21.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தேவர்களாகுவதற்கு முன்னர், நிச்சயமாக நீங்கள் பிராமணர்கள் ஆகவேண்டும். பிரம்மாவின் வாய் மூலம் பிறப்பவர்கள் மட்டுமே இராஜயோகத்தைக் கற்பதால், தேவர்களாகுகின்ற, உண்மையான பிராமணர்கள்.

பாடல்:
ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்கள் (சற்சங்கங்கள்) அனைத்தையும் விட எவ்விடயத்தில் உங்களுடைய ஆன்மீக ஒன்றுகூடல் தனித்துவமானதாகவும், வேறுபட்டதாகவும் உள்ளது?

பதில்:
ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில்; ஓர் இலக்கோ, குறிக்கோளோ இல்லை. மக்கள் தங்கள் செல்வத்தையும், சொத்தையும் இழந்து, தொடர்ந்தும் அலைகின்றார்கள். இந்த ஆன்மீக ஒன்றுகூடலில் நீங்கள் தடுமாறி அலைவதில்லை. இது ஒரு பாடசாலையும், ஓர் ஆன்மீக ஒன்றுகூடலும் (சற்சங்கம்) ஆகும். நீங்கள் இந்தப் பாடசாலையில் கற்கின்றீர்களே தவிர, தடுமாறி அலைவதில்லை. கற்பதென்றால் வருமானம் ஈட்டுவதாகும். எந்தளவுக்கு நீங்கள் கற்று, இந்த ஞானத்தைக் கிரகித்து, பிறரையும் அவ்வாறே செய்யத் தூண்டுகிறீர்களோ, அந்தளவுக்கு வருமானமொன்றை நீங்கள் ஈட்டிக்கொள்கிறீர்கள். இந்த ஆன்மீக ஒன்றுகூடலுக்கு வருவதென்றால், எதையும் அன்றி, நன்மையையே அனுபவம் செய்வதாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய செவிகளால் செவிமடுக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். மீண்டும் மீண்டும் இதைச் செவிமடுப்பதனால், உங்கள் புத்தி அலைபாய்வதை நிறுத்தி, ஸ்திரமாகும். உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு, நீங்கள் இங்கே அமர்ந்திருப்பீர்கள். தேவர்களாகுவதற்கே இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். பிராமணர்களாகிய நீங்கள் கற்;கின்றீர்கள். எதைக் கற்கின்றீர்கள்? எவ்வாறு பிராமணர்களிலிருந்து தேவர்களாகுவது எனக் கற்கின்றீர்கள். குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்பொழுது, தாங்கள் கற்று ஒரு பொறியியலாளராகவோ அல்லது ஒரு வைத்தியராகவோ ஆகுவோம் என்று புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கல்லூரியில் அனுமதி பெற்றவுடனேயே இதை அறிந்திருப்பார்கள். அதேபோல், பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் பிராமணர்களாகிறீர்கள், மேலும், பிராமணர்களிலிருந்து நீங்கள் தேவர்களாகுவீர்கள் என்றும் புரிந்துகொள்கிறீர்கள். மனிதர்கள் தேவர்களாக மாறுகிறார்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. ஆனாலும், அவ்வாறு ஆகுபவர்கள் யார்? சகல இந்துக்களும் தேவர்கள் ஆகுவதில்லை. உண்மையில், இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை. ஆதி சனாதன தர்மம் இந்து மதம் அல்ல. ‘இந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?’ என்று யாரை நீங்கள் கேட்டாலும், அவர்கள் குழப்பமடைந்தே நிற்பார்கள். அறியாமையாலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானில் வசிப்பவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதன் பெயர் பாரதமே தவிர, இந்துஸ்தானல்ல. அது பாரத நாடு என்று அழைக்கப்படுகிறதே தவிர, இந்துஸ்தான் நாடு என்றல்ல. இது பாரதமாக இருப்பினும், இது எந்த நாடென்பது கூட அவர்களுக்குத் தெரியாது. தூய்மையற்றிருப்பதால், அவர்களால் தங்களைத் தேவர்கள் என்று கருதிக்கொள்ளவும் முடியாது. தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள். தற்பொழுது