28.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், ஏனெனில் தந்தையை நினைவு செய்வதைத் தவிர வேறு எந்த அக்கறையையும் நீங்கள் கொண்டிருப்பதில்லை. எனினும் இந்தத் தந்தைக்கோ (பிரம்மா பாபா) பல அக்கறைகள் உள்ளன.
கேள்வி:
தந்தையின் தகுதிவாய்ந்த குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?பதில்:
அவர்கள் தொடர்ந்தும் அனைவருடைய புத்தியின் யோகத்தையும் தந்தையுடன் இணைக்கிறார்கள். அவர்கள் சேவாதாரிகள். அவர்கள் நன்கு கற்று, ஏனையோருக்கும் கற்பிக்கிறார்கள். அவர்கள் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அத்தகைய தகுதிவாய்ந்த குழந்தைகள் மட்டுமே தந்தையின் பெயரைப் புகழடையச் செய்கிறார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் ஏனையோரைப் பாழாக்குகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.பாடல்:
தாயும் தந்தையும் ஆனவரிடமிருந்து ஆசீர்வாதங்களைக் கோருங்கள்.ஓம் சாந்தி.
ஒவ்வொரு வீட்டிலும், பெற்றோரும், ஆசீர்வாதங்களை வேண்டுகின்ற இரண்டு தொடக்கம் நான்கு வரையான குழந்தைகளும் உள்ளார்கள். அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயம். அது எல்லைக்கு உட்பட்டதாக நினைவு கூரப்படுகின்றது. எல்லையற்றதைப் பற்றி எவருக்குமே எதுவும் தெரியாது. நீங்களே எல்லையற்ற தந்தையின் புதல்வர்களும், புதல்விகளும் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அப்பெற்றோர்கள் எல்லைக்கு உட்பட்டவர்கள். ஓர் எல்லைக்கு உட்பட்ட தாய், தந்தையரிடம் இருந்து நீங்கள் ஆசீர்வாதங்களைக் கோருகிறீர்கள். இவர் எல்லையற்ற தாயும் தந்தையும் ஆனவர். அந்த எல்லைக்குட்பட்ட பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். பின்னர் ஓர் ஆசிரியர் அவர்களுக்குக் கற்பிக்கிறார். இவரே எல்லையற்ற தாயும் தந்தையுமானவரும் எல்லையற்ற ஆசிரியரும் எல்லையற்ற சற்குருவும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அவரே பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவார். அவரே உண்மையைப் பேசி, உண்மையைக் கற்பிப்பவர். குழந்தைகள் வரிசைக்கிரமமானவர்கள். ஒரு பௌதீக வீட்டில் இரண்டு தொடக்கம் நான்கு வரையிலான குழந்தைகள் இருக்கும்பொழுது, அவர்களில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இங்கு, பல குழந்தைகள் உள்ளார்கள். பல நிலையங்களில் இருந்து குழந்தைகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன: இக்குழந்தை இவ்வாறானவர், இவர் அசுர குணம் உடையவராக நடந்து கொள்கின்றார், இவர் ஏனையோரைக் குழப்புகிறார், இவர் தடைகளை உருவாக்குகிறார். இந்தத் தந்தைக்கு அக்கறை இருக்கிறதுதானே? இவர் மனித குலத்தின் தந்தையாகிய, பிரஜாபிதா, அல்லவா? அவர் பல குழந்தைகளையிட்டு அக்கறை கொண்டிருக்கின்றார். ஆகவே, பாபா கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களால் தந்தையின் நினைவில் மிகவும் நன்றாக நிலைத்திருக்க முடியும், இவருக்கு ஆயிரக்கணக்கான அக்கறைகள் உள்ளன. எனினும் ஒரேயொரு அக்கறை உள்ளது. ஆயிரக்கணக்கான வேறு பல அக்கறைகளும் உள்ளன. பல குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். மாயையும் கொடிய எதிரி. அவள் சிலரின் தோலை மிகவும் நன்றாக உரித்து