27.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, படகோட்டி உங்கள் படகை அக்கரைக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். தந்தைக்கு உண்மையானவர்களாக இருங்கள், உங்கள் படகு தள்ளாடினாலும், மூழ்காது.

கேள்வி:
குழந்தைகளான உங்களால் தந்தையின் நினைவில் மிகச்சரியாக நிலைத்திருக்க முடியாமைக்கான பிரதான காரணம் என்ன?

பதில்:
நீங்கள் சரீரவடிவில் இருப்பதனால், நீங்கள் ஓர் அசரீரியான ஆத்மா என்பதையும், உங்கள் தந்தையும் அசரீரியானவர் என்பதையும் மறந்து விட்டீர்கள். நீங்கள் சரீர வடிவில் இருப்பதனால், உங்களால் சரீரதாரிகளை இலகுவில் நினைவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும், உங்களை ஒரு புள்ளியாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்கு மாத்திரமே முயற்சி தேவையாகும்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். இவரது பெயர் சிவனல்ல. இவரது பெயர் பிரம்மா, கடவுள் சிவன் இவர் மூலமே பேசுகின்றார். உங்களால் எந்தவொரு மனிதரையோ அல்லது தேவரையோ அல்லது சூட்சும உலகவாசிகளாகிய பிரம்மா, விஷ்ணு, சங்கரரையோ ‘கடவுள்’ என அழைக்க முடியாது என உங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சூட்சுமமான அல்லது பௌதீகமான உருவத்தைக் கொண்ட எவரையும் கடவுள் என அழைக்க முடியாது. எல்லையற்ற தந்தை மாத்திரமே கடவுள் என அழைக்கப்படுகின்றார். கடவுள் யார் என்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் “நேற்றி, நேற்றி”, அதாவது தங்களுக்குத் தெரியாது எனக் கூறுகின்றார்கள். இதனை மிகச்சரியாக அறிந்தவர்களும் உங்களில் வெகுசிலரே உள்ளீர்கள். ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே! எவ்வாறாயினும், ஓர் ஆத்மா ஒரு புள்ளி ஆவார். ஆகவே தந்தையும் ஒரு புள்ளியாகவே இருக்க வேண்டும். தந்தையே இப்பொழுது இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பாபாவிடம் உள்ள சில குழந்தைகள், இன்னமும் எவ்வாறு தாங்கள் புள்ளி வடிவமான ஆத்மாக்களாக உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இருப்பினும், இதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்கின்ற சிலர் உள்ளார்கள். அவர்கள் தந்தையை நினைவு செய்கின்றார்கள். எல்லையற்ற தந்தையே உண்மையான வைரம் ஆவார். வைரங்கள் எப்பொழுதும் மிகச்சிறந்த சிறிய பெட்டிகளிலேயே வைக்கப்படுகின்றன. எவராவது தன்னிடமுள்ள ஒரு வைரத்தை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டுமென விரும்பினால் அவர் அதனை ஒரு தங்கப் பெட்டி அல்லது வெள்ளிப் பெட்டிக்குள் வைத்தே காண்பிப்பார். ஒரு நகைவியாபாரியால் மாத்திரமே ஒரு வைரத்தை இனங்காண முடியும். வேறு எவராலுமே வைரத்தை இனங்காண முடியாது. போலி வைரத்தைக் காண்பித்தாலும் எவராலும் அதை அறிந்து கொள்ள முடியாது. இவ்விதமாக ஏமாற்றப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். இப்பொழுது சத்தியமான தந்தை வந்துவிட்டார். ஆனாலும் எவராலும் எதையும் இனங்காண முடியாத வகையில், போலியான மனிதர்கள் இருக்கிறார்கள். சத்தியப் படகு தள்ளாடும், ஆனால் மூழ்காது என்று பாடப்படுகிறது. பொய்மை என்ற படகை நீங்கள் எவ்வளவுதான் ஆட்ட முயற்சித்தாலும், அது ஆடாது. இங்கு இருப்பவர்களும் படகை ஆட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள். அவர்கள் துரோகிகள் எனப்படுகிறார்கள். படகோட்டியான, தந்தை வந்துவிட்டார் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் பூந்தோட்டத்தின் அதிபதியும் ஆவார். இதுவே முட்காடு என்று தந்தை விளங்கப்படுத்தி இருக்கின்றார். அனைவரும் தூய்மை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் அந்தளவிற்குப் போலியானவர்கள்! சத்தியமான தந்தையை எவரும் அரிதாகவே அறிந்து கொள்கிறார்கள். இங்கே இருப்பவர்களுக்குக் கூட அவரை முழுமையாகத் தெரியாது. அவர் மறைமுகமானவர் என்பதால், அவர்கள் அவரைச் சரியான