23.06.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    19.03.20     Om Shanti     Madhuban


ஆக்கபூர்வமாக இருப்பதிலும் பணிவைக் கொண்டிருப்பதிலும் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் உங்களின் ஆசீர்வாதக் கணக்கில் சேமியுங்கள்.


இன்று, பாப்தாதா தனது புனிதமான, சந்தோஷமான அன்னங்களின் ஒன்றுகூடலுக்குள் வந்துள்ளார். எங்கும் புனித அன்னங்கள் புலப்படுகிறார்கள். நீங்கள் எல்லோரும் புனித அன்னங்களின் சிறப்பியல்பை மிக நன்றாக அறிவீர்கள். சதா புனிதமான, சந்தோஷமான அன்னமாக இருத்தல் என்றால், சுத்தமான, தெளிவான இதயத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். புனித அன்னங்களுக்குச் சுத்தமான, தெளிவான இதயங்கள் இருப்பதனால், அவர்களின் தூய ஆசைகள் அனைத்தும் இலகுவாக நிறைவேறுகின்றன. இதுவே சுத்தமான இதயங்களைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. இத்தகைய ஆத்மாக்கள் சதா முழுமையான மனநிறைவுடன் இருப்பார்கள். உங்களுக்கு ஒரு மேன்மையான எண்ணம் தோன்றியதுமே, அது நிறைவேறிவிடும். இதற்காக முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஏன்? சுத்தமான இதயங்களைக் கொண்டிருப்பவர்களே, பாப்தாதாவால் மிகவும் நேசிக்கப்படுபவர்களும் நெருக்கமாக இருப்பவர்களும் ஆவார்கள். அவர்களின் மேன்மையான எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறுவதனால். அவர்களின் மனோபாவம், பார்வை, வார்த்தைகள், தொடர்புகள் மற்றும் உறவுமுறைகள் அனைத்தும் இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கும். அவை ஒன்றுபோலவே தென்படும். அவர்களின் இலகுத்தன்மையின் அடையாளம் என்னவென்றால், அவர்களின் இதயங்களும் தலைகளும் பேச்சும் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். உங்களின் இதயத்தில் ஒன்றையும் உங்களின் பேச்சில் வேறொன்றையும் கொண்டிருத்தல் என்றால், அது இலகுத்தன்மையின் அடையாளம் இல்லை. இலகு சுபாவத்தைக் கொண்டிருப்பவர்கள் சதா பணிவான சுபாவத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அகங்காரமற்றவர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் இருப்பார்கள். புனித அன்னம் ஒருவர், இலகுவான சுபாவம், இலகுவான வார்த்தைகள், இலகுவான மனோபாவம், இலகுவான பார்வை என்ற சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பார்.

இந்த வருடம், பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய செயல்களிலும் முகங்களிலும் இரண்டு சிறப்பியல்புகளைக் காண விரும்புகிறார். நீங்கள் எல்லோரும் கேட்கிறீர்கள்: ‘அடுத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? இந்தப் பருவகாலத்தின் கடைசி சந்திப்பின் பின்னர் நாம் என்ன செய்யப் போகிறோம்?’ நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள்: ‘அடுத்து என்ன நடக்கப் போகிறது? அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?’ பாப்தாதா குழந்தைகள் எல்லோரிலும் இந்தச் சிறப்பியல்பைக் காண விரும்புகிறார். உங்களில் பெரும்பாலானோர், உங்களின் சக்திக்கேற்ப சேவைக்களத்தில் மிக நன்றாக முன்னேறியிருப்பதுடன் நீங்களும் முன்னேறியுள்ளீர்கள். இந்த முன்னேற்றத்திற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். மிக்க நன்று! மிக்க நன்று! மிக்க நன்று! இத்துடன்கூடவே, உங்களின் பெறுபேறுகளிலும் பாப்தாதா ஒரு விடயத்தைக் கண்டார். அவர் அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஆசிரியர்களே, பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? இரட்டை வெளிநாட்டவர்களே, பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாண்டவர்களே, பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தினால் மட்டுமே, பாபா உங்களுக்குக் கூறுவார். இல்லாவிட்டால். பாபா உங்களுக்குச் சொல்ல மாட்டார். (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்). மிகவும் நல்லது! பாபா கண்ட அந்த ஒரு விடயம் என்ன? இன்று, பாபாவும் தாதாவும் சூட்சுமவதனத்தில் ஒருவரோடு ஒருவர் இதயபூர்வமாக உரையாடினார்கள். அவர்கள் எப்படி இதயபூர்வமாக உரையாடினார்கள்? அவர்கள் இருவரும் எப்படி ஒருவரோடு ஒருவர் உரையாடுவார்கள்? இந்த உலகில், நீங்கள் ‘தனி நடிப்பு’ என்று செய்வீர்கள். நீங்கள் இதை மிக நன்றாகச் செய்கிறீர்கள். உங்களின் பௌதீக உலகில், ஒரே ஆத்மா இரண்டு பாகங்களை நடிப்பார். ஆனால் பாப்தாதாவோ, ஒரு சரீரத்தில் இரண்டு ஆத்மாக்கள். இதில் வேறுபாடு இருக்கிறதல்லவா? அதனால், இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

எனவே, இன்று, பாப்தாதா சூட்சும வதனத்தில் இதயபூர்வமாக உரையாடினார். எதைப் பற்றி? தந்தை பிரம்மாவிற்கு எதைப் பற்றி அதிகளவு உற்சாகம் இருந்தது என உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? நீங்கள் இதை மிக நன்றாக அறிவீர்;கள்தானே? எல்லாமே மிக விரைவாக நிகழ வேண்டும் என்ற உற்சாகம் தந்தை பிரம்மாவிடம் இருந்தது. ஆகவே, சிவத்தந்தை பிரம்மா தந்தைக்குச் சொன்னார்: விநாசமும் மாற்றமும் இடம்பெறுவது ஒரு கைதட்டலுக்குரிய விடயம்கூட இல்லை. அது உங்களின் விரல்களைச் சொடுக்குப் போடும் விடயமாகும். எவ்வாறாயினும். அனைத்திற்கும் முதலில் ஒரு மாலையை உருவாக்குங்கள். 108 இல்லாவிட்டாலும், அதன் அரைவாசி எண்ணிக்கையிலான மாலையை உருவாக்குங்கள். எனவே, தந்தை பிரம்மா என்ன பதில் கூறியிருப்பார்? பாபாவிடம் சொல்லுங்கள்! (அது ஏற்கனவே தயாராகிவிட்டது). அச்சா, அரைவாசி மாலையாவது இன்னமும் தயாராகவில்லையா? முழு மாலை இல்லாவிட்டாலும், அரைவாசி மாலையாவது தயாரா? (எல்லோரும் சிரித்தார்கள்). நீங்கள் சிரிப்பதனால், அதில் ஏதோ இருக்கிறது என்றே அர்த்தம். அரைவாசி மாலை தயார் எனச் சொல்பவர்கள், உங்களின் ஒரு கையை உயர்த்துங்கள். இது தயாரா? மிகச் சிலரே இருக்கிறார்கள். மாலை இன்னமும் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது என நினைப்பவர்கள், உங்களின் கையை உயர்த்துங்கள்! அது தயாராகிக் கொண்டிருக்கிறது என்றே பெரும்பாலானோர் சொல்கிறார்கள். அது தயாராகி விட்டது என்று சிறுபான்மையினர் சொல்கிறார்கள். மாலை தயாராகிவிட்டது என்று தமது கைகளை உயர்த்தியவர்களை, அந்தப் பெயர்களை எழுதி பாப்தாதாவிடம் அவற்றைக் கொடுக்கும்படி பாப்தாதா கேட்கிறார். இது நன்றாக இருக்கும், அப்படித்தானே? பாப்தாதாவும் இதைப் பார்ப்பார், அப்படித்தானே? அதை மூடி சீல் வைக்கப்பட்டிருப்பதனால் வேறு எவரும் அதைப் பார்க்க மாட்டார்கள். யார் இத்தகைய நம்பிக்கை வைக்கக்கூடிய இரத்தினங்கள் என்பதை பாப்தாதா பார்ப்பார். யாராவது அப்படி இருக்க வேண்டும் என பாப்தாதாவும் நினைக்கிறார். எனவே, அவர்களிடமிருந்து பெயர்களை எடுங்கள், அவர்களின் புகைப்படங்களை எடுங்கள்!

