31.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே மதுவனமே அதிபுனிதமான தந்தையின் வீடாகும். நீங்கள் தூய்மையற்ற எவரையும் இங்கு அழைத்து வரக்கூடாது.

கேள்வி:
இந்தக் கடவுளின் மிஷனில் உறுதியான நம்பிக்கையுள்ள புத்தியை உடையவர்களின் அறிகுறிகள் யாவை?

பதில்:
1.அவர்கள் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் மிகவும் பொறுமையாகச் சமாளிக்கின்றார்கள். 2. அவர்கள் ஒருபொழுதும் கோபம் கொள்வதில்லை. 3. அவர்கள் எவரையும் சரீர உணர்வுப் பார்வையுடன் பார்க்க மாட்டார்கள். 4. அவர்கள் தங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு மற்றவர்களையும் ஆத்மாக்களாகப் பார்த்து அவர்களுடன் பேசுகின்றார்கள். 5. கணவன் மனைவி ஒன்றாக வாழும் பொழுதும் தாமரை மலர்கள் போன்று இருக்கின்றார்கள். 6. அவர்கள் ஒருபொழுதும் எவ்விதமான ஆசையையும் கொண்டிருப்பதில்லை.

பாடல்:
விட்டிற்பூச்சிகள் ஏன் எரியவில்லை (தங்களை அர்ப்பணிக்கவில்லை)?

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார், அதாவது, கடவுள் ஆன்மீக மாணவர்களுக்குக் கற்பிக்கின்றார். அந்தப் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் ஆன்மீக மாணவர்கள் என அழைக்கப்படுவதில்லை. அவர்கள் விகாரமான சமூகத்துக்கு உரியவர்கள். முன்னர் நீங்களும் அசுரத்தனமாகவே இருந்தீர்கள், அதாவது, நீங்கள் இராவண சமூகத்திற்கு உரியவராக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது இராம இராச்சியத்திற்குச் செல்வதற்காக ஐந்து விகாரங்களான இராவணனை வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றீர்கள். இந்த ஞானத்தைப் பெறாதவர்களுக்கு அவர்கள் இராவண இராச்சியத்தில் உள்ளார்கள் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்கின்றீர்கள் என உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கூறும் பொழுது அவர்கள் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர் என்றில்லை. தந்தை அல்லது கடவுள் பேசுகின்றார் என்று நீங்கள் எந்தளவுதான் கூறினாலும் அவர்களுக்கு நம்பிக்கை இருக்க மாட்டாது. புதியவர்கள் இங்கே வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு கடிதம் இல்லாமலோ அல்லது அனுமதி கேட்காமலோ எவருமே இங்கு வரமுடியாது. எவ்வாறாயினும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வரவே செய்கின்றார்கள். அதுவும் சட்டத்தை மீறுவதாகும். நீங்கள் ஒவ்வொருவருடைய செய்தியையும் அவர்களுடைய பெயர்கள் போன்றவற்றுடன் எழுதி அவர்களை அனுப்புவதற்கு அனுமதி பெறவேண்டும். பின்னர் நீங்கள் அவரை அனுப்பலாம் என பாபா பதிலளிப்பார். அந்த நபர் அசுரத்தனமான தூய்மையற்ற உலகின் மாணவராக இருந்தால், அக்கல்வி விகாரமான, தூய்மை அற்றவர்களால் கற்பிக்கப்படுவதாகவும் ஆனால் இக்கல்வியோ கடவுளால் கற்பிக்கப்படுவதாகவும் பாபா விளங்கப்படுத்துவார். அந்தக் கல்வியின் மூலம் நீங்கள் சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தை மாத்திரம் பெறுகின்றீர்கள். ஒருவர் மிக முக்கியமான பரீட்சையில் சித்தி அடைந்தாலும் அவரால் எவ்வளவு காலத்திற்கு ஒரு வருமானத்தைச் சம்பாதிக்க முடியும்? விநாசம் முன்னால் உள்ளது. இயற்கை அனர்த்தங்களும் வரும். நீங்கள் இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இதைப் புரிந்து கொள்ளாது வெளியில் வசிப்பவர்களுக்கு வரவேற்பறையில் வைத்து விளங்கப்படுத்த வேண்டும். இது இறை கல்வியாகும். இங்கே புத்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் மாத்திரமே வெற்றி அடைவார்கள். அதாவது அவர்கள் உலகை ஆட்சிசெய்வார்கள். இராவண சமூகத்திற்கு உரியவர்கள் இதை அறியார்கள். இதற்கு மிகுந்த எச்சரிக்கை தேவை. அனுமதி இல்லாமல் எவருமே இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இது