26.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மிக நல்ல சகவாசத்தைக் கொண்டிருங்கள். நீங்கள் தீய சகவாசத்தால் நிறமூட்டப்பட்டால் வீழ்கின்றீர்கள். தீய சகவாசம் புத்தியைச் சீரழிக்கின்றது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எதனையிட்டு உற்சாகமான ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்?

பதில்:
ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சேவை செய்வதற்கான உற்சாகமான ஆர்வத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் உள்ள அனைத்தையும் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கொடுக்கின்ற ஆலோசனை: குழந்தைகளே, இந்தப் பழைய உலக ஆதாரங்கள் அனைத்தில் இருந்தும் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இங்குள்ள எதன் மீதும் பற்று வைக்காதீர்கள். உங்கள் இதயத்தை எதன் மீதும் பற்றச் செய்யாதீர்கள்.

பாடல்:
எங்களை இப் பாவ உலகில் இருந்து, ஓய்வும், சௌகரியமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் சாந்தி.
பாவாத்மாக்களின் உலகமானாலும், அல்லது தூய, புண்ணியாத்மாக்களின் உலகமானாலும், அந்த உலகம் ஆத்மாக்களின் வகைகளையே குறிக்கின்றது. இங்கு துன்பம் மாத்திரமே இருப்பதால் மக்கள் அழைக்கின்றார்கள். தூய, புண்ணியாத்மாக்களின் உலகில் உள்ள எவரும் தங்களை, வேறு எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என அழைப்பதில்லை. உங்களுக்கு இவை அனைத்தையும் கூறுபவர் ஒரு பண்டிதரோ, சந்நியாசியோ அல்லது கல்விமானோ அல்ல என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இவருமே கூறுகின்றார்: முன்னர் நான் இந்த ஞானத்தை அறிந்திருக்கவில்லை. நான் இராமாயணத்தையும் ஏனைய சமயநூல்களையும் அதிகளவு கற்றேன். நான் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். இவரும் (பிரம்மா) செவிமடுக்கின்றார். இது, இப்பொழுது பாவாத்மாக்களின் உலகம். தூய, புண்ணியாத்மாக்களை இட்டு, அவர்கள் வாழ்ந்து பின்னர் சென்று விட்டார்கள் எனக் கூறப்படுகின்றது. மக்கள் அவர்களை வழிபட்ட பின்னர், தத்தமது வீடுகளுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் சிவனையும் வழிபடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் யாரை வழிபடுவீர்கள்? கடவுள் சிவனே அதி மேன்மையானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் கீழ்ப்படிவான தந்தையும் ஆசிரியரும் அத்துடன் கீழ்ப்படிவான குருவும் ஆவார். வேறெந்த ஒரு குருவும் உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்லும் உத்தரவாதத்தைக் கொடுக்கவும் முடியாது அல்லது அவர்களில் எவராலும் தங்களுடன் எவரையும் திரும்ப அழைத்துச் செல்லவும் முடியாது. இப்பொழுது நீங்கள் பாபாவின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் இங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பின்னர் இதனை மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் நேரடியாக அவர் கூறுவதைச் செவிமடுக்கும் பொழுது, மிகவும் களிப்படைகின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: குழந்தைகளே, நன்றாகக் கற்றிடுங்கள். இதில் கவனயீனமாக இருக்காதீர்கள். தீய சகவாசத்தில் அகப்பட்டு விடாதீர்கள். இல்லாவிட்டால், உங்கள் புத்தி மேலும் அதிகமாகச் சீரழிந்து விடும். நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள், நீங்கள் என்ன பாவங்களைச் செய்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. ஆகவே நீங்கள் ஏன் இங்குள்ள கட்டடங்களைப் பற்றி அக்கறைப்பட வேண்டும்? நீங்கள் இந்த உலகில் உள்ள அனைத்தையும் மறக்க வேண்டும், இல்லாவிட்டால் அவை தடைகளை உருவாக்கும். எங்கள் இதயங்கள் இந்தப் பழைய உலகை பற்றிக் கொண்டிருக்கவில்லை, நாங்கள் புதிய