25.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குப் புதிய உலகிற்காக இராஜயோகம் கற்பிக்கின்றார். ஆகவே, இப்பழைய உலகம் நிச்சயமாக அழியப்போகின்றது.
கேள்வி:
பேறுகள் எதையும் தராத எந்தச் சிறந்த பழக்கத்தை மனிதர்கள் கொண்டுள்ளனர்?பதில்:
ஏதாவது நிகழும்போது மாத்திரமே கடவுளை நினைவுசெய்யும் பழக்கம் மனிதர்களிடம் உள்ளது. அதன் பின்னர் அவர்கள் “ஓ கடவுளே!” எனக் கூறுகிறார்கள். அவர்கள் ஒரு நீள்கோள உருவத்தைச் சிந்திக்கிறார்கள், ஆனால் அவர்கள் அவரை உண்மையாக இனங்கண்டு கொள்ளாததால், அவர்களுக்குப் பேறு எதுவும் கிடைப்பதில்லை. பின்னர், அவர் சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுப்பதாகவும், அனைத்தையும் அவரே கொடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இப்படிக் கூறுவதில்லை.ஓம் சாந்தி.
தந்தை படைப்பவர் எனவும் அழைக்கப்படுகிறார். எதைப் படைப்பவர்? அவரே புதிய உலகைப் படைப்பவர் ஆவார். அந்தப் புதிய உலகம் சந்தோஷ தாமமாகிய சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. மக்கள் இப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களுக்குப் புரிந்துணர்வு இல்லை. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் ஓர் ஆலயத்தையும் “சுக்தாம்” (சந்தோஷ தாமம்) என அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், அது ஒரு சிறிய ஆலயமாகும். ஸ்ரீகிருஷ்ணர் உலக அதிபதியாக இருந்தார். அது, ஓர் எல்லையற்ற அதிபதியாக இருந்தவரை, அவர்கள் ஓர் எல்லைக்குட்பட்ட அதிபதியாக்கி விட்டதைப் போன்று உள்ளது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் சிறிய ஆலயத்தை “சந்தோஷ தாமம்” என அழைக்கிறார்கள். அவர் உலக அதிபதியாக இருந்தார் என்பதும் அவர் பாரதத்தில் வசித்தார் என்பதும் அவர்கள் புத்தியில் புகுவதில்லை. நீங்களும் முன்னர் எதையும் அறிந்திருக்கவில்லை. தந்தை அனைத்தையும் அறிவார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் யார் என உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. சிவனே அதிமேலான கடவுள் ஆவார். அச்சா, பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வந்தார்? அவரும் ஒரு மனிதரே ஆவார். நிச்சயமாகப் பிரஜாபிதா பிரம்மா இங்கேயே இருக்க வேண்டும். இங்கே அவர் மூலமாகவே பிராமணர்கள் உருவாக்கப்பட வேண்டும். பிரஜாபிதா (மக்களின் தந்தை) என்றால் குழந்தைகளை வாய் மூலமாகத் தத்தெடுப்பவர் என அர்த்தம். நீங்கள் வாய்வழித் தோன்றல்களாகிய குழந்தைகள் ஆவீர்கள். தந்தை எவ்வாறு பிரம்மாவைத் தனக்குரியவர் ஆக்கி, வாய்வழித் தோன்றல் குழந்தைகளாகிய உங்களை அவர் மூலம் படைத்தார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் பிரம்மாவில் பிரவேசித்து, “இவர் என்னுடைய குழந்தை” எனக் கூறினார். அவர் எவ்வாறு அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டார் என நீங்கள் அறிவீர்கள். அவர் எவ்வாறு படைக்கப்பட்டார் என்பது வேறு எவருக்கும் தெரியாது. பரமாத்மா பரமதந்தை அதிமேலானவராக இருப்பதைப் பற்றிய புகழை அவர்கள் பாடுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தையே அதிமேலானவர் என்பது எவருடைய புத்தியிலும் புகுவதில்லை. அவரே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தையாவார். அவருடைய ரூபமும் ஒளிப்புள்ளி ஆகும். அவரிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் உள்ளது. இப்பொழுதே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். முன்னர், உங்களிடம் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி எவருக்குமே எதுவும் தெரியாது. ஆகவே, நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது நீங்கள் விவேகிகள் ஆகியுள்ளீர்கள். தந்தையே ஞானக்கடல் என நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே அவரால் இந்த ஞானத்தைக் கொடுத்து உங்களுக்குக் கற்பிக்க முடிகின்றது. இந்த இராஜயோகம் சத்தியயுகத்து புதிய உலகிற்கானதாகும். ஆகவே, நிச்சயமாக இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த மகாபாரத யுத்தம் உள்ளது. அரைக் கல்பமாக, நீங்கள் பக்தி மார்க்கத்துச் சமய நூல்களைக் கற்று வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தை கூறுவதை நேரடியாகச் செவிமடுக்கிறீர்கள். தந்தை அமர்ந்திருந்து சமய நூல்களை உரத்து வாசிப்பதில்லை. மந்திரங்களை ஓதுதல், தவம் செய்தல், சமய நூல்களைக் கற்றல் அனைத்தும் பக்தி ஆகும். பக்தர்கள் தங்கள் பக்தியின் பலனை வேண்டுகிறார்கள், ஏனெனில் கடவுளைச் சந்திக்கவே அவர்கள் அம்முயற்சியைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், இந்த ஞானத்தின் மூலமாக மாத்திரமே சத்கதி இருக்க முடியும். இந்த ஞானமும் பக்தியும் ஒரே சமயத்தில் தொடர முடியாது. இப்பொழுது பக்தியின் இராச்சியமாகும். அனைவரும் பக்தர்கள் ஆவர். நிச்சயமாக அனைவருடைய வாயிலிருந்தும் “ஓ தந்தையாகிய கடவுளே!” என்பது வெளிப்படுகிறது. தான் ஒரு சின்னஞ்சிறிய புள்ளி என்ற தனது அறிமுகத்தைத் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நான் மாத்திரமே ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றேன். புள்ளியான என்னில் இந்த ஞானம் முழுவதும் அமிழ்ந்துள்ளது. இந்த ஞானம் ஆத்மாவில் உள்ளது. அவர் பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவரே பரமாத்மா, அதாவது அவரே அதிமேலானவர் என்பது அதன் அர்த்தம். தூய்மையாக்குபவராகிய தந்தை மாத்திரமே பரமன் ஆவார். மக்கள் “ஓ கடவுளே” எனக் கூறும்பொழுது, அவர்கள் நீள்கோள வடிவமான சிவலிங்கத்தை நினைவு செய்கிறார்கள். அதுவும் மிகச்சரியாக நினைவு செய்யப்படவில்லை. அது அவர்கள் கடவுளை நினைவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டுள்ளதைப் போன்றுள்ளது. கடவுள் சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதைக் கூறுவதில்லை. தந்தை சந்தோஷத்தை அருள்பவர் என நீங்கள் அறிவீர்கள். சந்தோஷ தாமம் சத்திய யுகத்திலேயே இருந்தது. அங்கே துன்பத்தின் சுவடே இருக்கவில்லை. இந்தக்கலியுகத்தில், துன்பம் மாத்திரமே உள்ளது. இங்கே சந்தோஷத்தின் சுவடே கிடையாது. அதிமேலான கடவுளே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். தாங்கள் அனைவரும் சகோதரர்கள் என அவர்கள் கூறினாலும், ஆத்மாக்களின் தந்தையைப் பற்றி அவர்களில் எவரும் அறியமாட்டார்கள். அனைவரும் நிச்சயமாக ஒரே தந்தையின் குழந்தைகள் ஆவர். பின்னர் சிலர் அவர் சர்வவியாபி என்றும், அவர் உங்களிலும் இருக்கிறார், என்னிலும் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஆ! ஆனால் நீங்கள் ஓர் ஆத்மா ஆவீர்கள். அது உங்கள் சரீரமாகும். ஆகவே, எவ்வாறு அங்கே மூன்றாவது விடயம் இருக்க முடியும்? ஓர் ஆத்மாவை பரமாத்மா என்று அழைக்க முடியாது. ஓர் உயிர் வாழும் ஆத்மா (ஜீவாத்மா) எனக் கூறப்படுகிறது. உயிர்வாழும் பரமாத்மா எனக் கூறப்படுவதில்லை. அவ்வாறாயின், எவ்வாறு பரமாத்மா சர்வவியாபியாக இருக்கமுடியும்? தந்தை சர்வவியாபியாக இருந்திருப்பின், அது தந்தைத்துவம் ஆகும். ஒரு தந்தை தனது ஆஸ்தியை ஒரு தந்தையிடமிருந்து பெறுவதில்லை. குழந்தைகளே தங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். எவ்வாறு