25.05.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    04.09.2005     Om Shanti     Madhuban


கற்பித்தல்களைக் கொடுப்பதுடன்கூடவே, மன்னிப்பவராகவும் கருணைநிறைந்தவராகவும் ஆகுங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களின் வீடு ஆசிரமம் ஆகிவிடும்.


இன்று, பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய நெற்றிகளிலும் தூய்மை ரேகைகளைப் பார்க்கிறார். ஏனென்றால், பிராமண வாழ்க்கையின் அத்திவாரமே தூய்மையாகும். தூய்மையின் ரேகைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லோரும் தூய்மையை விரும்புகிறார்கள். தூய்மையே சந்தோஷம், அமைதி, அன்பு, ஆனந்தத்தின் தாய் ஆகும். தூய்மையே மனித வாழ்க்கையின் உண்மையான அலங்காரம். தூய்மை இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்கு எந்தவிதமான மதிப்பும் கிடையாது. தேவதேவியர்கள் தூய்மையானவர்கள் என்பதை உங்களால் பார்க்க முடிகிறது. இதனாலேயே, அவர்கள் மதிப்பதற்கும் வழிபடப்படுவதற்கும் தகுதியானவர்கள். தூய்மை இல்லாதபோது, இன்று நீங்கள் பார்க்கின்ற மனித வாழ்வே உள்ளது. உங்களின் பிராமண வாழ்க்கைக்காக பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: தூய்மை ஆகுவீர்களாக, யோகி ஆகுவீர்களாக. தூய்மை உள்ளதோர் ஆத்மாவின் செயல்கள், நடத்தை, முகம் என்பவை பிரகாசிக்கும். இதனாலேயே, தூய்மை உங்களின் வாழ்க்கையை மேன்மையானது ஆக்குகிறது. உண்மையில், குழந்தைகளான உங்கள் எல்லோருடைய ஆதி ரூபம் தூய்மை ஆகும். உங்களின் அநாதியான ரூபமும் தூய்மையே. இத்தகைய ஆத்மாக்களின் சிறப்பியல்பானது, தூய்மையின் ஆளுமை எப்போதும் அவர்களின் வாழ்க்கைகளில் புலப்படும். இத்தகைய ஆத்மாக்களின் முகங்களிலும் செயற்பாடுகளிலும் தூய்மையின் நிஜமும் தூய்மையின் இராஜரீகமும் புலப்படும். இந்த ரேகைகள் உங்களின் வாழ்க்கையின் அலங்காரம் ஆகும். ‘ஆத்மாவான நான்’ என்பதே நிஜம் - இதுவே எனது ஆதியான, அநாதியான ரூபம். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் சக்திசாலி ஆகுகிறீர்கள். இராஜரீகம் என்பது, நீங்களும் உங்களின் சுய மரியாதையைக் கொண்டிருப்பதுடன் எல்லோருக்கும் மரியாதை வழங்கிய வண்ணம் நீங்கள் செயல்படுதல். ஆளுமை என்பது, சதா திருப்தியையும் சந்தோஷத்தையும் கொண்டிருத்தல். நீங்களும் திருப்தியாக இருப்பதுடன் ஏனையவர்களையும் திருப்திப்படுத்துகிறீர்கள். தூய்மையினூடாகப் பல பேறுகளும் உள்ளன. பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் என்ன பேறுகளைக் கொடுத்துள்ளார் என நீங்கள் அறிவீர்கள்தானே? அவர் உங்களை எத்தனை பொக்கிஷங்களால் நிரப்பியுள்ளார்? நீங்கள் இந்தப் பேறுகளை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தால், நிரம்பியவர் ஆகுவீர்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முதலாவது பொக்கிஷம், இந்த ஞானப் பொக்கிஷம். இதன் மூலம் உங்களின் வாழ்க்கையை வாழும்போது நீங்கள் துன்பம் மற்றும் அமைதியின்மையில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். நீங்கள் வீணான எண்ணங்கள், எதிர்மறையான எண்ணங்கள், பாவ எண்ணங்கள், பாவச் செயல்களில் இருந்து விடுபடுகிறீர்கள். உங்களுக்குள் ஏதாவது வீணான அல்லது பாவ எண்ணங்கள் இருந்தால், ஞான சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள்.

