28.07.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.12.20     Om Shanti     Madhuban


உங்களின் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து, ஒரு சதா மகாதானி ஆகுங்கள்.


இன்று, புதிய யுகத்தினைப் படைப்பவர், புதிய யுகத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். இன்று, இந்தப் பழைய யுகத்தில் நீங்கள் சாதாரணமாக இருக்கிறீர்கள். ஆனால் நாளை, புதிய யுகத்தில், நீங்கள் இராச்சியத்திற்கு உரிமையுடைய பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். இது இன்றும் நாளைக்குமான ஒரு நாடகம் ஆகும். நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்? நாளை நீங்கள் எப்படி ஆகுவீர்கள்? குறிப்பாக ஞானி ஆத்மாக்களான குழந்தைகளுக்கு, வரப்போகும் நாளை, இன்றுபோல் தெளிவாக இருக்கும். நீங்கள் எல்லோரும் புது வருடத்தைக் கொண்டாட வந்துள்ளீர்கள். ஆனால், பாப்தாதா புதிய யுகத்தைப் பார்க்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் புது வருடத்திற்காக உங்களின் சொந்தப் புதிய திட்டத்தைச் செய்திருப்பீர்கள். இன்று, இது பழைய வருடத்தின் முடிவாகும். முழு வருடத்திற்கான பெறுபேறும் அதன் இறுதியில் பார்க்கப்படும். ஆகவே, இன்று, பாப்தாதாவும் குழந்தைகளின் முழு வருடத்திற்குமான பெறுபேற்றைப் பார்த்தார். அதைப் பார்ப்பதற்கு பாப்தாதாவிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. எனவே, இன்று, பாப்தாதா குறிப்பாக உங்கள் ஒவ்வொருவரினதும் சேமிப்புக் கணக்கைப் பார்த்தார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் முயற்சி செய்தீர்கள். நீங்கள் நினைவிலும் இருந்தீர்கள். நீங்கள் சேவை செய்தீர்கள். அத்துடன் உங்களின் லௌகீக, அலௌகீக நெருங்கிய தொடர்புகளுக்கும் உறவுகளுக்குமான உங்களின் பொறுப்புக்களையும் நிறைவேற்றினீர்கள். எவ்வாறாயினும், இந்த மூன்று விடயங்களிலும் உங்களின் சேமிப்புக்கணக்கில் எவ்வளவு வரவு வைத்தீர்கள்?

இன்று, பாப்தாதா சூட்சும வதனத்தில் அன்னை ஜெகதாம்பாவை (உலகத்தாய்) தோன்றச் செய்தார். (பாபா இருமினார்) இன்று, ஹார்மோனியத்திற்கு சுகமில்லை. ஆனாலும் அதை இசைக்க வேண்டியுள்ளது. எனவே, பாப்தாதாவும் மம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து, ஒவ்வொருவரின் சேமிப்புக் கணக்குகளையும் நீங்கள் எவ்வளவற்றை வரவு வைத்துள்ளீர்கள் என்றும் சேமித்துள்ளீர்கள் என்றும் பார்த்தார்கள். அவர்கள் எதைப் பார்த்தார்கள்? நீங்கள் எல்லோரும் வரிசைக்கிரமமானவர்கள். ஆனால், உங்களின் சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டியதை விடக் குறைவாகவே வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனால், அன்னை ஜெகதாம்பா ஒரு கேள்வி கேட்டார்: பல குழந்தைகளுக்கு நினைவெனும் பாடத்தில் மிக நல்ல இலட்சியம் உள்ளது. அத்துடன் அவர்கள் நல்ல முயற்சியும் செய்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருக்க வேண்டிய அளவு ஏன் காணப்படவில்லை? தங்களுக்குள்ளே உரையாடிய பின்னர், வெளிப்பட்ட பெறுபேறு என்னவென்றால், நீங்கள் யோகத்தைப் பயற்சி செய்கிறீர்கள், ஆனால், யோக ஸ்திதியின் சதவீதம் சாதாரணமாக இருப்பதனால், சேமிப்புக் கணக்குகளும் சாதாரணமாகவே உள்ளன. யோகத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் இலக்கு மிகவும் நல்லது. ஆனால், யோகத்தின் பெறுபேறு, உங்களின் வார்த்தைகளிலும் நடத்தையிலும் நீங்கள் யோகியுக்தாகவும் யுக்தியுக்தாகவும் இருக்க வேண்டும். இது குறைவாக இருப்பதனாலேயே, யோகம் செய்யும் வேளையில், நீங்கள் யோகத்தை மிக நன்றாகச் செய்கிறீர்கள். ஆனால் யோகி என்றால், அது உங்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனாலேயே, உங்களால் சில வேளையில் மட்டுமே உங்களின் சேமிப்புக்கணக்கில் வரவு வைக்க முடிகிறது. ஆனால் எல்லா வேளைகளிலும் முடிவதில்லை. தொடர்ந்து செயல்படும்போது, உங்களின் நினைவின் சதவீதம் சாதாரணமானதாக ஆகிவிடுகிறது. அப்போது மிகச்சிறிதளவே உங்களின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இரண்டாவதாக, சேவையைப் பற்றியும் இதயபூர்வமான உரையாடல் இடம்பெற்றது. நீங்கள் அதிகளவு சேவை செய்கிறீர்கள். இரவு பகலாக அதில் பிஸியாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக நல்ல திட்டங்களையும் செய்கிறீர்கள். சேவையிலும் மிக நல்ல விரிவாக்கம் காணப்படுகிறது. அப்படியிருந்தும், உங்களில் பெரும்பாலானோரின் சேமிப்புக் கணக்கில் ஏன் மிகச்சிறிதளவே காணப்படுகிறது? இதயபூர்வமான உரையாடலின் போது வெளிப்பட்ட விடயம் என்னவென்றால், நீங்கள் எல்லோரும் சேவை செய்கிறீர்கள். உங்களை பிஸியாக வைத்திருப்பதற்கும் மிக நல்ல முயற்சியைச் செய்கிறீர்கள். அப்படியென்றால், காரணம் என்ன? வெளிப்பட்ட காரணம் என்னவென்றால், நீங்கள் சேவையில் இருந்து சக்தியைப் பெறுகிறீர்கள், அத்துடன் சேவையின் பலனையும் பெறுகிறீர்கள். உங்களின் இதயங்களில் உள்ள திருப்தியே, சக்தியாகும். எல்லோரும் திருப்தியாக இருப்பதே பலனாகும். நீங்கள் சேவை செய்து, முயற்சி செய்து, உங்களின் நேரத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்தியிருந்தால், உங்களின் இதயத்திலும் திருப்தியாக இருப்பீர்கள். ஏனைய எல்லோரும் திருப்தியாக இருப்பார்கள். அவர்கள் உங்களின் சகபாடிகளோ அல்லது நீங்கள் சேவை செய்கின்றவர்களோ, அது யாராக இருந்தாலும், அவர்களின் இதயங்களில் திருப்தியின் அனுபவம் ஏற்பட வேண்டும். ‘மிகவும் நல்லது, மிகவும் நல்லது!’ எனக் கூறியவண்ணம் அவர்கள் போவதாக இருக்கக்கூடாது. அவர்கள் தமது இதயங்களில் திருப்தியின் அலையை அனுபவம் செய்ய வேண்டும். ‘நாம் இதைக் கண்டுபிடித்துவிட்டோம்!’ அல்லது ‘மிக நல்ல விடயத்தை நாம் கேட்டோம்!’ எனச் சொல்வது வேறு விடயம். ‘நாம் இதைக் கண்டுவிட்டோம்! நாம் இதை அடைந்துவிட்டோம்!’ என அவர்கள் சொல்ல வேண்டும். பாப்தாதா உங்களுக்கு முன்னரும் இதைக் கூறியுள்ளார்: அம்பு தலையைத் தாக்குவது ஒரு விடயம். அம்பு இதயத்தைத் துளைத்துச் செல்வது வேறு விடயம். சேவையைப் பெற்று, தான் திருப்தி அடைவதென்றால், தன்னைச் சந்தோஷப்படுத்தி, என்ன நடந்ததோ அது மிகவும் நல்லது என்று சொல்வதல்ல. இல்லை! சுயத்தின் இதயமும் மற்றவர்களும்கூட இதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இரண்டாவதாக, நீங்கள் சேவை செய்து, நீங்கள் பெறுகின்ற பெறுபேறானது, நீங்கள் முயற்சி செய்தீர்கள், நீங்கள் அதைச் செய்தீர்கள் - நீங்கள்தான் அதைச் செய்தீர்கள் என நீங்கள் ஏற்றுக் கொண்டால் - நீங்கள் சேவையின் பழத்தை உண்டுவிட்டீர்கள், நீங்கள் அதைச் சேமிக்கவில்லை என்றே அர்த்தம். பாப்தாதாதான் உங்களை அதைச் செய்ய வைத்தார். அதன்பின்னர், நீங்கள் அவர்களின் கவனத்தை பாப்தாதாவை நோக்கி ஈர்த்தீர்கள், ஆத்மாவான உங்களை நோக்கி அல்ல. ‘இந்தச் சகோதரி மிகவும் நல்லவர்! இந்தச் சகோதரர் மிகவும் நல்லவர்!’ என்பதல்ல. ‘அவர்களின் பாப்தாதா மிகவும் நல்லவர்!’ என்பதாக இருக்க வேண்டும். இதை அவர்கள் அனுபவம் செய்ய வைப்பது, உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கும். இதனாலேயே, முழுமையான பெறுபேறாக, நீங்கள் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள், நீங்கள் அதிகளவு நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்துகிறீர்கள், ஆனால், நீங்கள் சிறிதளவு அதிகமான புறப் பகட்டைக் கொண்டிருக்கிறீர்கள். இதனாலேயே, சேமிப்புக் கணக்கில் அதிகளவு குறைவாக உள்ளது. சேமிப்புக் கணக்கின் சாவி மிகவும் இலகுவானது. அது ஒரு வைரச் சாவி. நீங்கள் ஒரு தங்கச் சாவியைப் பயன்படுத்துகிறீர்கள். எவ்வாறாயினும், ஒரு பணிவான கருவியாக இருக்கும் உணர்வு என்பதே சேமிப்பதற்கான வைரச்சாவி ஆகும். சேவை செய்யும் நேரத்தில் - முன்போ அல்லது பின்போ அல்ல, ஆனால் சேவை செய்யும் அந்த நேரத்தில் - ஒரு பணிவான கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருங்கள். அத்துடன் உங்களின் சகபாடிகளோ அல்லது நீங்கள் சேவை செய்யும் ஆத்மாக்களோ யாராக இருந்தாலும், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சுயநலமற்ற நல்லாசிகளையும் தூய அன்பையும் கொண்டிருங்கள்.

