11.08.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    04.02.2001     Om Shanti     Madhuban


காலத்திற்கேற்ப, ஒரு சுய-இராச்சிய அதிகாரியாகி, துரித கதியில் உங்களின் ஆன்மீக வசதிகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.


இன்று, பாப்தாதா உலகம் முழுவதும் உள்ள தனது சுய இராச்சிய அதிகாரிக் குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொருவரும் சுய இராச்சிய உரிமையுள்ளவராக, தூய்மை ஒளிக்கிரீடத்தை அணிந்தவராக, சகல உரிமைகளைக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுத் திலகத்தை அணிந்தவராக, தனது நெற்றியின் மையத்தில் தனது அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த வேளையில் நீங்கள் சுய இராச்சியத்தின் சகல உரிமைகளை அனுபவம் செய்யும் அளவிற்கு, அதற்கேற்ப, நீங்கள் எதிர்காலத்திலும் உலக இராச்சியத்திற்கான சகல உரிமைகளையும் பெறுவீர்கள். ‘நான் யார்?’ அத்துடன் ‘எனது எதிர்காலம் என்ன?’ - இந்த வேளையில் உங்களின் சுய இராச்சிய ஸ்திதியினால் உங்கள் ஒவ்வொருவராலும் இதை நீங்களே பார்க்க முடியும்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினதும் நிலையான சுய இராச்சிய ஸ்திதியைப் பார்த்தார். நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், ஒரு லௌகீக அல்லது அலௌகீகப் பணியைச் செய்யும்போதும், எவ்வளவு காலத்திற்கும் எத்தனை சதவீதமும் நீங்கள் சுய இராச்சியத்தின் சகல உரிமைகளையும் கொண்டிருப்பவராக இருப்பதை சதா அனுபவம் செய்வீர்கள்? பல குழந்தைகள் தமது சுய இராச்சியத்தைத் தமது எண்ணங்களில் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்: நான் சகல உரிமைகளும் கொண்டதோர் ஆத்மா. இதை உங்களின் எண்ணங்களில் கொண்டிருப்பது ஒரு விடயம்: ‘நான் இதுதான்’ என்று மீண்டும் மீண்டும் உங்களின் விழிப்புணர்வைப் புத்துணர்ச்சி ஆக்குதல். மற்றையது, உங்களை சகல சக்திகளையும் கொண்டிருக்கும் ரூபமாக அனுபவம் செய்து, உங்களின் பணியாட்களான புலனங்கங்களையும் உங்களின் ஒத்துழைக்கும் சகபாடிகளான மனம், புத்தி, சம்ஸ்காரங்களையும் ஆட்சி செய்து, அவற்றைச் செயல்படச் செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருத்தல். ஒவ்வொரு கணமும் பாப்தாதா உங்களை ஸ்ரீமத்திற்கேற்ப அசையச் செய்கிறார் என்று குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அனுபவம் செய்வதாகும். அதனால் நீங்கள் எல்லோரும் ஸ்ரீமத்திற்கேற்ப இயங்குகிறீர்கள். எல்லோரையும் இயங்க வைக்கும் ஒரேயொருவர், உங்களையும் இயங்க வைக்கிறார். எனவே, இயங்குகின்ற நீங்களும் அதற்கேற்ப இயங்குகிறீர்கள். ஓ சுய இராச்சிய ஆத்மாக்களே, உங்களின் புலனங்கங்கள், அதாவது, உங்களின் பணியாட்களும் உங்களின் மனங்களும் புத்திகளும் சம்ஸ்காரங்களும் என்ற உங்களின் ஒத்துழைக்கும் சகபாடிகளும் இந்த முறையில் உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயல்படுகின்றனவா? அவை உங்களின் கட்டளைகளின்படி நடக்கின்றனவா? அவை எல்லாமே செயல்படுகின்றனவா? புலனங்கங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ ஏதாவது விஷமத்தனமான விளையாட்டுக்களைக் காட்டவில்லையே? உங்களின் இராச்சியம் மிகச்சரியாக அன்பாகவும் நீதியாகவும் இயங்குகிறதா? சட்டத்திற்கும் ஒழுங்குமுறைக்கும் பதிலாக, அது மிகச்சரியாக அன்பாகவும் நீதியாகவும் இயங்குகிறதா? அது நன்றாக இயங்குகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது நன்றாகத் தொழிற்படுகிறதா அல்லது சிலவேளைகளில் ஏதாவது விவாதங்கள் ஏற்படுகின்றதா? ‘எனது கை, எனது சம்ஸ்காரங்கள், எனது புத்தி, எனது மனம்’ என நீங்கள் சொல்வதனால், உங்களுடையதின் மீது உங்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளனவா? அல்லது, சிலவேளைகளில் உங்களுடையது உங்களின் மீது உரிமையுள்ளதாக இருப்பதாகவும், சிலவேளைகளில் உங்களுடையதில் நீங்கள் உரிமை உள்ளவராகவும் இருக்கிறீர்களா? ஓ சுய இராச்சிய அதிகாரி ஆத்மாக்களே, காலத்திற்கேற்ப, இப்போது உங்களின் அமரத்துவ சிம்மாசனத்தில் நிலையாகவும் இலகுவாகவும் அமர்ந்;திருக்கிறீர்கள். அப்போது மட்டுமே உங்களால் ஏனைய ஆத்மாக்களையும் தந்தையிடமிருந்து விரைவாக முக்தி அல்லது ஜீவன்முக்திக்கான உரிமையைப் பெறச் செய்ய முடியும்.

