23.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களை இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்கு, நீங்கள் இப்பொழுது படகோட்டியைக் கண்டடைந்து விட்டீர்கள். உங்கள் பாதங்கள் இப்பொழுது இப்பழைய உலகில் இல்லை. உங்கள் நங்கூரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கேள்வி:
மந்திரவாதியான பாபாவைத் தவிர வேறெவராலும் மேற்கொள்ள முடியாத, அற்புதமான மந்திர வித்தை என்ன?

பதில்:
சிப்பிகளைப் போன்று பெறுமதியற்ற ஆத்மாக்களை, வைரங்கள் போன்று பெறுமதியானவர்களாக மாற்றுவதாகும். அவர் பூந்தோட்டத்து அதிபதியாகி, முட்களை மலர்களாக மாற்றுகின்றார். அது அற்புதமான மந்திர வித்தையாகும். மந்திரவாதியாகிய, தந்தை மாத்திரமே இந்த அற்புதமான மந்திர வித்தையைப் புரிகின்றார். வேறு எவராலும் இந்த அற்புதமான மந்திர வித்தையைச் செய்ய முடியாது. மக்கள் பணம் உழைப்பதற்காகத் தம்மை மந்திரவாதிகள் என்று அழைக்கின்றார்கள். ஆனால், அவர்களில் எவராலும் தந்தையைப் போன்று மந்திர வித்தையைச் செய்ய முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை ஒருமுறை மாத்திரமே இந்த உலகச் சக்கரத்திற்குள், இந்த நாடகத்தினுள் வருகின்றார். வேறு சற்சங்கத்திலுள்ள எவருமே இவ்வாறு சிந்திக்க மாட்டார்கள். வேறு இடங்களில், சமயக் கதைகளைக் கூறுபவர், வந்திருப்பவர்களின் தந்தை கிடையாது. அவர்களும் அவரின் குழந்தைகள் அல்லர். உண்மையில், அவர்கள் அவரது சிஷ்யர்களும் அல்லர். இங்கே, நீங்கள் குழந்தைகள், மாணவர்கள், அத்துடன் சிஷ்யர்களும் ஆவீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். பாபா செல்லும் பொழுது, குழந்தைகளாகிய நீங்களும் இந்த அழுக்கான உலகை விட்டு நீங்கி, புதிய அழகான உலகிற்குச் சென்று, அங்கே ஆட்சிசெய்வீர்கள். இது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் புக வேண்டும். சரீரத்தில் வாழ்கின்ற ஆத்மா மிகவும் சந்தோஷமானவர் ஆகுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் மிகவும் சந்தோஷமானவர்கள் ஆகவேண்டும். அனைவரதும் தந்தையான எல்லையற்ற தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். உலகிலுள்ள ஏனைய அனைவரும் விவேகம் அற்றவர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இராவணன் உங்களை மிகவும் விவேகம் அற்றவர்களாக ஆக்கியுள்ளான். தந்தை வந்து, உங்களை விவேகமானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்யத் தகுதி பெறும் வகையில், அவர் உங்களை விவேகமானவர்கள் ஆக்குகின்றார். கடவுள் ஒரேயொரு முறை வந்து கற்பிக்கும் பொழுது மாத்திரமே, உங்களுக்கு இந்த மாணவ வாழ்க்கை கிடைக்கின்றது. இது உங்கள் புத்தியில் மாத்திரமே இருக்க முடியும். தமது வியாபாரம் போன்றவற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் புத்தியில் கடவுள் தமக்குக் கற்பிப்பது என்றுமே புக முடியாது. அவர்கள் தமது வியாபாரம் போன்றவற்றை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். ஆகையால், குழந்தைகளாகிய உங்களுக்குக் கடவுள் கற்பிக்கின்றார் என்பது தெரியும் என்பதால், நீங்கள் மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ஏனைய அனைவரும் சில சதப் பெறுமதி உடையவர்களின் குழந்தைகளாகவே உள்ளார்கள். இங்கே, நீங்கள் கடவுளின் குழந்தைகளாகி உள்ளதால், உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். உங்களில் சிலர் மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்கின்றீர்கள். ஏனையோர் கூறுகின்றார்கள்: ‘பாபா, எங்களால் இந்த ஞானத்தைப் பேச முடியாதுள்ளது; இது நடக்கின்றது, அது நடக்கின்றது.’ எவ்வாறாயினும் இந்த ஞானத்தைப் பேசுவது மிகவும் கடினமானதல்ல. பக்தி மார்க்கத்தில், சாதுக்களிடமும் புனிதர்களிடமும் சென்று கடவுளை எவ்வாறு சந்திக்க முடியும் என்று மக்கள் கேட்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவருக்கும் அது தெரியாது. அவர்கள் கடவுளை நினைவு செய்யுங்கள் என்று விரல்களால் மேல் நோக்கிச் சமிக்ஞை செய்து காட்டுகின்றார்கள். அவ்வளவே! அவர்களும் அந்தப் பதிலால் திருப்தி அடைகின்றார்கள். அவர் யார் என்பது உலகில் உள்ள வேறு எவருக்கும் தெரியாது. எவருக்கும் தந்தையைத் தெரியாது. நாடகம் இவ்வாறாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் நீங்கள் மீண்டும் மறந்து விடுவீர்கள். உங்கள் மத்தியிலும், அனைவருக்குமே தந்தையையும் படைப்பையும் தெரியும் என்றல்ல. சில இடங்களில், குழந்தைகளின் நடத்தை எப்படிப்பட்டது என்றால், கேட்கவே வேண்டாம்! அந்தப் போதை மறைந்து விடுகின்றது. குழந்தைகளாகிய உங்கள் பாதங்கள் இப்பொழுது இப்பழைய உலகில் இல்லாததைப் போன்றுள்ளது. உங்கள் பாதங்கள் இப்பொழுது இக்கலியுக உலகில் இருந்து உயர்த்தப்பட்டு விட்டதை நீங்கள் அறிவீர்கள். படகின் நங்கூரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் இப்பொழுது புறப்படத் தயாராக உள்ளோம். உங்களைத் தந்தை எங்கே அழைத்துச் செல்கின்றார் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. ஏனெனில், தந்தையே படகோட்டியும் பூந்தோட்டத்தின் அதிபதியும் ஆவார். அவர் வந்து, முட்களை மலர்களாக மாற்றுகின்றார். அவரைப் போன்று முட்களை மலர்களாக மாற்றக்கூடிய, பூந்தோட்டத்து அதிபதி வேறு எவரும் இல்லை. அவர் பெறுமதியற்ற சிப்பிக்களைப் போன்ற ஆத்மாக்களை வைரங்களைப் போன்று பெறுமதி உடையவர்களாக மாற்றுகின்றார்; இந்த மந்திரவித்தை சிறிய விடயமல்ல. இக்காலத்தில், பல மந்திரவாதிகள் உள்ளனர். இது ஏமாற்றுக்காரர்களின் உலகம். தந்தையே சற்குரு. அவர்கள் அமரத்துவமானவரான சற்குருவைப் பற்றி பேசுகின்றார்கள். இதனை அவர்கள் மிகவும் போதையுடன் கூறுகின்றார்கள். சற்குரு ஒரேயொருவரே என்றும், அனைவருக்கும் சற்கதியை அளிப்பவரும் ஒரேயொருவரே என்றும் அவர்கள் கூறும்போது, ஏன் அவர்கள் தம்மைக் குருமார்கள் என்று அழைக்கிறார்கள்? அவர்களும் எதனையும் புரிந்து கொள்வதில்லை, அவர்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோரும் எதனையும் புரிந்து கொள்வதில்லை. இந்தப் பழைய உலகில் என்ன உள்ளது? பாபா உங்களுக்காகப் புதியதொரு வீட்டைக் கட்டுகிறார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கும்போது, யார் புதிய வீட்டை வெறுத்து, பழைய வீட்டின் மீது இன்னமும் அன்பு கொண்டிருப்பார்கள்? புதிய வீட்டை மாத்திரமே ஒருவரின் புத்தி நினைத்துக் கொண்டிருக்கும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாகி விட்டதால், உங்களுக்காகத் தந்தை புதியதோர் உலகைப் படைக்கின்றார் என்பதையும், நீங்கள் அந்தப் புதிய உலகிற்குச் செல்ல இருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அந்தப் புதிய உலகிற்குப் பல பெயர்கள் உள்ளன: சத்தியயுகம், சுவர்க்கம், பரடைஸ், வைகுந்தம் போன்றன. உங்கள் புத்தி இப்பொழுது இப்பழைய உலகிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கே துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதன் பெயர் என்ன? அதன் பெயரே நரகம், முட்காடு, ஆழ்நரகம், கம்சனின் (அசுரன்) உலகம். அதன் அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில், அனைவருக்கும் கற்புத்தியே உள்ளது. பாரதத்தின் நிலையைப் பாருங்கள். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில், அனைவருக்கும் கல்லுப் புத்தியே உள்ளது. சத்தியயுகத்தில், அனைவருக்கும் தெய்வீகப் புத்தி உள்ளது. ஆட்சியாளர்கள் எவ்வாறோ, அவ்வாறே மக்களும் உள்ளனர். இங்கே, மக்களால் மக்கள் ஆட்சி செய்யப்படுகின்றார்கள். இதனாலேயே அனைவரது முத்திரைகளும் வெளியிடப்படுகின்றன. ஆகவே, குழந்தைகளாகிய உங்களது புத்திகள் தந்தையே அதிமேலானவர் என்பதை நினைவுசெய்ய வேண்டும். இரண்டாவதாக மேலானவர் யார்? பிரம்மா, விஷ்ணு, சங்கரரை இவ்வாறாகக் கருத முடியாது. சங்கரருக்கு அவர்கள் சித்தரித்துள்ள ஆடையைப் பாருங்கள்! அவர் போதை தரும் பானத்தை அருந்தி, கசப்பான மலர்களை உண்ணுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். அவை அனைத்தும் அவரை அவதூறு செய்வதாகும். அங்கே அவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதில்லை. அம்மக்கள் அனைவரும் தமது சொந்தத் தர்மத்தை மறந்துள்ளார்கள். தமது தேவர்களைப் பற்றி அவர்கள் கூறுகின்ற விடயங்களைப் பாருங்கள்! அவர்கள் தமது தேவர்களை மிகவும் அவமதிக்கின்றார்கள். ஆகையால், தந்தை கூறுகின்றார்: அவர்கள் என்னையும் அவதூறு செய்து, சங்கரரையும், பிரம்மாவையும் அவதூறு செய்துள்ளார்கள். விஷ்ணு அவதூறு செய்யப்படுவதில்லை. எவ்வாறாயினும், அவர்கள் அவரையும் மறைமுகமாக அவதூறு செய்கின்றார்கள். ஏனெனில் விஷ்ணுவே இராதையும் கிருஷ்ணரும் ஆவார். கிருஷ்ணர் ஒரு சிறு குழந்தை. அவர் மகாத்மாவையும் விட மேலானவர் எனக் கருதப்படுகின்றார். இந்தப் பிரம்மா தான் வயோதிப நிலையை அடைந்தபொழுது, அனைத்தையும் துறந்தார். ஆனால் ஒரு சிறுகுழந்தை தூய்மையானவரும், கள்ளங்கபடம் அற்றவரும் ஆவார்; அவருக்குப் பாவத்தைப் பற்றி எதுவும் தெரியாது. சிவபாபாவே அதிமேலானவர். இருப்பினும், பிரஜாபிதா பிரம்மா எங்கிருக்க வேண்டும் என்பதை அந்த அப்பாவிகள் அறியாமல் உள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மா சரீரதாரியாகக் காட்டப்பட்டுள்ளார். அஜ்மீரில் அவருக்கு ஓர் ஆலயம் உள்ளது. பிரம்மா தாடி, மீசையுடன் சித்தரிக்கப்பட்டு உள்ளார். சங்கரரோ அல்லது விஷ்ணுவோ அவ்வாறு சித்தரிக்கப்படுவது இல்லை. ஆகவே, அது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். எவ்வாறு மனிதர்களின் தந்தையாகிய, பிரம்மா சூட்சும லோகத்தில் இருக்க முடியும்? அவர் இங்கே கீழிறங்கி வரவேண்டும். இந்த நேரத்தில் பிரம்மாவின் பல குழந்தைகள் உள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மாகுமார்களும், குமாரிகளும் பலர் இருக்கிறார்கள் என எழுதப்பட்டுள்ளது. ஆகவே, நிச்சயமாகப் பிரஜாபிதா பிரம்மா இருக்க வேண்டும். அவர் ஓர் உயிருள்ள ரூபத்தில் இருப்பதால், அவர் நிச்சயமாக எதையோ செய்து கொண்டிருக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மா குழந்தைகளைப் படைத்துக் கொண்டிருப்பாரா அல்லது அவரும் வேறு எதையோ செய்து கொண்டிருப்பாரா? ஆதிதேவர் பிரம்மாவும், ஆதிதேவி சரஸ்வதியும் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவர்களின் பாகங்கள் எவை என்பதை எவரும் அறியார். அவர்கள் படைப்பவர்களாக இருப்பதால், நிச்சயமாகவே