இந்த முறையில் தொடர்ந்து சேவை செய்பவர்களின் சேமிப்புக்கணக்கானது எப்படித் தொடர்ந்து அதிகரிக்கிறது என பாப்தாதா அன்னை ஜெகதாம்பாவிற்குக் காட்டினார். இப்போது நீங்கள் பல மணிநேரங்களாகச் செய்வதை உங்களால் ஒரு விநாடியில் சேமிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விநாடியும் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும் - டிக், டிக், டிக். ‘எல்லாவற்றையும் விரைவாகச் செய்யுங்கள்’ என அது உங்களுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கும். ஓர் இயந்திரம் இயங்குவதைப் போன்றிருக்கும். ஆகவே, உங்களின் சேமிப்புக் கணக்கில் சேமிப்பதும் வரவு வைப்பதும் மிகவும் இலகுவானது என்பதைப் பார்த்து, ஜெகதாம்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதனால், பாப்தாதா, ஜெகதாம்பா இருவரிடமிருந்தும் உங்களுக்கான அறிவுரை என்னவென்றால், இப்போது புதிய வருடம் ஆரம்பிப்பதனால், உங்களின் சேமிப்புக் கணக்குகளைச் சோதித்துப் பாருங்கள். நாள் முழுவதும் நீங்கள் தவறுகளைச் செய்திருக்காவிட்டாலும், உங்களின் நேரம், எண்ணங்கள், சேவை, நெருங்கிய தொடர்புகள் மற்றும் உறவுகளுடன், நாள் முழுவதும் அன்பாகவும் திருப்தியாகவும் இருந்து, நீங்கள் எவ்வளவைச் சேமித்தீர்கள்? சில குழந்தைகள், அன்றைய நாளில் தாம் எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை அல்லது தாம் எவருக்கும் துன்பம் கொடுக்கவில்லை என்பதை மட்டும் சோதிக்கிறார்கள். எவ்வாறாயினும், நாள் முழுவதும் உங்களின் மேன்மையான எண்ணங்களால் உங்களின் கணக்கிலே எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள் என்பதைச் சோதியுங்கள். மேன்மையான எண்ணங்களால் உங்களின் சேவைக் கணக்கிலே எவ்வளவு வரவு வைத்தீர்கள்? எந்தவொரு பணியாலும் எத்தனை ஆத்மாக்களை சந்தோஷப்படுத்தினீர்கள்? நீங்கள் யோகம் செய்தீர்கள். ஆனால், அந்த யோகத்தின் சதவீதம் என்ன? இன்று உங்களின் ஆசீர்வாதக் கணக்குகளில் எவ்வளவு சேமித்தீர்கள்?

