14.09.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் வாழ்வுகளைக் காப்பாற்றும் வாழ்வின் பிரபுவான தந்தை, உங்கள் வாழ்வுகளைப் பாதுகாப்பதற்காக, குழந்தைகளாகிய உங்களுக்கு இனிய ஞான முரளியை இசைப்பதற்கு வந்துள்ளார்.

கேள்வி:
பாக்கியசாலிக் குழந்தைகளுக்கு மாத்திரம் உள்ள நம்பிக்கை என்ன?

பதில்:
எங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குகின்ற தந்தை வந்துள்ளார் என்ற நம்பிக்கையாகும். நாங்கள் எங்கள் பக்தியின் பலனைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றோம். மாயையினால் துண்டிக்கப்பட்ட இறக்கைகளை மீண்டும் எங்களுக்கு அளித்து, எங்களைத் தன்னுடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். பாக்கியசாலிக் குழந்தைகள் மாத்திரமே இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

பாடல்:
அதிகாலை வேளையில் வந்துள்ளவர் யார்?

ஓம் சாந்தி.
அதிகாலையில் வந்து முரளியை இசைப்பவர் யார்? உலகம் முழுமையான இருளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், வாழ்வின் பிரபுவுமான தந்தையிடம் இருந்து முரளியைச் செவிமடுக்கிறீர்கள். அவரே உங்கள் வாழ்வைக் காப்பாற்றுபவரான, கடவுள் ஆவார். மக்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே, இவ் வேதனையில் இருந்து என்னை விடுவியுங்கள்! அந்த மக்கள் எல்லைக்கு உட்பட்ட உதவியை வேண்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்களோ இப்பொழுது எல்லையற்ற உதவியைப் பெறுகிறீர்கள், ஏனெனில் அவரே எல்லையற்ற தந்தை. ஆத்மாக்கள் மறைமுகமானவர்கள் என்றும், தந்தையும் மறைமுகமானவர் என்றும் உங்களுக்குத் தெரியும். குழந்தைகளின் சரீரங்கள் தென்படுகின்றன, தந்தையின் சரீரமும் தென்படுகிறது. ஆத்மாக்கள் மறைமுகமானவர்கள், எனவே அவர்களின் தந்தையும் மறைமுகமானவர். உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காகத் தந்தை வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீமத் (மேன்மையான வழிகாட்டல்கள்) அவரிடமிருந்தே வருகின்றது. அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகிய, கீதை மிகவும் பிரபல்யமானது; அவர்கள் அதிலுள்ள பெயரை மாற்றி உள்ளார்கள். ஸ்ரீமத் என்பது கடவுளால் பேசப்பட்ட வாசகங்களே என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஒரேயொரு தந்தையே சீரழிந்தவர்களை மேன்மையானவர்களாக ஆக்குகிறார் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். அவரே சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றுபவர். சத்திய நாராயணனின் கதை உள்ளது. அமரத்துவக் கதை உங்களை அமரத்துவ தாமத்திற்கு அதிபதிகள் ஆக்குவதற்கானது எனக் கூறப்பட்டுள்ளது; அது மனிதர்களை நாராயணனாக மாற்றுகின்றது; அது அதே விடயமாகும். இது மரண பூமி ஆகும். பாரதமே அமரத்துவ தாமமாக இருந்தது என்பது எவருக்குமே தெரியாது. இங்கும் அமரத்துவமான பாபா பாரத மக்களாகிய உங்களுக்கு அனைத்தையும் கூறியுள்ளார். ஒரு பார்வதியோ அல்லது ஒரு திரௌபதியோ மாத்திரம் இருக்கவில்லை. பல குழந்தைகள் இதனைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரம்மா மூலம் சிவபாபா உங்களுடன் பேசுகிறார். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான ஆத்மாக்களாகிய உங்களுக்கு, நான் பிரம்மா மூலம் விளங்கப்படுத்துகிறேன். நீங்கள் நிச்சயமாக ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தையால் மாத்திரமே உங்களை இவ்வாறு ஆக்கமுடியும். உலகிலுள்ள எந்தவொரு மனிதரிடமும் ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. ஆத்மாக்களைப் பற்றிய ஞானம் அவர்களிடம் இல்லையாயின், பரமாத்மாவாகிய பரமதந்தை பற்றிய ஞானத்தை அவர்கள் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்று அவர்கள் கூறுகிறார்கள். அத்தகையதொரு பெரிய தவறினுள் முழு உலகமும் சிக்கியுள்ளது. இந்த வேளையில் மக்களின் புத்திகள் எவ்விதப் பயனும் அற்றிருக்கின்றது. அவர்கள் தங்களுடைய சொந்த விநாசத்திற்கே ஆயத்தங்களைச் செய்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இது புதியதல்ல. நாடகத்திற்கேற்ப, அவையே அவர்களின் பாகங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் நாடகத்தின் பந்தனங்களினால் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தற்காலத்தில் உலகில் பெருமளவு குழப்பம் நிலவுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் விநாச காலத்தில் அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தையிடம் அன்பான புத்தியைக் கொண்டிராதவர்கள் விநாசத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உலகம் இப்பொழுது மாற வேண்டும். மகாபாரத யுத்தம் முன்பும் இடம்பெற்றது என்பதும், தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் முழு உலகினதும் முழுமையான விநாசத்தைப் பற்றிப் பேசியுள்ளார்கள். எப்படியாயினும் முழுமையான விநாசம் இடம்பெற முடியாது; இல்லாவிடின், முழுமையான பிரளயம் ஏற்படும் - பஞ்ச தத்துவங்கள் தவிர்ந்த, எந்த மனிதருமோ அல்லது வேறு எதுவுமோ எஞ்சியிருக்க முடியாது. அது அசாத்தியம்! பிரளயம் இடம்பெறுமாயின், மனிதர்கள் எங்கிருந்து வருவார்கள்? ஸ்ரீகிருஷ்ணர் கடலில் அரசமிலையில் மிதந்து வருவதாக அவர்கள் காட்டுகின்றார்கள். ஒரு சிறு குழந்தை எவ்வாறு அப்படி வரமுடியும்? அவர்கள் இத்தகைய விடயங்களைச் சமயநூல்களில் எழுதியுள்ளார்கள், கேட்கவே வேண்டாம்! இப்பொழுது குமாரிகளாகிய உங்களால் பீஷ்ம பிதாமகர் போன்ற கல்விமான்கள் மீது இந்த ஞான அம்புகள் எய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் அவர்களும் இங்கு வருவார்கள். சேவை செய்வதில் நீங்கள் எவ்வளவிற்குச் சக்திவாய்ந்தவர்களாகி, தந்தையின் அறிமுகத்தைத் தொடர்ந்தும் கொடுக்கின்றீர்களோ, அந்தளவிற்குக் கூடுதலான தாக்கம் ஏற்படும். ஆம், தடைகளும் இருக்கும். இந்த யாகத்தில் அசுர சமுதாயத்தினரால் பல தடைகள் உருவாக்கப்பட்டதாகவும் நினைவு கூரப்படுகிறது. உங்களால் அவர்களுக்குக் கற்பிக்க முடியாது. தந்தை மட்டுமே இந்த ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். ஒரேயொரு தந்தையே சற்கதியை அருள்பவர். அவர் மாத்திரமே தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறார். எனவே அவர் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்களுக்கு மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுப்பார். அவர்கள் கூறுவதைப் போல், எப்பொழுதாவது தந்தை சர்வவியாபியாக இருக்க முடியுமா? தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பதன் மூலம் நாங்கள் தெய்வீகப் பிரபுக்கள் ஆகுகிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் எத்தனை ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள் எனப் பாருங்கள்! எவ்வாறாயினும் அவர்கள் யார் என்பதையோ, அவர்கள் முன்னர் இருந்த பொழுது என்ன செய்தார்கள் என்பதையோ இவர்கள் புரிந்து