அந்த மதம் இல்லை. ஏனைய மதங்கள் எல்லாம் தோன்றியிருக்கின்றன. புத்தரின் மதம் பௌத்த மதமாகவும், ஏபிரஹாமின் மதம் இஸ்லாம் மதமாகவும், கிறிஸ்துவின் மதம் கிறிஸ்தவ மதமாகவும் இருக்கின்றன. ஆனால், இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை. இந்துஸ்தான் என்று பெயரை வைத்தவர்கள் வெளிநாட்டவரேயாவர். தூய்மையற்றிருப்பதால், அவர்கள் தங்களைத் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுவதில்லை. ஆதி சனாதன தர்மம் தேவ தர்மமே என்றும், அதுவே மிகப் புராதனமானது என்றும் தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்த மதம் எது? தேவ தர்மமேயாகும். அதனை இந்து தர்மம் என்று அழைக்க முடியாது. இப்பொழுது நீங்கள் பிரம்மாவால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளான, பிராமணர்களாக இருக்கிறீர்கள். பிராமணர்களிலிருந்து தேவர்களாகுவதற்காக நீங்கள் கற்கிறீர்கள். இந்துக்களிலிருந்து தேவர்களாகுவதற்காக நீங்கள் கற்கிறீர்கள் என்பதல்ல. நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். இதை நீங்கள் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது, எண்ணற்ற பல மதங்கள் இருப்பதையும், இன்னும் பல பெருகிக்கொண்டே செல்வதையும் பாருங்கள். நீங்கள் சொற்பொழிவாற்றும் இடங்களில் எல்லாம் இதை விளங்கப்படுத்துவது நல்லது. இப்பொழுது இது கலியுகம், சகல மதங்களும் தமோபிரதானாகி விட்டன. படங்களுடன் நீங்கள் விளங்கப்படுத்தினால், ‘நான் இன்னார்’, ‘நான் இன்னதாக இருக்கிறேன்’ என்ற அவர்களது அகங்காரம் அகன்று விடும். தாங்கள் தமோபிரதானாக இருப்பதை அவர்கள் உணர்வார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களுக்குத் தந்தையை அறிமுகம் செய்யுங்கள், அதனையடுத்து, இந்தப் பழைய உலகம் மாறப் போகின்றது என்பதைக் காட்டுங்கள். நாளுக்கு நாள், படங்கள் இன்னும் அழகானவையாக ஆகும். பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள் தங்கள் புத்திகளில் வரைபடங்களைப் பதித்து வைத்திருப்பதைப் போல, இவையனைத்தும் உங்கள் புத்தியில் பதிந்திருக்க வேண்டும். இதுவே முதற்தர வரைபடமாகும். இது திரிமூர்த்தியையும், பூகோளங்களான சத்திய, கலியுகங்களையும் காட்டுகின்றது. இப்பொழுது நீங்கள் மங்களகரமான சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். இப்பழைய உலகம் அழியப் போகிறது, ஒரேயொரு ஆதி சனாதன தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் ஆதி தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இந்து தர்மம் என்பதேயில்லை. வசிப்பிடமாகிய பிரம்ம தத்துவத்தைச் சந்நியாசிகள் கடவுள் என்று கருதுவதைப் போல், இந்துஸ்தானில் வசிப்பவர்கள் தம்மை இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். அவர்களுடையது உங்களுடையதிலிருந்து வேறுபட்டது. தேவர்கள் மிக மேன்மையானவர்கள். ‘இவர் தேவர் போன்றவர்’ என்று மக்கள் கூறுகிறார்கள். ஒருவருக்கு நல்ல குணங்கள் இருந்தால், ‘இவர் தெய்வீகக் குணங்கள் கொண்டவர்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். இராதையும், கிருஷ்ணரும் திருமணம் செய்த பின்னர் இலக்ஷ்மி, நாராயணர் ஆகுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர்களே விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார்கள். விக்கிரகங்கள் எல்லாமே இருக்கின்றபொழுதிலும், எவருக்குமே