உலகிற்குச் சென்று, வைரங்களினாலும் இரத்தினங்களினாலும் எங்கள் மாளிகைகளைக் கட்டவுள்ளோம். நீங்கள் இன்னமும் பணத்தையோ அல்லது இந்த இடத்தில் உள்ள வேறு எதனையாவது விரும்பினால், நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கும் நேரத்தில், அவற்றில் இன்னமும் பற்றைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் “என்னுடையது, என்னுடையது” எனக் கூறினால் அதுவே இறுதியிலும் உங்கள் முன் தோன்றும். இங்கிருக்கும் அனைத்துமே அழிக்கப்பட வேண்டும், பின்னர் நாங்கள் எங்கள் இராச்சியத்துக்குள் செல்வோம். எனவே எங்கள் இதயங்கள் ஏன் இந்த உலகில் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்? அங்கே பெருமளவு சந்தோஷம் உள்ளது. அதன் பெயரே சுவர்க்கமாகும். நாங்கள் இப்போது எங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவுள்ளோம். இந்த வீடு இராவணனுடையது, எங்களுடையது அல்ல. நாங்கள் இதிலிருந்து விடுதலை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பழைய உலகின் ஆதாரங்களில் இருந்து எங்களை விடுவிப்பதற்காக பாபா எங்களைத் தூண்டுகின்றார். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இங்கிருக்கும் எதனிலும் நீங்கள் பற்று வைக்கக்கூடாது. உங்கள் வயிற்றுக்கு எதுவும் அதிகமாகத் தேவைப்படுவது இல்லை. பயனற்ற விடயங்களுக்காக அதிகளவு செலவு செய்யப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதையிட்டு மிகுந்த உற்சாகம் கொண்டிருக்க வேண்டும். பல குழந்தைகள் கிராமங்களில் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சேவை செய்வதில் ஆர்வம் இல்லாதவர்களினால் என்ன பயன்? தந்தை எவ்வாறோ, அவ்வாறே குழந்தைகளும் இருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்: தந்தையை நினைவுசெய்து, அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுங்கள். பாபா, அவருடைய சேவைக்குச் செல்வதில் ஆர்வமுள்ள குழந்தைகளை உற்சாகப்படுத்துகின்றார். தந்தை உங்களுக்குச் சேவை செய்வதற்காக வந்துள்ளார். அனைத்தும் சேவைக்காகவே உள்ளது. நீங்கள் பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஒரேயொரு தந்தையே உள்ளார். அவர் பாரதத்தில் பிரவேசிக்கின்றார். பாரதத்தில் தேவர்களின் ஆட்சி இருந்தது. இலக்ஷ்மி நாராயணனதும், அதன்பின்னர் இராமர் சீதையினதும் இராச்சியம் இருந்ததென்பது நேற்றைய விடயமே ஆகும். பின்னர் அவர்கள் பாவப்பாதையில் வீழ்ந்து விடுகின்றார்கள். இராவணனின் இராச்சியம் ஆரம்பித்ததும், அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழ் இறங்கினார்கள். இப்பொழுது, மேலேறும் ஸ்திதி என்பது ஒரு விநாடிக்குரிய விடயம். ஒன்று உண்மையான அன்பும், மற்றையது போலியான அன்பும் ஆகும். உங்களை ஓர் ஆத்மா என நீங்கள் கருதும்பொழுது மாத்திரமே, தந்தையின் மீது உண்மையான அன்பு இருக்க முடியும். இந்த உலகில் குழந்தைகளின் அன்பு போலியானது. இந்த உலகம் அழிக்கப்படவுள்ளது. சேவை செய்பவர்கள் என்றுமே பட்டினியிருக்க மாட்டார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். உங்களின் இறை பணி மிகவும் இலகுவானது. இந்தத் தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. கிறிஸ்து வந்து கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபித்தார், பின்னர் அந்தச் சமயம் வளர்ந்தது. சமய ஸ்தாபகர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக மக்கள் வீழ்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும். நாங்கள் இராவண இராச்சியத்தில் அரைக்கல்பத்துக்குத் தந்தையை மறந்தோம். அவர் இப்பொழுது வந்து எங்களை விழித்தெழச் செய்கின்றார். பாபா கூறுகின்றார்: நாடகத்திற்கேற்ப நீங்கள் விழவேண்டும்; அது உங்கள் தவறல்ல. இதுவே இராவணனின் இராச்சியத்தில் உலகின் நிலையாகும். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சியத்தைப் பெற வேண்டும். நான் உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. முதலாவதாக, வெளியிடங்களில் சமைத்த அசுத்தமான உணவை உண்ணாதீர்கள், சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! இந்த நாடகச் சக்கரம் தொடர்ந்தும் மீண்டும் இடம்பெறும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். அனைத்துக்கும் முதலில், தந்தையின் நினைவு இருக்க வேண்டும். சேவைக்காக, அவர்களுடன் ஒன்றிணைந்து, அவர்களை உங்கள் சகபாடிகள் ஆக்குங்கள். தாய்மார்களாகிய நீங்களும் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும். இதில் பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்குப் படங்கள் போன்ற அனைத்தும் கொடுக்கப்படும். உங்களால் பெருமளவு சேவை செய்யமுடியும். நீங்கள் அவர்களை விட்டுச் செல்லும்போது, அவர்கள் கேட்கிறார்கள்: நீங்கள் சென்று விட்டால், யார் எங்களுக்குக் கற்பிப்பார்கள்? அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் சேவை செய்யத் தயாராக இருக்கின்றோம். இருப்பிடம் போன்றவற்றை ஒழுங்கு செய்தால், பலருக்கு நீங்கள் நன்மை அளிப்பதற்கான கருவிகள் ஆகுவீர்கள். பாபா உங்களுக்குச் சேவை செய்வதற்கு ஊக்கம் அளிக்கின்றார். குழந்தைகள் தைரியத்தைக் கொண்டிருக்கும் பொழுது, சேவை அதிகரிக்கின்றது. இது பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு நீடித்த பின்னர் முடிவடைகின்ற, ஓர் ஒன்றுகூடல் அல்ல. இது சதாகாலமும் தொடர்கின்ற, ஓர் ஆன்மீக ஒன்றுகூடலாகும். பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு இந்த உண்மையான ஒன்றுகூடலில் (மேலா) இடம்பெறுகின்றது. இந்தச் சந்திப்பு இப்பொழுதே இடம்பெறுகிறது. சேவை பூர்த்தி அடையும் பொழுது, இந்தச் சந்திப்பு முடிவடையும். நாடகத்திற்கேற்ப, குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையிடம் உள்ள ஞானம், குழந்தைகளாகிய உங்களின் புத்தியிலும் உள்ளது. அதிமேலான தந்தையினால் நாங்கள் மிக மேன்மையானவர்கள் ஆக்கப்படுகின்றோம். இவ்வாறு உங்களுடன் பேசுங்கள். உங்கள் மத்தியில் கருத்தரங்குகளை நடத்துங்கள். பாபாவிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, உங்களைச் சேவையில் ஈடுபடுத்துங்கள். உங்களுக்கு உதவி தேவையானால், பெரிய இதயமுடைய பாபா இங்கே அமர்ந்திருக்கின்றார். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கவலைப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. வேறு எவ்வாறு ஸ்தாபனை இடம்பெறும்? இரண்டாவதாக, எதனையேனும் செய்பவர்கள், தாங்கள் செய்தவற்றின் வெகுமதியைப் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கல்லுப்புத்தி உடையவர்களில் இருந்து, வைரம் போன்ற புத்தி உடையவர்களாக மாறுகின்றீர்கள். தந்தை இந்த ஞானத்தின் மூலம் உங்களை மிகவும் நேராக்குகிறார் (தர்மம் நிறைந்தவர்). ஆனால் மாயை உங்கள் மூக்கினால் பிடித்து உங்களைத் திசை திருப்புகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கும் சகவாசம் மிக நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் தீய சகவாசத்தால் நிறமூட்டப்படும்போது வீழ்ந்து விடுகின்றீர்கள். நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பதை பாபா தடைசெய்கின்றார். திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களால், தூய்மை அற்றவர்கள் ஆகுவதை தடுக்க முடியாது. இவ்வுலகில் உள்ள அனைவரின் செயற்பாடுகளும் தீயதாகும். அதன்பெயரே விலைமாதர் இல்லம். தந்தை சிவாலயத்தை ஸ்தாபிக்கின்றார். இந்த விலைமாதர் இல்லம் தீக்கிரையாக்கப்பட வேண்டும். இந்த உலகில் உள்ள அனைவரும் கும்பகர்ணனின் அசுர உறக்கத்தில் உறங்குகின்றார்கள். நீங்கள் இப்பொழுது சிவாலயத்திற்குச் செல்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் நாங்களும் குரங்குகள் போல் இருந்தோம். இராமாயணத்திலும் இந்தக்கதை உள்ளது. நீங்கள் இப்பொழுது தந்தையின் உதவியாளர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் சொந்தச் சக்தியினால், உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இராவணின் இந்த இராச்சியம் அழிக்கப்படவுள்ளது. பாபா தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குப் பல யுக்திகளைக் காட்டுகின்றார். நீங்கள் எவருக்கேனும் இந்த ஞான தானம் செய்யாவிட்டால், எவ்வாறு நீங்கள் பலனைப் பெறுவீர்கள்? 