24.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஞானம் உங்களைக் குளிர்மை ஆக்குகின்றது. இந்த ஞானம், காமம் கோபம் என்ற தீயை அணைத்து விடுகின்றது. பக்தி செய்வதன் மூலம் அத்தகைய தீயை அணைக்க முடியாது.

கேள்வி:
நினைவு செய்வதில் நீங்கள் எடுக்க வேண்டிய பிரதான முயற்சி என்ன?

பதில்:
தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கும் பொழுது உங்கள் சொந்த சரீரமுமே நினைவு செய்யப்படக் கூடாது. ஆத்ம உணர்வுடையவராகி தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியாகும். இதற்கே தடைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அரைக்கல்பமாக நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள். பக்தி என்றால் சரீரங்களை நினைவு செய்வதாகும்.

ஓம் சாந்தி.
நினைவு செய்வதற்கு ஏகாந்தம் மிகவும் அவசியமானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மௌனமாகவும் ஏகாந்தமாகவும் இருக்கும் போது தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் அளவிற்கு கூட்டத்தின் மத்தியில் நினைவில் நிலைத்திருக்க முடியாது. குழந்தைகள் பாடசாலையில் கல்வி கற்கின்ற பொழுது அவர்கள் ஏகாந்தமாக இருந்தே கற்கின்றார்கள். இங்கும் உங்களுக்கு ஏகாந்தம் அவசியமாகும். நீங்கள் சுற்றுலா சென்றாலும் நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். கல்வி மிக இலகுவானது. அரைக்கல்பமாக மாயையின் இராச்சியம் ஆரம்பமானதில் இருந்து நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள். சரீர உணர்வே முதலாவது எதிரியாகும். தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாக நீங்கள் சரீரத்தை நினைவு செய்கின்றீர்கள். அது சரீர அகங்காரம் என அழைக்கப்படுகின்றது. இங்கே ஆத்ம உணர்வுடையவர் ஆகுமாறு குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்படுகின்றது. இதற்கு மாத்திரமே முயற்சி தேவையாகும். நீங்கள் இப்பொழுது பக்தியிலிருந்து விடுதலை அடைந்திருக்கின்றீர்கள். பக்தி சரீரத்தின் மூலமே செய்யப்படுகின்றது. நீங்கள் யாத்திரை ஸ்தலங்கள் போன்ற இடங்களிற்கு உங்கள் சரீரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு கண தரிசனத்துக்காகவும் இதனை அல்லது அதனைச் செய்வதற்காகவும் செல்கின்றீர்கள். சரீரமே செல்ல வேண்டியுள்ளது. இங்கே நீங்கள் ஓர் ஆத்மா, பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு எண்ணமே உள்ளது. எந்தளவுக்கு நீங்கள் பாபாவை நினைவு செய்கின்றீர்களோ அதற்கேற்ப உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்க்கத்திலே உங்கள் பாவங்கள் ஒரு போதும் அழிய முடியாது. வயோதிபர் ஒருவர் தான் பக்தி செய்யாதுவிடின் பெருமளவு இழப்பு ஏற்பட்டு விடுவதுடன் தான் நாஸ்திகனாகி விடுவோம் என்ற அக்கறையையும் கொண்டிருப்பார். இது பக்தியில் நெருப்பும் இந்த ஞானத்தில் குளிர்மையும் உள்ளதைப் போன்றதாகும். இதன் மூலம் காமமும் கோபமும் என்ற நெருப்புகள் முடிவடைகின்றன. பக்திமார்க்கத்திலும் மக்கள் பக்தி உணர்வைக் கொண்டிருப்பதனால் அவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். உதாரணமாக அவர்கள் பத்ரிநாத்துக்குச் சென்று ஒரு காட்சியைக் காண்கின்றார்கள்: பின்னர் என்ன நடக்கின்றது? அவர்கள் அந்தத் தூய உணர்வைக் கொண்டிருந்து வேறு எவரையும் அல்லாது பத்ரிநாத்தையே (மாற்றத்தை ஏற்படுத்தும் பிரபு) தம் புத்தியில் வைத்திருப்பார்கள். முன்னர் அவர்கள் நடந்தே சென்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அவர்களின் ஆசைகளைத் தற்காலிகமாகப் பூர்த்தி