31.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் வாழும்வரை இந்தக் கல்வியை நீங்கள் கற்பதுடன் ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும். இந்தக் கல்வியே உங்கள் சந்தோஷத்திற்கும் அந்தஸ்திற்கும் அடிப்படையாக உள்ளது.

கேள்வி:
நீங்கள் செய்கின்ற சேவையில் வெற்றி அடைவதற்கு, உங்களுக்கு எந்த முக்கியமான நற்குணம் தேவையாகும்?

பதில்:
சகிப்புத்தன்மை. நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றாக இருந்து சேவை செய்யுங்கள். சொற்பொழிவு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஆற்றுங்கள். மனிதர்களைத் தங்கள் உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்வதற்குப் பல ஆயத்தங்கள் செய்யப்படும். பாக்கியசாலிகளாக ஆகவுள்ள குழந்தைகள் இதனை ஆர்வத்துடன் கற்பார்கள்.

பாடல்:
நாங்கள் தொடர்ந்தும் விழக்கூடிய பாதையைப் பின்பற்றுவதால், நாங்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எந்த எண்ணத்துடன் இங்கே மதுவனத்திற்கு வருகின்றீர்கள்? நீங்கள் எந்தக் கல்வியைக் கற்பதற்கு இங்கே வருகின்றீர்கள்? நீங்கள் யாரிடம் வருகின்றீர்கள்? (பாப்தாதாவிடம்). இது ஒரு புதிய விடயம். பாப்தாதாவிடம் கற்பதற்காக எவராவது செல்வதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? அதிலும் ஒரு பாபாவும் தாதாவும் இணைந்து இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஓர் அதிசயம்! நீங்கள் அற்புதமான தந்தையின் குழந்தைகள். குழந்தைகளாகிய உங்களுக்குப் படைப்பவரையும் தெரியாது, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியாது. படைப்பவரையும் படைப்பையும் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இதனைப் புரிந்துகொண்டு, இதனைப் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கு ஏற்ப, சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், எதிர்காலத்திலும் ஓர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். நாங்கள் இப்பொழுது படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்திருப்பதே பிரதான விடயமாகும். பிராமணர்களாகிய நாங்கள் மாத்திரமே இதனை அறிவோம். நீங்கள் உயிர் வாழும்வரை, நீங்கள் பிரம்மா குமார்களும் பிரம்மா குமாரிகளும் என்றும், முழு உலகம் எனும் உங்கள் ஆஸ்தியை சிவபாபாவிடம் இருந்து கோருகின்றீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் முழுமையாகக் கற்கின்றீர்களா அல்லது சிறிதளவு மாத்திரமே கற்கின்றீர்களா என்பது வேறு விடயம். ஆனால் நீங்கள் அவரது குழந்தைகள் என்பதையேனும் குறைந்தபட்சம் அறிவீர்கள். அதன்பின்னரே, கற்கின்றீர்களா அல்லது கற்கவில்லையா என்ற கேள்வி எழுகின்றது. அதற்கேற்பவே நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தும் உள்ளது. நீங்கள் அவருடைய மடிக்கு வந்ததும், இராச்சிய உரிமையைப் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. எவ்வாறாயினும் நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பதில் பகலுக்கும் இரவுக்குமான வித்தியாசம் இருக்க முடியும். சிலர் கற்று ஏனையோருக்கு நன்றாகக் கற்பிக்கின்றார்கள். அவர்கள் அதனைத் தவிர வேறு எதனையும் செய்வதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. கற்பதும் ஏனையோருக்குக் கற்பிப்பதும் இறுதிவரை தொடரும். லௌகீகக் கல்வியின் மாணவ வாழ்க்கையில் அவர்களின் கல்வி இறுதிவரை நீடிப்பதில்லை; அதற்கு காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. நீங்கள் உயிர்வாழும்வரை கற்று, ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும். உங்களையே கேளுங்கள்: படைப்பவரான, தந்தையின் அறிமுகத்தை நான் எத்தனை பேருக்குக் கொடுத்துள்ளேன்? மனிதர்கள் மனிதர்களே. பார்ப்பதற்கு