14.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இன்பமும் துன்பமும் உள்ள இந்த நாடகத்தைப் பற்றி நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அரைக்கல்பத்திற்கு இன்பமும், மற்றைய அரைக்கல்பத்திற்குத் துன்பமும் உள்ளன. தந்தை உங்கள் துன்பத்தை அகற்றி, உங்களுக்கு சந்தோஷத்தை அருள்வதற்கே வருகின்றார்.

கேள்வி:
சில குழந்தைகள் தங்கள் இதயத்தை மகிழ்விப்பதற்காக எவ்வாறு தங்கள் புகழைத் தாங்களே பாடுகின்றார்கள்?

பதில்:
சிலர் தாங்கள் சம்பூரணமடைந்து விட்டதாகவும், தாங்கள்; முற்றிலும் தயாராக இருப்பதாகவும் நினைக்கின்றார்கள். இவ்வாறு நினைப்பதன் மூலம் அவர்கள் தங்கள் இதயத்தை மகிழ்வித்துக் கொள்கின்றார்கள். இதுவே ‘தங்கள் புகழைத் தாங்களே பாடுதல்’ (தங்களை மிகவும் கெட்டிக்காரர்கள் எனக்கருதுதல்) என்று அழைக்கப்படுகின்றது. பாபா கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, இன்னமும் அதிகளவு முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் தூய்மையாகும் போது, ஒரு தூய உலகமும் தேவைப்படும். அந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தனியாக எவருமே வீடு திரும்ப முடியாது.

பாடல்:
நீங்களே தாயும் தந்தையும் ஆவீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சொந்த அறிமுகத்தைப் பெற்றுவிட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள். அனைவரும் மனிதர்களே. ஒருவர் சிறியவரோ அல்லது பெரியவரோ, ஒரு ஜனாதிபதியோ, ஓர் அரசரோ அல்லது அரசியோ யாராக இருந்தாலும் அனைவரும் மனிதர்களே. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொருவரும் ஓர் ஆத்மாவே. நான், ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவேன். இதனாலேயே நான் பரமாத்மாவான, பரமதந்தை அதாவது பரமன் என்று அழைக்கப்படுகின்றேன். அவரே ஆத்மாக்களாகிய உங்கள் தந்தை என்பதும் நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதும் பின்னர் பிரம்மாவின் மூலம், சகோதர சகோதரிகளாகிய நீங்கள், உயர்ந்த தாழ்ந்த குலங்களுக்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் அனைவரும் ஆத்மாக்களே. நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துள்ளீர்கள். மக்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து உங்கள் அனைவருக்கும் இதனை விளங்கப்படுத்துகின்றார். வேறு எவரும் தந்தையை அறிய மாட்டார்கள். மக்கள் பாடுகின்றார்கள்:‘ஓ கடவுளே!’ ‘ஓ தாயே, தந்தையே!’. ஏனெனில், ஒருவரே அதிமேலானவராக இருக்க வேண்டும். அவர் அனைவரதும் தந்தையாவார். அந்த ஒரேயொருவரே அனைவருக்கும் சந்தோஷத்தை வழங்குபவர். உங்களுக்கு இன்பமும் துன்பமுமான இந்த நாடகத்தைப் பற்றித் தெரியும். ஒரு கணம் சந்தோஷமும் மறுகணம் துன்பமும் உள்ளது என்பதை மக்கள் நம்புகின்றார்கள். அரைக்கல்பத்திற்கு சந்தோஷமும் மற்றைய அரைக் கல்பத்திற்குத் துன்பமும் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஆகிய ஸ்திதிகள் உள்ளன. ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் மௌன தாமத்தில் வாழ்கின்றோம். அங்கே, ஆத்மாக்கள் அனைவரும் நிஜத் தங்கம் ஆவார்கள். அங்கே, எவரிடத்திலும் எந்தக் கலப்படமும் இருக்க மாட்டாது. ஒவ்வோர் ஆத்மாவிலும், அவரவரின் பாகம் பதிவு செய்யப்பட்டிருப்பினும், அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாகவே இருக்கின்றார்கள். தூய்மையற்ற எந்த ஆத்மாவும் அங்கே இருக்க முடியாது. இந்த நேரத்தில், எந்தத் தூய ஆத்மாவும் இங்கிருக்க முடியாது. பிராமண குலத்தின் அலங்காரங்களான, நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். உங்களை முற்றிலும் விகாரமற்றவர்கள் என்று அழைக்க முடியாது. ஞானக்கடலின் வாயிலிருந்து வரும் விடயங்ளை நீங்கள் மாத்திரமே செவிமடுக்கின்றீர்கள். ஞானக் கடல் ஒரேயொரு தடவையே வருகின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். மக்கள் மறுபிறவியின் ஊடாக