20.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே பழைய பக்தர்களாகிய உங்களுக்கு உங்கள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கே தந்தை வந்துள்ளார். இந்த ஞானமே பக்தியின் பலனாகும். இதன் மூலமே நீங்கள் சற்கதி அடைகின்றீர்கள்.
கேள்வி:
சில குழந்தைகள் முன்னேறிச் செல்கையில் எவ்வாறு தங்கள் சொந்தப் பாக்கியத்தையே அழித்து விடுகின்றனர்?பதில்:
தந்தைக்கு உரியவராகிய பின்னரும் நீங்கள் சேவை செய்யாமல் இருந்தாலும் உங்கள் மீதோ அல்லது பிறர் மீதோ உங்களுக்குக் கருணை இல்லாவிட்டாலும் உங்கள் சொந்தப் பாக்கியத்தையே நீங்கள் அழிக்கிறீர்கள். அதாவது நீங்கள் உங்கள் சொந்த அந்தஸ்தை அழிக்கிறீர்கள். நீங்கள் நன்றாகக் கற்று யோகத்தில் நிலைத்திருந்தால் சிறந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். சேவை செய்யும் குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.பாடல்:
அதிகாலை வேளையில் இங்கு வந்திருப்பவர் யாரோ?ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் சரீரங்கள் அல்ல, ஆத்மாக்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். இந்நேரத்தில் மாத்திரமே பரமாத்மாவாகிய பரமதந்தையிடம் இருந்து நீங்கள் இந்த ஞானத்தை பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் வந்திருப்பதால் நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஆத்மாவே ஒரு சரீரத்தில் பிரவேசிக்கின்றார். ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களைத் தொடர்ந்தும் நீக்கி இன்னொரு சரீரத்தை எடுக்கின்றனர். ஆத்மாக்கள் மாறுவதில்லை, சரீரங்களே மாறுகின்றன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆகையால் உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். இந்த ஞானத்தை உங்களுக்கு என்றுமே வேறு எவராலுமே கொடுக்க முடியாது. குழந்தைகளின் அழைப்பை ஏற்று தந்தை இப்பொழுது வந்திருக்கிறார். இதுவே அதிமேன்மையான சங்கம யுகம் என்பதைக் கூட எவரும் அறியார். தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: முழு உலகமும் அதி மேன்மையானதாக ஆகவேண்டிய பொழுது அதிமேன்மையான சங்கமயுகத்தில் நான் வரவேண்டும். இந்நேரத்தில் முழு உலகமும் அதிகளவு சீரழிந்தும் மிகவும் தூய்மையற்றும் உள்ளது. அந்த உலகம் அமரத்துவமான உலகம் என்றும் இந்த உலகம் மரண உலகம் என்றும் அழைக்கப்படுகிறது. மரண உலகில் மனிதர்கள் அசுர குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அமரத்துவ உலகில் மனிதர்கள் தெய்வீகக் குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகையாலேயே அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இங்கும் நல்ல சுபாவம் உடையவர்கள் தேவர்கள் போன்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சிலர் தெய்வீகக் குணங்களுடன் இருக்கிறார்கள். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் அசுரத்தனம் மிக்கவர்களாக உள்ளனர்; அவர்கள் ஐந்து விகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். ஆகையினாலேயே அவர்கள் பாடுகிறார்கள்: வந்து எங்களை இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்! விடுதலை செய்யப்பட்டவர் ஒரு சீதை மாத்திரம் அல்ல. பக்தர்கள் சீதைகள் என்றும் கடவுளே இராமர் என்றும் அழைக்கப்படுகிறார் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். அவர் பக்தர்களுக்கு அவர்களின் பக்திக்கான பலனைக் கொடுக்கவே வருகிறார். முழு உலகத்தினரும் எல்லையற்ற இராவண இராச்சியத்தின் பிடியில் சிக்கியுள்ளார்கள். அவர் வந்து அவர்களை விடுவித்து இராம இராச்சியத்திற்கு அழைத்துச் செல்கிறார். அது திரேதா யுகத்துச் சத்திரியர் குல அரசரான இராமர் என்ற கேள்விக்கு இடமில்லை. அவர் திரேதாயுக அரசர். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது தமோபிரதானாகி முற்றிலும் உக்கிய நிலையில் இருக்கிறீர்கள். அவர் ஏணியில் கீழறங்கி இறுதிப்படியில் இருக்கிறார். பூஜிக்கத் தகுதி வாய்ந்தவராக இருந்த அவர் இப்பொழுது பூஜிப்பவராகி உள்ளார். தேவர்கள் எவரையும் பூஜிப்பதில்லை. அவர்கள் தாமே பூஜிக்கத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். பின்னர் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகும்பொழுது வழிபாடு ஆரம்பிக்கிறது. அவர்கள் பாவப்பாதைக்குச் செல்லும் பொழுது பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். பூஜிப்பவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை வணங்குகிறார்கள். இந்த நேரத்தில் ஒருவரேனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் அல்ல. அதிமேலான கடவுளே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர், சத்தியயுகத்துத் தேவர்களும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். இந்நேரத்தில் அனைவரும் பூஜிப்பவர்கள். முதலில் சிவனின் வழிபாடே உள்ளது. அது கலப்படமற்ற வழிபாடாகும். முதலில் சதோபிரதான் வழிபாடு இருக்கின்றது. பின்னர் அது சதோ வழிபாடு ஆகுகிறது. பின்னர் அவர்கள் தேவர்களிலிருந்து விலகி நீர், மனிதர்கள், பறவைகள் போன்றவற்றை வழிபட ஆரம்பிக்கின்றனர். நாளுக்கு நாள் பலவற்றின் வழிபாடு உள்ளது. தற்காலத்தில் பல சமய மாநாடுகள் இடம்பெறுகின்றன: சிலவேளைகளில் ஆதி சனாதன தர்மத்தினதும் (ஆதிசனாதன புராதன தர்மம்) சிலவேளைகளில் ஜெயின்களின் சமயத்தினதும் சிலசமயங்களில் ஆரிய சமாஜிகளின் சமயத்தினதும் மாநாடுகள் இடம்பெறுகின்றன. தமது சமயமே மேன்மையானது எனக் கருதுவதால் அவர்கள் பலரையும் அழைக்கின்றனர். ஒவ்வொரு சமயத்திலும் ஏதோவொரு விசேட நற்குணம் இருப்பதால் அவர்கள் தங்களை மேன்மையானவர்களாகக் கருதுகின்றனர். ஜெயின்களிலும் பல வகையினர் உள்ளனர்; அங்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு வகையினரேனும் நிச்சயமாக உள்ளனர். அவர்களில் சிலர் நிர்வாணமாகவும் இருக்கின்றனர். அவர்கள் நிர்வாணமாக இருத்தல் என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. கடவுள் பேசுகிறார்: நிர்வாணமாக இருத்தல் என்பதன் அர்த்தமானது நீங்கள் சரீரம் இன்றியே வந்தீர்கள், சரீரம் இன்றியே மீண்டும் திரும்பச் செல்ல வேண்டும் என்பதாகும். ஆகவே பின்னர் அவர்கள் தங்கள் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக உள்ளனர். அவர்கள் கடவுளின் வாசகங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு வந்து உங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சரீரங்களை எடுத்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருகிறார்கள். விருட்சம் தொடர்ந்தும் வளருகிறது. பல புதிய வகையான சமயங்களும் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. அதனாலேயே இது பல்வகை நாடகம் என அழைக்கப்படுகிறது. இது பல்வகை சமயங்களினதும் விருட்சமாகும். ஒவ்வொன்றும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. முஹமது பின்னர் வந்தார். அனைத்திற்கும் முதலில் இஸ்லாமைச் சேர்ந்தவர்களே இருந்தனர். தற்பொழுது