24.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய இனிய குழந்தைகளே, அமிர்த வேளையில் உங்கள் ஏனைய எண்ணங்கள் அனைத்தையும் நிறுத்தி, பெருமளவு அன்புடன் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தந்தையுடன் ஓர் இனிய இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் கூறும் அனைத்தும் அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும். எந்தக் குழந்தைகளால் அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேச முடியும்?

பதில்:
ஆத்ம உணர்வு உடையவர்களே அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறார்கள். சங்கமயுகத்தில் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற விடயங்கள், அர்த்தம் நிறைந்தவை ஆகும். சரீர உணர்வுடைய மக்கள் கூறுவது அனைத்தும் அர்த்தம் அற்றவை; அது அர்த்தமற்றதும் நன்மையற்றதும் ஆகும்.

பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களுக்குப் பாதையைக் காண்பியுங்கள்.

ஓம் சாந்தி.
அப்பாடல்கள் போன்றவை பக்தி மார்க்கத்துக்கு உரியவை. இப்பொழுது உங்களுக்கு அப்பாடல்கள் தேவையற்றவை. இங்கு சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. பக்தி மார்க்கத்தில், பெருமளவு சிரமம் உள்ளது. பிராமணக் குருமார்களுக்கு உணவு படைத்தல், இதை அதைச் செய்தல், யாத்திரைகள் போன்றவற்றுக்குச் செல்லுதல் போன்ற, பல சம்பிரதாயங்கள் உள்ளன. நீங்கள் பெருமளவு செய்ய வேண்டும்! நீங்கள் இங்கு பாபாவிடம் வரும்பொழுது, அவர் உங்கள் சிரமங்கள் அனைத்தில் இருந்தும் உங்களை விடுவிக்கின்றார். நீங்கள் அவ்வாறான எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் உதடுகளில் இருந்து “சிவசிவா” என்று கூறவும் வேண்டியதில்லை. அது இங்குள்ள விதிகளுக்கு முரணானது. அதைச் செய்வதால் பலன் எதுவும் பெறப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஓர் ஆத்மா என்பதை உள்ளாரப் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை கூறியுள்ளார்: என்னை நினைவு செய்யுங்கள்! அகநோக்கில் இருந்து தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் எனத் தந்தை உங்களுக்குச் சத்தியம் செய்கிறார். உங்களால் வீடு திரும்ப முடிகின்ற வகையில், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்ற, யோகத்தீ இதுவாகும். வரலாறு மீண்டும், மீண்டும் இடம்பெறுகிறது. இவை அனைத்தும் உங்களுடன் நீங்களே பேசுவதற்கான வழிகள் ஆகும். உங்களுடன் நீங்களே ஓர் ஆன்மீகச் சம்பாஷணையைக் கொண்டிருங்கள். தந்தை கூறுகிறார்: நான் இந்த வழிமுறையை உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் கொடுக்கிறேன். விருட்சம் படிப்படியாக வளர்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, நான் வந்து குழந்தைகளாகிய உங்களை மாயையின் பந்தனத்திலிருந்து விடுவிக்கும் பொழுதே, மாயையின் புயல்கள் ஆரம்பிக்கின்றன. சத்திய யுகத்தில் பந்தனங்கள் எதுவும் இல்லை. சங்கமயுகத்தின் முழு அர்த்தமும் உங்கள் புத்தியில் உள்ளது. இங்குள்ள அனைத்தும் அர்த்தம் நிறைந்தவை. சரீர உணர்வுடைய மக்கள் கூறுவது அனைத்தும் அர்த்தம் அற்றவை. ஆத்ம உணர்வுடைய மக்கள் கூறுவது அனைத்தும் அர்த்தம் நிறைந்தது, அது பலன் உள்ளதும் ஆகும். பக்தி மார்க்கத்தில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. யாத்திரைகளுக்குச் செல்வதும் இதை அதைச் செய்வதும் ஏனைய அனைத்தும் கடவுளை அடைவதற்கான பாதைகள் என மக்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், இன்னமும் எவராலும் வீடு திரும்ப முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். உலகின் முதல் இலக்க அதிபதிகளாகிய, இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் 84 பிறவிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, எவ்வாறு வேறு எவரும் அதிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்? அனைவரும் சக்கரத்தினுள் வருகிறார்கள், ஆகவே அவர்கள் கூறுவது போன்று எவ்வாறு எப்பொழுதும் கிருஷ்ணர் இருக்க முடியும்? ஆம், அந்த ஆத்மா ஏதோ ஒரு ரூபத்தில் எப்பொழுதும் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணரின் பெயரும் ரூபமும் இருந்து மறைந்துவிட்டன. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்தி உள்ளார். இது ஒரு கல்வி. ஒரு மாணவ வாழ்க்கையை மேற்கொள்ளும் பொழுது, கவனம் செலுத்தப்பட வேண்டும். உங்கள் அட்டவணையை எழுதுவதற்கென தினமும் ஒரு நேரத்தை நிச்சயித்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்குப் பெருமளவு பந்தனங்கள் உள்ளன. ஒரு (அலுவலக) வேலையைச் செய்பவர்களுக்கு, அந்தளவு பந்தனங்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்கள் வேலையைச் செய்து முடிக்கிறார்கள், அவ்வளவுதான்! வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வரும்பொழுது எல்லாம், அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். அவர்கள் புத்தியின் யோகம் வெளியே அலைகிறது. ஆகவே, நீங்கள் முயற்சி செய்து நினைவு செய்வதற்கென நேரத்தை உருவாக்க வேண்டும். அதற்கு அதிகாலை மிகவும் சிறந்த நேரமாகும். அந்த நேரத்தில், உங்கள் வெளிப்புற விடயங்களின் எண்ணங்களை நீங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். வேறு எந்த எண்ணங்களும் இருக்கக்கூடாது; தந்தையின் நினைவைக் கொண்டிருங்கள். தந்தையின் புகழை எழுதுங்கள்: பாபாவே ஞானக்கடலும் தூய்மை ஆக்குபவரும் பாபா எங்களை உலக அதிபதிகள் ஆக்குபவரும் ஆவார். நாங்கள் அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் பெறுகின்ற அதிமேன்மையான வழிகாட்டல் “மன்மனபவ” ஆகும். வேறு எவராலும் இதைக் கூற முடியாது. தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறுவதற்காக நீங்கள் ஒவ்வொரு கல்பமும் இந்த வழிகாட்டலைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இது மனத்தை ஒழுங்குபடுத்துகின்ற மந்திரம் என அழைக்கப்படுகிறது. புரிந்துணர்வுடன் நினைவைக் கொண்டிருப்பதில் சந்தோஷம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: கலப்படமற்ற நினைவே தேவை. பக்தியில், சிவ வழிபாடு முதலில் கலப்படம் அற்றதாக இருந்தது. பின்னர், அவர்கள் ஏனைய பலரையும் வழிபட ஆரம்பிக்கும் பொழுது, அது கலப்படம் உள்ளதாக ஆகுகிறது. முதலில், ஒரேயொருவரின் வழிபாடே இருந்தது. குழந்தைகளாகிய நீங்கள் வழிபட்டு வந்த, அந்த ஒரேயொருவரின் ஞானத்தை மாத்திரம் இப்பொழுது செவிமடுக்க வேண்டும். அவரே உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் இப்பொழுது வந்துள்ளேன். பக்தியின் பிரிவுகள் அனைத்தும் இப்பொழுது முடிவடைகின்றன. நீங்களே சிவபாபாவுக்கென முதலில் ஓர் ஆலயத்தைக் கட்டியவர்கள். அந்த நேரத்தில், நீங்கள் கலப்படமற்ற பக்தர்களாக இருந்தீர்கள். ஆகவே, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். பின்னர், நீங்கள் கலப்படமுள்ள பக்தர்கள் ஆகிய பொழுது, மற்றவர்களுடன் வேறுபாடு ஏற்பட்டதால், சிறிதளவு துன்பம் ஏற்பட்டது. ஒரேயொரு தந்தை மாத்திரம் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகிறார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த மந்திரத்தைக் கொடுக்கிறேன். அந்த ஒரேயொருவரின் மந்திரத்தை மாத்திரம் செவிமடுங்கள். இங்கே சரீரதாரி எவரும் இல்லை. நீங்கள் இங்கே பாப்தாதாவிடம் வருகிறீர்கள். சிவபாபாவை விடவும் உயர்வானவர் எவரும் இல்லை. அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது; அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. பின்னர் நீங்கள் அவர்களை