அவற்றைப் பற்றித் தெரியாதிருக்கின்றது. தந்தை இப்பொழுது இங்கிருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைவராலும் நினைவுசெய்யப்படுபவர் தந்தையே ஆவார். தங்கள் உதடுகளில் கடவுள் என்ற வார்த்தை இல்லாத மனிதர்களே இல்லை. கடவுள் அசரீரியானவர் என்று அறியப்படுகிறார். அவர்களோ ‘அசரீரி’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் கல்லுப்புத்தி கொண்டவர்களிலிருந்து தெய்வீகப் புத்தி கொண்டவர்களாக மாறியிருக்கிறீர்கள். இந்த ஞானம் பாரதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தவிர, ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கல்ல. ஆனாலும், எவ்வாறு அதிக விரிவாக்கம் இடம்பெறுகின்றது என்றும், ஏனைய நாடுகள் அனைத்தும் எவ்வாறு வந்து தோன்றுகின்றன என்றும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். பாரதத்தைத் தவிர வேறெந்த நாடும் எஞ்சியிருக்க மாட்டாது. இப்பொழுது அந்த ஒரேயொரு தர்மம் இல்லை; ஏனைய அனைத்தும் இருக்கின்றன. ஆலமரம் பற்றிய உதாரணம் மிகவும் சரியானது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் என்ற அத்திவாரம் இப்பொழுது இல்லை; விருட்சத்தின் ஏனைய பகுதிகள் நிலைத்திருக்கின்றன. எனவே, ஆதி சனாதன தேவ தர்மம் இருந்ததென்று கூறப்படுமே தவிர, இந்து தர்மம் என்றல்ல. இப்பொழுது நீங்கள் தேவர்களாகுவதற்காகப் பிராமணர்களாகி இருக்கிறீர்கள். அதனால், நிச்சயமாக நீங்கள் முதலில் பிராமணர்களாக வேண்டும். சூத்திர குலமும், பிராமணக் குலமும் என்று கூறப்படுகிறது. அரசர்கள், அரசிகள் இருக்கின்றபொழுதிலும் சூத்திர வம்சம் என்று அழைக்கப்படுவதில்லை. ஆரம்பத்தில், தேவர்கள் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகளாக இருந்தார்கள். இங்கே, இந்து சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் இருக்கிறார்கள். ஒரேயொரு பாரதமே இருப்பதால். எவ்வாறு அவர்கள் பிரிந்து சென்றார்கள்? அவர்களது சுவடுகள் கூட மறைந்து விட்டன் விக்கிரகங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. சூரிய வம்சமே முதற்தரமானது. இங்கே நீங்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆகுவதற்கே இப்பொழுது வந்திருக்கிறீர்கள். இது இராஜயோகம். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. உங்களைச் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினிகள் ஆக்குவதற்காகத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷம் உங்கள் இதயத்தில் இருக்கிறது. இதுவே சத்திய நாராயணன் ஆகுகின்ற, உண்மைக் கதையாகும். ஆரம்ப காலங்களில், சத்திய நாராயணனாகுகின்ற கதையைப் பிறவிபிறவியாகக் கேட்டு வந்தீர்கள், ஆனால், அது உண்மைக் கதையாக இருக்கவில்லை. பக்தி மார்க்கத்தில் ஒருபொழுதும் நீங்கள் மனிதனிலிருந்து தேவனாக முடியாது; உங்களால் நிச்சயமாக முக்தியையோ ஜீவன்முக்தியையோ அங்கே அடைய முடியாது. எவ்வாறாயினும், மனிதர்கள் அனைவரும் நிச்சயமாக முக்தியையும் ஜீவன்முக்தியையும் அடைகிறார்கள். இப்பொழுது அனைவரும்; பந்தனத்தில் இருக்கிறார்கள். இன்று கூட ஓர் ஆத்மா மேலிருந்து வருவாராக இருந்தால், அவர் ஜீவன்முக்தி வாழ்க்கை அடைகிறாரே தவிர, பந்தன வாழ்க்கையை அடைவதில்லை. அரைப் பங்கு காலத்திற்கு ஜீவன்முக்தியும், மீதி அரைப் பங்குக்குப் பந்தன வாழ்க்கையும் இருக்கின்றன. இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது; நீங்கள் அனைவரும் இந்த