முஸ்லிம் மக்களின் சனத்தொகை மிக அதிகளவாக உள்ளது. ஆபிரிக்காவில் இருப்பவர்கள் பெரும் செல்வந்தர்கள். அவர்களிடம் தங்க, வைரச் சுரங்கங்கள் இருக்கின்றன. மக்கள் பெருமளவு செல்வம் உள்ள தேசத்தைக் கைப்பற்றுவதற்காகத் தாக்குகின்றனர். கிறிஸ்தவர்களும் மிகவும் செல்வந்தர்கள் ஆகியுள்ளனர். பாரதத்திலும் செல்வம் உள்ளது, ஆனால் அது மறைமுகமானது. அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு தங்கம் போன்றவற்றைப் பறிமுதல் செய்;கின்றனர். தற்பொழுது ஜெயின் குலத்தவர்கள் ஒவ்வொருவரும் தம்மை மேன்மையானவர்களாகக் கருதுவதனால் தொடர்ந்தும் பல மாநாடுகளை நடத்துகின்றனர். அனைத்துச் சமயங்களும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன. ஒரு கட்டத்தில் விநாசம் நிச்சயம் இடம்பெறும். அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. சமயங்கள் அனைத்திலும் எவரும் அறியாதுள்ள உங்கள் பிராமண தர்மமே அதிமேன்மையானது. பல கலியுகத்துப் பிராமணர்களும் உள்ளனர். எவ்வாறாயினும் அந்தப் படைப்பைச் சேர்ந்தவர்கள் பாவத்தின் மூலம் பிறக்கின்றனர். பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளாகவே இருக்க வேண்டும். அவர்கள் தம்மைப் பிரம்மாவின் குழந்தைகள் என அழைப்பார்களாயின் அவர்கள் சகோதர, சகோதரிகளாகவே இருக்க வேண்டும். ஆகையால் அவர்கள் திருமணம் செய்ய முடியாது. எனவே அந்தப் பிராமணர்கள் வாய்வழித் தோன்றல்கள் அல்ல என்பதை இது நிரூபிக்கின்றது; அவர்கள் வெறுமனே தமக்கு அப்பெயரைச் சூட்டிக் கொள்கின்றார்கள். உண்மையில் பிராமணர்களாகிய நீங்கள் தேவர்களை விடவும் மேன்மையானவர்கள் எனக் கூறப்படுகின்றீர்கள்; ஏனெனில் நீங்களே உச்சிக்குடுமிகள். பிராமணர்களாகிய நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றீர்கள். பரமாத்மா பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே ஞானக்கடலாக உள்ளார். வேறு எவருக்கும் இது தெரியாது. சிலர் தந்தையிடம் வந்து பிராமணர்களாகிய பின்னர் நாளையே சூத்திரர்கள் ஆகிவிடுகின்றார்கள். பழைய சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கு அதிகளவு முயற்சி தேவை. நீங்கள் ஓர் ஆத்மா, நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆன்மீகக் குழந்தைகளே ஆன்மீகத் தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். தந்தையை நினைவு செய்வதிலேயே மாயை உங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துகின்றாள். தந்தை கூறுகின்றார்: உங்கள் கைகள் செயல்களை ஆற்றட்டும், உங்கள் இதயம் தந்தையை நினைவு செய்யட்டும். இது மிகவும் இலகுவாகும். ஓர் அன்பிற்கினியவரும் ஒரு காதலியும் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் இருப்பதைப் போன்றிருக்க வேண்டும். தந்தையே அன்பிற்கினியவர். தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்ற குழந்தைகள் அனைவரும் காதலிகள். ஒரேயொரு தந்தை மாத்திரமே எவராலும் கவரப்படுவதில்லை, ஏனெனில் அவரைவிட மேலானவர்கள் வேறு எவருமில்லை. எவ்வாறாயினும் அவர் குழந்தைகளைப் புகழ்ந்து கூறுகின்றார்: பக்திப் பாதையின் ஆரம்பம் முதலே நீங்கள் அனைவரும் அன்பிற்கினியவரின் காதலிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் அழைத்தீர்கள்: வந்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து தூய்மை ஆக்குங்கள்! நீங்கள் அனைவரும் மணவாட்டிகள், நான் மணவாளன் ஆவேன். நீங்கள் அனைவரும் அசுரனின் சிறையில் சிக்கியுள்ளீர்கள். நான் உங்களை