16.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இதுவே நீங்கள் அதிமேன்மையானவர் ஆகுகின்ற சங்கமயுகம் ஆகும். ஆகையால், இந்த யுகத்தில் எப்பாவத்தையும் செய்யாதீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் சங்கமயுகத்தில் செய்கின்ற மகத்தான புண்ணியம் என்ன?பதில்:
நீங்கள் உங்களை முற்றாகத் தந்தையிடம் அர்ப்பணிக்கின்றீர்கள், அதாவது, உங்களை முற்றாகத் தியாகம் செய்கின்றீர்கள். இதுவே மகத்துவமான புண்ணியச் செயலாகும். உங்கள் பற்றை நீங்கள் இப்பொழுது முடிக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள், வீடுகள், குடும்பங்கள் போன்றவற்றை நீங்கள் மறக்க முயற்சிக்கின்றீர்கள். இதுவே உங்கள் சத்தியமாகும். நீங்கள் மரணிக்கும் பொழுது, உலகமே உங்களைப் பொறுத்தவரையில் மரணிக்கின்றது. நீங்கள் இப்பொழுது விகார உறவுமுறைகளில் இருந்து விடுபட்டவர்கள் ஆகுகின்றீர்கள்.பாடல்:
விட்டிற்பூச்சி தன்னை எரித்துச் சுவாலையில் அர்ப்பணிக்காதது ஏனோ?ஓம் சாந்தி.
அந்தப் புகழ் அனைத்தும் பக்தி மார்க்கத்தில் தந்தையின் புகழாகும். அது விட்டிற் பூச்சிகள் சுவாலையை நோக்கிப் பாடிய புகழாகும். தந்தை வந்திருப்பதால், உயிருடன் இருக்கும் பொழுதே நீங்கள் ஏன் அவருக்குரியவர் ஆகக்கூடாது? மரணித்து வாழ்தல் என்றால் தத்தெடுக்கப்படுவது ஆகும். முன்னர் நீங்கள் அசுர குடும்பத்தைச் சேர்ந்திருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் இறை குடும்பத்திற்கு உரியவர்கள். நீங்கள் உயிருடன் இருக்கும் பொழுதே, கடவுள் வந்து உங்களைத் தத்தெடுத்துள்ளார். இதுவே பின்னர் 'அடைக்கலம் பெறுதல்" என்று குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் பாடுகின்றார்கள்: நான் வந்து, உங்களிடம் அடைக்கலம் பெற்றுள்ளேன். அவர் வந்து தனது சக்தியையும் கோலாகலத்தையும் காட்டும்பொழுதே, உங்களால் கடவுளிடம் அடைக்கலம் பெற முடியும். அவர் மாத்திரமே சர்வசக்திவான். அவரிடம் உண்மையிலேயே கவர்வதற்கான சக்தி உள்ளது. அவர் உங்களை அனைத்தையும் துறக்கச் செய்கின்றார். உண்மையிலேயே தந்தையின் புத்திரர்களும், புத்திரிகளுமாக ஆகுபவர்கள், அசுர உறவுமுறைகளினால் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் வினவுகின்றார்கள்: பாபா, இந்த உறவுமுறைகள் எப்பொழுது துண்டிக்கப்படும்? அந்தப் பழைய உறவுமுறைகள் அனைத்தும் இங்கே மறக்கப்படல் வேண்டும். ஓர் ஆத்மா தனது சரீரத்திலிருந்து விடும்படும் பொழுது, சகல பந்தனங்களும் முடிவடைகின்றன. இந்த நேரத்தில், அனைவருக்குமே மரணம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பந்தனங்கள் அனைத்தும் விகாரங்கள் நிறைந்தவை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விகாரமற்ற உறவுமுறைகளைக் கொண்டிருக்க விரும்புகின்றீர்கள். நீங்கள் விகாரமற்ற உறவுமுறைகளைக் கொண்டிருந்தீர்கள், பின்னர் விகாரம் நிறைந்த உறவுமுறைகளைக் கொண்டிருக்கின்றீர்கள், நீங்கள் மீண்டும் விகாரமற்ற உறவுமுறைகளைக் கொண்டிருப்பீர்கள். இவ்விடயங்கள் வேறு எவரது புத்திகளிலும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அசுர பந்தனங்களில் இருந்து விடுபட முயற்சிக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் மாத்திரமே