எல்லையற்ற நாடகத்தில் நடிகர்களாக இருக்கிறீர்கள். உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கே நீங்கள் வருகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த இடத்தில் வசிப்பவர்களல்ல. எவ்வாறு நீங்கள் கீழே வருகிறீர்கள் என்பதைத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்கள் தொடர்ந்தும் இங்கே மறுபிறவிகள் எடுக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்குமுள்ள முழு உலக வரலாறும், புவியியலும் குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கின்றன. எல்லையற்ற தந்தை மேலேயிருந்து என்ன செய்கிறார் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆகவே, அவர்கள் சீரழிந்த புத்தி கொண்டவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆரம்பத்தில் நீங்களும் சீரழிந்த புத்தி கொண்டவர்களாகவே இருந்தீர்கள். இப்பொழுது தந்தை படைப்பவர் பற்றியும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியுமான இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறார். அப்பாவிகளாகவும், சாதாரணமானவர்களாகவும் உள்ள உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. நீங்களே சுத்தமான புத்தி கொண்டவர்கள். சுத்தமானதே தூய்மையானதென்றும் அழைக்கப்படுகிறது. சீரழிந்த புத்தி கொண்டவர்கள் தூய்மையற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது நீங்கள் என்னவாகுகிறீர்கள் என்று சற்றுப் பாருங்கள்! பாடசாலைகளிலும் மாணவர்களால் தங்கள் கல்வியின் மூலம் உயர்ந்த அந்தஸ்தொன்றைப் பெற முடியும். உங்கள் கல்வியோ, உங்களை ஓர் இராஜ அந்தஸ்தை அடைய வைக்கின்ற, அனைத்திலும் அதிமேலானதொரு கல்வியாகும். தான தர்மங்கள் செய்வதால், அம்மக்கள் அரசர்களுக்குக் குழந்தையாகப் பிறக்கின்றார்கள். பிற்காலத்தில் அவர்கள் அரசர்களாகுகின்றார்கள். ஆனால் நீங்களோ இந்தக் கல்வியால் அரசர்களாகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களுக்கு நான் இராஜயோகம் கற்பிக்கிறேன். தந்தையைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க முடியாது. தந்தையே உங்களுக்கு இராஜயோக ஞானத்தைக் கற்பிப்பவர், அதையே நீங்கள் பின்பு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்குத் தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, அசரீரியான தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். அதன்பின்னர் சக்கரத்தைப் பற்றி அறிந்துகொள்வதால், நீங்கள் சத்திய யுகத்தில் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவீர்கள். இதை விளங்கப்படுத்துவது மிக இலகுவானதாகும். தற்பொழுது யாருமே தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களல்லர். அனைவரும் ஏனைய மதங்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டு விட்டார்கள். எவருக்கேனும் நீங்கள் விளங்கப்படுத்தும்பொழுது, முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். பலர் ஏனைய சமயங்களுக்குச் சென்று விட்டார்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். எண்ணற்ற பௌத்தர்களும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். சிலர் பலாத்காரமாக இஸ்லாமியர்கள் ஆக்கப்பட்டார்கள். பலர் பௌத்தர்களாகவும் ஆகினார்கள். ஒருவர் சொற்பொழிவாற்றியதும் ஆயிரக்கணக்கானவர்கள் பௌத்தர்களாக மதம் மாறினார்கள். கிறிஸ்தவர்களும் வந்து, இந்த