27.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் முகங்கள் இப்பொழுது சுவர்க்கத்தை நோக்கி உள்ளன. நீங்கள் நரகத்தின் கரையிலிருந்து விலகி, சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். எனவே, உங்கள் புத்தியின் யோகத்தை நரகத்தில் இருந்து அகற்றுங்கள்.
கேள்வி:
அதியுயர்ந்ததும் அதி சூட்சுமமானதுமான இலக்கு என்ன? யாரால் அதை அடைய முடியும்?பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் முகங்களைச் சுவர்க்கத்தை நோக்கித் திருப்புகின்றீர்கள், மாயை உங்கள் முகங்களை நரகத்தை நோக்கித் திருப்புகின்றாள். அவள் பல புயல்களைக் கொண்டு வருகின்றாள். நீங்கள் அப்புயல்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள வேண்டும். இது உங்கள் சூட்சுமமான இலக்காகும். உங்கள் இலக்கை அடைவதற்கு, நீங்கள் பற்றை வென்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையினதும் தைரியத்தினதும் அடிப்படையிலேயே நீங்கள் இதனை வெற்றி கொள்ள முடியும். விகாரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் மத்தியில் வாழும்போதும் விகாரங்களில் இருந்து விடுபட்ட ஓர் அன்னமாக ஆகுவதே உங்கள் முயற்சியாகும்.பாடல்:
இது பலவீனத்திற்கும் பலத்திற்கும் இடையிலான யுத்தமாகும். இது சுவாலையினதும் புயல்களினதும் கதையாகும்.ஓம் சாந்தி.
விவேகமான குழந்தைகள் இப்பாடலின் அர்த்தத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றனர். எவரது புத்தியின் யோகம் அமைதிதாமத்தையும் சுவர்க்கத்தையும் நோக்கி உள்ளதோ, அவர்களுக்கு மாத்திரமே புயல்கள் வருகின்றன. தந்தை இப்பொழுது உங்கள் முகங்களைச் சுவர்க்கத்தை நோக்கித் திருப்புகின்றார். அறியாமைப் பாதையிலும் உங்கள் முகங்களைப் பழைய வீட்டிலிருந்து திருப்பி, புதிய வீட்டை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். அது எப்பொழுது தயாராகும் என நீங்கள் சிந்திக்கிறீர்கள். உங்கள் சுவர்க்கம் எப்பொழுது ஸ்தாபிக்கப்பட வுள்ளது என்பதையும், அதன்பின்னர் நீங்கள் அந்த சந்தோஷ தாமத்திற்கு செல்வீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அனைவரும் இத்துன்ப தாமத்தை விட்டுச் செல்ல வேண்டும். தந்தை முழு உலகிலும் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது சுவர்க்க வாயில்கள் திறக்கின்றன. உங்கள் புத்தியின் யோகம் இப்பொழுது சுவர்க்கத்தை நோக்கி இருக்க வேண்டும். சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள் தூய்மை ஆனவர்கள் எனவும் நரகத்தில் உள்ளவர்கள் தூய்மை அற்றவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், உங்கள் புத்தியின் யோகம் சுவர்க்கத்துடன் இருக்கவேண்டும். உதாரணமாக, தந்தையின் புத்தியின் யோகம் சுவர்க்கத்துடனும் குழந்தையின் புத்தியின் யோகம் நரகத்துடனும் இருந்தால், அவர்கள் ஒரே வீட்டில் வாழ்வது எவ்வாறு சாத்தியம்? அன்னங்களும் நாரைகளும் சேர்ந்து வாழ முடியாது. அது மிகவும் சிரமமானது. புத்தியின் யோகத்தை ஐந்து விகாரங்களுடனும் வைத்திருப்பவர்களே நரகத்திற்குச் செல்பவர்கள். நீங்களே சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள். இரு வகையினரும் சேர்ந்து வாழ முடியாது. இந்த இலக்கு மிக உயர்வானது. தனது