செய்கின்றேன். நான் அவர்களுக்குக் காட்சி கொடுக்கின்றேன், ஆனால் அதன் மூலம் அவர்களைச் சந்திப்பதில்லை. என்னிடம் அல்லாது அவர்களால் இந்த ஆஸ்தியைப் பெறமுடியாது. என்னிடமிருந்து மாத்திரமே நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவர்கள் அனைவரும் சரீரதாரிகளே. படைப்பவராகிய தந்தையிடமிருந்தே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆனால் உயிர்வாழ்வனவோ உயிரற்றனவோ ஏனைய அனைத்தும் படைப்பேயாகும். படைப்புகளிடம் இருந்து உங்களால் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். குமாரிகள் தீய சகவாசத்தின் ஆதிக்கம் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: தூய்மை அற்றவர்கள் ஆகுவதன் மூலம் நீங்கள் ஆரம்பத்திலிருந்து மத்தியூடாக இறுதிவரை துன்பத்தையே பெறுகின்றீர்கள். தற்பொழுது அனைவரும் தூய்மை அற்றவர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். அசரீரியான தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிரம்மாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என ஒருபோதும் நினைக்க வேண்டாம். அனைவரது புத்தியும் சிவபாபாவை நோக்கியே செல்ல வேண்டும். சிவபாபா இவர் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார். தாதிமார்களான உங்களுக்கும் சிவபாபாவே கற்பிக்கின்றார். அவரை நீங்கள் எவ்வாறு உபசரிப்பீர்கள்? நீங்கள் சிவபாபாவிற்கு திராட்சை, மாம்பழம் போன்றவற்றைக் கொண்டு வருகின்றீர்கள். ஆனால் சிவபாபா கூறுகின்றார்: நான் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கே ஆகும். பக்தர்கள் பிரசாதம் படைத்து பின்னர் அதனைத் தம் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்கள். நான் அதை உண்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து உங்களைத் தூய்மையாக்குகின்றேன். நீங்கள் தூய்மையாகிய பின்னர் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைகின்றீர்கள். இதுவே என்னுடைய வியாபாரமாகும். கடவுள் சிவனின் வாசகங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றார்கள். அவர்கள் கடவுள் பிரம்மாவின் வாசகங்கள் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் ‘பிரம்மா பேசுகின்றார்’ எனக் கூறுவதில்லை. இவர் முரளியை நடாத்திய போதிலும் சிவபாபாவே முரளியை நடத்துவதாக எப்போதும் கருதுங்கள். பாபா எவராவது ஒருவர் அம்பினால் மிக நன்றாக தைக்கப்பட வேண்டுமெனப் புரிந்து கொள்ளும் போது அவர் பேசுபவரின் உள்ளே பிரவேசிப்பார். ஞான அம்பு மிகவும் கூர்மையானது எனக் கூறப்படுகின்றது. விஞ்ஞானத்திற்கு அதிகளவு சக்தி உள்ளது. குண்டு வெடிப்பு போன்றன பல இடம்பெறுகின்றன. நீங்களோ ஆழமான மௌனத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் மௌனத்தின் மூலம் விஞ்ஞானத்தை வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் இந்த உலகைத் தூய்மை ஆக்குகின்றீர்கள், ஆனால் நீங்கள் முதலில் உங்களைத் தூய்மையாக்க வேண்டும். நாடகத்துக்கு ஏற்ப நீங்கள் தூய்மையாக வேண்டும். இதனாலேயே விநாசமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது அமைதிதாமத்திற்குச் செல்ல இருக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: அது உங்களது வீடாகும். நீங்கள் உங்களது வீட்டிற்கு அதிகளவு சந்தோஷத்துடன் செல்ல வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு நன்றாக முயற்சி செய்ய வேண்டும். பாபா இந்த நினைவு யாத்திரையை வலியுறுத்துகின்றார். இதிலேயே