எனவே, தந்தை பிரம்மா என்ன பதில் அளித்தார்? நீங்கள் எல்லோரும் மிக நல்ல பதில்களை வழங்கினீர்கள். தந்தை பிரம்மா கூறினாhர்;: நீங்கள் விரல் சொடுக்குப் போடுகின்ற அளவு நேரத்தின் தாமதமே உள்ளது. அவர்கள் தயாராகி விடுவார்கள். ஆகவே, இது நல்லதுதானே? அதன்பின்னர், சிவத்தந்தை கூறினார்: அச்சா. மாலை முழுவதும் தயாரா? அரைவாசி மாலைக்கான பதில் கிடைத்துவிட்டது. அவர் முழுமையான மாலையைப் பற்றிக் கேட்கிறார். அதற்கு, சிறிதளவு நேரம் தேவை என அவர் கூறினார். இந்த இதயபூர்வமான உரையாடலே இடம்பெற்றது. ஏன் சிறிதளவு நேரம் தேவை? அவர்களின் இதயபூர்வமான உரையாடல்களில் நிச்சயமாக கேள்விகளும் பதில்களும் இருக்குமல்லவா? ஏன் இன்னமும் சிறிதளவு நேரம் தேவையாக உள்ளது? இன்னமும் அரைவாசி மாலையே தயார் ஆகுவதைத் தடுக்கும் குறிப்பிட்ட பலவீனம் என்ன? ஆகவே, தந்தை பிரம்மா கூறினார்: ஒவ்வொரு இடத்தில் இருந்தும் குழந்தைகள் எல்லோரும் வெளிப்பட ஆரம்பித்துள்ளார்கள். உங்களின் பிராந்தியங்கள் இருப்பதைப் போன்று, ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் அல்ல, ஏனென்றால், பிராந்தியங்கள் மிகப் பெரியவை. ஆனால், அவர் ஒவ்வொரு விசேடமான நகரத்தையும் தோன்றச் செய்து, ஒவ்வொருவரின் முகங்களையும் பார்த்தார். அவர்களின் முகங்களைப் பார்த்ததும் தந்தை பிரம்மா கூறினார்: குழந்தைகள் எல்லோரும் மிக விரைவாக ஒரு குறிப்பிட்ட சிறப்பியல்பைக் கிரகித்தால், அந்த மாலை தயாராகிவிடும். என்ன சிறப்பியல்பு? அதனால் அவர் கூறினார்: நீங்கள் சேவையில் மிக நன்றாக முன்னேறி உள்ளீர்கள். அந்தச் சேவையைச் செய்தவண்ணம் நீங்கள் முன்னேறியுள்ளீர்கள். நீங்கள் மிக நன்றாக முன்னேறியுள்ளீர்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட விடயத்தில் சமநிலைக் குறைபாடு காணப்படுகிறது. அந்த விடயம் என்னவென்றால், கட்டியெழுப்பும் பணியில் (நிர்மாண்) நீங்கள் மிக நன்றாக முன்னேறியுள்ளீர்கள். ஆனால், அவ்வாறு கட்டியெழுப்புவதுடன் கூடவே, பணிவும் (நிர்மான்) இருக்க வேண்டும். கட்டியெழுப்புவது ஒரு விடயம். பணிவாக இருப்பது இன்னொரு விடயம். ஒரு எழுத்து வேறுபாடே உள்ளது. எவ்வாறாயினும், கட்டியெழுப்புவதிலும் பணிவாக இருப்பதிலும் உள்ள சமநிலையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. சேவை செய்வதில் முன்னேறும்போது, பணிவாக இருப்பதற்குப் பதிலாக, உங்களின் சொந்த அகங்காரம்; சில வேளைகளில் சில இடங்களில் கலந்துவிடுகிறது. நீங்கள் செய்யும் சேவையில் எந்தளவிற்கு நீங்கள் முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் மனோபாவத்திலும் பார்வையிலும் வார்த்தைகளிலும் நடத்தையிலும் பணிவானது காணப்பட வேண்டும். ஆகவே, இந்தச் சமநிலை தேவைப்படுகிறது. இதனாலேயே, உங்களின் தொடர்புகளிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் நீங்கள் பெறவேண்டிய ஆசீர்வாதங்களை நீங்கள் பெறுவதில்லை. நீங்கள் வேறு எத்தனை முயற்சிகளைச் செய்தாலும், அவை நன்றாக இருந்தாலும், முயற்சி செய்வதுடன்கூடவே, உங்களின் ஆசீர்வாதக் கணக்கில் நீங்கள் சேமிக்காவிட்டால், உங்களால் அருள்பவராக இருக்கும் ஸ்திதியையும் கருணைநிறைந்தவராக இருக்கும் ஸ்திதியையும் உங்களால் அனுபவம் செய்ய முடியாது. உங்களுக்காக முயற்சி செய்வது அவசியமே. அதேவேளை, பாப்தாதாவிடமிருந்தும் குடும்பத்தின் இளைய மற்றும் மூத்த உறுப்பினர்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களையும் பெறுங்கள். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதென்றால், உங்களின் புண்ணியக்கணக்கில் சேமித்தல் என்று அர்த்தம். இது உங்களின் மதிப்பெண்களுடன் மேலதிகமாகச் சேர்க்கப்படுகிறது. நீங்கள் விரும்பிய அளவிற்குச் சேவை செய்யுங்கள். அவ்வளவுதான்! உங்களின் சேவை செய்வதில் ஈடுபட்டிருப்பதன் மூலம் தொடர்ந்து முன்னேறுங்கள். ஆனால், பாப்தாதா குழந்தைகள் எல்லோரிலும் இந்தச் சிறப்பியல்பைக் காண விரும்புகிறார். சேவையுடன்கூடவே, பணிவாகவும் ஒத்திசைவாகவும் இருப்பதன் மூலம் உங்களின் புண்ணியக் கணக்கில் சேமிப்பதும் மிக, மிக அவசியமாகும். அதன்பின்னர் ‘நீங்கள் அதிகளவு சேவை செய்தீர்கள், நீங்கள் இதைச் செய்தீர்கள், நீங்கள் அதைச் செய்தீர்கள், அப்படியிருந்தும் ஏன் உங்களின் இலக்கம் பின்னால் இருக்கிறது’ எனச் சொல்லக்கூடாது. இதனாலேயே, பாப்தாதா முன்கூட்டியே உங்களுக்கு சமிக்கை செய்கிறார். தற்சமயம், நீங்கள் அதிகளவில் உங்களின் புண்ணியக் கணக்கில் சேமிக்க வேண்டும். ‘இவர் எப்படியும் இப்படித்தான். இவர் மாறவே போவதில்லை’ என நினைக்காதீர்கள். உங்களால் இயற்கையை மாற்ற முடிகிறது. நீங்கள் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்கிறீர்கள்தானே? அப்படியென்றால், ஏன் உங்களால் பிராமண ஆத்மாக்களுடன் ஒத்திசைந்து போக முடியவில்லை? உங்களுக்கு எதிராக இருப்பவர்களுடன் ஒத்திசைந்து போங்கள். இதையே ஆக்கபூர்வமாக இருப்பதற்கும் பணிவாக இருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுதல் என்பதன் அர்த்தம். நீங்கள் இதைக் கேட்டீர்களா?

பாபா உங்களுக்கு கடைசி சந்திப்பில் வீட்டுவேலை கொடுப்பார், அல்லவா? நீங்கள் ஏதாவது வீட்டுவேலையைப் பெறுவீர்கள்தானே? எனவே, பாப்தாதா அடுத்த பருவகாலத்தில் வருவார், ஆனால்.... அவர் ‘ஆனால்...’ எனக் கூறுகிறார். பாருங்கள்! சாகார் பாபா நடித்த பாகம் தொடர்ந்தது. அவ்யக்த பாபாவின் பாகமும் தொடர்கிறது. இந்த அவ்யக்த பாகம் இவ்வளவு நீண்ட காலம் தொடரும் என எவரும் கனவில்கூட நினைத்ததில்லை. எனவே, இந்தப் பாகங்கள் இரண்டும் நாடகத்தின்படி தொடர்ந்து நடிக்கப்பட்டது. இப்போது, ஏதாவது நிபந்தனை இருக்கவேண்டுமா இல்லையா? உங்களின் அறிவுரை என்ன? இது இப்படியே தொடரலாமா? ஏன்? இன்று, சூட்சும வதனத்தில், பாபா நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டார். ஆகவே, அவர்களின் இதயபூர்வமான உரையாடலில், இந்தப் பாகம் நாடகத்தில் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்து நடிக்கப்பட வேண்டும் என்றும் பாப்தாதா கலந்துரையாடினார். இதற்கு ஒரு திகதி உள்ளதா? (தேராதூனைச் சேர்ந்த சகோதரி பிரேமிடம் பாபா கேட்டார்). பாபாவிற்கு ஜாதகத்தைக் கூறுங்கள்! இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? இந்தக் கேள்வி இப்போது தோன்றியுள்ளது. இது எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறது. உங்களுக்கு ஆறு மாதங்கள் இருக்கிறதுதானே? அடுத்த பருவகாலம் ஆறு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கும். ஆகவே, பாப்தாதா பெறுபேற்றைப் பார்க்க விரும்புகிறார். சுத்தமான இதயங்கள்! எந்தவிதமான பழைய சம்ஸ்காரங்கள், எந்தவிதமான அகங்காரம் (அபிமான்) அல்லது அவமதிக்கப்பட்ட உணர்வு (அப்மான்) என்ற எந்தவிதமான கறைகளும் உங்களின் இதயங்களில் இருக்கக்கூடாது.

பாப்தாதாவிடம் உங்களின் இதயங்களைப் படம் பிடிப்பதற்கான பொறிமுறை உள்ளது. இங்கே, உங்களால் அதை ஒரு எக்ஸ்-ரே மூலம் பார்க்கக்கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும், அவை பௌதீகமான இதயங்கள். இதயங்களின் படங்கள் சூட்சும வதனத்தில் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றன. பல வகையான சிறிய மற்றும் பெரிய கறைகள் காணப்படுகின்றன. சில கறைகள் மங்கலாக உள்ளன. ஏனையவை மிகத் தெளிவாகப் புலப்படுகின்றன.