குழந்தைகளின் முகங்கள் நரகத்தை நோக்கி இருப்பதையும், அவர்களால் நரகத்திற்குச் செல்வதை நிறுத்த முடியாததையும் ஒரு தந்தை பார்க்கும்போது, அவரால் என்ன செய்ய முடியும்? வீட்டில் நிச்சயமாகச் சண்டைகள் இடம்பெறும். குழந்தைகள் கேட்பார்கள்: நான் திருமணம் செய்யக்கூடாது எனக் கூறும் இது எவ்வகையான ஞானம்? இவ்வாறாக, தங்களது பிள்ளைகளின் முகங்கள் நரகத்தை நோக்கியுள்ள நிலையில், இல்லறத்தில் வாழ்கின்ற பலர் உள்ளனர். உங்கள் புத்தியின் யோகத்தை நரகத்துடன் வைத்திருக்காதீர்கள் என அவர்களின் தந்தை கூறுகின்ற போதிலும், அவர்கள் நரகத்திற்குச் செல்லவே விரும்புகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் தந்தை சொல்வதைக் கேட்பதில்லை. எனவே, அப்பொழுது அவரால் என்ன செய்ய முடியும்? உங்கள் ஸ்திதி பற்றை வென்றவராக இருப்பது அவசியம் ஆகும். இந்த ஞானம் முழுவதும் ஆத்மாக்களாகிய உங்களில் உள்ளது. தந்தையின் ஆத்மா கூறுகின்றார்: நானே அவனை உருவாக்கினேன், ஆனால் அவன் நான் சொல்வதைக் கேட்பதே இல்லை. சிலர், பிராமணர்கள் ஆகினாலும், அவர்களின் புத்திகள் இன்னமும் நரகத்தை நோக்கியே செல்கின்றன. அவர்கள் ஆழ் நரகத்தினுள் செல்கின்றார்கள். இது ஞானக்கடலின் நீதிமன்றம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில், இந்திர சபை நினைவு கூரப்படுகின்றது. புக்ராஜ்பரி (கோமேதகம்), நீலாம்பரி (நீலக்கல்), மேனக்பரி (சிவப்புக்கல்) போன்ற பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த ஞான நடனம் ஆடுகின்றனர். பல வகையான தேவதைகள் உள்ளனர். அவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மை அற்றவர்களை இங்கு அழைத்து வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இங்கு, இலக்கு மிக உயர்வானது. இதனாலேயே விருட்சம் மிக விரைவாக வளர்வதில்லை. தந்தை கொடுக்கின்ற ஞானத்தை எவரும் அறியார். இந்த ஞானம் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்களிடம் மிகக் குறைந்தளவு நம்பிக்கையே உள்ளதால், அவர்களைக் கீழே வீழ்த்துவதற்காக மாயை அவர்களை ஒருதடவையே அறைய வேண்டியுள்ளது. புயல்கள் உள்ளன. ஒரு பலமான புயலால் சிறிய சுவாலை அணைக்கப்பட்டு விடுகின்றது. மற்றவர்கள் விகாரத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, அவர்களும் வீழ்கின்றார்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு நீங்கள் மிகவும் விவேகியாக இருக்க வேண்டும். பாடப்படுகின்றது: அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, காமமே உங்கள் கொடிய எதிரி. எனவே, நீங்கள் அதை வெறுக்க வேண்டும். பாபா உங்களை அதை மிக அதிகளவுக்கு வெறுக்கத் தூண்டுகின்றார். முன்னர் இவ்வாறு இருக்கவில்லை. நரகம் இப்பொழுது மாத்திரமே உள்ளது. திரௌபதி உதவிகோரி அழைப்பது இந்த நேரத்தையே குறிக்கின்றது. அது உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்ட போதிலும், உங்கள் புத்தியில் அது பதிவதில்லை. சக்கரத்தின் இப்படம் மிகவும் சிறந்தது: “சுவர்க்க வாயில்”. சக்கரத்தின் படத்திலிருந்து மக்களால் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் இப்படத்தில் இருந்து புரிந்துகொள்ளும் அளவிற்கு ஏணிப்படத்திலிருந்து அவர்களால் அதிகளவு புரிந்துகொள்ள முடியாது. நாளுக்கு