04.08.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.2001     Om Shanti     Madhuban


மிகச்சரியான நினைவைக் கொண்டிருப்பதற்கான அத்தாட்சி, சக்தி சொரூபமாகி, மற்றவர்களையும் சக்திகளால் பராமரிப்பதாகும்.


இன்று, ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும் ஞாபகங்கள் வெளிப்படுகின்றன. அமிர்தவேளையில் இருந்து, எங்கும் உள்ள குழந்தைகள் அன்பும் நினைவுகளுக்குமான பல்வகை மாலைகளை பாப்தாதாவின் மீது போட்ட வண்ணம் இருந்தார்கள். அத்துடன்கூடவே, அவர்களின் இதயங்களின் அன்பும் நினைவுகளுக்குமான பாடல்களையும் பாபா கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப் பிரதிபலனாக, பாபாவும் தாதாவும் இருவருமே குழந்தைகளுக்கு வெவ்வேறு சக்திகள், வெவ்வேறு ஆசீர்வாதங்கள் என்ற மாலைகளைச் சூடிக் கொண்டிருந்தார்கள். இந்த நினைவு நாள், ‘மகன் தந்தையைக் காட்டுகிறார்’ என்பதற்கான விசேடமான நாளாகும். இது சக்தி சொரூபங்களாக இருத்தல் என்ற ஆசீர்வாதத்தினூடாகக் குழந்தைகள் பௌதீக மேடைக்கு வந்த நாளாகும். இது ஏனென்றால், இதுவே குழந்தைகளை பௌதீக மேடையில் சேவைக்குக் கருவிகள் ஆக்கிய நாளாகும். அத்துடன் குழந்தைகளை சிம்மாசனத்தில் அமர்த்தி, அவர்களுக்குப் பொறுப்புக் கிரீடத்தைக் கொடுத்த நாளாகும். அது முடிசூட்டு விழா. அத்துடன் பௌதீக ரூபத்தில் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகுவதற்கான திலகத்தைப் பெறுவதற்கான தினமாகும். குழந்தைகள் எல்லோரும் தந்தையுடன் ஒத்துழைப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளார்கள். தொடர்ந்தும் அப்படி ஆகுவார்கள். குழந்தைகள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சேவை செய்வதில் முன்னேறுவதைக் கண்டு பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு குழந்தையும் தைரியமாகவும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வரிசைக்கிரமமாக முன்னேறுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள், நினைவைக் கொண்டிருப்பதிலும் சேவை செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்கள். இன்று குறிப்பாக எங்கும் உள்ள குழந்தைகள், தந்தை பிரம்மாவின் அன்பிலே மூழ்கியிருந்தார்கள். அத்துடன் தந்தை பிரம்மாவும் குழந்தைகளின் அன்பிலே மூழ்கியிருந்தார்.