இங்கே இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக சிவபாபா பிராமணர்களைத் தத்து எடுத்திருக்க வேண்டும். வேறு எங்கிருந்து பிரம்மா வந்திருக்க முடியும்? இது ஒரு புதிய விடயம். தந்தை வந்து விளங்கப்படுத்தும் வரையில், எவராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒருவரின் பாகம் எதுவாக இருப்பினும், அது அந்த நபரால் மட்டுமே நடிக்கப்பட முடியும். புத்தர் நடித்த பாகம் என்ன? அவர் எப்பொழுது வந்தார்? அவர் வந்தபொழுது என்ன செய்தார்? இதை எவரும் அறியார். அவர் ஒரு குருவாகவா அல்லது ஓர் ஆசிரியராகவா அல்லது ஒரு தந்தையாகவா இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? இல்லை; அவரால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. அவர் தனது சொந்தச் சமயத்தைப் படைப்பவர். அவர் ஒரு குரு அல்லர். தந்தை குழந்தைகளைப் படைத்துப் பின்னர் அவர்களுக்குக் கற்பிக்கிறார். அவரே தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார்; அவரே மூவரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கும்படி வேறு எவரையும் கேட்பதில்லை. வேறு எவருக்கும் இந்த ஞானம் கிடையாது. எல்லையற்ற தந்தை மட்டுமே ஞானக்கடல் ஆதலால், நிச்சயமாகவே எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பார். தந்தை மட்டுமே சுவர்க்கமாகிய இராச்சியப் பாக்கியத்தை எங்களுக்குக் கொடுத்தார். இப்பொழுது அவர் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு அதைக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் வந்து, 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை என்னைச் சந்தித்துள்ளீர்கள். உலகிலுள்ள ஏனைய அனைவரும் இன்னமும் யாரைத் தேடிக் கொண்டே இருக்கிறார்களோ, அவரை நீங்கள் இப்பொழுது கண்டடைந்து விட்டீர்கள் என்ற உள்ளார்ந்த சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்குள் இருக்க வேண்டும். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் வந்து, 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை என்னைச் சந்தித்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்: ஆம் பாபா, நாங்கள் உங்களை முன்னரும் எண்ணற்ற தடவைகள் சந்தித்துள்ளோம். உங்களை அடித்தாலும், நீங்கள் சிவபாபாவைச் சந்தித்துள்ளீர்கள் என்பதையேனும் குறைந்தபட்சம் உங்களால் நினைவுசெய்ய முடியும். அவருடைய நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். பந்தனத்தில் உள்ள அப்பாவிகளின் பாவங்கள் அதிகளவில் அழிக்கப்பட முடியும், ஏனெனில் அவர்கள் சிவபாபாவை மேலும் அதிகமாக நினைவு செய்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தப்படும் பொழுது, “சிவபாபா, என்னைக் காப்பாற்றுங்கள்!” என அவர்களின் புத்தி சிவபாபாவிடம் செல்கின்றது. ஆகவே, அவரை நினைவு செய்வது சிறந்தது. “இறக்கும் தறுவாயில், ஒருவர் கங்கைக் கரையில் இருக்க வேண்டும், அவரின் வாயில் கங்கை நீர் இருக்க வேண்டும்’ என்று கூறப்படுகின்றது. ஆகவே, உங்கள் புத்தியில் அல்பாவினதும் பீற்றாவினதும் நினைவு இருக்க வேண்டும். அவ்வளவுதான்! “பாபா” என்று கூறுவதால், நிச்சயமாக உங்கள் ஆஸ்தியை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். “பாபா” எனக் கூறும்பொழுது, தனது ஆஸ்தியை நினைவுசெய்யாத எவருமே இருக்க முடியாது. ஒருவர் தனது தந்தையை (லௌகீக) நினைக்கும் பொழுது, நிச்சயமாகத் தனது தந்தையின் சொத்தையும் நினைவு