05.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களில் பிரபஞ்சம் முழுவதற்கும் சேவை செய்பவர்களே நேர்மையானவர்கள். நீங்கள் மேலும் பலரையும் உங்களைப் போல் ஆக்குகிறீர்கள். நீங்கள் ஓய்வெடுக்க விரும்புவர்கள் அல்ல.

பாடல்:
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் எந்த வார்த்தைகளை என்றுமே கூறமுடியாது?

பதில்:
பிராமணர்களாகிய நீங்கள் “எங்களுக்குப் பிரம்மாவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் சிவபாபாவை நேரடியாக நினைவுசெய்கிறோம்” என ஒருபொழுதும் கூற முடியாது. தந்தை பிரம்மா இல்லாது உங்களைப் பிராமணர்கள் என்று அழைக்க முடியாது. பிரம்மாவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள், அதாவது, பிரம்மாவின் வாய் வழித்தோன்றல்கள் அல்லாதவர்கள் சூத்திரர்களேயாவர். சூத்திரர்களால் நேரடியே தேவர்களாக முடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து தாதா மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகள் நூதனசாலைகள், கண்காட்சிகள் போன்றவற்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், உண்மையில் எல்லையற்ற தந்தை நீண்ட காலத்திற்கு முன்பே அங்குரார்ப்பணம் செய்து விட்டார். இக் கிளைகள் இப்பொழுது தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. பல பாடசாலைகள் தேவைப்படுகின்றன. தந்தை வசிக்கும் இப் பாடசாலையே முதலாவதாகும். இது மதுவனம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு மதுவனத்தில் முரளி எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது தெரியும். யாருடைய முரளி? கடவுளுடையதாகும். கடவுள் அசரீரியானவர். பௌதீக இரதத்தின் மூலமே அவர் முரளியை இசைக்கின்றார். ‘பாக்கிய இரதம்’ என்று அவருக்குப் பெயரிடப்பட்டுள்ளது. தந்தை இவருக்குள் பிரவேசிக்கிறார் என்பதை உங்களில் எவராலும் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளாகிய உங்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், வேறு எவருக்கும் படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியாது. உங்கள் அங்குரார்ப்பணங்களை ஒரு முக்கியஸ்தர் அல்லது ஓர் ஆளுநர் போன்றவர்கள் மூலம் நீங்கள் மேற்கொள்கின்றீர்கள். பாபா எப்பொழுதும் தொடர்ந்தும் எழுதுகிறார்: அனைத்திற்கும் முதலில் அங்குரார்ப்பணம் செய்ய வருபவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தையும், அவர் புதிய உலகை எவ்வாறு ஸ்தாபிக்கிறார் என்ற அறிமுகத்தையும் கொடுங்கள். திறக்கப்படுகின்ற இவை அதன் கிளைகளே, யாரோ ஒருவர் இவை ஒவ்வொன்றையும் திறக்கின்றார், அதனால் அவர்கள் நன்மையடைவதுடன், தந்தை உண்மையிலேயே வந்துவிட்டார் என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உலகில் அமைதி இராச்சியத்தின் ஸ்தாபனை அதாவது, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை பிரம்மாவினூடாக இடம்பெறுகிறது. அதன் அங்குரார்ப்பணம் ஏற்கனவே இடம்பெற்று விட்டது. இப்பொழுது ஒரு வங்கியின் கிளைகள் தொடர்ந்தும் திறக்கப்படுவதைப் போன்று, இதன் கிளைகள் இப்பொழுது திறக்கப்படுகின்றன. தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்க வேண்டும். பரமாத்மாவான பரமதந்தையிடம் மாத்திரமே இந்த ஞானம் இருக்கிறது. இதனாலேயே அவர் மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீகத் தந்தையிடம் மாத்திரமே ஆன்மீக ஞானம் உள்ளது. அவர் வந்து அதை ஆத்மாக்களுக்குக் கொடுக்கின்றார். அவர் விளங்கப்படுத்துகிறார்: ஓ ஆத்மாக்களே, ஓ குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மா