இந்தப் புது வருடத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என்னதான் செய்தாலும், எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்கள் எவையாயினும், காலத்திற்கேற்ப, உங்களின் மனங்களில் இந்த ஆழமான அக்கறை இருக்க வேண்டும்: நான் நிச்சயமாக ஒரு சதா மகாதானி ஆகவேண்டும். ஒரு சதா மகாதானி. வெறும் மகாதானி அல்ல, சதா! உங்களின் மனதினால் சக்திகளைத் தானம் செய்யுங்கள். வார்த்தைகளால் ஞானத்தைத் தானம் செய்யுங்கள். உங்களின் செயல்களால் நற்குணங்களைத் தானம் செய்யுங்கள். இன்றைய உலகில், பிராமணக் குடும்பத்தின் உலகிலோ அல்லது வெளியுலகிலோ, அவர்கள் எதைப் பற்றியும் கேட்கத் தயாராக இல்லை. பார்க்கவே விரும்புகிறார்கள். எதையும் பார்த்தபின்னரே செய்ய விரும்புகிறார்கள். ஏன் அது உங்களுக்கு இலகுவாக உள்ளது? தந்தை பிரம்மா தனது செயல்களால் நற்குணங்களைத் தானம் செய்யும் ரூபமாக இருந்ததை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் எப்படியும் ஞானத்தைத் தானம் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், இந்த வருடம், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நற்குணங்களைத் தானம் செய்வதில் விசேட கவனம் செலுத்துங்கள். அதாவது, நீங்கள் உங்களின் வாழ்வில் நற்குணங்களினூடாக ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். உங்களால் பிராமணர்களுக்குத் தானம் செய்ய முடியாது, அப்படித்தானே? நீங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பீர்கள். என்னதான் நடந்தாலும், மற்றவர்களிடம் எத்தனை பலவீனங்கள் இருந்தாலும், உங்களின் வாழ்க்கையின் மூலம், உங்களின் செயல்களின் மூலமும் உங்களின் தொடர்புகளின் மூலமும் நற்குணங்களைத் தானம் செய்யுங்கள். அதாவது, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இதில் மற்றவர்களைப் பார்க்காதீர்கள். ‘இவர் அதைச் செய்வதில்லை, நான் மட்டும் ஏன் அதைச் செய்ய வேண்டும்? இவரும் இப்படித்தான்!’ தந்தை பிரம்மா, சிவத்தந்தையை மட்டுமே பார்த்தார். நீங்கள் யாரையாவது பார்க்க வேண்டும் என்றால், தந்தை பிரம்மாவைப் பாருங்கள்! இதில் மற்றவர்களைப் பார்க்காதீர்கள். பிரம்மாபாபாவின் சுலோகத்தை உங்களின் இலட்சியமாக வைத்திருங்கள் - ஆரம்பித்து வைப்பவரே அர்ஜூனன் ஆவார். அதாவது, தாங்களாகவே கருவிகள் ஆகுபவர்கள், முதலாம் இலக்க அர்ஜூனன் ஆகுவார்கள். தந்தை பிரம்மா முதலாம் இலக்க அர்ஜூனன் ஆகினார். நீங்கள் முதலில் மற்றவர்களைப் பார்த்தபின்னர் எல்லாவற்றையும் செய்தால், முதலாம் இலக்கத்தவர் ஆகமாட்டீர்கள். ஆனால் வரிசைக்கிரமமாகவே ஆகுவீர்கள். உங்கள் எல்லோரையும் உங்களின் கைகளை உயர்த்தும்படி கேட்டபோது, நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுவதற்காக உயர்த்தினீர்களா அல்லது முதலாம் இலக்கத்தவர் ஆகுவதற்காக உயர்த்தினீர்களா? எனவே, நீங்கள் என்ன இலட்சியத்தை வைத்திருப்பீர்கள்? ஒரு மிக உறுதியான, சதா நற்குணங்களின் தானி. யாராவது ஒருவர் எவ்வளவுதான் உங்களை அசைக்க முயற்சி செய்தாலும், அசையாதீர்கள்! ‘எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள், அதனால் இந்த முறையில் நீங்கள் ஏன் உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள்? நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்!’ என நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்கிறீர்கள். உங்களைப் பலவீனப்படுத்தும் பல சகபாடிகளை உங்களால் காண முடியும். எவ்வாறாயினும், பாப்தாதாவிற்கு மற்றவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் சகபாடிகளே தேவைப்படுகிறார்கள். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? சேவை செய்யுங்கள். ஆனால், உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரித்தவண்ணம் அதைச் செய்யுங்கள். அதிகளவு சேவை செய்யுங்கள்! முதலில், உங்களுக்குச் சேவை செய்யுங்கள். பின்னர் மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். பாப்தாதா மேலும் ஒரு விடயத்தைக் குறித்துக் கொண்டார். அவர் அதை உங்களுக்குக் கூறட்டுமா?

