24.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


தூய்மை என்ற நற்குணத்தைக் கிரகித்து, தொடர்ந்தும் இயக்குனரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் தேவ இராச்சியத்திற்குள் செல்வீர்கள்.

(காலை வகுப்பில் வாசிக்க வேண்டிய ஜெகதாம்பா மாவின் இனிய மேன்மையான வாசகங்கள்)

ஓம் சாந்தி. இந்த உலகம் ஒரு நாடகம் என்று அழைக்கப்படுகிறது. அதை ஒரு நாடகம் என்றோ அல்லது மேடைக்கூத்து என்றோ அல்லது ஒரு விளையாட்டு என்றோ எப்படி அழைத்தாலும், அது ஒன்றேயாகும். ஒரு மேடைநாடகத்தில் ஒரு கதை இருக்கும். அத்துடன் அதற்குள் பல உபகதைகளும் இருக்கும். ஆனால் ஒரேயொரு கதையே இருக்கும். அதேபோல், இது ஓர் எல்லையற்ற உலக நாடகம் ஆகும். இது ஒரு மேடைநாடகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நாம் அனைவரும் நடிகர்களே. நாம் எல்லோரும் நடிகர்களாக இருப்பதனால், அந்த நாடகத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அது எந்தக் கதையுடன் ஆரம்பிக்கிறது, எமது பாகங்கள் அதில் எங்கே ஆரம்பிக்கின்றன, அவை எங்கே முடிவடைகின்றன, அத்துடன் அவ்வப்போது, எந்த நடிகர்கள் எந்தப் பாகங்களை நடிக்க வேண்டும், இதன் இயக்குனரும் படைப்பாளியும் யார், இதில் யார் கதாநாயகன் மற்றும் கதாநாயகி பாகங்களை நடிக்கிறார்கள், எந்த நேரத்தில் நடிக்க வேண்டும் என்ற எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தின் ஞானத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த நாடகத்தைப் பற்றிப் பேசினால் மட்டும் போதாது. அது ஒரு நாடகம், நாம் எல்லோரும் இந்த நாடகத்தின் நடிகர்கள். இந்த நாடகத்தில் ஒருவர் ஒரு நடிகராக இருந்து, அதன் கதை என்ன, அது எங்கே ஆரம்பம் ஆகுகிறது, அது எங்கே முடிகிறது என்று அவரிடம் கேட்கும்போது, அவர் தனக்குத் தெரியாது என்று சொன்னால், நீங்கள் அதை என்னவென்று சொல்வீர்கள்? அவருக்கு இந்தளவு கூடத் தெரியவில்லை, அப்படியிருந்தும் அவர் தன்னை ஒரு நடிகர் என்று அழைக்கிறார்! ஒரு நடிகர் அந்த நாடகத்தைப் பற்றிய எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாடகத்திற்கு ஓர் ஆரம்பம் இருப்பதனால், அதற்கு நிச்சயமாக ஒரு முடிவும் இருக்க வேண்டும். அது ஆரம்பித்து விட்டதனால், அது எல்லா வேளையும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதல்ல. இவை அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எல்லையற்ற நாடகத்தைப் படைத்தவருக்கு, இந்த நாடகம் எப்படி ஆரம்பித்தது, அதில் உள்ள பிரதானமான நடிகர்கள் யார், சகல நடிகர்களிலும் யார் கதாநாயகன் மற்றும் கதாநாயகி பாகங்களை நடிக்கிறார்கள் என்பவை அனைத்தும் தெரியும். தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார்.

