09.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்தப் பிரம்மாவே சற்குருவின் சபை ஆவார். சற்குரு இந்த நெற்றியின் நடுவில் பிரசன்னமாகியுள்ளார். அவரே உங்களுக்குச் சற்கதியை அருள்பவர்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்களை எந்த வகையான அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காகத் தந்தை வந்துள்ளார்?

பதில்:
இந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும், இயற்கைக்கும் மாயைக்கும் அடிமைகளாகி உள்ளனர். தந்தை இப்பொழுது உங்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்கின்றார். மாயை, இயற்கை இரண்டும் இப்பொழுது உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் புயல்களும், சிலவேளைகளில் பஞ்சமும் உள்ளன. பின்னர், நீங்கள் அதிபதிகள் ஆகும்பொழுது, முழு இயற்கையும் உங்கள் அடிமையாகுவதுடன், உங்களைத் தாக்குவதற்கு மாயையும் இருக்க மாட்டாள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள், பாபாவே பரமதந்தையும், பரம ஆசிரியரும் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் பரம குருவும் ஆவார். ஆகையால் இதுவே சற்குருவின் சபையாகும். சபைகள் உள்ளன, அவை குருவின் சபைகளாகும். அவை சாதாரண குருமார்களின் சபைகளே அன்றி, சற்குருவின் சபை அல்ல. அவர்கள் தம்மை ஸ்ரீ, ஸ்ரீ 108 என அழைக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான பட்டத்தில் சற்குரு என்பது எழுதப்படவில்லை. அவர்கள் குருமார்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் அந்த ஒரேயொருவரே (சிவபாபா) சற்குரு ஆவார். முதலில் அவர் தந்தையும், பின்னர் ஆசிரியரும், அதன்பின்னர் சற்குருவும் ஆவார். சற்குருவே சற்கதியை அருள்கின்றார். சத்திய, திரேதா யுகங்களில் குருமார்கள் இருப்பதில்லை, ஏனெனில் அங்கு அனைவரும் சற்கதி அடைந்துள்ளார்கள். ஒரு சற்குருவை இனங்கண்டதும், ஏனைய குருமார்கள் அனைவரினதும் பெயர்கள், சுவடுகள் அனைத்தும் முடிவடைகின்றன. பரம குருவே குருமார் அனைவரினதும் குரு ஆவார். அவரை நீங்கள் கணவர்களுக்கெல்லாம் கணவர் என அழைப்பதைப் போன்று, அவர் அதிமேலானவர் என்பதால் இந்தப் பட்டமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே பரமதந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள். எதற்காக? உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக. இது ஓர் எல்லையற்ற ஆஸ்தியாகும். அவர் உங்கள் தந்தையும், உங்கள் ஆசிரியரும் ஆவார். இந்த ஆஸ்தி விகாரமற்ற, அமரத்துவ உலகமான, புதிய உலகிற்கானதாகும். புதிய உலகம் விகாரமற்ற உலகம் என்றும், பழைய உலகம் விகாரம் நிறைந்த உலகம் என்று அழைக்கப்படுகின்றன. சத்திய யுகம் சிவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், அது சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்த விகார உலகம் இராவணனினால் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சற்குருவின் சபையில் அமர்ந்திருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். தந்தை அமைதிக் கடலாவார். தந்தை வரும்பொழுதே, அவரால் உங்களுக்கு உங்கள் ஆஸ்தியான அமைதியைக் கொடுத்து, உங்களுக்குப் பாதையைக் காட்ட முடியும். காடுகளில் எவ்வாறு அமைதியைப் பெற முடியும்? இதனாலேயே இராணியின் கழுத்து மாலையின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைதியே ஆத்மாக்களாகிய உங்கள் கழுத்து மாலையாகும். பின்னர், இராவண இராச்சியம் ஆரம்பமாகும்பொழுது, அமைதியின்மை நிலவுகின்றது. அது துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லாத, அமைதி