நாள், நீங்கள் திருத்தங்களைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இன்று, நான் உங்களுக்கு முற்றிலும் புதிய வழிகாட்டல்களைக் கொடுக்கின்றேன். நீங்கள் ஆரம்பத்திலேயே சகல வழிகாட்டல்களையும் ஒன்றாகப் பெற்றுவிட முடியாது. உலகம் இப்பொழுது எவ்வாறு உள்ளது எனப் பாருங்கள். அதில் பெருமளவு துன்பம் நிலவுகின்றது. அவர்கள் தங்கள் குழந்தைகளில் பெருமளவு பற்று வைத்திருக்கின்றார்கள். ஒரு குழந்தை இறந்துவிட்டால், அவர்களுக்கு முழுமையாகப் பித்துப் பிடித்து விடுகின்றது. எல்லையற்ற துன்பம் உள்ளது. அவர்கள் செல்வந்தர்களாக இருந்தால் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்றில்லை. இன்னமும் பலவகையான நோய்கள் உள்ளன. அவர்கள் ஒரு வைத்தியசாலையில் படுத்திருக்கின்றனர். ஏழைகள் பொதுப் பிரிவில் (வாட்டுகளில்) தங்குகின்றனர், செல்வந்தர்களுக்கெனத் தனியாக விசேட அறைகள் உள்ளன. எவ்வாறாயினும், செல்வந்தர்களும் ஏழைகள் அனுபவிக்கும் அதே வலியையும் துன்பத்தையுமே அனுபவிக்கின்றனர். அவர்கள் ஒரு சிறந்த அறையில் வைத்து சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றனர், அவ்வளவுதான். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு முன்னரும் பல தடவைகள் கற்பித்துள்ளார். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் கற்கின்றேனா, இல்லையா? எத்தனை பேருக்கு நான் கற்பிக்கின்றேன்? நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்காவிட்டால், என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? உங்கள் அட்டவணையைத் தினமும் இரவில் சோதித்து, உங்களையே கேளுங்கள்: இன்று நான் எவருக்காவது துன்பம் விளைவித்தேனா? ஸ்ரீமத் கூறுகின்றது: எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள், ஆனால் அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். எங்கள் குலத்துக்கு உரியவர்கள் இந்த ஞானத்தால் மிக விரைவாகத் தொடப்படுவார்கள். இந்த அமிர்தத்தை வைத்திருப்பதற்குத் தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது. ஒரு தங்கப் பாத்திரத்திலேயே பெண்சிங்கத்தின் பாலை வைத்திருக்க முடியும் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில், அது கொடுக்கும் பால் உயர்வானதும், போஷாக்கானதும் ஆகும். பெண் சிங்கமும்கூட தனது குழந்தைகளில் பெருமளவு பற்று வைத்துள்ளது. இதனாலேயே அது எவரையேனும் கண்டால், அவர்கள் தனது குட்டிகளைக் கொன்றுவிடக்கூடும் என நினைத்து உடனடியாக அவர்கள் மீது பாய்கின்றது. இங்கும்கூட, தங்கள் கணவன்மார் மீதும், குழந்தைகள் மீதும் பெருமளவு பற்று வைத்துள்ள பலர் உள்ளனர். சுவர்க்க வாயில்கள் இப்பொழுது திறக்கின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது கிருஷ்ணரின் படத்தில் மிகத்தெளிவாக எழுதப்பட்டுள்ளது: “இந்த யுத்தத்தின் பின்னர் சுவர்க்க வாயில்கள் திறக்கும்.” அங்கு வெகுசிலரே இருப்பார்கள். ஏனைய அனைவரும் முக்தி தாமத்தில் இருப்பார்கள். பெருமளவு தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர்கள் ஒவ்வொரு பிறவியிலும் தாங்கள் செய்துள்ள பாவங்கள் அனைத்தினதும் காட்சிகளைப் பெற்று, அவற்றிற்கான தண்டனையை அனுபவிக்கின்றார்கள். பின்னர், ஒரு