11.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் இதயபூர்வமாக ‘பாபா, பாபா’ எனக் கூறினால், சந்தோஷத்தில் மெய்சிலிர்க்கும். நீங்கள் சந்தோஷத்தில் நிலைத்திருந்தால், மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள்.

கேள்வி:
சந்தோஷத்திற்கும் நினைவு செய்தலுக்கும் அடிப்படையாக உள்ள எந்த ஒரு விடயத்தைச் சில குழந்தைகள் கடின வேலையாகக் காண்கின்றார்கள்?

பதில்:
ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கே முயற்சி தேவை. இவ்வாறு ஆகுவதனாலேயே உங்கள் சந்தோஷப் பாதரசம் அதிகரிப்பதுடன், நீங்கள் இனிய பாபாவையும் நினைவு செய்கின்றீர்கள். மாயை தொடர்ந்தும் உங்களைச் சரீர உணர்வடையச் செய்கின்றாள். மாயை சக்திமிக்கவர்களுடன் சக்திமிக்கவளாகி, அவர்களுடன் யுத்தம் புரிகின்றாள். எவ்வாறாயினும், இதனால் நீங்கள் குழப்பம் அடையக்கூடாது. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, மாயையின் புயல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களினால் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார், அதாவது, அவர் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுத்து உங்களுக்குக் கல்வி புகட்டுகின்றார். உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தை சதா ஆத்ம உணர்வு உடையவராகவே இருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் அசரீரியானவர். அவர் சரீரம் எடுப்பதில்லை. அவர் மறுபிறப்பிற்குள் வருவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் உங்களையும் என்னைப் போலவே ஆத்மாக்களாகக் கருத வேண்டும். நானே பரம தந்தையாவேன். பரமாத்மா ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. அவர் ஆத்ம உணர்வுடையவர் என்று உங்களால் கூற முடியாது; அவர் அசரீரியானவர். தந்தை கூறுகின்றார்: எனக்கென ஒரு சரீரம் இல்லை. நீங்கள் தொடர்ந்தும் சரீரங்களைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது, என்னைப் போல் ஆகுங்கள், சரீரத்திலிருந்து விடுபட்டு, உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். நீங்கள் உலக அதிபதி ஆக விரும்பினால், அதனை விடக் கடினமானது வேறு ஒன்றுமில்லை. தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைத் துறந்து, என்னைப் போன்று ஆகுங்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் எப்பொழுதும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். தந்தை அசரீரியானவராயின், அவர் எங்களுக்கு எவ்வாறு கற்பிப்பார்? இதனாலேயே பாபா வந்து, இச்சரீரத்தின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் ஒரு கௌமுக்கைக் (பசுவின் வாய்) காட்டுகின்றார்கள். இப்பொழுது, ஒரு பசுவின் வாயிலிருந்து எவ்வாறு கங்கை வெளிப்பட முடியும்? தாய்மார்களும் தாய்ப் பசுக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் பசுக்கள். இவர் (பிரம்மா பாபா) ஒரு பசு அல்ல. நீங்கள் வாயினூடாக இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையிடம் ஒரு பசு இருப்பதில்லை; அவர் ஓர் எருதை ஓட்டுவதைக் காட்டுகின்றார்கள். ‘சிவனும் சங்கரரும் ஒருவரே’ என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். சிவனும் சங்கரரும் ஒருவர் அல்ல என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். சிவன் அதிமேன்மையானவர்; அதன்பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளனர். அந்தப் பிரம்மா