தாமம் என்றும் சந்தோஷ தாமம் என்றும் அழைக்கப்படுகின்றது. சற்குருவே எப்பொழுதும் போற்றப்படுகின்றார். குரு ஒருவர் அவ்வாறு போற்றப்படுவதை நீங்கள் ஒருபொழுதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அந்த ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக் கடல். ஒரு குரு அவ்வாறாகப் புகழப்படுவதை என்றாவது நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இல்லை, அந்தக் குருமார்களில் எவரும் முழு உலகையும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. எல்லையற்ற, மகத்தான பாபாவாகிய ஒரேயொரு அசரீரியானவரையே அவ்வாறு அழைக்க முடியும். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். ஒருபுறம் தூய்மையற்ற பழைய உலகமும், மறுபுறம் தூய்மையான புதிய உலகமும் உள்ளன. தூய்மையற்ற உலகில் பல குருமார்கள் உள்ளனர். முன்னர், உங்களுக்குச் சங்கம யுகத்தைப் பற்றித் தெரியாது. இதுவே அதி மங்களகரமான சங்கம யுகம் என்று தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். அதன்பின்னர், சத்திய யுகம் வரும்; சக்கரம் தொடர்ந்தும் சுழலும். நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை உங்கள் புத்தியில் நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். எவருக்கும் இதனைப் பற்றித் தெரியாது. முக்கிய பதவிகளில் பலர் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றேன். நீங்கள் இப்பொழுது ஞானிகளாகி விட்டீர்கள். முன்னர் நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் சென்று கூறுகின்றீர்கள்: நாங்கள் ஞானமற்றவர்கள், எங்களிடம் தெய்வீகக் குணங்கள் எதுவும் இல்லை. எங்கள் மீது கருணை காட்டுங்கள்! இப்பொழுது அந்தத் தேவர்களின் விக்கிரகங்களினால் எவர் மீதாவது கருணை காட்ட முடியுமா? கருணை நிறைந்தவர் யார் என்பதை அவர்கள் அறியார்கள். ‘ஓ தந்தையான கடவுளே, எங்கள் மீது கருணை காட்டுங்கள்!’ என்றும் மக்கள் கூறுகின்றார்கள். துன்பகரமான நிகழ்வு ஏதாவது இடம்பெற்றால், அவர்கள் நிச்சயமாக அந்த ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது அவ்வாறு கூறுவதில்லை. தந்தை சரீர வடிவமற்றவர். அவர் உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார். ஆகவே, அவர் உங்களுக்கு ‘நமஸ்தே’ கூறுகின்றார். உங்கள் அனைவருக்குமே ஒரு சரீரம் உள்ளது, ஆனால் எனக்குச் சரீரமில்லை. நான் ஒருபொழுதும் ஒரு சரீரத்தை எடுப்பதில்லை. எனது சரீரத்தின் பெயரைக் கூறுங்கள்! நீங்கள் ‘சிவபாபா’ என்று கூறுவீர்கள், அவ்வளவே. நான் இந்தச் சரீரத்தைக் கடனாகவே பெற்றுள்ளேன். இது பழைய சப்பாத்துக்கள் அனைத்திலும் பழைய சப்பாத்தாகும்; நான் வந்து, இவருக்குள் பிரவேசிக்கின்றேன். இந்தச் சரீரம் போற்றப்படுவதில்லை. இந்தச் சரீரம் பழையது. அவர் தத்தெடுக்கப்பட்டுள்ளதாலா போற்றப்படுகின்றார்? இல்லை. இவர் முன்னர் எவ்வாறிருந்தாரென்றும், என் மூலம் மீண்டும் அவர் அவ்வாறு அழகானவர் ஆகுவார் என்றும் தந்தை கூறுகின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நான் கூறுவது சரியானதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள், அவ்வாறாயின் சரியானதை நினைவுசெய்யுங்கள். அவர் ஒருவரையே (சிவபாபா) செவிமடுங்கள். தர்மமற்ற எதனையும் செவிமடுக்காதீர்கள். அது தீமையானது என அழைக்கப்படுகின்றது. தீயதைப் பேசாதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! அந்தக் கண்களால் நீங்கள் பார்க்கின்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதன்பின்னர் உங்கள் சந்தோஷ உலகிற்கு நீங்கள் மீண்டும் செல்வீர்கள். ஏனைய அனைவரும் மரணித்தவர்களைப் போன்றே உள்ளனர். அவர்கள் இங்கே தற்காலிகமாகவே இருக்கின்றார்கள். இந்தப் பழைய சரீரங்களும் நிலைத்திருக்கப் போவதில்லை, இந்தப் பழைய உலகமும் நிலைத்திருக்க மாட்டாது. நாங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்காகவே முயற்சி செய்கின்றோம். இந்த உலக வரலாறும், புவியியலும் பின்னர் மீண்டும் இடம்பெறும். உங்களின் அந்த இராச்சிய பாக்கியத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். உங்கள் இராச்சிய பாக்கியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு கல்பத்தின் முன்னரும் பாபாவைச் சந்தித்து, நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்று, சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறினீர்கள் என்றும் கூறுகின்றீர்கள். எவ்வாறாயினும், அனைவரும் ஒரே அந்தஸ்தைப் பெறுவது சாத்தியமல்ல. அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். இது ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம். ஆன்மீகத் தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். சில குழந்தைகளும் கற்பிக்கின்றார்கள். ஒரு பாடசாலை அதிபரின் மகனும் அந்தச் சேவையில் மும்முரமாக ஈடுபடுவார். அவரது மனைவியும் கற்பிக்க ஆரம்பிப்பார். அவர்களுடைய மகள் நன்றாகக் கற்றால், அவளாலும் கற்பிக்க முடியும். எவ்வாறாயினும், அவள் இன்னொரு வீட்டிற்குச் சென்று விடுகின்றாள். இங்கு ஒரு மகள் தொழில் பார்ப்பது பொதுவானதொரு நியதியல்ல. இந்தக் கல்வியை எவ்வாறு நீங்கள் உங்களில் பிரயோகிக்கின்றீர்கள் என்பதிலேயே புதிய உலகில் ஓர் அந்தஸ்தைப் பெறுவது முற்றிலும் தங்கியுள்ளது. உலகில் உள்ள மக்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. கடவுள் பேசுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் உங்களை அரசருக்கெல்லாம் அரசனாக்குகின்றேன் என்று எழுதப்பட்டுள்ளது. நான் உங்களை அந்தத் தேவர்களைப் போன்ற மாதிரிகளாக ஆக்குவதில்லை. இங்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் கற்று, அந்த அந்தஸ்தை இங்கேயே பெற்றுக் கொள்கின்றீர்கள். அவர்கள் வழிபடுவதற்குக் கல்லில் விக்கிரகங்களைச் செய்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கே கற்று, அந்தச் சம்ஸ்காரங்களை உங்களுடன் எடுத்துச் செல்கின்றீர்கள். அதன்பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் சென்று, அங்கு சரீரங்களை எடுக்கின்றீர்கள். உண்மையில், உலகம் என்றுமே அழிக்கப்படுவதில்லை. யுகங்கள் மாத்திரமே மாறுகின்றன: சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். 16 சுவர்க்கக் கலைகள் பின்னர் 14 சுவர்க்கக் கலைகளாகக் குறைவடைந்தன. ஒரே உலகமே தொடர்ந்தும் உள்ளது; புதியதிலிருந்து அது பழையதாகுகின்றது. இந்தக் கல்வியின் மூலம் தந்தை உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றார். உங்களுக்கு இவ்விதமாகக் கற்பிப்பதற்கு வேறு எவருக்கும் சக்தி இல்லை. அவர் உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். பின்னர், நீங்கள் கற்கும்பொழுது, மாயை உங்களைத் தனக்குரியவர் ஆக்குகின்றாள். எவ்வாறாயினும் கற்பதற்கு ஏற்ப, அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள்; அவர்களின் வருமானம் இழக்கப்பட மாட்டாது. இந்த அழிவற்ற ஞானத்தை அழிக்க முடியாது. அவர்கள் தாமதித்து வருவார்கள். அவர்களால் வேறு எங்கு செல்ல முடியும்? ஒரேயொரு கடை மாத்திரமே உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். மக்கள் இடுகாட்டிற்குச் செல்லும்பொழுது, பெருமளவு விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான். ‘இவ்வாறாக நானும் சரீரத்தை நீக்குவேனா? அவ்வாறாயின் நான் ஏன் பாவம் செய்ய வேண்டும்? நானும் தொடர்ந்தும் பாவம் செய்து கொண்டிருக்கும்பொழுதே, இவ்வாறாக மரணித்து விடுவேன்’. அவர்கள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இதுவே இடுகாட்டிலிருக்கும் பொழுதுள்ள விருப்பமின்மை எனப்படுகின்றது. தாம் இன்னொரு சரீரத்தை எடுக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தாலும், அவர்களிடம் இந்த ஞானம் எதுவும் இல்லை. நீங்கள் இங்கே தற்காலிகமாகவே இருப்பீர்கள் என்பதால், இந்நேரத்தில் இங்கே மரணிப்பதற்கே ஆயத்தம் செய்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குக் குறிப்பாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பழைய சரீரங்களை நீக்கி, நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நீங்கள் அதிகளவு நினைவுசெய்தால், பாவங்களும் அதிகளவில் அழிக்கப்படும். இது அனைத்திலும் இலகுவானதாயினும், இதுவே அதிகளவு கடினமானதும் ஆகும். சில குழந்தைகள் முயற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது, மாயையுடன் பெரும் போர் உள்ளதைப் புரிந்துகொள்கின்றனர். தந்தை கூறுகின்றார்: இது இலகுவானது, ஆனால் மாயை உங்கள் விளக்கை அணைக்கின்றாள். குலேபகாவலியைப் பற்றிய கதையும் உள்ளது. பூனையாகிய மாயை உங்கள் விளக்கை அணைக்கின்றாள். இங்கே, அனைவரும் மாயையின் அடிமைகளாக உள்ளார்கள். பின்னர் நீங்கள் மாயையை உங்கள் அடிமை ஆக்குகின்றீர்கள். இயற்கை முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. புயல்கள் இருக்க மாட்டாது, பஞ்சம் இருக்க மாட்டாது. இயற்கையை நீங்கள் உங்களுக்கு அடிமையாக்க வேண்டும். அங்கே, மாயையின் தாக்குதல் இருக்க மாட்டாது. அவள் இப்பொழுது உங்களைப் பெருமளவு துன்புறுத்துகின்றாள். ‘நான் உனது அடிமை’ என்றொரு பாடல் உண்டு. அதன் பின்னர் மாயை கூறுகின்றாள்: நீங்களே எனது அடிமை. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது அந்த அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவிக்கவே வந்துள்ளேன். நீங்கள் அதிபதிகள் ஆகும்பொழுது, மாயை உங்களுக்கு அடிமை ஆகுவாள். அதன்பின்னர் குழப்பம் சிறிதளவேனும் இருக்க மாட்டாது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, மாயை பெரும் விரக்தியை ஏற்படுத்துகின்றாள். அவள் ஏன் உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்த மாட்டாள்? இது ஒரு யுத்தகளம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் மாயையை உங்கள் அடிமையாக ஆக்க முயற்சிப்பதால், மாயை உங்களைக் கடுமையாகத் தாக்குகின்றாள். அவள் உங்களைப் பெருமளவு துன்புறுத்துகின்றாள்; அவள் உங்களில் பலரைத் தோற்கடிக்கின்றாள். சிலரை அவள் முற்றாகவே உண்டு விடுகின்றாள்; அவர்களை அவள் முழுமையாக விழுங்கி விடுகின்றாள். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகினாலும், மாயை தொடர்ந்தும் உங்களை விழுங்குகின்றாள். உங்களில் சிலர் ஏற்கனவே அவளின் வயிற்றிற்குள் இருக்க, உங்களின் வால் மாத்திரமே வெளியில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்றுள்ளது. அதுவும் ஒரு சதுப்பு நிலமான, புதைமணல் என்றே அழைக்கப்படுகின்றது. பல குழந்தைகள் அந்த புதைமணலிற்குள் வீழ்ந்துள்ளார்கள். அவர்களால் சிறிதளவேனும் நினைவுசெய்ய முடிவதில்லை. ஆமையினதும், ரீங்காரமிடும் விட்டிற்பூச்சிகளினதும் உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, நீங்கள் அத்தகைய