இரண்டாவது பொக்கிஷம், நினைவு, யோகம். இதனூடாக நீங்கள் சக்திகளைப் பெறுகிறீர்கள். சகல சக்திகளின் அடிப்படையில் நீங்கள் இலகுவாக சகல பிரச்சனைகளையும் தடைகளையும் வெற்றி கொள்கிறீர்கள்.

மூன்றாவது பொக்கிஷம், தாரணை. இதனூடாக நீங்கள் சகல நற்குணங்களையும் பெறுகிறீர்கள். நான்காவது பொக்கிஷம், சேவை. நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்களோ, அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். அத்துடன் நீங்கள் சந்தோஷத்தையும் பெறுவீர்கள்.

குழந்தைகளான நீங்கள் எல்லோரும் தந்தையிடம் இருந்து இந்தப் பொக்கிஷங்கள் பலவற்றைப் பெறுகிறீர்கள். தந்தை உங்கள் எல்லோருக்கும் சமமான பொக்கிஷங்களையே வழங்குகிறார். அவர் சிலருக்குக் குறைவாகப் பொக்கிஷங்களையும் ஏனையோருக்கு அதிக பொக்கிஷங்களையும் வழங்குகிறார் என்பதல்ல. ஆனால், அவற்றை எடுப்பதிலேயே வேறுபாடு ஏற்படுகிறது. சில குழந்தைகள் பொக்கிஷங்களைப் பெற்று, அவற்றைத் தாங்களே உண்டு, குடித்து, களிப்படைந்து, தமது களிப்பிலே எல்லாவற்றையும் பயன்படுத்தி முடித்துவிடுகிறார்கள். சில குழந்தைகள் உண்டு, பருகி, களிப்படைவதுடன் சேமிக்கவும் செய்கிறார்கள். சில குழந்தைகள் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் அதைத் தொடர்ந்து அதிகரிக்கிறார்கள். பொக்கிஷங்களை அதிகரிப்பதற்கான சாவி, அவற்றைத் தனக்காகவும் பிறருக்காகவும் பயன்படுத்துவதே ஆகும். அவற்றைப் பயன்படுத்துபவர்கள், அவற்றை அதிகரிக்கிறார்கள். எனவே, உங்களையே கேளுங்கள்: நான் இந்த விசேடமான பொக்கிஷங்களைச் சேமித்துள்ளேனா? நீங்கள் அவற்றைச் சேமித்துள்ளீர்களா? நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஆம் என்றா? அல்லது, சிறிதளவை மட்டுமா? இந்தப் பொக்கிஷங்களைச் சேமித்திருப்பவர்கள், சதா நிரம்பியவர்களாக இருப்பார்கள். பாருங்கள், நிரம்பி இருக்கும் எதுவும் அசையாது. அது நிரம்பியிருக்காத போதே, அசைகிறது. சம்பூரணமாக நிரம்பாத எதுவும் அசையும். இங்கும், நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி இருக்காதபோது, குழப்பம் ஏற்படுகிறது. தந்தையின் பொக்கிஷங்கள், உங்களின் பிறப்புரிமை என்ற போதையை சதா கொண்டிருங்கள். தந்தை அவற்றை உங்களுக்கு வழங்கினார். நீங்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டீர்கள். எனவே, அந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் யாருக்குச் சொந்தம்? அவை உங்களுக்கே சொந்தம், அப்படித்தானே? இந்தப் பொக்கிஷங்களைப் பெற்றிருப்பவர்கள் மிகுந்த போதையுடன் இருப்பார்கள். ஓர் அரசனின் மகனான ஓர் இளம் இளவரசனுக்குத் தனது தந்தையிடம் என்ன பொக்கிஷங்கள் இருக்கின்றன என்றுகூடத் தெரியாது. அப்படி இருந்தும் தனது தந்தையின் பொக்கிஷங்கள், தனது பொக்கிஷங்கள் என்ற போதையை அவர் கொண்டிருப்பார். அத்துடன் அந்தப் பொக்கிஷங்கள் தனக்குரியவை என்ற சந்தோஷமும் அவருக்கு இருக்கும். சந்தோஷம் சிறிதளவே இருந்தால், அதற்கான காரணம் என்ன? தந்தை உங்களுக்கு அந்தப் பொக்கிஷங்களைக் கொடுத்தார். நீங்கள் பாபா சொல்வதைக் கேட்டீர்கள். எவ்வாறாயினும், ஒரு வகையினர் கேட்பவர்கள். ஏனையோர், அவற்றை (அந்தப் பொக்கிஷங்களை) தமக்குள் உட்கிரகித்துக் கொள்வார்கள். எனவே, அவற்றைத் தமக்குள் உட்கிரகித்துக் கொள்பவர்களே, போதையுடன் இருப்பார்கள்.

