23.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களின் முதலாவது பாடம்: நான் ஓர் ஆத்மா, சரீரமல்ல. ஆத்ம உணர்வில் இருங்கள், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும்.

கேள்வி:
உலக மக்களிடம் இல்லாத, எந்த ஒரு மறைமுகமான பொக்கிஷம் குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது?

பதில்:
தந்தையாகிய கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் அறிந்து கொண்டிருப்பதால், சந்தோஷம் என்ற மறைமுகமான பொக்கிஷத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த தற்போதைய கல்வி உங்கள் எதிர்கால அமரத்துவ பூமிக்கானதே அன்றி, இந்த மரண பூமிக்கானதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: அதிகாலையில் எழுந்து, உலா போன்றவற்றிக்குச் செல்லுங்கள், ஆனால் முதற்பாடத்தை நினைவு செய்தால், நீங்கள் தொடர்ந்தும் உங்கள் கணக்கில் சந்தோஷத்தைச் சேமித்துக் கொள்வீர்கள்.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கின்றார்: குழந்தைகளே, நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? இங்கே அமர்ந்திருக்கும் வேளையில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுகிறீர்களா? பரமாத்மாவாகிய தந்தையே ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் சரீரங்கள் அல்ல, ஆத்மாக்கள் என்ற உணர்வு இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கின்றது. குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குவதற்கு முயற்சி செய்யப்பட வேண்டும். குழந்தைகளால் ஆத்ம உணர்வில் நிலைத்திருக்க முடிவதில்லை. அவர்கள் மீண்டும், மீண்டும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றார்கள். இதனாலேயே பாபா வினவுகின்றார்: இங்கே நீங்கள் ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகினால், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். நீங்கள் சரீர உணர்வில் இருந்தால், உங்கள் லௌகீக உறவினர்களையே நீங்கள் நினைவுசெய்வீர்கள். அனைத்துக்கும் முதலில், “நான் ஓர் ஆத்மா” என்ற வார்த்தைகளை நினைவு செய்யுங்கள். இந்த ஆத்மாவாகிய என்னில் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. நான் ஓர் ஆத்மா என்பதை மிக உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அரைக்கல்பமாக, நீங்கள் சரீர உணர்வு உடையவராக இருந்து வருகின்றீர்கள். சங்கமயுகமான இப்பொழுது மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். உங்களை ஒரு சரீரம் எனக் கருதுவதால், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாதுள்ளது. ஆகவே இந்தப்பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: இந்த ஆத்மாவாகிய நான் எல்லையற்ற தந்தையின் ஒரு குழந்தை ஆவேன். உங்கள் சரீரத்தின் தந்தையை நினைவுசெய்யுமாறு உங்களுக்கு என்றுமே கற்பிக்கப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் பரலோகத் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! சரீர உணர்வு உடையவர்களாக இருப்பதனால், நீங்கள் சரீர உறவினர்களையே நினைவு செய்கின்றீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்வதற்கே முயற்சி தேவையாகும். இவை அனைத்தையும் விளங்கப்படுத்துபவர் யார்? ஆத்மாக்காகிய எங்கள் அனைவரதும் தந்தையாவார், அவரையே அனைவரும் நினைவு செய்து பிரார்த்திக்கின்றார்கள்: “பாபா வாருங்கள்! வந்து, இந்தத் துன்பத்தில் இருந்து எங்களை விடுவியுங்கள்!” குழந்தைகளாகிய நீங்கள் இந்தக்கல்வியின் மூலம் உங்கள் எதிர்காலத்திற்கான உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் நீண்ட காலத்திற்கு இந்த மரண பூமியில் இருக்க விரும்பவில்லை. எங்களுடைய இந்தக் கல்வி, எங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கானது. நாங்கள் அமரத்துவ பூமியான சத்தியயுகத்திற்காகவே கற்கின்றோம். இந்த