கொள்வதில்லை. தெய்வீகப் பிரபுவிற்கும் ஆலயம் ஒன்று உள்ளது. பாரதமே தெய்வீகப் பூமியாக இருந்தது. அங்கு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருந்தன. அது நேற்றைய விடயமாகும்! சத்தியயுகம் மாத்திரம் நூறாயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டது என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் தந்தை கூறுகிறார்: முழு நாடகமும் 5000 வருடங்களைக் கொண்டது. இதனாலேயே கூறப்படுகின்றது: இன்று பாரதம் எவ்வாறு உள்ளது எனவும், நேற்று அது எவ்வாறிருந்;தது எனவும் பாருங்கள்! எவராலும் நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் உள்ள எதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது. குழந்தைகளான நீங்கள் இப்பொழுது அனைத்தையும் நினைவு கூருகிறீர்கள். அது 5000 வருடங்களுக்குரிய விடயம் என்பது உங்களுக்குத் தெரியும். பாபா கூறுகின்றார்: யோகத்தில் அமருங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். இது ஞானம், அல்லவா? அவர்கள் ஹத்தயோகிகள்; ஒவ்வொருவரும் ஒரு காலுக்கு மேல் மற்றைய காலை வைத்து அமர்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள்! தாய்மார்களாகிய உங்களால் அதனைச் செய்ய முடியாது. அவர்கள் அமர்வது போன்று உங்களால் அமர முடியாது. பக்தி மார்க்கத்தில் பல்வேறு உருவங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, அவ்வாறு எதனையும் நீங்கள் செய்யத் தேவையில்லை. ஒரு பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்கின்றார்கள். தந்தை உங்களை அந்தளவு கூட செய்யும்படி கூறவில்லை. நீங்கள் விரும்பியபடி அமர்ந்திருக்கலாம். அமர்ந்திருப்பதில் நீங்கள் களைப்படைந்தால், அப்பொழுது படுத்திருங்கள்! பாபா நீங்கள் செய்யும் எதனையும் தடுப்பதில்லை. இந்த விடயங்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானவை. இதில் எவ்விதச் சிரமமும் இல்லை. நீங்கள் சுகவீனமுற்றிருந்தாலும், இதனைச் செவிமடுத்துக் கொண்டு சிவபாபாவின் நினைவில் இருந்தவாறு உங்கள் சரீரத்தை விட்டு நீங்க முடியும். உங்கள் சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, கங்கா ஜலம் உங்கள் உதடுகளில் இருக்க வேண்டும் என்றும், நீங்கள் கங்கைக் கரையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. உண்மையில், இந்த ஞான அமிர்தம் என்பதே அதன் அர்த்தமாகும். உண்மையில் ஆத்மா இவ்வாறே சரீரத்தை விட்டு நீங்கப் போகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளான நீங்கள் இங்கு கீழே வரும்பொழுது, என்னை நீங்கி விட்டே வருகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வேன். குழந்தைகளாகிய உங்களை நான் என்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு மாத்திரமே வந்துள்ளேன். ஆத்மாக்களாகிய உங்களுக்கு உங்கள் வீட்டைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ தெரியாது. மாயை உங்கள் இறக்கைகளை முழுமையாகத் துண்டித்து விட்டாள். ஆத்மாக்கள் தமோபிரதானாக உள்ளதால், அவர்களால் பறக்க முடியாதுள்ளது. சதோபிரதான் ஆகாமல் அவர்களால் எவ்வாறு அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்ல முடியும்? நாடகத் திட்டத்திற்கேற்ப அனைவரும் தமோபிரதான் ஆகவேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இவ் வேளையில் முழு விருட்சமுமே முழுமையான உக்கிய நிலையை அடைந்து விட்டது. இங்கேயுள்ள எவருமே சதோபிரதான் ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாது. இங்கு ஓர் ஆத்மா தூய்மை ஆகியதும் அவரால் இங்கு இருக்க முடியாது; அவர் இங்கிருந்து நீங்கி விடுவார். அனைவரும் முக்தியை அடைவதற்காகப் பக்தி செய்கின்றார்கள். எவ்வாறாயினும், இன்னமும் எவராலும் வீடு திரும்ப முடியாமல் உள்ளது. நியதி இதனை அனுமதிக்காது. தந்தை இங்கே அமர்ந்திருந்து இந்த இரகசியங்கள் அனைத்தையும் நீங்கள் கிரகிப்பதற்காக விளங்கப்படுத்துகிறார். இருப்பினும், தந்தையை நினைவுசெய்து, சுயதரிசனச் சக்கரதாரி ஆகுவதே பிரதான விடயம் ஆகும். விதையை நீங்கள் நினைவு செய்யும் பொழுது, உங்கள் புத்தியில் முழு விருட்சத்தினதும் விழிப்புணர்வு ஏற்படுகின்றது. நீங்கள் அனைத்தையும் ஒரு விநாடியில் அறிந்து கொள்கிறீர்கள். ஒரேயொரு தந்தையே முழு மனித உலகினதும் விதை என்பது உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. ஸ்ரீகிருஷ்ணர் கடவுளல்ல. ஸ்ரீகிருஷ்ணர் அவலட்சணமானவரும், அழகானவரும் (சியாம்சுந்தர்) என்று அழைக்கப்படுகின்றார். நச்சுப் பாம்பு ஒன்று அவரைத் தீண்டியதால், அவர் கருநீல நிறமுடையவர் ஆகினார் என்பதல்ல. காமச்சிதையில் அமர்ந்ததாலேயே மனிதர்கள் அவலட்சணமானவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் இராமரையும் கருநீல நிறம் உடையவராகக் காட்டுகிறார்கள். அவரை யார் கடித்தது? அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், அதைத் தங்கள் பாக்கியத்தில் கொண்டிருப்பதுடன், அந்த நம்பிக்கையும் உடையவர்களே தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியை நிச்சயமாகப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நம்பிக்கையைக் கொண்டிராவிடின், அவர்கள் ஒருபொழுதும் புரிந்துகொள்ளவே மாட்டார்கள். அவர்களது பாக்கியத்தில் அது இல்லாவிடின், அவர்கள் என்ன முயற்சியை மேற்கொள்வார்கள்? அவர்களது பாக்கியத்தில் அது இல்லாவிடின், அவர்கள் எதையுமே புரிந்து கொள்ளாதவர்களைப் போல் அமர்ந்திருக்கின்றார்கள். தந்தை அவர்களுக்கு இந்த எல்லையற்ற ஆஸ்தியை அளிப்பதற்காக வந்துள்ளார் என்ற நம்பிக்கையைக் கூட அவர்கள் கொண்டிருப்பதில்லை. எவ்வாறு மருத்துவக் கல்லூரியில் சென்று அமரும் ஒரு புதிய மாணவர் எதனையும் புரிந்து கொள்வதில்லையோ, அவ்வாறே சிலர் வந்து இங்கு அவ்விதமாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த அழிவற்ற ஞானம் என்றுமே அழியாதது. அவர்களால் வந்து என்ன செய்ய முடியும்? ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் பொழுது, பணிப்பெண்கள், வேலையாட்கள், பிரஜைகள், பிரஜைகளின் வேலையாட்கள் அனைவரும் தேவைப்படுகின்றனர். நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, அவர்கள் கற்க முற்படுவார்கள். ஆனால், அந்நேரத்தில் பெருமளவு குழப்பம் நிலவும் என்பதால், அப்பொழுது அது சிரமமாக இருக்கும். நாளுக்கு நாள், தொடர்ந்தும் புயல்கள் அதிகரிக்கின்றன. எத்தனையோ நிலையங்கள் உள்ளன. எனவே சிலர் வந்து மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள். பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது என்று எழுதப்பட்டுள்ளது. விநாசம் முன்னே நிற்கின்றது. விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். மிகக் குறைந்தளவு குழந்தைகளே பிறக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். எப்படியாயினும் விருட்சம் வளர வேண்டும். தந்தை இங்கு இருக்கும் பொழுது அனைத்துச் சமய ஆத்மாக்களும் இங்கு கீழே வரவேண்டும். வீடு