இன்று, புதிய குழந்தைகள் வந்துள்ளார்கள். அதிர்ஷ்டக் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் பாப்தாதா உங்களின் பாக்கியத்திற்காகப் பாராட்டுகிறார். நீங்கள் உங்களின் பாக்கியத்தை இனங்கண்டுள்ளீர்களா? நீங்கள் அதை இனங்கண்டுள்ளீர்களா? நீங்கள் இறையன்பை, அழியாத அன்பைப் பெற்றுள்ளீர்கள். இது ஒரு பிறவிக்கு மட்டும் நிலைத்திருக்காது. ஏனென்றால், இந்த அன்பானது பல பிறவிகளுக்கு எல்லா வேளையும் நிலைத்திருக்கும். ஏனென்றால், நீங்கள் இப்போது கடந்து செல்கின்ற இந்த நேரமும் சங்கமயுகத்தின் அதிர்ஷ்டமான நேரம் ஆகும். சத்தியயுகமும் அதிர்ஷ்டமானது எனப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள சங்கமயுகம் அதை விட அதிகம் அதிர்ஷ்டமானது. ஏன்? இந்த சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் தந்தையிடம் இருந்து நிலையான பாக்கியம் என்ற ஆசீர்வாதத்தையும் ஆஸ்தியையும் பெறுகிறீர்கள். எனவே, இத்தகைய சங்கமயுகத்தில், இத்தகைய அதிர்ஷ்டமான நேரத்தில், நீங்கள் எல்லோரும் உங்களின் அதிர்ஷ்டத்தைப் பெறவே இங்கே வந்துள்ளீர்கள். மிகவும் இலகுவான முயற்சி செய்வதற்கான வழிமுறையை பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சொல்வார். ஏனென்றால் உங்களுக்கு இலகுவான ஒன்றுதானே வேண்டும்? கஷ்டமான எதுவும் உங்களுக்கு வேண்டாம்தானே? இந்தக் குழந்தைகள் தமது பாக்கியத்தை உருவாக்குவதற்கான இலகுவான வழிமுறையைக் கண்டு பிடித்துள்ளார்கள். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்தானே? இதுவே எல்லாவற்றிலும் இலகுவானது. வேறு எதுவும் செய்ய வேண்டாம், ஆனால் ஒரு விடயத்தை மட்டும் செய்யுங்கள். உங்களால் ஒரு விடயத்தைச் செய்ய முடியும்தானே? ஆம் அல்லது இல்லை எனக் கூறுங்கள். ‘ஹா ஜி’ எனக் கூறுங்கள். எனவே, எல்லாவற்றிலும் இலகுவான வழிமுறை என்னவென்றால், அமிர்த வேளையில் இருந்து, நீங்கள் சந்திக்கும் எவருக்கும், அவருக்கு ஆசீர்வாதங்களைக் கொடுத்து, அவரிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். கோபத்துடன் ஒருவர் வந்தாலும் அவருக்கும் நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, அவரிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், தீவிர முயற்சி செய்வதற்கு ஆசீர்வாதங்களே இலகுவான ஆயதம் ஆகும். எப்படி விஞ்ஞானத்தின் மூலம் ஓர் ஏவுகணை தனது பணியை மிக விரைவாகச் செய்கிறதோ, அதேபோல், ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுதல் முன்னேறுவதற்கான மிக இலகுவான வழிமுறை ஆகும். அமிர்த வேளையில், இலகுவான நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர் நாள் முழுவதும் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியும் என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள். யாராவது உங்களுக்காகத் தீய எண்ணங்களைக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாராவது உங்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனை கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பாருங்கள், நீங்கள் இறைவனின் குழந்தைகள், அருள்பவரின் குழந்தைகளான அருள்பவர்கள் ஆவீர்கள். நீங்கள் மாஸ்ரர் அருள்பவர்கள்தானே? எனவே, ஓர் அருள்பவரின் கடமை என்ன? கொடுத்தல். எனவே, எல்லாவற்றிலும் சிறந்த விடயம், ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாகும். ஒருவர் எத்தகையவராக இருந்தாலும், அவர் உங்களின் சகோதரன் அல்லது சகோதரியே ஆவார். இறைவனின் குழந்தைகள் உங்களின் சகோதர, சகோதரிகள், அப்படித்தானே? எனவே, மற்ற நபர் இறைவனின் குழந்தை, உங்களின் தெய்வீக சகோதரன் அல்லது தெய்வீக சகோதரி ஆவார். எனவே, அவருக்கு நீங்கள் என்ன கொடுப்பீர்கள்? சாபமா? தந்தை எப்போதாவது