12.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, முதலில் பக்தியை ஆரம்பித்தவரின் இரதத்திலேயே தந்தை பிரவேசிக்கின்றார். முதன்மையான, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்தவரே முதலாம் இலக்க பூஜிப்பவராகினார். இந்த இரகசியத்தை அனைவருக்கும் தெளிவாக விளங்கப்படுத்துங்கள்.

பாடல்:
தந்தை தனது வாரிசுகளுக்கு என்ன ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்திருக்கின்றார்?

பதில்:
தந்தை அமைதிக்கடலும், சந்தோஷக்கடலும், அன்புக்கடலும் ஆவார். அவர் இப்பொக்கிஷங்களை உங்களுக்கு உயிலாகக் கொடுக்கின்றார். நீங்கள் தொடர்ந்து 21 பிறவிகளுக்கு அவையனைத்தையும் பயன்படுத்தினாலும்கூட அவை முடிவடைந்துவிடாத அளவிற்கு அவற்றை அவர் உங்களுக்கு உயிலாகக் கொடுக்கின்றார். அவர் உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாற்றுகின்றார். நீங்கள் தந்தையின் பொக்கிஷங்கள் அனைத்தையும் யோக சக்தி மூலமாகப் பெற்றுக்கொள்கின்றீர்கள். யோகம் செய்யாது உங்களால் இப்பொக்கிஷங்களைப் பெறமுடியாது.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். அசரீரியான கடவுள் சிவனை அனைவரும் நம்புகின்றனர். ஒரேயொரு அசரீரியான சிவனையே அனைவரும் வழிபடுகின்றனர். சரீரதாரிகள் அனைவரும் ஒரு பௌதீக உருவத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆத்மாக்கள் முதலில் அசரீரியாக இருந்து, பின்னர் சரீரதாரிகள் ஆகுகின்றனர். அவர்கள் ஒரு சரீரத்தில் பிரவேசிப்பதன் மூலம் சரீரதாரிகளாகும்போது அவர்களது பாகம் நடிக்கப்படுகின்றது. அசரீரி உலகில் எப்பாகமும் கிடையாது. நடிகர்கள் தங்களது வீட்டிலுள்ளபோது எப்பாகத்தையும் நடிக்கவேண்டியதில்லை, அவர்கள் மேடையிலுள்ளபோதே தங்களது பாகங்களை நடிக்கின்றார்கள். அதுபோன்றே, ஆத்மாக்களும் இங்கு வந்தே ஒரு சரீரத்தின் மூலமாகத் தங்களது பாகங்களை நடிக்கின்றார்கள். அவை அனைத்தும் ஒவ்வொருவரின் பாகத்திலேயே தங்கியுள்ளது. ஆத்மாக்களில் எந்த வித்தியாசமும் கிடையாது. குழந்தைகளாகிய உங்களின் ஆத்மாக்களைப் போன்றே அவரது(சிவபாபா) ஆத்மாவும் உள்ளது. பரமாத்மாவாகிய தந்தை என்ன செய்கின்றார்? அவரது தொழிலை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒருவர் ஜனாதிபதியாக அல்லது அரசராக இருப்பாராயின், அதுவே அவ்வாத்மாவின் தொழிலாகும். தேவர்கள் தூய்மையாக இருப்பதனாலேயே வழிபாடு செய்யப்படுகின்றார்கள். இக்கல்வி மூலமாகவே இலக்ஷ்மியும், நாராயணனும் உலகின் அதிபதிகளாகினார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? பரமாத்மா. ஆத்மாக்களாகிய நீங்களும் கற்பிக்கின்றீர்கள். தந்தையே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கல்வி புகட்டி, இராஜயோகத்தையும் கற்பிக்கின்றார். அது மிக இலகுவானது. இது இராஜயோகம் எனப்படுகின்றது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நாங்கள் சதோபிரதானாகின்றோம். தந்தை சதோபிரதானானவர். மக்கள் பெருமளவில் அவரது புகழைப் பாடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் மக்கள் அவருக்கு அதிகளவு பால், பழம் போன்றவற்றைப் படைக்கின்றனர். எனினும், அவர்கள் எதனையுமே புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தேவர்களை வழிபடுவதுடன், சிவனுக்குப் பால், பழம் போன்றவற்றைப் படைக்கின்றனர். எனினும், அவர்களுக்கு எதுவுமே தெரியாது. தேவர்களே இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள். எனவே, மக்கள் இவற்றை ஏன் சிவனுக்குப் படைக்கின்றார்கள்? மக்கள் அவரை