ஞானத்தை எங்களுக்கு அமரத்துவத் தந்தையே கொடுக்கின்றார். ஆகவே, நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, அனைத்துக்கும் முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றோம். பாபா எங்களை, அனைவரையும் விட அதி மேன்மையான மனிதர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், நீங்கள் மேன்மையான மனிதர்கள் ஆகுவீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கே நான் வந்துள்ளேன். சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். எவ்வாறு நீங்கள் ஏணியிலிருந்து கீழே இறங்கினீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய எங்களுக்குள் 84 பிறவிகளின் பாகங்கள் பதியப்பட்டுள்ளன. இது உலகிலுள்ள வேறு எவருக்கும் தெரியாது. அந்தப் பக்திமார்க்கம் இந்த ஞான மார்க்கத்தில் இருந்து வேறுபட்டது. தந்தை கற்பிக்கின்ற ஆத்மாக்கள் மாத்திரமே இவை அனைத்தையும் அறிவார்களேயன்றி, வேறு எவரும் இதனை அறியார். இந்த மறைமுகமான பொக்கிஷம் எங்கள் எதிர்காலத்திற்கு உரியது. அமரத்துவ பூமிக்காகவே நீங்கள் கற்கிறீர்களேயன்றி, இந்த மரண பூமிக்காக அல்ல. தந்தை கூறுகின்றார்: நீங்கள் காலையில் உலா போன்றவற்றிக்குச் செல்லலாம், ஆனால் “நான் ஓர் ஆத்மா, இந்தச்சரீரமல்ல” என்ற முதலாவது பாடத்தை நினைவு செய்யுங்கள். எங்கள் ஆன்மீக பாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். இப்பொழுது இந்தத் துன்ப உலகம் மாற வேண்டும். சத்தியயுகமே சந்தோஷ உலகம். இந்த ஞானம் அனைத்தும் இப்பொழுது உங்களின் புத்தியில் இருக்கின்றது. இது ஆன்மீக ஞானம். ஞானக்கடலான தந்தையே ஆன்மீகத் தந்தை ஆவார். அவர் சரீரமற்றவர்களின் (ஆத்மாக்கள்) தந்தை ஆவார். ஏனைய அனைத்து உறவுகளும் சரீர உறவுகளே. இப்பொழுது சரீர உறவுமுறைகள் அனைத்தையும் துண்டித்து, ஒரேயொருவருடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். மக்கள் பாடுகிறார்கள்: என்னுடையவர் ஒருவரேயன்றி, வேறு எவருமல்ல. நாங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றோம். நாங்கள் இந்த சரீரங்களைக் கூட நினைவு செய்வதில்லை. இந்தப் பழைய சரீரங்கள் துறக்கப்பட வேண்டும். எவ்வாறு உங்கள் சரீரத்தை விட்டு நீங்குவது என்ற ஞானத்தையும் நீங்கள் பெறுகின்றீர்கள். நினைவில் அமர்ந்திருக்கின்ற பொழுது, சரீரம் துறக்கப்பட வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! இதனைத் தொடர்ந்தும் உங்களுக்குள் அரையுங்கள். தொடர்ந்தும் விதையாகிய தந்தையையும் விருட்சத்தையும் நினைவுசெய்யுங்கள். சமய நூல்களில் கல்பவிருட்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானக்கடலான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது தெரியும். உங்களுக்குக் கற்பிப்பது ஒரு மனிதரல்ல. இதனை மிக உறுதியாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கற்கவேண்டும். சத்தியயுகத்திலும் உங்களுக்குக் கற்பிப்பவர்கள் சரீரதாரிகளே. இங்கு இந்த ஒரேயொருவர் ஒரு சரீரதாரியல்ல. அவர் கூறுகின்றார்: நான் ஒரு பழைய சரீரத்தின் ஆதாரத்தை எடுத்து உங்களுக்குக் கற்பிக்கின்றேன். இவ்வாறாகவே நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நான் மீண்டும் வந்து, இதேபோன்று அடுத்த கல்பத்திலும் உங்களுக்குக் கற்பிப்பேன். இப்பொழுது என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நானே தூய்மையாக்குபவர். நான் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றேன். எனினும் மாயையும் குறைந்தவள் அல்ல. அவளும் சக்திவாய்ந்தவள். அவள் உங்களை எங்கிருந்து வீழ்த்துகின்றாள் எனப் பாருங்கள். இவை அனைத்தையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள், இல்லையா? 