சபிப்பாரா? அவர் அப்படிச் செய்வாரா? அவர் அதைச் செய்வாரா? ஆம் அல்லது இல்லை? ஆம் அல்லது இல்லை எனச் சொல்லுங்கள். நீங்கள் சபிக்காதபோது மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். ஏன்? ஏனென்றால், உங்களுக்காகத் தீய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதங்களையே கொடுக்கிறீர்கள். பின்னர், மற்றவர்கள் ஆசீர்வாதங்களைக் கொடுத்தாலென்ன கொடுக்கா விட்டாலென்ன, நீங்கள் தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அப்படியாயின் துன்பம் ஏன் ஏற்பட வேண்டும்? வந்துள்ள குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா ஓர் ஆசீர்வாதத்தை வழங்குகிறார். நீங்கள் இந்த ஆசீர்வாதத்தை நினைத்தால், சதா சந்தோஷமாக இருப்பீர்கள். அந்த ஆசீர்வாதம் என்னவென்று பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் அதைக் கேட்பீர்களா?

அந்த ஆசீர்வாதம், யாராவது உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தாலும் அதை எடுக்காதீர்கள் என்பதேயாகும். அவர்கள் அதைக் கொடுக்கக்கூடும். ஆனால் நீங்கள் அதை எடுக்கக்கூடாது. அந்தத் துன்பத்தை ஏற்படுத்துபவர், அதை ஏற்படுத்தினார். ஆனால் நீங்களே அதை எடுத்துக் கொள்பவர்கள், அப்படித்தானே? அருள்பவர் என்பவர் எடுப்பவர் அல்ல. அவர்கள் உங்களுக்கு தீங்கான எதைக் கொடுத்தாலும் அவர்கள் உங்களுக்குத் துன்பத்தை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்தினாலும் அது தீங்கானதுதானே? நீங்கள் துன்பத்தை விரும்புகிறீர்களா? நீங்கள் அதை விரும்பவில்லைத்தானே? எனவே, அது தீங்கான ஒன்றுதானே? எனவே, தீங்கான எதையும் நீங்கள் எடுத்துக் கொள்வீர்களா? யாராவது மோசமான எதையாவது உங்களுக்குக் கொடுத்தால், நீங்கள் அதை எடுத்துக் கொள்வீர்களா? நீங்கள் எடுப்பீர்களா? எடுக்க மாட்டீர்கள். அப்படி என்றால், நீங்கள் ஏன் இதை எடுக்கிறீர்கள்? நீங்கள் இதை எடுக்கிறீர்கள்தானே? நீங்கள் துன்பத்தை எடுத்தால், யார் சந்தோஷம் அற்றவர் ஆகுவது? நீங்கள் சந்தோஷமற்றவர் ஆகுகிறீர்களா அல்லது மற்ற நபர் அப்படி ஆகுகிறாரா? அதை எடுத்துக் கொள்பவரே அதிகம் சந்தோஷம் அற்றவர் ஆகுகிறார். இப்பொழுதில் இருந்தே நீங்கள் துன்பத்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், உங்களின் துன்பத்தில் அரைவாசி நீக்கப்படும். நீங்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்தானே? அதன்பின்னர், துன்பத்திற்குப் பதிலாக, நீங்கள் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுப்பீர்கள். அதனால் நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்தானே? அதன்பின்னர் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களின் ஆசீர்வாதப் பொக்கிஷக் களஞ்சியமும் தொடர்ந்து நிரம்பும். ஆத்மாக்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிடம் இருந்தும் ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருங்கள். சிலவேளைகளில் என்ன நடக்கிறது? யாராவது ஒருவர் பிழையான எதையாவது செய்தால், நீங்கள் அவனுக்கு அல்லது அவளுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்க முயற்சி செய்வீர்கள். ‘நான் இவரைச் சரி ஆக்குவேன்.’