சில சதங்கள் பெறுமதியான ஓர் அந்தஸ்தையே பெறுகின்றார்கள். அவர்கள் நினைவில் நிலைத்திருக்காததால், அவர்களின் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. முரளியைச் செவிமடுப்பதைக்கூட தவறவிடுகின்ற பல குழந்தைகள் உள்ளனர். பல குழந்தைகள் இதில் கவனயீனமாக உள்ளனர். அவர்கள் நினைக்கின்றனர்: நான் இதைக் கற்காவிட்டால் என்ன வந்துவிடப் போகின்றது? நான் ஏற்கனவே அனைத்தையும் அடைந்து விட்டேன். அவர்கள் முரளியில் அக்கறை செலுத்துவதில்லை. இவ்விதமாகச் சரீர உணர்வில் உள்ள பலர் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஓர் இழப்பை மாத்திரமே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். பாபா இதை அறிவார். எனவே, நீங்கள் இங்கு வரும்போது, எத்தனை முரளிகளை நீங்கள் செவிமடுக்கவில்லை என அவர் உங்களிடம் கேட்கின்றார். அவற்றில் மிகச்சிறந்த கருத்துக்கள் சில இருந்தால், அவற்றை எவ்வாறு நீங்கள் அறிந்துகொள்ள முடியும்? தினமும் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு நிலையத்திற்குச் செல்கின்ற போதிலும், இந்த ஞானத்தையோ அல்லது தாரணையையோ கொண்டிராத அவ்வாறான பலர் உள்ளனர். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றா விட்டால் எவ்வாறு ஓர் அந்தஸ்தைப் பெறமுடியும்? உண்மையான தந்தையையும் உண்மையான ஆசிரியரையும் அவதூறு செய்வதால் நீங்கள் ஒருபொழுதும் ஓர் அந்தஸ்தைக் கோர மாட்டீர்கள். அனைவராலும் ஓர் அரசராக முடியாது. பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். அந்தஸ்து வரிசைக்கிரமமானது. அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. முழு உலகினதும் இராச்சியத்தை நீங்கள் பெறுகின்ற தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? அது உங்கள் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அப்பொழுது நீங்கள் என்ன முயற்சியைச் செய்வீர்கள்? தந்தை கூறுகின்றார்: நினைவு யாத்திரை மூலம் மாத்திரம் உங்கள் பாவங்கள் எரிக்கப்பட முடியும். எனவே, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். “உண்ணாதீர்கள், பருகாதீர்கள்” என பாபா கூறுவதில்லை. இது ஹத்தயோகம் அல்ல. நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், ஏனைய அனைத்தையும் செய்யும்போதும் ஒரு காதலி தனது அன்பிற்கினியவரை நினைவு செய்வதைப் போன்று, பாபாவின் நினைவில் நிலைத்திருங்கள். அவர்கள் தங்கள் பெயர்களிலும், உருவங்களிலும் அன்பு கொண்டிருக்கின்றார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதை எவரும் அறியார். அவர்கள் ஆட்சிபுரிந்தது நேற்றைய விடயமாகும் என நீங்கள் கூறுகின்றீர்கள். எவ்வாறாயினும், மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். மாயை மக்களின் புத்தியை முற்றிலும் கல்லாக்கி விட்டாள். நீங்கள் இப்பொழுது கல்லுப்புத்தியைக் கொண்டவர்களில் இருந்து தெய்வீகப்புத்தியைக் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். தெய்வீகப் பிரபுவிற்கென ஓர் ஆலயம் உள்ளது. எவ்வாறாயினும், அவர் யார் என்பதை எவரும் அறியார். மனிதர்கள் காரிருளில் உள்ளனர். தந்தை இப்பொழுது உங்களுக்கு மிகச்சிறந்த விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் அது