மீண்டும் வருகின்றார்கள். சிலர் இந்த ஞானத்தைச் செவிமடுத்த பின்னர், சரீரத்தை விட்டு நீங்கிச் செல்லும் போது, அவர்கள் அந்தச் சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றார்கள். அவர்கள் மீண்டும் இங்கு திரும்பி வந்து அதனைச் செவிமடுக்க ஆரம்பிப்பார்கள். அதே ஆத்மாக்கள் என்பதால், அவர்கள் ஏழு அல்லது எட்டு வயதாக இருக்கும் போதே, மிக நல்ல புரிந்துணர்வைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுப்பதில் சந்தோஷப்படுகின்றார்கள். அந்த ஆத்மாக்கள் தாங்கள் தந்தையின் ஞானத்தை மீண்டும் செவிமடுக்கின்றோம் என்று புரிந்து கொள்கின்றார்கள். அவர்களுக்குள் அந்தச் சந்தோஷம் இருக்கிறது. அவர்களும் திறமைசாலிகளாகி ஏனையோருக்குக் கற்பிக்க ஆரம்பிக்கின்றார்கள். அதே போன்று படைவீரர்களும் தங்களுடன் தங்களின் சம்ஸ்காரங்களை எடுத்துச் சென்று, குழந்தைப் பருவத்திலிருந்தே சந்தோஷமாகத் தங்கள் சேவையைச் செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்கு அதிபதிகள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் புதிய உலகின் அல்லது மௌனதாமத்தின் அதிபதிகளாக ஆக முடியும். மௌன தாமமே உங்கள் இல்லமாகும். அங்கிருந்தே உங்கள் பாகங்களை நடிப்பதற்காக, நீங்கள் இங்கே வந்தீர்கள். எவருக்குமே இது தெரியாது, ஏனெனில் ஆத்மாக்களைப் பற்றி எவருமே அறிந்திருக்கவில்லை. நீங்கள் அசரீரி உலகில் இருந்து இங்கு வந்தீர்கள் என்பதும், நீங்கள் ஒளிப்புள்ளிகள் என்பதையும் நீங்களும் அறியவில்லை. நெற்றியின் நடுவில் அற்புதமான நட்சத்திரம் பிரகாசிக்கின்றது என்று சந்நியாசிகள் கூறிய போதும், ஆத்மாவின் வடிவம் பெரியது என்றே அவர்களின் புத்தி நம்புகின்றது. ஆத்மாக்கள் மிகப்பெரியதொரு வடிவத்தை உடையவர்கள் என்றே அவர்கள் சாலிகிராம்களைப் பற்றிப் பேசும்போது கருதுகிறார்கள். ஓர் ஆத்மா ஒரு சாலிகிராம் ஆவார். ஒரு யாகம் வளர்க்கும்போது, அவர்கள் பெரிய சாலிகிராம்களை உருவாக்குகின்றார்கள். அவர்கள் வழிபடும் போது, தமது புத்தியில் மிகப்பெரியதொரு சாலிகிராமையே வைத்திருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவை யாவும் அறியாமையே. நான் மட்டுமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். இந்த உலகில் என்னைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஆத்மா ஒரு புள்ளி என்றும், பரமாத்மாவும் ஒரு புள்ளியே என்றும் எவரும் விளங்கப்படுத்துவது கிடையாது. கடவுள் பிரம்ம தத்துவமான அநாதியான ஒளி வடிவமென்று அவர்கள் கூறுகின்றார்கள். பிரம்ம தத்துவத்தை அவர்கள் கடவுள் எனக் கருதுகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களையும் கடவுள் என்றே அழைக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு பாகத்தை நடிப்பதற்கு சிறிய ஆத்மாவின் வடிவை ஏற்கின்றார்கள் என்றும், தாம் பின்னர் பேரொளியில் இரண்டறக் கலந்து விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். அதில் இரண்டறக் கலந்த பின்னர் என்ன நிகழும்? அவர்களின் பாகங்களும் முடிந்துவிடும். எனவே அது முற்றிலும் தவறானது. தந்தை இப்பொழுது ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை வழங்குவதற்காக வந்துள்ளார். அரைக் கல்பமாக நீங்கள் ஏணியில் கீழிறங்கி வந்த பின்னர் நீங்கள் பந்தன வாழ்க்கைக்குள் செல்கின்றீர்கள். அதன்பின்னர் தந்தை வந்து உங்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை வழங்குகிறார். இதனாலேயே அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். எனவே தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்யுங்கள். அவரை நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இல்லாவிடின் உங்களால் தூய்மையாக முடியாது. ஒரேயொரு தந்தையே அதிமேலானவர். பல குழந்தைகள் தாங்கள் முழுமை அடைந்து விட்டோம் என்றும், தாங்கள் முற்றிலும் தயாராக