வகுப்பிற்குத் தினமும் வந்து இந்த ஞானத்தைக் கேட்பவர்கள், யார் முதல் இயக்குனர் என்பதையும் படைப்பவர் என்பதையும் அறிந்து, புரிந்து கொள்கிறார்கள். பரமாத்மாவையே படைப்பவர் என்று அழைக்க முடியும். ஆனால் அவரும் ஒரு நடிகரே. அவர் எதை நடிக்கிறார்? இயக்குனராக இருக்கும் பாகத்தை நடிக்கிறார். அவர் ஒரு தடவை மட்டுமே வந்து, நடிகர் ஆகுகிறார். அவர் ஓர் இயக்குனராகி நடிக்கிறார். அவர் கூறுகிறார்: நான் இந்த நாடகத்தின் ஆரம்பத்தில் நடிக்கிறேன். எப்படி? நான் புதிய உலகை உருவாக்குகிறேன். இது புதிய உலகம், தூய்மையாக்கப்பட்ட, சத்தியயுக உலகம் என்று அழைக்கப்படுகிறது. தூய்மையைக் கிரகிப்பதுடன், இயக்குனரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்ற நடிகர்களான நீங்கள் எல்லோரும் இப்போது தூய்மையாக்கப்படுகிறீர்கள். பல பிறவிகளின் சக்கரம், நடிகர்களான உங்களினூடாகத் தொடரும். இப்போது தூய்மையாகிய மனிதர்கள், அவர்களின் அடுத்த பிறவிகளில் தேவ இராச்சியத்திற்குச் செல்வார்கள் என்பதைத் தந்தை மட்டுமே விளங்கப்படுத்துகிறார். அந்த இராச்சியம், சூரிய வம்ச இராச்சியமாகவும் சந்திர வம்ச இராச்சியமாகவும் இரண்டு யுகங்களாகத் தொடரும். அதன்பின்னர், சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்ச நடிகர்களின் பாகங்கள் முடிவடைந்ததும், ஒரு வீழ்ச்சி ஏற்படும். அதாவது, அவர்கள் பாவப் பாதைக்குள் செல்வார்கள். அதன்பின்னர், ஏனைய மதங்களின் - ஏபிரகாம், புத்தர், கிறிஸ்து - முறையாகும். அந்த மதத்தாபகர்கள் எல்லோரும் வரிசைக்கிரமமாகக் கீழே வந்து, தமது சொந்த மதங்களைத் தாபிப்பார்கள்.