84 பிறவிகளின் சக்கரம் நினைவு கூரப்படுகின்றது. அது மனிதர்களுக்கே பொருந்துகின்றது. பலர் கேட்கிறார்கள்: மிருகங்களுக்கு என்ன நடக்கும்? எவ்வாறாயினும் இங்கே இது மிருகங்களுக்கான விடயம் அல்ல. தந்தை தனது குழந்தைகளுடன் மாத்திரமே பேசுகின்றார். வெளியிலிருந்து வருபவர்களுக்கு தந்தையைக் கூடத் தெரியாது, எனவே அவர்கள் அவருடன் எதைப் பற்றிப் பேசுவார்கள்? பாபாவை சந்திக்க விரும்புவதாகச் சிலர் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் முற்றிலுமாக அவரை அறிந்து கொள்ளாததால், அவர்கள் அமர்ந்திருந்து, சகல வகையான பிழையான கேள்விகளையும் கேட்பார்கள். ஏழு நாட் பாடநெறியைப் பெற்ற பின்னரும் அந்த ஒரேயொருவரே எங்கள் எல்லையற்ற தந்தை என்பதைச் சிலர் முற்றிலும் புரிந்து கொள்வதில்லை. பழைய பக்தர்களாலும், பெருமளவு பக்தி செய்தவர்களாலும், இந்த ஞான விடயங்கள் அனைத்தையும் தங்கள் புத்தியில் வைத்திருக்க முடியும். குறைந்தளவு பக்தி செய்தவர்களால் மிகக் குறைந்தளவு ஞானத்தையே தங்கள் புத்தியில் வைத்திருக்க முடிகின்றது. நீங்களே பக்தர்கள் அனைவருக்குள்ளும் பழமை வாய்ந்தவர்கள். பக்தியின் பலனை வழங்குவதற்காகவே கடவுள் வருகின்றார் என நினைவுகூரப்படுகின்றது, ஆனால் அது என்ன என்பதை எவரும் அறியார். பக்தி மார்க்கம், இந்த ஞானமார்க்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. முழு உலகத்தவர்களும் பக்தி மார்க்கத்திலேயே உள்ளார்கள். பல மில்லியன்களுள் ஒரு கைப்பிடி அளவினரே வந்து இந்த ஞானத்தைக் கற்கின்றார்கள். இந்த விளக்கம் மிக இனிமையானது. மனிதர்கள் மாத்திரமே 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். முன்னர் நீங்கள் எதனையுமே அறிந்திருக்கவில்லை. நீங்கள் சிவனையேனும் அறிந்திருக்கவில்லை. சிவனுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. மக்கள் சிவனை வழிபடுகின்றார்கள்; அவர்கள் அவருக்கு மலர்களைப் படைத்து அவரை வணங்குகின்றார்கள். ஆனால் அவரை ஏன் வழிபடுகின்றார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனை ஏன் வழிபடுகின்றார்கள் என்பதையோ அல்லது அவர்கள் எங்கே சென்றுள்ளார்கள் என்பதையோ அறியார்கள். தங்களுடைய பூஜிப்பதற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் யார் என்பது பாரத மக்களுக்கும் தெரியாது. கிறிஸ்து இன்ன வருடத்தில் வந்து தனது சமயத்தை ஸ்தாபித்தார் என்பது கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். சிவபாபாவை எவருக்குமே தெரியாது. சிவன் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். அவர் மாத்திரமே அதிமேலானவர். மக்கள் அவரை அதிகளவில் வழிபடுகின்றார்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அவர் எவ்வாறு உங்களுக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! வந்து உங்களைத் தூய்மை ஆக்குமாறு தந்தையை நீங்கள் அழைக்கின்றீர்கள். ஆலயங்களில் மக்கள் அதிகளவு வழிபாடு செய்வதுடன் அதிக ஆடம்பரத்துடன் கோலாகலமாகக் கொண்டாடுகின்றார்கள்;. அவர்கள் அதிகளவு செலவு செய்கின்றார்கள். இதனை ஸ்ரீநாத்,ஜெகநாத் ஆலயங்களில் சென்று பாருங்கள். இரண்டுமே ஒன்றுதான். ஜெகநாத் ஆலயத்தில் ஒரு பானை சோறே சமைக்கப்படுகின்றது. ஆனால், ஸ்ரீநாத்தில் பலவகையான உயர்ரக உணவைப் பெருமளவு சமைக்கின்றார்கள். ஏன் இந்த வேறுபாடு உள்ளது? இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். ஸ்ரீநாத், ஜெகநாத் ஆகிய இரண்டு விக்கிரகங்களும் கருங்கல்லிலேயே செதுக்கப்பட்டவை ஆகும். அவர்களுக்கு இதற்கான காரணம் முற்றிலும் புரியவில்லை. ஜெகநாத் இலக்ஷ்மி நாராயணனை அல்லது இராதை கிருஷ்ணரைப் பிரதிநிதிப்படுத்துகின்றார் என நீங்கள் கூறுவீர்களா? இராதை கிருஷ்ணருக்கும், இலக்ஷ்மி நாராயணனுக்கும் இடையில் உள்ள உறவுமுறை என்ன என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள் எனவும், நீங்கள் இப்பொழுது வழிபடுபவர்கள் ஆகியுள்ளீர்கள் எனவும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முழுச் சக்கரத்தையும் நீங்கள் சுற்றி