அதிகளவில் வழிபடத்தக்கதாக அவர் எச்செயல்களைச் செய்தார்? தேவர்கள் உலகின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மக்கள் சிவனை வழிபடுகின்றார்கள். ஆனால் அவரே கடவுள் என்பது அவர்களுக்குத் தெரியாது. கடவுளே அவர்களை (தேவர்கள்) அவ்வாறு ஆக்கினார். அவர்கள் அதிகளவு பக்தி செய்கின்றார்கள். எனினும், அவர்கள் அனைவரும் அறியாமையிலேயே உள்ளனர். நீங்கள் சிவ வழிபாடு செய்திருப்பீர்கள். இப்பொழுது அவை அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். எனினும், முன்னர் நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. அவரது தொழில் என்ன என்பதனையோ அல்லது அவர் எத்தகைய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதனையோ நீங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தத் தேவர்கள் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றனரா? அரசனும், அரசியும் தங்களது பிரஜைகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், சிவபாபாவே அவர்களை அவ்வாறு ஆக்கினார். அது அவருடைய மகத்துவமேயாகும். அம்மக்கள் ஓர் இராச்சியத்தை ஆட்சி செய்கின்றனர், பிரஜைகளும் உருவாக்கப்படுகின்றனர். எனினும், எவருக்கும் அவர்கள்; நன்மை செய்வதில்லை. அவர்கள் எவருக்காவது நன்மை செய்தாலும், அது தற்காலிகமானதேயாகும். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உபகாரி (நன்மை பயப்பவர்) என அழைக்கப்படுகின்றார். தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: நீங்கள் என்னை ஓர் இலிங்கமாக வழிபட்டீர்கள். நீங்கள் அவரை பரமாத்மா என அழைத்தீர்கள். பின்னர் அது பரமாத்மா (கடவுள்) ஆகிவிட்டது. எவ்வாறாயினும், அவர் என்ன செய்கின்றார் என்பதை மக்கள் அறிவதில்லை. அவரைச் சர்வவியாபி அல்லது அவர் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என வெறுமனே அவர்கள் கூறுகின்றனர். அவ்வகையில் பார்த்தால், அவருக்குப் பால் போன்றவற்றைப் படைப்பது சரியானதாகப் படவில்லை. அவருக்கு ஓர் உருவம் இருப்பதனாலேயே மக்கள் இவற்றை அவருக்குப் படைக்கின்றனர். அவரை உருவமற்றவர் என அழைக்கமுடியாது. மக்கள் அதிகளவில் உங்களுடன் விவாதிக்கின்றார்கள். அவர்கள் பாபாபிடம் வந்து, அவருடன்கூட விவாதிக்கின்றார்கள். அவர்கள் அவசியமின்றித் தங்களது தலைகளை மோதிக் கொள்கின்றார்களாயினும், அதில் எந்த நன்மையுமே கிடையாது. இதனை விளங்கப்படுத்துவது குழந்தைகளாகிய உங்களது கடமையாகும். பாபா உங்களை எந்தளவிற்கு மேன்மையானவர்களாக ஆக்கியிருக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது ஒரு கல்வியாகும். தந்தை உங்களது ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக ஆகுவதற்காகக் கற்கின்றீர்கள். தேவர்கள் சத்தியயுகத்திலேயே உள்ளனர், அவர்கள் கலியுகத்தில் இருப்பதில்லை. அவர்கள் தூய்மையாகவே இருப்பதற்கு, இங்கு இராம இராச்சியம் இல்லை. தேவர்களாக முன்னர் இருந்தனர். அவர்கள் பின்னர் பாவப்பாதையில் சென்றுவிட்டனர். எவ்வாறாயினும், அவர்கள் அவ்வுருவங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பது போன்றவர்களல்லர். நீங்கள் ஜெகந்நாதர் ஆலயத்திலுள்ள உருவங்களைப் பார்ப்பீர்களாயின், அவை எத்தகைய அவலட்சணமான உருவங்கள் என்பதைக் காண்பீர்கள். தந்தை கூறுகின்றார்: மாயையை வென்று, உலகை வென்றவர்களாகுங்கள். எனவே, அவர்கள் பின்னர் அவ்வாலயத்திற்கு ஜெகந்நாதர் (உலகின் பிரபு) எனப் பெயரிட்டனர். மேலே சுற்றிலும் அவர்கள் அவலட்சணமான உருவங்களைக் காண்பித்திருக்கின்றார்கள். தேவர்கள் பாவப் பாதையில் சென்றதும், அவலட்சணமாகினார்கள். மக்கள் தொடர்ந்தும் அவர்களையும் வழிபடுகின்றனர். அவர்கள் எப்போது பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது பற்றி எதனையுமே மக்கள் அறியமாட்டார்கள். 