அனைவரும் தந்தையாக இருக்க முடியும்? அத்தகையதொரு சிறிய விடயம்கூட எவராலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை. இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, 5000 வருடங்களுக்கு முன்னர் நான் உங்களை மிகவும் விவேகிகள் ஆக்கினேன்! நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் விவேகிகளாகவும் ஆக்கப்பட்டீர்கள். உங்களை விடவும் விவேகிகளாக வேறு எவரும் இருந்திருக்க முடியாது. இப்பொழுது நீங்கள் பெறுகின்ற புரிந்துணர்வு அங்கே இருக்க மாட்டாது. நீங்கள் மீண்டும் ஒருமுறை வீழ்வீர்கள் என்பதை அங்கு நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அதைப் பற்றி அறிந்திருப்பின், அதே சந்தோஷத்தை நீங்கள் அனுபவம் செய்யமாட்டீர்கள். இந்த ஞானம் பின்னர் மறைந்துவிடும். இந்த நாடகத்தின் ஞானம் இப்பொழுது மாத்திரமே உங்கள் புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய உங்களுக்கு மட்டுமே அதற்கான ஓர் உரிமை உள்ளது. நீங்கள் இப்பொழுது பிராமண குலத்துக்கு உரியவர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய உங்களுடன் மட்டுமே தந்தை இந்த ஞானத்தைப் பேசுகிறார். பின்னர் பிராமணர்களாகிய நீங்கள் அதை ஏனைய அனைவருக்கும் கூறுகிறீர்கள். கடவுள் வந்து சுவர்க்கத்தை ஸ்தாபித்தார் என்பது நினைவுகூரப்படுகிறது. அவர் வந்து இராஜயோகத்தைக் கற்பித்தார். ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் எனப் பாருங்கள். ஸ்ரீகிருஷ்ணர் வைகுந்தத்தின் அதிபதியாக இருந்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், ஆனால் அவர் உலக அதிபதியாகவும் இருந்தார் என்பது அவர்களுடைய புத்தியில் புகுவதில்லை. அது அவருடைய இராச்சியமாக இருந்த பொழுது, வேறு சமயங்கள் இருக்கவில்லை. அவருடைய இராச்சியம் உலகம் முழுவதும் இருந்தது. அது யமுனை நதிக்கரையில் இருந்தது. உங்களுக்கு இவை அனைத்தையும் விளங்கப்படுத்திக் கொண்டிருப்பவர் யார்? கடவுள் பேசுகிறார். வேதங்களையும் சமய நூல்களையும் உரைப்பவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவர். இங்கு, கடவுளே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்பொழுது மனிதர்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சாந்திதாம வாசிகள் ஆகுகிறீர்கள் என்பதும் பின்னர் நீங்கள் கீழே வந்து 21 பிறவிகளுக்கான உங்கள் வெகுமதியை அனுபவம் செய்வீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. உங்கள் எல்லையற்ற பாபாவான சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதில் குழந்தைகளாகிய உங்களுக்குள் சந்தோஷம் பொங்கியெழ வேண்டும். அவர் ஞானக்கடல் ஆவார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்தவர். அத்தகைய பாபா எங்களுக்காக வந்துள்ளதால், உங்களுக்குள் சந்தோஷம் பொங்கியெழ வேண்டும். “பாபா, நான் உங்களை என்னுடைய வாரிசாக ஆக்கியுள்ளேன்” என நீங்கள் பாபாவுக்குக் கூறும்பொழுது, தந்தை அத்தகைய குழந்தைகளிடம் தன்னையே அர்ப்பணிக்கிறார். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: கடவுளே, நீங்கள் வரும்பொழுது, நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன், நான் உங்களை என்னுடைய குழந்தை ஆக்குவேன். இவர் தனது குழந்தைகளையே தன் வாரிசுகளாக ஆக்குகிறார். நீங்கள் எவ்வாறு தந்தையை உங்கள் வாரிசு ஆக்குவீர்கள்? இதுவும் மிகவும் ஆழமானதொரு விடயமாகும். உங்களிடமுள்ள அனைத்தையும் பரிமாற்றம் செய்வது உங்கள் புத்திக்குரிய பணியாகும். ஏழை மக்கள் மிக விரைவில் அனைத்தையும் பரிமாற்றம் செய்கிறார்கள். இந்த ஞானத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்ளாத வரைக்கும் இதை செல்வந்தர்கள் அரிதாகவே செய்கிறார்கள். அவர்களுக்கு அந்தளவு தைரியம் இருப்பதில்லை. ஏழைகள் மிக விரைவாகவே கூறுகின்றனர்: பாபா, நான் உங்களை மாத்திரமே என்னுடைய வாரிசு ஆக்குவேன். என்னிடம் என்ன உள்ளது? அவரை உங்கள் வாரிசாக ஆக்கியதும் உங்கள் சொந்த வாழ்வாதாரத்துக்காக நீங்கள் சம்பாதிக்கவும் வேண்டும். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள். இதைச் செய்வதற்கு அவர் உங்களுக்குப் பல வழிகளைக் கொடுக்கிறார். உங்களில் எவராவது பணத்தைப் பாவச் செயல்களில் செலவழிக்கிறீர்களா எனத் தந்தை அவதானிக்கிறார். உங்கள் பணத்தை, மனிதர்களைப் புண்ணியாத்மாக்கள் ஆக்குவதற்கு நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் ஒழுங்காகச் சேவை செய்து கொண்டிருக்கிறீர்களா? அவர் இவை அனைத்தையும் பரிசோதித்து, பின்னர் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார். கடவுளின் பெயரில் தானம் கொடுப்பதற்கென இவரும் தனது வியாபாரத்திலிருந்து ஒரு பங்கை ஒதுக்குவது வழக்கம். அது மறைமுகமானது. தந்தை இப்பொழுது நேரடியாக வந்துள்ளார். தமது தற்போதைய பிறவியில் செய்யும் அனைத்துக்குமான பலனைக் கடவுள் தங்கள் மறுபிறவியில் தங்களுக்குக் கொடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள். ஒருவர் ஏழையாகவும் சந்தோஷமற்றும் இருக்கும் பொழுது, அவர் தன்னுடைய முன்னைய பிறவியில் அத்தகைய செயல்களைச் செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறார். ஒருவர் நற்செயல்களைப் புரிந்திருந்தால், அவர் சந்தோஷமாக இருக்கிறார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கர்ம தத்துவத்தை விளங்கப்படுத்துகிறார். இராவண இராச்சியத்தில் உங்கள் செயல்கள் அனைத்தும் பாவம் நிறைந்தவையாகவே உள்ளன. சத்திய, திரேதா யுகங்களில் இராவணன் இருப்பதில்லை. ஆகவே, அங்கே உங்கள் செயல்கள் எதுவும் பாவம் நிறைந்தவையாக இருக்காது. இங்கே நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, தற்காலிக சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், அது தற்காலிக சந்தோஷம் ஆதலால், ஏதோவொரு நோய் அல்லது சிக்கல் இருக்கவே செய்கின்றது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது இந்த இராவண இராச்சியம் அழியப்போகின்றது. சிவபாபா இராம இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். எவ்வாறு இந்தச்சக்கரம் சுழல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதம் மீண்டும் ஒருமுறை ஏழையாகிறது. 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதம் சுவர்க்கம் ஆகியது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் ஆரம்பித்தது. அவர்களின் வம்சமே முதலில் இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் ஓர் இளவரசராக இருந்தார். பின்னர் அவர் திருமணம் செய்தபோது, அரசராக முடி சூட்டப்பட்டு ஸ்ரீநாராயணன் எனப் பெயரிடப்பட்டார். இந்த வேளையிலேயே நீங்கள் இதைப் புரிந்துகொள்கிறீர்கள். ஆகவே, நீங்கள் வியப்படைகிறீர்கள். பாபா, நீங்கள் எங்களுக்கு படைப்பவரினதும் படைப்பினதும் முழு ஞானத்தையும் கூறுகிறீர்கள். நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் கற்பித்தல்கள் மிகவும் மேன்மையானவை. நான் உங்களிடம் என்னை அர்ப்பணிக்கின்றேன். நான் எவரையுமன்றி, ஒரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இறுதிவரை கற்கவேண்டும். ஆகவே, நீங்கள் நிச்சயமாக