முறையில் அறிந்து கொள்வதில்லை. அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றார்கள், அவர் அசரீரியானவர் என்றும், அவர் பரந்தாமத்திலேயே வசிக்கின்றார் என்றும் அவர்களுக்குத் தெரியும். தாங்களும் அசரீரியான ஆத்மாக்களே என்பது அவர்களுக்குத் தெரியாது. சரீரத்தில் இருப்பதால் அவர்கள் இதனை மறந்து விட்டார்கள். பௌதீக உலகில் இருக்கும் பொழுது அவர்கள் பௌதீகத்தை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள். கடவுளே, பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். இதனைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானது. பரமதந்தை என்றால் அப்பால் உள்ள இடத்தில் வசிக்கும் பரமாத்மா என்று அர்த்தம். நீங்கள் ஆத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். உங்களைப் பரம் என அழைக்க முடியாது. நீங்கள் மறுபிறவி எடுக்கின்றீர்கள். எவருக்குமே இவ்விடயங்கள் தெரியாது. அவர்கள் கடவுளைச் சர்வவியாபகர் என்றும் அழைக்கின்றார்கள். பக்தர்கள் கடவுளை மலைகளில் தேடுகின்றார்கள். அவர்கள் யாத்திரைத் தலங்களுக்கும் ஆறுகளுக்கும் செல்கின்றார்கள். ஆறுகளைத் தூய்மையாக்குபவர் என்றும், அவற்றில் நீராடுவதனால் தாங்கள் தூய்மை ஆகுவார்கள் என்றும் அவர்கள் எண்ணுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் இருக்கும் எவருக்குமே தங்களுக்கு எது வேண்டும் எனத் தெரியாது. அவர்கள் தங்களுக்கு முக்தி அல்லது அநாதியான முக்தி (மோட்சம்) வேண்டும் எனக் கூறுகின்றார்கள். இங்கு அவர்கள் விரக்தி அடைந்திருப்பதனால் சந்தோஷமற்றே இருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் எவரும் அநாதியான முக்தியையோ அல்லது முக்தியையோ கேட்பதில்லை. அங்கு எவருமே கடவுளை அழைப்பதுமில்லை. அவர்கள் இங்கு சந்தோஷமற்று இருப்பதனாலே அவரை அழைக்கின்றார்கள். பக்தி செய்வதனால் எவரது துன்பமும் அவரால் அகற்றப்படுவதில்லை. ஒருவர் அம்ர்ந்திருந்து நாள் முழுவதும் “இராமா, இராமா” என உச்சரித்தாலும் அவரது துன்பம் அகற்றப்பட முடியாது. இது இராவண இராச்சியம். அவர்களின் கழுத்தைச் சுற்றித் துன்பம் கட்டப்பட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. அவர்கள் பாடுகிறார்கள்: துன்பத்தின் போது அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றார்கள், ஆனால் சந்தோஷத்தின் போது எவரும் அவரை நினைவு செய்வதில்லையே. நிச்சயமாக ஒருகாலத்தில் சந்தோஷம் இருந்தது என்றும், இப்பொழுது துன்பமே இருக்கின்றது என்பதுமே அதன் அர்த்தம் ஆகும். சத்திய யுகத்தில் சந்தோஷம் நிலவியது, இப்போது கலியுகத்தில், துன்பம் நிலவுகிறது. இதனாலேயே அது முட்காடு எனப்படுகின்றது. முதலாவது இலக்க முள், சரீர உணர்வாகும். அடுத்தது காமம் என்ற முள்ளாகும். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: இந்தக் கண்களால் காண்பவை அனைத்தும் அழியப் போகின்றன. நீங்கள் இப்பொழுது மௌன தாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டையும், உங்கள் இராச்சியத்தையும் நினைவுசெய்ய வேண்டும். ஆகவே, உங்கள் வீட்டை நினைவு செய்வதுடன் கூடவே உங்கள் தந்தையையும் நினைவு செய்வதும் அவசியமாகும். ஏனெனில் அந்த வீடு, தூய்மையாக்குபவர் கிடையாது. தந்தையை நீங்கள் “தூய்மையாக்குபவர்” என அழைக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். என்னை மாத்திரமே நீங்கள் அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள். அவரே ஞானக்கடல், ஆகவே அவர் நிச்சயமாக வந்து ஒரு வாயின் மூலம் விளங்கப்படுத்த வேண்டும். அவர் தூண்டுதல்களைக் கொடுக்க மாட்டார். ஒருபுறம் அவர்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றார்கள். மறுபுறம், அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகின்றார்கள். பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்ட எதுவும் இருக்க முடியாது. பின்னர் அவர் கூழாங்கற்கள், கற்கள் போன்ற