தது, ஆனால் அது இப்பொழுது இல்லை. ஆகையால் இப்பொழுது அவர்களில் எவரும் இங்கு இல்லை. அவர்கள் செல்வத்தை எடுத்து, பாரதத்தை வெறுமையாக்கிவிட்டார்கள். மக்கள் இதனை அறியமாட்டார்கள். பாபா கூறுகின்றார்: நாடகத் திட்டத்திற்கேற்ப உங்கள் செல்வம் முழுவதையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்கள். இது இறை குடும்பம் என என்றும், எவருமே நினைத்திருக்க மாட்டார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நடந்து உலாவித் திரியும்போதும், உங்கள் புத்தியில் கல்வி பற்றிய சிந்தனையைக் கொண்டிருங்கள். எந்தப் பணியைச் செய்யும்பொழுதும் உங்கள் புத்தியில் ஞானம் எப்பொழுதும் வெளிப்பட்டவாறே இருக்கட்டும். இதுவே அதி சிறந்த கல்வியாகும். இதன் மூலம் நீங்கள் இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் ஆகவேண்டும்.

2. ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள் என்பதைப் பயிற்சி செய்யுங்கள். சரீர உணர்வுக்கு வரும்போது நீங்கள் தவறான செயல்களையே செய்கின்றீர்கள். எனவே, இயன்றவரை ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
சத்தியத்தின் சக்தியினால் சதா சந்தோஷ நடனமாடுகின்ற ஒரு மகத்தான சக்திமிக்கதோர் ஆத்மா ஆகுவீர்களாக.

கூறப்படுகின்றது: சத்தியம் இருக்கின்ற இடத்தில் ஆத்மா நடனமாடுகின்றார். சத்தியம் நிறைந்தவர்கள், அதாவது, சத்தியத்தின் சக்தியை கொண்டிருப்பவர்கள் சதா நடனமாடுவார்கள், அவர்கள் ஒருபோதும் வாடுவதோ, குழப்பம் அடைவதோ, பயப்படவோ, அல்லது பலவீனமாக உணர்வதோ இல்லை. அவர்கள் சதா சந்தோஷ நடனமாடுகின்றார்கள். அவர்கள் சக்திசாலிகளாக இருப்பார்கள். அவர்;கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் சக்தி உடையவர்களாக இருப்பார்கள். உண்மை எப்பொழுதும் தளம்பல் அடைவதில்லை. அது அசைக்க முடியாதது. சத்திய படகு ஆடக்கூடும், ஆனால் என்றுமே மூழ்காது. எனவே, சத்தியத்தின் சக்தியை கிரகிக்கின்ற ஆத்மாக்களாகிய நீங்கள் மகத்தான ஆத்மாக்கள் ஆவீர்கள்.

சுலோகம்:
மும்முரமான மனதையும் புத்தியையும் ஒரு விநாடியில் நிறுத்துவதே அதி மேன்மையான பயிற்சியாகும்.