அவர்களில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை; அவர்களின் சரீரங்களிலும் வித்தியாசம் இல்லை. இந்தக் கல்வி உங்கள் புத்திகளில் எதிரொலிக்கின்றது. நீங்கள் கற்பதற்கு ஏற்ப, சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகவுள்ளீர்கள் என்ற உணர்வு உங்களுக்குள் உள்ளது. நாங்கள் இப்பொழுது சுவர்க்க வாசலுக்குச் செல்கின்றோம்! உங்கள் இதயத்திடம் சதா கேளுங்கள்: என்னில் எத்தனை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது? தந்தை என்னைத் தனக்கு உரியவராக்கி, நான் முன்பு இருந்ததில் இருந்து என்னை முழுமையாக மாற்றியுள்ளார். எவ்வாறு நீங்கள் இதனைக் கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. கற்பதனால் மனிதர்களால் மிக மேன்மையானவர்கள் ஆக முடியும். இங்கே அவர்கள் பெறும் அந்தஸ்து எதுவும் சில கணப்பொழுதே நீடிக்கின்றது. அதில் எதுவுமே இல்லை. அதில் எப்பயனும் இல்லாததைப் போன்றே உள்ளது. அந்தக் கல்வியின் மூலம் நன்னடத்தை எதுவும் விருத்தி செய்யப்படுவதில்லை. நீங்கள் இப்பொழுது இக்கல்வியின் மூலம் மிகவும் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இக்கல்வியில் முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தங்கள் பாக்கியத்தில் அது உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் கல்வியில் ஈடுபடுத்துகின்றார்கள். அவர்கள் ஏனையோரையும் இக்கல்வியில் முயற்சி செய்வதற்குப் பலவழிகளில் தூண்டுகின்றார்கள். பிறருக்குக் கற்பித்து அவர்களையும் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆக்க வேண்டும் என அவர்கள் உணர்கின்றார்கள். மக்களை அவர்களின் உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்வதற்கு, நீங்கள் அதிகப் பிரயத்தனம் செய்கின்றீர்கள், அத்துடன் தொடர்ந்தும் பிரயத்தனம் செய்ய வேண்டும். இந்தக் கண்காட்சிகள் எதுவுமே இல்லை. நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கு உதவியாகப் பல்வேறு வசதிகள் உருவாக்கப்படும். தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மை ஆனவர்கள் ஆக்குகின்றார். ஆகவே அவருடைய கற்பித்தல்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். உங்களுக்குள் ஒன்றுகூடி, சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குங்கள். அல்பா என்ற தலைப்பில் மிக நன்றாக எங்களால் விளங்கப்படுத்த முடியும். அதிமேலான கடவுள் யார்? நீங்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு அல்பாவை பற்றிய சொற்பொழிவை ஆற்ற முடியும். நீங்கள் அல்பாவை நினைவு செய்யும் பொழுது, சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள் என்பதையும் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் குறைவாகக் கவனம் செலுத்தி, அல்பாவை நினைவு செய்யாது விட்டால் நிச்சயமாக ஓர் இழப்பை அனுபவம் செய்கின்றீர்கள். அனைத்துமே நினைவு செய்வதிலேயே தங்கியுள்ளது. அவரை நினைவு செய்வதால் நீங்கள் சுவர்க்கத்தை அடைகின்றீர்கள். அவரை மறப்பதனால் வீழ்கின்றீர்கள். வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. எவருக்குமே சிவபாபாவைச் சற்றேனும் தெரியாது. அவர்கள் எவ்வளவு ஆடம்பரத்துடன் அவரை வணங்கினாலும் அல்லது அவரை நினைத்தாலும் எதனையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் தந்தையிடம் இருந்து அதிகளவு சொத்தைப் பெறுகின்றீர்கள். மக்கள் பக்தி மார்க்கத்தில் கிருஷ்ணரின் காட்சியைக் காண்பதற்கு அதிகப் பிரயத்தனம் செய்கின்றார்கள். ஓகே, அதனால் அவர்கள் ஒரு கண தரிசனத்தைப் பெறுகின்றார்கள்! பின்னர் என்ன நடக்கின்றது? அதில் எந்தப் பயனும் இருக்கவில்லை. உலகில் உள்ள ஏனையோர் எதனைப் பின்பற்றுகின்றார்கள் என்பதைப் பாருங்கள். அது நீங்கள் தூய கரும்புச் சாற்றைப் பருகுவதைப் போன்றும், ஏனைய