இருக்கின்றோம் என்றும் நினைக்கின்றார்கள். இவ்வாறாக நினைத்து அவர்கள் தங்கள் இதயத்தை மகிழ்வித்துக் கொள்கின்றார்கள். அது தங்கள் புகழைத் தாங்களே பாடுவதாகும். பாபா கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் இன்னமும் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையாகும் போது, உங்களுக்கு ஒரு தூய உலகம் தேவைப்படும். எவராலும் தனியாக வீடு திரும்ப முடியாது. ஒருவர் எவ்வளவு விரைவாகக் கர்மாதீத நிலையை அடைய நினைத்தாலும் அது இன்னமும் சாத்தியமில்லை. இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஒரு மாணவன் தனது கல்வியில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், பரீட்சைக்குரிய நேரம் வரும்போதே, பரீட்சையைச் செய்ய முடியும். அதற்கு முன்னர் அவரால் பரீட்சையைச் செய்ய முடியாது. இங்கும் அவ்வாறே. நேரம் வரும் பொழுது, உங்கள் கல்விக்கான பெறுபேறுகள் வெளியாகும். ஒருவரின் முயற்சிகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும், அவர் முற்றிலும் தயாராக உள்ளார் என்று அவரால் கூறமுடியாது. ஓர் ஆத்மாவேனும் 16 கலைகளும் நிறைந்தவராக இன்னமும் ஆக முடியாது. இன்னமும் அதிகளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் முழுமை அடைந்து விட்டீர்கள் என்று நினைத்து, உங்கள் இதயத்தை மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள். இல்லை. நீங்கள் இறுதியிலேயே முழுமையாகச் சம்பூர்ணம் அடைவீர்கள். உங்கள் சொந்தப் புகழைப் பாடாதீர்கள். முழுமையான இராச்சியம் இன்னமும் ஸ்தாபிக்கப்பட உள்ளது. ஆம், இன்னமும் சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. ஏவுகணைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலில் அவற்றைத் தயாரிப்பதற்கு அவர்களுக்குக் காலம் எடுத்தது. ஆனால் இப்பொழுது அவற்றைத் தயாரிக்கப் பயிற்சி பெற்றிருப்பதால், அவர்களால் அவற்றை மிக விரைவாகத் தயாரிக்க முடியும். அவை அனைத்துமே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசத்திற்காகத் தொடர்ந்தும் குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ‘ஏவுகணைகள்’ என்ற வார்த்தை கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரின் வயிற்றில் இருந்து இரும்பு வெளிப்பட்டு, இவ்வாறு இடம்பெற்றது என்று அந்தச் சமயநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கதைகள் அனைத்தும் பொய்யாகும்.தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: அவை ஏவுகணைகள் என்று அழைக்கப்படுகின்றன. நாங்கள் விநாசம் ஏற்படுவதற்கு முன்னராகவே தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக வேண்டும். நீங்கள் ஆதிசனாதன தேவதேவிதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள், அதாவது நீங்கள் நிஜத்தங்கமாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரதமும் சத்திய உலகம் என்று அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இப்பொழுது அது பொய்மையான உலகமாகி உள்ளது. தங்கத்திலும் உண்மையானதும், போலியானதும் உள்ளன. தந்தையின் புகழ் என்னவென்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள்: அவர் மனித உலகின் விதையும், சத்தியமானவரும், உயிருள்ளவரும் ஆவார். முன்னர் நீங்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தீர்கள். தந்தை உங்களை சகல தெய்வீகக் குணங்களினாலும் நிரப்புகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: அனைத்திற்கும் முதலில், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எனது பெயர் தூய்மையாக்குபவர் ஆகும். அவர்கள் ‘ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!’ எனப் பாடுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர் வரும் போது, என்ன செய்கின்றார்? இதனை எவரும் அறிய மாட்டார்கள். ஒரு சீதை மாத்திரம் இருக்க முடியாது. நீங்கள் அனைவருமே சீதைகள். உங்களை எல்லையற்றவராக ஆக்குவதற்காக தந்தை உங்களுக்கு எல்லையற்ற விடயங்களைக் கூறுகின்றார். உங்கள் எல்லையற்ற புத்தியினால், நீங்கள் ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் நீங்கள் அனைவரும் சீதைகள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் இராவணனால் சிறை வைக்கப்பட்டு இருக்கின்றீர்கள். இராமர் (கடவுள்) வந்து, உங்கள் அனைவரையும் இராவணனின் சிறையில் இருந்து விடுவிக்கின்றார். இராவணன் ஒரு மனிதனல்ல. அனைவரிலும் ஐந்து விகாரங்கள் உள்ளன என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையாலேயே இந்த உலகம் இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பெயரோ விகாரமற்ற உலகம், ஆனால் இது விகாரம் நிறைந்த உலகமாகும். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இது விலைமாதர் இல்லம், ஆனால் அதுவோ சிவாலயமாகும். இலக்ஷ்மியும் நாராயணனுமே விகாரமற்ற உலகின் அதிபதிகள் ஆவார்கள். விகாரம் நிறைந்தவர்கள் அந்த விக்கிரங்களை வழிபடுகின்றார்கள். விகாரம் நிறைந்த அரசர்கள், விகாரமற்ற அரசர்களின் விக்கிரங்களை வழிபடுகின்றார்கள். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். மக்களுக்கு சக்கரத்தின் கால எல்லை என்ன என்பது தெரியாது. ஆகையால், இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகியது என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? அது அரை, அரைவாசியாக இருக்க வேண்டும். எப்பொழுது இராம இராச்சியம் ஆரம்பமாகின்றது என்றும், எப்பொழுது இராவண இராச்சியம் ஆரம்பமாகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்? இதனையிட்டு அவர்கள் முற்றிலும் குழப்பம் அடைந்துள்ளார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: 5000 வருடங்களுக்கான இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. உங்கள் 84 பிறவிகளை நீங்கள் நடித்த பின்னர் வீடு திரும்புகின்றீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இருப்பினும் நீங்கள் சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் மறுபிறவிகள் எடுக்கின்றீர்கள். அதுவே இராம இராச்சியமாகும். அதன் பின்னர் நீங்கள் இராவண இராச்சியத்திற்குச் செல்கின்றீர்கள். இந்த நாடகம் வெற்றியும் தோல்வியும் பற்றியது. நீங்கள் வெற்றியீட்டி சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அதன் பின்னர் நீங்கள் தோற்கடிக்கப்பட்டு நரகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சுவர்க்கம் நரகத்திலிருந்து வேறுபட்டது. ஒருவர் மரணிக்கும் போது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது அவ்வாறு கூறுவதில்லை, ஏனெனில் சுவர்க்கம் எப்பொழுது இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இன்னார் ஒளியுடன் கலந்து விட்டார் என்றும் அல்லது அவர் நிர்வாணா சென்று விட்டார் என்றும் கூறுகின்றார்கள். எவருமே ஒளியுடன் கலக்க முடியாது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஒரேயொருவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்று நினைவு கூரப்படுகின்றார். சத்தியயுகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது நரகம். இது பாரதத்திற்கு மாத்திரமே உரிய விடயம். மேலே சுவர்க்கம் என்று எதுவும் இல்லை. தில்வாலா ஆலயத்தில், சுவர்க்கம் மேலே கூரையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆகையாலேயே மக்கள் சுவர்க்கம் உண்மையில் மேலே உள்ளது என்று நம்புகின்றார்கள். மக்களால் எப்படிக் கூரையில் வாழ முடியும்? அவர்கள் முற்றிலும் விவேகமற்றவர்களாக உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் மிகவும் தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். இங்கேயே நீங்கள் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள் என்பதும், இங்கேயே