இன்று, இது சந்திரனினதும் சூரியனினதும் சந்திப்பாக இருந்தது. ஜெகதாம்பா கேட்டார்: முன்னோடிக் குழுவினர் இன்னமும் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்க வேண்டும்? நீங்கள் உங்களின் முன்னோடி ஸ்திதியை அடைந்த பின்னரே, முன்னோடிக் குழுவினரின் பணி பூர்த்தியாகும். அதனால், இன்று, அன்னை ஜெகதாம்பா பாப்தாதாவிற்கு மிகவும் மௌனமாகவும் யுக்தியாகவும் ஒரு விடயத்தைக் கூறினார். அவர் கூறிய அந்த ஒரு விடயம் என்ன? பாப்தாதாவிற்குத் தெரியும். அப்படியிருந்தும், இன்று இதயபூர்வமான சம்பாஷணையாகவே இருந்தது. மம்மா கூறினார்: ‘நானும் மதுவனத்தைச் சுற்றிப் பார்க்;கிறேன். அத்துடன் சகல நிலையங்களுக்கும் செல்கிறேன்.’ ஜெகதாம்பாவைக் கண்டவர்களுக்குத் தெரியும், அவர் தனது வார்த்தைகளால் நகைச்சுவையாக சமிக்கை கொடுப்பார். அவர் ஒருபோதும் எதையும் நேரடியாகக் கூறுவதில்லை. தற்காலத்தில், அவர் ஒரு சிறப்பியல்பைக் காண்பதாகக் கூறினார். அந்தச் சிறப்பியல்பு என்ன? தற்காலத்தில், பல வகையான கவனக்குறைவுகள் இருப்பதாக அவர் கூறினார். சிலருக்கு ஒரு வகையான கவனக்குறைவும் ஏனையோருக்கு இன்னொரு வகையான கவனக்குறைவும் காணப்படுகின்றன. ‘அது நடக்கும். நான் ஏதாவதொரு வேளையில் அதைச் செய்வேன். மற்றவர்கள் அப்படிச் செய்கிறார்கள், எனவே நானும் அப்படியே செய்வேன். இது எல்லா வேளையும் நடக்கிறது. இது தொடரும்…..’ இந்தக் கவனக்குறைவிற்கான மொழி அவர்களின் எண்ணங்களில் உள்ளது. ஆனால், அவர்கள் அதைத் தமது வார்த்தைகளிலும் கொண்டுவருகிறார்கள். பாப்தாதா கூறினார்: இந்தக் குழந்தைகளுக்கு புது வருடத்தில் செய்வதற்காக ஒரு வழிமுறையைக் கொடுங்கள். அன்னை ஜெகதாம்பா எப்போதும் தனக்குள் கிரகித்த சுலோகன் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? உங்களுக்கு இது ஞாபகம் இருக்கிறதா? யாருக்கு இது நினைவில் இருக்கிறது? (ஹுக்குமி ஹுக்கும் சல்லாய் ரஹா.. – கட்டளைகளை வழங்கும் ஒரேயொருவர், என்னை எல்லாவற்றையும் செய்ய வைக்கிறார்) ஜெகதாம்பா கூறினார்: எல்லோரும் இதைக் கிரகித்தால் - அதாவது, பாப்தாதா உங்கள் ஒவ்வொருவரையும் அசைய வைக்கிறார், உங்களின் ஒவ்வோர் அடியும் அவரின் வழிகாட்டல்களுக்கேற்பவே இருக்கும் - தந்தையே உங்களை நேரடியாக அசையச் செய்கிறார் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இருக்குமாயின், உங்களின் பார்வை எங்கே செல்லும்? வழிகாட்டல்களைப் பின்பற்றுபவரின் பார்வை, வழிகாட்டல்களைக் கொடுக்கின்ற ஒரேயொருவரின் மீது மட்டுமே விழும். வேறு எவரின் மீதும் விழாது. கரவன்ஹார் உங்களை ஒரு கருவி ஆக்கி, உங்களை அசையச் செய்கிறார். கரவன்ஹாரே அதற்குப் பொறுப்பு. அப்போது சேவை செய்யும்போது பாரமாகும் உங்களின் தலை, ஓர் ஆன்மீக ரோஜாவைப் போல் சதா இலேசாகவே இருக்கும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? சதா மகாதானி ஆகுங்கள். அச்சா.