வகையில் சொற்பொழிவாற்றினார்கள். அவர்களே இப்பொழுது மிகப்பெரிய சனத்தொகையைக் கொண்டவர்கள். இப்பொழுது உலகச் சக்கரம் முழுவதும் உங்கள் புத்தியில் சுழல்கின்றது, இதனாலேயே தந்தை கூறுகிறார்: நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். விஷ்ணுவும் சுயதரிசனச் சக்கரதாரியாகக் காட்டப்பட்டிருக்கிறார். ஏன் விஷ்ணுவைச் சக்கரத்துடன் காட்டியிருக்கிறார்கள் என்று மக்கள் புரிந்துகொள்வதில்லை. கிருஷ்ணரும், நாராயணரும் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகிறார்கள். இருவருக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இவர்கள் மூவரும் ஒருவரே. உண்மையில் சுயதரிசனச் சக்கரம் பிராமணர்களாகிய உங்களுக்கே உரியது. இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகிறீர்கள். சுயதரிசனச் சக்கரம் ஒருவரைக் கொல்வதற்கோ அல்லது வெட்டுவதற்கோ பயன்படுத்தப்படுவதல்ல் அது இந்த ஞானம் சம்பந்தப்பட்ட விடயமாகும். எந்தளவுக்கு ஞானச் சக்கரத்தைச் சுழற்றுகிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதில் ஒருவரின் தலையை வெட்டுவதற்கான கேள்வியில்லை; இது வன்முறைச் சக்கரமல்ல. இந்தச் சக்கரம் உங்களை அகிம்சாவாதிகளாக்குகின்றது. அவர்கள் அதன் அர்த்தத்தை முழுமையாக மாற்றி விட்டார்கள். தந்தையைத் தவிர, வேறு யாராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவில் சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் ஆத்மாக்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆரம்பத்தில், நீங்கள் ஆத்மாக்கள் என்பதை மறந்திருந்தீர்கள், அத்துடன் உங்கள் வீட்டையும் மறந்திருந்தீர்கள். ஓர் ஆத்மா இன்னமும் ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றார். பரமாத்மா கற்களிலும், கூழாங்கற்களிலும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆத்மாக்களின் தந்தையை அவர்கள் பெருமளவு அவதூறு செய்திருக்கிறார்கள். தந்தை மீண்டும் ஒருமுறை வந்து, ஆத்மாக்களான உங்களுக்கு இந்த ஞானத்தைத் தருகிறார். ஆத்மாக்கள் கற்களிலும், கூழாங்கற்களிலும், ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பார்கள் என்று ஒருபொழுதும் கூறப்பட முடியாது. விலங்குகளைப் பற்றிய விடயம் வேறுபட்டதாகும். மனிதர்களே கற்பவர்கள். இத்தனை பிறவிகளுக்கு என்னவாகி விட்டீர்கள்; என்று இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் 84 பிறவிகளை இப்பொழுது நீங்கள் பூர்த்திசெய்து விட்டீர்கள். 8.4 மில்லியன் பிறவிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. மனிதர்கள் அறியாமை என்ற காரிருளில் இருக்கிறார்கள். இதனாலேயே, ஞான சூரியன் உதிக்கும்பொழுது, அறியாமை இருள் அகல்கிறது என்று கூறப்படுகிறது. அரைச் சக்கர காலமாக, துவாபர, கலியுகங்களில் இருள் சூழ்ந்திருக்கிறது; அரைச்சக்கர காலமாகச் சத்திய, திரேதா யுகங்களில் ஒளி பரவியிருக்கிறது. இதுவே இரவையும் பகலையும் பற்றிய, ஒளியையும் இருளையும் பற்றிய ஞானமாகும். இவை எல்லையற்ற விடயங்கள். அரைச் சக்கர காலமாக நீங்கள் இருளில் பெரிதும் அலைந்து திரிந்தீர்கள்; பெருமளவுக்கு அலைந்து திரிதல் இருந்தது. நீங்கள் பாடசாலையில் கற்கும்பொழுது, அது தடுமாறி அலைதல் என்று அழைக்கப்படுவதில்லை. அந்தச் சற்சங்கங்களில் மக்கள் பெரிதும் தடுமாறி அலைகிறார்கள். அதிலிருந்த அவர்களுக்கு எந்த வருவாயும் இன்றி, இழப்பே