யோகம் செய்கின்றீர்கள். ஒருபுறம் இராவணனும், இந்தப் புறம் இராமரும் உள்ளனர். உலகிற்கு இவ்விடயங்கள் தெரியாது. தாம் இராம இராச்சியத்தையே விரும்புவதாக அவர்கள் கூறுகின்றார்கள், ஆனால் முழு உலகமுமே இராவண இராச்சியத்தில் உள்ளது என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. இராம இராச்சியத்தில் தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் இருந்தன் அது இப்பொழுது இல்லை. எவ்வாறாயினும், தாங்கள் எதனைப் பற்றிப் பேசுகின்றனர் என்பதை அவர்கள் அனுபவம் செய்வதில்லை. ஆத்மாக்கள் அனைவருமே சீதைகள் என்று நினைவுகூரப்பட்டுள்ளது. ஒரு சீதை அல்லது ஓர் அர்ஜுனன் அல்லது ஒரு திரௌபதி என்ற கேள்விக்கே இடமில்லை; இது உங்களில் பலரைப் பற்றிய விடயமாகும். ஒருவரின் உதாரணம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவருமே அர்ஜுனன் போன்றவர்கள். அர்ஜுனனே “பாக்கிய இரதம்” என்று நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சாதாரண, பழைய சரீரத்தின் இரதத்தை எடுக்கின்றேன். அவர்கள் பின்னர் ஒரு குதிரை இரதத்தைப் படங்களில் காட்டியுள்ளார்கள். அது அறியாமை எனப்படுகின்றது. அந்தச் சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏழுநாள் பாடத்தைப் பெறும்வரையில் வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. பக்தி வேறானது. அவர்கள் ஞானம், பக்தி, ஆர்வமின்மை பற்றிப் பேசுகின்றார்கள். உண்மையில், சந்நியாசிகளின் ஆர்வமின்மை உண்மையானதல்ல, ஏனெனில் அவர்கள் காடுகளுக்குச் சென்று, அதன்பின்னர் நகரங்களில் வாழ்வதற்குத் திரும்பி வந்து, அங்கே பெரிய கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு வந்து விட்டதாக அவர்கள் வெறுமனே கூறுகின்றார்கள். உங்களுக்குப் பழைய உலகம் முழுவதிலும் ஆர்வமின்மை உள்ளது. இது உண்மையானது; அவர்களுடையது எல்லைக்கு உட்பட்டது. ஆகையாலேயே அது எல்லைக்கு உட்பட்ட ஆர்மின்மையான, ஹத்தயோகம் எனப்படுகின்றது. இந்தப் பழைய உலகம் இப்பொழுது முடிவடையப் போவதால், அதன் மீது நீங்கள் நிச்சயமாக ஆர்வமின்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். புத்தியும் கூறுகின்றது: ஒரு புதிய வீடு கட்டப்படும் பொழுது, பழையது தகர்க்கப்படும். இப்பொழுது ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். கலியுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சங்கமயுகம் வரும். இதுவே அதிமேன்மையான யுகம் என்று அழைக்கப்படுகின்றது. அதிமேன்மையான புண்ணிய மாதமும் உள்ளது. உங்கள் யுகமே அதிமேன்மையான யுகமாகும். அவர்கள் புண்ணிய மாதத்தில் அதிகளவு தான, தர்மங்களைச் செய்கின்றார்கள். இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் நீங்கள் அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். இந்த முழு உலகமும் அர்ப்பணிக்கப்பட உள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் முழு உலகமும் அர்ப்பணிக்கப்படும் முன்னர், நாங்கள் ஏன் எங்களை அர்ப்பணிக்கக்கூடாது? அதிலிருந்து நீங்கள் அதிகளவு புண்ணியத்தைப் பெறுவீர்கள். அது எல்லைக்கு உட்பட்ட புண்ணிய மாதமாகும், ஆனால் இதுவோ ஓர் எல்லையற்ற விடயமாகும். மக்கள் புண்ணிய