முயற்சி இருக்கின்றது. தந்தை வினவுகின்றார்: நடக்கும் போதும் அசைந்து திரியும்போதும் நினைவு செய்வது இலகுவானதா அல்லது ஓர் இடத்தில் அமர்ந்திருந்து நினைவு செய்வது இலகுவானதா? மக்கள் பக்தி மார்க்கத்திலே இருந்து மணிமாலையை பெருமளவு உருட்டுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் “ராமா ராமா” எனக் கூறுவார்கள். ஆனால் அதில் எந்த நன்மையும் இல்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிக இலகுவான வழிமுறையைக் கூறியுள்ளார். உணவைச் சமைக்கும் போதும் வேறு காரியங்களைச் செய்யும் போதும் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். பக்திமார்க்கத்திலே ஸ்ரீநாத்தில் பிரசாதம் தயார் செய்யும் போது அவர்கள் வாயை மூடி ஒரு துணியைக் கட்டிக்கொள்வார்கள். அதனால் சிறிதளவு சத்தம்கூட இருக்க மாட்டாது. அது பக்திமார்க்கமாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்தல் வேண்டும். அவர்கள் பிரசாதம் செய்கின்றார்கள், ஆனால் எவருமே அதை உண்பதில்லை: வழிகாட்டிகளின் குடும்பம் மட்டுமே அதை உண்கின்றனர். இங்கே சிவபாபாவே கற்பிக்கின்றார் என உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்திலே சிவபாபா தங்களுக்குக் கற்பிப்பதாக அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் சிவபுராணத்தை (சமயநூல்) உருவாக்கி இருந்தாலும் அவர்கள் சிவனையும் பார்வதியையும் சிவனையும் சங்கரரையும் அதில் கலந்து விட்டார்கள். அதைக் கற்பதில் எந்தவித நன்மையும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களது சொந்த சமயநூல்களையே கற்க வேண்டும். பாரத மக்களிடம் கீதை உள்ளது. கிறிஸ்தவர்களிடம் ஒரேயொரு பைபிள் மட்டுமே உள்ளது. தேவர்களின் சமயநூல் கீதையாகும். அதில் இந்த ஞானம் இருக்கின்றது. ஞானம் மாத்திரமே கற்கப்படுகின்றது. நீங்கள் இந்த ஞானத்தைக் கற்கவேண்டும். யுத்தங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களுடன் நீங்கள் செய்வதற்கு எதுவுமேயில்லை. நாங்களே யோகசக்தியைக் கொண்டிருப்பவர்கள், எனவே நாம் ஏன் பௌதீகசக்தி கொண்டவர்களின் விடயங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்? உண்மையில் நீங்கள் போராட்டத்தைக் கொண்டிருக்க முடியாது: நீங்கள் ஐந்து விகாரங்களையும் யோகசக்தியுடன் வெற்றி கொள்கின்றீர்கள். உங்களுடைய போராட்டம் ஐந்து விகாரங்களுடனாகும். அங்கே மனிதர்கள், மனிதர்களுடன் சண்டை செய்கின்றனர். ஆனால் நீங்களோ உங்கள் சொந்த விகாரங்களுடன் சண்டை இடுகின்றீர்கள். சந்நியாசிகளால் இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கு உடற்பயிற்சி போன்றவை கற்பிக்கப்படுவதில்லை. உங்களுக்கு ஒரேயொரு பயிற்சியே இருக்கின்றது. உங்களுடையது யோகசக்தியாகும். நீங்கள் ஐந்து விகாரங்களையும் யோகசக்தியினால் வெற்றி கொள்கின்றீர்கள். அந்த ஐந்து விகாரங்களும் உங்கள் எதிரிகளாவர், அவற்றினுள் சரீர உணர்வே முதலாவதாகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா ஆவீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் இங்கே கீழே இறங்கி வந்து கருப்பையினுள் பிரவேசிக்கின்றீர்கள். ஆனால் நான் இந்த சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். நான் ஒரு கருப்பையில் பிரவேசிப்பதில்லை. சத்தியயுகத்தில் நீங்கள் கருப்பை எனும் மாளிகையினுள் இருப்பீர்கள். பின்னர் இராவண இராச்சியத்தில் நீங்கள் கருப்பை எனும் சிறையினுள் செல்கின்றீர்கள். ஆனால் நான் அவதாரம் செய்கின்றேன். இதுவே தெய்வீகப் பிறப்பு