நீங்கள் எல்லோரும் புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக ஓடோடி வந்துள்ளீர்கள். இது நல்லது. வீடு நிறைந்துள்ளது! அச்சா, உங்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்ததா? உங்களுக்குத் தண்ணீர் கிடைத்ததா? தண்ணீர் கொண்டு வருவதற்காக முயற்சி செய்தவர்களுக்குப் பாராட்டுக்கள்! ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தண்ணீர் வழங்குவதென்பது, இரண்டு அல்லது நான்கு வாளிகள் கொண்டு வருவதைப் போன்றதல்ல. நாளையில் இருந்து, ஒன்றுகூடல் திரும்பிச் செல்வதற்கான நேரமாகும். நீங்கள் எல்லோரும் சௌகரியமாகத் தங்கியிருந்தீர்களா? சிறியதொரு புயல் உங்களுக்கு ஒரு பரீட்சை வைத்துவிட்டது. கடும்காற்று வீசியது. நீங்கள் எல்லோரும் ஓகேயாக இருந்தீர்களா? பாண்டவர்கள் ஓகேயாக இருந்தீர்களா? இது நல்லது. இது கும்பமேளாவை விடச் சிறந்ததல்லவா? குறைந்தபட்சம், உங்களுக்கு மூன்றடி நிலம் கிடைத்தது. உங்களுக்கு ஒரு கட்டில் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் மூன்றடி நிலமாவது கிடைத்தது.

புது வருடத்தில், இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகள், புது வருடத்தின் வைபவங்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் தமது புத்திகளால் அதைப் பார்க்கிறார்கள். தமது காதுகளால் அதைக் கேட்கிறார்கள். மதுவனத்தில் உள்ள எல்லோருமே அதைப் பார்க்கிறார்கள்.

மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், யக்யத்தின் பாதுகாவலர்கள் எனச் சேவை செய்யும் தமது பாகங்களை மிக நன்றாகச் செய்கிறார்கள். இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருப்பவர்களுடன் கூடவே, மதுவனத்திலும் சேவைக்குக் கருவிகளாக இருப்பவர்களையும் பாப்தாதா பாராட்டுகிறார். அச்சா. பல வாழ்த்துமடல்கள் வந்துள்ளன. வந்துள்ள வாழ்த்து மடல்களை உங்கள் எல்லோராலும் பார்க்க முடிகிறது. வாழ்த்துமடல்களில் மறைந்துள்ள இதயத்தின் அன்புடன் ஒப்பிடும்போது, இந்த வாழ்த்துமடல்கள் முக்கியமானவை அல்ல. ஆகவே, பாப்தாதா வாழ்த்துமடலின் அழகைப் பார்க்கவில்லை. ஆனால், அவை எத்தகைய, இதயபூர்வமான விலைமதிப்பற்ற அன்பினால் நிரம்பியுள்ளன என்பதையே அவர் பார்க்கிறார். எனவே, நீங்கள் எல்லோருமே உங்களின் இதயபூர்வமான அன்பினை அனுப்பி வைத்துள்ளீர்கள். அதனால், இத்தகைய அன்பான ஆத்மாக்கள் எல்லோருக்கும் தனித்தனியாக - பாப்தாதா ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிடவில்லை - அந்த வாழ்த்து மடல்களுக்கு அன்பு நிறைந்த மரியாதையுடன் பாப்தாதா பதில் அளிக்கிறார். நினைவுக்கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள், ஈமெயில்கள், கணணி மூலம் என என்னென்ன வசதிகள் உள்ளனவோ, நீங்கள் அவற்றைப் பயன்படுத்த முன்னரே, பாப்தாதா முதலில் அவை அனைத்தையும் உங்களின் எண்ணங்களின் மூலம் பெற்றுவிடுகிறார். அவை உங்களின் கணணிகளின் மூலமும் ஈமெயில்கள் மூலமும் பின்னரே வருகின்றன. குழந்தைகளின் அன்பு எல்லா வேளையும் பாப்தாதாவை வந்தடைகின்றது. ஆனால், இன்று, பலரும் புது வருடத்திற்கான தமது விசேடமான திட்டங்களை எழுதியுள்ளார்கள். சத்தியங்கள் செய்துள்ளார்கள். அத்துடன் கடந்ததைக் கடந்ததாக்கிவிட்டு, முன்னேறுவதற்கான தைரியத்தையும் கொண்டுள்ளார்கள். பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் சொல்கிறார்: சபாஷ் குழந்தைகளே! சபாஷ்!

நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? அவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்போது, அருள்பவரின் குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பாப்தாதாவின் இதயத்தின் ஆசை என்னவென்றால், நீங்களும் ஓர் அருள்பவர் ஆகவேண்டும் என்பதேயாகும். எதையும் வேண்டாதீர்கள்: ‘நான் இதைப் பெற வேண்டும்! இது நடக்க வேண்டும்! நான் இதைச் செய்ய வேண்டும்!’ அருள்பவர் ஆகுங்கள். ஒருவரையொருவர் முன்னேறச் செய்வதில் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவர் ஆகுங்கள். இளையவர்கள் பாப்தாதாவிடம், தமக்கு மூத்தவர்களின் அன்பு வேண்டும் எனக் கூறுகிறார்கள். தந்தை இளையவர்களுக்குக் கூறுகிறார் - மூத்தவர்களுக்கு மரியாதை கொடுங்கள், நீங்கள் அன்பைப் பெறுவீர்கள். மரியாதை கொடுத்தல் என்றால், மரியாதையைப் பெறுவதாகும். நீங்கள் வெறுமனே மரியாதையைப் பெற முடியாது. கொடுத்தல் என்றால் பெறுவதாகும். உங்களின் உயிரற்ற விக்கிரகங்களுமே அதை வழங்குகின்றன. தேவதேவியர் என்றால் கொடுப்பவர் என்று அர்த்தம். ஆகவே, உயிர்வாழும் தேவதேவியர், அருள்பவர்கள் ஆகுங்கள்! வழங்குங்கள்! நீங்கள் எல்லோரும் அருள்பவர்களாக, கொடுப்பவர்களாக ஆகும்போது, பெறுவதற்கென்று எவருமே எஞ்சியிருக்க மாட்டார்கள். அப்போது திருப்தி என்ற ஆன்மீக ரோஜாவின் நறுமணம் எங்கும் கமழும். நீங்கள் இதைக் கேட்டீர்களா?