மாதத்தில், பல சமயக் கதைகளைக் கேட்பதுடன், பல விரதங்கள் போன்றவற்றையும் அனுட்டிக்கின்றார்கள். நீங்கள் மிகவும் மகத்தானதொரு விரதத்தை அனுட்டிக்கின்றீர்கள். உங்களுக்கு வீடுகள், குழந்தைகள், குடும்பம் என்பன இருந்த பொழுதிலும் அவர்கள் மீதுள்ள உங்கள் பற்றை உங்கள் இதயபூர்வமாக அகற்றியுள்ளீர்கள். நீங்கள் மரணிக்கும் பொழுது, உலகமே உங்களைப் பொறுத்தவரை மரணிக்கின்றது. இவை அனைத்தும் முடிவடைய உள்ளதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்காக, இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் ஆகியுள்ளோம். மனிதர்கள் அனைவரிலும் இங்கே உங்கள் முன்னிலையிலுள்ள இலக்ஷ்மியும் நாராயணனுமே அதிமேன்மையானவர்கள். இலக்ஷ்மி நாராயணனை விடவும் அதிமேன்மையான மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. அவர்கள் உலக அதிபதிகளாக இருந்தார்கள். நீங்களும் அவர்களைப் போன்று அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். மனிதர்கள் அனைவருமே சற்கதி பெறுகின்றார்கள். ஒரு ஜனாதிபதி அதியுயர்வான அந்தஸ்தில் இருப்பதால், அவர் வாழ்வதற்கு, ஜனாதிபதி இல்லம் (இராஷ்ராதிபவன்-அரசாங்க இல்லம்) கொடுக்கப்பட்டிருப்பதைப் போன்று, மனித ஆத்மாக்கள் அதிமேன்மையானவர்கள் ஆகும்பொழுது, அவர்களின் வசிப்பிடங்களும் உயர்வானவையாக இருக்க வேண்டும். அது பெரிய, அழகிய பூந்தோட்டங்கள் போன்றன உள்ள ஆடம்பரமான கட்டடமாகும். இது இங்கும் பொருந்துகின்றது. நீங்கள் இராம இராச்சியத்தை அறிவீர்கள். நீங்கள் சத்தியயுகத்தைச் சேர்ந்த மேன்மையானவர்கள் ஆகும்பொழுது, கலியுகத்தைச் சேர்ந்த மேன்மையானவர்கள் இருக்க மாட்டார்கள். நீங்கள் சத்தியயுகத்தைச் சேர்ந்த மேன்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். உங்கள் மாளிகைகள் எவ்வாறிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். நாளை இராம இராச்சியம் இருக்கும். இராம இராச்சியத்தில் நீங்களே அதிமேன்மையானவர்களாக இருப்பீர்கள். இராவண இராச்சியத்தை மாற்றி, இராம இராச்சியத்தை ஸ்தாபிப்போம் எனக் கூறி, நீங்கள் சவால் விடுக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் இச்சவாலை விடுத்துள்ளதால், உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்;கு மேன்மையானவர்கள் ஆகுவதில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேண்டும். ‘சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களும், அகிம்சையைத் தமது பரம தர்மமாகக் கொண்டவர்களும்’ எனத் தேவர்களையிட்டுப் புகழ் பாடப்படுகின்றது. நீங்கள் இதனை அறிவீர்கள்; வேறு எவரும் அறியார். உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் அதிமேன்மையானவர் ஆகும்பொழுது, இந்த இராவண இராச்சியத்தைச் சேர்ந்த எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். உங்களிடம் இப்பொழுது இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. இராவண இராச்சியம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. இந்நாட்களில், நேரம் உட்பட, எதற்கும் ஓர் உத்தரவாதம் இல்லை. சடுதியான, அகால மரணம் ஏற்படலாம். அல்லது ஏதேனும் விரோதம் இருந்தால், நீங்கள் சிலரால் இலகுவில் கொல்லப்படலாம். உங்களை