84 பிறவிகளின் கணக்கு எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. முதலில், நீ;ங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக, சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளை எடுக்கும்போது, தமோபிரதானாகவும், பூஜிப்பவர்களாகவும் ஆகினீர்கள். ரகுநாதர் ஆலயத்திலும் அவர்கள் கருங்கல்லினால் ஆன உருவங்களைக் காண்பிக்கின்றனர். எனினும், அதன் அர்த்தத்தையேனும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தை இப்பொழுது இங்கிருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஞானச் சிதையில் இருப்பதன் மூலம் அழகானவர்களாகவும், காமச் சிதையில் இருப்பதன் மூலம் அவலட்சணமானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். தேவர்கள் பாவப் பாதையில் சென்று, விகாரம் நிறைந்தவர்களாகினர். எனவே, அவர்களை அதன் பின்னர் தேவர்கள் என அழைக்க முடியாது. பாவப் பாதையில் சென்றதால், தேவர்கள் அவலட்சணமாகிவிட்டனர். அவர்கள் அவ்விதமாகச் சித்தரித்திருக்கின்றார்கள். சிவபாபா ஒருபோதும் அவலட்சணமானவராக ஆகுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வைரம் ஆவார். அவர் உங்களையும் வைரங்களைப் போன்று ஆக்குகின்றார். அவர் ஒருபோதும் அவலட்சணமாகுவதில்லை. எனவே, அவர்கள் ஏன் அவரை அவலட்சணமாகக் காண்பிக்கின்றனர்? அவலட்சணமான ஒருவரே அவரது அவலட்சணமான உருவத்தைச் செய்திருக்க வேண்டும். சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் என்னை அவலட்சணமாகக் காட்டுமளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்? நான் அனைவரையும் அழகானவர்களாக்குவதற்காகவே வருகின்றேன். நான் என்றும் அழகானவர். மனிதர்களின் புத்தி எதனையுமே புரிந்துகொள்ள இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. சிவபாபாவே அனைவரையும் வைரங்களாக்குகின்றார். நான் என்றென்றும் அழகான பயணியாவேன். நீங்கள் என்னை அவலட்சணமானவராகக் காட்டுமளவிற்கு நான் என்னதான் செய்தேன்? நீங்களும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்வதற்கு, இப்பொழுது அழகானவர்கள் ஆகவேண்டும். எவ்வாறு நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள்? தந்தை விளங்கப்படுத்தியிருக்கின்றார்: தந்தையைப் (பிரம்ம பாபா) பின்பற்றுவதன் மூலம் அதனைச் செய்யுங்கள். இவர் (பிரம்ம பாபா) அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்தார். தந்தை மிகவும் செல்வந்தராகவோ அல்லது மிகவும் ஏழையாகவோ இல்லாது சாதாரணமானவராக இருந்தும், எவ்வாறு அனைத்தையுமே கொடுத்தார் எனப் பாருங்கள். இப்போதும் பாபா கூறுகின்றார்: உங்களது உணவும் பானமும் நடுத்தரமானதாக இருக்க வேண்டும். அவை மிகவும் உயர்ந்ததாகவோ அல்லது மிகவும் எளிமையானதாகவோ இருக்கக்கூடாது. தந்தை உங்களுக்கு இக்கற்பித்தல்கள் அனைத்தையும் கொடுக்கின்றார். இவரும் பார்ப்பதற்குச் சாதாரணமானவராகவே உள்ளார். மக்கள் உங்களிடம் கூறுகின்றனர்: கடவுள் எங்கு இருக்கின்றார்? அவரை எனக்குக் காட்டுங்கள். ஆத்மா ஒரு புள்ளி வடிவானவர், அவரை எவ்வாறு நீங்கள் பார்க்க முடியும்? அக்கண்களால் ஆத்மாவின் காட்சியைக் காண முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். எனவே, நிச்சயமாக