விடுவிக்கவே வந்திருக்கின்றேன். இங்கே அதிகளவு முயற்சிக்கான அவசியம் உள்ளது. குற்றப் பார்வை உங்களை ஏமாற்றுகின்றது. குற்றமற்ற பார்வையைக் கொண்டிருப்பதற்கு முயற்சி தேவை. தேவர்கள் அத்தகைய சிறந்த கதா பாத்திரத்தை உடையவர்கள்! அத்தகைய தேவர்களை உருவாக்க யாரோ ஒருவர் உங்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். மாநாட்டிற்கான தலைப்பு: மனித வாழ்க்கையில் தர்மத்திற்கான தேவை நாடகத்தை அறியாததால் அவர்கள் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளார்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. கிறிஸ்துவோ அல்லது புத்தரோ மீண்டும் எப்பொழுது வருவார்கள் என்பது கிறிஸ்தவர்களுக்கோ பௌத்தர்களுக்கோ தெரியாது. உங்களால் உடனடியாகவே அவர்களுக்கு மிகச்சரியான கணக்கைக் கூற முடியும். தர்மத்திற்கான தேவை உள்ளது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். முதலில் எந்தத் தர்மம் நிலவியது, பின்னர் எந்தெந்தச் சமயங்கள் வந்தன என்பதை நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். தாங்கள் எந்தச் சமயத்திற்கு உரியவர்களோ அந்தச் சமயத்தவர்களே இதனை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்களிடம் யோகம் இல்லை. யோகம் இல்லாது உங்களுக்குப் பலம் இருக்க முடியாது; சக்தி பெறப்பட மாட்டாது. தந்தை மாத்திரமே சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுமளவிற்குச் சர்வசக்தியும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள்; உங்கள் இராச்சியத்தை எவராலும் அபகரிக்க முடியாது. அந்த நேரத்தில் வேறு எந்த நாடும் இருக்க மாட்டாது. இப்பொழுது பல நாடுகள் உள்ளன. இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது? இது 5000 வருடங்களுக்கான சக்கரம். உலகத்தை உங்களால் அளவிட முடியாது. பூமியை உங்களால் அளவிட முடியும்; கடலை அளவிட முடியாது. எவராலும் வானத்தின் அல்லது கடலின் முடிவைக் காண முடியாது. ஆகையால் தர்மத்திற்கான அத்தகையதொரு தேவை உள்ளது என விளங்கப்படுத்துங்கள். முழுச் சக்கரமும் சமயங்களின் அடிப்படையிலேயே உள்ளது. இது பல்வேறு சமயங்களைக் கொண்ட விருட்சமாகும். இவ்விருட்சம் (படம்) குருடர்களுக்கான கண்ணாடியைப் போன்றது. நீங்கள் இப்பொழுது சேவைக்காக வெளியில் செல்கின்றீர்கள். நாளடைவில் உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. புயல் வீசும்பொழுது பல இலைகள் விழுகின்றன. வேறு சமயங்களில் புயல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் மேலிருந்து கீழே வரவேண்டும். இங்கே உங்கள் தர்மத்தின் ஸ்தாபனை மிகவும் அற்புதமானது. முதலில் வந்த பக்தர்களை மீண்டும் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களின் பக்திக்கான பலனைக் கொடுப்பதற்குக் கடவுள் வரவேண்டும். நீங்கள் அழைத்தீர்கள்: ஆத்மாக்களாகிய எங்களை மீண்டும் எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! தந்தை உங்கள் பாக்கியமான சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். சந்நியாசிகளுக்குச் சந்தோஷத்தில் நம்பிக்கை இருப்பதில்லை; அவர்கள் அநாதியான முக்தியையே விரும்புகின்றார்கள். அநாதியான முக்தி ஓர் ஆஸ்தி என்று அழைக்கப்பட மாட்டாது. சிவபாபாவும் தனது பாகத்தை நடிக்க வேண்டும். ஆகையால் அவர் எவ்வாறு எவரையேனும் அநாதியான முக்தியில் வைத்திருக்க முடியும்? பிரம்மாகுமார்கள் குமாரிகளாகிய உங்களுக்கு உங்கள் சொந்தத் தர்மத்தையும் ஏனைய அனைவரது சமயங்களையும் தெரியும். உங்களுக்கு