வந்துள்ளீர்கள். மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுவதற்காகவே நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். இதனை உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதரல்ல. இவை கடவுளின் வாசகங்கள். கடவுள் ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகிறார். ஞானக்கடலான, தூய்மையாக்குகின்ற தந்தையை நினைவுசெய்கின்ற, பல பக்திக்கடல்கள் உள்ளன. நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள். ஆகையால் நிச்சயமாக நீங்கள் மீண்டும் தூய்மையானவர்களாக வேண்டும். இது தூய்மையற்ற உலகம். இது சுவர்க்கம் அல்ல. வைகுந்தம் எங்குள்ளது என எவருக்குமே தெரியாது. “இன்னார் வைகுந்தத்திற்குச் சென்று விட்டார்” என அவர்கள் கூறுகிறார்கள். எனவே அவர்கள் ஏன் அந்த ஆத்மாவிற்கு நரகத்தின் உணவை (பிராமணப் புரோகிதர் மூலம்) ஊட்டுகின்றார்கள்? சத்தியயுகத்தில் பல்வேறு வகையான மலர்களும், பழங்களும் உள்ளன. இங்கே உங்களிடம் என்னதான் இருக்கிறது? இது நரகம். இப்பொழுது நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்வதற்கு பாபாவினால் தூண்டப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக வேண்டும். இதனைச் செய்வதற்கான வழியைத் தந்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தந்தை உங்களுக்கு ஒவ்வொரு சக்கரத்திலும் இந்த வழியைக் காட்டுகின்றார். என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என உங்களுக்குத் தெரியும். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு ஆகினோம். ஒவ்வொரு கல்பத்திலும் பாபா உங்களுக்குக் கூறுகின்ற அமரத்துவக் கதையை நீங்கள் செவிமடுக்கின்றீர்கள் என உங்களுக்குத் தெரியும். சிவபாபாவே அமரத்துவப் பிரபு ஆவார். எனினும், அவர் அமர்ந்திருந்து பார்வதிக்குக் கதை கூறினார் என்றில்லை. அது பக்தியாகும். இந்த ஞானம் என்றால் என்ன, பக்தி என்றால் என்ன என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். பிராமணர்களின் பகலும், பிராமணர்களின் இரவும் உள்ளன. நீங்கள் பிராமணர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆதிதேவரும் ஒரு பிராமணர், அவரை ஒரு தேவர் என அழைக்க முடியாது. ஆதிதேவருடைய சிலையைப் பார்ப்பதற்காக மக்கள் செல்கிறார்கள். இறைவியர்களுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அதிக சேவை செய்ததினாலேயே நினைவுகூரப்படுகிறீர்கள். விகாரம் அற்றிருந்த பாரதமே பின்னர் விகாரம் நிறைந்ததாகி விட்டது. இப்பொழுது இது இராவணனின் இராச்சியம். இந்தச் சங்கமயுகத்திலேயே குழந்தைகளாகிய நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் மீது அழிவற்ற வியாழ சகுனங்கள் உள்ளன. பின்னர் நீங்கள் அமரத்துவ பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்களை மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக்குவதற்காகவே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவது என்றால், வியாழ சகுனத்தைக் கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம் ஆகும். நீங்கள் அமரத்துவ பூமியான, சுவர்க்கத்துக்கு நிச்சயமாகச் செல்வீர்கள். எனினும், நீங்கள் கற்கும் பொழுது சகுனங்கள் தளம்பல் அடைகின்றன. நீங்கள் நினைவு செய்வதற்கு முற்றிலும் மறந்து விடுகிறீர்கள். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: என்னை நினைவு செய்யுங்கள்! கீதையிலும் கூறப்பட்டுள்ளது: “கடவுள் பேசுகின்றார்: காமமே கொடிய எதிரி”. மக்கள் அந்தக் கீதையைக் கற்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த விகாரத்தை வெற்றி கொள்வதில்லை. இதனைக் கடவுள் எப்பொழுது கூறினார்? 