நீங்கள் அவர்களுக்குக் கற்பித்தல்களை வழங்குகிறீர்கள். அவர்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுங்கள். ஆனால், கற்பித்தல்களைக் கொடுப்பதற்கான அதி மேன்மையான வழிமுறை, மன்னிப்பின் வடிவில் கற்பித்தல்களைக் கொடுப்பதாகும். வெறுமனே கற்பித்தல்களைக் கொடுக்காதீர்கள். கருணையும் மன்னிக்கும் தன்மையும் கொண்டிருப்பதுடன் கற்பித்தல்களையும் கொடுங்கள். மூன்று வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: கற்பித்தல்கள், கருணை, மன்னித்தல். கருணை நிறைந்தவராக இருந்தவண்ணம் நீங்கள் அவருக்குக் கற்பித்தல்களை வழங்கினால், உங்களின் கற்பித்தல்கள் வேலை செய்யும். அந்தக் கற்பித்தல்களைக் கொடுப்பதில் நீங்கள் கருண நிறைந்தவராக இல்லாவிட்டால், அந்தக் கற்பித்தல்கள் ஒரு காதில் சென்று மறு காதால் வெளியே போய்விடும். அந்தக் கற்பித்தல்கள் கிரகிப்பட மாட்டாது. இது அப்படித்தானே? இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் யாராவது ஒருவரின் ஆசிரியர் ஆகுவதில்லைத்தானே? எப்படி ஓர் ஆசிரியர் ஆகுவது என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் மன்னிக்கவும் வேண்டும்: இரண்டும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும். இப்பொழுதில் இருந்தே கருணை காட்டுங்கள். கருணை காட்டுவதற்கான வழிமுறை, நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதாகும். உண்மையான அன்பு கல்லையும் நீர்போல் ஆக்கிவிடும் எனக் கூறப்படுகிறது. உண்மையான அன்பு. அதேபோல், மன்னிக்கும் வடிவத்தில் கற்பித்தல்களைக் கொடுப்பதன் மூலம், நீங்கள் விரும்பியது - யாராவது ஒருவர் எதையாவது செய்யாமல் விடுவது அல்லது ஏதாவது நடக்காமல் இருப்பது - நடக்கும். கருணை நிறைந்தவராக இருந்தவண்ணம் நீங்கள் கற்பித்தல்களைக் கொடுப்பதன் ஆதிக்கம், மற்ற நபரின் கடினமான இதயத்தையும் மாற்றிவிடும். எனவே, நீங்கள் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றீர்கள்? துன்பத்தைக் கொடுக்காதீர்கள், துன்பத்தை எடுக்காதீர்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? இப்போது துன்பத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்தத் தவறைச் செய்யாதீர்கள். தந்தை துன்பத்தை ஏற்படுத்துவதில்லை. எனவே, நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும்தானே? எனவே, நீங்கள் இதைச் செய்கிறீர்களா? சிலவேளைகளில், நீங்கள் யாராவது ஒருவரைத் திட்டுவீர்கள். எவரையும் திட்டாதீர்கள். கருணை காட்டுங்கள். கருணையுடன் கற்பித்தல்களைக் கொடுங்கள். மீண்டும் மீண்டும் ஒருவரைத் திட்டும்போது, அந்த ஆத்மா ஓர் எதிரி போன்று ஆகிவிடுகிறார். அல்லது நீங்கள் அவரை வெறுக்கிறீர்கள். நீங்கள் இறைவனின் குழந்தைகள்தானே? அதனால் எப்படித் தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற ஒருவராக இருக்கிறாரோ, உங்களாலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியாதா? நீங்கள் திரும்பிச் சென்றதும் இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் இதை முயற்சி செய்வீர்கள்தானே? எனவே, எல்லாவற்றுக்கும் முதலில், புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது. உங்களின் குடும்பத்தில் யாராவது துன்பம் கொடுத்தால், அப்போதும் துன்பத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குங்கள். கருணை நிறைந்தவர் ஆகுங்கள். எல்லாவற்றுக்கும் முதலில், உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இப்படி ஆகுங்கள். உங்களின் குடும்பத்தின் மீதான ஆதிக்கம், உங்களின் பிரதேசத்திலும் (சமுதாயத்தில்) ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். சமுதாயம், நாட்டில் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். நாடு, உலகின் மீது ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். இது இலகுதானே? உங்களின் குடும்பத்துடன் ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால், ஒரு நபர் கோபம் அடைந்தாலும், உங்களின் வீட்டின் சூழல் எப்படி இருக்கும்? அது வீட்டைப் போல் இருக்குமா அல்லது யுத்தகளம் போல் இருக்குமா? அந்த வேளையில் நீங்கள் அதை விரும்புவீர்களா? நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள், அப்படித்தானே?