வழிபடும் வகையில் யார் அவர்களை அதி மேன்மையானவராக ஆக்கினார்கள்? மகா இலக்ஷ்மி யார் என்பதை எவரும் அறியார். அவர் மகா இலக்ஷ்மி ஆகுவதற்கு முன்னர் அவருடைய பிறவி என்னவாக இருந்தது? அவர் ஜெகதாம்பாவாக (உலகத்தாய்) இருந்தார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். “தாய்மார்களுக்கு வந்தனங்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. இது தாய்மார்களாகிய உங்கள் அனைவருக்கும் பொருந்துகின்றது. நீங்கள் உலகம் முழுவதற்குமான ஓர் உரிமையைக் கோருகிறீர்கள். “பாரத மாதா” என ஒருவருக்கு மாத்திரம் கூறப்படவில்லை. நீங்கள் அனைவரும் யோகத்தின் மூலம் சிவனிடமிருந்து சக்தியைப் பெறும் சிவசக்திகள். நீங்கள் சக்தியைப் பெறுவதிலேயே மாயை குறுக்கிடுகிறாள். ஒரு யுத்தத்தில், ஒருவர் உங்களைத் தாக்கும் பொழுது, நீங்கள் தைரியமாக இருந்து சண்டையிட வேண்டும். உங்களைத் தாக்குபவரிடம் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உங்கள் யுத்தம் மாயையுடனேயே ஆகும். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் யுத்தம் இல்லை. அவர்கள் (கௌரவர்கள்) தங்களுக்கு இடையில் சண்டை இடுகிறார்கள். மக்கள் சண்டையிடும் பொழுது, ஓரிரு யார்கள் நிலத்துக்காக அவர்கள் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டக் கூடத் தயார் ஆகுகிறார்கள். இது முற்கூட்டியே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனத் தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார். இராம இராச்சியமும் (கடவுள்) இராவண இராச்சியமும் (அசுரன்) உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராம இராச்சியத்துக்குச் செல்வீர்கள் என்ற ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள்; அங்கே எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. அதன் பெயரே சந்தோஷ தாமம் (சுக்தாமம்) ஆகும். அங்கே துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லை. அத்தகையதோர் இராச்சியத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுப்பதற்கு இப்பொழுது தந்தை வந்துள்ளார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு முயற்சியைச் செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு மீண்டும், மீண்டும் கூறுகிறார்: குழந்தைகளே, அதில் களைப்படைய வேண்டாம். தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அவர் ஒரு புள்ளி, ஆத்மாக்களாகிய நாங்களும் புள்ளிகளே. நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்கு இங்கே வந்துள்ளோம். இப்பொழுது எங்கள் பாகங்கள் முடிவடைகின்றன. தந்தை இப்பொழுது கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களிலேயே பாவங்கள் சேகரிக்கப்படுகின்றன. சரீரம் இங்கேயே மரணிக்கிறது. சில மனிதர்கள் பாவங்களைச் செய்து பின்னர் தற்கொலை (தங்கள் சரீரங்கள்) செய்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களின் பாவங்கள் அதைச் செய்வதால் அழிய மாட்டாது. கூறப்பட்டுள்ளது: ஒரு பாவாத்மா. ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு ஆளாகுவதில்லை எனச் சாதுக்களும், புனிதர்களும் கூறுகிறார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. ஒரேயொரு பரமாத்மாவிடம் இருந்தே நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். ஞானமாகிய மூன்றாவது கண்ணைத் தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்களே அனைத்து விடயங்களையும் அறிவீர்கள். முன்னர், நீங்கள் கடவுளைப் பற்றியோ அல்லது எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதைப் பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை. ஆத்மாக்கள் சின்னஞ் சிறியவர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், ஆத்மாவைப் பற்றிய