ஒவ்வொருவரினதும் புத்தியைப் பொறுத்ததாகும். கற்பிப்பதற்கு ஒரேயொருவரே உள்ளார், ஆனால் இங்கே கற்பதற்குப் பலர் வருவார்கள். “சுவர்க்க வாயில்” என்ற பலகையுடன் ஒவ்வொரு வீதியிலும் நீங்கள் ஒரு பாடசாலையைக் கொண்டிருப்பீர்கள். தாங்கள் நரகத்தில் இருக்கின்றோம் என்பதை எந்தவொரு மனிதரும் புரிந்து கொள்ள மாட்டார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவர்கள் அனைவரும் பூஜிப்பவர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் மாத்திரமே சத்தியயுகத்தில் இருக்க முடியும். பூஜிப்பவர்கள் கலியுகத்திலேயே இருக்கின்றார்கள். கடவுள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் எனவும், அவர் பின்னர் பூஜிப்பவர் ஆகுகின்றார் எனவும் மக்கள் நம்புகின்றனர். “நீங்கள் மாத்திரமே கடவுள், நீங்கள் மாத்திரமே இந்த அற்புதமான செயல்களைச் செய்கின்றீர்கள். நீங்கள் கடவுள், நாங்களும் கடவுள்” என அவர்கள் உச்சாடனம் செய்கின்றனர். அவர்கள் எதையும் புர்pந்து கொள்வதில்லை. இது இராவண இராச்சியம். நீங்கள் என்னவாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது என்னவாக ஆகுகின்றீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதை கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்கான வழிகளைக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது இது இப்பழைய உலகின் இறுதியாகும். நான் இப்பொழுது உங்களிடம் இங்கே நேரடியாக வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது இறுதித் தானம் செய்யவேண்டும். எனவே, அனைத்தையும் முற்றாக அர்ப்பணித்துக் கூறுங்கள்: பாபா, இவை அனைத்தும் உங்களுடையது. தந்தை உங்களைத் தானம் செய்யத் தூண்டுகின்றார், அதனால், உங்கள் எதிர்காலம் உருவாக்கப்பட முடியும். மக்கள் கடவுளின் பெயரால் தானமளித்து, புண்ணியங்கள் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், அது மறைமுகமானது. அவர்கள் அதன்பலனைத் தங்கள் அடுத்த பிறவியில் பெறுகின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நான் இப்பொழுது இங்கே நேரடியாக வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது எதைச் செய்தாலும், அதன் பிரதிபலனாகப் பல மில்லியன் மடங்கைப் பெறுவீர்கள். சத்தியயுகத்தில் தான தர்மங்களுக்கான கேள்வியே இல்லை. இங்கே ஒருவரிடம் பணம் இருந்தால் பாபா கூறுகின்றார்: அச்சா, சென்று, ஒரு நிலையத்தைத் திறவுங்கள். சென்று ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்யுங்கள். ஒருவர் ஏழையாக இருந்தால், பாபா கூறுகின்றார்: அச்சா, ‘சுவர்க்க வாயில்’ என எழுதப்பட்ட பலகையை உங்கள் வீட்டிற்கு வெளியில் இடுங்கள். சுவர்க்கமும், நரகமும் உள்ளன. தற்போது, நீங்கள் நரகவாசிகள். வேறு எவரும் இதை அறிய மாட்டார்கள். ஒருவர் சுவர்க்கத்திற்குச் சென்றிருந்தால், அவர்கள் ஏன் அவரைத் திரும்பவும் நரகத்திற்கு அழைக்கின்றார்கள்? இன்ன இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் எனச் சுவர்க்கத்தில் எவருமே கூறமாட்டார்கள். அவர் ஏற்கனவே சுவர்க்கத்திலேயே உள்ளார். எனவே, அவர் சுவர்க்கத்திலேயே மறு பிறவி எடுப்பார். இங்கே அனைவரும் நரகத்திலேயே மறுபிறவி எடுக்க