10 முதல் 15 பேருக்குப் பாதையைக் காட்டிய பினனர் மாத்திரமே உணவருந்த வேண்டும். அனைத்துக்கும் முதலில் ஒரு புண்ணியச் செயலைச் செய்து விட்டு பின்னர் இங்கே வாருங்கள். இதில் மாத்திரமே நன்மை உள்ளது. சரீரதாரி எவரையும் நினைவுசெய்யாதீர்கள். இந்த உலகம் தூய்மையற்றது. தூய்மை ஆக்குபவராகிய, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்குக் உங்களை இட்டுச் செல்லும். ஆகவே, முதலில் இந்தச் செய்தியை எவருக்கேனும் கொடுத்ததன் பின்னர், திரும்பி வந்து உணவருந்துங்கள். தந்தையை நினைவுசெய்பவர்கள், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பதை அனைவருக்கும் தொடர்ந்தும் கூறுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு: 17/03/1968

நீங்கள் சொற்பொழிவு ஆற்ற விரும்பும் போதெல்லாம் மூன்று அல்லது நான்கு முறை மற்றவர்களுடன் ஒன்றுசேர்ந்து ஒத்திகை பார்க்க வேண்டும். மெருகூட்டுவதனாலும், கருத்துக்களைச் சேர்ப்பதனாலும் குறிப்புக்களைத் தயார்செய்து நல்லதொரு சொற்பொழிவை நீங்கள் ஆற்றுவீர்கள். பிரதான தலைப்பில் நீங்கள் வெற்றி அடைந்தால் (கீதையின் கடவுள் யார்) அனைத்திலுமே பின்னர் வெற்றி அடைவீர்கள். இதற்கான மாநாடும் இடம்பெறும், இல்லையா? விருட்சம் நிச்சயமாக வளரும் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். மாயையின் புயல்களை அனைவரும் அனுபவம் செய்வார்கள். பொதுவாக, குழந்தைகள் எழுதுகிறார்கள்: பாபா, நான் காம விகாரத்தினால் அறையப்பட்டேன். இது நீங்கள் உழைத்துள்ள வருமானம் அனைத்தையும் முற்றிலுமாக இழப்பது என்று அறியப்படுகின்றது. நீங்கள் கோபம் அடைந்தால், அதில் ஓரளவு இழப்பு உள்ளது. ஆனால் இதனையிட்டு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: காம விகாரத்தை வெற்றி கொண்டால், உலகை வெற்றி கொள்பவராக முடியும். நீங்கள் காமத்தினால் தோற்கடிக்கப்பட்டால், அனைத்தினாலும் தோற்கடிக்கப்படுகின்றீர்கள். காமத்தினால் தோல்வி அடைபவர்கள் தங்கள் வருமானம் அனைத்தையும் இழந்து, தண்டனையையும் பெறுகின்றார்கள். இலக்கு மிக உயர்ந்தது, எனவே, நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 5000 வருடங்களுக்கு முன்னரும் நீங்கள் இராச்சியத்தைப் பெற்றுள்ளீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தேவ இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்தக் கல்வியின் மூலம் நாங்கள் அந்த இராச்சியத்திற்குள் செல்கின்றோம். அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியினாலும், உங்கள் தாரணையினாலும் மாத்திரமே நீங்கள் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுவீர்கள். பதிவேடும் தேவைப்படுகின்றது. அதன்மூலம் நீங்கள் எத்தனை பேரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கியுள்ளீர்கள் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். நீங்கள் அதிகளவு கிரகித்தால், அதற்கேற்ப இனிமையானவர் ஆகுவீர்கள். குழந்தைகள் மிகவும் அன்பானவராக இருக்க வேண்டும். முக்திக்குச் செல்வதற்காக மக்கள் பெருமளவு முயற்சி செய்த, அந்த நாளும் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு வந்துவிட்டது, தந்தை அனைவருக்கும் ஒரேநேரத்தில் முக்தியையும் ஜீவன்முக்தியையும் கொடுக்கின்றார். தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்தவர்கள் மாத்திரமே