இது உங்கள் எல்லோருக்கும்தான் (விஐபி கள், மதுவனவாசிகள் எல்லோரும் பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருந்தார்கள்). உங்களின் சகபாடிகளுக்கும் உங்களுடன் வேலை செய்பவர்களுக்கும் துன்பத்தைக் கொடுக்காதீர்கள், துன்பத்தை எடுக்காதீர்கள். ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். இத்தகைய வேளையில், நீங்கள் உங்களின் இதயபூர்வமாக உரிமையுடன் ‘எனது பாபா’, ‘இறைவன் எனது பாபா’ எனச் சொல்கிறீர்கள். அதன்பின்னர், இதுவே, கடவுள் சர்வவியாபி எனப்படுகிறது. இத்தகைய வேளையில் நீங்கள் உரிமையுடன் ‘எனது பாபா’ எனச் சொன்னால், பிரபுவான தந்தை பிரசன்னம் ஆகுவார். தந்தை எதற்காக இருக்கிறார்? அவர் குழந்தைகளான உங்களுக்காகவே இருக்கிறார். உரிமை உள்ள குழந்தைகளான உங்களுடன் ஒத்துழைக்காமல் இருப்பதென்பது தந்தைக்குச் சாத்தியம் இல்லை. அசாத்தியமானது! எனவே, இந்த மாற்றத்துடன் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் இங்கே வந்ததைப் போல் திரும்பிச் செல்லாதீர்கள். ஏதாவதொரு மாற்றத்துடன் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் இங்கே வந்தபோது, பயணச் சீட்டுக்குப் பணத்தைச் செலவளித்தீர்கள். நீங்கள் பணத்தைச் செலவளித்தீர்கள், அத்துடன் உங்களின் நேரத்தையும் கொடுத்தீர்கள். எனவே, நீங்கள் அதை மதிக்கிறீர்கள்தானே? எனவே, எல்லாவற்றுக்கும் முதலில் உங்களின் சுய மாற்றத்தின் மூலம் உங்களின் வீட்டை மாற்றுவதே அதன் பெறுமதி ஆகும். அதன்பின்னர் நாட்டிலும் உலகத்திலும் மாற்றம் ஏற்படும். உங்களின் வீடு ஓர் ஆசிரமம் ஆக வேண்டும். அது வீடாக இருக்கக்கூடாது, ஆனால் ஓர் ஆசிரமம் ஆகவேண்டும். சமயநூல்களிலும் கிரகஸ்த் ஆசிரமம் (இல்லற ஆசிரமம்) பற்றிப் பேசப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்று, அந்த ஆசிரமங்கள் எவையும் இல்லை. ஆசிரமம் என்பது வீட்டை விட வேறானது. எனவே, உங்களின் வீட்டை ஓர் ஆசிரமம் ஆக்குங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதுவே ஆசிரமத்தின் கடமை ஆகும். உங்களின் வீடு, ஓர் ஆலயம் ஆகிவிடும். ஆலயத்தில் உள்ள விக்கிரகம் என்ன செய்யும்? அது ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்தானே? ஒரு விக்கிரகத்தின் முன்னால் செல்லும்போது மக்கள் என்ன சொல்கிறார்கள்? ‘ஆசீர்வாதங்களை அருளுங்கள்!’ அவர்கள் அழுகிறார்கள்: ‘கருணை! கருணை!’ எனவே, நீங்கள் எதைக் கொடுக்க வேண்டும்? ஆசீர்வாதங்கள். இறையன்பை, ஆத்ம உணர்வு அன்பைக் கொடுங்கள். பௌதீகமான அன்பு அல்ல, ஆனால் ஆத்ம உணர்வு அன்பு. இன்று உள்ள அன்பு சுயநலமான அன்பு. உண்மையான இதயபூர்வமான அன்பு எதுவும் இல்லை. அவர்களிடம் சுயநலமான நோக்கம் இருக்குமாயின், அவர்கள் அன்பு செலுத்துவார்கள். சுயநல நோக்கம் எதுவும் இல்லாவிட்டால், அவர்களிடம் அக்கறையற்ற மனோபாவமே இருக்கும். எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆத்ம உணர்வு அன்பைக் கொடுங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். துன்பத்தை எடுக்காதீர்கள், துன்பத்தைக் கொடுக்காதீர்கள். பாருங்கள், நீங்கள் எல்லோரும் ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். (ரிட்ரீட்டுக்காக 250 விஐபி இனர் வந்துள்ளனர்). இங்கே வந்துள்ளவர்கள் எல்லோரும் உங்களின் வீடுகளை ஆசிரமங்களாக ஆக்குவீர்கள்தானே? நீங்கள் அதை அப்படி ஆக்குவீர்கள்தானே? ஆக்குவீர்களா? நிச்சயமாகவா? அல்லது, இதில் நீங்கள் சிறிது பலவீனமாக இருக்கிறீர்களா? என்னதான் நடந்தாலும் தாம் சிறிது சகித்துக் கொள்ள வேண்டும், தாம் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள்…. ஏனென்றால், சகித்துக் கொள்ளும் சக்தி தரும் பழம் மிகவும் இனிமையானது. நீங்கள் சகித்துக் கொள்ளவே வேண்டும். ஆனால் அதன் பழம் மிகவும் இனிமையானது. எனவே, ஒவ்வொரு வீட்டையும் சுவர்க்கம் ஆக்குவீர்கள், நீங்கள் கோவில்களைக் கட்டுவீர்கள், ஆசிரமங்களை உருவாக்குவீர்கள் என்ற உறுதியான சத்தியத்தைச் செய்வீர்கள் என்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். மற்றவர்கள் செய்வதைப் பார்த்து உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள். பாப்தாதா அதன் கணக்கை எடுப்பார். யாராவது ஒருவர் செய்வதைப் பார்த்து உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள். ஆனால் நேர்மையாக உங்களின் கைகளை உயர்த்துங்கள். உங்களின் உண்மையான மனதால் கைகளை உயர்த்துங்கள். உங்களின் மனதின் கையை உயர்த்துங்கள். அச்சா. தாதிகளே, இதற்காக நீங்கள் அவர்களுக்கு என்ன பரிசைக் கொடுப்பீர்கள்? ஆம், கூறுங்கள். தாதி, பல ஆலயங்கள் கட்டப்படும், எனவே, அவர்களுக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்? (அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை இங்கே அழைத்து வரட்டும்). நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தது பரிசு இல்லையே. அது அவர்களுக்கு வேலை கொடுப்பதாகும். (பாபா எதை விரும்புகிறாரோ அது நடக்கும்). நீங்கள் ஒரு பரிசைப் பெறுவீர்கள். இது பெரிய விடயம் அல்ல.... ஆனால், ஓர் ‘ஆனால்’ உள்ளது. நீங்கள் இங்கிருந்து போகும்போது, உங்களின் தாரணையினூடாக சுய மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்தின் பின்னர், உங்களின் பெறுபேற்றை எழுதுங்கள். ஒரு மாதத்திற்கு எந்தவொரு சூழ்நிலையிலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் அல்லது துன்பத்தை எடுத்துக் கொள்ளாமல் இருந்தவர்கள், மிக நல்லதொரு பரிசைப் பெறுவார்கள். உங்களால் வர முடிந்தால் அதற்குப் பாராட்டுக்கள். உங்களால் முடியாவிட்டால், அந்தப் பரிசு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

பாப்தாதா இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் குழந்தைகள் எல்லோரிடம் இருந்தும் நினைவுகளைப் பெற்றுள்ளார். நீங்கள் அவற்றை தொலைபேசி, கடிதம் அல்லது உங்களின் இதயபூர்வமாக அனுப்பி இருந்தாலும் அதற்குப் பிரதிபலனாக பாப்தாதா பாரதத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் எல்லோருக்கும் ஆசீர்வாதங்களையும் பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்.