பூச்சிகளிடம் இந்த ஞானத்தை ரீங்காரமிட்டு, அவர்களை முன்னர் இருந்ததிலிருந்து வேறொன்றாக, அதாவது, அவர்களைச் சுவர்க்கத்தின் முழுமையான தேவதைகளாக மாற்ற முடியும். சந்நியாசிகளும் ரீங்காரமிடும் விட்டிற்பூச்சிகளை உதாரணமாகக் கூறியபொழுதிலும், அவர்கள் இந்த ஞானத்தை ரீங்காரமிடுவதோ, எவரையும் மாற்றுவதோ இல்லை. இந்த மாற்றம் சங்கம யுகத்திலேயே இடம்பெறுகின்றது. இது இப்பொழுது நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறுகின்ற சங்கம யுகமாகும். இதனாலேயே, நீங்கள் விகாரம் நிறைந்த மனிதர்களையே இங்கே அழைத்து வருகின்றீர்கள். அப் பூச்சிகளின் மத்தியில், சிலர் ரீங்காரமிடும் விட்டிற்பூச்சிகளாக மாறுகின்றார்கள், சிலர் உக்கிய நிலையை அடைந்து விடுகின்றார்கள், சிலர் முழுமை அடையாதுள்ளனர். பாபா அவ்வாறான பலரைக் கண்டுள்ளார். இங்கேயும் சிலர் நன்றாகக் கற்று, ஞான இறக்கைகளை வளர்த்துக் கொள்கின்றார்கள். ஆனால் ஏனையோரை மாயை பாதி வழியிலேயே பற்றிக் கொள்வதால் அவர்கள் பலவீனமாக உள்ளார்கள். இந்த உதாரணங்கள் இந்நேரத்திற்கே பொருத்தமானவை. ரீங்காரமிடும் விட்டிற்பூச்சி ஒன்று இன்னொரு பூச்சியைக் கொண்டு வந்து, தனக்கு சமமாக்குவது ஓர் அற்புதமே. அவ்வகைப் பூச்சியினால் மாத்திரமே பிறரைத் தனக்குச் சமமாக்க முடியும். பாம்பும் உதாரணமாகக் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் சத்திய யுகத்தில் ஒரு தோலை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றீர்கள்; நீங்கள் இப்பொழுது அந்தச் சரீரத்தை நீக்குவீர்கள் என்பதை உடனடியாகவே காட்சிகளாகக் காண்பீர்கள். ஆத்மா சரீரத்திலிருந்து நீங்கி, மாளிகை போன்ற இன்னொரு கருப்பைக்குள் பிரவேசிக்கின்றார். மாளிகை போன்ற ஒரு கருப்பையிலிருந்து வெளிவர மறுத்த ஓர் ஆத்மாவைப் பற்றிய உதாரணமும் உள்ளது. எவ்வாறாயினும், ஒரு குழந்தை நிச்சயமாக வெளியில் வர வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பிறவிபிறவியாகப் பக்தி செய்தீர்கள். அதிகளவு பக்தி செய்துள்ளவர்களே, சென்று, இங்கு தங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக, அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். முழு ஞானமும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. சமயநூல்களில் உள்ள ஞானம் உண்மையான ஞானம் அல்ல. அது பக்தி மார்க்கம்; அதன் மூலம் நீங்கள் சற்கதி அடைவதில்லை. சற்கதியை பெறுவது என்றால் வீடு திரும்புவதாகும். அதன் மூலம் எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தையே கூறுகின்றார்: அதன் மூலம் எவரும் என்னை அடைவதில்லை. உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரேயொருவருடன், உங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்ற அந்த ஒரேயொருவரும் தேவைப்படுகிறார். தந்தைக்கு அதிகளவு அக்கறை உள்ளது. உங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தை ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை வருகின்றார். நீங்கள் ஆத்மாக்கள் என்பதை மீண்டும், மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையே உங்களுக்குக் கற்பிக்க வருகின்றார் என்பதை நீங்கள் மிகவும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மா ஆத்மாக்களாகிய எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆத்மாக்களிலேயே சம்ஸ்காரங்களும் உள்ளன, சரீரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். பிரம்மாவின் நெற்றியே சற்குருவின் சபையாகும். இந்த