அனைவரும் கரும்புச் சக்கையைச் சப்புவதைப் போன்றதாகும். நீங்கள் இப்பொழுது இந்தக் கரும்புச் சாற்றைப் பருகி, உங்கள் வயிற்றை நிரப்புவதுடன், அரைக் கல்பத்திற்குச் சந்தோஷத்தையும் அனுபவம் செய்கின்றீர்கள். ஏனைய அனைவரும் பக்தி மார்க்கத்தில் கரும்புச் சக்கையைச் சப்பித் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள். இப்பொழுது தந்தை அதிகளவு அன்புடன் உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். எவ்வாறாயினும் அவர்களின் பாக்கியத்தில் அது இல்லாவிட்டால், அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் கவனம் செலுத்தாததுடன் பிறரையும் கவனம் செலுத்த அனுமதிக்க மாட்டார்கள். அவர்களும் அமிர்தத்தை அருந்த மாட்டார்கள், பிறரையும் அதை அருந்த அனுமதிக்க மாட்டார்கள். பலர் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். நீங்கள் நன்றாகக் கற்று, கருணை உடையவர்களாகி எவருக்கேனும் நன்மை செய்யாதிருப்பின், என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பிப்பவர்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். நீங்கள் கற்காது விட்டால், உங்கள் முன்னேற்றத்தின் பெறுபேறாக என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை அறிவீர்கள். அந்த நேரத்தில் உண்மையில் பாபா உங்களுக்குப் பல எச்சரிக்கைகளைக் கொடுத்தார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இங்கிருக்கும் பொழுது, நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். அவர் மேலேயிருந்து கீழே வந்து, முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, இச்சரீரத்தின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றோம். நாங்கள் அவருடன் வீடு திரும்ப வேண்டும். அவர் எங்களை விட்டுச் செல்லப் போவதில்லை. தந்தை எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. பின்னர், இந்தப் பழைய உலகம் முடிவடையப் போகின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்பொழுது அவர்களால் எதனையும் பெற முடியாது. வேறு எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. அப்பொழுது காலம் தாழ்ந்து விடும். அனைவருமே தங்கள் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்ப வேண்டும். விவேகமான குழந்தைகள் மாத்திரமே இதனை அறிவார்கள். தாய் தந்தையைப் பின்பற்றிச் சேவை செய்வதிலும் மும்முரமாக இருப்பவர்களே, உண்மையான குழந்தைகள். தந்தை எவ்வாறு ஆன்மீகச் சேவையைச் செய்கின்றாரோ, அதேபோன்று நீங்களும் செய்ய வேண்டும். சதா இந்த ஒரே அக்கறையை உடைய குழந்தைகளையே பாபா புகழ்கின்றார். நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும். அனைவருக்கும் ஓர் ஆசிரியர் இருக்கின்றார். நீங்கள் அனைவரும் இங்கும் வருகின்றீர்கள். பெரிய ஆசிரியர் இங்கே அமர்ந்திருக்கின்றார். நீங்கள் தந்தையை நினைவுகூட செய்யாது விட்டால், எப்படி உங்களைச் சீர்திருத்துவீர்கள்? இந்த ஞானம் மிகவும் இலகுவானது. 84 பிறவிகளின் சக்கரம் மிக இலகுவானது, இருப்பினும் நீங்கள் அதிகளவு பிரயத்தனம் செய்ய வேண்டும்! தந்தை அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். தந்தையையும் 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவுசெய்தால், உங்கள் படகு அக்கரை சென்றடையும். இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். உங்கள் இதயத்திடம் கேளுங்கள்: நான் எந்தளவிற்கு ஒரு தூதுவராக ஆகினேன்? நீங்கள் எந்தளவிற்கு அதிகளவாக மக்களை விழித்தெழச் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் பெறும் பரிசும் மகத்தாக இருக்கும். நான் மற்றவர்களை விழித்தெழச் செய்யாதிருந்தால், நானும் நிச்சயமாக உறங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலையில் நான் பெறும் அந்தஸ்தும் அந்தளவு