இப்போது காலத்தின் அழைப்பு, மிகத் துரிதமாகவும் எல்லையற்றதாகவும் உள்ளது. நீங்கள் இப்போது பார்த்ததும் கேட்டதும் சிறியதொரு ஒத்திகையே! நீங்கள் ஒரே தடவையில் எல்லையற்ற திட்டத்தைப் பார்த்தீர்கள்தானே? கூக்குரலிடுவதும் எல்லையற்றதாக இருந்தது. மரணமும் எல்லையற்றதாக இருந்தது. அவ்வாறு இறப்பவர்களுடன்கூடவே, உயிருடன் இருப்பவர்களும் விரக்தியால் இறக்கிறார்கள். இத்தகைய வேளையில் சுய இராச்சிய அதிகாரிகளான உங்களின் கடமை என்ன? இதைச் சோதியுங்கள்! உதாரணமாக, பௌதீகச் சூழ்நிலைகளுக்காக, பூகம்பம் ஏற்படும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் புயல்கள் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் தீப்பிடிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உங்களுக்குக் காட்டுகிறார்கள். அதேபோல், மேன்மையான ஆத்மாக்களான உங்களிடம் உள்ள பல வசதிகளும் - சகல சக்திகள், யோக சக்தி, அன்புக் காந்தம் என்பவை இத்தகைய வேளையில் தயாராக இருக்கின்றனவா? உங்களிடம் சகல சக்திகளும் உள்ளனவா? ஒருவருக்கு அமைதி சக்தி தேவைப்படும்போது, நீங்கள் அவருக்கு வேறு ஏதாவது சக்தியைக் கொடுத்தால், அவர் திருப்தி அடைவாரா? உதாரணமாக, ஒருவருக்குத் தண்ணீர் தேவையாக இருக்கும்போது, அவருக்கு நீங்கள் 36 வகையான உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்தாலும் அவர் திருப்தி அடைவாரா? அதனால், சரீரமற்றவர் ஆகுவது மட்டுமன்றி, என்றும் தயாராக இருங்கள். நீங்கள் எப்படியும் அப்படி ஆகப் போகிறீர்கள்! எவ்வாறாயினும், உங்களின் சுய இராச்சியத்தினாலும் இறைவனிடமிருந்து ஆஸ்தியாகவும் நீங்கள் பெற்ற வசதிகள் எல்லாவற்றுடனும் நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? செய்திகளில் நீங்கள் கேட்பதைப் போல், வெளிநாடுகளில் இருந்து அவர்களுக்குத் தேவையான இயந்திரங்கள் வந்தால் மட்டுமே தம்மால் அவற்றைப் பயன்படுத்த முடியும் என அவர்கள் சொல்வதைப் போல் இல்லையல்லவா? வசதிகள் என்றும் தயாராக இல்லை என்பதே அதன் அர்த்தம், அப்படித்தானே? அதாவது, உங்களுக்குத் தேவையானபோது உங்களால் சகல வசதிகளையும் பயன்படுத்த முடியவில்லை. அதிகளவு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது!