எனவே, இந்த நாடகத்தின் கதை எங்கே ஆரம்பமாகின்றது, அது எங்கே முடிகின்றது, ஏனைய பக்கக் கதைகள் எல்லாமே இடையில் எப்படி சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். அவர் அமர்ந்திருந்து, இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இப்போது, இந்த நாடகம் முடிவடையப் போகிறது. ஏனைய நாடகங்கள் மூன்று மணிநேரத்தில் முடிவடைந்துவிடும். ஆனால் இந்த நாடகமோ 5000 வருடங்களுக்குத் தொடரும். இன்னமும் வெகு சில வருடங்களே எஞ்சியுள்ளன. நாம் இப்போது அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறோம். இந்த நாடகம் முடிவடைந்து, பின்னர் மீண்டும் அதேபோல் நடக்கும். இந்த விளக்கங்கள் அனைத்தும் உங்களின் புத்திகளில் இருக்க வேண்டும். இதுவே ஞானம் எனப்படுகிறது. இப்போது, எப்படித் தந்தை வந்து, புதிய பாரதத்தையும் புதிய உலகையும் படைக்கிறார் எனப் பாருங்கள். பாரதம் புதியதாக இருந்தபோது, இந்த உலகம் இவ்வளவு பெரியதாக இருக்கவில்லை. இப்போது பாரதம் பழையதாகிவிட்டதால், உலகமும் பழையதாகிவிட்டது. தந்தை வந்து பாரதத்தை, அழியாத இந்த தேசத்தை, எமது புராதன தேசமாக மாற்றுகிறார். இது ஒரு நாடு என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது ஏனைய நாடுகள் அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கிறது. எவ்வாறாயினும், முழு உலகிலும், பூமி முழுவதிலும் ஒரேயொரு பாரத இராச்சியமே இருந்தது. அது புராதன பாரதம் என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்து பாரதம், தங்கச் சிட்டுக்குருவி என்று நினைவுகூரப்படுகிறது. அப்போது பூமி முழுவதிலும் பாரதத்தின் ஆட்சியே இருந்தது. ஒரு இராச்சியம், ஒரு தர்மம். அந்த வேளையில், சம்பூரணமான சந்தோஷம் இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. இதனாலேயே தந்தை சொல்கிறார்: இது அழிக்கப்படும். நான் முன்னர் இருந்த, ஒரு இராச்சியம், ஒரு தர்மம், அதே புதிய புராதன பாரதத்தை, புதிய உலகைப் படைக்கிறேன். உங்களுக்குப் புரிகிறதா? அந்த உலகில் துன்பமோ, நோய்களோ, அகால மரணமோ கிடையாது. எனவே, இத்தகைய வாழ்க்கைக்காக முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எதுவும் இலவசமாகக் கிடைக்காது. நீங்கள் ஏதோவொரு முயற்சியைச் செய்யவே வேண்டும். நீங்கள் விதைகளை விதைத்தால், பழத்தைப் பெறுவீர்கள். எதையும் விதைக்கவில்லை என்றால், எப்படி நீங்கள் எதையும் பெறுவீர்கள்? இது செயல்களம். இந்தக் களத்தில் உங்களின் செயல்களினூடாகவே நீங்கள் பழத்தைப் பெறுவீர்கள். என்ன செயல்களை நாம் விதைக்கிறோமோ, அதன் பலனையே நாம் பெறுவோம். எப்படி செயல்களின் விதைகளை விதைப்பது என்று தந்தை எமக்குக் கற்பிக்கிறார். இது உங்களுக்கு விவசாயத்தைக் கற்பிப்பதைப் போன்றது - எப்படி விதைகளை விதைப்பது, அவற்றை எப்படிப் பராமரிப்பது. இவை அனைத்திற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. தந்தை வந்து, கர்மக் களத்திற்கான பயிற்சியை எங்களுக்கு வழங்குகிறார் - எப்படி எமது செயல்களை விதைப்பது, எப்படி எமது செயல்களை மேன்மையானவை ஆக்குவது. நல்ல விதைகளை விதையுங்கள். நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்களின் செயல்கள் நல்லவையாக இருக்கும்போது, நீங்கள் எதை விதைத்தாலும், நல்ல பலனையே பெறுவீர்கள். கர்மத்தின் விதையில் பலம் இல்லாவிட்டால், நீங்கள் தீய செயல்களை விதைத்தால், என்ன பலனைப் பெறுவீர்கள்? இதையே நீங்கள் இப்போது உண்கிறீர்கள். அதனாலேயே அழுது கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதை உண்கிறீர்களோ, அதனால் அழுகிறீர்கள். துன்பமும் அமைதியின்மையும் காணப்படுகின்றன. ஏதாவதொரு நோயோ அல்லது சிக்கலோ காணப்படுகிறது. எல்லாமே மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே, தந்தை கூறுகிறார்: நான் இப்போது உங்களின் செயல்களை உயர்தரம் வாய்ந்தவையாக ஆக்குகிறேன். அந்தத் தரமுள்ள விதைகள் விதைக்கப்படும்போது, அதன் பலன் நல்லதாக இருக்கும். விதைகள் நல்ல தரமானவையாக இல்லாவிட்டால், நீங்கள் நல்ல தரமுள்ள பழத்தை அறுவடை செய்ய மாட்டீர்கள். அதனால், எமது செயல்களும் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும். எனவே, தந்தை இப்போது எமது செயல்களின் விதைகளை நல்ல தரமுள்ளதாக ஆக்குகிறார். அதனால், நீங்கள் மேன்மையான தரமுள்ள விதைகளை விதைத்தால், மேன்மையான பலனைப் பெறுவீர்கள். ஆகவே, உங்களின் செயல்களின் விதைகளை நல்லதாக ஆக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் எப்படி நல்லதை மட்டுமே விதைப்பது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள். எனவே, இவை அனைத்தையும் இப்போது புரிந்து கொண்டு முயற்சி செய்யுங்கள்.