இறையன்பிற்கான உரிமை உள்ள எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியுள்ள எங்கும் உள்ள மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும் தடைகளில் இருந்தும் பாவ எண்ணங்களில் இருந்தும் விடுபட்டு இருப்பவர்களுக்கும் அத்துடன் வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டு இருப்பவர்களுக்கும் சுய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் மற்றவர்களும் தங்களை மாற்றுவதற்குத் தூண்டுவதற்கான ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பறக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் நேர்மையான இதயத்துடன் தமது செய்திகளை பாப்தாதாவிற்கு வழங்குகின்ற நேர்மையான இதயங்களைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் ரூபத்தில், பாபாவின் பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும், அத்துடன் தந்தை, ஆசிரியர், சற்குருவின் ரூபத்தில் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அலைகின்ற ஆத்மாக்களுக்கு அவர்களின் மிகச்சரியான இலக்கைக் காட்டுகின்ற உயிர்வாழும் வெளிச்சம் மற்றும் சக்தி வீடு ஆகுவீர்களாக.

அலைகின்ற ஓர் ஆத்மாவிற்கு அவரின் மிகச்சரியான இலக்கைக் காட்டுவதற்கு, ஓர் உயிர்வாழுகின்ற ஒளி மற்றும் சக்தி வீடு ஆகுங்கள். இதற்கு, இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள். 1) ஒவ்வோர் ஆத்மாவின் ஆசையையும் இனங்காணுங்கள். எப்படி ஒரு நல்ல வைத்தியர் யாராவது ஒருவரின் நாடியைப் பிடித்து அறிவது எப்படி என அறிவாரோ, அதேபோல், சதா உங்களின் வேறுபிரித்தறியும் சக்தியைப் பயன்படுத்துங்கள். 2) சதா சகல பொக்கிஷங்களின் அனுபவத்தையும் உங்களுடன் வைத்திருங்கள். எப்போதும் மனிதர்களுக்கு எதையும் கூறுகின்ற இலட்சியத்தை அன்றி, சகல உறவுமுறைகளினதும் சகல சக்திகளினதும் அனுபவத்தைக் கொடுக்கின்ற இலட்சியத்தை வைத்திருங்கள்.

சுலோகம்:
மற்றவர்களைத் திருத்துவதற்குப் பதிலாக, தந்தையுடன் நல்லதோர் இணைப்பைக் கொண்டிருங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

சதா உங்களின் ஆதியான, ஆசீர்வதிக்கப்பட்ட ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அப்போது தூய்மை இன்மையின் சகல சுவடுகளும் மறதியும் முடிந்துவிடும். இப்போது, தூய்மை இன்மைக்கும் மறதிக்குமான காரணங்களையே அறியாதவர் ஆகுங்கள். ஏனென்றால், இந்த ரூபங்களும் சம்ஸ்காரங்களும் உங்களுடையவை அல்ல. ஆனால் அவை உங்களின் சென்ற பிறவிக்கு உரியவை. நீங்கள் இப்போது பிராமணர்கள். ஆனால் அந்த சம்ஸ்காரங்களும் அந்த ரூபமும் சூத்திரர்களுக்கு உரியவை. உங்களின் ரூபத்தையும் சம்ஸ்காரங்களையும் வேறொருவருக்கு உரியவை என அனுபவம் செய்தல், அன்பாகவும் பற்றற்றவராகவும் இருத்தல் எனப்படுகிறது.