எனப்படுகின்றது. நாடகத்துக்கு ஏற்ப நான் இவரினுள் பிரவேசித்து அவருக்கு பிரம்மா என்று பெயர் இடுகின்றேன். நான் அவருக்கு பிரம்மா எனப் பெயர் இடுகின்றேன். ஏனெனில் அவர் எனக்குச் சொந்தமானவர். குழந்தைகள் தத்தெடுக்கப்படுகின்ற பொழுது அவர்களுக்கு இவ்வாறான அழகான பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கும் நல்ல பெயர்கள் கொடுக்கப்பட்டன. திரான்ஸ் செய்தியாளரின் ஊடாக அற்புதமான பெயர் பட்டியல்கள் வந்தன. பாபாவுக்கு அனைத்துப் பெயர்களும் நினைவில் இல்லை. பெயர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. சரீரத்திற்கே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள், அவ்வளவுதான். நீங்கள் பூஜிக்கத்தக்க தேவர்களாக ஆகுகின்றீர்கள் எனவும் பின்னர் நீங்கள் அரசாட்சி செய்வீர்கள் எனவும் உங்களுக்குத் தெரியும். பின்னர் பக்திமார்க்கத்திலே உங்களுடைய சிலைகள் மாத்திரமே இருக்கும். தேவர்களின் பல சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்களும் கூட வணங்கப்படுகின்றார்கள். அவர்கள் களிமண்ணினால் சாலிகிராம்களை உருவாக்கி பின்னர் இரவிலே உடைத்து விடுகின்றார்கள். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அலங்கரித்து வழிபாடு செய்த பின்னர் கடலிலே மூழ்கச் செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் என்னுடைய விக்கிரகத்தையும் உருவாக்கி உணவூட்டிய பின்னர் நான் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்! அவர்கள் என்னை மிகவும் அவமதித்து விட்டார்கள். நீங்கள் மிக ஏழைகள் ஆகி விட்டீர்கள். ஏழைகளே பின்னர் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றார்கள். செல்வந்தர்களால் அரிதாகவே இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். செல்வந்தர்களிடம் இருந்து பெருமளவை எடுப்பதன் மூலம் பாபா என்னதான் செய்வார்? இங்கு அனைத்துமே குழந்தைகளின் ஒவ்வொரு துளியினாலேயே உருவாக்கப்படுகின்றது. அவர்கள் கூறுகின்றார்கள்: “பாபா எனது பெயரால் ஒரு செங்கல்லை வையுங்கள்” அதற்குப் பதிலாக தங்க வெள்ளி மாளிகைகளைப் பெறுவோம் என அவர்கள் நினைக்கின்றார்கள். அங்கே அளவற்ற தங்கம் இருக்கும்: அங்கே தங்கக் கட்டிகள் இருக்கும். இதனாலேயே அங்கே கட்டடங்கள் அவற்றினால் கட்டப்படுகின்றன. ஆகையினால் தந்தை மிக்க அன்புடன் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். நாடகம் முடிவடைகின்றது. தந்தை ஏழைக் குழந்தைகளான உங்களைச் செல்வந்தர்கள் ஆகுவதற்கான வழிமுறைகளை உங்களுக்குக் கொடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, உங்களிடமுள்ள அனைத்தையும் மாற்றீடு செய்யுங்கள். இங்கு எதுவுமே எஞ்சப் போவதில்லை. நீங்கள் இங்கிருந்து மாற்றீடு செய்வதை புதிய உலகில் நூறு மடங்காகப் பெறுவீர்கள். பாபா உங்களிடம் எதையுமே கேட்பதில்லை. அவர் அருள்பவர். அவர் இலகுவான வழிமுறையை உங்களுக்குக் கூறுகின்றார். இங்கே உள்ள அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிடும். நீங்கள் சிலவற்றையாவது மாற்றீடு செய்தால் புதிய உலகில் அதனைப் பெறுவீர்கள். இது இப்பொழுது இந்தப் பழைய உலகம் அழிவதற்கான நேரமாகும். இதில் எதுவுமே பயன்பட மாட்டாது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஒவ்வொரு வீட்டிலும் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்த வைத்தியசாலையைத் திறவுங்கள். அதன் மூலம் நீங்கள் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் பெறுவீர்கள். இதுவே பிரதான விடயமாகும். நல்லது.