அச்சா. இப்போது, நாம் இரண்டு நிமிடங்கள் மௌனமாக இருப்போம். மௌனம் என்றால், நான் ஓர் ஆத்மா என்று அர்த்தம். நான் முதலில் மௌனத்திற்குள் வந்து, பின்னர் பேச்சுக்குள் வருகிறேன். தந்தை இப்போது கூறுகிறார்: நாம் இப்போது மௌன உலகிற்குச் செல்லலாம். அதனால் மௌனம் நிலவட்டும். மௌனம் எனது ஆதி தர்மம். அந்த மௌனத்திற்குள் செல்வதற்கு, அவர் கூறுகிறார்: இப்போது உங்களின் சரீரம் மற்றும் உங்களின் சரீர உறவுகளின் மீதான எந்தவொரு பற்றையும் கைவிட்டு, அவர்களில் இருந்து பற்றற்றவர் ஆகுங்கள். பரமாத்மாவின் மகனே, இப்போது என்னை நினைவுசெய், எனது உலகிற்கு வா. அதனால் இப்போது அங்கே செல்வதில் கவனம் செலுத்துங்கள். இப்போது கீழிறங்கி வருவதைப் பற்றி நினைக்காதீர்கள். உங்களின் இறுதி எண்ணங்கள் உங்களின் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும். இப்போது எந்தவிதமான பற்றும் இருக்கக்கூடாது. உங்களின் சரீரத்தின் மீதும் உள்ள எந்தவொரு பற்றையும் விட்டுவிடுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்குள் இத்தகைய தாரணை இருக்க வேண்டும். அச்சா, இப்போது மௌனமாக அமர்ந்திருங்கள். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் மௌனமாக இருக்க வேண்டும். நீங்கள் பேசும்போது கூட மௌனம் இருக்க வேண்டும். நீங்கள் பேசும்போது எப்படி மௌனம் இருக்கமுடியும்? உங்களுக்குத் தெரியுமா? பேசும்போது, உங்களின் புத்தியின் யோகத்தை இணையுங்கள்: நான் ஓர் ஆத்மா. முதலில் ஒரு தூய ஆத்மா. அதாவது, ஒரு மௌனமான ஆத்மா. பேசும்வேளையில், நான் ஓர் ஆத்மா, இந்த அங்கங்களின் மூலம் நான் பேசுகிறேன் என்ற ஞானம் எனக்கிருக்க வேண்டும். எனவே, நீங்கள் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். அதாவது, அந்த ஆதாரத்தை எடுத்து நீங்கள் பேசுவதுபோல் இருக்க வேண்டும். ஓகே, இப்போது நான் இந்தக் கண்களின் ஆதாரத்தை எடுத்து, நான் பார்க்கிறேன். உங்களுக்கு என்ன தேவையோ, அதன் ஆதாரத்தை எடுத்துப் பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். இந்த முறையில் ஆதாரத்தை எடுப்பதன் மூலம் நீங்கள் உங்களின் பணியைச் செய்தால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். அப்போது நீங்கள் எந்தவொரு தீய செயலையும் செய்ய மாட்டீர்கள். அச்சா.

இத்தகைய இனிமையிலும் இனிமையான, மிகவும் நல்ல குழந்தைகளுக்கு, சதா மௌனத்தை அனுபவம் செய்பவர்களுக்கு பாப்தாதாவிடமிருந்தும் உங்களின் அம்மாவிடமிருந்தும் அன்பு, நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள்.

மாதேஸ்வரிக்காக ஒரு திரான்ஸ் செய்தியாளரின் சரீரத்தினூடாக சர்வசக்திவான் தந்தையால் கூறப்பட்ட மேன்மையான வாசகங்கள்.

1) ஓ மேன்மையான மகள் ராதா, ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்தத் தெய்வீகப் பணியில் என்னைப் போல் ஈடுபட்டுள்ளீர்கள். அதாவது, நீங்கள் ஒரு தூய வைஷ்ணவ ரூபமாக இருக்கிறீர்கள். நீங்கள் தூய சேவை செய்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் நடைமுறையில் எனது ரூபமாக இருக்கிறீர்கள். தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றாத குழந்தைகளில் இருந்து நான் மிகவும் தொலைவில் இருக்கிறேன். ஏனென்றால், குழந்தைகள் நிச்சயமாகத் தமது தந்தையைப் போல் இருக்க வேண்டும். இந்தச் சட்டம் இப்போது தாபிக்கப்பட்டுள்ளது. இது சத்தியயுகத்தில் இருந்து திரேதாயுகம் வரை தொடரும். அங்கே, தந்தை எப்படியோ, அப்படியே குழந்தையும் இருப்பார். எவ்வாறாயினும், துவாபரயுகம் மற்றும் கலியுகங்களில், குழந்தைகள் தமது தந்தையரைப் போல் இருப்பதில்லை. இப்போது, குழந்தைகள் தந்தையைப் போல் ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். ஆனால், அங்கே அது இயல்பான நியதியாக இருக்கும். தந்தை எப்படியோ, அப்படியே குழந்தையும் இருப்பார். தந்தையாகிய இறைவன், நடைமுறையில் வந்து சங்கமயுகத்தில் இந்த அநாதியான நியதியை ஸ்தாபிக்கிறார்.