என்ற பெயர் பொதுவானது. மகாத்மா, புண்ணியாத்மா, பாவாத்மா என்று கூறப்படுகிறது. பரமாத்மாவாகிய பரமதந்தையான தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை ஏன் வருகிறார்? குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கே அவர் நிச்சயமாக வருவார். அதன்பின்னர் நீங்கள் புதிய சதோபிரதான் உலகத்திற்குச் செல்ல வேண்டும். உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. புதிய உலகமும் பழைய உலகமும் மனிதர்களைக் கொண்டதேயாகும். தந்தை கூறுகிறார்: நான் உலகைப் புதியதாக்க வரவேண்டும். மனிதர்கள் இல்லாது, ஓர் உலகம் இருக்க முடியாது. புதிய உலகில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சூத்திரர்களில்இருந்து பிராமணர்களாகி விட்டீர்கள். உங்களைப் பிராமணர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காக நான் மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். இவ்வாறே தந்தை விளங்கப்படுத்துகிறார் என்று நீங்கள் இப்பொழுது அவர்களுக்குக் கூறலாம். புதிய உலகிற்கு நீங்கள் எவ்வாறு செல்ல முடியும்? ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாகவும் விகாரமானவர்களாகவும் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் விகாரமற்றவர்களாக வேண்டும். பல பிறவிப் பாவங்கள் இப்பொழுது உங்கள் தலை மீது இருக்கின்றன. பாவம் எப்பொழுது ஆரம்பமாகுகின்றது? எத்தனை வருடங்களுக்குத் தந்தை உங்களைப் புண்ணியாத்மாக்கள் ஆக்குகிறார்? இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு இவை அனைத்தும் தெரியும். 21 பிறவிகளுக்கு நீங்கள் புண்ணியாத்மாக்களாக இருக்கின்றீர்கள், பின்னர் நீங்கள் பாவாத்மாக்கள் ஆகுகிறீர்கள். பாவம் இருக்கும் இடத்தில் துன்பம் மட்டுமே இருக்கும். பாவங்கள் எவை என்றும் தந்தை உங்களுக்குக் கூறுகிறார். ஒன்று உங்கள் தர்மத்தை நீங்கள் அவதூறு செய்கின்றீர்கள். நீங்கள் அந்தளவுக்குத் தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள்! நீங்கள் என்னை அழைத்து வருகிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனவே நான் இப்பொழுது வந்துள்ளேன். உங்களைத் தூய்மையாக்கும் தந்தையை நீங்கள் அவதூறு செய்கிறீர்கள். அவரை நீங்கள் அவதூறு செய்வதாலேயே பாவாத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். மக்கள் கூறுகிறார்கள்: ஓ பிரபு, பல பிறவிகளாக நான் பாவியாக இருந்தேன். வந்து என்னைத் தூய்மையாக்குங்கள்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: அதிகபட்ச பிறவிகள் எடுத்தவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில், அவருக்குள் நான் பிரவேசிக்கிறேன். ‘பல பிறவிகள்’ என்று பாபா குறிப்பது எதை? குழந்தைகளே, ‘பல பிறவிகள்’ என்றால் 84 பிறவிகளாகும். ஆரம்பத்தில் வருபவர்களே 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் முதலில், இந்த இலக்ஷ்மி, நாராயணனே இங்கே வருகின்றார்கள். சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கே இங்கே நீங்கள் வருகிறீர்கள். உங்களுக்குச் சத்திய நாராயணனின் கதை கூறப்படுகிறது. எவரேனும் இராமராக அல்லது சீதையாக ஆகுவது எவ்வாறு என்ற கதையை எப்பொழுதேனும் கூறியிருக்கிறார்களா? அவர்கள் அவதூறு செய்யப்பட்டார்கள். தந்தை உங்களைச் சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகவும் மாற்றுகிறார். எவருமே என்றுமே அவர்களை அவதூறு செய்வதில்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். இலக்ஷ்மியும் நாராயணனுமே விஷ்ணுவின் இரு