உயர்ந்ததாக இருக்க மாட்டாது. ஒவ்வொரு நாள் மாலையும் உங்கள் முழு நாளுக்கும் உரிய அட்டவணையையும் நீங்கள் பார்க்க வேண்டுமென பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார். நீங்களும் சேவையில் மும்முரமாக ஈடுபட வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே, பிரதான விடயம். தந்தை பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்கினார். இது இப்பொழுது நரகம், இது இப்பொழுது மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஆகவுள்ளது. சக்கரம் சுழல வேண்டும். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாற வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்களிலிருந்து விகாரங்கள் அகற்றப்படும். மிகச்சிறிய அளவினரே சத்தியயுகத்தில் இருக்கின்றார்கள், பின்னர், இராவண இராச்சியத்தில், சனத்தொகை அதிகளவு அதிகரிக்கின்றது. சத்தியயுக ஆரம்பத்தில் 900,000 ஆக இருந்த தொகை படிப்படியாக அதிகரிக்கின்றது. ஆரம்பத்தில் தூய்மையாக இருப்பவர்களே பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். சத்தியயுகத்தில், தேவர்களின் தூய இல்லறப் பாதை உள்ளது. அவர்களே பின்னர் தூய்மையற்ற இல்லறப் பாதைக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். இந்தச் சக்கரம் நாடகத்திற்கேற்ப சுழல வேண்டும். இப்பொழுது நீங்கள் தூய இல்லறப் பாதைக்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தையால் மாத்திரமே வந்து உங்களைத் தூய்மையாக்க முடியும். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் அரைக் கல்பமாக தூய்மையாக இருந்தீர்கள். பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பித்த பொழுது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். ‘நாங்களும் ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்களாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் அதிகளவு இந்த ஞானத்தைப் பெற்றுள்ளோம். இந்த ஞானமே நாங்கள் முன்னர் இருந்த நிலையிலிருந்து எங்களை முற்றிலும் மாற்றுகின்றது’. ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும். மிருகங்களைப் போன்று அனைவரும் மரணிப்பார்கள். பனி விழும் போது, பல மிருகங்களும் பறவைகளும் மரணிக்கின்றன. இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும்; அனைத்துமே அழிக்கப்பட்டு விடும். அனைவரும் ஏற்கனவே மரணித்து விட்டார்கள். நீங்கள் உங்கள் பௌதீகக் கண்களால் இப்பொழுது காண்கின்ற எதுவும் இருக்க மாட்டாது. புதிய உலகில் ஒரு சிலரே இருப்பார்கள். உங்கள் புத்தியில் இந்த ஞானம் உள்ளது. ஞானக்கடலான தந்தை உங்களுக்கு உங்கள் ஞான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். உலகம் முழுவதும் இப்பொழுது குப்பையைத் தவிர வேறெதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்தக் குப்பைக்குள் மிகவும் அழுக்கானவர்கள் ஆகினோம். பாபா எங்களைக் குப்பையில் இருந்து அகற்றி, எங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் இந்தச் சரீரங்களை நீக்கி விட்டுத் தூய்மையானவர்கள் ஆகுவோம். கல்வியையே தந்தை அனைவருக்கும் கற்பிக்கின்றார். ஆனால் சிலரின் புத்தி முற்றிலும் மரணித்து விட்டதால், அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. தந்தை கூறுகின்றார்: அவர்களின் பாக்கியத்தில் அது இல்லையாயின் என்னால் என்ன செய்ய முடியும்? நான் அனைவருக்கும் ஒரே கற்பித்தல்களையே கொடுக்கின்றேன்; அவர்கள் வரிசைக்கிரமமாகவே கற்கின்றார்கள். சிலர் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொண்டு, ஏனையோருக்கும் அதனை விளங்கப்படுத்தி, ஏனையோரின் வாழ்வுகளையும் வைரங்கள் போன்று பெறுமதி உடையதாக ஆக்குகின்றார்கள். சிலர் இவ்வாறு செய்வதே