நீங்கள் நரக வாசிகள் ஆகினீர்கள் என்பதும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது மீண்டும் சுவர்க்க வாசிகள் ஆக வேண்டும். இது மனிதர்களில் இருந்து நாராயணனாக மாறுவதைப் பற்றிய ஞானம் ஆகும். அவர்கள் சத்தியநாராயணன் கதையைக் கூறுகின்றார்கள். அவர்கள் இராமரும் சீதையும் ஆகுகின்ற கதையைப் பற்றிக் கூறுவதில்லை. அது மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதைப் பற்றிய கதையாகும். இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதே அதியுயர்ந்த அந்தஸ்தாகும். ஏனையவர்கள் இரண்டு கலைகள் குறைந்தவர்கள். உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எனவே, நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், நீங்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகுவீர்கள். பாரதமக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும் பொழுது, தங்கள் சொந்த தர்மத்தையே அவர்கள் மறந்து விடுகின்றார்கள். கிறிஸ்தவர்களும் சதோவிலிருந்து, தமோபிரதான் ஆகிய போதும் அவர்கள் இன்னமும் கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இப்பொழுது தங்களை இந்துக்கள் என்று அழைக்கின்றார்கள். தாம் ஆதியில் தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையுமே அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இது ஓர் அற்புதமே. யார் இந்து சமயத்தை ஸ்தாபித்தவர் என நீங்கள் கேட்டால், அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். அவர்கள் தேவர்களை வழிபடுகின்றார்கள். ஆகையால், அவர்கள் தேவ தர்மத்திற்கு உரியவர்களே. எவ்வாறாயினும் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. முதலில் சூரிய வம்சம் இருந்தது என்றும் பின்னர் ஏனைய சமயங்கள் வந்தன என்றும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தொடர்ந்தும் மறுபிறவிகள் எடுக்கின்றீர்கள். உங்களிற் சிலர் இதை மிகச் சரியாக அறிந்துள்ளீர்கள். பாடசாலையிலும், சில மாணவர்களின் புத்தியில் பாடங்கள் மிகவும் நன்றாகப் பதியும். ஆனால் ஏனையோருக்கு அவ்வாறு இல்லை. இங்கேயும், சித்தி அடையாதவர்கள் சத்திரியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஆகையால் அவர்கள் சந்திர வம்சத்தினர் ஆகுகின்றார்கள். அது இரண்டு கலைகள் குறைவானது. அவர்களால் சம்பூரணமடைய முடியாது. எல்லையற்ற வரலாறும், புவியியலும் உங்கள் புத்தியில் உள்ளன. மாணவர்கள் எல்லைக்குட்பட்ட வரலாற்றையும் புவியியலையும் பாடசாலைகளில் கற்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு அசரீரி உலகைப் பற்றியோ, சூட்சும உலகைப் பற்றியோ தெரியாது. சாதுக்கள், புனிதர்கள் போன்றோரது புத்தியிலும் இவை இல்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரி உலக வாசிகள் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொள்கின்றது. இது பௌதீக உலகம். முழு ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளது. இவர்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுகின்ற சேனை ஆவார்கள். இந்தச் சேனை தந்தையையும் சக்கரத்தையும் நினைவு செய்கின்றார்கள். உங்கள் புத்தியில் இந்த ஞானம் உள்ளது, ஆனால் உங்களிடம் ஆயுதங்கள் போன்ற எதுவும் இல்லை. இந்த ஞானத்தின் ஊடாக நீங்கள் உங்களைப் பற்றிய ஞானோதயத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை உங்களுக்குப் படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம் மத்தி, இறுதியின் ஞானத்தையும் கொடுக்கின்றார். தந்தையின் வழிகாட்டல்கள்: இப்பொழுது படைப்பவரை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் எந்தளவிற்கு சுயதரிசன சக்கரதாரிகள் ஆகி, பிறரும் அவ்வாறு ஆகுவதற்குத் தூண்டி, அதிகளவு சேவை செய்கின்றீர்களோ, அதற்கேற்ப நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இது ஒரு பொதுவான விடயமாகும். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டு இருப்பதால், நீங்கள் தந்தையை மறந்தீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரைத் தந்தை என்று அழைக்க முடியாது. நீங்கள் தந்தையிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் வரும் போதே எங்கள் மௌனதாமத்திற்கு எங்களால் திரும்பிச் செல்ல முடியும். முக்தியை அடைவதற்கு மக்கள் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: பரமாத்மாவே தூய்மையாக்குபவர். அப்படி இருக்கும்போது, நீங்கள் ஏன் கங்கையில் நீராடச் செல்கிறீர்கள்? அவர்கள் சென்று, கங்கைக் கரையில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கே மரணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். வங்காளத்தில் ஒருவர் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது, அங்குள்ளவர்கள் அவரை கங்கைக்கு எடுத்துச் சென்று ‘ஹரி’ (கடவுள்) என்ற நாமத்தை உச்சரிக்கின்றார்கள். அப்பொழுது அந்த ஆத்மாவிற்கு முக்தி கிடைக்கின்றது என்று அவர்கள் நம்புகின்றார்கள். அந்த ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கிய போதிலும், அவர் தூய்மை ஆகவில்லை. தந்தையால் மாத்திரமே ஆத்மாக்களைத் தூய்மையாக்க முடியும். ஆகையாலேயே மக்கள் அவரை மாத்திரமே அழைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை வந்து இந்தப் பழைய உலகைப் புதியதாக ஆக்குகின்றார். அவர் புதிய உலகைப் படைப்பதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் தெய்வீகக் குணங்களினால் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். பரீட்சைக்கு முன்னரே உங்களை முற்றிலும் தூய்மையானவர் ஆக்குவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். உங்கள் சொந்தப் புகழைப் பாடாதீர்கள்.

2. சுயதரிசன சக்கரதாரிகள் ஆகி, பிறரும் அவ்வாறு ஆகுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள். தந்தையையும் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கூறுகின்ற எல்லையற்ற விடயங்களை செவிமடுத்து உங்கள் புத்தியை எல்லையற்றதாக ஆக்குங்கள். அதனை எல்லைக்குட்பட்டதாக வைத்திருக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஆதி ஸ்திதியால் பாதகமான சூழ்நிலைகளை வெற்றி கொண்டு, ஒரு சங்கமயுக வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.

பாதகமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வதற்கான வழிமுறை, உங்களின் ஆதி ஸ்திதியை ஏற்றுக் கொள்வதாகும். அந்தச் சரீரமும் உங்களுடையது அல்ல, அது நீங்கள் இல்லை. உங்களின் ஆதி ஸ்திதியும் உங்களின் ஆதி தர்மமும் நீங்கள் சந்தோஷத்தைப் பெறச் செய்கின்றன. சடப்பொருளின் தர்மம் எதுவும், அதாவது, எந்தவொரு புற தர்மமும் அல்லது சரீரங்களின் விழிப்புணர்வும் ஏதாவதொரு வகையான துன்பத்தை நீங்கள் அனுபவிக்கச் செய்கின்றன. சதா தமது ஆதி ஸ்திதியைப் பேணுபவர்கள், சதா சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். துன்பத்தின் எந்தவொரு அலையும் அவர்களிடம் வரமுடியாது. அவர்கள் சங்கமயுக வெற்றி இரத்தினங்கள் ஆகுகிறார்கள்.

சுலோகம்:
மாற்றத்தின் சக்தியால் வீணான எண்ணங்களின் பலமான ஓட்டத்தை முடித்துவிடுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றியாளராக இருங்கள்.

மக்கள் சொல்கிறார்கள்: எங்கே நோக்கினாலும் நான் உன்னையே காண்கிறேன். நாங்கள் சொல்கிறோம்: நாங்கள் எதைச் செய்தாலும் எங்கே போனாலும் தந்தை எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார். அதாவது, நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். உங்களின் கடமை உங்களுக்கு இருப்பதைப் போல், அந்தக் கடமையைச் செய்யத் தூண்டுபவரும் சதா உங்களுடன் இருக்கிறார். கரன்ஹார் (செய்பவர்) கரவன்ஹார் (உங்களைச் செய்வதற்குத் தூண்டுபவர்) இருவரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.