ஒரு சரீரதாரியும் இருக்கவே வேண்டும். எவ்வாறு அசரீரியானவர் உங்களுக்குக் கற்பிக்க முடியும்? மக்கள் எதனையுமே அறியமாட்டார்கள். ஆத்மாவாகிய நீங்கள் ஒரு சரீரத்தின் மூலமாக உங்களது பாகத்தை நடிப்பதைப் போன்றே ஆத்மா சரீரத்தின் மூலமாகப் பேசுகின்றார். எனவே, ஆத்மாவினால் பேசப்பட்ட விடயங்கள் உள்ளனவாயினும், “ஆத்மாவின் வாசகங்கள்” எனக் கூறுவது பொருத்தமற்றது. ஆத்மா ஓய்வு ஸ்திதியில், சத்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலுள்ளார். அவர் சரீரத்தின் மூலமாகவே பேசுவார். ஆத்மா மாத்திரமே சத்தத்திற்கு அப்பால் வசிக்கின்றார். நீங்கள் சத்தத்திற்கு வருவதாயின், நிச்சயமாக உங்களுக்கு ஒரு சரீரம் தேவையாகும். தந்தை ஞானக்கடலுமாவார். எனவே, அவர் நிச்சயமாக ஒருவரது சரீரத்தின் ஆதாரத்தைப் பெற வேண்டும். இவர் இரதம் என அழைக்கப்படுகின்றார். வேறு எவ்வாறுதான் அவரால் உங்களுடன் பேச முடியும்? தந்தை உங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக்குவதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. இவை ஞான விடயங்களாகும். எவ்வாறு அவர் வரமுடியும்? யாருடைய சரீரத்தில் அவர் பிரவேசிக்கின்றார்? அவர்; நிச்சயமாக ஒரு மனித சரீரத்திலேயே பிரவேசிப்பார். எம்மனிதருடைய சரீரத்தில் அவர் பிரவேசிப்பார்? உங்களைத் தவிர வேறு எவருமே இதனை அறியமாட்டார்கள். படைப்பவர் தானே இங்கு அமர்ந்திருந்து தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார்: நான் எவ்வாறு வருகின்றேன், எச்சரீரத்தில் நான் பிரவேசிக்கின்றேன். தந்தையின் இரதம் எதுவென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் மிகவும் குழப்பத்திலுள்ளனர். அவர்கள் அவரது இரதத்தைப் பலவிதமாகக் காண்பிக்கின்றனர். அவரால் மிருகங்கள் போன்றவற்றில் பிரவேசிக்க முடியாது. எம்மனிதரினுள் நான் பிரவேசிக்க வேண்டும் என்பதை மக்களால் புரிந்துகொள்ளமுடியாது. நான் பாரதத்திற்கே வரவேண்டும். எந்தப் பாரதவாசியின் சரீரத்தில் நான் பிரவேசிப்பேன்? அவர் ஜனாதிபதி, புனிதர் அல்லது ஒரு மகாத்மாவின் சரீரத்தில் பிரவேசிப்பாரா? அவர் ஒரு தூய சரீரத்திலேயே பிரவேசிப்பார் என்றில்லை. இது இராவண இராச்சியமாகும். “தூரதேச வாசி” என்பது நினைவுகூரப்படுகின்றது. பாரதமானது ஒருபோதுமே அழிக்கப்படாத, அழிவற்ற பூமியென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அநாதியான தந்தை அழிவற்ற பூமியாகிய பாரத தேசத்திற்கு மாத்திரமே வருகின்றார். எச்சரீரத்தில் தான் பிரவேசிக்கின்றார் என்பதை அவர் தானே உங்களுக்குக் கூறுகின்றார். வேறு எவருமே இதனை அறியமாட்டார்கள். ஒரு புனிதரினதோ அல்லது ஒரு மகாத்மாவினதோ சரீரத்தில் அவர் பிரவேசிக்க முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் சந்நியாச மார்க்கத்தைச் சேர்ந்த ஹத்தயோகிகள். பின்னர் பாரதவாசிகளாக உள்ள பக்தர்களே எஞ்சியுள்ளனர். அந்தப் பக்தர்களிலும், எந்தப் பக்தரின் சரீரத்தில் அவர் பிரவேசிப்பார்? அது, பெருமளவு பக்தி செய்த, ஒரு பழைய பக்தராகவே இருக்க வேண்டும். பக்தியின் பலனைக் கொடுப்பதற்கு, கடவுள் வந்தாக வேண்டும். பாரதத்தில் பல பக்தர்கள் உள்ளனர். அவர்கள் கூறுவார்கள்: இவர் ஒரு மகாபக்தர், கடவுள் இவரிலேயே பிரவேசிக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் ஆகுகின்ற பலர் உள்ளனர். ஒருவருக்கு நாளைக்கு விருப்பமின்மை ஏற்படுமாயின், அவர் ஒரு பக்தராகிவிடுவார். எவ்வாறாயினும், அது அவரை இப்பிறவிக்கு