விடுகிறாள். அவள் சிலரின் மூக்கைப் பற்றிப் பிடிக்கிறாள், ஏனையோரின் பின்னலைப் பிடித்து இழுக்கின்றாள். எவ்வாறாயினும், அவர்கள் எல்லோரைப் பற்றியும் இவர் (பிரம்மா) சிந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இவர் எல்லையற்ற தந்தையின் நினைவிலும் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். நீங்கள் கூறுகிறீர்கள்: “நான் ஏன் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, அவரிடமிருந்து என்னுடைய முழு ஆஸ்தியையும் கோரக்கூடாது?” அனைவராலும் சம அளவில் முன்னேற முடியும் என்பதல்ல. ஏனெனில் இங்கே ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது வேறு எவரது புத்தியிலும் பிரவேசிக்க முடியாது. இது மிகவும் மேன்மையான கல்வி. நீங்கள் இராச்சியத்தை அடைந்து விட்டதும், எவ்வாறு அந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை அறிய மாட்டீர்கள். அந்த இராச்சியத்தின் ஸ்தாபனைப் பணியானது மிகவும் அற்புதமானது. நீங்கள் இப்பொழுது அனுபவசாலிகள். முன்னர், இவருக்குமே, இவர் யாராக இருந்தார் என்பதோ, எவ்வாறு 84 பிறவிகளை எடுத்திருந்தார் என்பதோ தெரியாது. இவர் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளார். நீங்களும் கூறுகிறீர்கள்: “பாபா, நீங்களே அதே அவர்”. இவ்விடயம் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை மட்டுமே இந்நேரத்தில் வந்து, அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகிறார். இந்த நேரத்தில், ஒருவர் ஒரு கோடீஸ்வரராக அல்லது பல்கோடீஸ்வரராக இருந்தாலென்ன, தந்தை கூறுகிறார்: இப்பணம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாகவுள்ளன. எவ்வாறாயினும், இன்னமும் எவ்வளவு காலம் எஞ்சியுள்ளது? நீங்கள் வானொலியில் செய்திகளைச் செவிமடுக்கிறீர்கள் அல்லது செய்தித்தாள்களை வாசிக்கிறீர்கள். என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள். நாளுக்கு நாள், சண்டையிடுதல் தொடர்ந்தும் பெருமளவு அதிகரிக்கிறது. அனைத்தும் சிக்கல் ஆகுகின்றது. அவர்கள் அனைவரும் தங்கள் மத்தியில் சண்டையிட்டு, மரணிக்கிறார்கள். ஆயத்தங்கள் செய்யப்படுவதைப் பார்க்கும்பொழுது, எந்த நேரத்திலும் யுத்தம் ஆரம்பிக்கலாம் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. என்ன நடக்கின்றது என்பதோ அல்லது இனிமேல் என்ன நடக்கும் என்பதையோ உலகம் அறியாதுள்ளது. உங்கள் மத்தியிலும், மிகச் சிலர் முழுமையாகப் புரிந்துகொண்டு, சந்தோஷமாக இருக்கிறீர்கள். இன்னமும் சில நாட்களுக்கே நாங்கள் இவ்வுலகில் இருப்போம். நாங்கள் இப்பொழுது கர்மாதீத ஸ்திதியை நோக்கி முன்னேற வேண்டும். ஒவ்வொருவரும் சுயத்திற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். எவ்வாறாயினும், எவ்வளவிற்கு அதிகமாக உங்களில் எவரும் முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவு பலனை நீங்கள் அடைவீர்கள். உங்களுக்கென முயற்சி செய்து, ஏனையோரையும் முயற்சி செய்யத் தூண்டி, அனைவருக்கும் பாதையைக் காண்பியுங்கள். இப்பழைய உலகம் முடிவடையப் போகின்றது. இப்பொழுது பாபா புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். இவ்விநாசம் நடைபெறுவதற்கு முன்னர், புதிய உலகத்துக்காக இக்கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் பெருமளவுக்குப் பக்தி