எவரும் கொலை செய்ய முடியாது. நீங்கள் அநாதியாகவே அதிமேன்மையானவர்கள். இங்கே இராவண இராச்சியத்தில் உள்ள அனைத்தும் அழியக்கூடியவை. உங்கள் தேவ இராச்சியத்தைப் பற்றி மக்கள் அறியமாட்டார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். வழிபாடு செய்யப்படுபவர்கள் நிச்சயமாக நல்ல பணிகளைச் செய்த பின்னர் சென்றிருக்க வேண்டும். உங்களுக்கு இது தெரியும். ஜெகதாம்பாள் எவ்வாறு வழிபாடு செய்யப்படுகின்றார் எனப் பாருங்கள்! அவர் ஞானதேவி ஆவார். ஜெகதாம்பாளின் புத்திரிகளாகிய நீங்களும் ஞானதேவிகளாகவும், இளவரசிகளாகவும் ஆகுகின்றீர்கள். இருவரிலும் யார் அதி மேன்மையானவர்கள்? ஞானதேவியிடம் சென்று மக்கள் பல வகையான ஆசைகளைக் கூறுகின்றார்கள்; அவர்கள் பலவற்றை வேண்டுகின்றார்கள். ஜெகதாம்பாளின் ஆலயத்திற்கும் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. ஜெகதாம்பாளின் ஆலயம் மிகவும் சிறியது. சிறிய இடங்களிலும் கூட மக்கள் அதிகளவு கூட்டத்தைக் காணவே விரும்புகின்றார்கள். ஸ்ரீநாத் ஆலயத்திலும் அதிகளவு மக்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் சில சமயங்களில் மக்களை முன்னால் நகர்த்துவதற்கு, பெரிய கம்புகளைப் பயன்படுத்தி, அடிக்கின்றார்கள். கல்கத்தாவிலுள்ள காளி கோயில் சிறியது, அங்கே அதிகளவு எண்ணெயும், தண்ணீரும் எங்கும் இருக்கும். அங்கே மிகவும் கவனமாகவே நடக்க வேண்டும். அங்கே எப்பொழுதும் சனக் கூட்டங்கள் உள்ளன. இலக்ஷ்மி நாராயணனின் ஆலயம் மிகவும் பெரியது. ஜெகதாம்பாளின் ஆலயம் ஏன் மிகவும் சிறியதாக உள்ளது? அவர் ஏழை என்பதால், அவரின் ஆலயம் ஏழ்மையைச் சித்தரிக்கின்றது. அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) மிகவும் செல்வந்தர்கள்; அவர்களின் ஆலயத்தில் எப்பொழுதும் எந்த ஒன்றுகூடல்களும் (மேலாக்கள்) இருப்பதில்லை. ஜெகதாம்பாள் ஆலயத்திலேயே பல ஒன்றுகூடல்கள் இருக்கின்றன. இவ் ஆலயங்களைப் பார்ப்பதற்குப் பல வெளிநாட்டவர்களும் அங்கு செல்கின்றனர். மகா இலக்ஷ்மிக்கான ஆலயமும் உள்ளது. அதில் இலக்ஷ்மியும் நாராயணனும் உள்ளடங்குகின்றனர் என்பது உங்களுக்கு மாத்திரமே தெரியும். அவர்கள் செல்வந்தர்கள் ஆகியதால், மக்கள் அவர்களிடம் செல்வத்தை மாத்திரமே கேட்கின்றார்கள். இங்கே உங்களிடம் அழியாத இந்த ஞான இரத்தினங்கள் உள்ளன. அவர்கள் செல்வத்திற்காக இலக்ஷ்மியிடம் செல்கின்றார்கள், ஆனால் ஏனைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு, அவர்கள் ஜெகதாம்பாளிடம் செல்கின்றார்கள். நீங்கள் ஜெகதாம்பாளின் குழந்தைகள். நீங்கள் 21 பிறவிகளுக்கு அனைவரது ஆசைகளையும் நிறைவேற்றுகின்றீர்கள். உங்கள் 21 பிறவிகளின் ஆசைகள் அனைத்தும் ஒரேயொரு மகா மந்திரத்தால் நிறைவேற்றப்படுகின்றது. மக்கள் கொடுக்கின்ற ஏனைய அனைத்து மந்திரங்களுக்கும் எந்த அர்த்தமும் கிடையாது. இந்த மந்திரத்தைத் தந்தை ஏன் கொடுக்கின்றார் என்பதை அவர் விளங்கப்படுத்துகின்றார். ஏனெனில் நீங்கள் தூய்மை அற்றவர்கள் என்பதாலாகும். நீங்கள் சதா அவரை நினைவுசெய்தால் மாத்திரமே, தூய்மையாகுவீர்கள். இவ்வாறாகத் தந்தையைத் தவிர எவராலும் ஆத்மாக்களுக்கு கூற முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே இந்த