நீங்கள் இங்கே இன்று ஹோலி கொண்டாடவே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? இது கடைசி சந்திப்பு என்பதனால், உங்களுக்கு முதலில் வீட்டுவேலை கொடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், நீங்கள் மற்றவர்களுக்கு ஹோலிப் பண்டிகையின் அர்த்தத்தையும் சொல்கிறீர்கள். ஹோலி கொண்டாடுதல் என்றால் கடந்த காலத்தைக் கடந்ததாகி விடுதல் என்று அர்த்தம். ஹோலியைக் கொண்டாடுதல் என்றால் உங்களின் இதயத்தில் எந்த வகையான பெரிய அல்லது சிறிய கறையும் இருக்கக்கூடாது என்று அர்த்தம். அதன் அர்த்தம், முழுமையாக சுத்தமான இதயத்தைக் கொண்டிருப்பதுடன் சகல பேறுகளாலும் நிறைந்திருக்க வேண்டும். பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். பாப்தாதாவிற்கு உங்களின் மீது அன்பு இருப்பதனால், அவர் ஒரு விடயத்தை விரும்புவதில்லை. நீங்கள் அதிகளவு சிரமப்படுகிறீர்கள். உங்களின் இதயங்கள் சுத்தமாக இருந்தால், நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள். இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர் உங்களின் இதயங்களில் ஒன்றுகலந்திருக்க வேண்டும். நீங்களும் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரின் இதயத்தில் ஒன்றுகலந்திருக்க வேண்டும். தந்தை உங்களின் இதயங்களில் ஒன்றுகலந்திருக்கும்போது, மாயையின் எந்த ரூபமும், அது சூட்சும வடிவமோ, இராஜரீகமான வடிவமோ அல்லது வெளிப்படையான ரூபமோ எதுவும் உங்களின் இதயங்களுக்குள் பிரவேசிக்க முடியாது. மாயை உங்களின் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோகூடப் பிரவேசிக்க மாட்டாள். ஆகவே, நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டிருப்பீர்கள்தானே? பாப்தாதா உங்களின் மனங்களிலேனும் நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டிருப்பதைப் பார்க்க விரும்புகிறார். சிரமப்படுவதில் இருந்து விடுபடுபவர்களால் மட்டுமே ஜீவன்முக்தி வாழ்க்கை ஸ்திதியை அனுபவிக்க முடியும். ஹோலியைக் கொண்டாடுவதென்றால், ஜீவன்முக்தி வாழ்க்கை (ஜீவன்முக்த்) வாழும்போது, சிரமப்படுவதில் இருந்து விடுபட்டிருக்கும் (மெஹெனத்முக்த்) அனுபவத்தைக் கொண்டிருப்பதாகும். இப்போது உங்களின் மனதின் சக்தியால் சேவையைச் சக்திவாய்ந்தது ஆக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். வார்த்தைகளால் செய்யும் சேவை தொடர்கிறது. அது தொடரும். ஆனால், அதற்கு நேரம் எடுக்கும். காலம் குறுகியது. இன்னமும் அதிகளவு சேவை செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் எல்லோரும் பெறுபேற்றைக் கொடுத்தீர்கள். இதுவரை, உங்களால் 108 மணிமாலையை உருவாக்க முடியவில்லை. ஆகவே, 16000 மணிமாலையும் 900000 மணிமாலையும் தயாராகுவது இன்னமும் மிகத் தொலைவிலேயே உள்ளது. இதற்கு, உங்களுக்கு விரைவானதொரு வழிமுறை தேவை. முதலில், உங்களின் மனங்களை மேன்மையாகவும் சுத்தமாகவும் ஆக்குங்கள். ஒரு விநாடியேனும் வீணாக்கப்படக்கூடாது. இப்போதும், உங்களில் பெரும்பாலானோரில் ஏதோவொரு சதவீதத்தில் வீணான எண்ணங்கள் காணப்படுகின்றன. தூய்மையற்ற எண்ணங்கள் இல்லை. ஆனால், அவை வீணான எண்ணங்கள். இதனாலேயே, உங்களின் மனங்களினூடாகச் செய்யப்படும் சேவையானது துரித கதியில் செய்யப்பட வேண்டும். இப்போது ஹோலியைக் கொண்டாடுவது என்றால் உங்களின் மனங்களையும் வீணான எண்ணங்களில் இருந்து விடுவிப்பதுடன் புனிதமாக இருப்பதாகும். நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்களா? கொண்டாடுதல் என்றால், அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். உலக மக்கள் பல வர்ணங்களுடன் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோர் மீதும் தெய்வீகக் குணங்கள், தெய்வீக சக்திகள் என்பவற்றின் நிறங்களையும் ஞான ரோஜாக்களையும் தூவுகிறார்.