செய்துள்ளீர்கள். அரைக் கல்பமாக, நீங்கள் இராவண இராச்சியத்தில் இருந்தீர்கள். யார் இராமர் என்பதையும், இராம இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதைக் கூட எவரும் அறிய மாட்டார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே இவை அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். உங்கள் மத்தியில், முற்றிலும் எதையும் அறியாத சிலரும் உள்ளார்கள். ஒரே தந்தையுடன் அனைவரினதும் புத்தியின் யோகத்தை இணைப்பவர்களே, தந்தையின் தகுதிவாய்ந்த குழந்தைகள். சேவாதாரிகளும் நன்கு கற்பவர்களும் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் தகுதியற்றவர்கள். அவர்கள் சேவைக்குப் பதிலாக, அவச்சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏனையோரின் புத்தியின் யோகத்தைத் தந்தையிடமிருந்து துண்டித்து விடுகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்துக்கேற்ப, இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. முழுமையாகக் கற்காதவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஏனையோரைப் பாழாக்கியும் விடுவார்கள். இதனாலேயே குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டும் உள்ளது: தந்தையைப் பின்பற்றுங்கள். சேவாதாரிகளினதும், பாபாவின் இதயத்தில் அமர்ந்துள்ள குழந்தைகளினதும் சகவாசத்தையே கொண்டிருங்கள். நீங்கள் கேட்க முடியும்: “நான் யாருடைய சகவாசத்தை வைத்திருப்பது?” பாபா யாருடைய சகவாசம் மிகவும் சிறந்ததென்று உடனடியாகவே உங்களுக்குக் கூறுவார். தவறான வழியில் நிறமூட்டப்பட்டுள்ள அத்தகைய சகவாசத்தைக் கொண்டிருக்கும் பலர் உள்ளார்கள். நினைவு கூரப்படுகின்றது: “நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கிறது; தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கிறது”. தீய சகவாசம் உங்களில் செல்வாக்குச் செலுத்தினால், நீங்கள் முழுமையாகவே அழிக்கப்பட்டு விடுவீர்கள். ஒரு வீட்டிற்கு, பணிப்பெண்களும் வேலையாட்களும் தேவைப்படுகிறார்கள். பிரஜைகளுக்கும் வேலையாட்கள் தேவைப்படுகிறார்கள். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதற்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவை. ஆகவே, இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டடைந்து விட்டதனால், அவரிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெற்று, அதைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால், உங்கள் அந்தஸ்து ஒன்றுமில்லாததற்காக அழிக்கப்பட்டு விடும். இது ஒரு கல்வி. இப்பொழுது நீங்கள் இதில் சித்தியடையாது விட்டால், தொடர்ந்தும் கல்பம் கல்பமாகப் பிறவிபிறவியாகச் சித்தியடைய மாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது நன்றாகக் கற்றால், தொடர்ந்தும் கல்பம் கல்பமாக நன்றாகக் கற்பீர்கள். நன்கு கற்காதவர்கள் என்ன அந்தஸ்தை அடைவார்கள்? அவர்களே புரிந்து கொள்கிறார்கள்: “நாங்கள் முற்றாகவே எச்சேவையும் செய்வதில்லை. எங்களை விடவும் பலர் அதிக திறமைசாலிகள். திறமைசாலிகள் மட்டுமே சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, திறமைசாலிகள் நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் அடைவார்கள். நான் அந்தளவுக்குச் சேவை