இரவு வகுப்பு - 12/01/1969

இந்த நேரத்தில் சாதாரண ஏழைத் தாய்மார்களாகிய நீங்கள் முயற்சி செய்து உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். யக்ஞத்தில் தாய்மார்களே பெருமளவு உதவி செய்கின்றார்கள். அதேசமயம் வெகுசில ஆண்களே உதவியாளர் ஆகியுள்ளனர். தாய்மார்களுக்கு வாரிசுகள் ஆகுகின்ற போதை இல்லை. அவர்கள் (பெண்கள்) தொடர்ந்தும் விதைகளை விதைத்து தத்தமது சொந்த வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றார்கள். உங்களுடைய ஞானம் சரியானது, பின்னர் பக்தி இருக்கின்றது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தையை உங்கள் தந்தையாக நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுடைய ஆஸ்தியை நிச்சயமாக அவரிடமிருந்து பெறுவீர்கள். தந்தை உங்களைத் தொடர்ந்தும் முயற்சி செய்யுமாறு தூண்டுவதுடன் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள். சிலர் சிறந்த முயற்சியாளர்கள் எனவும் சிலர் நடுத்தரமானவர்கள் எனவும் மற்றவர்கள் மூன்றாவது தரம் எனவும் தந்தைக்குத் தெரியும். நீங்கள் பாபாவிடம் வினவினால் அவர் உடனடியாகவே நீங்கள் முதலாவதா இரண்டாவதா அல்லது மூன்றாவதா எனக் கூறுவார். நீங்கள் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்காவிட்டால் நீங்கள் மூன்றாம் தரத்தவர். நீங்கள் அத்தாட்சியை கொடுக்காது விட்டால் பாபா நிச்சயமாகக் கூறுவார். கடவுள் வந்து உங்களுக்குக் கற்பித்த ஞானம் பின்னர் மறைந்துவிடும். எவருக்குமே இது தெரியாது. நாடகத் திட்டத்துக்கு ஏற்ப எவருமே என்னை பக்தி மார்க்கத்தின் மூலம் அடையவும் முடியாது. அல்லது சத்தியயுகத்திற்குச் செல்லவும் முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். முன்னைய கல்பத்துக்கு ஏற்றவாறு எந்தளவு முயற்சி நீங்கள் செய்தீர்களோ நீங்கள் தொடர்ந்தும் அதையே செய்வீர்கள். எந்தக் குழந்தைகள் தங்களுக்கே நன்மை செய்கின்றார்கள் எனத் தந்தையால் புரிந்து கொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு நாளும் இலக்ஷ்மி நாராயணனின் படத்துக்கு முன்னால் வந்து அமருங்கள். பாபா உங்களுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நாங்கள் நிச்சயமாக இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வோம். மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குவதற்கான தீவிர ஆர்வம் உங்களுக்கு நிச்சயமாகத் தேவை. ‘நீங்கள் இத்தனை வருடங்களாக இந்த ஞானத்தைக் கற்கின்றீர்கள், உங்களால் மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியாதுவிடின் நீங்கள் எதைத்தான் கற்றீர்கள்?’ என நிலையங்களில் வாழ்பவர்களுக்கு நான் எழுதுவதுண்டு. குழந்தைகளான நீங்கள் முன்னேற வேண்டும். நாள் முழுவதும் சேவை பற்றிய எண்ணங்கள் உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். நீங்கள் ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள். ஓய்வுபெற்ற நிலையில் இருக்கின்றவர்களுக்கு ஆச்சிரமங்கள் இருக்கின்றன. ஓய்வு பெற்றவர்களிடம் நீங்கள் செல்ல வேண்டும். அவர்கள் இறப்பதற்கு முன்னர் அவர்களிடம் இலட்சியத்தைக் கூறுங்கள். எவ்வாறு உங்கள் ஆத்மா சத்தத்துக்கு அப்பால் செல்வார்? தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. கடவுள் பேசுகின்றார்: சதா என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் சத்தத்துக்கு அப்பாலுள்ள இடத்திற்கு ஓய்வுக்குச் செல்வீர்கள். பெனாரசிலும் பெருமளவு சேவை இடம்பெற முடியும். பெருமளவு சாதுக்கள் காசியில் வசிக்கவேண்டும் என்பதற்காகவே அங்கே செல்கின்றார்கள். முழுநாளும் சிவகாசி விஸ்வநாத் கங்கா (கங்கை உலகின் தலைவரான சிவனின் மூலம் காசியிலிருந்து வந்ததாக) எனத் தொடர்ந்து உச்சாடனம் செய்கிறார்கள். உங்களுக்குள்ளே சதா சந்தோஷ கரகோஷம் இருக்க வேண்டும். நீங்கள் மாணவர்கள் இல்லையா? நீங்கள் சேவை செய்கின்றீர்கள், அத்துடன் கற்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் சிவபாபாவிடம் செல்கின்றோம். இதுவே மன்மனாபவ ஆகும். எவ்வாறாயினும் பலரால் நினைவு செய்ய முடிவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் வம்பு பேசுகின்றார்கள். பிரதான விடயம் நினைவாகும். நினைவே உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றது. நீங்கள் அனைவரும் உலகில் அமைதி நிலவவேண்டும் என்ற ஆசையைக் கொண்டுள்ளீர்கள். பாபா கூறுகின்றார்: உலகில் அமைதி இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இதனாலேயே பாபா இலக்ஷ்மி நாராயணனின் படத்துக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார். சந்தோஷம், அமைதி, தூய்மை நிறைந்த அந்த உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என அவர்களிடம் கூறுங்கள். உலகில் அமைதி நிலவவேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். பலர் தொடர்ந்தும் பரிசுகளைப் பெறுகின்றனர். அதிபதியாக இருப்பவராலேயே உலகில் அமைதியை ஸ்தாபிக்க முடியும். அவர்களது இராச்சியத்தில் உலகில் அமைதி நிலவியது. ஒரு மொழி, ஓர் இராச்சியம், ஒரு தர்மம் இருந்தன. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் இருந்தார்கள். அத்தகைய உலகை ஸ்தாபித்தவர் யார்? அமைதியை ஸ்தாபித்தவர் யார்? அது சுவர்க்கம் எனவும் அது அவர்களின் (இலக்ஷ்மி நாராயணனின்) இராச்சியமாக இருந்தது எனவும் வெளிநாட்டவர்களும் கூடப் புரிந்து கொள்கின்றார்கள். இப்பொழுது உலகில் அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் காலையில் அனைத்து இடங்களுக்கும் செல்லும் போது இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் பயன்படுத்த வேண்டும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்றும் நரகத்தின் விநாசம் சற்று முன்னாலேயே உள்ளது என்ற ஓசை ஒவ்வொருவரின் காதிலும் அதன் மூலம் ஒலிக்கும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நாடகத்துக்கு ஏற்ப இன்னமும் தாமதம் ஏற்படலாம் என உங்களுக்குத் தெரியும். இது புகழ்பெற்ற மக்களின் பாக்கியத்தில் இல்லை. இருப்பினும் பாபா தொடர்ந்து உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். சேவை நாடகத்துக்கேற்ப தொடர்கின்றது. அச்சா. இரவு வணக்கம்.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தீய சகவாசத்தின் ஆதிக்கத்தையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தூய்மை அற்றவர்களின் சகவாசத்துக்குள் ஒரு போதும் செல்லாதீர்கள். மௌன சக்தியின் மூலம் இந்த உலகைத் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. நாடகத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு மலர்ச்சியாக இருங்கள். உங்களிடம் உள்ள அனைத்தையும் புதிய உலகிற்கு மாற்றி விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா கீழ்ப்படிவானவராக இருந்து, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வண்ணம் தந்தையிடமிருந்து வெற்றித் திலகத்தைப் பெறுவீர்களாக.

ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் பாக்கியத்தை அருள்பவரான தந்தை தனது கீழ்ப்படிவான குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் வெற்றித் திலகத்தை இடுகிறார். கீழ்ப்படிவான பிராமணக் குழந்தைகளால் உங்களின் பேச்சிலோ அல்லது உங்களின் எண்ணங்களிலோ ‘கஷ்டமான வேலை’ அல்லது ‘சிரமம்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் இலகு யோகிகள் ஆகியுள்ளீர்கள். அதனால் ஒருபோதும் மனச்சோர்வு அடைவதில்லை. ஆனால் சதா இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து கருணைநிறைந்தவர் ஆகுகிறீர்கள். ‘நான்’ என்ற எந்தவிதமான உணர்வையோ அல்லது சந்தேகமான உணர்வையோ முடித்து விடுகின்றீர்கள்.

சுலோகம்:
உலக மாற்றத்திற்கான திகதியைப் பற்றி நினைக்காதீர்கள். ஆனால் உங்களின் சொந்த மாற்றத்திற்கான நேரத்தை நிச்சயம் செய்யுங்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மையின் ஆளுமையைக் கொண்டுள்ள இராஜரீகமான ஆத்மாக்கள், பண்புகளின் தேவிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் கோபம் என்ற விகாரத்தின் எந்தவிதமான தூய்மையின்மையும் இருக்க முடியாது. பொறாமை, முரண்பாடுகள் அல்லது வெறுப்பு என்ற வடிவில் சிறிதளவு சூட்சுமமான கோபத்தின் வடிவம் இருந்தாலும் அதுவும் உங்களுக்குள்ளே எரிகின்ற நெருப்பு ஆகும். புறத்தே நீங்கள் சிவப்பாகவோ அல்லது மஞ்சளாகவோ ஆகுவதில்லை. ஆனால் நீங்கள் கறுப்பாகவும் அழுக்காகவும் ஆகுகிறீர்கள். அதனால் அந்த அவலட்சணத்தை முடித்து, நேர்மையானவராகவும் சுத்தமாகவும் ஆகுங்கள்.