5000 வருடங்களுக்கு முன்னர். இப்பொழுது மீண்டும் ஒருமுறை கடவுள் பேசுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றி கொள்ளுங்கள்! அது உங்களுக்கு அதன் ஆரம்பத்தில் இருந்து மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கின்றது. காமமே பிரதான விகாரம் ஆகும். இதனாலேயே அனைவரும் தூய்மை அற்றவர்கள் எனக் கூறப்பட்டது. எவ்வாறு இச்சக்கரம் சுழல்கின்றது என இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நாடகத்திற்கேற்ப, நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினோம், பின்னர் தந்தை வந்து எங்களைத் தூய்மை ஆக்குகின்றார். பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: முதலில் அல்பா கூறுகின்றவற்றை நினைவுசெய்யுங்கள்: நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் முன்னர் மேன்மையாக இருந்தீர்கள் எனவும், நீங்கள் இப்பொழுது சீரழிந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் எனவும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்கள் ஆகுவதற்கு மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கின்றீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்! எவருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள். அனைவருக்கும் தொடர்ந்தும் பாதையைக் காட்டுங்கள்! தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அகற்றப்படும். நீங்கள் என்னை மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கின்றீர்கள். எவ்வாறு தூய்மையாக்குபவர் வந்து அனைவரையும் தூய்மை ஆக்குகின்றார் என்பதை எவரும் அறியார். ஒரு கல்பத்திற்கு முன்னரும் தந்தை கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! இந்த யோகத் தீயிலேயே உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். கலப்படம் அகற்றப்படும் பொழுது, ஆத்மா தூய்மை ஆகுகின்றார். தங்கத்தில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதனால் செய்யப்படும் ஆபரணங்கள் அதனைப் போன்றதே. எவ்வாறு ஆத்மாக்களில் கலப்படம் கலந்துள்ளது என்பதைத் தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அது அகற்றப்பட வேண்டும். வந்து குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குவது நாடகத்தில் தந்தையின் பாகமாகும். நீங்கள் தூய்மையானவர்களாக வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் வைஷ்ணவர்களாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது தூய இல்லற ஆச்சிரமமாக இருந்தது. நாங்கள் இப்பொழுது தூய, விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். நீங்கள் இரட்டை வைஷ்ணவர்கள் ஆகுகின்றீர்கள். (தூய, தாவர உணவு அருந்துபவர்) நீங்கள் உண்மையான வைஷ்ணவர்கள். அந்த மக்கள் விகாரத்தில் ஈடுபடுகின்ற, வைஷ்ணவ சமயத்துக்கு உரியவர்கள். நீங்கள் விகாரமற்ற, வைஷ்ணவ சமயத்துக்கு உரியவர்கள். முதலில் நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். இரண்டாவதாக, நீங்கள் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள். நீங்கள் அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள். அந்த மக்கள் குறுகிய காலத்திற்கு, ஒரு பிறவிக்கு மாத்திரம் அரசர்கள் ஆகுகின்றார்கள். உங்கள் இராச்சியம் 21 வம்சங்களுக்கு, அதாவது, முழு யுகத்திற்கும் நீடிக்கின்றது. அங்கே ஒருபொழுதும் அகாலமரணம் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது மரணத்தை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். நேரம் வரும் பொழுது, நீங்கள் உங்கள் பழைய தோலை நீக்கி, புதியதொன்றை எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் அதன் காட்சிகளைக் காண்பீர்கள். சந்தோஷத்தில் வாத்தியங்கள் இசைக்கப்படும். நீங்கள் தமோபிரதான் சரீரத்தை நீக்கி, சதோபிரதான் சரீரத்தை எடுக்கும் பொழுது அது பெரும் சந்தோஷத்துக்குரிய விடயமாகும். அங்கு சராசரி ஆயுட்காலம் 150 வருடங்களாகும். இங்கே அவர்கள் அனைவரும் விகாரத்தில் ஈடுபடுவதனால் தொடர்ந்தும் அகால மரணம் இடம் பெறுகின்றது. முறையாக மிகச்சரியான