ஜீவன்முக்தியைப் பெறுவார்கள். ஏனைய அனைவரும் முக்திக்குள் செல்வார்கள். உங்களால் மிகச்சரியான கணிப்பைச் செய்யமுடியாது. சிலர் பின்தங்கி, விநாசத்தின் காட்சிகளைக் காண்பார்கள். இந்த அழகிய காலங்களை அவர்கள் சாட்சியாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் நினைவில் மட்டுமே அமர்ந்திருந்தால், அனைத்தும் நிறைவேற்றப்படுவதுடன் ஒரு வீட்டையும் நீங்கள் பெறுவீர்கள் என்றில்லை. இல்லை. நாடகத்தில் எது உள்ளதோ, அதுவே நிகழும். எனவே நீங்கள் எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நாடகத்தில் என்ன நிச்சயிக்கப்பட்டதோ, அதுவே நிகழும். நீங்கள் மேலும் முன்னேறுகையில், உங்கள் மனோநிலை சகோதரத்துவத்துக்கு உரியதாக ஆகும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களால் அந்த மனோநிலையைப் பேண முடியும். நாங்கள் சரீரமற்றவர்களாகவே வந்தோம். நாங்கள், இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தையும் பூர்த்திசெய்து விட்டோம். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியில் வீடு திரும்ப வேண்டும். உண்மையில், நீங்கள் எவருடனும் சமயநூல்களைப் பற்றி விவாதம் செய்யக்கூடாது. நினைவு செய்வதுடன், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் புரிந்துணர்வையும் கொண்டிருப்பதே பிரதான விடயமாகும். நீங்கள் பூகோள ஆட்சியாளர் ஆக வேண்டும். நீங்கள் இந்தச் சக்கரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு வினாடியில் ஜீவன்முக்தியைப் பெறுவது என நினைவுகூரப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் வியப்படைய வேண்டும். பக்தி அரைச் சக்கரத்திற்கு நீடிக்கின்றது, அந்த நேரத்தில் ஞானம் இருப்பதில்லை. தந்தையிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. அதனை நீங்களும் தந்தையிடம் இருந்தே அறிந்துகொள்ள வேண்டும். இந்தத் தந்தை முற்றிலும் வேறுபட்டவர். இதனாலேயே பலமில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே வெளித்தோன்றுகிறார்கள். இவ்வாறு அந்த ஆசிரியர்கள் கூற மாட்டார்கள். ஆனால் அந்த ஒரேயொருவர் கூறுகின்றார்: நானே தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவேன். எனவே, மக்கள் இதனைக் கேட்கும்பொழுது வியப்பு அடைகின்றார்கள். பாரதம் “தாய் நாடு” எனக் கூறப்படுகின்றது, ஏனெனில் அம்பாள் என்ற பெயர் மிகவும் பிரபல்யமானது. அம்பாளின் பெயரால் பல விழாக்கள் உள்ளன. “அம்பாள்” என்ற பெயர் மிகவும் இனிமையானது. சிறு குழந்தைகளும் கூட தங்கள் தாயை அதிகளவில் நேசிக்கின்றார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவள் உணவூட்டி, அவர்களைப் பராமரிக்கின்றாள். இப்பொழுது உங்களுக்கும் அம்பாளின் பாபா தேவைப்படுகின்றார். அந்தப் புதல்வியும் தத்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கணவரும் இல்லை. இது புதியவிடயம். பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாகத் அவரைத் தத்தெடுத்திருப்பார். தந்தை மாத்திரமே வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பல மேலாக்கள் இடம்பெறுகின்றன, குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதனால் அங்கே அதிகளவில் வழிபாடு உள்ளது. மம்மா அதிகளவு மாணவர்களுக்கு கற்பித்த அளவிற்கு வேறு எவராலும் கற்பிக்க முடியாது. மம்மா மிகவும் பிரசித்தி பெற்றவர், பல மேலாக்களும் உள்ளன. தந்தையே வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்தினார் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். இப்பொழுது உங்களுக்கு தந்தையின் வீட்டைப் பற்றித் தெரியும். நீங்கள் தந்தையையும் வீட்டையும் நேசிக்கின்றீர்கள். இந்த நேரத்திலேயே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இக்கல்வி மூலம் நீங்கள் அதிக வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். எனவே நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். தந்தை வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பது உலகத்தவர்களுக்குத் தெரியாது. தந்தை மாத்திரமே வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புதிய விடயங்கள் அனைத்தையும் கூறுகின்றார். எல்லையற்ற கல்வியின் மூலம் புதிய உலகம் உருவாக்கப்படுகின்றது. பழைய உலகில் நீங்கள் ஆர்வமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தின் சந்தோஷம் உள்ளது. நீங்கள் தந்தையையும், வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். அனைவருக்கும் தந்தை கூறுவார்: குழந்தைகளே, நான் உங்களுக்கு முக்தியும், ஜீவன்முக்தியும் எனும் உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பதற்கே வந்துள்ளேன். எனவே, நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? நான் உங்களின் எல்லையற்ற தந்தை ஆவேன், நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வந்துள்ளேன். எனவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற மாட்டீர்களா? அன்றேல், பெரும் இழப்பு ஏற்படும். இங்குள்ள இழப்பு எல்லையற்றது. தந்தையின் கரத்தை நீங்கள் ஒருமுறை விட்டாலும் உங்கள் வருமானத்தில் ஓர் இழப்பு ஏற்படும். அச்சா. இரவு வணக்கம். ஓம் சாந்தி.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகிற்குரிய அனைத்தையும் மறந்து விடுங்கள். தந்தையைப் போன்று கீழ்ப்படிவானவராகி, சேவை செய்யுங்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்.

2. இந்தத் தூய்மையற்ற உலகின் தீய சகவாசத்தில் இருந்து, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களில் தயாரித்த அசுத்தமான உணவை உண்ணாதீர்கள். திரைப்படங்களைப் பார்க்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் திரிகாலதரிசி ஸ்திதியால் உங்களின் வீணான கணக்கை முடித்து, அதனால் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

உங்களின் திரிகாலதரிசி ஸ்திதியில் ஸ்திரமாக இருத்தல் என்றால், எந்தவோர் எண்ணத்தை உருவாக்க முன்னரும் எந்தவொரு வார்த்தையைப் பேச முன்னரும் அல்லது எந்தவொரு செயலைச் செய்ய முன்னரும் அது வீணானதா அல்லது சக்திவாய்ந்ததா என உங்களையே சோதித்துப் பார்ப்பதாகும். ஒரு விநாடி வீணானவையும் பலமில்லியன்கள் இழப்பை உருவாக்க முடியும். ஆனால் ஒரு விநாடி சக்திவாய்ந்த எண்ணத்தால் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரிக்க முடியும். ஒரு விநாடி வீணானவை உங்களின் வருமானத்தில் பாரிய இழப்பை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் சம்பாதித்த வருமானமும் மறைந்து போகும். இதனாலேயே, காலத்தின் ஒரு விடயத்தை மட்டும் கருத்தில் கொண்டு எந்தவொரு செயலையும் செய்யாதீர்கள். ஆனால், உங்களின் திரிகாலதரிசி ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். அப்போது வீணானவை அனைத்தும் முடிந்துவிடும். நீங்கள் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
மதிப்பு, கௌரவம், வசதிகள் என்பவற்றைத் துறப்பதே மகத்தான துறவறம் ஆகும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

ஆத்மாவும் சரீரமும் இரண்டு வெவ்வேறு விடயங்கள். எவ்வாறாயினும், தமது அறியாமையால் மக்கள் இந்த இரண்டையும் குழப்பி விட்டார்கள். தமக்கு உரியதை (சரீரம்) தாங்கள் (ஆத்மா) எனக் கருதுகிறார்கள். இந்தத் தவறால், அவர்கள் அதிகளவு துயரத்தையும் துன்பத்தையும் அமைதி இன்மையையும் அனுபவம் செய்கிறார்கள். அதேபோல், தூய்மையின்மை மற்றும் மறதியின் சம்ஸ்காரங்களை உங்களின் சம்ஸ்காரங்கள் எனக் கருதுவதன் மூலம் - அவை உண்மையில் பிராமண சம்ஸ்காரங்கள் அல்ல, ஆனால் சூத்திர சம்ஸ்காரங்களே - நீங்கள் மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, துயரத்தை அனுபவம் செய்கிறீர்கள்.