ஓ உலக உபகாரிகளே, உலகை மாற்றுகின்ற ஆத்மாக்களே, உங்களின் வசதிகள் எல்லாமே என்றும் தயாராக இருக்கின்றனவா? உங்களின் சக்திகள் எல்லாம் உங்களின் கட்டளைகளின்படி நடக்கின்றனவா? நீங்கள் ஒரு கட்டளை இட்டதும், அதாவது, உங்களின் தீர்மானிக்கும் சக்திக்குக் கட்டளை இடவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட்ட உடனேயே, உங்களின் தீர்மானிக்கும் சக்தி ஒரு விநாடிக்கும் குறைந்த நேரத்தில் உங்கள் முன்னால் தோன்றுகிறதா? சகல உரிமைகளையும் கொண்டுள்ள சுய இராச்சிய அதிகாரிக்கு முன்னால் தோன்றுகிறதா? எல்லாமே இத்தகைய ஒழுங்குமுறைக்கேற்ப இருக்கின்றதா? அல்லது, உங்களை இந்த நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒரு நிமிடம் எடுக்கிறதா? அதற்குப் பின்பே உங்களால் மற்றவர்களுக்குத் தானம் செய்ய முடிகிறதா? மற்றவர்களுக்கு அந்த வேளையில் தேவைப்படுவதை உங்களால் தானம் செய்ய முடியாவிட்டால் என்ன நடக்கும்? குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் உங்களின் இதயங்களில் இந்த எண்ணம் உள்ளது: எதிர்காலத்தில் என்ன நடக்கும்? நாம் என்ன செய்ய வேண்டும்? பல விடயங்கள் நடக்கும்! இது ஓர் ஒத்திகையே என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இது ஆறு மாதங்களுக்கான ஆயத்திற்காக அடிக்கப்பட்ட சிறியதொரு மணியே ஆகும். இன்னமும் பெரிய மணி அடிக்கவில்லை. முதலில், பெரிய மணி அடிக்கும். அதன்பின்னர், முரசங்கள் அடிக்கும். நீங்கள் பயப்படுவீர்களா? கொஞ்சம் பயப்படுவீர்களா? சக்தி சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களின் ரூபம் எப்படிச் சித்தரிக்கப்பட்டுள்ளது? சக்தி ரூபத்தில், பாண்டவர்களின் ரூபமும் சக்திகளின் ரூபமும் அடங்கியுள்ளன. சில சக்திகளுக்கு நான்கு கரங்களும் சில சக்திகளுக்கு ஆறு கரங்களும் சிலருக்கு எட்டுக் கரங்களும் சிலருக்கு 16 கரங்களும் காட்டப்பட்டுள்ளன. அவர்களைச் சாதாரணமானவர்களாகக் காட்டுவதில்லை. இந்தக் கரங்கள் சகல சக்திகளின் சின்னம் ஆகும். ஆகவே, சர்வசக்திவானிடமிருந்து நீங்கள் பெற்ற சகல சக்திகளையும் வெளிப்படச் செய்யுங்கள். காலம் வரும்போது அவை வெளிப்படும் என நினைக்காதீர்கள். ஆனால், வெவ்வேறு சக்திகளையும் நாள் முழுவதும் பயன்படுத்திப் பாருங்கள்! எந்தளவிற்கு அனைத்திலும் முதல் பயிற்சியை, அதாவது சுய இராச்சிய அதிகாரி என்பதை நீங்கள் உங்களின் செயல்களில் நடைமுறைப்படுத்தினீர்கள்? நான் ஓர் ஆத்மா, எப்படியும் ஓர் அதிபதி! என்பதல்ல. ஆனால், ஓர் அதிபதியாக இருந்து, கட்டளை இடுங்கள். ஒவ்வொரு புலனும் தமது அரசனான உங்களின் மீது அன்புடனும் சட்டத்திற்கேற்பவும் செயல்படுகிறதா எனச் சோதியுங்கள். ‘மன்மனாபவ’ ஆகுவதற்கான கட்டளையை நீங்கள் கொடுத்து, உங்களின் மனம் எதிர்மறையான மற்றும் வீணான எண்ணங்களை நோக்கிச் செல்லுமாக இருந்தால், இதை அன்பும் சட்டமும் என்று சொல்ல முடியுமா? நீங்கள் இனிமை சொரூபம் ஆகவேண்டும் என நீங்கள் கட்டளை இடுகிறீர்கள். ஆனால், பிரச்சனைகளாலும் இக்கட்டான சூழ்நிலைகளாலும், பயங்கரமான கோபம் இல்லாவிட்டாலும், சூட்சுமமான விசை அல்லது எரிச்சல் அடைதல் காணப்பட்டால், இது ஒழுங்குமுறை ஆகுமா? இது ஒழுங்குமுறையாக இருக்கிறதா?