ஆத்மாவின் சபை இதுவாகும். பின்னர் சற்குருவும் இவருக்குள்ளேயே பிரவேசிக்கின்றார். இவர் இரதம் என்றும், சபை என்றும் அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் சுவர்க்கத்தின் வாயிலைத் திறக்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நன்றாகக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்குச் சத்திய யுகத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். எனவே நீங்கள் கற்க வேண்டும். ஓர் ஆசிரியரின் குழந்தைகள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். எவ்வாறாயினும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலே கங்கை பாய்ந்தால், அவர்களுக்கு நதியின் அருமை தெரியாது என்று கூறப்படுகின்றது. நகரத்தின் குப்பை முழுவதும் கங்கையில் எவ்வாறு கொட்டப்படுகின்றது என்பதையும் பாபா பார்த்துள்ளார். அவ்வாறாயின், அதனை நீங்கள் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியுமா? மக்களின் புத்தி எவ்வாறாகி விட்டது என்று பாருங்கள்! அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அலங்கரிக்கின்றார்கள். அவர்கள் அவற்றை வழிபட்ட பின்னர் மூழ்கடிக்கின்றனர். அதனை அவர்கள் தங்கள் பாதங்களின் கீழ் அழுத்தி, மூழ்கடிக்கின்றார்கள். வங்காளத்தில் ஒருவர் சரீரத்தை நீக்கும் தறுவாயில், உடனடியாக அவர் கங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற ஒரு வழக்கம் உள்ளது. அங்கு, அவரை நீரில் இட்டு, அவரின் வாயில் தொடர்ந்தும் கங்கை நீரை ஊற்றி, ‘ஹரி, ஹரி’ என்று கூறுங்கள் என்று அவரிடம் கேட்கப்படுகின்றது. அவ்வாறு செய்து, அவரின் உயிரை அவர்கள் பலவந்தமாக அவரது சரீரத்திலிருந்து வெளியேற்றுகின்றார்கள். அது ஓர் அற்புதமாக இருந்தது! குழந்தைகளாகிய நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக, உங்கள் புத்தியில் இப்பொழுது மேலேறுவதும், கீழிறங்குவதும் என்ற (எழுச்சி, வீழ்ச்சியின்) ஞானம் முழுவதும் உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கூறுபவற்றை மாத்திரமே செவிமடுத்து, எது சரியெனத் தீர்மானியுங்கள். சரியானதை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். அதர்மமான விடயங்களைச் செவிமடுக்காதீர்கள், பேசாதீர்கள், பார்க்காதீர்கள்.

2. நன்றாகக் கற்று, உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குங்கள். நீங்கள் அந்தப் பழைய சரீரத்திலும், இந்தப் பழைய உலகிலும் தற்காலிகமாகவே இருக்கின்றீர்கள் எனக் கருதுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உரிமைகளையும் கொண்ட, ஓர் ஆத்மாவாக இருந்து, உங்கள் மன ஒருமைப்பாட்டுச் சக்தி மூலம் கட்டுப்பாடற்ற வெளிப்புறச் சூழ்நிலை எதனையும் மாற்றமடையச் செய்வீர்களாக.

சகல உரிமைகளையும் கொண்ட ஒரு பிராமணரை, அதாவது, ஓர் ஆத்மாவை வேறு எவராலும் கட்டுப்படுத்த முடியாது. அத்தகையதோர் ஆத்மாவை அவருடைய பலவீனமான சுபாவமோ அல்லது சம்ஸ்காரங்களோ கட்டுப்படுத்த முடியாது, ஏனெனில் ஒருவரின் சுபாவம் - ஸ்வ–பாவ் - என்றால் சுயத்திற்காகவும், பிறருக்காகவும் ஆத்ம உணர்வைக் கொண்டிருப்பதாகும். ஆகவே, உங்களை ஒரு பலவீனமான சுபாவத்தினால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் ஆதி அநாதியான சமஸ்காரங்களின் விழிப்புணர்வானது, உங்கள் பலவீனமான சமஸ்காரங்களை இலகுவில் மாற்றி விடும். மன ஒருமைப்பாட்டுச் சக்தியானது எந்த வெளிப்புறச் சூழ்நிலையையும் இலகுவில் மாற்றி, உங்களை ஓர் அதிபதியின் ஆசனத்தில் அமருமாறு செய்யும்.

சுலோகம்:
ஒரு ஞானி ஆத்மாவின் மிகக் கொடிய எதிரி கோபமாகும்.