இன்று, சூட்சும வதனத்தில், வேறு சில செய்திகளும் வந்தன. இதயபூர்வமான உரையாடலைப் பற்றிய முதல் செய்திகள் உங்களுக்குக் கூறப்பட்டன. இரண்டாவது செய்தி, முன்னோடிக் குழுவிற்குச் சென்றுவிட்ட, உங்கள் எல்லோருடைய நல்ல சேவைச் சகபாடிகள் எல்லோருக்கும் சூட்சும வதனத்தில் ஹோலி கொண்டாடும் நாளாக இருந்தது. இத்தகைய வாய்ப்பு வரும்போதெல்லாம், நீங்கள் அவர்கள் எல்லோரையும் நினைக்கிறீர்கள்தானே? நீங்கள் தாதிகளையும் நண்பர்களையும் பாண்டவர்களையும் நினைக்கிறீர்கள்தானே? முன்னோடிக் குழுவின் எண்ணிக்கை மிகவும் பெரியதாகிவிட்டது. நீங்கள் அவர்களின் பெயர்களை எடுத்தால், பல பெயர்கள் இருக்கும். ஆகவே, சகல வகையான ஆத்மாக்களும் சூட்சும வதனத்தில் ஹோலியைக் கொண்டாட வந்திருந்தார்கள். எல்லோருமே தமது முயற்சிகளின் பலனுக்கேற்பத் தமது பல்வேறு பாகங்களை நடிக்கிறார்கள். முன்னோடிக் குழுவினர் நடிக்கும் பாகங்கள் இன்னமும் மறைமுகமாகவே உள்ளன. அவர்கள் என்ன செய்கிறார்களோ என நீங்கள் நினைக்கிறீர்கள்தானே? அவர்கள் உங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் சம்பூரணமாகித் தெய்வீகப் பிறவி எடுத்து, அதன் மூலம் புதிய உலகிற்குக் கருவிகள் ஆகவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோரும் தமது சொந்தப் பாகங்களை நடிப்பதில் சந்தோஷமாக இருக்கிறார்கள். தாம் சங்கமயுகத்தில் இருந்தே சென்றோம் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. அவர்களிடம் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் கடவுளிடம் அன்பும் இருந்தாலும், இந்த ஞானம் தெளிவாக வெளிப்படவில்லை. அவர்கள் தனித்துவமானவர்கள். எவ்வாறாயினும், இந்த ஞானம் அவர்களிடம் வெளிப்படுமாக இருந்தால், அவர்கள் எல்லோரும் மதுவனத்திற்கு ஓடோடி வருவார்கள், இல்லையா? எவ்வாறாயினும், அவர்களின் பாகங்கள் தனித்துவமானவை. அவர்களிடம் இந்த ஞானத்தின் சக்தி உள்ளது. அவர்களின் சக்தி குறையவில்லை. அவர்களின் வீடுகளின் சூழல் சதா கோட்பாடுகளின்படியே உள்ளது. அவர்களின் பெற்றோர் அவர்களையிட்டுத் திருப்தியாக இருக்கிறார்கள். அவர்களிடம் சகல பௌதீக வசதிகளும் உள்ளன. அவர்கள் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வரிசைக்கிரமமானவர்கள். ஆனால், விசேடமான ஆத்மாக்கள் மிகவும் உறுதியானவர்கள். தமது முன்னைய பிறவிகள் மகத்தானவையாக இருந்தன என்றும், தமது அடுத்த பிறவிகள் மகத்தானவையாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரில் ஓர் அரச குடும்பத்து திருப்தியான ஆத்மாக்களின் சாயல்களே தென்படுகின்றன. அந்த ஆத்மாக்கள் சம்பூரணமாகவும் மலர்ச்சியானவர்களாகவும் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதுவே அவர்களின் சரித்திரமாகும். எவ்வாறாயினும், சூட்சும வதனத்தில் என்ன நடந்தது? அவர்கள் எப்படி ஹோலி கொண்டாடினார்கள்? வெளியே உள்ள மக்கள் தட்டுக்களில் பல்வேறு நிறங்களில் காய்ந்த பொடியை வைத்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இங்கே, நிறப் பொடிகள் இருப்பதைப் போல், சூட்சும வதனத்தில் பல பிரகாசிக்கும் வைரங்கள் இருந்தன. எவ்வாறாயினும். அந்த வைரங்கள் பாரமானவை அல்ல. வர்ணப்பொடியை நீங்கள் கைகளில் வைத்திருக்கும்போது, அது மிகவும் இலேசாக இருக்கும்தானே? அதேபோல், அங்கே பல்வேறு நிறங்களில் வைரங்கள் நிறைந்த பல தட்டுக்கள் காணப்பட்டன. சூட்சும வதனத்தில் எல்லோரும் வரும்போது என்ன ரூபத்தில் வருவார்கள் என உங்களுக்குத் தெரியுமா? அது ஒளியாலான ரூபமாகவே இருக்கும். அப்படித்தானே? நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? ஒளியாலான