செய்கின்றார். சிவபாபாவுடன், நீங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்கிறீர்கள். விகாரத்துக்காக உங்களை அடித்தாலும் அவர்கள் உங்களை சிவபாபாவை நினைக்கச் செய்கின்றார்கள். ஆகவே, உங்கள் ஆஸ்தியை நீங்கள் தந்தையிடம் இருந்து பெறுவதுடன், உங்கள் பாவங்களும் அழிகின்றன. நாடகத்தில் இது உங்களுக்குக் கிடைக்கின்ற, மறைமுகமான நன்மையாகும். யுத்தத்தில் நன்மை இருப்பதாகக் கூறப்படுவதைப் போலவே, இதிலும் நன்மை உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளிலும் விழாக்களிலும் சேவை செய்வதில் அதிகளவு கவனம் செலுத்துகிறீர்கள். “புதிய உலகின் படைப்பு” என்னும் கண்காட்சியுடன், “சுவர்க்க வாசல்” என்பதையும் எழுதுங்கள். இந்த இரு வசனங்களும் அங்கே இருக்க வேண்டும். எவ்வாறு புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது என ஒரு கண்காட்சி உள்ளது என்பதை மக்கள் கேள்விப்படும் பொழுது, மிகவும் சந்தோஷப்படுவார்கள். அந்தப் புதிய உலகம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நீங்கள் விளங்கப்படுத்தவே இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. “வாருங்கள், வந்து அவற்றைப் பாருங்கள்”. “புதிய உலகின் வாசல்” என்னும் வார்த்தைகளும் மிகவும் சிறந்தவை. நடைபெறவுள்ள யுத்தத்தின் மூலம் அவ்வாசல்கள் திறக்கின்றன. கடவுள் வந்து, இராஜயோகத்தைக் கற்பித்தார் எனக் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மனிதர்களைத் தேவர்களாக மாற்றினார். ஆகவே, புதிய உலகம் நிச்சயமாக அவரின் மூலமாகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திரனுக்குச் செல்வதற்கு, மக்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். அங்கு நிலத்தைத் தவிர எதுவுமேயில்லை என்பதையும், அங்கு எந்த மனிதர்களையும் பார்க்க முடியாது என்பதையும் அவர்களால் காண முடியும். அவர்களால் இந்தளவையே உங்களுக்குக் கூற முடியும். இதனால் என்ன நன்மை உள்ளது? நீங்கள் இப்பொழுது உண்மையான மௌனத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுகிறீர்கள். அது மௌன உலகாகும். நீங்கள் மரணிக்க விரும்புகிறீர்கள், உங்கள் சரீரத்தைத் துறக்க விரும்புகிறீர்கள். நீங்கள் மரணத்திற்காகவே தந்தையை அழைத்தீர்கள். உங்களை அவருடன் முக்திக்கும் ஜீவன்முக்திக்கும் அழைத்துச் செல்வதற்காக நீங்கள் அவரை அழைத்தீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் தூய்மையாக்குபவரை வருமாறு அழைத்த பொழுது, மகாகாலனையே வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. பாபா வந்து விட்டார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவர் கூறுகிறார்: வாருங்கள், நாங்கள் இப்பொழுது வீடு திரும்புவோம். ஆகவே, நாங்கள் இப்பொழுது வீடு திரும்புகிறோம். புத்தியானது தொடர்ந்தும் வேலை செய்கிறது. இங்கே சில குழந்தைகள் உள்ளார்கள். அவர்களின் புத்திகள், தமது வியாபாரம் போன்றவற்றை நோக்கி அல்லது இன்ன-இன்னார் நோயுற்று உள்ளார்கள் அல்லது அவருக்கு என்ன நடைபெற்றிருக்கும் என்பதை நோக்கியே செல்கின்றன. பலவகையான எண்ணங்கள் ஏற்படுகின்றன. தந்தை கூறுகிறார்: நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, ஆத்மாக்களாகிய உங்களின் புத்திகள் தந்தையிடமும் ஆஸ்தியிடமும் செல்கின்றன. ஆத்மாவே நினைவு செய்கிறார். உதாரணமாக, இலண்டனில் உள்ள தனது குழந்தை நோயுற்றுள்ள செய்தியை ஒரு தந்தை