சூட்சும உலக வாசியாவார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானக் கடலைக் கடைந்து, விளங்கப்படுத்துவதற்காக அவற்றிலிருந்து கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் பயமற்றவர்களாகவும் ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே சந்தோஷமாக இருக்கின்றீர்கள். ‘நாங்கள் கடவுளின் மாணவர்கள், பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார்’ என நீங்கள் கூறுகின்றீர்கள். கடவுள் பேசுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குவதற்கே உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நீங்கள் எங்கே சென்றாலும் பரவாயில்லை, நிலையங்களாக இருந்தாலும், வேறு எங்கு சென்றாலும், பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதே உங்கள் புத்தியில் உள்ளது. ஒரு நிலையத்தில் நீங்கள் செவிமடுப்பவை பாபாவினால் பேசப்பட்ட முரளியாகும். ‘பாபா, பாபா’ எனத் தொடர்ந்தும் கூறுங்கள். இதுவும் உங்கள் யாத்திரை. ‘யோகம்’ என்ற வார்த்தை அவ்வளவு பொருத்தமானதல்ல. மக்கள் அமர்நாத், பத்திரிநாத் போன்ற யாத்திரைத் தலங்களுக்குப் பாத யாத்திரை செல்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த எல்லையற்ற நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். பாபா எங்களைத் தகுதியுடையவர்களாக்கி, எங்களைத் திரும்பி அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். நீங்களே கூறுகின்றீர்கள்: நாங்கள் தூய்மையற்றவர்கள். முக்தியைத் தூய்மை அற்றவர்களால் பெற முடியாது. தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள். அவர்கள் தங்களின் சரீரங்களே தூய்மையற்றவை எனக் கருதிக் கங்கைக்குச் சென்று நீராடுகின்றார்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மாவே பிரதான விடயம். ‘பாவாத்மா, புண்ணியாத்மா’ என்று கூறப்படுகின்றது. இவ் வார்த்தைகளை நீங்கள் நன்றாக நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் முதலில் இதனை நன்றாகப் புரிந்துகொண்டு, பின்னர் பிறரையும் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். நீங்களே சொற்பொழிவாற்ற வேண்டும். தந்தை கிராமம் கிராமமாகவோ அல்லது வீதி வீதியாகவோ செல்லப் போவதில்லை. நீங்கள் இப்படங்களை அனைத்து வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். 84 பிறவிச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது? அது ஏணிப் படத்தில் மிகத்தெளிவாக உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதோபிரதான் ஆகுங்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும், தூய்மை ஆகாமல் உங்களால் வீடு திரும்பிச் செல்ல முடியாது. இந்த ஓர் அக்கறை மாத்திரமே உங்களுக்கு இருக்க வேண்டும். பல குழந்தைகள் பாபாவிற்கு எழுதுகின்றார்கள்: மாயையின் பல புயல்கள் எங்களுக்கு வருகின்றன. எனது மனதில் மிகவும் தீய எண்ணங்கள் வருகின்றன, அவை முன்னர் வரவில்லை. தந்தை கூறுகின்றார்: அதனைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். முன்னர் நீங்கள் ஒரு யுத்த களத்தில் இருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, மாயையை வெற்றிகொள்ள வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். தாய்மார்கள் சேலையில் முடிச்சிட்டுக் கொள்வதைப் போன்றும், ஆண்கள் தமது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வதைப் போன்றும் நீங்களும் ஒரு முடிச்சை இட்டுக் கொள்ளுங்கள். உங்களது இந்த ‘பட்ஜ்’ மிகவும் சிறந்த அடையாளம். நாங்கள் இளவரசர்கள் ஆகுகின்றோம். இது யாசிப்பவரிலிருந்து இளவரசராக மாறுவதற்கான இறை பல்கலைக்கழகமாகும். நீங்கள் இளவரசராக இருந்தீர்கள், அப்படித்தானே? இங்கிலாந்தின் பிரின்ஸ் ஒவ்ஃ வேல்ஸ் இருப்பதைப் போன்று, ஸ்ரீ கிருஷ்ணர் உலக இளவரசராக இருந்தார். அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயம். இராதையும் கிருஷ்ணரும் மிகவும் பிரபல்யமானவர்கள். அவர்கள் சுவர்க்கத்தின் இளவரசரும், இளவரசியுமாக இருந்ததால், அனைவரும் அவர்களை நேசிக்கின்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பெருமளவு நேசிக்கப்படுகின்றார். அவர்கள் இருவருமே நேசிக்கப்பட வேண்டியவர்களே. முதலாவதாக, இராதையே இருக்க வேண்டும், எனினும் ஆண் குழந்தையே வாரிசு ஆகுவதால், அவர் அதிகளவு நேசிக்கப்படுகின்றார். ஒரு மனைவி தனது கணவரின் மீது அன்பு கொண்டிருக்கின்றார். ஒரு கணவனைக் குறித்தே ‘அவனே உனது குருவும், உனது கடவுளும்’ என்று அவர்கள் கூறுகின்றனர். ஒரு மனைவியை இட்டு அவ்வாறு கூறப்படுவதில்லை. சத்தியயுகத்தில், தாய்மார்கள் புகழப்படுகின்றார்கள். முதலில் இலக்ஷ்மியும், பின்னர் நாராயணனும் உள்ளனர். அம்பாள் தேவி மீது அதிகளவு மரியாதை இருக்கின்றது; அவர் பிரம்மாவின் புத்திரி ஆவார். பிரம்மாவிற்கு அந்தளவிற்கு மரியாதை இருப்பதில்லை. அஜ்மீரில் பிரம்மாவிற்கு ஆலயம் ஒன்றுள்ளது, அங்கேயே மேலாக்கள் இடம்பெறுகின்றன. அம்பாளின் ஆலயங்களிலும் மேலாக்கள் இடம்பெறுகின்றன.உண்மையில், அந்த மேலாக்கள் அனைத்தும் உங்களை மேலும் அழுக்கடையச் செய்கின்றன. உங்களுடைய இந்த மேலாவே உங்களைச் சுத்தம் ஆக்குகின்றது. சுத்தம் அடைவதற்கு, நீங்கள் சுத்தமான (தூய்மையான) தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் பாவங்களைத் தண்ணீரினால் உங்களால் அழித்து விட முடியாது. ‘மன்மனாபவ’ என்ற இறைவனின் வார்த்தை கீதையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது ஆரம்பத்திலும், பின்னர் இறுதியிலும் குறிப்பிடப்படுகின்றது. நாங்களே வழிபாட்டை ஆரம்பித்ததைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சதோபிரதான் வழிபாடும், பின்னர் சதோ, இரஜோ வழிபாடும், அதன்பின்னர் தமோ வழிபாடும் இருந்தன. பாருங்கள், அவர்கள் இப்பொழுது மண்ணையும், கல்லையும் கூட வழிபடுகின்றார்கள்! அவை அனைத்தும் குருட்டு நம்பிக்கை. இந்நேரத்தில் நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இதுவே தலைகீழான விருட்சமாகும்: விதையே உச்சியில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நானே இந்த மனித உலக விருட்சத்தைப் படைப்பவரும், அதன் விதையும் ஆவேன். நான் இப்பொழுது புதிய உலகைப் படைக்கின்றேன். மரக்கன்று நாட்டப்படுகிறது. விருட்சத்தின் பழைய இலைகள் கீழே விழுந்ததும், புதிய இலைகள் தோன்றத் தொடங்குகின்றன. தந்தை இப்பொழுது ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். நிறம் மாறிக் கலந்து விட்ட (மதம் மாறியவர்கள்) பல இலைகளும் உள்ளன. அவர்கள் தம்மை இந்துக்கள் என அழைக்கின்றார்கள். உண்மையில், இந்துக்கள் ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்தைச் சேர்ந்தவர்கள். தேவர்கள் வாழ்ந்த பாரதம் என்பதே இந்துஸ்தானின் உண்மையான பெயர். வேறு எந்தத் தேசத்தின் பெயரும் மாற்றப்படவில்லை. ஆனால் இத்தேசத்தின் பெயரையே அவர்கள் மாற்றியிருக்கின்றார்கள். அவர்கள் அதனை இந்துஸ்தான் என அழைக்கின்றார்கள். பௌத்தர்கள் தமது சமயம் ஜப்பானியம் என்றோ சீனம் என்றோ கூறுவதில்லை. அவர்கள் தமது சமயத்தைப் பௌத்தம் என்றே அழைக்கின்றார்கள். இங்கும், எவரும் தம்மை ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்தினர் எனக் கருதுவதில்லை. ஒருவர் தாம் அந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர் எனக் கூறினால், அவரிடம் வினவுங்கள்: அந்தத் தர்மம் எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது, அதனை ஸ்தாபித்தவர் யார்? அவரால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது. சக்கரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதுவே அறியாமையின் இருள் எனப்படுகின்றது. முதலில், அவர்களுக்குத் தமது தர்மத்தைத் தெரியாது. இரண்டாவதாக, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் மிகவும் தொலைவிற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே இது காரிருள் எனப்படுகின்றது. இந்த ஞானத்திற்கும், அந்த அறியாமைக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு இருக்கின்றது. சிவபாபா மாத்திரமே ஞானக்கடல். அது ஒருவருக்கு நீர்க் கலசத்தைக் கொடுப்பதைப் போன்றது; சிவபாபாவை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழியும் என நீங்கள் ஒருவரிடம் கூறுதல் சிறிதளவு நீரைக் கொடுப்பதைப் போன்றது. சிலர் அதில் (கங்கையில்) நீராடுகின்றார்கள், சிலர் பானையில் அதனை எடுத்துக் கொள்கின்றார்கள். சிலர் சிறிய கலசத்திலும், சிலர் அதை விடச் சிறிய கலசங்களிலும் எடுத்துச் செல்கின்றார்கள். அவர்கள் ஒரு பானையில் துளி தண்ணீரை இட்டு, அதனை ஞான நீர் எனக் கருதி, அதனை அருந்துகின்றார்கள். வைஷ்ணவர்கள் கூட வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, ஒரு கொள்கலனில் இந்தக் கங்கை நீரை நிறைத்து எடுத்துக் செல்வதுடன், அதனை மேலும் அனுப்புமாறு தொடர்ந்து கேட்பதும் உண்டு. இப்பொழுது அந்த நீர் அனைத்தும் மலைகளிலிருந்தே வருகின்றன. தண்ணீரும் மேலிருந்தே விழுகின்றது. இக்காலத்தில் 100 மாடிகளுடன் கட்டடங்களும் கட்டப்படுகின்றன. சத்தியயுகத்தில் அதுபோல் இருக்க மாட்டாது. அங்கே, நீங்கள் அதிகளவு நிலப்பரப்பைக் கொண்டிருப்பீர்கள், கேட்கவும் வேண்டாம்! இங்கே நிலப் பற்றாக்குறை இருப்பதால், அவர்கள் பல மாடிக் கட்டடங்களைக் கட்டுகின்றார்கள். அங்கே, அபரிமிதமாகத் தானியங்களும் இருக்கின்றன. அமெரிக்காவில், தானியங்கள் அபரிமிதமாக இருக்கும்போது, அவற்றை எரிக்க வேண்டியுள்ளது. இது மரண உலகமாகும். அது அமரத்துவ உலகமாகும். அரைக் கல்பத்திற்கு, அங்கே நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். அங்கே மரணம் வர மாட்டாது. இதனையிட்டு ஒரு கதையும் இருக்கின்றது. இவை எல்லையற்ற விடயங்கள். இந்த எல்லையற்ற விடயங்களில் இருந்து, அவர்கள் எல்லைக்கு உட்பட்ட கதைகளைக் கட்டியுள்ளார்கள். ஆதியில், கிராந்த் மிகவும் சிறிதாகவே இருந்தது. அது இப்பொழுது மிகவும் பெரிதாக்கப்பட்டு விட்டது. சிவபாபா சின்னஞ்சிறிய (புள்ளி) அளவு உடையவராயினும், அவருக்கெனச் சின்னங்கள் மிகப் பெரிதாகக் கட்டப்பட்டுள்ளன. புத்தரதும், பாண்டவர்களதும் உருவங்களும் மிகப் பெரிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு எவருமே இல்லை. குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரது வீட்டிலும், இலக்கினதும், இலட்சியத்தினதும் படத்தை வைத்திருக்க வேண்டும். நாங்கள் கற்பதன் மூலம் இவ்வாறு ஆகுகின்றோம். அவ்வாறாயின் நீங்கள் ஏன் அழ வேண்டும்? அழுபவர்கள் இழக்கின்றார்கள். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும்; இதற்கே முயற்சி தேவை. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதன் மூலம், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்வடைந்து, இனிய பாபா நினைவு செய்யப்படுகின்றார். எங்கள் சுவர்க்கம் என்ற ஆஸ்தியை பாபாவிடமிருந்து நாங்கள் பெறுகின்றோம். பாபா இந்தப் பாக்கிய இரதத்தில் எங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார். பாபாவை இரவுபகலாக நினைவு செய்யுங்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு அவரின் காதலிகளாக இருக்கின்றீர்கள். பக்தர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். பல பக்தர்கள் இருக்கின்றார்கள். இந்த ஞானத்தில், அனைவரும் ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கின்றார்கள்; அவர் அனைவரதும் தந்தை. ஞானக்கடலான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால் உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும். மாயையின் புயல்கள் நிச்சயமாக வரும். பாபா கூறுகின்றார்: நான் முன்னிலையில் இருப்பதால், நானே அதிகபட்ச புயல்களைச் சந்திக்க வேண்டும். எனக்குப் புயல்கள் வருவதால், குழந்தைகளான உங்களுக்கு எவ்வளவு புயல்கள் வர வேண்டும் என்பதையும், எவ்வாறு குழப்பம் அடைந்திருப்பீர்கள் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியும். பல வகையான புயல்கள் வருகின்றன. அறியாமை நாட்களில் கூட உங்களுக்கு அவ்வாறு வந்திருக்க மாட்டாது. இப் புயல்கள் எனக்கே முதலில் வரவேண்டும். இல்லாவிட்டால், எவ்வாறு என்னால் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? இவரே முன்னிலையில் உள்ளார். இவர் சக்திமிக்கவர் என்பதால், மாயையும் சக்திமிக்க வழியில் எதிர்த்து இவருடன் யுத்தம் புரிகின்றாள். மல்யுத்தத்தில், அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை. முதல், இரண்டாம், மூன்றாம் தரங்கள் ஏற்படுகின்றன. பாபா அதிகபட்ச புயல்களைச் சந்திக்கின்றார், இதனாலேயே இவர் கூறுகின்றார்: இப் புயல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களினால் எப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். சிலர் கூறுகின்றார்கள்: நாங்கள் இந்த ஞானத்திற்கு வந்த பின்னரும் ஏன் அத்தகைய விடயங்கள் நிகழ்கின்றன? இதனை விட, நாங்கள் இந்த ஞானத்தை எடுக்காதிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; அவ்வாறாயின், எங்களுக்கு இவ்வாறான எண்ணங்கள் வந்திருக்க மாட்டாது. எவ்வாறாயினும், இது ஒரு யுத்தம். ஒரு பெண்ணின் முன்னிலையில் இருக்கும்போதும், நீங்கள் தூய்மையான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். சிவபாபாவின் குழந்தைகள் என்ற ரீதியில் நீங்கள் சகோதரர்கள் என்பதையும், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்ற