இலகு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பது இதனால் நிரூபிக்கப்படுகின்றது. அவர் மாத்திரமே இந்த மந்திரத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் 5000 வருடங்களின் முன்னரும் உங்களுக்கு இந்த மந்திரத்தைக் கொடுத்தார். இதனை நீங்கள் இப்பொழுது நினைவுகூருகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் அவரின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். கிறிஸ்து வந்து சென்று விட்டதால், மக்கள் அவரது பைபிளைத் தொடர்ந்தும் வாசிக்கின்றார்கள். அவர் வந்தபொழுது, அவர் என்ன செய்தார்? அவர் ஒரு சமயத்தை ஸ்தாபித்தார். சிவபாபா இங்கிருக்கும் பொழுது என்ன செய்தார் என்பதும், ஸ்ரீகிருஷ்ணர் இங்கிருக்கும் பொழுது என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசராக இருந்தார், பின்னர் அவர் நாராயணனாகித் தொடர்ந்தும் மறுபிறவிகள் எடுக்கின்றார். சிவபாபாவும் இங்கிருக்கும் பொழுது, எதனையோ செய்ததால், அவர் அதிகளவு வழிபாடு செய்யப்படுகின்றார். அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்கினார், ஆனால் அவர் அதன் முதல் இலக்க அதிபதி ஆகவில்லை. ஸ்ரீ கிருஷ்ணரே அவ்வாறு ஆகினார். அவர் நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மாவிற்குக் கற்பித்தார் என நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்த நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அரசரும், அரசியும் போஷிப்பவர்களான தாயும், தந்தையையும் போன்றவர்கள். இராஜஸ்தானிலும், அரசரே போஷிப்பவர் (உணவு) எனப்படுகின்றார். அரசர்களுக்கு அதிகளவு மரியாதை உள்ளது. ஆரம்ப காலத்தில், அரச சபை கூடும்பொழுது முறைப்பாடுகள் அனைத்தும் அரசரிடம் செய்யப்படும். எவராவது தவறு செய்திருந்தால், அவர் பெருமளவு வருத்தப்படுவார். இந்நாட்களில், பல சிறைக் கைதிகள் உள்ளனர்; அவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் சிறைக்குச் செல்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் கருப்பை என்ற சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் கருப்பை என்ற மாளிகைக்கே செல்வீர்கள். ஆகையால், நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுதே உங்கள் பாவங்கள் அழிந்து, நீங்கள் கருப்பை என்ற சிறைக்குச் செல்ல மாட்டீர்கள். அங்கே எப்பாவமும் செய்யப்படுவதில்லை. அனைவருமே கருப்பை என்ற மாளிகையிலேயே இருக்கின்றார்கள். சிலர் குறைந்தளவு முயற்சி செய்ததாலேயே, குறைந்தளவு அந்தஸ்தை அடைகின்றார்கள். உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்கள் பெருமளவு சந்தோஷத்துடனும் இருக்கின்றார்கள். இங்கே, ஒரு கவர்னர் அல்லது ஜனாதிபதி போன்றோர் ஐந்து வருடங்களுக்கு மாத்திரமே நியமிக்கப்படுகின்றார்கள். பாரதம் மாத்திரமே அரசர்களின் தெய்வீக இடமாக (இராஜஸ்தான்) இருந்தது என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். இப்பொழுது அங்கே அரசர்களின் தேசமோ அல்லது அரசர்களும் அரசிகளுமோ இல்லை. முன்னர் அரசாங்கத்திற்குப் பணம் கொடுத்த எவராலும் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி என்ற பட்டத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. இங்கே