பெறும் பொழுது, அவரின் புத்தி மிக விரைவாக அங்கே செல்லும். இந்த ஞானம் அப்பொழுது அவரின் புத்தியில் தங்க மாட்டாது. இங்கு அமர்ந்திருக்கும் பொழுது, அவரின் புத்தி தொடர்ந்தும் தனது குழந்தையையே நினைவுசெய்யும். ஒரு பெண்ணின் கணவன் நோயுற்றிருக்கும் பொழுது, அவளுக்கு உள்ளே குழப்பங்கள் ஏற்படும்; அவளின் புத்தி அங்கு திசை திரும்பி விடும். இங்கே அமர்ந்திருக்கும் பொழுது அல்லது வேறு எதையாவது செய்து கொண்டிருக்கும் பொழுதும் நீங்கள் தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். இதுவும், உங்களுடைய பெரும் பாக்கியமாகும். தங்கள் கணவனை அல்லது குருவை அவர்கள் நினைவு செய்வதைப் போலவே, நீங்களும் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க வேண்டாம். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் சேவை செய்கையில், அவரை அதிகமாக நினைவுசெய்ய இயலும். தந்தை கூறியுள்ளார்: எனது பக்தர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். யார் இதைக் கூறினார்? சிவபாபாவே ஆவார். நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களுக்கு எதை விளங்கப்படுத்துவீர்கள்? ஸ்ரீ கிருஷ்ணர் புதிய உலகை ஸ்தாபித்துக் கொண்டிருப்பதாக நீங்கள் அவர்களுக்குக் கூறினால், அவர்கள் உங்களை நம்புவார்களா? தந்தையாகிய கடவுளே படைப்பவர், ஸ்ரீ கிருஷ்ணர் அல்லர். இந்தப் பழைய உலகைப் புதிதாக்குபவர் பரமாத்மாவாகிய பரமதந்தையே என நீங்கள் அவர்களுக்குக் கூறும்பொழுது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். புதிய உலகம் பழையதாகிப் பின்னர் பழையது புதியதாகுகிறது. எவ்வாறாயினும், அதற்கு ஒரு நீண்ட கால எல்லை கொடுக்கப்பட்டு விட்டதால், மக்கள் காரிருளில் உள்ளார்கள். அவர் தனது உள்ளங் கையில் உங்களுக்குச் சுவர்க்கத்தைக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: உங்களை அந்தச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதற்காகவே நான் வந்துள்ளேன். நீங்கள் அவ்வாறு ஆகுவீர்களா? அற்புதம்! நாங்கள் ஏன் அவ்வாறு ஆகக்கூடாது? அச்சா. என்னை நினைவு செய்யுங்கள், தூய்மை ஆகுங்கள்! இந்த நினைவின் மூலம் மட்டுமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். பாவச்சுமை உங்கள் சரீரங்களில் அன்றி, உங்கள் ஆத்மாக்களிலேயே உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சுமையானது சரீரத்தில் இருந்திருப்பின், சரீரம் எரிக்கப்படும் பொழுது, பாவங்களும் அழிக்கப்பட்டிருக்கும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டு விடுகிறது. தந்தை அதை அகற்றுவதற்கான ஒரேயொரு வழியை உங்களுக்குக் காட்டுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! தூய்மை அற்றதிலிருந்து தூய்மை ஆகுவதற்கான வழி மிகவும் சிறந்தது. சிவனை வழிபடுபவதற்கு ஆலயங்களைக் கட்டுபவர்கள் பக்தர்களே. வழிபடுபவரை ஒருபொழுதும் வழிபடத் தகுதிவாய்ந்தவர் என அழைக்க முடியாது. அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முழு உலகும் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்ற பாபாவை நீங்கள் இப்பொழுது கண்டடைந்து விட்டீர்கள். இந்தச் சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். இந்த நினைவினால் மட்டுமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆகவே, சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். உங்கள் நேரத்தில் ஒரு நிமிடத்தையேனும் வீணாக்காதீர்கள்.