பணிவாக இருப்பதற்காக நீங்கள் உங்களுக்கே ஒரு கட்டளை பிறப்பிக்கிறீர்கள். ஆனால், சூழலிற்கேற்ப, நீங்கள் உங்களையே கேட்கிறீர்கள்: ‘எத்தனை காலத்திற்குத்தான் நான் தொடர்ந்து அடங்கியே இருப்பது? நான் எதையாவது செய்து காட்ட வேண்டும்! நான் அடங்கியே இருக்க வேண்டுமா? நான் இறக்க வேண்டுமா? நான்தான் மாற வேண்டுமா?’ எனவே, இது அன்பும் கட்டளையுமா? இதனாலேயே, உலகிற்கும் அழுகின்ற துன்பத்திலுள்ள ஆத்மாக்களுக்கும் கருணை காட்டுவதற்கு முன்னர், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மீதே கருணை கொள்ள வேண்டும்! உங்களின் உரிமைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்! நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, சகாஷ் கொடுத்தல், உங்களின் எண்ணங்களால் அதிர்வலைகளை வழங்குதல், ஒரு சூழலை உருவாக்குதல் என்ற அதிகளவு வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதுவரை, என்ன சேவைக்கு யாரெல்லாம் கருவிகளாக இருக்கிறீர்களோ, அதை நீங்கள் மிக நன்றாகவே செய்கிறீர்கள், தொடர்ந்தும் செய்வீர்கள் என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இப்போது காலத்திற்கேற்ப, துரித கதியில் எல்லையற்ற சேவை செய்வதற்கான தேவை உள்ளது. ஆகவே, இப்போது, அனைத்திற்கும் முதலில், ஒவ்வொரு நாளும் தனது புலன்களைச் செயற்பட வைக்கும் அதிபதி ஆவார். இந்த விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள்: அதிபதியான நான், இந்த ஒத்துழைக்கும் சகபாடிகளை எல்லாவற்றையும் செய்ய வைக்கிறேன். உங்களின் அந்த ரூபத்தின் போதை உங்களிடம் இருக்கும்போது, இந்தப் புலன்கள் அனைத்துமே இயல்பாகவே, உங்களின் முன்னால் வந்து, ‘ஆமாம் எனது பிரபுவே! வந்தேன், எனது பிரபுவே!’ எனச் சொல்லும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. இன்று, சகல வீணான எண்ணங்களையும் முடிக்க வேண்டும். இன்று, சகல சம்ஸ்காரங்களையும் முடிக்க வேண்டும். இன்று, உங்களின் தீர்மானிக்கும் சக்தியை வெளிப்படுத்த வேண்டும். உங்களின் பௌதீகப் புலன்களும் உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரம் அனைத்தும் நீங்கள் விரும்பியதை ஒரே தடவையில் செய்யும். நீங்கள் இப்போது கூறுகிறீர்கள்: ‘பாபா, இன்னமும் நான் செய்ய வேண்டிய அளவிற்கு நான் செய்யவில்லை!’ அதன்பின்னர், ‘நான் விரும்பியதை என்னால் இலகுவாகச் செய்யக்கூடியதாக இருந்தது!’ என நீங்கள் சொல்வீர்கள். ஆகவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? உங்களின் உரிமைகளின் பலனை நடைமுறையில் பயன்படுத்துங்கள். உங்களின் சம்ஸ்காரங்களுக்குக் கட்டளை இடுங்கள்! உங்களின் சம்ஸ்காரங்கள் ஏன் உங்களுக்குக் கட்டளை இடுகின்றன? நீங்கள் ஏன் உங்களின் சம்ஸ்காரங்களை முடிக்கக்கூடாது? உங்களின் சம்ஸ்காரங்கள் உங்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அவற்றின் அதிபதியாக இருக்கும் உங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துங்கள். எனவே, மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கான மிக, மிக, மிக, மிகப் பெரும் தேவை உள்ளது. இது எதுவுமேயில்லை! மிகவும் இக்கட்டான வேளைகள் இன்னமும் வரவுள்ளன! இத்தகைய வேளைகளில், நீங்கள் தேவதைகள் ஆகுவீர்கள். உங்களின் பறக்கும் ஸ்திதியால் நீங்கள் எல்லா இடமும் சுற்றிவந்து, அமைதி தேவைப்படுபவர்களுக்கு அமைதியையும் சந்தோஷம் தேவைப்படுபவர்களுக்குச் சந்தோஷத்தையும் திருப்தியை வேண்டி நிற்பவர்களுக்குத் திருப்தியையும் வழங்குவீர்கள். உங்களின் தேவதை ரூபங்களில் நீங்கள் சுற்றி வந்து, சகாஷ் வழங்குவீர்கள். அவர்கள் இதை அனுபவம் செய்வார்கள். அவர்கள் இப்போது நீரைப் பெற்று, அவர்களின் தாகம் தணிக்கப்பட்டது என்பதை அனுபவம் செய்தது போன்று அமையும். அவர்கள் உணவையும் கூடாரங்களையும் பெற்றார்கள். அவர்கள் ஆதாரத்தைப் பெற்றார்கள். எனவே, அந்த வேளையில், அவர்கள் தேவதைகளிடம் இருந்து அமைதியையும் சக்தியையும் சந்தோஷத்தையும் பெறுவதை அனுபவம் செய்வார்கள். இந்த முறையில், உங்களின் சூட்சுமமான சரீரத்தின் வாகனம், உங்களின் இறுதி ஸ்திதி, உங்களின் சக்திவாய்ந்த ஸ்திதி, உங்களின் இறுதி வாகனமாக அமையும். பின்னர், சகல திசைகளிலும் சுற்றி வந்து, நீங்கள் எல்லோருக்கும் சக்திகளை வழங்குவீர்கள். நீங்கள் அவர்களுக்கு வசதிகளைக் கொடுப்பீர்கள். உங்களின் இந்த ரூபம் உங்களின் முன்னால் வந்துள்ளதா? அது வெளிப்பட வேண்டும்! பல தேவதைகள் சுற்றி வருகிறார்கள். அவர்கள் சகாஷ் வழங்குகிறார்கள். அப்போது மட்டுமே, உங்களின் ஒரு பாடல்களில் நீங்கள் பாடுவதைப் போல், ‘சக்திகள் வந்தனர்’ எனச் சொல்ல முடியும். சர்வசக்திவான் இயல்பாகவே சக்திகளினூடாக வெளிப்படுத்தப்படுவார். நீங்கள் இதைக் கேட்டீர்களா?