இது உங்கள் கல்வியாகும். அந்த அரசர்களும் அரசிகளும் கற்பதனால் உருவாக்கப்படவில்லை. உங்களுக்கு ஓர் இலக்கும், குறிக்கோளும் உள்ளன. இக்கல்வியின் மூலம் நீங்கள் வெறும் அரசர்களும், அரசிகளுமாக அன்றி, உலகச் சக்கரவர்த்திகளும் சக்கரவர்த்தினிகளும் ஆகுகின்றீர்கள். அரசர்கள், அரசிகள் என்ற பட்டம் திரேதா யுகத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நீங்கள் இப்பொழுது ஞான தேவதேவியர் ஆகுகின்றீர்கள், அதன் பின்னர் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவீர்கள். உங்களை இவ்வாறு ஆக்குவது யார்? கடவுளே ஆவார். எவ்வாறு? இராஜயோகத்தினாலும், இந்த ஞானத்தினாலும் ஆகும். ஓர் இராச்சியத்தைக் கோருவதற்குத் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். இது மிகவும் இலகுவானது. தந்தையான கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் சுவர்க்கத்தில் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர்கள் நிச்சயமாகத் தங்கள் அந்தஸ்தைச் சங்கமயுகத்திலேயே பெறுகின்றார்கள், இதனாலேயே இது அழகான, உபகாரமிக்க சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு நன்மை செய்கின்றார், அதாவது அவர் உங்களைச் சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆக்குகின்றார். பரமாத்மாவாகிய பரமதந்தை புதிய உலகைப் படைக்கின்றார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவ் உலகை ஆட்சிசெய்பவர்கள் யார் என்பதை எவருமே அறியார். இராம இராச்சியம் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் இராம இராச்சியத்தின் கால எல்லையை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். கலியுகத்திற்கு அவர்கள் 40,000 ஆண்டுகள் கால எல்லையைக் கொடுத்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றேன். நான் வந்து, பிரம்மாவினூடாக விஷ்ணு தாமத்தை ஸ்தாபிக்கின்றேன். இதுவும் சத்திய நாராயணனின் கதையே ஆகும். சத்தியயுகத்தில் நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களும், பதினாறு சுவர்க்கக் கலைகள் போன்றனவும் முழுமையானவர்களான இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றீர்கள். பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. ஸ்தாபனை இடம்பெறும்பொழுது, அது புதிய விருட்சம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு புதிய கட்டடம் கட்டப்படும் பொழுது, அது புதியது என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்லும்பொழுது, அது புதிய இராச்சியம் என அழைக்கப்படும், அதன்பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடையும். இங்கேயே ஸ்தாபனை இடம்பெறுகின்றது. இந்த அற்புதமான விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் இல்லை. சகல ஆத்மாக்களும் அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகக்கூடிய யுகம் இதுவே என்று தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஜீவன்முக்தியே அதிமேன்மையான அந்தஸ்து என்று கூறப்பட்டுள்ளது. பந்தன வாழ்வை ஒரு மேன்மையான அந்தஸ்து என்று கூறப்படுவதில்லை. இந்த நேரத்தில் அனைவருமே பந்தன வாழ்க்கையே வாழ்கின்றனர். தந்தை வந்து