மாத்திரமே பக்தராக்கும். கடவுள் அவரில் பிரவேசிக்கமாட்டார். முதலாவதாக பக்தியை ஆரம்பித்தவரிலேயே நான் பிரவேசிக்கின்றேன். பக்தி துவாபரயுகத்திலேயே ஆரம்பித்தது. இக்கணக்கை எவராலுமே புரிந்துகொள்ள முடியாது. இவை அத்தகைய மறைமுகமான விடயங்களாகும். நான் முதலில் பக்தியை ஆரம்பித்தவரிலேயே பிரவேசிக்கின்றேன். முதலாம் இலக்க பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாவே பின்னர் முதலாம் இலக்க பூஜிப்பவராகவும் ஆகுகின்றார். அவரே கூறுகின்றார்: இந்த இரதம் முதலாம் இலக்கத்தைக் கோருகின்றது. பின்னர் அவர் 84 பிறவிகளை எடுக்கின்றார். இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் இறுதிக் காலத்திலேயே நான் இவரில் பிரவேசிக்கின்றேன். அவரே பின்னர் முதலாம் இலக்க அரசராக வேண்டும். இவர் பெருமளவு பக்தி செய்துவந்தார். பக்தியின் பலனை அவர் பெற்றாக வேண்டும். இவர் எவ்வாறு தன்னிடம் அர்ப்பணமாகினார் என்பதைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் காண்பிக்கின்றார். அவர் அனைத்தையும் என்னிடம் கொடுத்தார். குழந்தைகள் பலருக்குக் கற்பிப்பதற்குச் செல்வமும் தேவையாகும். கடவுளின் யாகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் இவரினுள் இருந்து, உருத்திரனின் யாகத்தை உருவாக்குகின்றார். இது ஒரு கல்வி என்றும் அழைக்கப்படுகின்றது. ஞானக்கடலான உருத்திர சிவபாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்காக, இந்த யாகத்தை உருவாக்கியுள்ளார். வார்த்தைகள் முற்றிலும் சரியானவை. இது சுய இராச்சியத்தை அடைவதற்கான யாகமாகும். இது ஏன் ஒரு யாகம் என அழைக்கப்படுகின்றது? அம்மக்கள் யாகத்தினுள் பல பொருட்களை இடுவார்கள். நீங்கள் கற்கின்றீர்கள், எனவே இந்த யாகத்தில் நீங்கள் எவற்றை அர்ப்பணிக்கப்போகின்றீhகள்? நீங்கள் கற்றுத் திறமைசாலிகளாகுவீhகள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர், இந்த முழு உலகமும் இதில் அர்ப்பணிக்கப்படும். ஒரு யாகம் வளர்க்கும்போது, இறுதியில், சகல யாகப் பொருட்களையும் அவர்கள் தீயிலிடுவார்கள். தந்தை இப்போது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை மிகவும் சாதாரணமானவர். மனிதர்களுக்கு என்ன தெரியும்? அந்த மகான்கள் பெருமளவிற்குப் புகழப்படுகின்றார்கள். தந்தை இங்கு மிகவும் சாதாரணமாகவும் எளிமையான முறையிலும் அமர்ந்திருக்கின்றார். இந்த தாதா ஒரு இரத்தின வியாபாரியாக இருந்தவர் என்பதை மனிதர்கள் எவ்வாறு அறிந்திருக்க முடியும்? எந்த சக்தியும் புலப்படுவதில்லை. இவரில் ஏதோ சக்தியுள்ளது என அவர்கள் கூறுகின்றார்கள், அவ்வளவே. சர்வசக்திவானாகிய தந்தை இவரினுள் இருக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இவர் ஏதோ சக்தியைக் கொண்டிருக்கின்றார், ஆனால் அச்சக்தி எங்கிருந்து வந்தது? தந்தை அவரினுள் பிரவேசித்தார். அவர் (சிவபாபா) தன்னுடைய எந்தப் பொக்கிஷத்தையும் அப்படியே தூக்கிக் கொடுத்துவிட மாட்டார். நீங்கள் யோக சக்தியின் மூலமே அவரிடமிருந்து அவற்றைப் பெறுகின்றீர்கள். அவர் எவ்வாறாயினும் சர்வசக்திவான் ஆவார். அவருடைய சக்தி வேறெங்கும் செல்வதில்லை. பரமாத்மா ஏன் சர்வசக்திவானாக நினைவுகூரப்படுகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. தந்தை வந்து, உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் யாரில் பிரவேசிக்கின்றேனோ அவரை முழுமையாகத் துரு மூடியிருந்தது. நான் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில், பழைய