இன்று, தந்தை பிரம்மா குழந்தைகளின் சிறப்பியல்புகளைப் பார்த்தார். ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பும் பாபாவின் முன்னால் தோன்றும்போது, தந்தை பிரம்மாவின் வாயில் இருந்து, ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா! சபாஷ், குழந்தைகளே! சபாஷ்!’ என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன. அதன்பின்னர் என்ன நடந்தது? ‘ஆஹா குழந்தைகளே!’ என்றும் ‘சபாஷ் குழந்தைகளே!’ என்றும் தந்தை பிரம்மா கூறும்போது, குழந்தைகள் எல்லோருடைய கண்களில் இருந்தும் அன்பு கங்கையும் ஜமுனை நதியும் பெருக்கெடுத்து ஓடின. ஒவ்வொரு குழந்தையும் அன்பிலே, அன்பு நதியில் மூழ்கியிருந்தார்கள். இதுவே சூட்சும வதனத்தின் காட்சியாக இருந்தது. பௌதீக உலகிலும், பாப்தாதா ஒவ்வோர் இடத்திலும் அன்பும் நினைவும் நிறைந்த காட்சிகளைக் கண்டார். நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? உங்களிடம் நினைவு உள்ளது. மிகச்சரியான நினைவைக் கொண்டிருப்பதன் அத்தாட்சி, அந்த நினைவினூடாக நீங்கள் சக்தி சொரூபம் ஆகுவதாகும். நினைவானது மிகமேன்மையானது. நீங்கள் பிராமணர்கள் ஆகியபோது இந்த விழிப்புணர்வின் மூலம் ஒரு விநாடியில் நீங்கள் பாப்தாதாவிடமிருந்து உங்களின் பிறப்புரிமையைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் இதயம் இதைப் புரிந்து கொள்கிறது. ‘நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா எனக்குச் சொந்தமானவர்!’ என்பதை உங்களின் இதயமும் மனமும் புத்தியும் நினைவு செய்கின்றன. இந்த விழிப்புணர்வின் மூலம் நீங்கள் உங்களின் பிறப்புரிமையின் உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இந்த விழிப்புணர்வானது சகல சக்திகளின் சாவி ஆகுகிறது. இந்த விழிப்புணர்வானது தங்கச் சாவி ஆகும். ‘நான் தந்தைக்குச் சொந்தமானவன்.’ அதாவது, ‘நான் ஓர் ஆத்மா’. ‘நான் ஓர் ஆத்மா, தந்தையின் குழந்தை’ என்ற நம்பிக்கையை நீங்கள் விருத்தி செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? பாடநெறியைக் கற்பிப்பதற்கு உங்களுக்கு நேரம் எடுத்தது. ஆனால், நம்பிக்கையை விருத்தி செய்ய உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்தது? அது ஒரு விநாடிக்குரிய பேரமாகவே இருந்தது, அப்படித்தானே? நீங்கள் ஒரு விநாடியில் உங்களின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றீர்கள். நீங்கள் எல்லோரும் உங்களின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றீர்கள். நீங்கள் எல்லோரும் உங்களின் உரிமைகளைப் பெற்றீர்களா அல்லது நீங்கள் சகல உரிமைகளும் கொண்டவர்கள் ஆகுகிறீர்களா? நீங்கள் சகல உரிமைகளும் கொண்டவர்கள் ஆகிவிட்டீர்களா? உறுதியாகவா? அச்சா.

இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் உங்களின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுள்ளீர்களா? பாண்டவர்களான நீங்கள் உங்களின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுள்ளீர்களா? உறுதியாகவா? உறுதியாகவா? உறுதியாகவா? சகல உரிமைகளையும் கொண்டிருப்பவர்களுக்குப் பற்பல பாராட்டுக்கள்! நீங்கள் குறிப்பாகத் தந்தையிடமிருந்து சகல சக்திகளையும் உரிமையாகப் பெற்றுள்ளீர்களா? நீங்கள் இவற்றைப் பெற்றிருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் சகல சக்திகளையும் பெற்றுள்ளீர்கள்தானே? அல்லது, சிலர் எட்டு சக்திகளையும் ஏனையோர் ஆறு சக்திகளையும் பெற்றுள்ளார்களா? நீங்கள் உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் உங்களைச் சில சக்திகளைக் கொண்டவர்கள் என்று அழைக்க மாட்டீர்கள், ஆனால் சகல சக்திகளைக் கொண்டவர்கள் என்றே அழைப்பீர்கள். முன்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு சகல சக்திகளும் இருக்கிறதா? பாப்தாதா ‘சகல’ என்ற வார்த்தையைப் பற்றிக் கேட்கிறார். உங்கள் எல்லோருக்கும் சகல சக்திகளும் இருக்கின்றனவா? அல்லது, உங்களில் சிலருக்கு மட்டும் சில சக்திகள் உள்ளனவா? யாராவது இருக்கிறீர்களா? உங்களில் எவராவது உங்களிடம் சகல சக்திகளும் இல்லை, ஆனால் சில சக்திகளே உள்ளன எனச் சொல்கிறீர்களா? யாரும் இல்லையா? உங்களில் எவரும் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. நீங்கள் எல்லோரும் சகல சக்திகளின் அதிபதிகளாக இருப்பது நல்லதே! எனவே, ஓ சகல சக்திகளின் அதிபதிகளே, பாப்தாதா கேட்கிறார்: பஞ்சபூதங்கள், மாயை, உங்களின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் மற்றும் சூழலால் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் முகங்கொடுப்பதற்கு சகல சக்திகளும் உங்களிடம் உள்ளனவா? நீங்கள் இந்த ஐந்து விடயங்களையும் - பஞ்சபூதங்கள், மாயை, உங்களின் சம்ஸ்காரங்கள், சூழல் மற்றும் தீய சகவாசம் - சகல சக்திகளையும் கொண்டிருப்பதன் அடிப்படையில் உங்களுக்கு அடிமை ஆக்கிவிட்டீர்களா? நீங்கள் இதைச் செய்துவிட்டீர்களா? இது ஐந்து தலை நாகமாகும். நீங்கள் சகல உரிமைகளையும் கொண்ட ஒருவராக, ஐந்து தலை நாகத்தின் மேல் நடனம் ஆடுகிறீர்களா? நீங்கள் இப்படிச் செய்கிறீர்களா அல்லது, அந்தத் தலைகளில் ஒன்று வெளிப்பட்டு உங்களின் மீது நடனம் ஆடுகிறதா? ஒரு பாம்பினால்கூட மிக நன்றாக நடனம் ஆடமுடியும்தானே? எனவே, பாம்பின் எந்தவொரு தலையும் உங்கள் மீது நடனம் ஆடவில்லைத்தானே? சிலவேளைகளில் நீங்கள் அதன் விளையாட்டுக்களைப் பார்க்க விரும்புகிறீர்களா? நீங்கள் விளையாட்டுக்களை அவதானிப்பதில் அகப்பட்டுக் கொள்கிறீர்களா? அல்லது, ஐந்து தலைகளையும் உங்களின் கழுத்து மாலையாக்கிவிட்டீர்களா? நீங்கள் பாம்பை சௌகரியமான படுக்கை ஆக்கிவிட்டீர்களா அல்லது நடனம் ஆடும் மேடை ஆக்கிவிட்டீர்களா? கழுத்து மாலையாகக் காட்டப்படும் பாம்பு, உங்களின் இறுதி ஸ்திதியான மகாதேவனின் (மகா தேவன் சங்கர்) தவம் செய்யும் தேவனின், சரீரமற்ற ஸ்திதியில் உள்ள தேவாத்மாவின், தேவதை ஆத்மாவின் ஞாபகார்த்தம் ஆகும். நீங்கள் இந்த மாலையை அணிந்து கொள்ளும்போது, உயர்ந்ததோர் இலக்கத்தை நீங்கள் பெறுவதுடன், தந்தையின் மாலையில் நெருக்கமான மணியாகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் வெற்றி மாலையின் நெருக்கமான மணி ஆகுகிறீர்கள்.