2) இனிமையான, முயற்சி செய்யும், இனிய பூந்தோட்டக்காரரின் தெய்வீக மகளே, நீங்கள் இப்போது மிகவும் களிப்பூட்டுபவராகவும் இனிமையாகவும் இருந்து, மற்றவர்களையும் அவ்வாறே ஆக்க வேண்டும். உலக இராச்சியத்திற்கான சாவியை ஒரு விநாடியில் அடைவதும் மற்றவர்களை இதை அடையச் செய்வதும் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. பாருங்கள், சகல உயிர்களுக்கும் அதிபதியாக இருக்கும் சர்வசக்திவான், இப்போது இந்தச் செயல்களத்திற்கு நடைமுறையில் வந்துள்ளார். அதனால் முழு உலகமும் சந்தோஷ இல்லமாக ஆகுகிறது. இந்த வேளையில். சகல உயிர்களின் அதிபதியானவர், இந்த உலகை அவ்யக்த முறையில் செயல்பட வைக்கிறார். அவர் நடைமுறையில் ஒரு சரீரதாரியாகி, அதிபதியாக செயல்களத்திற்குள் வரும்போது, சகல உயிர்களும் சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் சந்தோஷம் ஆகுகிறார்கள். அங்கே, சத்திய சபை திறந்திருக்கும். இறை சந்தோஷத்தைப் பெற முயற்சி செய்தவர்கள், அங்கே எப்போதும் சந்தோஷத்தைப் பெறுவார்கள். சகல உயிர்களும் இந்த வேளையில் சந்தோஷ தானத்தைப் பெறுவதில்லை. இப்போது செய்யும் முயற்சியானது வெகுமதியை உருவாக்கும். இறைவனுடன் யோகம் செய்பவர்கள், இறைவனிடமிருந்து சம்பூரணமான சந்தோஷத்தைத் தானமாகப் பெறுகிறார்கள்.

3) ஓ! நீங்களே உங்களின் ஆன்மீகப் பலத்தின் நிறத்தால் இந்த அசுர உலகை அழித்து, தெய்வீக உலகை ஸ்தாபிக்கும் அதே சக்தி ஆவீர்கள். அதன்பின்னர், சகல சக்திகளின் புகழும் வெளிப்படும். நீங்கள் இப்போது அந்தப் பலத்தால் நிரம்புகிறீர்கள். நீங்கள் சதா ஆன்மீகச் சக்தியையும் உங்களின் பதவியின் அந்தஸ்தையும் பேண வேண்டும். அதன்பின்னர், நீங்கள் சதா எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் சதா மலர்ச்சிநிறைந்தவர்கள் ஆகுவீர்கள். ‘நான் யார்? நான் யாருக்குச் சொந்தமானவன்? நான் எவ்வளவு பாக்கியசாலி? எனது அந்தஸ்து எத்தனை மகத்தானது!’ என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்போது சுய இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். பின்னர், சத்தியயுகத்தில், நீங்கள் இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுவீர்கள். எனவே, உங்களுக்குள் எவ்வளவு போதை இருக்க வேண்டும்! உங்களின் பாக்கியத்தைப் பார்க்கும்போது, சந்தோஷமாக இருங்கள்! உங்களின் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள். அதனூடாக நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டலாபச்சீட்டைப் பெற்றுள்ளீர்கள். ஓஹோ! உங்களின் அதிர்ஷ்டம் மிக மேன்மையானது. நீங்கள் வைகுந்தத்தின் அதிர்ஷ்டலாபச் சீட்டைப் பெறுவதற்கான அதிர்ஷ்டம். தேவ மலரான அதிர்ஷ்டசாலிக் குழந்தையே, புரிந்து கொள்ளுங்கள்.