காலத்திற்கேற்ப, நீங்கள் எதைச் செய்தீர்களோ, என்ன நடந்ததோ, எல்லாமே அனைத்திலும் சிறந்ததாகும். இப்போது, எதிர்காலத்தில், இதைவிடச் சிறப்பான ஒன்று நடக்கவிருக்கிறது. அச்சா, நீங்கள் பயப்படவில்லைத்தானே, இந்தச் செய்திகளை கேட்டும் பார்த்தும் நீங்கள் பயப்படவில்லைத்தானே? இது எதுவுமேயில்லை! உங்களிடம் எல்லாமே உள்ளது. இது எதுவுமேயில்லை. எவ்வாறாயினும், அவர்கள் உங்களின் சகோதர, சகோதரிகள். அதனால் அவர்களுக்குச் சேவை செய்வது நல்லது. இப்போது, சுய இராச்சிய அதிகாரிகளே, உங்களின் அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். தளம்பல் அடையாதீர்கள்! அப்போது அரசாங்கத்திற்கும் காட்சிகள் கிடைக்கும்: இவர்களே அவர்கள்! இவர்களே அவர்கள்! இவர்களே அவர்கள்! உங்களின் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்காதீர்கள். உங்களின் உரிமைகளைக் கைவிடாதீர்கள்! உங்களின் உரிமைகளை எல்லா வேளையும் பயன்படுத்துங்கள்! உங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள்! உங்களின் உரிமைகளை மற்றவர்களில் பயன்படுத்தாதீர்கள்! அச்சா.