பாபா முன்னரும் கூறியுள்ளார், இப்போது காலத்திற்கேற்ப, உங்களுக்கு எந்தவொரு பிரச்சனையையும் அல்லது உங்களின் செயல்களால் வரும் சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு சகித்துக் கொள்ளும் சக்தியும் முகங்கொடுக்கும் சக்தியும் தேவைப்படுகின்றன. அவை உங்களின் எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மட்டும் அவசியமானவை அல்ல. ஆனால் உங்களின் செயல்களுக்கும் அவசியமானவை. உங்களிடம் சக்திகள் உள்ளன, உங்களின் எந்தவித சக்திகளும் இல்லை என்றில்லை என்ற பெறுபேறுகளை பாப்தாதா பார்த்துள்ளார். உங்களிடம் அவை உள்ளன, ஆனால், ஏன் இந்த வேறுபாடு? உங்களின் சக்திகளைச் சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தும் ஆற்றலில் வேறுபாடு காணப்படுகிறது. உங்களிடம் விழிப்புணர்வு உள்ளது. ஆனால், நீங்கள் அந்த விழிப்புணர்வைச் சக்திவாய்ந்த ரூபத்தில் கொண்டுவருவதில்லை. அதிகளவு விழிப்புணர்வு உள்ளது. ஆனால், சிலவேளைகளில் குறைந்தளவு சக்தி உள்ளது. சிலவேளைகளில் அது நன்றாக உள்ளது. உங்களின் விழிப்புணர்வானது உங்களை வெற்றியாளர் ஆக்குகிறது. அத்துடன் வெற்றி மாலையில் ஒரு நெருக்கமான மணி ஆக்குகிறது. இந்தச் சக்திகளின் சொரூபம் ஆகுங்கள். உங்களின் மனங்களிலும் புத்திகளிலும் அவை உள்ளன. ஆனால், நீங்கள் ஒவ்வொரு சக்தியினதும் சொரூபமாகி, உங்களின் ஒவ்வொரு பணியிலும் சகல சக்திகளையும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் நினைவு நாளை மிக நன்றாகக் கொண்டாடுகிறீர்கள். இப்போது, சக்திகளின் சொரூபம் ஆகுங்கள். நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம், உங்களின் கண்களினூடாக உங்களின் சக்திவாய்ந்த ரூபத்தை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் ஒவ்வொரு வார்த்தையினூடாக, மற்றவர்கள் சக்திசாலிகள் ஆகவேண்டும். அவர்கள் சக்தியை அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் வார்த்தைகள் சாதாரணமானவை ஆகக்கூடாது. ஒவ்வொரு வார்த்தையாலும், நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களின் சக்தியின் அனுபவத்தை அவர்களுக்குக் கொடுங்கள். உங்களின் மனதாலும் புத்தியாலும், உங்களின் மேன்மையான எண்ணங்களாலும் மிகச்சரியான தீர்மானிக்கும் சக்தியாலும் ஒரு சக்திவாய்ந்த சூழலை உருவாக்குங்கள். சாதாரண செயலிலும், உங்களின் சக்திவாய்ந்த தேவதை ரூபம் புலப்பட வேண்டும். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் அனுபவம் ஏற்பட வேண்டும். இது அப்படித்தானே? ஆகவே, நீங்கள் நடக்கும்போதும் அசையும்பேபாதும், சக்தி சொரூபமாகி, மற்றவர்களுக்கு சக்தியை வழங்குங்கள்.