வடிவங்கள். அவர்களது குழந்தைப் பருவத்தில் அவர்கள் இராதையும் கிருஷ்ணரும் ஆவார்கள். அவர்கள் சகோதரனும் சகோதரியும் அல்ல. அவர்கள் இரு வேறு அரசர்களின் குழந்தைகள். அவர் ஓர் இராச்சியத்தின் இளவரசரும், இவர் இன்னொரு இராச்சியத்தின் இளவரசியும் ஆவார்கள். அவர்களது திருமணத்தின் பின், அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் என்று அழைக்கப்படுகிறார்கள். மனிதர்களுக்கு இவ்விடயங்கள் எதுவுமே தெரியாது. சென்ற கல்பத்தில் இவ்விடயங்களைத் தங்கள் புத்தியில் வைத்திருந்தவர்கள், இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்துகொள்வார்கள். இலக்ஷ்மி நாராயணன், இராதை கிருஷ்ணர், விஷ்ணு போன்றோருக்கு ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயம் நர-நாராயணர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இலக்ஷ்மி, நாராயணருக்கு வெவ்வேறான ஆலயங்கள் இருக்கின்றன. பிரம்மாவுக்கும் ஓர் ஆலயம் இருக்கிறது. பிரம்ம தேவனுக்கு வந்தனம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பின்னர் பரமாத்மா சிவனுக்கு வந்தனம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர் வேறானவர். தேவர்களை ஒருபொழுதும் கடவுள் என அழைக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: எல்லாவற்றுக்கும் முதல் எவரைக் கொண்டு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் போகின்றீர்களோ அந்த நபருக்கு விளங்கப்படுத்துங்கள்: கடவுள் ஏற்கனவே உலகின் அமைதிக்கு அத்திவாரம் இட்டு விட்டார். இலக்ஷ்மி, நாராயணனுடைய இராச்சியத்தில் உலகில் அமைதி நிலவியது. அவர்கள் சத்தியயுகத்து அதிபதிகளாக இருந்தார்கள். எனவே, இது ஒரு பிரம்மாண்டமான ஈஸ்வரிய பல்கலைக்கழகம் அல்லது மனிதர்கள் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆணிலிருந்து நாராயணனாகவும் மாறுவதற்கான உலக ஆன்மீகப் பல்கலைக்கழகமாகும். பலரும் ‘உலகப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உண்மையில் அவை உலகப் பல்கலைக்கழகங்கள் அல்ல. உலகம் முழுவதுமே பிரபஞ்சமாகும். உலகம் முழுவதிலும் எல்லையற்ற தந்தை ஒரேயொரு கல்லூரியையே திறந்து வைக்கிறார். தூய்மையாகுவதற்கு, தந்தை ஸ்தாபிக்கும் உலகப் பல்கலைக்கழகம் ஒன்றேயொன்று தான் இருக்கிறது என உங்களுக்குத் தெரியும். நாங்கள் உலகம் முழுவதையும் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்கிறோம். இதனாலேயே இது ஈஸ்வரிய உலகப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் வந்து உலகம் முழுவதற்கும் முக்தியும் ஜீவன்முக்தியும் என்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். தந்தை கூறுவதற்கும் அவர்கள் பல்கலைக்கழகம் என்று அழைப்பதற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. பிரபஞ்சத்தை மாற்றியமைப்பது, அதாவது, உலகம் முழுவதையும் மாற்றுவது தந்தையொருவரது பணியேயாகும். நாங்கள் இந்தப் பெயரைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அரசாங்கமே இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆனால் இதை நீங்கள் முதலில் விளங்கப்படுத்தக்கூடாது. எல்லாவற்றுக்கும் முதல், பின்வருமாறு கூறுங்கள்: நாங்கள் பிரம்மகுமார், குமாரிகள் என்று அழைக்கப்படுகிறோம். தந்தை வந்து இவரைத் தன் இரதமாக்கியபொழுதே இவருக்கு பிரம்மா என்று பெயரிடப்பட்டது. பிரஜாபிதா என்ற பெயர் மிகப் பிரபல்யமானது. அவர் எங்கிருந்து வந்தார்? அவரது தந்தையின் பெயர் என்ன? அவர்கள் பிரம்மாவை ஒரு தேவராகக் காட்டுகிறார்கள். தேவதேவியர்களின் தந்தை