4) இந்த சங்கமயுகத்தின் புண்ணிய காலத்தில், அசரீரியான பரமாத்மாவே பௌதீக ரூபத்தில் வந்து, இந்த இறை தொழிற்சாலையைத் திறக்கிறார். இதில் எவராலும் தனது அழிகின்ற வைக்கோலைக் கொடுத்து, அழியாத ஞான இரத்தினங்களைப் பெற முடியும். இந்த அழியாத ஞான இரத்தினங்களை வாங்குவது என்பது, மிகவும் சூட்சுமமானது. நீங்கள் இவற்றை உங்களின் புத்தியாலேயே வாங்க வேண்டும். இது உங்களின் கண்களால் பார்க்கக்கூடிய பௌதீகமானது அல்ல. ஆனால், இது மிகவும் தெளிவாகவும் மறைமுகமாகவும் மறைந்தும் இருப்பதனால், எவராலும் அதை உங்களிடமிருந்து கொள்ளை அடிக்க முடியாது. இத்தகைய மேன்மையான ஞானப் பொக்கிஷத்தைப் பெறுவதன் மூலம், உங்களின் ஸ்திதி முற்றிலும் வேறு எந்த எண்ணங்களில் இருந்து விடுபட்டிருப்பதுடன், சந்தோஷத்தால் நிறைந்திருக்கும். ஒருவர் இந்த அழியாத ஞான இரத்தினங்களை வாங்கும்வரை, அவரால் கவலைகளில் இருந்து விடுபட்டு, கவலையற்றவராகவும் ஏனைய எண்ணங்களில் இருந்தும் விடுபட்டும் இருக்க முடியாது. ஆகவே, இந்த அழியாத ஞான இரத்தினங்களைச் சம்பாதித்து, உங்களின் புத்தியெனும் சூட்சுமமான பெட்டகத்தில் பதித்து, சதா எந்தவிதமான கவலைகளில் இருந்தும் விடுபட்டிருங்கள். அழிகின்ற செல்வம் துன்பம் நிறைந்தது. ஆனால் இந்த அழியாத ஞானச் செல்வம் சந்தோஷத்தால் நிறைந்தது.

5) எப்படி சூரியன் கடலில் இருந்து நீரை எடுத்து, உயர்ந்த மலைகளின் மீது மழையாகப் பொழிகிறதோ, அவ்வாறே, இதுவும் இறைவனால் நேரடியாக பொழியப்படுகிறது. கங்கைநதி சிவனின் சடாமுடியினூடாக வெளிப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்போது, ஞான அமிர்தம் அவரின் தாமரை வாயில் இருந்து வெளிப்படுகிறது. இது அழியாத, இறை ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் பகீரதனின் தூய, அமரத்துவ குழந்தை ஆகியுள்ளீர்கள். இது உங்களைத் தலைக்கிரீடமாக ஆக்கவல்ல அற்புதமான ஒன்றுகூடல் ஆகும். இங்கு வருகின்ற எந்தவொரு ஆணோ அல்லது பெண்ணோ தலையின் கிரீடம் ஆகுவார்கள். இந்த உலகம் மண்டலி (ஒன்றுகூடல்) என்றும் அழைக்கப்படுகிறது. மண்டல் என்றால் ஓரிடம். எனவே, இந்த மண்டலி எங்கே? ஓம் என்ற ரூபத்தில், அதாவது, எனது ஆதி தர்மத்தில் உள்ளது. ஆனால் முழு உலகமும் அதன் ஆதி தர்மத்தை மறந்து, சடப்பொருளின் தர்மத்தில் ஸ்திரமாக இருக்கிறது. சக்திகளான நீங்கள் சடப்பொருளை மறந்து, இப்போது உங்களின் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருக்கிறீர்கள்.