இன்று, தந்தை பிரம்மாபாபாவை ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றார். அவர்கள் எங்கே சென்றார்கள்? பிரம்மாபாபாவிற்கு பாபா, இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பிராமணர்கள் எல்லோரையும், பிரம்மாபாபா அவ்யக்த் ஆகிய பின்னர் அவ்யக்த பிறப்பு எடுத்தவர்களைக் காட்டினார். இப்படிப்பட்டவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்? பௌதீகமான ரூபத்தினூடாகப் படைக்கப்பட்டவர்களை விட அவ்யக்த ரூபத்தினூடாகப் படைக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். பாபா ஒவ்வோர் இடத்திலும் அவ்யக்த ரூபத்தினூடாகப் படைக்கப்பட்டவர்களை சூட்சும வதனத்தில் தோன்றச் செய்தார். நீங்கள் இதைக் கேட்டீர்களா? நீங்கள் அனைவருமே அதில் அடங்கியிருந்தீர்கள், அப்படித்தானே? பாப்தாதா ஒவ்வொருவருக்கும் மிகுந்த அன்பு நிறைந்த திருஷ்டியையும் நெருக்கமாக இருக்கும் உணர்வையும் வழங்கினார். அத்துடன் பாபா அவ்யக்த படைப்பிற்கு ஒரு விசேடமான பரிசையும் கொடுத்தார். இங்கே அமர்ந்திருப்பவர்களில், சாகார் பிரம்மாவின் பாகம் முடிவடைந்த பின்னர், உருவாக்கப்பட்ட பிராமண ஆத்மாக்களின் படைப்பில் ஒருவராக ஆகியவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களில் பெரும்பாலானோர் அத்தகையவர்களே. அச்சா. உங்களின் கைகளைக் கீழே போடலாம். அச்சா, சாகார் ரூபத்தினூடாகப் படைக்கப்பட்டவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். இன்றைய ஒன்றுகூடலில் உங்களில் மிகச் சிலரே இருக்கிறீர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தோன்றச் செய்தார். எண்ணிக்கை மிகவும் பெரியதாக இருந்ததால், அவர்களால் இங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. ஆனால், உங்கள் எல்லோராலும் சூட்சும வதனத்திற்கு வரமுடியும். அங்கே, உங்களுக்கு விருப்பமான அளவு இடம் உள்ளது. பாப்தாதா எல்லோரையும் சூட்சும வதனத்தில் தோன்றச் செய்தார். அதாவது, பாப்தாதா அவர்களை அங்கே அழைத்தார். எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். பாப்தாதா அதைவிடச் சந்தோஷமாக இருந்தார். பாப்தாதா அந்த இரத்தினங்களுக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். அது ஒரு மிகவும் அழகான, மிகப் பிரகாசமான மாசற்ற வைரங்களால் ஆனதொரு தாமரை மலராகும். அந்தத் தாமரையின் ஒவ்வோர் இதழிலும் வெவ்வேறு சக்தி எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் பிரகாசமாக ஜொலித்தது. மாசற்ற வைரங்களாலான அந்தத் தாமரை மலர் வெளிப்படட்டும். அது எத்தனை அழகாக இருக்கும்? அது வெளிப்பட்டதா? நீங்கள் அதை வெளிப்பட அனுமதித்தீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களே, நீங்கள் அதை வெளிப்பட அனுமதித்தீர்களா? ஆசிரியர்களே, அதை வெளிப்பட அனுமதித்தீர்களா? பாண்டவர்களே, நீங்கள் அதை வெளிப்பட அனுமதித்தீர்களா? மிக இனிமையான தாய்மார்களே, அதை வெளிப்பட அனுமதித்தீர்களா? தாய்மார்களே இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாகும். எல்லோரும் எதையிட்டு ஆச்சரியப்படுகிறார்கள்? சக்திகள் ஆகியுள்ள பல தாய்மார்கள் இருக்கிறார்கள்! தாய்மார்கள் பலர், தூய்மையை ஏற்று, தேவிகளின் ரூபமாக மாறியுள்ளார்கள். தாய்மார்களே பெரும்பாலானவர்களாக இருப்பதை உங்களால் காண முடிகிறது. ஆகவே, இன்று, பாப்தாதா அவ்யக்த படைப்பிற்கு அதிகளவு அன்பை வழங்கினார். பாபா ஒரு பூந்தோட்டத்தைச் சூட்சும வதனத்தில் தோன்றச் செய்தார். அவர் மலைகளையும் கடலையும் தோன்றச் செய்தார். பாபா குழந்தைகளான உங்களை எங்கும் அழைத்துச் சென்றார். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்று வருவதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருந்தது. அவர் உங்களை விளையாட்டுக்கள் விளையாடச் செய்யவில்லை. ஒரு துடுப்பாட்ட மட்டை மற்றும் பந்துடன் விளையாடச் செய்யவில்லை! சிலர் கடல் அலைகளில் விளையாடினார்கள். சிலர் மலைகளில் அமர்ந்திருந்தார்கள். சிலர் பூங்காக்களில் உலாவந்தார்கள். எனவே, இன்று, சூட்சும வதனத்தில் அவ்யக்த படைப்பின் ஒரு சந்தோஷமான ஒன்றுகூடல் காணப்பட்டது. பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் இந்த ஆசீர்வாதத்தை வழங்கினார்: சதா சகல சக்திகளுடன் தொடர்ந்து வாழுங்கள், பறந்திடுங்கள்!