ரீதியில் நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகவே, எங்கிருந்து விகாரங்கள் வருகின்றன? பிராமணர்கள், தேவர்களாக ஆகப் போகின்ற உச்சிக்குடுமிகள், ஆகையால் நீங்கள் சகோதர, சகோதரிகள். இருபாலாரினராகிய நீங்கள் ஒரே தந்தையின் (பிரம்மாவின்) குழந்தைகள் என்பதால், ஒரு குமாரியாகவும் குமாராகவும் இருக்காமல் விட்டால், சண்டைகள் இடம்பெறும். கள்ளங்கபடமற்றவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள். ஆண்களும் எழுதுகின்றார்கள்: எனது மனைவி பூதகி (அரக்கி) போன்றவள். பெரும் முயற்சி செய்யப்பட வேண்டும். இளையவர்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். தூய திருமணம் செய்து வாழ்பவர்கள் - அது ஓர் அற்புதம்! அவர்களால் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். இருப்பினும், அவர்கள் சிறந்த ஸ்திதியில் இருந்து, இந்த ஞானத்தில் திறமைசாலிகள் ஆகினால் மட்டுமே அது நடைபெற முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் புயல்களினால், பயப்படவோ அல்லது குழப்பம் அடையவோ வேண்டாம். உங்கள் பௌதீகப் புலன்களினால் எப்பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். ஞானக்கடலான பாபா எங்களுக்குக் கற்பிக்கின்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.

2. சதோபிரதான் ஆக வேண்டுமாயின், ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த ஞானக் கடலை கடைந்து, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய தூய, ஆக்கபூர்வமான எண்ணங்கள் மூலம் இந்த ஞானக் கடலில் அமிழ்ந்திருப்பதால், அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்களாக.

கடலில் வாழ்கின்ற உயிரினங்கள் அந்தக் கடலிலேயே இருப்பதுடன், அதிலிருந்து வெளியேறவும் விரும்புவதில்லை. மீன் நீரிலேயே வசிக்கின்றது; கடலும், அதன் நீருமே மீனின் உலகமாக இருக்கின்றது. அதேபோல், குழந்தைகளாகிய நீங்களும் ஞானக் கடலாகிய தந்தையில் உங்கள் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்கள் மூலம் சதா அமிழ்ந்திருக்கின்றீர்கள் (இணைந்திருக்கின்றீர்கள்). கடலானவரில் நீங்கள் இணைந்திருப்பதை அனுபவம் செய்கின்ற வரையில், உங்களால் அதீந்திரிய சுகம் எனும் ஊஞ்சலில் ஊஞ்சலாடவோ அல்லது சதா முகமலர்ச்சியுடன் இருக்கவோ இயலாதிருக்கும். இதற்கு, ஏகாந்தத்தில் அமர்ந்து, அதாவது, அகநோக்குடையவராக இருந்து, ஏனைய கவர்ச்சிகள் அனைத்தினதும் அதிர்வலைகளை அறியாதிருங்கள்.

சுலோகம்:
தந்தையாகிய புள்ளியானவர் புலப்படும் வகையில், உங்கள் முகத்தை அத்தகையதொரு நடமாடும் அருங்காட்சியகம் ஆக்குங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

உங்கள் சரீரப் பந்தனங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கு, உங்களை ஓர் அவதாரமாகக் கருதுங்கள். நீங்கள் ஓர் அவதாரமாக இருக்கின்ற விழிப்புணர்வு மூலம் உங்கள் சரீரத்தின் ஆதாரத்தை எடுத்த பின்னர் செயல்களைப் புரியுங்கள். எதனையாவது செய்வதன் விழிப்புணர்விலிருந்து விடுபட்டு, செயல்களைச் செய்யுங்கள். “நான் அதனைச் செய்தேன்” அல்லது “நான் அதனைச் செய்கின்றேன்” என்ற எண்ணத்தை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் நீங்கள் எந்தக் கர்ம பந்தனத்திலும் கட்டப்பட மாட்டீர்கள். சரீரத்தில் இருக்கும்போதே, நீங்கள் சரீரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.