6) இந்த உலகில், மனிதர்கள் எல்லோரும் அசரீரியான இறைவனை நினைவு செய்கிறார்கள். தமது கண்களால்கூடக் காணாத ஒரேயொருவரிடம் அவர்கள் ஆழ்ந்த அன்பைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே, என்னை உங்களில் கலந்து விடுங்கள்! எவ்வாறாயினும், அற்புதம் என்னவென்றால், இறைவனே பௌதீக ரூபத்தில் வரும்போது, அவர்கள் அவரை இனங்காண்பது இல்லை. கடவுளின் மிகவும் அன்பான பக்தர்கள், தாம் எங்கே பார்த்தாலும், அவரை மட்டுமே காண்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அவரைக் காணாவிட்டாலும், இறைவன் எங்கும் இருக்கிறார் என அவர்களின் தமது புத்தி யோகத்தினால் உணர்கிறார்கள். எவ்வாறாயினும், அசரீரியான இறைவனே இங்கே நடைமுறையில் பௌதீக ரூபத்தில் வந்துள்ளார் என நீங்கள் அனுபவத்தினால் சொல்கிறீர்கள். உங்களால் இப்போது வந்து என்னை இலகுவாகச் சந்திக்க முடியும். எவ்வாறாயினும், எனது குழந்தைகளில் சிலரும் தந்தையாகிய இறைவனான என்னை பௌதீக ரூபத்தில் இனங்கண்டு கொள்ளவில்லை. அவர்கள், அசரீரியானவர் மிகவும் இனிமையானவர் என நினைக்கிறார்கள். ஆனால், அசரீரியான ஒரேயொருவர் இப்போது இங்கே நடைமுறையில் பௌதீக ரூபத்தில் வந்துள்ளார் என்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டால், அவர்களால் அதிகளவைப் பெற முடியும். ஏனென்றால், பேறானது பௌதீகமான ஒருவரினூடாகவே பெறப்பட வேண்டும். இறைவனை அசரீரியானவர் என்றும் தொலைவில் இருக்கிறார் என்றும் கருதிப் பார்ப்பவர்கள், எந்தவொரு பேற்றையும் பெறாதவர்கள், பக்தர்கள் ஆவார்கள். அவர்களுக்கு இந்த ஞானம் எதுவும் கிடையாது. பௌதீகமான பிரபுபிதாவை அறிந்த ஞானிக் குழந்தைகள், சகல தெய்வீகக் குணங்களின் நறுமணத்தால் நிரம்பியுள்ள இனிமையான மலர்களாக இருப்பவர்கள், தமது வாழ்க்கைகளை பிரபு பிதாவிடம் ஒப்படைக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பிறவி பிறவியாக அழகான, தெய்வீகமான, முற்றிலும் தேவர்களைப் போன்ற சரீரங்களைப் பெறுகிறார்கள்.

7) உங்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களால் சரி, பிழையை, உண்மை, பொய்யை வேறுபிரித்தறிய முடியும். இந்த இறை ஞானத்தின் மூலம், நீங்கள் சத்தியத்தைப் பேசுகிறீர்கள். அதனால் தீய சகவாசத்தின் எந்தவிதமான ஆதிக்கமும் இருக்கமுடியாது. அறியாமையில் இருப்பவர்கள்மீது தீய சகவாசத்தின் நிழல் இருக்கும். இந்த வேளையில், இது சத்திய உலகம் இல்லை. மக்கள் தமது வார்த்தையைக் காப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லாததால், அவர்கள் எல்லாவற்றையும் எழுத்தில் இருப்பதை விரும்புகிறார்கள். மனிதர்களின் வார்த்தைகள் உண்மையற்றவை. அவை சத்தியமாக இருந்தால், இந்த மேன்மையான வாசகங்கள் பூஜிக்கப்படும். தெய்வீகத் தந்தையின் உண்மையான, மேன்மையான வாசகங்கள் எப்படி புராணங்களாக ஆக்கப்பட்டுள்ளன எனப் பாருங்கள். இன்றும், அவை நினைவுகூரப்படுகின்றன, அத்துடன் பூஜிக்கப்படுகின்றன. இந்த உண்மையான, மேன்மையான வாசகங்களைக் கிரகிப்பதன் மூலம், நீங்கள் இறை குணங்களை விருத்தி செய்து கொள்கிறீர்கள். இது மட்டுமல்ல, இவற்றைக் கற்பதன் மூலம், சிலருக்கு ஸ்ரீ கிருஷ்ணாவின் அல்லது பிரம்மாவின் காட்சிகள் கிடைக்கின்றன.