வேண்டும். உங்களால் மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியும். கடவுள் பேசுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவரே தூய்மையாக்குபவர். அவர் கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் பூஜிப்பவரிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள். சுவர்க்கத்தில் அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும், அங்கே அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. இலக்கு மிக உயர்வானது. குமாரிகளாகிய நீங்கள் சேவை செய்வதிலும், பாரதத்தை நீங்கள் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள் என அனைவருக்கும் விளங்கப்படுத்துவதிலும் பெருமளவு உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குமாரி 21 தலைமுறைகளை ஈடேற்றுபவர். அவரால் மற்றவர்களை 21 பிறவிகளுக்கு ஈடேற்ற முடியும் என்பதே இதன் அர்த்தம். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகம் இப்பொழுது முடிவடைய உள்ளது. தந்தை இங்கு நேரடியாக வந்துள்ளார். எனவே, முற்றாக உங்களை அர்ப்பணித்து, கூறுங்கள்: பாபா, இவை அனைத்தும் உங்களுக்கு உரியவை. இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதால், நீங்கள் ஒரு தூய, புண்ணியாத்மா ஆகுவீர்கள்.2. ஒருபொழுதும் முரளியைத் தவறவிடாதீர்கள். முரளியைச் செவிமடுப்பதில் கவனயீனமாக இருக்காதீர்கள். “நான் ஒரு முரளியைக் கற்காவிட்டால் என்ன, நான் ஏற்கனவே அனைத்தையும் அடைந்து விட்டேன்” என நினைக்காதீர்கள். இல்லை. அது சரீர உணர்வாகும். நிச்சயமாக ஒவ்வொரு முரளியையும் கற்றிடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை வளைத்துக் கொள்வதன் மூலம், ஒரு நிஜத் தங்கமான, சுய மாற்றத்தை ஏற்படுத்துபவராகி, ஒவ்வொரு பணியிலும் வெற்றிநிறைந்தவர் ஆகுவீர்களாக.ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்களை மாற்றிக் கொண்டு சுயத்தை மாற்றுபவர்கள் ஆகுபவர்கள், சதா வெற்றிநிறைந்தவர்கள் ஆகுவார்கள். இதனாலேயே, உங்களை மாற்றுகின்ற இலட்சியத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் மாறினால் நீங்கள் மாறுவீர்கள் என்பதல்ல. மற்றவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ, நீங்கள் மாற வேண்டும். நீங்கள் அர்ஜூனர்கள் ஆகவேண்டும். உங்களை மாற்றுவதில் நீங்கள் எப்போதும் முதலில் இருக்க வேண்டும். இதில் முதலாவதாக இருப்பவர்கள், முதலாம் இலக்கத்தைப் பெறுகிறார்கள். ஏனென்றால், தங்களை வளைத்துக் கொள்பவர்களே நிஜத் தங்கங்கள் ஆவார்கள். நிஜத் தங்கத்திற்கே மதிப்பு உள்ளது.
சுலோகம்:
உங்களின் மேன்மையான வாழ்க்கையின் நடைமுறை அத்தாட்சியால் தந்தையை வெளிப்படுத்துங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
தந்தைக்குச் சமமானவர் ஆகித் தந்தைக்கு நெருக்கமானவர் ஆகுவதற்கு, உங்களின் மிகப்பெரிய எதிரியான காமத்தின் வடிவில் எந்தவிதமான தூய்மை இன்மையும் உங்களின் கனவுகளையேனும் தாக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் இலகுவாகவும் இயல்பாகவும் எப்போதும் சகோதரத்துவ விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவான உங்களின் ஆதி ஸ்திதியான, சகல நற்குணங்களினதும் சக்திகளினதும் சொரூபமாக இருக்கும் நிலையில் இருந்து கீழே வராதீர்கள்.