சுற்றுலாவுக்கான இடமல்ல. குறுகிய காலத்தில் சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்படும். ஏனெனில் இது புனிதத்திலும் அதிபுனிதமான இடமாகும். சிவபாபா இந்திரன் எனவும் அழைக்கப்படுகின்றார். இது இந்திரசபை ஆகும். மக்கள் நவரத்தினங்களிலான மோதிரத்தை அணிகின்றார்கள். அதில் மரகதக்கல் (பன்னா) உள்ளது. அத்துடன் புஷ்பராகக் கல்லும் (மேனக்) உள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் தேவதைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்களாகிய நீங்கள் பறக்கும் தேவதைகள். இதுவே உங்களைப் பற்றிய வர்ணனை ஆகும். எவ்வாறாயினும் அந்த மக்கள் இவ்விடயங்கள் பற்றி எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அணிகின்ற மோதிரங்களிலும் குறிப்பிட்ட ஏனைய இரத்தினங்களும் இருக்கின்றன. சில ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியும் மற்றையவை 10 முதல் 20 ரூபாய் பெறுமதியானவையும் ஆகும். குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். சிலர் கற்று அதிபதிகள் ஆகுகின்றனர். ஏனையோர் கற்று பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுகின்றனர். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆகவே தந்தை இங்கே இருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் இந்திரன் (மழையின் கடவுள்) என்றும் அழைக்கப்படுகின்றார். இதுவே ஞான மழையாகும். வேறு எவருமன்றி தந்தையாலேயே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்க முடியும். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். கடவுளே இக் கல்வியைக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் ஒருபொழுதும் விட்டுச் சென்றிருக்க மாட்டீர்கள். கல்லுப்புத்தி கொண்டவர்களை அம்பு ஒருபொழுதும் தைக்க மாட்டாது. அவர்கள் வந்து பின்னர் முன்னேறிச் செல்லும் பொழுது வீழ்ந்து விடுகின்றார்கள். அரைக்கல்பத்திற்கு ஐந்து விகாரங்களுமே உங்களின் எதிரிகளாக இருக்கின்றன. அவை உங்களைச் சரீர உணர்விற்குக் கொண்டு வந்து உங்களை அறைகின்றன. பின்னர் நீங்கள் இந்த ஞானத்தால் வியப்படைந்து, இந்த ஞானத்தைச் செவிமடுத்து, அதைப் பற்றிப் பேசியபின்னர் ஓடி விடுகின்றீர்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் உங்களை ஓர் அடியிலேயே கீழே வீழ்த்தி விடுகின்றாள். நீங்கள் ஒருபொழுதும் விழமாட்டீர்கள் என நினைப்பீர்கள், ஆனால் மாயை உங்களை அறைகின்றாள். ஆண்கள், பெண்கள் இருவரும் இங்கே தூய்மையாக இருக்கின்றனர். வேறு எவருமன்றி கடவுளாலேயே அவர்களை இவ்வாறு ஆக்க முடியும். இது கடவுளின் மிஷன் ஆகும். தந்தை படகோட்டி என்றும் அழைக்கப்படுகின்றார், நீங்களே படகுகள். படகோட்டி அனைவரது படகையும் அக்கரைக்கு எடுத்துச் செல்ல வருகின்றார். சத்தியப்படகு ஆடலாம், ஆனால் ஒருபொழுதும் மூழ்காது எனக் கூறப்பட்டுள்ளது. பலவிதமான பிரிவுகளும் சிறுபிரிவுகளும் உள்ளன. இது ஞானத்திற்கும் பக்திக்கும் இடையிலான ஓர் போராட்டம் போன்றுள்ளது. சில நேரங்களில் பக்தி வெற்றி அடைகின்றது, ஆனால் கடைசியில் ஞானத்திற்கே வெற்றி கிட்டும். பக்திமார்க்கத்தில் உள்ள சத்திரியர்கள் எவ்வளவு மகத்தானவர்கள் எனப் பாருங்கள்! ஞான மார்க்கத்திலும் அர்ச்சுனன், வீமன் போன்ற பெயர்களை உடைய மகத்தான சத்திரியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அமர்ந்திருந்து அந்தக் கதைகள் அனைத்தையும் எழுதி உள்ளார்கள். அந்தப்புகழ் உங்களுக்கே சொந்தமாகும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய கதாநாயக, கதாநாயகிப் பாகங்களை நடிக்கின்றீர்கள். இந்நேரத்திலேயே யுத்தம் இடம்பெறுகின்றது. உங்கள் மத்தியிலும் பலர் இந்த விடயங்கள் எதையும் புரிந்து கொள்ளாது இருக்கின்றனர். மிகவும் சிறந்தவர்களை