சரீரங்கள் ஏற்கனவே பிரகாசிக்கின்றன. ஆகவே, பாப்தாதா எல்லோரையும் அவர்களின் சங்கமயுக சரீரங்களில் தோன்றச் செய்தார். அவர்கள் தமது சங்கமயுக சரீரத்துடன் தோன்றியபோது, அவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஒரு சந்திப்பைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர்கள் தமது முன்னோடிக் குழுவின் பிறப்பை மறந்திருந்தார்கள். சங்கமயுகத்தின் விடயங்களே வெளிப்பட்டன. எனவே, சங்கமயுகத்தின் விடயங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் இவற்றை ஒருவரோடு ஒருவர் மிகுந்த சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் மிகவும் இரசித்ததை பாப்தாதா கண்டார். எனவே, அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கட்டும் என அவர் நினைத்தார். அவர்கள் தமது வாழ்க்கைக் கதைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்: ‘பாபா இதைக் கூறினார். பாபா இந்த முறையில் என்னை நேசித்தார். பாபா இந்தக் கற்பித்தல்களைக் கொடுத்தார். பாபா இப்படிக் கூறுவதுண்டு’. அவர்கள் தொடர்ந்து பாபாவைப் பற்றியே பேசினார்கள். பாபா. பாபாவைத் தவிர வேறு எதுவுமில்லை. சிறிது நேரத்தின் பின்னர்…. எல்லோருடைய சம்ஸ்காரங்களும் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிகளவு மகிழ்விப்பவர் யார்? இந்தக் குழுவில் அதிகம் களிப்பூட்டுபவர்கள் யார்? (தீதியும் தாதி சந்திரமணியும்.) தீதி முதலில் எழுந்தார். அவர் தாதி சந்திரமணியின் கையைப் பிடித்து, ராஸ் (வட்டத்தில் நடனம் ஆடுதல்) செய்ய ஆரம்பித்தார். தீதி இங்கே திரான்ஸில் போதையுடன் இருப்பதைப் போல், அவர் அதிகளவு நடனம் ஆடினார். அவர்கள் மத்தியில் மம்மாவை வைத்து, அவரைச் சுற்றி ஒரு வட்டத்தை உருவாக்கினார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் கண்ணாமுச்சி விளையாடினார்கள். அவர்கள் அதிகளவில் விளையாடினார்கள். பாப்தாதா தொடர்ந்து புன்னகைத்தவண்ணம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் அங்கே ஹோலி கொண்டாடச் சென்றார்கள். அதனால் அதிகளவில் விளையாடினார்கள். சிறிது நேரத்தின் பின்னர், அவர்கள் எல்லோரும் பாபாவின் கைகளால் அரவணைக்கப்பட்டு, அன்பிலே திளைத்திருந்தார்கள். அதன்பின்னர், பாப்தாதா வைரங்களை எல்லோர்மீதும் தூவினார். அவை மிகவும் சூட்சுமமானவை. அத்துடன் பல வர்ணங்களைக் கொண்டவை. இங்கே மிகவும் மென்மையான பொடி இருப்பதைப் போல், அந்த வைரங்களும் அவ்வாறே இருந்தன. அவை மிக நன்றாகப் பிரகாசித்தன. பாப்தாதா எல்லோரின் மீதும் அவற்றைத் தூவினார். அவர்களின் சரீரங்கள் ஏற்கனவே பிரகாசித்தன. பல்வகை நிறங்களுள்ள வைரங்கள் அவர்களின் மீது விழுந்ததும், அவர்கள் மிக நன்றாக அலங்கரிக்கப்பட்டார்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் - ஏழு நிறங்கள் பற்றிப் பேசப்படுகின்றன, அல்லவா? அந்த ஏழு நிறங்களும் அங்கே இருந்தன. அவை அனைத்தும் அதிகளவில் பிரகாசிக்க ஆரம்பித்தன. சத்தியயுகத்தில்கூட, இத்தகைய ஆடைகள் இருக்கமாட்டாது. அவர்கள் எல்லோரும் அதை இரசித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் தூவ ஆரம்பித்தார்கள். பல விளையாட்டுத்தனமான களிப்பூட்டும் சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் உண்மையில் அதிகளவில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவ்வாறு மகிழ்ந்த பின்னர் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் நாளை போக் படைப்பீர்கள். ஆனால், பாப்தாதா எல்லோருக்கும் முன்கூட்டியே மதுவனத்தின் பல்வேறு