பல புதிய குழந்தைகளும் வந்துள்ளார்கள். வளர்ச்சி ஏற்பட வேண்டியுள்ளது. இந்தக் கல்பத்தில் இங்கே முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் நன்றாகச் செய்துள்ளீர்கள். நீங்கள் தைரியசாலிகளாக இருந்து வந்துள்ளீர்கள். அதனால் நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். அங்கே இருந்தவர்கள், அங்கேயே இருக்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை! தைரியம் மிகவும் அவசியம். எந்தவொரு பணியிலும் உங்களிடம் தைரியம் இருக்கும்போது, நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் தைரியம் இல்லாதபோதே, வெற்றியும் இல்லாமல் போகும். ஆகவே, தைரியமாக இருங்கள், பயமற்றவராக இருங்கள். என்ன நடக்கிறதோ எனப் பயப்படாதீர்கள். யாரோ ஒருவர் மரணிக்கிறார், நீங்கள் பயப்படுகிறீர்கள்! பயமற்றவராக இருங்கள்! அமைதியின் ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்குவது நல்லது. கருணை உணர்வுகளுடன் அந்த ஆத்மாவிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். பயப்படாதீர்கள்! பயமே அனைத்திலும் பெரிய தீய ஆவியாகும். ஏனைய தீய ஆவிகளை நீக்க முடியும். ஆனால், பயமென்ற தீய ஆவியை நீக்குவது மிகவும் கடினம். எதைப்பற்றிய பயமும் இருக்க முடியும். இறப்பதைப் பற்றிய பயம் மட்டுமல்ல, பல விடயங்களை இட்டுப் பயம் ஏற்பட முடியும். பல்வேறு வகையான பயங்கள் - உங்களின் சொந்தப் பலவீனத்தின் பயமும்- ஏற்படும்போதெல்லாம், பயமற்றவர் ஆகுவதற்கான இலகுவான வழிமுறை, எப்போதும் சுத்தமான, நேர்மையான இதயத்தைக் கொண்டிருப்பதே ஆகும். அப்போது, அங்கே ஒருபோதும் எந்தவிதமான பயமும் ஏற்படாது. உங்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்ற ஏதோவொன்று நிச்சயமாக உங்களின் இதயத்திற்குள் அமிழ்ந்துள்ளது. உங்களிடம் சுத்தமான, நேர்மையான இதயம் இருக்கும்போது, பிரபுவும் மகிழ்ச்சி அடைகிறார், எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள்.

அச்சா. இங்கே வந்திருக்கும் புதிய குழந்தைகளுக்கு, இந்தப் புது வாழ்க்கையில் உங்களின் இறை பாக்கியத்தை அடைந்திருப்பதற்கு வாழ்த்துக்கள். அச்சா. பல குழந்தைகள் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (வெளிநாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 700 பேர் வந்திருந்தனர்). வாருங்கள்! வாருங்கள்!

இந்தத் தடவை, இது மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சேவை செய்யும் முறை:

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (4000 பேர் வந்திருந்தனர்). அந்த 4000 பேருக்கும் நான்கு தடவைகள் பலமில்லியன் பாராட்டுக்கள்! நீங்கள் நன்றாகச் செய்துள்ளீர்கள். ஒவ்வொரு குழுவினருக்கும் அவர்களின் சேவைக்குரிய சொந்தச் சிறப்பியல்பு உள்ளது. ஏனென்றால், சேவை செய்வதற்கு முன்னரே, நீங்கள் குடும்பத்திற்கு நெருக்கமாக வருகின்ற பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதல்லவா? இல்லாவிட்டால், இது மகாராஷ்டிராவா அல்லது ஆந்திராவா என யார் கேட்பார்கள்? எவ்வாறாயினும், சேவை செய்வதற்கான இந்த விசேடமான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் குடும்பத்தின் முன்னாலும் தாதிகள் மற்றும் தாதாக்களின் முன்னாலும் வருகிறீர்கள். அத்துடன் நீங்கள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்கிறீர்கள். ஏன் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள்? இதற்கான காரணம் என்ன? உங்களின் நிலையங்களில் எத்தனை பேருக்கு நீங்கள் சேவை செய்கிறீர்கள்? ஆகக் கூடியது, நீங்கள் 50 இலிருந்து 100 பேருக்குச் சேவை செய்யக்கூடும். எவ்வாறாயினும், இங்கே நீங்கள் சேவை செய்யும்போது, ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்கிறீர்கள். ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்வதன் பலனாக, நீங்கள் எல்லோரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் மிக நல்ல சேவை செய்துள்ளீர்கள். நீங்கள் மிக நல்ல சேவை செய்துள்ளீர்கள். எல்லோரிடமிருந்தும் ஆசீர்வாதங்கள் வெளிப்படுகின்றன. இந்த ஆசீர்வாதங்கள், இந்த நேரத்தில் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. இரண்டாவதாக, அவை சேமிக்கப்படுகின்றன. இரட்டை நன்மை கிடைக்கிறது. சேவை செய்தவர்கள், அந்தச் சேவையின் பலனை சந்தோஷத்தின் வடிவத்தில் பெறுகிறார்கள். அத்துடன் அது அவர்களின் கணக்கிலும் சேமிக்கப்படுகிறது. ஆகவே, அங்கே இரட்டை நன்மை ஏற்படுகிறது. பெரும்பாலான பிராந்தியங்கள் இப்போது எல்லாவற்றையும் மிக நன்றாகக் கற்றுள்ளார்கள். நீங்கள் அந்தப் பயிற்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் மிக நன்றாகச் செய்தீர்கள்! பாராட்டுக்கள்!