மாத்திரமே இந்த அம்பு தைக்கும். மூன்றாம் தரத்தினரால் இங்கே அமர்ந்திருக்க முடியாது. நாளுக்கு நாள் சட்டங்களும் மிகவும் தீவிரமாகும். கல்லுப் புத்தியைக் கொண்டவர்களும் எதையும் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களும் இங்கு வந்து அமர்ந்திருப்பது சட்டத்திற்கு முரணானதாகும். இந்த மண்டபம் அதி புனிதமான இடமாகும். பாப்பாண்டவரும் புனிதமானவர் எனக் கூறப்படுகின்றார். இந்தத் தந்தையே புனிதத்திலும் அதிபுனிதமானவர். தந்தை கூறுகின்றார்: நான் அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும். அனைத்துமே அழியவுள்ளது. இவ் விடயங்களை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் இதைச் செவிமடுத்தாலும் அவர்கள் ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே செல்ல விடுகின்றார்கள். அவர்கள் தாங்களும் எதையுமே கிரகிப்பதில்லை, மற்றவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவதும் இல்லை. அவ்வாறான செவிடான, ஊமையான மக்கள் பலர் இருக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்.... அவர்கள் இதைக் குரங்குகளின் படத்துடன் சித்தரித்துள்ளார்கள். எவ்வாறாயினும் இது மனிதர்களையே குறிக்கின்றது. இந்நேரத்தில் மனிதர்கள் குரங்குகளிலும் பார்க்க மோசமானவர்கள். நாரதரைப் பற்றிய கதை உள்ளது. அவருக்குக் கூறப்பட்டது: உங்கள் சொந்த முகத்தைப் பார்த்து உங்களுக்குள் ஐந்து விகாரங்கள் இருக்கவில்லையா எனச் சோதியுங்கள். நீங்கள் காட்சிகள் காண்பது போன்று அவர்களும் அனுமான் போன்றவர்களின் காட்சிகளைக் காண்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: இது ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கின்றது. இந்த விடயங்கள் எதுவும் சத்தியயுகத்தில் இருக்கமாட்டாது. இப்பழைய உலகம் முடிவடைந்து விடும். மிகவும் உறுதியான நம்பிக்கையைக் கொண்ட புத்தியை உடையவர்கள், தாங்கள் அந்த இராச்சியத்தை முன்னைய சக்கரத்திலும் ஆட்சி செய்தார்கள் எனப் புரிந்து கொள்வார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். சட்டத்திற்கு முரணான எதையும் செய்யாதீர்கள். புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பொறுமையாக இருங்கள். எந்தவிதமான கோபமும் இருக்கக்கூடாது. நீங்கள் அத்தகைய மேன்மையான மாணவர்கள்! தந்தையாகிய கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு நேரடியாகவே கற்பிக்கின்றார். ஆயினும் பல குழந்தைகள் இதை மறந்து விடுகின்றார்கள், ஏனெனில் அவர் ஒரு சாதாரண சரீரத்தில் உள்ளார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சரீரதாரியைப் பார்ப்பதனால் உங்களால் அந்தளவிற்கு ஈடேற்றப்பட்டவராக ஆகமுடியாது. ஆத்மாவைப் பாருங்கள். ஆத்மா நெற்றியின் மத்தியில் வசிக்கின்றார். ஆத்மா இதைச் செவிமடுத்து ஏற்றுக்கொள்வதாக தலை அசைக்கின்றார். எப்பொழுதும் ஆத்மாக்களுடனே பேசுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய சரீரங்கள் என்ற சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் தமோபிரதானாக இருந்தீர்கள், இப்பொழுது சதோபிரதானாக வேண்டும். நீங்கள் உங்களை ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்கின்ற பொழுது, சரீர உணர்வு துண்டிக்கப்படும். அரைக்கல்பத்தின் சரீர உணர்வு இருக்கின்றது. இந்நேரத்தில் அனைவருமே சரீர உணர்வு உடையவர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கின்றார். ஆத்மாவே உண்கின்றார், பருகுகின்றார். தந்தை அபோக்தா (அனுபவங்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்) என்று அழைக்கப்படுகின்றார். அவர் அசரீரியானவர். சரீரதாரிகளே அனைத்தையும் செய்கின்றார்கள். அவர் எதையும் உண்பதோ அல்லது பருகுவதோ இல்லை. அவர் அபோக்தா