அனைவருக்கும் ஜீவன்முக்தி வாழ்வைக் கொடுக்கின்றார். அரைக்கல்பத்திற்கு நீங்கள் ஜீவன்முக்தி வாழ்வைப் பெற்றிருப்பீர்கள், பின்னர் பந்தன வாழ்க்கையில் கட்டுப்பட்டவர்கள் ஆகுகின்றீர்கள். இதனை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களது சத்தியமும், ஒழுக்கமும் என்ன? பாபா வந்து உங்களை ஒரு விரதம் அனுட்டிக்கச் செய்தார். அது உணவு அல்லது பானம் அருந்தாத விரதமல்ல. அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்து, தூய்மை ஆகுங்கள். பொதுவாக, புண்ணிய, மங்களகரமான மாதத்தில் பலரும் தூய்மையாக இருக்கின்றனர். உண்மையில், அது இந்த அதிமேன்மையான யுகத்திற்கான மரியாதை ஆகும். ஆகவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தையும், போதையையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது எப்பாவச் செயல்களையும் செய்யக்கூடாது, ஏனெனில், நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அதிமங்களகரமான யுகத்தில் வாழ்வில் ஜீவன்முக்தியைப் பெறுவதற்குப் புண்ணியச் செயல்களைச் செய்யுங்கள். நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள். வீடும், குடும்பமும் உள்ள பொழுதிலும் அவர்கள் மீதுள்ள உங்கள் இதயத்தின் பற்றை அகற்றுங்கள்.2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்கள் சரீரம், மனம், செல்வத்தினால் தேவ இராச்சியத்தை ஸ்தாபியுங்கள். அனைவரையும் அதிமேன்மையானவர்கள் ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா யோகியாகி, தந்தையுடன் ஒத்துழைப்பதன் மூலம் உங்களை ஓர் இலகு யோகி ஆக்குவீர்களாக.சங்கமயுகத்தில் தந்தையுடன் ஒத்துழைப்பதே, இலகு யோகி ஆகுவதற்கான வழிமுறை ஆகும். தமது ஒவ்வோர் எண்ணத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் தந்தையுடன் இராச்சியத்தை ஸ்தாபிக்கும் அவரின் பணியில் ஒத்துழைப்பவர்கள், ஞானம் நிறைந்தவர்கள் எனப்படுகிறார்கள். அவர்கள் யோகி ஆத்மாக்கள், அத்துடன் உண்மையான சேவையாளர்களும் ஆவார்கள். உங்களின் மனம் இல்லாவிட்டால், உங்களின் சரீரத்தால், உங்களின் சரீரம் இல்லாவிட்டால், உங்களின் செல்வத்தால், உங்களின் செல்வம் இல்லாவிட்டால், உங்களால் முடியுமான விதத்தில் ஒத்துழையுங்கள். இதுவும் யோகமே ஆகும். நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள் என்பதனால், நீங்களும் தந்தையுமே இருக்கிறீர்கள். மூன்றாவது நபர் இல்லை. இந்த முறையில், நீங்கள் சதா யோகிகள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
சங்கமயுகத்தில், சகித்துக் கொள்வது, அதாவது, மரணிப்பது என்றால் சுவர்க்க இராச்சியத்தைக் கோருவதாகும்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
காலத்திற்கேற்ப, உங்களின் மனம், உங்களின் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் என்ன கர்மக்கணக்குகள் இருந்தாலும் அவற்றை எரிமலை நினைவால் எரித்து விடுங்கள். அன்பெனும் பாடத்தில் பாப்தாதா உங்களைச் சித்தி அடையச் செய்துள்ளார். ஆனால் இப்போது அந்த அன்பு ஒரு நெருப்பைப் போல் இருக்க வேண்டும். குழந்தைகளான உங்களின் எரிமலை நினைவினூடாக எழுகின்ற யோக அக்கினியில் இந்த உலகில் எரிகின்ற ஊழல் மற்றும் வன்முறையின் நெருப்பு முடிவடையும்.