அனைத்திலும் இருக்கின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஐந்து விகாரங்களின் ரூபமாகிய இராவணன் உங்கள் புத்தியைச் சீரழித்து விட்டான், இதனாலேயே நீங்கள் தேவர்களின் சிலைகளுக்குத் தலை வணங்குகின்றீர்கள். சிலர் நாஸ்திகர்கள், அவர்கள் எவரையும் நம்புவதில்லை. இங்கு, 5000 வருடங்களுக்கு முன்னர் இது யாருக்கு விளங்கப்படுத்தப்பட்டதோ, அந்தப் பிராமணர்கள் மாத்திரமே தந்தையிடம் வருகின்றார்கள். பிரம்மா மூலமே பரமாத்மா பரமதந்தை ஸ்தாபனையை மேற்கொள்கின்றார் என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளே. பிரஜாபிதா பிரம்மா மிகவும் பிரபல்யமானவர். ஆகவே, நிச்சயமாக பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் இருக்கவே வேண்டும். நீங்கள் இப்பொழுது சூத்திர தர்மத்தில் இருந்து வெளியே வந்து பிராமண தர்மத்திற்குள் பிரவேசித்துள்ளீர்கள். உண்மையில், தங்களை இந்துக்கள் என அழைப்பவர்களுக்குத் தங்கள் சொந்தத் தர்மத்தையே தெரியாது. சிலவேளைகளில் அவர்கள் ஒரு தேவரை நம்புகின்றார்கள், சிலவேளைகளில் வேறு ஒரு தேவரை நம்புகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் பலரிடமும் செல்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் ஒருபொழுதும் வேறு எவரிடமும் செல்வதில்லை. இப்பொழுது தந்தையாகிய கடவுள் கூறுகின்றார் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஒருநாள் “என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள்” என்று கடவுள் கூறுகின்றார் என்பது செய்தித்தாள்களில் வரும். விநாசம் நெருங்கும் பொழுது இந்த ஒலியானது செய்தித்தாள்களின் மூலம் மக்களின் செவிகளைச் சென்றடையும். சகல இடங்களிலும் இருந்து வரும் செய்திகளும் செய்தித்தாள்களில் வெளிவருகின்றன. நீங்கள் இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம்: கடவுள் பேசுகிறார்: பரமாத்மாவாகிய பரமதந்தை சிவன் கூறுகின்றார்: நானே தூய்மை ஆக்குபவர். என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இப்பழைய உலகின் விநாசம் உங்கள் முன்னால் இருக்கின்றது. விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்ற நம்பிக்கையை அனைவரும் கொண்டிருப்பார்கள். ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்வரை விநாசம் நிகழ முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பூகம்பங்கள் போன்றவை சம்பவிக்கவே வேண்டும். ஒருபுறம் குண்டுகள் வெடிக்கும். மறுபுறம் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை நிகழும். அவர்கள் எந்த உணவையும் பெற மாட்டார்கள். கப்பல்கள் வர மாட்டாது. பஞ்சம் ஏற்படும். பஞ்சம் காரணமாக மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார்கள். உண்ணாவிரதம் இருப்போர் தொடர்ந்தும் நீர் அல்லது தேன் முதலியவற்றை உட்கொள்கிறார்கள், அவர்களின் எடை குறைகிறது. மக்கள் எங்காவது அமர்ந்திருக்கும் பொழுது அவர்கள் மரணிக்கும் வகையில், திடீரெனப் பூகம்பங்கள் ஏற்படும். விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். சாது மற்றும் புனிதர் போன்றோர் விநாசம் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்று கூறுவதில்லை. இதனாலேயே நீங்கள் தொடர்ந்தும் இராம நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கின்றார்கள். மக்களுக்குக் கடவுளைக் கூடத் தெரியாது. கடவுளுக்கு மாத்திரமே தன்னைப் பற்றித் தெரியும். வேறு எவராலும் அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் வருவதற்கென்று குறிக்கப்பட்ட நேரம் இருக்கின்றது. ஆகவே, அவர் இப் பழைய சரீரத்தினுள் வந்து, முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைப் பேசுகின்றார். நீங்கள் வீடு திரும்ப வேண்டும், ஆகவே நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வதையிட்டுச் சந்தோஷப்பட வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மக்களுக்கும் அமைதி தேவை, ஆனால் அவர்களுக்கு யார்தான் அமைதியைக் கொடுக்க முடியும்? அவர்கள் அமைதியை அருள்பவர்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். எவ்வாறாயினும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான, ஒரேயொரு அதிமேலான தந்தையே இருக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் உங்கள் அனைவரையும் தூய்மையாக்கித் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். ஒருவரைக் கூட நான் விட்டுவிடப் போவதில்லை. நாடகத்திற்கு ஏற்ப அனைவரும் திரும்பிச் செல்லவேண்டும். நுளம்புக் கூட்டத்தைப் போன்று ஆத்மாக்கள் எல்லோரும் திரும்பிச் செல்கிறார்கள் என நினைவு கூரப்படுகின்றது. சத்தியயுகத்தில் மிகச்சொற்ப மக்களே உள்ளார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்பொழுதோ, கலியுகத்தில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள். எவ்வாறு அவர்களின் எண்ணிக்கை குறைவடையும்? இது இப்பொழுது சங்கமயுகம். நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வதற்காகவே முயற்சி செய்கின்றீர்கள். விநாசம் நடைபெறும் எனவும், ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக் கூட்டத்தைப் போல வீடு திரும்பிச் செல்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். முழுக்கூட்டமும் வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள் ஆனால் மிகச்சிலரே சத்திய யுகத்திற்குச் செல்வார்கள். தந்தை கூறுகின்றார்: எச்சரீரதாரிகளையும் நினைவு செய்யாதீர்கள். அவர்களைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். நான் ஓர் ஆத்மா, நான் எனது வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன். நீங்கள் உங்கள் பழைய சரீரத்தைச் சந்தோஷமாக நீக்கிவிட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்கள் அமைதி தாமத்தை நினைவு செய்தீர்களாயின், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதிலேயே முயற்சி உள்ளது. முயற்சி செய்யாது உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. உங்களை ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணாக மாற்றுவதற்காகவே தந்தை வருகின்றார். இப்பொழுது இப்பழைய உலகில் ஓய்வோ அல்லது சௌகரியமோ இல்லை. அமைதி தாமத்திலும் சந்தோஷ தாமத்திலும் மாத்திரமே ஓய்வும் சௌகரிமும் இருக்கின்றன. இங்கே இல்லங்கள் தோறும் அமைதியின்மையும் அடிதடி மோதல்களுமே இடம்பெறுகின்றன. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இந்த அழுக்கான உலகை மறந்துவிடுங்கள். இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, நான் உங்களுக்காகச் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன். நீங்கள் நரகத்தில் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது தந்தையையும் சுவர்க்கத்தையும் நினைவுசெய்யுங்கள். அப்பொழுது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்குக்கு உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் திருமணங்கள் போன்றவற்றிற்குச் செல்லலாம், ஆனால் நீங்கள் தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். புத்தியில் இந்த ஞானம் அனைத்தும் இருக்க வேண்டும். நீங்கள் இல்லறத்தில் இருந்து, உங்கள் குழந்தைகளைப் பராமரிக்கலாம். ஆனால் உங்கள் புத்தியில் இதனை வைத்திருங்கள்: பாபாவின் கட்டளை: என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் வீட்டை விட்டு நீங்கக்கூடாது. இல்லாவிடின் உங்கள் குழந்தைகளைப் யார் பராமரிப்பார்கள்? பக்தர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் இல்லறங்களில் வசிக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் பக்தி