இல்லை, இருப்பினும் அவர்களுக்கு அதிகளவு அகங்காரம் உள்ளது. விஞ்ஞானிகளின் புத்தியில் அதிகப் பெருமை உள்ளது. அவர்கள் ஆகாயத்திற்கு மேலேயும், அதற்கு அப்பாலேயும் என்ன உள்ளது என்றும், ஆழ்கடலில் என்ன இருக்கின்றது எனவும் பரீட்சித்துப் பார்க்க விரும்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவற்றில் எவ்வித நன்மையும் இல்லை. தங்கள் விஞ்ஞானத்தை இட்டுத் தற்பெருமை கொண்டுள்ளவர்கள் ஒன்றும் இல்லாததற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். தொடர்ந்தும் வீண் செலவு செய்வதற்கே அவர்கள் அதிகச் சம்பளத்தைப் பெறுகின்றார்கள். தங்கத் துவாரகை கீழிருந்து வெளிப்படுகின்றது என்றில்லை. இந்த நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. பின்னர் நேரம் வரும்பொழுது, நாங்கள் புதிய உலகிற்குச் சென்று எங்கள் மாளிகைகளைக் கட்டுவோம். சிலர் மிகவும் வியப்பு அடைந்தவர்களாகி, அதேபோன்ற கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படுமா எனக் கேட்கின்றார்கள். நிச்சயமாக! எவ்வாறு நீங்கள் மீண்டும் ஒருமுறை அத்தகைய தங்க மாளிகைகளைக் கட்டுவீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்குக் காட்டுகின்றார். அங்கே பெருமளவு தங்கம் உள்ளது. இப்பொழுதும் கூட, சில இடங்களில் மலையளவு தங்கம் உள்ளது, ஆனால் அந்தத் தங்கத்தைத் தோண்டி எடுக்க முடியாது. புதிய உலகில் பல தங்கச் சுரங்கங்கள் இருந்தன. ஆனால் அவை யாவும் இப்பொழுது வெறுமையாகி விட்டன. வைரத்தின் இன்றைய விலையைப் பாருங்கள்! இன்று அதன் விலை அதிகமாக உள்ளது. ஆனால் நாளை அது கல் போன்று ஆகும். தந்தை உங்களுக்கு அற்புதமான விடயங்களைப் பற்றிக் கூறுவதுடன், உங்களுக்குக் காட்சிகளையும் அருளுகின்றார். நீங்கள் முக்தி தாமம் என அழைக்கப்படுகின்ற, உங்கள் வீட்டிலிருந்து வெளியேறி இற்றைக்கு 5000 வருடங்கள் ஆகிவிட்டன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்களின் புத்தியில் வைத்திருக்க வேண்டும். மக்கள் பக்திமார்க்கத்தில் முக்தி பெறுவதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், தந்தையைத் தவிர வேறு எவராலும் முக்தியை அருள முடியாது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். வேறெவருமன்றி, அவரால் மாத்திரமே உங்களைத் திரும்பவும் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்ல முடியும். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்பொழுது புதிய உலகம் உள்ளது. இந்தச் சக்கரம் சுழல வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வேறு எவ்விடயங்களிலும் ஈடுபடக்கூடாது. தந்தையை நினைவு செய்யுங்கள். அனைவருக்கும் கூறுங்கள்: தந்தையை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்கினார், இல்லையா? நீங்கள் எனது பிறந்தநாளான சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றீர்கள். அன்றிலிருந்து எவ்வளவு வருடங்கள் கடந்துள்ளன? நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகியது 5000 வருடங்களுக்குரிய விடயம். பின்னர் நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நானே வந்து உங்களுக்கு உலகச் சக்கரத்தை விளங்கப்படுத்துகின்றேன். இதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகத்தெளிவாக நினைவு செய்கின்றீர்கள். நாங்களே மிக மேன்மையான நடிகர்கள். நாங்கள் பாபாவுடன் எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். நாங்கள் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், அவரின் நினைவில் நிலைத்திருந்து ஏனையோரையும் எங்களைப் போல் ஆக்குகின்றோம். முன்னைய கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்கள், மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். நீங்கள் தொடர்ந்தும் பற்றற்ற