அனைவர் மீதும் கருணை இருக்க வேண்டும். சக்கரத்தின் இரகசியங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். அவர்களிடம் கூறுங்கள்: உங்கள் சமய ஸ்தாபகர் தனக்குரிய நேரத்தில் மீண்டும் வருவார். பிறருக்கு விளங்கப்படுத்துபவர்கள் திறமைசாலிகளாக இருப்பது அவசியம். அனைவருமே சதோபிரதானாகி அதன் பின்னர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளை கடந்து செல்ல வேண்டும் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். இப்பொழுது இது இராவண இராச்சியம். தந்தை உங்களுக்குக் கூறுவதே உண்மையான கீதையாகும். அசரீரியானவரே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்கள் தந்தையாகிய அசரீரியான கடவுளை அழைக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கேயே வசிக்கின்றீர்கள். நீங்கள் பரமாத்மா என அழைக்கப்படுவதில்லை: ஒரேயொரு பரமாத்மாவே உள்ளார்: அவரே அதிமேலான கடவுள். அதன் பின்னர் குழந்தைகளாகிய சகல ஆத்மாக்களும் உள்ளனர். அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொருவரே அதன்பின்னர் தேவர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரிலும் ஸ்ரீகிருஷ்ணரே முதலாம் இலக்கத்தவர். ஏனெனில் அவரது ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையானவை. நீங்கள் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர்கள், உங்கள் வாழ்வுகள் பெறுமதி வாய்ந்தவை. தேவர்களினுடையது அன்றி பிராமணர்களின் வாழ்வுகளே பெறுமதி வாய்ந்தவை. தந்தை உங்களைத் தனது குழந்தைகளாக்கி பின்னர் உங்கள் மீது அதிகளவு முயற்சி செய்கின்றார்; தேவர்கள் அந்தளவு முயற்சி செய்வதில்லை. அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதற்காகவே அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள். இங்கேயோ தந்தை அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். மூன்றும் அவரே ஆவார். ஆகையால் நீங்கள் அவருக்கு அதிகளவு மதிப்பளிக்க வேண்டும். சேவாதாரிக் குழந்தைகள் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். வெகு சிலரே சேவை செய்வதில் திறமைசாலிகளாகவும் சேவை செய்வதில் மும்முரமாகவும் உள்ளார்கள். கரங்கள் தேவைப்படுகின்றன. யுத்தத்திற்குச் செல்லக் கற்பிக்கப்படுபவர்கள் அவர்களது தொழிலில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அம்மக்கள் அனைவரதும் பெயர்ப் பட்டியலை அவர்கள் வைத்திருக்கின்றனர். எவருமே இராணுவத்தை மறுத்து யுத்த களத்திற்குச் செல்லாமல் இருக்க முடியாது. அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தேவையான நேரத்தில் அவர்கள் அழைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மறுப்பவர்களுக்கு எதிராக அவர்கள் வழக்குத் தொடர்கிறார்கள். இங்கே அவ்வாறில்லை. இங்கே நன்றாகச் சேவை செய்யாதவர்களின் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. சேவை செய்யாதிருப்பது என்றால் தங்களையும் அழித்து தமது அந்தஸ்தையும் அழித்துக் கொள்வதாகும். அவர்கள் தமது சொந்தப் பாக்கியத்தையே அழித்துக் கொள்கின்றார்கள். நீங்கள் நன்றாகக் கற்று யோகத்தில் நிலைத்திருந்தால் சிறந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். உங்கள் மீது உங்களுக்குக் கருணை இருக்க வேண்டும். உங்கள் மீது உங்களுக்கு கருணை இருந்தால் உங்களால் பிறர் மீதும் கருணை கொண்டிருக்க முடியும். தந்தை தொடர்ந்தும் அனைத்து வகையான விளக்கத்தையும் கொடுக்கின்றார். இந்த உலக நாடகம் எவ்வாறு தொடர்ந்து செல்கின்றது எனப் பாருங்கள். இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. இவ்வுலகில் உள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. நீங்கள் இப்பொழுது அழைப்பிதழ்களைப் பெறுகிறீர்கள். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் நீங்கள் எதை விளங்கப்படுத்துவீர்கள்? அவர்கள் உங்களுக்கு ஓரிரு மணித்தியாலங்கள் கொடுத்தால் உங்களால் எதையாவது விளங்கப்படுத்த முடியும். அவர்களுக்கு நாடகத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. நீங்கள் மிகவும் நல்ல கருத்துக்களை எங்கும் எழுத வேண்டும். எவ்வாறாயினும் சில குழந்தைகள் இதனைச் செய்ய மறந்து விடுகின்றார்கள். தந்தையே படைப்பவர்; அவர் குழந்தைகளாகிய உங்களைப் படைக்கின்றார். அவர் உங்களைத் தனக்கு உரியவர்களாக்கி உள்ளார். அவர் இயக்குநராகி உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தை கொடுப்பதுடன் இந்த ஞானத்தையும் கொடுத்து செயலாற்றுகின்றார். இதுவே அவரது அதிமேலான செயலாகும். நாடகத்தில் நீங்கள் படைப்பவரையும் இயக்குநரையும் பிரதான நடிகரையும் அறியாதிருந்தால் உங்களால் என்ன பயன்? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பெறுமதி மிக்க இவ்வாழ்வில் உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் மீது பெருமளவு மரியாதை கொண்டிருங்கள். இக்கல்வியில் மிகவும் திறமைசாலிகளாகி சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். உங்கள் மீது கருணை கொண்டிருங்கள்.2. உங்களைச் சீர்திருத்துவதற்கு நாகரிகமானவர்கள் ஆகுங்கள். உங்கள் நடத்தையைச் சீராக்குங்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குச் சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீக அப்பியாசத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் சதா சக்திசாலிகளாகி இறுதிப் பரீட்சையில் சித்தி அடைவீர்களாக.தற்சமயம் சரீரத்தின் நோய்கள் எல்லாவற்றையும் குணப்படுத்துவதற்காக தேகப்பியாசத்தைக் கற்பிக்கிறார்கள். எனவே ஆத்மாவான உங்களைச் சக்திசாலிகள் ஆக்குவதற்கு ஆன்மீக அப்பியாசத்தை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். உங்களைச் சுற்றிலும் எவ்வளவில் சூழலில் குழப்பங்கள் இருந்தாலும் அந்த சத்தத்தின் மத்தியில் இருந்தவாறே நீங்கள் சத்தத்திற்கு அப்பால் ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் விரும்பும் இடத்தில் நீங்கள் விரும்பியளவு நேரத்திற்கு உங்களின் மனதைச் ஸ்திரப்படுத்துங்கள். அப்போது நீங்கள் சக்திசாலிகள் ஆகுவீர்கள். அதனால் இறுதிப் பரீட்சையில் சித்தி அடைவீர்கள்.
சுலோகம்:
விகாரங்களின் அடிப்படையில் உள்ள எந்தவிதமான சுபாவம், சம்ஸ்காரங்கள், கர்மங்களை அர்ப்பணிப்பதே உங்களை அர்ப்பணிப்பதாகும்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
உங்களின் நினைவானது எரிமலை ஆகாதவரை விநாசத்தின் தீச்சுவாலைகளும் தமது சம்பூரணமான எரிமலை வடிவத்தை எடுக்காது. அவை கொழுந்து விட்டு எரியும், பின்னர் அணைந்து விடும். ஏனென்றால் சில வேளைகளில் எரிமலை ரூபத்திலும் ஆதார மூர்த்திகளாகவும் உள்ள ஆத்மாக்கள் சதா எரிமலை ரூபமாக இருப்பதில்லை. இப்போது எரிமலை ரூபம் ஆகுவதற்கான திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருந்து உங்களின் மனம் மற்றும் புத்தியின் ஒருமுகப்படுத்தலை எங்கும் சக்திவாய்ந்த யோக அதிர்வலைகளைப் பரப்புவதற்கு ஒன்றுதிரட்டிய முறையில் பயன்படுத்துங்கள்.