எனவே, புது வருடத்தில், பழைய மொழியைப் பேசாதீர்கள். எவருமே விரும்பாத, சிலர் பயன்படுத்தும் பழைய மொழி. உங்களின் பழைய வார்த்தைகள், பழைய நடத்தை, பழைய பழக்கவழக்கங்களின் கட்டாயத்திற்கு உட்படாதீர்கள். ஒவ்வொரு விடயமும் புதியதா என உங்களையே கேளுங்கள். புதியதான எதை நீங்கள் செய்தீர்கள்? 21 ஆம் நூற்றாண்டைக் கொண்டாடுவதே, நீங்கள் எல்லோரும் செய்ய வேண்டிய விடயமாகும். நீங்கள் 21 ஆம் நூற்றாண்டிலே 21 பிறவிகளுக்கான உங்களின் முழுமையான ஆஸ்தியைக் கோர வேண்டும். நீங்கள் இதை அடைய விரும்புகிறீர்கள்தானே? அச்சா.

புது யுகத்திற்கான உரிமையுள்ள, சகல திசைகளிலும் உள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், ஒவ்வோர் அடியிலும் சதா பலமில்லியன்களைச் சேமிக்கும் ஆத்மாக்களான குழந்தைகள் எல்லோருக்கும், பிரம்மாபாபாவைப் போல் எளிமையாகவும் மாதிரியாகவும் ஆக்கிக் கொள்ளும் ஆத்மாக்களுக்கும் தமது சொந்த வாழ்க்கையில் நற்குணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மற்றவர்களையும் நற்குணவான் ஆக்குகின்றவர்களுக்கும், சதா மகாதானிகளுக்கும், மகத்தான ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும்.

இந்த வேளையில், இது பழைய வருடத்திற்கும் புதிய வருடத்திற்குமான சங்கமம் ஆகும். சங்கம காலம் என்றால், பழையது முடிவதும் புதியது ஆரம்பிப்பதும் என்று அர்த்தம். எல்லையற்ற சங்கமத்தில், பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் உலக மாற்றத்திற்குக் கருவிகளாக இருக்கிறீர்களோ, அதேபோல், இன்று, பழைய வருடத்திற்கும் புதிய வருடத்திற்குமான இந்தச் சங்கமத்தில், உங்களிடம் சுய மாற்றத்திற்கான திடசங்கற்பம் உள்ளது. உங்களுக்குள் இந்தத் திடசங்கற்பம் இருக்க வேண்டும். ஒவ்வொரு விநாடியும் உறுதியான, நிலையான, மகாதானி ஆகுங்கள். அருள்பவரின் குழந்தைகள், மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகவேண்டும். பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதுடன்கூடவே, பழைய உலகிலும் பழைய சம்ஸ்காரங்களிலும் உள்ள பற்றுக்கும் விடை கொடுங்கள். அத்துடன் உங்களின் புதிய, மேன்மையான சம்ஸ்காரங்களை வெளிப்படுத்துங்கள். பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!

ஆசீர்வாதம்:
நீங்கள் பேறுகளின் சொரூபம் ஆகுவதன் மூலம், ‘ஏன்? என்ன?’ என்ற கேள்விகளுக்கு

அப்பால் இருக்கும் சதா சந்தோஷமான இதயத்தைக் கொண்டவர் ஆகுவீர்களாக.
பேறுகளின் சொரூபங்களால் நிறைந்திருக்கும் ஆத்மாக்களால் ஒருபோதும் எதையிட்டும் எந்த வகையான கேள்விகளையும் கொண்டிருக்க முடியாது. அவர்களின் முகங்களிலும் நடத்தையிலும் சந்தோஷத்தின் ஆளுமை புலப்பட்டுக் கொண்டே இருக்கும். இதுவே திருப்தி எனப்படுகிறது. சந்தோஷம் குறைவாக இருந்தால், அதற்கான காரணம், பேறுகளில் ஏதாவது குறை காணப்படுவதேயாகும். பேறுகள் குறைவதற்கான காரணம், ஏதாவதொரு ஆசையே ஆகும். சூட்சுமமான பல ஆசைகளைக் கொண்டிருப்பது, உங்களை பேறுகளில் குறைவை நோக்கி எடுத்துச் செல்கின்றது. ஆகவே, தற்காலிக ஆசைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பேறுகளின் சொரூபம் ஆகுங்கள். நீங்கள் சதா சந்தோஷ இதயத்தைக் கொண்டவராக இருப்பீர்கள்.

சுலோகம்:
இறையன்பிலே திளைத்திருங்கள். மாயையின் கவர்ச்சி முடிந்துவிடும்.