செய்வதனால், அவர்கள் பக்தர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் தங்கள் வீட்டைப் பராமரிப்பதுடன், விகாரத்திலும் ஈடுபடுகின்றார்கள். இருப்பினும் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் போன்ற குழந்தையைப் பெற வேண்டுமாயின், ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்யுமாறு அவர்களின் குரு கூறுகிறார். ஆனால் நீங்கள் இப்பொழுது சத்தியயுக விடயங்களையே செவிமடுப்பதால், அவ் விடயங்களுக்குள் செல்லக்கூடாது. ஏனெனில் அது இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணர் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர் அதன் அதிபதி ஆகுகிறார். அவர் தனது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றார். கீதையின் கடவுள் சங்கமத்தில் மாத்திரமே வருகின்றார். தந்தை கீதையைப் பேசினார், குழந்தை அதனைச் செவிமடுத்தார். பின்னர் பக்திமார்க்கத்திலே அவர்கள் தந்தையின் பெயருக்குப் பதிலாகக் குழந்தையின் பெயரை இட்டிருக்கின்றார்கள். அவர்கள் தந்தையை மறந்து விட்டதனால் கீதை பொய்யாகியது. பொய்யாகிவிட்ட கீதையைக் கற்பதனால் என்ன நடக்கும்? இராஜ யோகத்தை உங்களுக்குக் கற்பித்துவிட்டுத் தந்தை சென்றுவிட்டார். அதன் மூலமே ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் அதிபதி ஆகினார். எவராவது பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனின் கதையைக் கேட்பதனால் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்களா? அந்த எண்ணத்துடன் எவரும் அதனைச் செவிமடுப்பதில்லை. அதிலிருந்து அவர்கள் எந்த நன்மையையும் பெறுவதில்லை. சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் தங்கள் சொந்த மந்திரங்களையும் தங்கள் சொந்தப் புகைப்படங்களையுமே கொடுக்கின்றார்கள். அது இங்கு பொருந்தாது. மற்றைய சத்சங்களில், அவர்கள் இது இன்ன இன்ன சுவாமியின் சமயக்கதை என்று கூறுகிறார்கள். யாருடைய கதை? வேதாந்தத்தின் கதை, கீதையின் கதை, பாகவத்தின் கதை என்பனவாகும். உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு சரீரதாரி அல்ல என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்கவும் இல்லை. சிவபாபா ஏதாவது சமயநூலைக் கற்றுள்ளாரா? மனிதர்களே அவற்றைக் கற்கிறார்கள். சிவபாபா கூறுகிறார்: நான் கீதை போன்றவற்றைக் கற்கவில்லை. நான் பிரவேசித்துள்ள இச்சரீரமே அனைத்தையும் கற்றுள்ளார். நான் எதையும் கற்கவில்லை. என்னிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய முழு ஞானமும் இருக்கின்றது. இவர் கீதையைத் தினமும் படிப்பது வழக்கம். அவர் அதனை ஒரு கிளியைப் போல் திருப்பிக் கூறுவது வழக்கமாக இருந்தது. பின்னர், தந்தை அவரினுள் பிரவேசித்த பொழுது, இவை அனைத்தையும் பற்றியே சிவபாபா பேசுகின்றார் என்பது அவரது புத்தியைத் தொட்டதால், அவர் உடனடியாகவே கீதையைக் கைவிட்டார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். ஆகவே, பழைய உலகின் மீதுள்ள பற்று அனைத்தையும் முடித்து விடுங்கள். என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். ஓர் உண்மையான காதலி சதா தனது அன்பிற்கினியவரை நினைவு செய்கிறார். ஆகவே, இப்பொழுது தந்தையின் நினைவும் அந்தளவிற்கு உறுதியானதாக இருக்க வேண்டும். பரலோகத் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னையும் உங்கள் சுவர்க்க ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். சத்தம் செய்யவோ அல்லது இசைக்கருவிகள் போன்றவற்றை இசைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இசைக்கப்படுகின்ற சில பாடல்கள் மிகச்சிறந்தவை, அவற்றின் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பாடல்களை இயற்றியவர்களுக்கு எதுவுமே தெரியாது. மீரா ஒரு பக்தையாக இருந்தார். ஆனால் நீங்களோ இப்பொழுது ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். குழந்தைகளால் எதனையாவது சரியான முறையில் செய்ய முடியாமல் உள்ளபொழுது, அவர்கள் பக்தர்களைப் போன்றவர்கள் என்றே பாபா அவர்களுக்குக் கூறுகிறார். தந்தை ஏன் தங்களை அவ்வாறு கூறினார் என்பதைக் குழந்தைகள் பின்னர் புரிந்து கொள்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது தந்தையை நினைவு செய்து, தூதுவர்கள் ஆகுங்கள். தந்தையையும் அவரது ஆஸ்தியையும் நினைவு செய்தால் அவர்களின் பல பிறவிகளுக்கான பாவங்கள் எரிக்கப்பட முடியும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். இப்பொழுது இது வீடு திரும்புவதற்கான நேரமாகும். ஒரேயொரு கடவுளே இருக்கின்றார், அவர் அசரீரியானவர். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. தந்தை மாத்திரமே இங்கு அமர்ந்திருந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு “மன்மனாபவ” எனும் மந்திரத்தைக் கொடுக்கின்றார். ‘விநாசம் இடம்பெறவுள்ளது, ஆகவே நீங்கள் தந்தையையே நினைவுசெய்ய வேண்டும்’ என்று சாதுக்களும், புனிதர்களும் சந்நியாசிகளும் ஒருபொழுதும் கூறுவதே இல்லை. தந்தை மாத்திரமே பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை நினைவூட்டுகின்றார். நீங்கள் நினைவின் மூலம் ஆரோக்கியத்தையும், கற்பதன் மூலம் செல்வத்தையும் பெறுகின்றீர்கள். நீங்கள் மரணத்தையும் வெற்றி கொள்கின்றீர்கள். அங்கே ஒருபொழுதும் அகாலமரணம் ஏற்படுவதில்லை. தேவர்கள் மரணத்தை வென்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து ஒரு பக்தர் என்ற பட்டத்தை பெறும் வகையில் எத்தகைய செயலையும் நீங்கள் செய்யாதீர்கள். ஒரு தூதுவராகித் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்.

2. இப்பழைய உலகில் ஓய்வோ அல்லது சௌகரியமோ இல்லை. இது ஓர் அழுக்கான உலகம். அதனால், அதை மறந்துவிடுங்கள். நீங்கள் வீட்டினை நினைவு செய்வதுடன் கூடவே, தூய்மை ஆகுவதற்கு தந்தையையும் நினைவு செய்ய வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் இல்லறத்தில் வாழும்போதும் அப்பால் இருப்பதற்கான மனப்பாங்கைக் கொண்டிருந்து, ஒரு சதா யோகி ஆகுவீர்களாக.

சதா யோகி ஆகுவதற்கான இலகுவான வழிமுறை, உங்களின் இல்லறத்தில் வாழும் போதே அப்பால் இருப்பதற்கான மனப்பாங்கைப் பேணுவதாகும். அப்பாற்பட்ட மனப்பாங்கு என்றால் ஆத்ம உணர்வு ரூபத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். ஆத்ம உணர்வில் ஸ்திரமாக இருப்பவர்கள், சதா பற்றற்றவர்களாகவும் தந்தையிடம் அன்பானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் எதையும் செய்யவில்லை, ஆனால் ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போன்றே அவர்கள் உணர்வார்கள். எனவே, உங்களின் இல்லறத்தில் வாழும்போதே ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதன் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் ஒரு விளையாட்டைப் போல் மிக இலகுவானதாக அனுபவம் செய்வீர்கள். நீங்கள் அதை ஒரு பந்தனமாக உணர மாட்டீர்கள். அன்புடனும் ஒத்துழைப்புடனும் சக்தியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களால் உயரப் பாய முடியும்.

சுலோகம்:
சுத்திகரிக்கப்பட்ட புத்தி, அதாவது, ஆத்மாவின் இலேசான தன்மையே பிராமண வாழ்க்கையின் ஆளுமை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

சக்திகளுக்குத் தைரியம் இருக்கும்போது, சர்வசக்திவான் நிச்சயமாக உதவி செய்வார். பெண்சிங்கங்கள் ஒருபோதும் எவருக்கும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் பயமற்றவர்கள். என்ன நடக்கப் போகிறதோ என்பதை அறியாத பயம்கூட அவர்களுக்குக் கிடையாது. சத்தியத்தின் சக்தியின் சொரூபம் ஆகி, போதையுடன் பேசுங்கள். அத்துடன் அந்த போதையுடன் எல்லாவற்றையும் பாருங்கள். ‘நாங்கள் சர்வசக்திவான் அரசாங்கத்தைப் பின்பற்றுபவர்கள்’. இந்த விழிப்புணர்வைக் கொண்டிருந்து, தவறானவற்றை மிகச்சரியாக ஆக்குங்கள். சத்தியம் வெளிப்படுத்தப்பட வேண்டும். மறைத்து வைக்கப்படக்கூடாது. ஆனால் இனிமையுடன் கூடவே, உங்களின் வார்த்தைகளில் பண்புகளும் அவசியம்.