17.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதற்கு சகல வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மலராக வேண்டுமாயின் நீங்கள் உண்ணும் உணவு தூய்மையைக் கடைப்பிடிக்கும் ஒருவரினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி:
அங்கே 21 பிறவிகளுக்குத் தொடரவுள்ள எதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கே பயிற்சி செய்கிறீர்கள்?

பதில்:
சரீரத்தினாலும் மனதினாலும் நீங்கள் சதா ஆரோக்கியமாக இருப்பதற்கே இங்கே நீங்கள் பயிற்சி செய்கிறீர்கள். ததீசி ரிஷியைப் போல் நீங்கள் உங்கள் எலும்புகளையும் இந்த யாகத்தின் சேவைக்குக் கொடுக்க வேண்டும். எவ்வாறாயினும் இங்கே ஹத்தயோகம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் சரீரம் பலவீனம் அடைவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. இங்கே நீங்கள் பயிற்சி செய்கின்ற யோகத்தின் மூலம் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றீர்கள்.

ஓம் சாந்தி.
ஒரு கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கின்றார்கள். ரோஜாக்கள் எங்கே? யாரெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருக்கின்றார்கள்? இதுவும் ஒரு பூந்தோட்டம், எனினும் இது வரிசைக்கிரமமாக உள்ளது. இங்கே நான் ஒரு ரோஜாவைப் பார்க்கின்றேன். அதன் அருகில் மிகவும் நறுமணம் கமழும் இன்னுமொரு மலரையும் பார்க்கின்றேன். இன்னுமோர் இடத்தில் எருக்கலம் பூவையும் பார்க்கின்றேன். பூந்தோட்டத்தின் அதிபதி அவற்றைப் பார்வையிட வேண்டும். இந்த முட்காட்டை அழித்து மலர்களின் மரக்கன்றுகளை நாட்டுவதற்காக வருமாறு நீங்கள் பூந்தோட்டத்தின் அதிபதியை அழைக்கின்றீர்கள். முட்களில் இருந்து மலர்களுக்கான கன்றுகள் எவ்வாறு நாட்டப்படுகின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நடைமுறைரீதியாக அறிந்துள்ளீர்கள். எவ்வாறாயினும் உங்களிற் சிலரே இந்த விடயங்களைப் பற்றி சிந்திக்கின்றீர்கள். அவரே பூந்தோட்டத்தின் அதிபதியும் படகோட்டியும் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். மலர்களான உங்களைப் பார்க்கும் பொழுது தந்தை சந்தோஷம் அடைகின்றார். நீங்கள் முட்களிலிருந்து மலர்களாக மாறுகிறீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறீர்கள். இந்த ஞானம் எவ்வளவு மேன்மையானதெனப் பாருங்கள். இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதற்குப் பரந்த புத்தி தேவைப்படுகிறது. இந்த உலகம் கலியுகவாசிகளைக் கொண்ட நரகமாகும். நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். சந்நியாசிகள் தங்கள் வீடுகளை விட்டு ஓடிவிடுகின்றனர். நீங்கள் எங்கேயும் ஓடத் தேவையில்லை. சில வீடுகளில் ஒருவர் முள்ளாகவும் மற்றவர் மலராகவும் இருக்கின்றனர். சிலர் பாபாவிடம் கேட்கின்றனர்: பாபா நான் என் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? பாபா பதிலளிப்பார்: நீங்கள் அப்படியே செய்யலாம். அவரை வீட்டில் வைத்திருந்து பராமரியுங்கள். உங்களிடம் அத்தகைய தைரியம் இல்லை என்பது நீங்கள் கேட்டதிலிருந்து புரிகிறது. ஆகவே பாபா பதில் கூறுகிறார்: நீங்கள் அப்படியே செய்யலாம். சிலர் கூறுகின்றனர்: நான் எப்பொழுதும் நோய்வாய்ப்படுகிறேன், மருமகள் வந்தால் அவர் தயாரிக்கும் உணவையே நான் உண்ண நேரிடும். பாபா பதில் கூறுகிறார்: நீங்கள் அதனை உண்ணலாம். பாபா வேண்டாம் எனக் கூறுவாரா? சூழ்நிலைகள் அவ்வாறிருப்பின், நீங்கள் அதனை உண்ண வேண்டுமாயின் அப்படியே செய்யுங்கள். எவ்வாறாயினும் அங்கே பற்றும் இருக்கிறதுதானே? ஒருவரின் மருமகள் தங்கள் வீட்டினுள் பிரவேசிக்கும் பொழுது அதனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அது ஓர் இறைவியே வந்து விட்டதைப் போன்றிருக்கும்! அவர்கள் அதிக சந்தோஷம் அடைகின்றனர். எவ்வாறாயினும் நீங்கள் மலர்களாக வேண்டுமாயின் தூய்மையைக் கடைப்பிடிக்கும் ஒருவரால் தயாரிக்கப்பட்ட உணவையே உண்ண வேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இதனையிட்டு நீங்கள் எதனையும் கேட்க வேண்டியதில்லை. நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆகவே நீங்கள் இந்த முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகளவு முன்னெச்சரிக்கைகளை நீங்கள் கடைப்பிடிக்கும் பொழுது அதிகளவு நன்மையைப் பெறுகிறீர்கள். அதிகளவு முன்னெச்சரிக்கைகளை எடுப்பதற்குச் சில முயற்சியும் தேவைப்படுகிறது. நீங்கள் எங்காவது செல்வதற்காகப் பயணிக்கும் பொழுது உங்களுக்குப் பசிக்குமாக இருந்தால் சில உணவுகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்குச் சிரமம் இருக்குமாயின் தவிர்க்கவே முடியாத சந்தர்ப்பங்களின் பொழுது புகையிரத நிலையங்களில் பாண் விற்பவர்களிடம் அதனை வாங்கி உண்ணலாம். தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே யோக சக்தி என அறியப்படுகிறது. இதில் ஹத்தயோகம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் சரீரம் பலவீனம் அடைவதை நீங்கள் அனுமதிக்கக்கூடாது. ததீசி ரிஷியைப் போல் நீங்கள் ஒவ்வொரு எலும்புகளையும் கொடுக்க வேண்டும். ஆனால் இதில் ஹத்தயோகம் என்ற கேள்விக்கே இடமில்லை. அந்த விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. சரீரம் மிக ஆரோக்கியமாக வைத்திருக்கப்பட வேண்டும். இந்த யோகத்தினைப் பயிற்சி செய்வதனால் நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமானவர்கள் ஆக வேண்டும். இதனை நீங்கள் இங்கே பயிற்சி செய்ய வேண்டும். இதில் கேட்பதற்கு எதுவும் இல்லை என பாபா விளங்கப்படுத்துகிறார். ஆம், முக்கியமான சிலவற்றில் நீங்கள் குழப்பம் அடைந்திருந்தால் நீங்கள் அதைக் கேட்கலாம். அற்ப விடயங்களை பாபாவிடம் கேட்பதினால் அதிகளவு நேரம் வீணாக்கப்படுகிறது. பெரிய மனிதர்கள் மிகக் குறைவாகவே பேசுகிறார்கள். சிவபாபாவே சற்கதி அருள்பவர் என அழைக்கப்படுகிறார். இராவணனை சற்கதியை அருள்பவன் என அழைக்கப்பட முடியாது. அவன் அவ்வாறானவன் ஆயின் அவனது கொடும்பாவி ஏன் எரிக்கப்படுகிறது? இராவணன் மிகப் பிரபல்யமானவன் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இராவணனிடம் அதிகளவு பலம் இருந்தபொழுதும் அவன் இன்னமும் உங்கள் எதிரிதானே? இராவணனின் இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கிறது. எவ்வாறாயினும் அவனது புகழ் எதையாவது எப்பொழுதாவது நீங்கள் கேட்டுள்ளீர்களா? எதுவும் இல்லை. ஐந்து விகாரங்களே இராவணன் என அழைக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். சாதுக்களும் புனிதர்களும் தூய்மையாக இருப்பதனாலேயே புகழப்படுகின்றனர். மனிதர்கள் அனைவரும் இந்த நேரத்தில் தூய்மை அற்றுள்ளனர். எத்தகையவர் வந்தாலும் பரவாயில்லை. முக்கியஸ்தர் ஒருவர் வந்து பாபாவைச் சந்திக்கக் கேட்டாலும் பாபா அவரிடம் என்ன வினவுவார்? இராம இராச்சியத்தைப் பற்றியும் இராவண இராச்சியத்தைப் பற்றியும் எப்பொழுதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா அல்லது மனிதர்கள், தேவர்கள் பற்றியும் எப்பொழுதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா என பாபா அவரிடம் வினவுவார். இந்த நேரத்தில் மனிதர்களின் இராச்சியமா அல்லது தேவர்களின் இராச்சியமா உள்ளது? மனிதர்கள் யார்? தேவர்கள் யார்? யாருடைய