பூமியில் ஒரு வயதான சரீரத்தில் வருகின்றேன். ஆத்மாவில் உள்ள துருவை எவராலும் அகற்ற முடியாது. என்றென்றும் தூய்மையாக இருக்கும் சற்குருவினால் மாத்திரமே துருவை அகற்ற முடியும். நீங்கள் இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் பதியச் செய்வதற்கு உங்களுக்குக் காலம் தேவைப்படுகிறது. தந்தை அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு உயிலாகக் கொடுக்கின்றார். தந்தை ஞானக் கடலும் அமைதிக் கடலும் ஆவார், அவர் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு உயிலாகக் கொடுக்கின்றார். அவர் பழைய உலகிற்கு வருகின்றார். வைரத்தைப் போன்றிருந்து பின்னர் சிப்பியைப் போலாகிவிட்ட ஒருவரினுள் அவர் பிரவேசிக்கின்றார். இந்நேரத்தில் மக்கள்; கோடீஸ்வரர்களாக இருந்தாலும், அவை தற்காலிகமானதே ஆகும். அனைத்தும் அழிக்கப்படவுள்ளது. நீங்கள் ரூபாய் பெறுமதியானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்களும் இப்போது மாணவர்களே. இவரும் தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் ஒரு மாணவராகவே உள்ளார். அவரைத் துரு மூடியுள்ளது. மிக நன்றாகக் கற்பவர்களையும் துரு மூடியுள்ளது. அவர்களே மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகுகின்றவர்களும், பின்னர் அவர்களே மிகவும் தூய்மையானவர்களாக ஆகவேண்டியவர்களுமாவர். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. தந்தை உண்மை அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை சத்தியமானவர். அவர் பொய்யான எதையும் ஒருபோதும் உங்களுக்குக் கூறமாட்டார். எந்த மனிதராலும் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்களின்றி மக்களால் எவ்வாறு எதனையும் அறிந்துகொள்ள முடியும்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு, தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள். அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணித்துவிட்டு, அதனை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகப் பராமரியுங்கள். உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். உங்கள் உணவு, பானம், வாழ்க்கைமுறை போன்றன, மிகவும் உயர்ந்ததாகவோ அல்லது மிகவும் தாழ்ந்ததாகவோ அன்றி நடுத்தரமான சாதாரண முறையிலானதாக இருக்க வேண்டும்.

2. தந்தை உங்களுக்கு உயிலாக அளித்த சந்தோஷம், அமைதி, ஞானம் ஆகிய பொக்கிஷங்களை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்து, உபகாரியாகுங்கள்.

ஆசீர்வாதம்:
தூய்மையின் ஆழத்தை அறிந்திருப்பதன் மூலம் மகாத்மாக்கள் ஆகுவதால், அமைதியினாலும் சந்தோஷத்தினாலும் நிறைந்திருப்பீர்களாக.

தூய்மையின் ஆழத்தை அறிந்தவராகி, தூய்மை ஆகுங்கள், அதாவது, இப்பொழுது வழிபாட்டுக்கு தகுதியான தேவ ஆத்மாக்கள் ஆகுங்கள். இறுதியாக நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் நீண்டகாலத்தில் சேமிக்கின்ற சக்தியே இறுதி நேரத்தில் உங்களுக்கு உதவுகின்றது. தூய்மையாகுவது என்றால் சாதாரண விடயமல்ல. நீங்கள் பிரம்மச்சரியம் காத்து, தூய்மையாகி உள்ளீர்கள். ஆனால் தூய்மையே தாயாகும். ஆகையால், உங்கள் எண்ணங்களால், மனோபாவத்தால், சூழலால், வார்த்தைகள் மற்றும் தொடர்புகளால் அமைதியினதும் சந்தோஷத்தினதும் தாய் ஆகுவதே மகாத்மாவாக இருப்பது எனப்படுகின்றது.

சுலோகம்:
மேன்மையானதொரு ஸ்திதியில் நிலைத்திருந்து, ஆத்மாக்கள் அனைவருக்கும், கருணையின் திருஷ்டியை கொடுத்து அந்த அதிர்வுகளை பரவச் செய்யுங்கள்.