(100 குமாரிகளுக்கு அர்ப்பணிப்பு விழா): அச்சா, 100 குமாரிகளே, எழுந்து நில்லுங்கள்! எல்லோரும் பாருங்கள்! அவர்கள் எல்லோரையும் தொலைக்காட்சியில் காட்டுங்கள். இது நல்லது. நீங்கள் எப்படியும் அர்ப்பணித்தவர்களே. எவ்வாறாயினும், அர்ப்பணிப்புடன் உங்களுக்கு உறுதியான முத்திரை குத்தப்படுகிறது. சர்வசக்திவான் அரசாங்கத்தின் இந்த முத்திரையை அழிக்க முடியாது. இது உறுதியாக உள்ளதல்லவா? இது உறுதியாக இருக்கிறதா? நிச்சயமாகவா? இது மிக, மிக, மிக உறுதியான சத்தியம் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை அசையுங்கள்! இது மிகவும் உறுதியாக உள்ளதா? இது மகாராஷ்டிரா. அவர்கள் ஏதாவது மகத்துவத்தைக் காட்டுவார்கள்! மிகவும் நல்லது! பாப்தாதாவிடமிருந்து பல, பல, பல மில்லியன், பில்லியன் மடங்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! அச்சா.

இப்போது, ஒரு விநாடியில், தேவதைகளாகி, எங்கெல்லாம் பூகம்பம் ஏற்பட்டதோ அந்த இடங்களுக்கு உங்களின் பறக்கும் ஸ்திதியுடன் சென்று, அமைதி, சக்தி மற்றும் திருப்தியின் சகாஷைப் பரப்புங்கள். அங்கே சென்று சுற்றிவிட்டு, ஒரு விநாடியில் திரும்பி வாருங்கள். நீங்கள் எல்லோரும் அங்கே சென்று, சுற்றிவிட்டுத் திரும்பி வாருங்கள். அச்சா. (அந்த அப்பியாசம் செய்யப்பட்டது)

இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமது தேவதை ரூபங்களுடன் பிரசன்னமாக இருக்கும் சுய இராச்சிய அதிகாரிக் குழந்தைகள் எல்லோருக்கும், சதா தமது பௌதீகமான மற்றும் சூட்சுமமான ஒத்துழைக்கும் பணியாட்களையும் தமது ஒத்துழைக்கும் சகபாடிகளையும் அன்புடனும் சட்டத்துடனும் செயற்பட வைப்பவர்களுக்கும் தந்தையிடமிருந்து தாம் பெற்ற ஆன்மீக வசதிகளை சதா என்றும் தயாராக வைத்திருப்பவர்களுக்கும் ஓர் அரசனாக, உங்களின் இராச்சியத்தின் சகல உரிமைகளையும் அனுபவம் செய்யும் ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவருக்கும், சக்தி சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், தமது பறக்கும் ஸ்திதியால் தொடர்ந்து தமது தேவதை ரூபங்களில் எங்கும் சகாஷை வழங்குபவர்களுக்கும் சதா சுத்தமான, நேர்மையான இதயங்களுடன் பயமற்றவராக இருக்கும் உலக உபகாரி மற்றும் உலகை மாற்றுகின்ற ஆத்மாக்களுக்கும், தங்களை அசரீரியான ஸ்திதியில் இருப்பதை அனுபவம் செய்பவர்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும்.

தாதிகளுக்கு: உங்களின் கருவி தாதிகளும் தாதாக்களும் முன்னால் வந்துள்ளார்கள் என நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? அல்லது, நீங்களும் இங்கே வரவிரும்புகிறீர்களா? முன்னால் இருப்பது நல்லதே. பாபா தனக்கு முன்னால் இருப்பவர்களை அதிகளவில் பார்க்கிறார். இங்கே, அவர் தனது முகத்தை அதிகளவில் திருப்ப வேண்டியுள்ளது. ஆனால் தனக்கு முன்னால் இருப்பவர்களை அவர் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பார்.