திரும்புவதற்குரிய நேரம் வரும்பொழுது, கீழிறங்குவதற்கு மேலும் ஆத்மாக்கள் இருக்க மாட்டார்கள். இப்பொழுது அனைவரும் கீழிறங்கி வர வேண்டும், ஆனால், எவரும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. கடவுளே பக்தர்களின் பாதுகாவலர் என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே நிச்சயமாகப் பக்தர்களுக்குப் பெருந் துன்பம் (அனர்த்தங்கள்) இடம்பெற்றிருக்க வேண்டும். இராவண இராச்சியத்தில் அனைவரும் முற்றிலும் பாவாத்மாக்கள் ஆகியுள்ளனர். கலியுக இறுதியில் இராவண இராச்சியமும், சத்தியயுக ஆரம்பத்தில் இராம இராச்சியமும் இருக்கின்றன. இவ்வேளையில் அனைவரும் இராவணனின் அசுர சமுதாயத்திற்கு உரியவர்கள். இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று அவர்கள் கூறுகின்றனர், இது நரகம் என்பதே அதன் அர்த்தமாகும். அவர் சுவர்க்கவாசி ஆகினால், அது நல்லது! அவர் இங்கு எவ்வாறானவராக இருந்திருப்பார் எனப் பாருங்கள்! அவர் நிச்சயமாக ஒரு நரகவாசியாகவே இருந்திருப்பார். தாங்கள் நரகவாசிகள் என்பதையேனும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை மாத்திரமே வந்து உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என நினைவு கூரப்படுகின்றார். அவர் மாத்திரமே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். ‘சீதைக்குச் சொந்தமான இராமரே தூய்மையாக்குபவர்’ என அனைவரும் பாடி நினைவு செய்கிறார்கள். அவர்கள் பாடுகின்றனர்: நாங்கள் தூய்மை அற்றவர்கள், உங்களாலேயே எங்களைத் தூய்மையாக்க முடியும். அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்த சீதைகள் ஆவார்கள், தந்தையே இராமர் ஆவார். இதை நீங்கள் மக்களுக்கு நேரடியாகக் கூறும்பொழுது, அவர்கள் அதனை நம்புவதில்லை. அவர்கள் இராமரை அழைக்கிறார்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். அது நீங்கள் இப்பொழுது வேறோர் உலகிற்குச் சொந்தமானதைப் போன்றதாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அனைவரும் இப்பொழுது நிச்சயமாகத் தமோபிரதான் ஆகவேண்டி இருந்தது, அப்பொழுது மாத்திரமே தந்தையால் வந்து, உங்களைச் சதோபிரதான் ஆக்கமுடியும். தந்தை அனைத்தையும் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய சொந்தக் கடமைகளைச் செய்தாலும், ஒன்றை ஞாபகத்தில் வைத்திருங்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள்! சதோபிரதான் ஆகுவதற்கான பாதையை வேறெவராலும் காட்ட முடியாது. ஒரேயொருவரே அனைவரதும் ஆன்மீகச் சத்திரசிகிச்சை நிபுணர். அவரே வந்து ஆத்மாக்களுக்கு ஊசி ஏற்றுபவர், ஏனெனில் ஆத்மாக்கள் தமோபிரதானாகி விட்டனர். தந்தை அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். பரமாத்வாகிய தந்தையும் அழிவற்றவர். ஆத்மாக்கள் சதோபிரதானாக இருப்பதில் இருந்து இப்பொழுது தமோபிரதானாகி விட்டார்கள். ஆத்மாக்களுக்கு ஓர் ஊசிமருந்து தேவை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை மேலே இணைப்பதனால், நீங்கள் உங்கள் இனிய வீட்டிற்குச் செல்வீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் இனிய மௌன வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தினாலும், யோகத்தினாலும் உங்கள் புத்தியைத் தெய்வீகமானதாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சுகவீனம் உற்றிருந்தாலும் அல்லது எவ்வளவு சிரமம் இருந்தாலும், அந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும்.

2. உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குவதற்கு, உங்கள் புத்தி முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கட்டும். உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் இனிய மௌன வீட்டுடன் தொடர்புபடுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் திரிகாலதரிசியாக இருப்பதன் மூலம் உங்களின் வீணான எண்ணங்களையும் சம்ஸ்காரங்களையும் மாற்றி, அதனால் ஓர் உலக உபகாரி ஆகுவீர்களாக.

நீங்கள் மாஸ்ரர் திரிகாலதரிசியாகி உங்களின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் போது, உங்களின் செயல்கள் எதுவும் வீணாகிப் போகாது. வீணான எதையும் மாற்றி, சக்திவாய்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்து, சக்திவாய்ந்த செயல்களைச் செய்வதே சம்பூரண ஸ்திதி என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்களின் வீணான எண்ணங்களையும் பாவச் செயல்களையும் எரிப்பது மட்டுமன்றி, சக்தி சொரூபமாகி, முழு உலகினதும் பாவச் சுமையை இலேசாக்க வேண்டும். அத்துடன் ஆத்மாக்கள் பலரினதும் வீணான எண்ணங்களை முடிக்கும் பொறிமுறையின் வேகத்தை அதிகரியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் ஓர் உலக உபகாரி என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
பற்றை வென்றவர் ஆகுவதற்கு, சேவையின் மீது அன்பு வையுங்கள். உங்களின் சொந்த சுயநல நோக்கங்களின் மீது அல்ல.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

மூதாதை ஆத்மாக்களான, பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களான உங்களை அமைதியை அருள்பவர்களாகவும் சக்தியை அருள்பவர்களாகவும் ஆத்மாக்கள் பலரும் நினைவு செய்கிறார்கள். அத்தகைய வேளையில், நீங்கள் அருள்பவரின் குழந்தைகளாக, அமைதியை அருளும் ஆத்மாக்களாக, மாஸ்ரர் அமைதிக்கடல்களாக அமைதியின் அலைகளைப் பரப்புபவர்கள் ஆகுங்கள். நீங்கள் உங்களின் அமைதிக் கதிர்கள் பிரகாசிக்கும் மாஸ்ரர் அமைதி சூரியர்கள் ஆகின்றீர்கள். தொடர்ந்து அனைவருக்கும் அமைதியைக் கொடுங்கள். விசேடமாக இத்தகைய சேவை செய்வதைப் பயிற்சி செய்யுங்கள்.