2. இந்தப் பழைய உலகிலிருந்து உங்கள் புத்தி எனும் நங்கூரத்தை உயர்த்துங்கள். எங்களுக்காக, பாபா இப்பொழுது புதிய வீட்டைக் கட்டுகிறார். இவ்வுலகம் கம்சனின் (அசுரன்) பூமியான, ஆழ்நரகத்தில் உள்ளதையும் நாங்கள் இப்பொழுது வைகுந்த பூமிக்குச் செல்கிறோம் என்பதையும் சதா அறிந்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உண்மையான சேவகராக இருந்து, விரைவான வேகத்தில் சேவை செய்வதனால், உலக மாற்றம் எனும் பணியை நிறைவேற்றுவீர்களாக.

ஒரு விரைவான வேகத்தில் சேவை செய்வதற்கு, உங்களுக்கு ‘ரூப்’ மற்றும் ‘பசந்த்’ இரண்டினதும் சமநிலை கூட்டாக இருப்பது அவசியம். பசந்த் எனும் ரூபத்தின் மூலம் உங்களால் ஒரே நேரத்தில் பல ஆத்மாக்களுக்குச் செய்தியைக் கொடுக்கின்ற பணியை மேற்கொள்ள முடியும். அதேபோல், ரூப் எனும் வடிவில். அதாவது, உங்கள் நினைவுச் சக்தி மூலமும் உங்கள் மேன்மையான எண்ணங்களின் சக்தி மூலமும் நீங்கள் ஒரு விரைவான வேகத்தில் சேவை செய்ய வேண்டும். இதற்கென ஒரு கண்டுபிடிப்பை உருவாக்குங்கள். அத்துடன், திடசங்கற்பத்துடன் உங்கள் பழைய சம்ஸ்காரங்கள், பழைய சுபாவம், உங்கள் பழைய செயற்பாடு எனும் எள்ளு விதைகளையும், பார்லி விதைகளையும் மொத்தமாக அர்ப்பணியுங்கள். அப்பொழுதே உலக மாற்றம் எனும் பணி நிறைவேற்றப்பட்டு, யாகமும் பூர்த்தி அடையும்.

சுலோகம்:
அதிபதியாகவும் குழந்தையாகவும் இருப்பதன் சமநிலை மூலம் உங்கள் திட்டங்களை உங்களால் நடைமுறையில் இட முடியும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

இந்த இறை சேவையில் தூய்மையின் தானத்தைக் கொடுப்பதே மாபெரும் புண்ணியமாகும். தூய்மையாக இருந்து, பிறரையும் தூய்மையாகச் செய்வதே ஒரு புண்ணியாத்மாவாக இருப்பதாகும். ஏனெனில், ஆத்மாவின் தற்கொலை எனும் பெரும் பாவத்திலிருந்து நீங்கள் ஆத்மாக்களை விடுவிக்கின்றீர்கள். தூய்மையின்மை என்பது ஆத்மாவின் தற்கொலை ஆகும். தூய்மையானது வாழ்க்கைத் தானத்தைக் கொடுப்பதாகும். ஒருவரின் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தைக் கொடுப்பதே மாபெரும் புண்ணியச் செயல் ஆகும். அத்தகைய புண்ணியத்தைச் செய்வதனால், நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகுவீர்கள்.