இராச்சியத்தில் தேவர்கள் இருந்தனர்? தேவர்கள் சத்தியயுகத்திலேயே இருந்தனர். அரசரும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே பிரஜைகளும். இது புதிய உலகமா அல்லது பழைய உலகமா? என நீங்கள் வினவலாம். சத்திய யுகத்தில் ஆட்சிபுரிந்தவர்கள் யார்? தற்பொழுது இது யாருடைய இராச்சியம்? படம் உங்கள் முன்னால் உள்ளது. பக்தி என்றால் என்ன, இந்த ஞானம் என்றால் என்ன என்பதனைத் தந்தை மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். தங்களால் எதனையும் கிரகிக்க முடியாதுள்ளது எனக் கூறும் குழந்தைகளுக்குத் தந்தை கூறுவார்: ஓ! ஆனால் அல்பாவையும் பீற்றாவையும் புரிந்து கொள்வது இலகுவானதுதானே? தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள் என அல்பாவாகிய தந்தை கூறுகிறார். பாரத மக்கள் சிவனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் எப்பொழுது பாரதத்திற்கு வந்து அதனைச் சுவர்க்கம் ஆக்கினார்? பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பது இன்னமும் அவர்களுக்குத் தெரியாது; அவர்கள் அதனை மறந்து விட்டார்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதை நீங்களும் அறிந்திருக்கவில்லை என்றும் இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையினால் தேவர்கள் ஆக்கப்படுகிறீர்கள் என்பதையும் அவர்களுக்குக் கூறுங்கள். நான் ஒருவரே இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துபவர். “ஒரு வினாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவு கூரப்படுகிறது. எவ்வாறாயினும் அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படவில்லை. நீங்கள் ஒரு விநாடியில் சுவர்க்கத்தின் தேவதைகள் ஆகுகின்றீர்கள். இது இந்திர சபை என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரனே மழையின் கடவுள் என அவர்கள் நம்புகின்றனர். மழையைப் பொழியச் செய்யும் ஒருவருக்கான ஒன்றுகூடல் இருக்க முடியுமா? இந்திரலோகம், இந்திரசபை போன்ற பல விடயங்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இன்று நீங்கள் இந்த முயற்சியை மீண்டும் ஒருமுறை செய்கிறீர்கள். இது ஒரு கல்வி, அப்படித்தானே? நீங்கள் சட்டத்தரணி ஆகுவதற்குக் கற்பீர்களாயின் நாளையே சட்டத்தரணி ஆகுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீPர்கள். இங்கே நீங்கள் இன்று கற்கிறீர்கள், நாளை உங்கள் சரீரங்களை நீக்கி அந்த இராச்சியத்தில் பிறப்பெடுப்பீர்கள். நீங்கள் பெறுகின்ற வெகுமதி உங்கள் எதிர்காலத்திற்கு உரியது. நாங்கள் இங்கே கற்று, பின்னர் சென்று சத்திய யுகத்தில் பிறப்பெடுக்கிறோம். இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவதே எங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். இது இராஜயோகம். ‘பாபா, எனது புத்தி திறக்கவில்லை’ எனச் சிலர் கூறினால், அதுவே அவர்களின் பாக்கியம் ஆகும். நாடகத்தில் அவையே அவர்களின் பாகங்கள். பாபாவால் எப்படி அதை மாற்ற முடியும்? சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது வரிசைக்கிரமம், இல்லையா? எல்லோரும் சக்கரவர்த்திகள் ஆகுவார்கள் என்றில்லை. கடவுளின் சக்தி இங்கே இருப்பதனால் அவரால் அனைவரையும் சக்கரவர்த்தி ஆக்க முடியும் எனச் சிலர் கூறுகின்றனர். அப்பொழுது பிரஜைகள் எங்கிருந்து வருவார்கள்? இது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொரு விடயம். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம். இப்போது சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் என்பது பெயரளவிலேயே உள்ளது. அவர்களுக்கு அப்பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூறு அல்லது இருநூறு ஆயிரங்களைச் செலுத்துவதன் மூலம் அவர்களால் ஒரு பட்டத்தைப் பெற முடியும். அவர்களும் அதற்கேற்ற பண்பான முறையில் செயற்பட வேண்டும். ஸ்ரீமத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் இராச்சியத்தை இப்பொழுது ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே அனைவரும் மிக அழகாக இருப்பார்கள். அது இலக்ஷ்மி நாராயணின் இராச்சியமாக இருந்தது. சமயநூல்களில் கல்பத்தின் கால அளவு நீடிக்கப்பட்டதனால் மனிதர்கள் அந்த இராச்சியத்தை மறந்து விட்டனர். அவலட்சணத்தில் இருந்து அழகானவர்கள் ஆகுவதற்கு நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கிறீர்கள். தேவர்கள் அவலட்சணம் ஆனவர்களா? ஸ்ரீகிருஷ்ணர் நீல நிறமாகவும் இராதை வெள்ளை நிறமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அழகைக் கருத்திற் கொள்ளும் பொழுது இருவரும் அழகானவர்களாக இருக்க வேண்டும். பின்னர் காமச்சிதையில் அமர்ந்ததனால் இருவரும் அவலட்சணமானவர்கள் ஆகுகின்றனர். அங்கே அவர்கள் தங்க உலகின் அதிபதிகள். இங்கே இந்த உலகம் அழுக்கானது. முதலில் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும், பின்னர் நீங்கள் தெய்வீகக் குணங்களையும் உங்களுக்குள் கிரகிக்க வேண்டும். உங்களில் சிலர் உங்களால் புகைப் பிடிப்பதை விட முடியாமல் உள்ளது என பாபாவிடம் கூறுகிறீர்கள். பாபா கூறுகிறார்: சரி, நீங்கள் விரும்பியளவு புகைப்பிடியுங்கள்! நீங்கள் கேட்கும் பொழுது பாபா என்னதான் சொல்லுவார்? நீங்கள் முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்காது விட்டால் வீழ்கின்றீர்கள். நீங்களே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தேவர்கள் ஆகுவதனால் உங்கள் நடத்தையும் செயற்பாடுகளும் உங்கள் உணவும் பானமும் எவ்வாறிருக்க வேண்டும்? இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் புரியப்போவதாக நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். சரி, உங்களிடம் இந்தத் தெய்வீகக் குணங்கள் உள்ளனவா என உங்களுக்குள் பாருங்கள். நீங்கள் புகைப்பிடித்தால் எப்படி உங்களால் நாராயணன் போன்று ஆக முடியும்? நாரதரின் கதையும் உள்ளது. நாரதர் மாத்திரம் ஒரு பக்தர் அல்ல. மனிதர்கள் அனைவருமே பக்தர்கள் (நாரதர்) ஆவார்கள். தந்தை கூறுகிறார்: தேவர்கள் ஆகப் போகின்ற குழந்தைகளாகிய நீங்கள் அகநோக்கு உடையவர்களாகி உங்களையே கேளுங்கள்: நான் தேவராக ஆகுவதனால் எனது நடத்தை எவ்வாறிருக்க வேண்டும்? நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம். ஆகவே நாங்கள் மதுபானம் அருந்தக்கூடாது, சிகரெட் புகைக்கக்கூடாது, விகாரத்தில் ஈடுபடக்கூடாது. அத்துடன் தூய்மையற்ற மனிதரால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ளவும் கூடாது. இல்லையெனில் எமது ஸ்திதி பாதிக்கப்படும். தந்தை இங்கே அமர்ந்திருந்து இந்த விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். வேறு எவருக்கும் இந்த நாடகத்தின் இரகசியம் தெரியாது. இது ஒரு நாடகம். அனைவரும் நடிகர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் மேலிருந்து கீழே வருகிறோம். முழு உலகிலும் உள்ள ஒவ்வொரு நடிகருக்கும் நடிப்பதற்கு ஒரு பாகம் உள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்கும் நடிப்பதற்குச் சொந்தப் பாகம் உள்ளது. பல நடிகர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வாறு தங்கள் பாகங்களை நடிக்கின்றனர் எனப் பாருங்கள். இதுவே சமயங்களின் பல்வகை விருட்சமாகும். ஒரு