மாதேஷ்வரியின் பெறுமதி மிக்க வாசகங்கள்

ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடையிலான வேறுபாடு

யோகமும், ஞானமும் இரு வார்த்தைகளாகும். கடவுளின் நினைவே யோகம் என்று குறிப்பிடப்படுகின்றது. வேறு எவரினதும் நினைவை முன்னிட்டும் யோகம் என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை. குருமார்கள் கற்பிக்கின்ற யோகமும் கடவுளுடன் இணைவதற்கானது, ஆனால் அவர்களுக்குக் கடவுளின் முழு அறிமுகமும் இல்லாததால், யோகத்தில் அந்தளவு வெற்றியை அடைவதில்லை. யோகமும், ஞானமும் இரண்டு சக்திகள், இவ்விரு பாடங்களிலும் முயற்சி செய்வதால், நீங்கள் சக்தியைப் பெறுவதுடன், பாவச் செயல்களை வென்றவர்களாகவும் ஆகி, உங்கள் வாழ்வையும் மேன்மையானதாக ஆக்குகின்றீர்கள். அனைவரும் யோகம் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் முதலில் நீங்கள் எவருடன் யோகம் செய்கின்றீர்களோ, அந்த ஒரேயொருவரைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு இருப்பது அவசியமாகும். நாங்கள் கடவுளிடம் இருந்து கடவுளின் அறிமுகத்தைப் பெறுவதுடன், அந்த அறிமுகத்தின் மூலம் யோகம் செய்வதால், ஒட்டுமொத்த வெற்றியையும் பெறுகின்றோம். யோகத்தின் மூலம் எங்கள் கடந்த காலப் பாவச் சுமைகளை எரிக்கின்றோம், இந்த ஞானத்தின் மூலம் எதிர்காலத்தில் நாங்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்ன என்பதைப் பற்றியும், ஏன் என்பதைப் பற்றியும் இனங்கண்டு கொள்கின்றோம். எங்கள் சம்ஸ்காரங்களே எங்கள் வாழ்வுகளின் வேர்கள், அநாதியான ஆத்மாக்கள் சம்ஸ்காரங்களால் ஆனவை. ஆனால் எங்களுடைய செயல்களால் எங்கள் சம்ஸ்காரங்கள் தொடர்ந்தும் மாற்றம் அடைகின்றன. ஆத்மாக்கள் ஞானம், யோகம் மூலம் மகத்தானவர்கள் ஆகுகின்றார்கள், நீங்கள் உங்கள் வாழ்வுகளில் சக்தியையும் விருத்தி செய்கின்றீர்கள். ஆனால் கடவுளிடம் இருந்தே இவ்விரு விடயங்களும் பெறப்படுகின்றன. கடவுளிடம் இருந்தே நாங்கள் எங்களுடைய கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவதற்கான வழியைக் கண்டுகொள்கின்றோம். கடவுளைத் தவிர, எவராலும் நாங்கள் செய்துள்ள பாவங்களின் கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட்டவர்கள் ஆகுவதற்கான சக்தியை எங்களுக்குக் கொடுக்க முடியாது. அதனால் எங்கள் எதிர்காலச் செயல்கள் பாவம் நிறைந்தவையாக மாட்டாது. கடவுள் யோகம், ஞானம் இரண்டையும் கொண்டு வருகின்றார். அவர் யோகாக்கினியில் எங்கள் பாவங்களை எரிப்பதற்கு எங்களைத் தூண்டுகின்றார், எங்கள் செயல்கள் நடுநிலை ஆகும் வகையில், எவ்வாறு எதிர்காலத்தில் மேன்மையான செயல்களைப் புரிவது என எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனாலேயே கடவுள் கூறியுள்ளார்: செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவம் மிகவும் ஆழமானது. இப்பொழுது, ஆத்மாக்களான எங்களுக்குக் கடவுளிடம் இருந்து நேரடியான சக்தி தேவை. சமயநூல்களில் இருந்து எங்களால் யோகம் மற்றும் ஞான சக்திகளைப் பெற முடியாது. சகல சக்திகளும் நிறைந்த, சர்வசக்திவானிடம் இருந்து மாத்திரமே எங்களால் இவற்றைப் பெற முடியும். நாங்கள் இப்பொழுது எங்கள் வாழ்வுகளில் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்ற, அத்தகைய எங்கள் வாழ்வுகளின் (சம்ஸ்காரங்கள்) வேர்களை உருவாக்க வேண்டும். எனவே, கடவுள் வந்து, தூய சம்ஸ்காரங்கள் எனும் விதையை விதைக்கின்றார், இந்தத் தூய சம்ஸ்காரங்களின் அடிப்படையில் நாங்கள் அரைக் கல்பத்திற்கு ஜீவன்முக்தி அடைந்தவர்கள் ஆகுவோம். அச்சா.