பார்வையாளர்களாகப் பார்ப்பதுடன், ஏனையோரையும் முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றீர்கள். சதா உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், தினமும் ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உங்களுடன் பேசுங்கள். இப்பொழுது இந்த அமைதியற்ற உலகம், ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே நீடிக்கும். பின் அமைதியின்மை எனும் குறிப்பே இருக்க மாட்டாது. மன அமைதி எப்படிக் கிடைக்கும் என எவருமே கேட்க மாட்டார்கள். இப்பொழுது அனைவரும் அமைதியை எங்கும் தேடுகின்றார்கள். எவ்வாறாயினும் ஒரேயொரு தந்தை மாத்திரமே அமைதிக் கடல் ஆவார். வேறு எவரிடமும் இந்த அமைதி இல்லை. இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் எதிரொலிக்க வேண்டும். படைப்பவரையும், படைப்பையும் அறிந்து கொள்வதே இந்த ஞானம் என அழைக்கப்படுகின்றது. ஒன்று அமைதிக்காகவும், மற்றையது சந்தோஷத்திற்காகவும் ஆகும். செல்வத்தின் மூலம் நீங்கள் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். மனிதர்களிடம் பணம் இல்லாவிட்டால், தாங்கள் பயனற்றவர்கள் என உணர்கின்றார்கள். பணத்திற்காக அதிகப் பாவம் செய்யப்படுகின்றது. தந்தை உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தைக் கொடுக்கின்றார். சுவர்க்கம் தங்கமும், நரகம் கல்லும் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உங்களுடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். உங்களை உற்சாகப்படுத்துங்கள். ஏனையோரையும் உங்களைப் போல் ஆக்குவதற்கு, சேவை செய்வதுடன், ஒவ்வொருவரது பாகத்தையும் பார்க்கும் வகையில் பற்றற்ற பார்வையாளராக ஆகுவதையும் பயிற்சி செய்யுங்கள்.

2. தந்தையை நினைவுசெய்து, உங்களைச் சீர்திருத்துங்கள். உங்கள் இதயத்திடம் வினவுங்கள்: நான் ஒரு தூதுவனாகி விட்டேனா? நான் எத்தனை பேரை என்னைப் போன்று ஆக்குகின்றேன்?

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு பறக்கும் பறவையாகி, மேன்மையான முயற்சி செய்வதன் மூலம் இறுதிப் பெறுபேற்றிலே முதல் இலக்கத்தைப் பெறுவீர்களாக.

இறுதிப் பெறுபேற்றிலே முதல் இலக்கத்தைப் பெறுவதற்கு, 1) கடந்த காலத்தின் விடயங்களையும் பழைய சம்ஸ்காரங்கள் என்ற விதையையும் எரிக்கின்ற வேளையில், நீங்கள் இதயபூர்வமாக அழியாத விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். 2) அமிர்த வேளையில் இருந்து இரவுவரை இறை கோட்பாடுகளையும் ஒழுங்கு முறைகளையும் எப்போதும் கடைப்பிடிப்பேன் எனச் சத்தியம் செய்யுங்கள். 3) உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் சதா மகாதானி ஆகுங்கள். ஒரு புண்ணியாத்மா ஆகி, தொடர்ந்து தான தருமங்களைச் செய்யுங்கள். நீங்கள் உயரப் பாய்வதற்கு இத்தகைய மேன்மையான முயற்சியைச் செய்யும்போது, உங்களால் ஒரு பறக்கும் பறவை ஆகி, இறுதிப் பெறுபேற்றிலே முதல் இலக்கத்தைக் கோர முடியும்.

சுலோகம்:
உங்களின் மனோபாவத்தால் சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குவதே சேவைக்கான இறுதி முயற்சி ஆகும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

உலகின் உச்ச ஆளுமைகளாகிய நீங்கள் விசேடமானவர்களும் அத்துடன் மகாத்மாக்களும் ஆவீர்கள். உங்களின் தூய்மையின் ஆளுமை என்ற சிறப்பியல்பானது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் மகத்துவத்தால் நிரம்பி இருக்கும். இந்த ஆன்மீக ஆளுமையைக் கொண்டுள்ள ஆத்மாக்களான நீங்கள் உங்களின் சக்தி, நேரம் அல்லது எண்ணங்களை வீணாக்க மாட்டீர்கள். ஆனால் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவீர்கள். இத்தகைய ஆளுமை உள்ள ஆத்மாக்களான நீங்கள் ஒருபோதும் உங்களின் மனங்கள் அல்லது புத்திகளை அற்ப விடயங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டீர்கள்.