ஏற்படுகிறது, இதனாலேயே அது அலைந்து திரிதல் எனப்படுகிறது. அலைந்து திரிந்தவாறே, மக்கள் தங்கள் செல்வம், சொத்துகள் எல்லாவற்றையும் இழந்து, வறியவர்களாகி விட்டார்கள். இப்பொழுது, இந்தக் கல்வியில், நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகக் கிரகிக்கின்றீர்களோ, எந்தளவுக்கு அதிகமாக மற்றவர்களையும் கிரகிப்பதற்குத் தூண்டுகிறீர்களோ, அந்தளவுக்கு மேலும் நன்மை, மற்றும் நன்மையே ஏற்படும். ஒரு தடவை பிராமணராகி விட்டீர்களென்றால், அதன்பின்னர் வேறெதுவுமின்றி, நன்மையே உள்ளது. பிராமணர்களான நீங்களே சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சுவர்க்கவாசிகளாகுவீர்கள். ஆனால், நீங்கள் அங்கே உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வதற்கே முயற்சி செய்கிறீர்கள். இது இப்பொழுது உங்கள் அனைவருக்கும் ஓய்வு ஸ்திதியாகும். ‘பாபா, எங்களை ஓய்வுக்கு, அதாவது, தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று நீங்களே கூறுகிறீர்கள். அதுவே ஆத்மாக்களின் உலகம். அசரீரி உலகம் சின்னஞ்சிறியது. ஆனால், இங்கே, நடமாடித் திரிவதற்குப் பாரியதொரு பூமி இருக்கிறது. இவ்விடயங்கள் அங்கே (அசரீரி உலகம்) இல்லை. அங்கே சரீரங்களும் இல்லை, பாகங்களும் இல்லை. அங்கே ஆத்மாக்கள் நட்சத்திரங்கள் போன்று இருக்கின்றனர். இது இயற்கையின் அற்புதமாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் எவ்வாறு மேலே இருக்கின்றன என்று சற்றுப் பாருங்கள். அதே போல், ஆத்மாக்களும் அங்கே வெகு இயல்பாக எவ்வித ஆதாரமும் இன்றி, ஒளித் தத்துவத்தில் இருக்கின்றனர். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தைக் கடைந்து, சுயதரிசனச் சக்கரதாரிகளாகுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதால், உங்கள் பாவங்களை அழியுங்கள். இரட்டை அகிம்சாவாதிகள் ஆகுங்கள்.

2. உயர்ந்ததோர் அந்தஸ்தொன்றை அடைவதற்கு, உங்கள் புத்தியைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்கி, இராஜயோக ஞானத்தைக் கற்றிடுங்கள். நீங்கள் சத்திய நாராயணனாகுகின்ற, இந்த உண்மைக் கதையைக் கேட்டு, மனிதனிலிருந்து தேவராக மாறுகிறீர்கள் என்ற சந்தோஷம் உங்கள் இதயங்களில் சதா இருக்கட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய கட்டளைகளுக்கு ஏற்ப, மனமும், புத்தியும் மிகச்சரியாக செயற்படுகின்ற, ஒரு சதா யோகி ஆவீர்களாக.

ஒரு சதா யோகி ஆகுவதற்கான, அதாவது, உங்கள் சுயத்தின் அதிபதியாகுவதற்கான விசேட சக்திகள் உங்கள் மனம் மற்றும் புத்தி ஆகும். மன்மனபவவே (உங்கள் மனதை என் மீது ஒருமுகப்படுத்துங்கள்) அதற்கான மந்திரமாகும். யோகம் என்பது புத்திக்கான யோகம் என்று கூறப்படுகின்றது. ஆகவே, அந்த விசேட சக்திகள் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால், அதாவது, அவை உங்களுடைய கட்டளைகளுக்கேற்ப சரியாக வேலை செய்தாலோ, உங்களுக்கு வேண்டிய எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்க முடிந்தாலோ, உங்களுக்கு வேண்டியவற்றில் உங்கள் புத்தியை ஒருமுகப்படுத்த முடிந்தும் உங்கள் புத்தி அரசராகிய உங்களை அலைந்து திரியச் செய்யாமல், ஆனால் கோட்பாடுகளுடன் வேலை செய்ய வைத்தாலோ, அப்பொழுது நீங்கள் ஒரு சதா யோகி என்ற கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
ஒரு மாஸ்டர் உலக ஆசிரியராக இருங்கள். ஆனால் காலத்தை உங்கள் ஆசிரியர் ஆக்காதீர்கள்.