மாமரம் பல்வகை விருட்சம் என அழைக்கப்பட மாட்டாது; அதில் மாம்பழங்களே இருக்கும். இது மனித உலக விருட்சம், ஆனால் இது சமயங்களின் பல்வகை விருட்சம் என அழைக்கப்படுகிறது. ஒரேயொருவரே விதையாவார். மனித வர்க்கத்தில் எவ்வளவு வகைகள் உள்ளன எனப் பாருங்கள்! அவர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமானவர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். மனிதர்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. தந்தையால் மாத்திரமே சாதாரண மனிதர்களைத் தெய்வீகப் புத்தி உடையவர்களாக மாற்ற முடியும். இந்தப் பழைய உலகில் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு சக்கரத்திற்கு முன் இருந்தது போன்று மரக்கன்று நாட்டப்பட்டுள்ளது. நற்பிரஜைகளினதும் சாதாரணப் பிரஜைகளினதும் மரக்கன்றுகளும் நாட்டப்படுகின்றன. இராச்சியம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது. அனைத்தையிட்டும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் முரளியைச் செவிமடுத்தாலும் செவிமடுக்காமல் விட்டாலும் பரவாயில்லை என்றில்லை. உங்களில் சிலரது புத்தி இங்கிருக்கும் பொழுது கூட வெளியில் அலைகிறது. உங்களில் சிலருக்குத் தனிப்பட்ட முறையில் நேரடியாக முரளியைக் கேட்கும் பொழுது உள்ளே சந்தோஷம் பொங்குகிறது. முரளியைக் கேட்பதற்காக அவர்கள் இங்கே ஓடிவருகின்றனர். கடவுளே கற்பிக்கின்றார்! ஆகவே அத்தகைய கல்வியை நீங்கள் கற்பதை நிறுத்தக்கூடாது. ஒலிநாடா அனைத்தையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது. ஆகவே அதனைச் செவிமடுங்கள். செல்வந்தர் எவரேனும் இதைக் கொள்வனவு செய்தால் ஏழைகளால் அதைக் கேட்க முடியும். பலர் நன்மை அடைவார்கள். ஏழைக் குழந்தைகளாலும் தங்களுக்கென மிக மேன்மையான ஒரு பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். குழந்தைகள் தங்குவதற்காகவே பாபா கட்டடங்களைக் கட்டியுள்ளார். சில ஏழைக் குழந்தைகள் 2 ரூபாவைக் கூட காசுக் கட்டளையில் அனுப்புகிறார்கள்! அவர்கள் கூறுகிறார்கள்: பாபா இந்தக் கட்டடத்திற்கு எனது பெயரில் ஒரு கல்லை இடுங்கள். அத்துடன் ஒரு ரூபாயை யக்யத்தில் இடுங்கள். பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புபவர்களும் இருக்க வேண்டும். வைத்தியசாலைகள் போன்றவை கட்டப்படும் பொழுது அதிகளவு செலவீனங்கள் ஏற்படுகின்றன. செல்வந்தர்கள் அரசாங்கத்திற்குப் பெருமளவு உதவி செய்கிறார்கள். அவர்கள் பிரதிபலனாக எதனைப் பெறுகிறார்கள்? தற்காலிகமான சந்தோஷம். எவ்வாறாயினும் நீங்கள் இங்கே செய்யும் எதற்கும் வெகுமதி 21 பிறவிகளுக்கு நீடிக்கிறது. பாபா எவ்வாறு அனைத்தையும் கொடுத்து முதல் இலக்க உலக அதிபதி ஆகுவார் என்பதை உங்களால் பார்க்க முடியும். 21 பிறவிகளுக்கான அத்தகைய ஒரு பேரத்தினை எவர்தான் பேச மாட்டார்கள்? இதனாலேயே நீங்கள் அவரைக் கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கிறீர்கள். அந்த விடயம் தற்காலத்தையே குறிக்கிறது. அவர் மிகவும் கள்ளங்கபடம் அற்றவர்! நீங்கள் விரும்பிய எதனையும் செய்யுங்கள் என அவர் கூறுகிறார். சில புதல்விகள் மிகவும் ஏழைகளாக இருக்கிறார்கள். தமது வாழ்வாதாரத்திற்காக ஆடைகளைத் தைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்கள் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தினைப் பெறப் போகின்றார்கள் என பாபா அறிவார். ஒரு பிடி அரிசி கொடுத்து 21 பிறவிகளுக்கு மாளிகையினைப் பெற்ற சுதாமாவின் (குசேலர்) உதாரணமும் உள்ளது. இந்த விடயங்களை நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் கள்ளங்கபடம் அற்ற பிரபு. இந்த தாதா கள்ளங்கபடமற்ற பிரபு அல்ல. இவரும் கூறுகிறார்: சிவபாபாவே கள்ளங்கபடமற்ற பிரபு ஆவார். அவர் வர்த்தகர், நகை வியாபாரி, மந்திரவாதி எனவும் அழைக்கப்படுகிறார். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பாரதம் இப்பொழுது ஏழ்மை அடைந்துள்ளது. மக்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். அரசாங்கம் ஏழையாக உள்ளது. பாரதம் எவ்வாறு மேன்மையானதாக இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அது உண்மையில் சுவர்க்கமாக இருந்தது. இன்னமும் அதன் அறிகுறிகள் உள்ளன. சோமநாதர் ஆலயம் வைரங்களாலும் இரத்தினங்களாலும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த வைரங்கள், இரத்தினங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு ஒட்டகங்களில் கொண்டு செல்லப்பட்டன. இந்த உலகம் நிச்சயமாக இப்பொழுது மாற்றம் அடையப் போகிறதென்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் இப்பொழுது அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறோம். எவற்றையேனும் செய்பவர்கள், அதற்கான வெகுமதியைப் பெறுகிறார்கள். மாயையிடம் இருந்து பெருமளவு எதிர்ப்புக்கள் இருக்கின்றன. நீங்கள் கடவுளைப் பின்பற்றுகிறீர்கள், ஏனைய அனைவரும் இராவணனின் அடிமைகளாக இருக்கின்றனர். நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள். சிவபாபா உங்களுக்கு உங்களின் ஆஸ்தியைக் கொடுக்கிறார்.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அகநோக்கு உடையவர்களாகி உங்களுடன் பேசுங்கள்: நான் தேவர் ஆகுவதனால் எனது நடத்தை எவ்வாறிருக்க வேண்டும்? எனது உணவு, பானம் எதுவாயினும் தூய்மை இல்லாமல் இருக்கிறதா?

2. உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குவதற்கு சுதாமாவைப் போல் உங்களிடம் உள்ள அனைத்தையும் கள்ளங்கபடமற்ற பிரபுவிடம் கொடுத்து விடுங்கள். இந்தக் கல்வியைத் தவற விடுவதற்கான எத்தகைய சாக்குப் போக்குகளையும் கூறாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆத்மாக்களின் ஆதி தர்மத்தைக் கடைப்பிடித்து, உங்களின் ஆதியான, அநாதியான ரூபங்களின் விழிப்புணர்வினால் தூய்மையாகவும் யோகியாகவும் ஆகுவீர்களாக.

பிராமணர்களின் ஆதி தர்மம் தூய்மை. ஆனால் தூய்மை இன்மை என்பது புறதர்மம். தூய்மையைக் கடைப்பிடிப்பது மக்களுக்குக் கஷ்டமாக உள்ளது, ஆனால் குழந்தைகளான உங்களுக்கு அது மிகவும் இலேசாக உள்ளது. ஏனென்றால் ஆத்மாக்களான உங்களின் உண்மையான ரூபம் எப்போதும் தூய்மையே என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உங்களின் அநாதியான ரூபம் தூய ஆத்மா என்பதே. உங்களின் ஆதி ரூபம் தூய தேவர் என்பதாகும். தற்சமயம் உள்ள கடைசிப் பிறவியிலும் இது தூய பிராமண வாழ்க்கை ஆகும். எனவே தூய்மையே பிராமண வாழ்க்கையின் ஆளுமை. தூய்மையாக இருப்பவர்களே யோகிகள் ஆவார்கள்.

சுலோகம்:
உங்களை ஓர் இலகு யோகி என்று அழைப்பதன் மூலம் கவனயீனம் அடையாதீர்கள். ஆனால் சக்தி ரூபம் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். அகநோக்கில் இருப்பவர்கள், சதா சந்தோஷமாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களால் எந்தவிதமான புறக் கவர்ச்சிகளாலும் கவரப்பட முடியாது. அவர்களால் தமது சொந்த மனதின் அல்லது மற்றவர்களின் கட்டளைகளால் கவரப்பட முடியாது. அகநோக்கில் இருப்பவர்கள் சதா சந்தோஷமாக இருப்பார்கள். அத்துடன் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகளாக, மாஸ்ரர் சந்தோஷத்தை அருள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் புறநோக்கில் இருந்து விடுபட்டிருப்பார்கள்.