ஆசிரியரையும் நினைவுசெய்ய வேண்டும். ஒரு பாடசாலையில், அவர்கள் தங்கள் ஆசிரியரை நினைவு செய்கிறார்கள், இல்லையா? அந்தப் பாடசாலைகளில் பல ஆசிரியர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்களுக்கு வெவ்வேறு ஆசிரியர்கள் உள்ளார்கள். இங்கே ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர் மிகவும் அன்பானவர் ஆவார். தந்தையும் அன்பானவர், ஆசிரியரும் அன்பானவர் ஆவார். முன்னர், பக்தி மார்க்கத்தில், அவர் குருட்டு நம்பிக்கையுடன் நினைவு செய்யப்பட்டார். இப்பொழுது, தந்தை உங்களுக்கு நேரடியாகக் கற்பிக்கின்றார். ஆகவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களை மறந்து விடுகிறேன். ஏன் என்னுடைய புத்தி உங்களை நினைவுசெய்வதில்லை என்பதை நான் அறியேன். “கடவுளே, உங்கள் வழிகளும் முறைகளும் தனித்துவமானவை” என்று கூறப்பட்டுள்ளது. பாபா, முக்திக்கும் ஜீவன் முக்திக்குமான உங்கள் வழிமுறைகள் மிகவும் அற்புதமானவை! அத்தகையதொரு தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஒரு மனைவி தன் கணவன் பற்றிப் புகழ் பாடுகிறாள். அவள் கூறுகிறாள்: அவர் மிகவும் நல்லவர், அவரிடம் இன்ன இன்ன சொத்து உள்ளது. உள்ளே அவளிடம் அந்தச் சந்தோஷம் உள்ளது. அவர் கணவன்மார்களுக்கு எல்லாம் கணவர் ஆவார். அவரே தந்தையர்க்கு எல்லாம் தந்தை ஆவார். நாங்கள் அவரிடமிருந்து அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகிறோம். ஏனைய அனைவரிடம் இருந்தும் நீங்கள் துன்பத்தையே பெறுகிறீர்கள். ஆம், நீங்கள் ஓர் ஆசிரியிடமிருந்து சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் கற்பதால், ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியை அடையும் பொழுது, நீங்கள் ஒரு குருவை ஏற்றுக்கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியில் நான் வந்துள்ளேன். இவர் தன்னுடைய ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கிறார், நானும் எனது ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கிறேன். என்னுடைய குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கிறீர்கள். தந்தை, ஆசிரியர், குரு - மூவரும் இணைந்துள்ளார்கள். தந்தை ஆசிரியராகிப் பின்னர் குருவாகி எங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த ஒரேயொரு தந்தை மட்டுமே புகழப்படுகிறார். இவ்விடயங்கள் சமயநூல்கள் எவற்றிலும் குறிப்பிடப்படவில்லை. பாபா அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். இதை விட உயர்வான ஞானமும் இல்லை. இதை விட மேலும் ஞானத்துக்கு அவசியமும் இல்லை. இந்த முழு ஞானமும் எங்களிடம் இருக்கும் பொழுது, நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறோம். ஆகவே, வேறு ஞானத்தின் மூலம் நாங்கள் செய்யப்போவது என்ன? குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் இதை வைத்திருந்து, நினைவில் இருந்தாலே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். ஒரு தூய, புண்ணியாத்மா ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாக நினைவில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் யோகத்தைத் துண்டிப்பது மாயையின் தர்மம் ஆகும். இந்த யோகத்திலேயே மாயை தடைகளை உருவாக்குகிறாள். நீங்கள் அவரை மறந்து விடுகிறீர்கள், மாயையின் பல புயல்களும் வருகின்றன. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவரே அனைவரிலும் முன்னணியில் உள்ளார். ஆகவே இவரே அனைத்தையும் முதலில் அனுபவம் செய்கிறார். முதலில் எனக்கு இப்புயல்கள் வந்தாலே, என்னால் உங்கள் அனைவருக்கும் பின்னர் அவை பற்றி விளங்கப்படுத்த முடியும். மாயையின் இந்தப் புயல்கள் வரவே செய்யும். அவை பாபாவிடம் வருகின்றன, அத்துடன் அவை உங்களிடமும் வரும். மாயையின் புயல்கள் எதுவும் இல்லாமலும், உங்கள் யோகம் நிலையானதாகவும் இருந்திருந்தால், நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்திருப்பீர்கள். அந்த நிலையில் உங்களால் இங்கிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, அனைவரும் வீடு திரும்புவார்கள். “சிவனின் திருமண ஊர்வலம்” நினைவுகூரப்பட்டுள்ளது. சிவபாபா வரும்பொழுது மட்டுமே, ஆத்மாக்களாகிய எங்கள் அனைவராலும் வீடு திரும்ப முடியும். அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்லவே சிவபாபா வருகிறார். சத்திய யுகத்தில் அந்தளவு ஆத்மாக்கள் இருக்க மாட்டார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சிவபாபாவை உங்கள் வாரிசு ஆக்கி, உங்களிடமுள்ள அனைத்தையும் பரிமாற்றம் செய்யுங்கள். அவரை உங்கள் வாரிசாக ஆக்கிவிடுவதுடன், நீங்கள் உங்கள் ஜீவனோபாயத்துக்காகச் சம்பாதிக்கவும் வேண்டும். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள். உங்கள் பணத்தை பாவச் செயல்கள் எதற்கும் பயன்படுத்தாதீர்கள்.2. ஞானக்கடலான பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதில் உங்களுக்குள் சந்தோஷம் பொங்கியெழ வேண்டும்! ஒரு தூய, புண்ணியாத்மா ஆகுவதற்கு, நினைவில் நிலைத்திருங்கள். மாயையின் புயல்களுக்குப் பயப்படாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பயமற்ற அதிகார சொரூபமாகி, சத்தியத்தின் அடிப்படையில் ஒரேயொரு தந்தையை வெளிப்படுத்துவீர்களாக.சத்தியமே வெளிப்படுத்தலின் அடிப்படை ஆகும். தந்தையை வெளிப்படுத்துவதற்காக, பயமற்ற, அதிகார சொரூபமாகப் பேசுங்கள். தயக்கத்துடன் அல்ல. பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டவர்கள் எங்கள் எல்லோருடைய தந்தையும் ஒரேயொருவர் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது, அவர் மட்டுமே இந்தப் பணியைச் செய்கிறார், நாங்கள் எல்லோரும் அந்த ஒரேயொருவரின் குழந்தைகள், அவரே உண்மையான ஒரேயொருவர் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது, அந்த வெற்றிக் கொடி ஏற்றப்படும். இந்த நம்பிக்கையுடன், நீங்கள் முக்திதாமத்திற்குத் திரும்பிச் செல்வீர்கள். அதன்பின்னர், நீங்கள் உங்களின் சொந்தப் பாகங்களை நடிப்பதற்காகக் கீழே வரும்போது, ‘இறைவன் ஒருவரே’ என்ற இந்த சம்ஸ்காரம் வெளிப்படும். இதுவே சத்தியயுகத்தின் விழிப்புணர்வு ஆகும்.
சுலோகம்:
எதையாவது சகித்துக் கொள்ளுதல் என்றால் உங்களின் சொந்த சக்தி ரூபத்தை வெளிப்படுத்துவதாகும்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
எப்படி உங்களின் சரீரம் தெளிவாகப் புலப்படுகிறதோ, அதேபோல், உங்களின் ஆத்ம ரூபம் தெளிவாகப் புலப்பட வேண்டும். அதாவது, அது அனுபவம் செய்யப்பட வேண்டும். ஆத்ம உணர்வு ரூபத்தைத் தவிர வேறு எதுவும் உங்களின் நெற்றியில் அதாவது, உங்களின் புத்தியின் விழிப்புணர்விலும் உங்களின் பார்வையிலும் புலப்படக் கூடாது. வேறு எதுவும் உங்களின் விழிப்புணர்வில் வரக்கூடாது. இத்தகைய சதா தபஸ்வி ஆத்மா ஆகுங்கள். அப்போது உங்களால் ஆத்மாக்கள் எல்லோருக்காகவும் தூய, நன்மை செய்யும் எண்ணங்களைக் கொண்டிருக்க முடியும். யாராவது அவரின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களால் உங்களின் முயற்சிகளைப் பரீட்சிப்பதற்குக் கருவி ஆகினாலும் எப்போதும் அவர்களுக்காக நன்மை செய்கின்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள்.