யோகம் செய்யும் குழந்தைகளால், யோக சக்தியின் மூலம் தங்கள் அனைத்துப் பௌதீக உறுப்புகளையும் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் முழுமையாக யோகத்தில் நிலைத்திருக்கும் பொழுது, உங்கள் பௌதீக உறுப்புக்கள் குளிர்மை அடைகின்றன. சத்தியயுகத்தில் உங்கள் பௌதீக உறுப்புக்கள் எவையும் உங்களை ஏமாற்ற மாட்டாது. அங்கே உங்கள் பௌதீக உறுப்புக்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என ஒருபொழுதும் கூறமாட்டீர்கள். நீங்கள் அதிமேன்மையான அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். இதுவே அழிவற்ற வியாழ சகுனங்கள் என அறியப்படுகின்றது. தந்தையே விருட்சத்தின் பிரபுவும், மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவார். விதையானவர் மேலே இருக்கின்றார், நீங்கள் அவரை மேலே நினைவுசெய்கின்றீர்கள். ஆத்மா தனது தந்தையை நினைவுசெய்கின்றார். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருமுறை மாத்திரமே எங்களுக்கு அமரத்துவமான கதையைக் கூறுவதற்கு வருகின்றார். நீங்கள் அதனை அமரத்துவக் கதை என்றோ, சத்திய நாராயணனின் கதை என்றோ கூறினாலும், மக்கள் அந்தக்கதையின் அர்த்தத்தை அறிவதில்லை. சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுப்பதால், நீங்கள் சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள். அமரத்துவக் கதையைச் செவிமடுப்பதால், நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுகின்றீர்கள். பாபா அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பௌதீக உறுப்புக்கள் அனைத்தையும் யோகசக்தியினால் கட்டுப்படுத்துங்கள். விருட்சத்தின் பிரபுவான ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். ஓர் உண்மையான வைஷ்ணவர் ஆகுங்கள். அதாவது, தூய்மை ஆகுங்கள்!

2. அதிகாலையில் விழித்தெழுந்து முதலாவது பாடத்தை உறுதி செய்யுங்கள்: நான் ஒர் ஆத்மா, சரீரமல்ல. எங்கள் ஆன்மீக பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தத் துன்ப உலகம் இப்போது மாற வேண்டும். இவ்வாறாக இந்த ஞானம் அனைத்தையும் கடைவதற்கு உங்கள் புத்தியைத் தொடர்ந்தும் பயன்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரித்து பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆகுவீர்களாக.

நாடகத்தின்படி, சங்கமயுக நேரத்திலேயே நீங்கள் ஒவ்வொரு வினாடியும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரிக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்கள். உங்களுக்காக இத்தகைய ஆசீர்வாதத்தைப் பயன்படுத்தி, அதை மற்றவர்களுக்கும் தானம் செய்யுங்கள். அதேபோன்று, எண்ணங்களின் பொக்கிஷத்தை, இந்த ஞானப் பொக்கிஷத்தை, பௌதீக செல்வத்தின் பொக்கிஷத்தையும் பயன்படுத்தி, பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரியுங்கள். ஏனென்றால், இந்த வேளையில் உங்களின் பௌதீகச் செல்வத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் ஒரு புதிய பைசாவின் (சதம்) மதிப்பு, ஓர் இரத்தினத்திற்குச் சமமானது ஆகுகிறது. எனவே, சகல பொக்கிஷங்களையும் உங்களுக்காகவும் சேவைக்காகவும் பயன்படுத்துங்கள். நீங்கள் பலமில்லியன்கள் மடங்கு பாக்கியசாலி ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் இதயத்தில் அன்பு இருக்கும்போது, உங்களால் இலகுவாக எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற முடியும்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். உங்களின் சரீரத்தில் உள்ள ஆத்மா எல்லோருக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் வெளிப்படையானவர் ஆகுங்கள். உங்களின் ஆத்ம உணர்வு ரூபம் எல்லோருக்கும் அவர்களின் ஆத்மாவின் ரூபத்தின் காட்சியைக் கொடுக்க வேண்டும். இதுவே அவ்யக்த ஸ்திதியின் அல்லது ஆத்ம உணர்வு ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுத்தல் எனப்படுகிறது.