நிச்சயமாகப் பரமாத்மாவாகவே இருப்பார். அவரே படைப்பவர். பிரம்மா முதல் படைப்பு என்று அழைக்கப்படுவார். அவரது தந்தை சிவபாபா ஆவார். அவர் கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்து உங்களுக்கு இவரது அறிமுகத்தைக் கொடுக்கிறேன். இது ஈஸ்வரிய நூதனசாலை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நீங்கள் கூவி அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்குங்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அப்பொழுது, தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகுவீர்கள். மன்மனாபவ என்ற வார்த்தை கீதையிலிருந்து பெறப்பட்டுள்ளது. கடவுள் மாத்திரமே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் ஆவார். கிருஷ்ணர் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. அவர் தூய்மையற்ற உலகில் வர முடியாது. தூய்மையாக்குபவராகிய தந்தையே தூய்மையற்ற உலகிற்கு வருவார். இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். இது மிகவும் இலகுவான ஒன்று! கடவுள் பேசுகிறார் என்று நீங்கள் நிச்சயமாகக் குறிப்பிட வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தை கூறுகிறார்: காம விகாரமே மிகக்கொடிய எதிரியாகும். முன்னர் விகாரமற்ற உலகம் இருந்தது. அது இப்பொழுது விகாரமுள்ள உலகமாகும்; எங்கும் துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. நீங்கள் விகாரமற்றவர்களாகும்பொழுது அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. எனவே நீங்கள் கூற வேண்டும்: கடவுள் பேசுகிறார்: காமமே மிகக்கொடிய எதிரி. அதை வெற்றி கொள்வதனால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். ஒரேயொரு தந்தையையே நினைவு செய்யுங்கள். நாங்களும் அந்த ஒரேயொருவரையே நினைவுசெய்கின்றோம். கல்லூரி ஒன்று திறந்து வைக்கப்படும்பொழுது, அது அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது. இதுவும் ஒரு கல்லூரியே ஆகும். அத்துடன் பல நிலையங்களும் இருக்கின்றன. நிலையங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆசிரியர்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். புதிய நிலையங்களுக்கு பாபா மிக நல்ல ஆசிரியர்களையே நியமிக்கிறார். ஏனெனில், அவர்கள் விரைவில் மற்றவர்களைத் தங்களைப் போல் ஆக்கி, சேவையை விரிவடையச் செய்வதில் உதவுவதற்காக ஏனைய நிலையங்களுக்கும் ஓடோடிச் செல்கிறார்கள். எவரால் முரளியை நன்றாக வாசித்து விளங்கப்படுத்த முடிகின்றது என்று ஓர் ஆசிரியர் பார்த்து, அவரிடம் ‘நீங்கள் இப்பொழுது இங்கிருந்து வகுப்புக்களை நடத்தலாம்’ எனக் கூறுவார். இவ்வகையில் ஆசிரியர்கள் பரிசோதித்துப் பார்க்கப்படுவார்கள். அதன் பின், பிரதான ஆசிரியர் சேவையை ஆரம்பிப்பதற்கு இன்னொரு நிலையத்திற்குச் செல்வார். ஒரு நிலையத்தில் சேவையை ஆரம்பித்து விட்டு பின்பு இன்னொரு நிலையத்திற்குச் சென்று சேவையை ஆரம்பிப்பது ஆசிரியர்களின் கடமையாகும். ஒவ்வொரு ஆசிரியரும் 10 தொடக்கம் 20 நிலையங்களை ஸ்தாபிக்க வேண்டும். பெருமளவு சேவை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து உங்கள் கடைகளைத் திறவுங்கள். மற்றவர்களை உங்களைப் போல் ஆக்கி, அவர்களை அங்கே விட்டுச் செல்லுங்கள். உங்கள் இதயத்தில் புக வேண்டும்: இன்னொரு நிலையத்தைத் திறப்பதற்காக நான் யாரையாவது என்னைப் போல் ஆக்கி அவரைத் தயார் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், எவருமே அந்தளவுக்கு நேர்மையாக இல்லை. பிரபஞ்சம் முழுவதற்கும் சேவை செய்பவர்களே நேர்மையானவர்கள் என்று