புரிந்துணர்வு உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் மிகவும் சூட்சுமம் ஆனவர்கள். மக்களுக்குக் கிடைக்கின்ற காட்சிகள் அனைத்தும் பக்தி மார்க்கத்து விடயங்கள் ஆகும். தந்தை மாத்திரமே இந்த ஞான மார்க்கத்தின் விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் வந்து இவரின் நெற்றியின் மத்தியில் அருகில் அமர்கிறார். இவரும் விரைவாகப் புரிந்து கொள்கிறார். இவ்விடயங்கள் அனைத்தும் புதிய விடயங்கள், தந்தை இங்கே அமர்ந்திருந்து அவற்றை விளங்கப்படுத்துகிறார். அதை மிகவும் உறுதி ஆக்குங்கள்; அதை மறந்து விடாதீர்கள். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதிலேயே, உங்கள் எதிர்காலம் தங்கியுள்ளது. குழந்தைகளாகிய உங்களுடன், பாரத தேசமும் மிகவும் பாக்கியம் செய்தது. வேறு எந்தத் தேசமும் பாரதத்தைப் போன்று பாக்கியம் செய்ததில்லை. அங்கேயே தந்தை வருகிறார். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது அல்லாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்பட்டது. தந்தை மீண்டும் ஒருமுறை பாரதத்தை ஒரு மலர்த் தோட்டமாக ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அங்கே போவதற்காகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் காட்சிகள் கிடைக்கின்றன. இது அதே மகாபாரத யுத்தம் என்பதையும் அதன்பின்னர், அங்கே அத்தகைய யுத்தம் இருக்காது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயமாகப் புதிய உலகம் தேவைப்படுகிறது. அது புதிய உலகமாக இருந்த பொழுது, பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது 5000 வருடங்களுக்கு முன்னர் இருந்தது; அது நூறாயிரக் கணக்கான வருடங்களுக்குரிய விடயமல்ல. அது நூறாயிரக் கணக்கான வருடங்களாக இருந்திருப்பின், அங்கு எண்ணற்ற மனிதர்கள் இருப்பார்கள். இதுவும் எவரது புத்தியிலும் புகுவதில்லை. அத்தகைய பெரும் சனத்தொகை இல்லாததால், எவ்வாறு சக்கரம் அவ்வளவு நீண்டதாக இருக்கும்? 5000 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் உலகை ஆட்சிசெய்தோம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அந்த நேரத்தில் வேறு தேசங்கள் இருக்கவில்லை. அவை பின்னரே தோன்றின. இவ்விடயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. அவை வேறு எவருடைய புத்தியிலும் இல்லை. உண்மையிலேயே அவர்களுடைய சமயத்துக்கு முன்னர், வேறொரு தர்மம் இருந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு, அவர்களுக்கு ஒரு சிறு சமிக்கையைக் கொடுங்கள். முன்னர் இருந்த ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது என்பதை உங்களால் இப்பொழுது விளங்கப்படுத்த முடியும். இப்பொழுது தேவதர்மத்துக்கு உரியவர்கள் என வேறு எவரும் கோர மாட்டார்கள். அவர்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்தத் தர்மம் எங்கே சென்றது? எங்கிருந்து இந்து சமயம் வந்தது? எவரும் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தந்தையே ஞானக்கடலும் ஞான அதிகாரியும் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் விளங்கப்படுத்த முடியும். ஆகவே, அவர் நிச்சயமாக வந்து இந்த ஞானத்தைப் பேசியிருக்க வேண்டும். இந்த ஞானத்தைப் பெறுவதால் மாத்திரமே சற்கதி கிடைக்கிறது. இதில் தூண்டுதல் என்ற கேள்வியே இல்லை. தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன். நான் இப்பொழுது வந்துள்ளதால், சக்கரம் கடந்துவிட்ட பின்னர், நான் மீண்டும் வந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பேன். நீங்களும் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் உங்களுடைய இராச்சியத்தைக் கோரி, பின்னர் அதை