ஜெகதீஷ் பாயிடம்: அச்சா, எல்லாமே நன்றாக இருக்கிறதா? உங்களின் சரீரத்துடன் நீங்கள் உங்களைத் தந்தைக்கு அர்ப்பணித்திருப்பதே மிகச்சிறந்த விடயமாகும். உண்மையில், நீங்கள் எல்லாவற்றையும் தந்தையிடம் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்தானே? அல்லது, இன்னமும் அதைக் கொடுக்க வேண்டியுள்ளதா? கருவி ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் அதைக் கொடுத்துவிட்டீர்கள். இதனாலேயே, அவர்கள் உங்களை பௌதீகமான ரூபத்தில் பின்பற்றுகிறார்கள். பௌதீக ரூபத்தில் மகாராத்திகளைப் பார்க்கும்போது, எல்லோரும் சக்தியைப் பெறுகிறார்கள். எனவே, இந்தக் குழு முழுவதும் எத்தகையவர்கள்? சக்தியின் மூலாதாரம் ஆனவர்கள். நீங்கள் இப்படிப்பட்டவர்கள்தானே? (தாதி ஜான்கி கூறினார்: எங்களை அசைய வைப்பவர், மிகவும் சுவாரசியமானவர்!) அவர் மகா களிப்பூட்டுபவராக இல்லாவிட்டால், எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி இடம்பெற்றிருக்க முடியும்? தந்தை கூறுகிறார்: அசைபவர்கள், தந்தையை விடக் கெட்டிக்காரர்கள்.

அச்சா. நீங்கள் எல்லோரும் சதா உங்களின் இதயங்களில் ‘எனது பாபா’ என்ற ஒரு வரியின் பாடலைப் பாடுகிறீர்கள். இந்தப் பாடலை எப்படிப் பாடுவது என உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே? ‘எனது பாபா!’ என்ற பாடலை எப்படிப் பாடுவது என உங்களுக்குத் தெரியுமா? இது இலகுவானதுதானே? நீங்கள் ‘என்னுடையவர்’ எனச் சொன்னதுமே, அவரை உங்களுக்குச் சொந்தமானவர் ஆக்கிக் கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகள் தந்தையை விடக் கெட்டிக்காரர்கள். ஏன்? நீங்கள் கடவுளையே கட்டிப்போட்டுவிட்டீர்கள். (தாதி ஜான்கியிடம் பேசுகிறார்): நீங்கள் அவரைக் கட்டிப் போட்டுள்ளீர்கள்தானே? ஆகவே, மற்றவர்களைக் கட்டிப் போடுபவர் சக்திசாலியா? அல்லது, கட்டுப்படுகின்ற ஒரேயொருவர் சக்திசாலியா? யார் அதிக சக்திசாலி? கட்டுப்படும் ஒரேயொருவர் உங்களுக்கு வழியைக் காட்டினார். இந்த முறையில் நீங்கள் அவரைக் கட்டினால், அவர் கட்டுப்படுவார். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை ஒரு கருவியாகக் கருதி, வீணான எண்ணங்கள் அல்லது வீணான மனோபாவத்தில் இருந்து விடுபட்டு, ஓர் உலக உபகாரி ஆகுவீர்களாக.

உலக நன்மையை ஏற்படுத்தும் பணிக்கு நான் ஒரு கருவி. இந்தப் பொறுப்பினை உணர்ந்தவராக இருங்கள். உங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ ஒருபோதும் எந்தவிதமான வீணான எண்ணங்களோ அல்லது வீணான மனோபாவமோ உங்களுக்குள் ஏற்படாது. பொறுப்பான ஆத்மாக்களால் நன்மை செய்யாத ஓர் எண்ணத்தைக்கூடக் கொண்டிருக்க முடியாது. அவர்களால் ஒரு விநாடிக்கேனும் வீணான மனோபாவத்தைக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அவர்களின் மனோபாவத்தினாலேயே சூழல் உருவாக்கப்படுகிறது. அதனால் இயல்பாகவே அவர்கள் எல்லோருக்காகவும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையுமே கொண்டிருப்பார்கள்.

சுலோகம்:
கோபம் என்பது அறியாமைச் சக்தி. அமைதி என்பது ஞானத்தின் சக்தி.