ஆகவே, நினைவு நாளான இன்று, பாப்தாதாவின் விசேடமான மகாமந்திரம் என்னவென்றால், நினைவு சொரூபமாகவும் சக்தி சொரூபமாகவும் ஆகுங்கள் என்பதாகும். உங்களின் பொக்கிஷங்களை மறைத்து வைக்காதீர்கள். ஒவ்வொரு செயலிலும் அவற்றை வெளிப்படுத்துங்கள். உங்களுடன் தொடர்பில் வருகின்ற ஒவ்வோர் ஆத்மாவிற்கும் - உங்களின் திருஷ்டியாலும் உங்களின் வார்த்தைகளாலும் உங்களின் செயல்களாலும் - ஒத்துழைப்பைக் கொடுங்கள். அதனால் அவர்கள் சக்திசாலிகள் ஆகவேண்டும். உங்களின் சக்திவாய்ந்த ரூபங்களில் இருந்து, அவர்களுக்கு அன்பைக் கொடுங்கள். வந்துள்ள புதிய குழந்தைகளில், சில ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் ஒத்துழைப்புடன்கூடவே பிராமண ஆத்மாக்களான உங்களிடமிருந்தும் தைரியத்தையும் ஊக்கம், உற்சாகத்தையும் தீர்வுகளையும் பெற வேண்டிய தேவை இருப்பதை பாப்தாதா பார்த்தார். அவர்கள் இன்னமும் மிகவும் இளையவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இளையவர்களாக இருந்தாலும், அவர்கள் தைரியத்துடன் பிராமணர்கள் ஆகியுள்ளார்கள். அதனால், இளையவர்களுக்குச் சக்திகளின் பராமரிப்புத் தேவைப்படுகிறது. சக்தியையும் பராமரிப்பையும் வெவ்வேறாகக் கொடுத்தல் என்ற கேள்வி இல்லை. ஆனால், பராமரிப்பின் ரூபத்தில் சக்தியை வழங்க வேண்டிய தேவை உள்ளது. இந்த ஸ்தாபனைக்குத் தேவையான பிராமண ஆத்மாக்கள், விரைவில் தயார் ஆகவேண்டும். ஏனென்றால், குறைந்தபட்சம் 900,000 ஆத்மாக்கள் தேவைப்படுகிறார்கள். ஆகவே, சக்திகளின் ஒத்துழைப்பைக் கொடுங்கள்! சக்திகளின் பராமரிப்பைக் கொடுங்கள்! சக்திகளை அதிகரியுங்கள்! மேலும் விவாதத்திற்கு இட்டுச் செல்லும் கற்பித்தல்களைக் கொடுக்காதீர்கள்! அவர்களுக்குச் சக்தியைக் கொடுங்கள்! அவர்களின் பலவீனங்களைப் பார்க்காதீர்கள். ஆனால், தொடர்ந்து அவர்களிடம் என்ன சிறப்பியல்போ அல்லது சக்தியோ குறைவாக உள்ளதோ, அவற்றால் அவர்களை நிரப்புங்கள். தற்காலத்தில், கருவி ஆத்மாக்களான உங்களுக்கு இந்த வகையான பராமரிப்பை வழங்குவதற்குக் கருவிகள் ஆகவேண்டிய தேவை உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையையும் நிலையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது பொதுவான விடயம். ஆனால், இப்போது தந்தையின் உதவியுடன் ஒவ்வோர் ஆத்மாவையும் சக்திசாலி ஆக்க வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் எல்லோரும் சேவை செய்கிறீர்கள். உங்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. எவ்வாறாயினும், நீங்கள் செய்யும் சேவையினூடாக உங்களின் சக்திவாய்ந்த ரூபத்தின் அதிர்வலைகளை இப்போது ஆத்மாக்கள் அனுபவம் செய்ய வேண்டும். சக்திவாய்ந்த சேவை இடம்பெற வேண்டும். இன்றைய உலகில், சாதாரணமான சேவை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், சக்திவாய்ந்த சேவையே உங்களின் சிறப்பியல்பு. பிராமண ஆத்மாக்களுக்கும் சக்தியின் பராமரிப்புத் தேவைப்படுகிறது. அச்சா.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகள் எல்லோரும், அவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் பாப்தாதாவின் முன்னாலேயே இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் ஒரே விடயத்தையே சொல்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார் - எனது அன்பையும் நினைவுகளையும் கொடுங்கள். எல்லோருடைய நினைவுகளும், அவை கடிதங்கள், வார்த்தைகள், வாழ்த்து மடல்கள், அல்லது ஈமெயில்கள் எவற்றின் மூலமாக இருந்தாலும் பாப்தாதாவை வந்தடைகின்றன. இப்போது விஞ்ஞானத்தின் பல வசதிகள் உள்ளன. பாப்தாதா இந்த வசதிகளின் மூலமாக நினைவைப் பெறுகிறார். அத்துடன் இதயத்தின் ஒலியின் மூலமும் நினைவைப் பெறுகிறார். இதயத்தின் ஒலி மிக விரைவாக பாபாவை வந்தடைகிறது. அதனால், தமது இதயத்தினால் அன்பையும் நினைவுகளையும் அனுப்பியவர்களுக்கும் அத்துடன் வெவ்வேறு வழிமுறைகளால் அவற்றை அனுப்பியவர்களுக்கும் பாப்தாதாவும் அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். குழந்தைகள் ஒரு தடவை நினைவை வழங்குகிறார்கள். அதற்குப் பதிலாக, பாப்தாதா பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.

இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் எங்கும் உள்ள சக்திசாலி ஆத்மாக்கள் எல்லோருக்கும், தமது ரூபங்களினூடாகச் சரியான நேரத்தில் ஒவ்வொரு சக்தியையும் வெளிப்படுத்தும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், சதா தந்தையுடன் ஒத்துழைப்பதுடன் சகல சக்திகளின் பராமரிப்பை ஆத்மாக்களுக்கு வழங்குவதற்குக் கருவிகள் ஆகுபவர்களுக்கும் எல்லோருக்கும் தைரியம், ஊக்கம், உற்சாகத்தை சதா கொடுக்கின்ற, பறக்கும் ஸ்திதியில் இருக்கும் ஆத்மாக்களுக்கும் சதா பிரச்சனைகளைத் தீர்வுகளாக மாற்றுகின்ற உலகை மாற்றுகின்ற ஆத்மாக்களுக்கும், நினைவின் சொரூபங்களாக இருந்து, அதனால் சக்தி சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும். அச்சா.

இன்று, பாபா குறிப்பாக சங்கம் பவனில் (அபுரோட் நிலையம்) இருந்து வந்திருப்பவர்களை நினைக்கிறார். சங்கம் பவனில் இருப்பவர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சேவை எதிலும் சளைத்ததல்ல. இன்று, பாப்தாதா குறிப்பாக அவர்களின் அன்பையும் நினைவுகளையும் பெற்றார். மற்றவர்களை வரவேற்கும் சேவை எதிலும் குறைந்ததல்ல. உண்மையில், சாந்திவானின் சேவையாளர்கள் எல்லோருமே சேவை செய்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். இது நல்லது. நீங்கள் விழித்திருக்க வேண்டியுள்ளது. அசைந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஓடிக்கொண்டும் இருக்க வேண்டியுள்ளது. நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. பாராட்டுக்கள்! பாண்டவபவனைச் சேர்ந்தவர்களுக்கும் மதுவனத்தின் நான்கு கரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!

பாப்தாதா தமக்கு எதுவும் சொல்லவில்லையே என இரட்டை வெளிநாட்டவர்கள் பார்க்கிறார்கள். பாப்தாதா, சகல தாதிகள் மற்றும் பிராமணர்கள் எல்லோருக்கும் இரட்டை வெளிநாட்டவர்களிடம் இரட்டிப்பு மற்றும் மும்மடங்கு அன்பு உள்ளது. ஏன்? பாப்தாதா எப்போதும் அவர்களின் சிறப்பியல்பைக் கூறுவார். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள் என்ற சுவர்களை உடைத்தே பிராமண வாழ்க்கைக்குள் வந்துள்ளார்கள். நீங்கள் பிராமணக் கலாச்சாரம் கொண்டவர்கள் ஆகியுள்ளீர்கள். அதனால் நீங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என எவராலும் சொல்ல முடியாது. நீங்கள் உங்களின் பாரதத்திற்குச் சொந்தமானவர்கள். சதா இதற்கே சொந்தமாக இருப்பீர்கள். இதனாலேயே, இரட்டை வெளிநாட்டவர்களுக்கு அதிகமான, மில்லியன் மற்றும் பில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் வழங்கப்படுகின்றன. மிகவும் நல்லது.

ஆசீர்வாதம்:
ஆத்மாக்களின் மேன்மையான ஸ்திதியின் சின்னமாகும். இத்தகைய தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நீங்கள் சரீரங்களின் எந்தவிதமான விழிப்புணர்வில் இருந்தும் பற்றற்று இருப்பதன் மூலம் தாமரை ஆசனத்தில் அமர்ந்திருந்து, இறைவனின் அன்பை அனுபவிப்பீர்களாக.

தாமரை ஆசனம், பிராமண ஆத்மாக்கள், இயல்பாகவே சரீரங்களின் எந்தவிதமான விழிப்புணர்வில் இருந்தும் பற்றற்றவராகவே இருப்பார்கள். சரீரங்களின் எந்தவிதமான விழிப்புணர்வும் அவர்களை ஈர்க்காது. தந்தை பிரம்மா நடக்கும் போதும் அசையும்போதும் எப்போதும் தனது விழிப்புணர்வில் ஒரு தேவதை ரூபத்தை அல்லது தேவ ரூபத்தை வைத்திருந்தார். அதேபோல், உங்களிடம் இயல்பான, ஆத்ம உணர்வு ஸ்திதி இருக்கும்போது, நீங்கள் சரீரங்களின் எந்தவிதமான விழிப்புணர்வில் இருந்தும் பற்றற்றவர் எனப்படுவீர்கள். சரீரங்களின் எந்தவிதமான உணர்வில் இருந்தும் அப்பால் இருப்பவர்கள், இறைவனால் நேசிக்கப்படுவார்கள்.

சுலோகம்:
உங்களின் சிறப்பியல்புகளும் நற்குணங்களும் இறைவனால் ஒரு பிரபு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டவை. அவற்றை உங்களுக்கு உரியவை எனக் கருதுவது என்றால், சரீர உணர்வைக் கொண்டிருப்பதாகும்.