ஆவார். அம் மக்கள் பின்னர் இதைப் பிரதி செய்கின்றார்கள். அவர்கள் மனிதர்களை அதிகளவு ஏமாற்றுகின்றார்கள். நீங்கள் உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் அனைத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். முன்னைய கல்பத்தில் இதைப் புரிந்து கொண்டவர்களே, இப்பொழுதும் அதைப் புரிந்து கொள்வார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து உங்களுக்குக் கற்பித்து அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராக அவதானிக்கின்றேன். நீங்கள் முன்னர் கற்றது போன்று வரிசைக்கிரமமாக நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப அனைத்தையும் கற்பீர்கள். இதற்குக் காலம் எடுக்கின்றது! கலியுகத்தில் இன்னமும் 40000 வருடம் மீதம் இருக்கின்றது என அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் காரிருளினுள் இருக்கின்றார்கள் என்பதே இதன் அர்த்தமாகும். அதுவே அறியாமை இருள் என அழைக்கப்படுகின்றது. பக்தி மார்க்கத்துக்கும் ஞானமார்க்கத்திற்கும் இடையே இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் மகத்தான சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும். உங்களிடம் அனைத்தும் உள்ளன. உங்களுக்கு ஆசைகள் எதுவுமில்லை. உங்கள் ஆசைகள் அனைத்தும் மிகச்சரியாக முன்னைய சக்கரத்தில் பூர்த்தி செய்யப்பட்டது போன்று பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நீங்கள் முழுமையாக மனநிறைவு அடைந்தவராக இருக்கின்றீர்கள். இந்த ஞானம் எதுவும் இல்லாதவர்கள் மனநிறைவு அடைய மாட்டார்கள். சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு எதுவுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் பிறவிபிறவியாக ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகவுள்ளவர்கள் அந்தளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் முற்றிலும் தைரியமான போர்வீரர்கள் ஆகவேண்டும். மாயையால் உங்களை அசைக்க முடியாதிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்களுடைய கண்களை இட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; எந்தவிதமான குற்றப் பார்வையும் இருக்கக் கூடாது. சிலநேரங்களில் அவை ஒரு பெண்ணைப் பார்க்கின்ற பொழுது விஷமத்தனம் செய்கின்றன. ஓ! நீங்கள் சகோதர, சகோதரிகளான குமார்கள், குமாரிகள். எனவே ஏன் உங்களுடைய புலனங்கங்கள் விஷமத்தனம் செய்கின்றன? மாயை மகத்தான கோடீஸ்வரர்களையும் முடித்து விடுகின்றாள். மாயை ஏழைகளையும் கூட முழுமையாகக் கொன்று விடுகின்றாள். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா நான் தாக்கப்பட்டேன். ஓ! நீங்கள் 10 வருடத்தின் பின்னரும் தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள்! இப்பொழுது நீங்கள் ஆழ்நரகத்தில் வீழ்ந்து விடுவீர்கள். அவர்களது ஸ்திதி உள்ளுர எவ்வாறு உள்ளது என நீங்கள் புரிந்து கொள்ள முடியும். சிலர் மிக நல்ல சேவை செய்கின்றார்கள். குமாரிகள் பீஷ்மபிதா மீதும் அம்பை எய்கின்றார்கள். இந்த விடயங்கள் கீதையிலே சிறிதளவு குறிப்பிடப்பட்டுள்ளன. அவையே கடவுளின் வாசகங்கள் ஆகும். கடவுள் கிருஷ்ணர் கீதையைப் பேசியிருந்தால் அதில் ஏன் “வெகுசிலரே நான் யாரென்றும் நான் எவ்வாறு உள்ளேன் என்றும் அறிவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது? ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே இருந்திருந்தால், அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என உங்களால் கற்பனை செய்ய முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் சத்திய யுகத்திலேயே அந்தச் சரீரத்தில் இருக்கின்றார். நான் ஸ்ரீகிருஷ்ணரின் இறுதிப் பிறவியின் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அனைவரும் உடனடியாகவே ஸ்ரீகிருஷ்ணரின் முன்னால் ஓடி வந்திருப்பார்கள். பாப்பரசர் வரும்பொழுது அவருக்கு முன்னால் அதிகளவு கூட்டம் கூடுகின்றது. இந்நேரத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்களும் தமோபிரதான் ஆகியவர்களும் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எவ்வாறாயினும் அவர்கள் தங்களைத் தூய்மை அற்றவர்களாகக் கருதுவதில்லை. தந்தை குழந்தைகளுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். பாபாவின் புத்தியும் அனைத்து நிலையங்களிலும் உள்ள விசேடமான குழந்தைகளின் மீதே செல்கின்றது. பல விசேடமான அன்புக்குரிய குழந்தைகள் இங்கு வரும்பொழுது நான் அவர்களை இங்கு பார்க்கின்றேன். இல்லையெனில் நான் அவர்களைப் பற்றி வெளியேதான் சிந்திக்க வேண்டும். நான் அவர்களின் முன்னால் ஞான நடனம் ஆடுகின்றேன். பெரும்பாலானோர் ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கும்பொழுது பெருமளவு சந்தோஷம் இருக்கின்றது. புத்திரிகள் மீது பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. அவர்கள் ஒவ்வொரு கல்பத்திலும் அதிகளவு சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. இந்த ஞானத்திற்கு வந்ததனால் அவர்கள் பக்தி செய்வதையும் நிறுத்துகின்றார்கள். அவர்களின் வீட்டில் ஒரு பூஜையறையோ அல்லது ஆலயமோ இருந்தால் கணவன் மனைவி இருவரும் பக்தி செய்கின்றார்கள். ஆனால் மனைவிக்கு ஞானத்தில் ஆர்வம் ஏற்பட்டு பக்தி செய்வதை நிறுத்தி விட்டால் அதிகளவு குழப்பம் ஏற்படுகின்றது. அவள் விகாரத்தில் ஈடுபடாமல் சமயநூல்களைக் கற்பதையும் நிறுத்தினால் அங்கே சண்டை ஏற்படுகின்றது. இதிலே பல தடைகள் உள்ளன. அவர்கள் மற்றைய ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்வதற்கு உங்களைத் தடுப்பதில்லை. இங்கே தூய்மையாக இருப்பதே விடயமாகும். ஆண்களால் இங்கிருக்க முடியாதுவிடின் காட்டுக்குச் சென்று விடுகின்றார்கள். பெண்கள் எங்கே செல்வார்கள்? பெண்களே நரகத்தின் வாயில்கள் என அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்களே சுவர்க்கத்தின் வாயில்கள். புத்திரிகளாகிய நீங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். முன்னர் நீங்களே நரகத்தின் வாயிலாக இருந்தீர்கள். இப்பொழுது சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சத்தியயுகமே சுவர்க்கத்திற்கான வாயிலும் கலியுகமே நரகத்தின் வாயிலும் ஆகும். இது புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம். குழந்தைகளாகிய நீங்களும் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்த பொழுதிலும் ஞானத்தை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கின்றீர்கள். நீங்கள் அங்கிருந்து அப்பால் வந்து இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் இப்பொழுது இல்லறத்தில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு அதிகளவு சிரமம் உள்ளது. இங்கு வசிப்பவர்களுக்கு எச்சிரமமும் இல்லை. ஆகவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து தாமரை மலர் போன்று தூய்மையாக இருங்கள். இது இந்த இறுதிப் பிறவி பற்றிய விடயமாகும். உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழ்ந்த பொழுதிலும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவே இதைச் செவிமடுத்து ஆத்மாவே இவ்வாறு ஆகவேண்டும். ஆத்மாக்களே ஒவ்வொரு பிறவியிலும் வித்தியாசமான ஆடைகளை அணிகின்றனர். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் தந்தையுடன் யோகம் செய்ய வேண்டும். இதுவே பிரதான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களுடன் பேசுகின்றேன். ஆத்மா நெற்றியின் மத்தியில் வசித்து இந்த அங்கங்கள் மூலம் செவிமடுக்கின்றார். ஆத்மா இந்தச் சரீரத்தில் இல்லாத பொழுது சரீரம் பிணமாகி விடுகின்றது. தந்தை வந்து அற்புதமான ஞானத்தைக் கொடுக்கின்றார். பரமாத்மாவைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. சந்நியாசிகள் போன்றவர்கள் ஆத்மாக்களைப் பார்ப்பதில்லை. அவர்கள் ஆத்மாவே, பரமாத்மா எனக் கருதுகிறார்கள். பின்னர் அவர்கள், ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை எனக் கூறி தங்களின் சரீரங்களைக் கழுவுவதற்கு கங்கைக்குச் செல்கின்றார்கள். ஆத்மாவே தூய்மையற்றவர் ஆகுகின்றார், ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நான் இன்னார் இன்னார், நான் இவ்வாறானவர் எனச் சிந்திக்காதீர்கள். இல்லை அனைவரும் ஆத்மாக்களே. சாதி போன்ற எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அரசாங்கம் எந்தச் சமயத்திலும் நம்பிக்கை கொள்வதில்லை. அந்த மதங்கள் அனைத்தும் சரீரத்திற்கு உரியவை. ஆனால் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஒருவரே ஆவார். நீங்கள் ஆத்மாக்களையே பார்க்க வேண்டும். அமைதியே ஆத்மாக்கள் அனைவரதும் ஆதிதர்மம் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் செவிமடுக்கின்ற பயனற்ற விடயங்கள் அனைத்தையும் ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுங்கள். தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்களைக் கிரகியுங்கள்

2. ஒருபொழுதும் எல்லைக்கு உட்பட்ட ஆசைகள் எதனையும் கொண்டிருக்காதீர்கள். உங்கள் கண்கள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எந்த விதமான குற்றப் பார்வையும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு பௌதீகப் புலனங்கமும் விஷமத்தனம் செய்யக்கூடாது. முழுமையான சந்தோஷத்துடன் இருங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரு பற்றற்ற பார்வையாளராக மாயையின் விளையாட்டுகளை அவதானிப்பதன் மூலம் சதா பயமற்ற, மாயையை வெற்றி கொண்டவர் ஆகுவீர்களாக.

காலத்திற்குக் காலம், குழந்தைகளாகிய உங்கள் ஸ்திதி முன்னேற்றம் அடைகின்றது. அவ்வாறே இப்பொழுது மாயையின் தாக்குதல் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். மாயை உங்களைத் தாக்குவதற்காக அன்றி வணக்கம் சொல்வதற்காக வர வேண்டும். மாயை வந்தாலும்கூட ஒரு விளையாட்டைப் போன்றே அவளை அவதானியுங்கள். ஒரு எல்லைக்கு உட்பட்ட விளையாட்டை ஒரு பற்றற்ற பார்வையாளர் அவதானிப்பதைப் போன்றே அவளை அனுபவம் செய்யுங்கள். மாயையின் வடிவம் எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும் அவளை ஒரு சிறிய விளையாட்டுப் பொருளாக நீங்கள் பார்த்தால் நீங்கள் அதிகளவு சந்தோஷம் அடைவீர்கள். நீங்கள் அப்போது அவளைப் பார்த்துப் பயப்பட மாட்டீர்கள். மாயையின் விளையாட்டை சதா ஒரு பார்வையாளராகவும் விளையாட்டு வீரர்களாகவும் பார்க்கின்ற குழந்தைகள், சதா பயமற்றவர்களாக இருப்பதுடன் அவர்கள் மாயையை வெற்றி கொண்டவர்களாகவும் ஆகுகிறார்கள்.

சுலோகம்:
கோபம் உங்களை நெருங்க முடியாத அளவிற்கு அன்புக் கடல்கள் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

கர்மாதீத் என்றால் உங்கள் செயல்களில் பற்றற்று இருப்பதும் உங்கள் செயல்களுக்கு அடிமையாக இல்லாதிருப்பதும் ஆகும். விடுதலை அடைந்தவராக உங்கள் பௌதீகப் புலன்களினால் செயல்களைச் செய்யுங்கள். அனைத்தையும் செய்தாலும் எதனையும் செய்வதில் இருந்து விடுதலை அடைந்தவராகவும் உறவுமுறையில் அல்லது தொடர்பில் இருக்கின்ற போதிலும் கர்மாதீத்தாக இருப்பவர் என்ற புகழ் உள்ளது. அத்தகைய ஸ்திதியை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? எந்தவொரு பற்றும் இருக்கக்கூடாது. பற்றுடன் எந்தவொரு சேவையையும் செய்யாதீர்கள். ஆனால் ஒரு கருவியாக அதனைச் செய்யுங்கள். இவ்வாறு செய்வதனால் நீங்கள் இலகுவாக கர்மாதீத் ஆகுவீர்கள்.