கூறப்படுவவர். அவர்கள் ஒரு நிலையத்தைத் திறந்து, ஒருவரைத் தம்மைப் போல் ஆக்கி, அதன்பின் சென்று இன்னோர் இடத்திற்குச் சேவை செய்கிறார்கள். நீங்கள் ஒரே இடத்தில் தங்கிவிடக்கூடாது. அச்சா, உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியவில்லை என்றால், வேறு ஏதேனும் செய்யுங்கள். நீங்கள் அதைப் பற்றிய சரீர உணர்வுக்கு வந்து உணரக்கூடாது: “நான் செல்வந்தக் குடும்பத்திலிருந்து வந்திருப்பதால் இந்த வேலையை நான் எப்படிச் செய்ய முடியும்? இதைச் செய்தால் எனக்கு வலிக்கும்.” சிலருக்குச் சிறிதளவு வேலை செய்தாலே எலும்பு வலிக்கிறது. இது சரீர உணர்வு எனப்படுகிறது. அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. நீங்கள் மற்றவர்களுக்குச் சேவையாற்றி அவர்களும் பாபாவுக்கு இவ்வாறு எழுத வேண்டும்: பாபா, இன்னார் எனக்கு விளங்கப்படுத்தி என் வாழ்வைத் தகுதியுள்ளதாக ஆக்கினார். பாபாவுக்குச் சேவையின் அத்தாட்சி கிடைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆசிரியராக வேண்டும். அதன்பின்னர் அவர்களே, எழுத வேண்டும்: பாபா, நான் சென்ற பின், நிலையத்தைக் கவனித்துக் கொள்ளக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். நான் பலரையும் எங்களைப் போல் ஆக்கி இருக்கிறேன். எனவே, நாங்கள் தொடர்ந்தும் நிலையங்களைத் திறந்து வைப்போம். இத்தகைய குழந்தைகளே மலர்கள் எனப்படுகிறார்கள். நீங்கள் சேவை செய்யவில்லை என்றால் எவ்வாறு மலர்கள் ஆகுவீர்கள்? இது ஒரு பூந்தோட்டம். எனவே, அங்குரார்ப்பணம் செய்து வைப்பவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும்: நாங்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள். நாங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறி, பின்னர் தேவர்களாகுகிறோம். தந்தை இந்தப் பிராமணக் குல ஸ்தாபனையையும், சூரிய வம்ச, சந்திர வம்ச ஸ்தாபனையையும் செய்கிறார். இந்நேரத்தில் எல்லோருமே சூத்திர குலத்திற்குரியவர்கள். சத்தியயுகத்தில், அவர்கள் தேவ குலத்திற்குரியவர்கள். பின்னர், அவர்கள் சத்திரிய, வைசிய குலங்களுக்குரியவர்கள் ஆகினார்கள். குழந்தைகள் பல கருத்துக்களையும் மறந்து விடுகிறார்கள் என்பது பாபாவுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் முதலில் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய, பிராமணக் குலம் இருக்கின்றது. பிரம்மா எங்கிருந்து வந்தார்? இந்தப் பிரம்மா இங்கமர்ந்திருக்கிறார். இதை நீங்கள் மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். பிரம்மா மூலம் ஸ்தாபனை நடத்தப்படுகிறது. யாருடைய ஸ்தாபனை? பிராமணர்களின் ஸ்தாபனை. அதன் பின் அவர்களுக்குக் கற்பித்தல்கள் கொடுக்கப்பட்டு, தேவர்களாக ஆக்கப்படுகிறார்கள். நாங்கள் தந்தையுடன் கற்கின்றோம். அவர்கள், கடவுள் அர்ஜுனனோடு பேசுகிறார் என்று எழுதி விட்டார்கள். ஆனாலும், யார் அர்ஜுனன் என்று எவருக்குமே தெரியாது. பிரம்மாவின் குழந்தைகளாகிய நாம் பிராமணர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்றும், தங்களுக்கு பிரம்மாவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று சிலர் கூறுகின்றார்கள். அப்படியெனில் அவர்கள் எவ்வாறு தேவர்களாக முடியும்? பிரம்மா மூலமே நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். எவ்வாறு, யார் மூலம் உங்களுக்குத் தன்னை நினைவுசெய்யுமாறு சிவபாபா கூறினார்? பிரம்மா மூலமே அவர் அதைக் கூறினார். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். நீங்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். எனவே, நீங்கள் நிச்சயமாகப் பிரம்மாவை நினைவுசெய்வீர்கள். சிவபாபா எங்களுக்கு பிரம்மாவின் சரீரத்தின் மூலம் கற்பிக்கிறார். பிரம்ம பாபா நடுவில் இருக்கிறார். முதலில் பிராமணர்கள் ஆகாமல், எவ்வாறு நீங்கள் தேவர்களாக முடியும்? நான் பிரவேசிக்கும் இரதத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பிராமணர்களாக வேண்டும். நீங்கள் பிரம்மாவை உங்கள் தந்தை என்று கருதவில்லை என்றால், எவ்வாறு நீங்கள் அவரது குழந்தையாக இருக்க முடியும்? உங்களை நீங்கள் பிராமணர்களாகக் கருதவில்லை என்றால், நீங்கள் சூத்திரர்கள் என்பதே அர்த்தமாகும். சூத்திரர்களிலிருந்து நீங்கள் உடனடியாகத் தேவர்களாகுவது அசாத்தியம். முதலில் பிராமணர்களாகாமலும், சிவபாபாவை நினைவுசெய்யாமலும் நீங்கள் தேவர்களாக முடியாது. இதையிட்டுக் குழப்பமடைய வேண்டிய அவசியமேயில்லை. எனவே, அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றவர்களுக்கு அங்குரார்ப்பணம் ஏற்கனவே தந்தையால் செய்யப்பட்டு விட்டது என்று விளங்கப்படுத்துங்கள். நாங்களும் உங்களுக்குக் கூறுகிறோம்: தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அந்தத் தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். நீங்கள் தூய்மையாகிப் பின்னர் தேவர்களாகுவீர்கள். குழந்தைகளாகிய உங்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் உங்களுக்குத் தந்தையின் செய்தியைக் கொடுக்கிறோம். இப்பொழுது அதை நீங்கள் செய்வதும் செய்யாதிருப்பதும் உங்களைப் பொறுத்ததே. உங்களுக்குச் செய்தியைக் கொடுத்து விட்டு நாங்கள் சென்று விடுவோம். நீங்கள் தூய்மையாகுவதற்கு இதை விட வேறு வழியே இல்லை. உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம் சேவை செய்யுங்கள். உங்களுக்குப் பெருமளவு நேரம் இருக்கிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. புதிய நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்கும் சேவையைச் செய்யுங்கள். தொடர்ந்தும் நிலையங்களைத் திறந்து வையுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதீர்கள்.

2. பூந்தோட்டம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மலராகி மற்றவர்களையும் உங்களைப் போன்று மலர்களாக்க வேண்டும். எந்த ஒரு வகையான சேவையைச் செய்தாலும் என்றுமே சரீர உணர்வைக் கொண்டிருக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
சடப்பொருட்களின் எந்தவொரு சௌகரியங்களுக்கும் அப்பால் இருப்பதன் மூலம், கவர்ந்திழுக்கப்படுவதில் இருந்து விடுதலையடைந்து, சடப்பொருளை வென்றவர் ஆகுவீர்களாக.

சடப்பொருளின் எந்தவொரு சௌகரியமும் உங்களுடைய புலன்களைத் தொந்தரவு செய்யுமாயின், அதாவது, எந்த ஈர்ப்பின் உணர்வும் உங்களுக்கு இருக்குமாயின், உங்களால் பற்றற்றவராக ஆக முடியாது. ஆசைகள் கவர்ந்திழுப்பதன் வடிவமாகும். சிலர் தமக்கு எந்தவொரு ஆசைகளும் (இச்சைகளும்) இல்லை என்றும், சிலவற்றை தாம் நல்லது (அச்சா) என்று கருதுவதாகவும் கூறுகின்றார்கள். அதுவும் சூட்சுமமான கவர்ச்சியே ஆகும். தற்காலிக சந்தோஷத்தைக் கொடுக்கின்ற அந்த பௌதீக சௌகரியமும் உங்களை சூட்சுமமான வழியில் கவர்கின்றதா என சோதியுங்கள். அந்த பௌதீக சௌகரியமும் சடப்பொருளின் வசதியாகும். நீங்கள் அதன் கவர்ச்சியில் இருந்து விடுதலையடைந்து, விடுபட்டிருந்தாலே நீங்கள் சடப்பொருளை வென்றவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
'நான், நான்' என்ற குழப்பத்தை புறந்தள்ளி, எல்லையற்றதில் நிலைத்திருந்தால், நீங்கள் உலக உபகாரி என அழைக்கப்படுவீர்கள்.