செய்யாததால், என்னால் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியாமல் உள்ளது”. ஓர் ஆசிரியரால் அவருடைய மாணவர்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர் ஒவ்வொரு நாளும் கற்பிக்கிறார், அவர் ஒரு பதிவேட்டையும் வைத்திருக்கிறார். அவர்களின் கல்விக்கான பதிவேடும், அவர்களின் நடத்தைக்கான பதிவேடும் வைக்கப்பட்டுள்ளன. இங்கும், அதைப் போன்றே உள்ளது. யோகமே இதில் பிரதான விடயமாகும். உங்கள் யோகம் சிறந்ததாக இருப்பின், உங்கள் நடத்தையும் சிறந்ததாக இருக்கும். எவ்வாறாயினும், சில சமயங்களில் கற்கும் வேளையில் ஆணவம் இருக்கிறது. இங்கு நீங்கள் நினைவுசெய்வதற்கு, மறைமுகமான முயற்சி செய்ய வேண்டும். இதனாலேயே பல அறிக்கைகள் வருகின்றன: “பாபா, என்னால் யோகத்தில் நிலைத்திருக்க முடியவில்லை.” பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: “யோகம்” என்னும் வார்த்தையை அகற்றுங்கள். நீங்கள் யாரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்களோ, அந்தத் தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? இது ஓர் அற்புதம். தந்தை கூறுகிறார்: ஓ ஆத்மாக்களே, உங்கள் தந்தையான, என்னை நீங்கள் நினைவு செய்வதில்லையா! நான் உங்களுக்குப் பாதையைக் காட்டுவதற்கு வந்துள்ளேன். என்னை நினைவு செய்யுங்கள், இந்த யோகத் தீயில் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு விடும். பக்தி மார்க்கத்தில், மனிதர்கள் தொடர்ந்தும் அதிகளவு தடுமாறுகிறார்கள். அவர்கள் கும்பமேளாவில் மிகவும் குளிர்மையான நீரில் நீராடுகிறார்கள்; அவர்கள் பல்வேறு சிரமங்களைச் சகித்துக் கொள்கிறார்கள். இங்கு, சிரமங்கள் கிடையாது. முதற்தரமான குழந்தைகள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் உண்மையான காதலிகளாகித் தொடர்ந்தும் அவரை நினைவு செய்கிறார்கள். அவர்கள் உலாச் செல்லும்பொழுது, ஒரு மலர்த் தோட்டத்தில் ஏகாந்தத்தில் அமர்ந்து, அவரை நினைவு செய்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் எந்த வகையான வம்பளத்தலில் ஈடுபட்டாலும் சூழல் பாழாக்கப்படுகிறது. உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், தந்தையை நினைவுசெய்வதைப் பயிற்சி செய்யுங்கள். உண்மையான அன்பிற்கினியவரின் முதற்தரமான அன்பிற்கு உரியவர்கள் ஆகுங்கள். தந்தை கூறுகிறார்: சரீரதாரிகளின் புகைப்படங்களை வைத்திருக்காதீர்கள். நீங்கள் நினைவுசெய்ய வேண்டிய, ஒரேயொரு சிவபாபாவின் படத்தை மட்டும் வைத்திருங்கள். உதாரணமாகக் கூறவேண்டுமெனில், நீங்கள் தொடர்ந்தும் உலகச் சக்கரத்தை நினைவுசெய்ய விரும்பினால், திரிமூர்த்தியினதும், சக்கரத்தினதும் படங்கள் முதற்தரமானவையாக உள்ளன. அவற்றில் ஞானம் முழுவதும் உள்ளது. “சுயதரிதனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள்” என்னும் உங்கள் பட்டம் அர்த்தம் நிறைந்தது. புதியவர் எவரேனும் இந்தப் பட்டத்தைக் கேட்க நேரிட்டால், அவரால் புரிந்து கொள்ள இயலாதிருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இதைப் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் மத்தியில் கூட, பாபாவை மிகவும் நன்றாக நினைவு செய்பவர்கள் சிலர் உள்ளார்கள். முற்றிலும் பாபாவை நினைவு செய்யாத