வகையான சங்கமயுகபோக்கை வழங்கினார். அவற்றுக்குள், ஹோலியின் விசேடமான போக் என்ன? (ஜிலேபியின் கெட்டி வடிவமான - கேவர் - ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டது – அத்துடன் ஜிலேபியும்). நீங்கள் எல்லோரும் ரோஜா இதழ்களைப் பொரிக்கிறீர்கள்தானே? சங்கமயுகத்தின் பல்வகையான போக் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. உங்கள் எல்லோருக்கும் முன்னர் அவர்கள் போக் எடுத்துக் கொண்டார்கள். நீங்கள் அதை நாளை பெறுவீர்கள். அச்சா. சாராம்சமாக, அவர்கள் எல்லோரும் அதிகளவில் கொண்டாடினார்கள், ஆடிப் பாடினார்கள். அவர்கள் எல்லோரும். ‘ஆஹா பாபா! எனது பாபா! எனது இனிமையான பாபா!’ என்ற பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் ஆடிப் பாடினார்கள். அத்துடன் உண்டார்கள். இறுதியில் என்ன நடக்கும்? வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கப்பட்ட பின்னர் விடை பெறுவார்கள். ஆகவே, நீங்கள் எல்லோரும் இதைக் கொண்டாடினீர்களா அல்லது வெறுமனே அதைக் கேட்டுக் கொண்டிருந்தீர்களா? எவ்வாறாயினும், நீங்கள் முதலில் ஒளியாலான சரீரங்களைக் கொண்ட தேவதைகள் ஆகவேண்டும். உங்களால் இப்படி ஆகமுடியுமா இல்லையா? உங்களின் சரீரங்கள் வெளியே தெரியக்கூடியவையாக இருக்கின்றனவா? இல்லை! ஒரு விநாடியில் இலேசான, ஒளியாலான பிரகாசிக்கும் ரூபம் ஆகுங்கள். உங்களால் அப்படி ஆகமுடியுமா? சம்பூரணமான தேவதைகள் ஆகுங்கள்.

(பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்).

இப்போது, உங்களின் சூட்சுமமான பிரகாசிக்கும் சரீரங்களின் மீது பல்வர்ண வைரங்களைத் தூவுங்கள். சதா நற்குணங்கள், சக்திகள் மற்றும் இந்த ஞானத்தின் தெய்வீக நிறங்களால் நிறமூட்டப்பட்டவராக இருங்கள். எல்லாவற்றிலும் மகத்தான நிறம், பாப்தாதாவின் சகவாசத்தினால் நிறமூட்டப்படுவதாகும். ஆகவே, சதா இந்த நிறத்தால் நிறமூட்டப்பட்டிருங்கள். நீங்கள் இவ்வாறு அநாதியாக இருப்பீர்களாக! அச்சா.

இந்த நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த தேவதைக் குழந்தைகளுக்கு, சதா சுத்தமான இதயங்களைக் கொண்டிருப்பதுடன் சதா சகல பேறுகளாலும் நிறைந்திருப்பவர்களுக்கும், உண்மையான ஹோலியைக் கொண்டாடுபவர்களுக்கும் அதாவது, இந்த ரூபத்தை உங்களின் உண்மையான நடைமுறை ரூபம் ஆக்குபவர்களுக்கும் ஆக்கபூர்வமாக இருப்பதற்கும் பணிவாக இருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுபவர்களுக்கும் தமது கணக்கில் சதா ஆசீர்வாதங்களைச் சேமிப்பவர்களுக்கும் பாப்தாதாவின் பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் இனிமையால் தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் காட்சியை வழங்கும் ஒரு மகாத்மா ஆகுவீர்களாக.

தமது எண்ணங்களில் இனிமையையும் தமது வார்த்தைகளில் இனிமையையும் தமது செயல்களில் இனிமையையும் கொண்டிருக்கும் குழந்தைகள் தந்தைக்கு நெருக்கமானவர்கள். இதனாலேயே, தந்தை ஒவ்வொரு நாளும் அவர்களுக்குக் கூறுகிறார்: இனிய, இனிய குழந்தைகளே. குழந்தைகளும், ‘இனிய, இனிய பாபா!’ எனப் பதில் அளிக்கிறார்கள். எனவே, இந்த இனிய வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் உங்களை இனிமையால் நிறைந்தவர்கள் ஆக்குகின்றன. இனிமையை வெளிப்படுத்தும் மேன்மையான ஆத்மாக்கள் மகத்தானவர்கள். இனிமை என்பது மகத்தானது. இனிமை இ;ல்லாவிட்டால், மகத்துவத்தின் அனுபவமும் இருக்க மாட்டாது.

சுலோகம்:
இலேசாகவும் ஒளியாகவும் இருந்து ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். நீங்கள் களிப்பினை அனுபவம் செய்வீர்கள்.