8) ஓஹோ! புனிதமான தாமரை இதயம், புனிதமான தாமரைக் கரங்கள், புனிதமான தாமரைக் கண்களைக் கொண்ட புதல்வி ராதை, உங்களின் முழு சரீரமும் ஒரு தாமரை மலராக மாறியுள்ளது. உங்களின் சரீரம் தூய்மை ஆகியுள்ளது. தாமரை மலர் போல் தூய்மையாகி உள்ளது. எவ்வாறாயினும், ஆத்மா முதலில் தூய்மையாகும்போது, சரீரம் முழுவதும் தூய்மையாகும். அதன்பின்னர் முழு உடலும் தூய்மையாகும். புனிதமான தாமரை சரீரம், ஆழமான கவர்ச்சியால் நிறைந்திருக்கிறது. உங்களின் தந்தையான இறைவனின் மூலம், நீங்கள் அறியாமை நெருப்பை அணைத்து, ஞானோதயத்தை விழித்தெழச் செய்கிறீர்கள். நீங்கள் மிகவும் குளிர்மை ஆகியுள்ளீர்கள். நீங்களும் குளிர்மையானவர்களாகி, உங்களுக்குச் சமமானவர்களுக்கு உண்மையான குளிர்மையைத் தானம் செய்வதற்கு, சங்கமயுகத்தின் புண்ணிய காலத்தில் கருவி ஆகியுள்ளீர்கள். உங்களின் உயிரற்ற விக்கிரகங்களினூடாகவும் முழு உலகமுமே தொடர்ந்து குளிர்மையையும் அமைதியையும் தானமாகப் பெறுகின்றது. நீங்கள் இப்போது முழு உலகிற்கும் சத்கதி வழங்குகிறீர்கள். இறுதியாக, உங்களின் தெய்வீகப் பிரகாசத்தைக் காட்டியவண்ணம், நீங்கள் சென்று புதிய வைகுந்தத்தில், சத்தியயுகப் பூந்தோட்டத்தில் ஓய்வெடுப்பீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ‘பாபா’ என்ற வார்த்தையின் சாவியால் சகல பொக்கிஷங்களையும் திறக்கின்ற பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

உங்களால் ஞானத்தின் விவரங்களை அறிந்துகொள்ளவோ அல்லது பேசவோ முடியாவிட்டாலும், உங்களின் இதயத்தில் ‘பாபா’ என்ற ஒரு வார்த்தையைப் பதித்து, உங்களின் இதயபூர்வமாக அதை மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம், உங்களால் ஒரு விசேடமான ஆத்மா ஆகமுடியும். உலகின் முன்னால், நீங்கள் ஒரு மகாத்மாவாகவும் புகழத்தக்கவராகவும் ஆகுகிறீர்கள். ஏனென்றால், ‘பாபா’ என்ற ஒரு வார்த்தை, சகல பொக்கிஷங்களுக்கும் சகல பாக்கியத்திற்கும் சாவி ஆகுகிறது. இந்தச் சாவியைப் பயன்படுத்துவதற்கான வழிமுறை, அதை உங்களின் இதயபூர்வமாக அறிந்து, உங்களின் இதயபூர்வமாக அதை ஏற்றுக்கொள்வதாகும். உங்களின் இதயபூர்வமாக ‘பாபா’ என்று சொல்லுங்கள், பொக்கிஷங்கள் எப்போதும் உங்கள் முன்னால் வந்துவிடும்.

சுலோகம்:
உங்களுக்கு பாப்தாதாவின் மீது அன்பு உள்ளது. எனவே, அந்த அன்பினால், பழைய உலகைத் தியாகம் செய்யுங்கள்.