இழந்தீர்கள். இது ஓர் எல்லையற்ற நாடகம். நீங்கள் அனைவரும் நடிகர்கள். நடிகர்களாக இருக்கும் ஆத்மாக்களுக்குப் படைப்பவரையும் இயக்குனரையும் பிரதான நடிகரையும் தெரியாவிட்டால், அவர்களால் என்ன பயன்? எவ்வாறு உங்கள் பாகங்களை நடிப்பதற்கு ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்களை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது இது இப்பழைய உலகின் இறுதியாகும். இது புரிந்து கொள்வதற்கு, அத்தகையதோர் இலகுவான விடயம் ஆகும். தந்தை எவ்வாறு ஒரு மறைமுகமான வடிவில் இங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாடலும் உள்ளது: ஒரு மெல்லிய மெத்தையால் போர்த்தி அனைத்தையும் செய்யும் ஒரேயொருவரை இவர் பார்த்தார். இவர் அவரைப் பார்த்தார் என்று நீங்கள் கூறினாலும் அல்லது இவர் அவரை இனங்கண்டு கொண்டாலும் இரண்டும் ஒன்றுதான். ஓர் ஆத்மாவைப் பார்ப்பது சாத்தியம் ஆகினாலும் அதில் நன்மை இல்லை. எவரும் அதிலிருந்து எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். தீவிர பக்தி செய்யும் பலர் காட்சிகளைப் பெறுகிறார்கள். முன்னர், குழந்தைகளாகிய உங்களுக்குப் பல காட்சிகள் கிடைப்பது வழக்கம். அதற்காக உங்களுக்கெனப் பல நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. இறுதியில் நீங்கள் அனைவரும் இக்களிப்பூட்டும் விளையாட்டுக்களைப் பார்ப்பீர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: கற்றுத் திறமைசாலிகள் ஆகுங்கள். நீங்கள் இப்பொழுது கற்காது விட்டால், பரீட்சை முடிவுகள் வெளிவரும் பொழுது, தலைகுனிய நேரிடும். நீங்கள் அதிகளவு நேரத்தை வீணாக்கினீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் எந்தளவுக்குத் தந்தையின் நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவுக்கே உங்கள் பாவங்கள் அந்த நினைவினூடாக அழிக்கப்படும். நீங்கள் எந்தளவுக்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். ஏன் கடவுள் நினைவு செய்யப்படுகிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்வதில்லை. அவரே தாயும் தந்தையும் என அவர்கள் கூறினாலும், அதன் அர்த்தத்தை அறிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்வதால், சிவனின் படத்தில் அவர் எவ்வாறு ஞானக்கடலாகவும் தூய்மை ஆக்குபவருமாக இருக்கின்றார் என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். உங்களுக்குப் பெருமளவு சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுவதற்குத் தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது ஒரு கல்வி. நீங்கள் முயற்சி செய்யும் அளவிற்கு, ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோருவீர்கள். ஆரம்ப காலத்திலிருந்து இவரது (குருவின் ஆசனம்) கதி தொடர்ந்து வரும் வகையில், இவர் ஒரு சாதுவோ, அல்லது புனிதரோ இல்லை. இது சிவபாபாவின் கதி ஆகும். இவர் பிரிந்து செல்லும் பொழுது, வேறு ஒருவர் கதியில் இருப்பார் என்பதல்ல. தந்தை அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். சில குழந்தைகள் எவ்வாறு தாங்கள் பெருமளவு செல்வத்தைச் சேகரிப்பதனால், தங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் அதில் வாழ முடியும் அல்லது அவை பிற்காலத்தில் பயன்படும் என்பதைப் பற்றிய வீணான எண்ணங்களைக் கொண்டிருந்து, தங்கள் நேரத்தையும் வீணாக்குகிறார்கள். தமது வங்கிப் பெட்டகத்தில் அவர்கள் அதைச் சேகரிக்க விரும்புகிறார்கள். அதன் மூலம் தமது குழந்தைகள் அதில் வாழ முடியும் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், அரசாங்கம் எவரையும் தனியே விட்டு வைப்பதில்லை. ஆகவே, அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதற்குப் பதிலாக, உங்கள் எதிர்காலத்துக்காக ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதில் நீங்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அது நாடகத்தில் இருந்தால், நீங்கள் அதைச் செய்வீர்கள் என்பதல்ல. நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், உண்பதற்குக்கூட எதையும் பெற மாட்டீர்கள். எவ்வாறாயினும், அவர்களின் பாக்கியத்தில் அது இல்லாது விட்டால், அவர்கள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாக்கியத்தில் அது இல்லாவிட்டால், அவர்கள் என்ன இறை முயற்சியைச் செய்வார்கள்? தங்கள் பாக்கியத்தில் அதைக் கொண்டிருப்பவர்கள், இவ்விடயங்களை மிகவும் நன்றாகக் கிரகிப்பதுடன், ஏனையோர் அவற்றைக் கிரகிப்பதற்கும் தூண்டுகிறார்கள். தந்தையே உங்களுடைய ஆசிரியரும் உங்கள் குருவும் என்பதால், நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். தந்தையும் ஆசிரியரும் குருவுமே அதிகளவு நேசிக்கப்படுபவர்கள். அவர்கள் நினைவு செய்யப்பட வேண்டும். பாபா உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காண்பிக்கிறார். நீங்களும் சாதுக்களையும் புனிதர்களையும் அழைக்க முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முயற்சி செய்து உங்கள் எதிர்காலத்திற்காக ஒரு வருமானத்தை உழைப்பதில் மும்முரம் ஆகுங்கள். “அது நாடகத்தில் இருப்பின், நான் எதையாவது செய்வேன்” எனக் கூறி, முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள்.

2. நாள் முழுவதும் நீங்கள் செய்த பாவங்களையும், நீங்கள் ஏனையோருக்குக் கொடுத்த துன்பத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றித் தந்தையிடம் நேர்மையுடன் கூறுங்கள். உங்கள் இதயத்தை நேர்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருந்து, ஒரேயொரு தந்தையின் நினைவின் மூலம் உங்கள் கணக்குகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் உங்களுடன் சதா வைத்திருப்பதன் மூலம் நிலையான, இயல்பான யோகி ஆகுவீர்களாக.

தற்சமயம், குழந்தைகளான நீங்கள் எல்லோரும் தந்தையிடம் இருந்து ஒரு கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் பெறுகிறீர்கள். இந்த நேரத்திற்குரிய கிரீடமும் சிம்மாசனதும் எதிர்காலப் பல பிறவிகளுக்கு நீங்கள் கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் பெறச் செய்கின்றன. நீங்கள் சதா உலக நன்மைக்கான உங்களின் பொறுப்புக் கிரீடத்தையும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தையும் உங்களுடன் வைத்திருந்தால், நீங்கள் நிலையான, இயல்பான யோகி ஆகுவீர்கள். அப்போது எந்த வகையான முயற்சி செய்கின்ற கேள்வியே இருக்காது. ஏனென்றால், முதலில் உங்களிடம் நெருக்கமான உறவுமுறை இருக்கும். இரண்டாவதாக, உங்களின் பெறுபேறுகள் எல்லையற்றவை. எங்கே பேறுகள் உள்ளனவோ, அங்கே இயல்பான நினைவு இருக்கும்.

சுலோகம்:
உங்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களின் எளிமையான புத்தியைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால், அதில் வெற்றி கலந்திருக்கும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மை இன்மையால் துன்பமும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன. எங்கே தூய்மை இன்மை இல்லையோ, அங்கே எந்தவிதமான துன்பமோ அல்லது அமைதி இன்மையோ இருக்க முடியாது. நீங்கள் எல்லோரும் தூய்மை ஆக்குபவரின் குழந்தைகளான மாஸ்ரர் தூய்மை ஆக்குபவர்கள். மற்றவர்களைத் தூய்மை ஆக்குபவர்கள், இயல்பாகவே தாங்களும் தூய்மையாக இருப்பார்கள். இத்தகைய தூய்மையாக்கும் ஆத்மாக்கள் நிச்சயமாகத் தமது அமைதியையும் சந்தோஷத்தையும் தமக்குள் வைத்திருப்பார்கள். அனைத்திலும் மகத்தான சிறப்பியல்பு, தூய்மையாக இருப்பதாகும். இன்றும்கூட, இந்த மகத்துவத்திற்கு மக்கள் தலை வணங்குகிறார்கள்.