பலர் உள்ளார்கள். அவர்கள் தாங்களாகவே அனைத்தையும் பாழாக்குகிறார்கள். எவ்வாறாயினும், இக்கல்வி மிகவும் இலகுவானது. தந்தை கூறுகிறார்: மௌனத்தின் மூலம் நீங்கள் விஞ்ஞானத்தை வெற்றி கொள்வீர்கள். விஞ்ஞானம், மௌனம் எனும் வார்த்தைகள் (ஆங்கிலத்தில்) ஒரே முதலெழுத்தையும், ஒரே ஓசையையும் கொண்டுள்ளன. இராணுவத்தில், மூன்று நிமிட மௌனத்தைக் கடைப்பிடிக்குமாறு செய்யப்படுகிறார்கள். மனிதர்களும் அமைதியையே விரும்புகின்றார்கள். மகா பிரம்ம தத்துவமான பிரம்மாண்டமே நிச்சயமாக அமைதிக்கான இடம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். அங்கேயே சின்னஞ்சிறிய புள்ளிகளான ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கின்றோம். ஆத்மாக்கள் அனைவரினதும் அந்த விருட்சம் உண்மையிலேயே அற்புதமாக இருக்க வேண்டும். மனிதர்களும் கூறுகிறார்கள்: “நெற்றியின் மத்தியில் ஒரு வியப்புக்குரிய, தனித்துவமான நட்சத்திரம் பிரகாசிக்கிறது”. தங்கத்தினாலான மிகவும் சின்னஞ் சிறிய திலகத்தை அவர்கள் உருவாக்கி, அதை நெற்றியில் வைக்கிறார்கள். ஆத்மாவும் ஒரு புள்ளியே. தந்தை வந்து, அதன் அருகில் அமர்கிறார். எவருக்கும், சாதுக்கள், சந்நியாசிகள் போன்றோர்களுக்குக் கூட, தன்னுடைய சொந்த ஆத்மாவைத் தெரியாது. அவர்கள் ஆத்மாக்களையே அறியாதபொழுது, எவ்வாறு அவர்கள் பரமாத்மாவை அறியக்கூடும்? பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே ஆத்மாக்களையும், பரமாத்மாவையும் அறிந்து கொள்கிறீர்கள். ஏனைய சமயத்தவர்களால் அதனை அறிய முடியாதுள்ளது. எவ்வாறு அத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மா தன்னுடைய பாகம் முழுவதையும் நடிக்கிறார் என்பதை இப்பொழுது மட்டும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அவர்கள் பல சத்சங்கங்களை நடத்துகிறார்கள். இருப்பினும், அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. இவரும், பல குருமார்களை ஏற்றுக் கொண்டார். இப்பொழுது தந்தை கூறுகிறார்: அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்துக்குரிய குருமார்கள். இந்த ஞான மார்க்கத்தில் ஒரு குரு மட்டும் உள்ளார். ஒற்றைக் கிரீடம் அணிந்த அரசர்கள் இரட்டைக் கிரீடம் அணிந்த அரசர்கள் முன்னிலையில் தலைவணங்குகிறார்கள். அந்த அரசர்கள் தூய்மையானவர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் தலைவணங்குகிறார்கள். அத்தூய்மையான அரசர்களுக்கு மட்டுமே ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை அற்றவர்கள் சென்று, அவர்களின் முன்னால் (அவர்களின் விக்கிரகங்கள்) விழுந்து வணங்குகின்றார்கள். ஆனால் அவர்கள் யார் என்பதோ, அவர்கள் ஏன் அவர்களுக்குத் தலைவணங்குகிறார்கள் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. சோமநாதர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, அவர்கள் அங்கு பூஜிக்கிறார்கள், ஆனால் அவர்கள் எவ்வாறு ஒரு புள்ளியைப் பூஜிக்க முடியும்? எவ்வாறு ஒரு புள்ளிக்கு ஓர் ஆலயம் கட்டப்பட்டிருக்கும்? இவை மிகவும் ஆழமான விடயங்கள். அனைத்துக்கும் பின்னர், இவ்விடயங்கள் கீதை போன்றவற்றில் இல்லை. ஒரேயொரு அதிபதியால் மாத்திரமே அவற்றை விளங்கப்படுத்த முடியும். அத்தகைய சின்னஞ் சிறிய ஆத்மா ஒவ்வொன்றிலும் எவ்வாறு ஒரு பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், அவர்களின் பாகங்களும் அநாதியானவை. அது ஓர் அற்புதம். இந்த நாடகம் முழுவதும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. அவர்களும் கூறுகிறார்கள்: “ஏற்கனவே படைக்கப்பட்டதே மீண்டும் படைக்கப்படுகின்றது”. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளதே, நிச்சயமாக நடைபெறும்; கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை. எது நடந்தாலும் கண்ணீர் விடமாட்டோம் என்று இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் சத்தியம் செய்ய வேண்டும். இன்ன இன்னார் இறந்தார், அந்த ஆத்மா உடலை நீக்கி, வேறொரு சரீரத்தை எடுத்துள்ளார். அவ்வாறாயின், அழுவதற்கு என்ன அவசியம் உள்ளது? எவ்வாறாயினும், அவரால் திரும்பிவர முடியாது. நீங்கள் கண்ணீர் விட்டால், தோற்கின்றீர்கள். ஆகவே, பாபா கூறுகிறார்: நீங்கள் என்றுமே அழ மாட்டீர்கள் என்று உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள். அப்பால் உள்ள தாமமாகிய, பிரமாண்டத்தில் வசிக்கின்ற, தந்தையைச் சந்திக்கின்ற அக்கறையே உங்களுக்கு இருந்தது. நீங்கள் அவரைக் கண்டடைந்து விட்டீர்கள். இதனை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? தந்தை கூறுகிறார்: தந்தையான, என்னை நினைவுசெய்யுங்கள். நான் இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு ஒருமுறை மட்டுமே வருகிறேன். இதில் சண்டையிடல் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது. ஒரு யுத்தம் இடம்பெற்றதாகவும், அதில் பாண்டவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டனர் என்றும் கீதையில் காட்டப்பட்டுள்ளது. தங்களுடன் அவர்கள் ஒரு நாயை அழைத்துச் சென்று மலைகளில் மறைந்து விட்டார்கள். அவர்கள் வெற்றியடைந்து, பின்னர் மரணித்தார்கள். அவ்விடயத்தில் அர்த்தமில்லை. அவை அனைத்தும் கட்டுக்கதைகள். அது பக்தி மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் அதில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். பழைய விடயங்களில் வெறுப்பு உள்ளது. வெறுப்பு என்பது ஒரு கசப்பான வார்த்தை. “விருப்பமின்மை” என்னும் வார்த்தை இனிமையானது. இந்த ஞானம் பெறப்படும்பொழுது, பக்திக்கான விருப்பமின்மை ஏற்படுகின்றது. இந்த ஞானத்தின் பலன் பின்னர் சத்திய, திரேதா யுகங்களில் 21 பிறவிகளுக்குப் பெறப்படுகிறது. அங்கு, இ;ந்த ஞானத்துக்கான தேவை எதுவும் இல்லை. பின்னர், நீங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, ஏணியில் கீழிறங்கி வருகிறீர்கள். இப்பொழுது முடிவு ஏற்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இப்பழைய உலகத்துக்கான விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். பின்னர் அதே நீங்களே தேவர்கள் ஆகுவீர்கள். இவ்விடயங்களைப் பற்றி ஏனைய மனிதர்கள் என்ன அறிவார்கள்? அவர்கள் பல்வகை ரூபத்தின் படங்களை உருவாக்கினாலும், அதில் உச்சிக்குடுமியோ அல்லது சிவபாபாவோ இல்லை. அவர்கள் வெறுமனே கூறுகிறார்கள்: “தேவர்கள், சத்திரியர்கள்,வைசியர்கள்,சூத்திரர்கள்”. அவ்வளவுதான். யார், எவ்வாறு அவர்களைச் சூத்திரர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் தேவர்களாக இருந்தபொழுது, மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். பின்னர் அந்தப் பணம் அனைத்தும் எங்கே சென்றது? தொடர்ந்தும் நாங்கள் தலைவணங்கிக் கொண்டே எங்கள் பணத்தை வீண்விரயம் ஆக்கினோம். நாங்கள் தரையில் விழுந்து விழுந்து வணங்கியதால் வழுக்கையும் விழுந்தது. அது நேற்றைய விடயம். நான் உங்களை அவ்வாறு ஆக்கிய பின்னர் பிரிந்து சென்றேன். இப்பொழுது, நீங்கள் என்னவாகி விட்டீர்கள் என்று பாருங்கள்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஏனையோரைப் பற்றி எந்த வகையான வம்பு பேசுவதாலும் சூழலைப் பாழாக்க வேண்டாம். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, ஓர் உண்மையான காதலியாகி, உங்கள் அன்பிற்கினியவரை நினைவு செய்யுங்கள்.2. உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள்: “ஒருபொழுதும் நான் அழ மாட்டேன். நான் ஒருபொழுதும் கண்ணீர் விட மாட்டேன்”. சேவாதாரிகளினதும் தந்தையின் இதயத்தில் அமர்ந்து இருப்பவர்களினதும் சகவாசத்தை மட்டுமே கொண்டிருங்கள். உங்கள் பதிவேட்டைச் சிறந்ததாக வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக உபகாரியாகி, உங்கள் மனதின் சக்திவாய்ந்த மனோபாவத்தின் மூலம் சேவை செய்வீர்களாக.உலகில் பரிதவிக்கின்ற ஆத்மாக்களுக்குச் சரியான பாதையைக் காட்டும்பொருட்டு, மிகச் சரியாக தந்தையைப் போல் வெளிச்ச வீடாகவும், சக்தி வீடாகவும் ஆகுங்கள். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஏதோவொன்றைக் கொடுக்கின்ற இலக்கை நிச்சயமாக வைத்திருங்கள். நீங்கள் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ கொடுத்தாலும், ஒரு மகாதானியாகவும் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருங்கள். தற்சமயம், நீங்கள் உங்களுடைய சொந்த இடங்களுக்கே சேவை செய்கின்றீர்கள். ஆனால் இப்பொழுது ஓரிடத்தில் இருந்தவாறு சூழலில் உங்கள் மனதின் சக்தியையும், அதிர்வலைகளையும் பரப்புவதால், சேவை செய்யுங்கள். அந்தச் சூழலை உருவாக்கும் வகையில், அத்தகைய சக்திவாய்ந்த மனோபாவத்தை உருவாக்குங்கள். அப்பொழுது நீங்கள் ஓர் உலக உபகாரி எனப்படுவீர்கள்.
சுலோகம்:
சரீரமற்றவர் ஆகுகின்ற பயிற்சியைச் செய்து, வீணான எண்ணங்கள் இல்லாத உணவுமுறையைக் கடைப்பிடித்து, உங்களை ஆரோக்கியமானவர் ஆக்குங்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியத்தினதும், நல்ல பண்புகளினதும் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
இப்பொழுது, உங்கள் சொற்பொழிவுகளில், புதியதாக ஏதோவொன்று இருக்கட்டும். உலக அமைதிக்காக நீங்கள் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளீர்கள். ஆனால் இப்பொழுது இந்த ஆன்மீக ஞானத்தின் சக்தி என்ன, யார் அதன் மூலாதாரமாக இருப்பவர் என்று நிரூபியுங்கள். இந்த உண்மையை நல்ல பண்புகளின் மூலம் நிரூபியுங்கள். கடவுளின் பணி இடம்பெறுவதை இப்பொழுது மக்கள் புரிந்து கொள்ளட்டும். பெண்கள் மிகச்சிறந்த வேலையைச் செய்வதாக மக்கள் கூறுகின்றார்கள். காலத்திற்கு ஏற்ப, இந்தக் களம் தயார் செய்யப்பட வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், “தந்தை மகனைக் காட்டுகின்றார்” எனக் கூறப்படுவதைப் போல், அதேவிதமாக, “மகன் தந்தையைக் காட்டுகின்றார்” என்பது ஏற்படும்பொழுது, வெளிப்படுத்தலுக்கான கொடி ஏற்றப்படும்.