13.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, யோகத்தினால் தத்துவங்களைத் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். ஏனெனில் தத்துவங்கள் தூய்மையாகும்பொழுதே தேவர்கள் இவ்வுலகில் பாதங்களைப் பதிப்பார்கள்.

பாடல்:
உங்கள் புதிய இராச்சியத்தில் எவ்வகையான அமைதியின்மையும் இருக்க முடியாது. ஏன்?

பதில்:
1. ஏனெனில் நீங்கள் அந்த இராச்சியத்தை உங்கள் ஆஸ்தியாகத் தந்தையிடமிருந்து பெற்றிருப்பீர்கள். 2.ஆசீர்வாதங்களை அருள்பவராகிய தந்தை இப்பொழுது ஆசீர்வாதங்களையும், ஆஸ்தியையும் கொடுக்கிறார். எனவே இக்காரணத்தால், அங்கே அமைதியின்மை நிலவ முடியாது. நீங்கள் தந்தைக்கு உரியவராகும்பொழுது, உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் யாருடைய குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே உண்மையான பிரபுவும் அதிபதியும் என அழைக்கப்படுகிறார். இதனாலேயே இந்நாட்களில் குழந்தைகளாகிய நீங்கள் பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். சத்தியத்தைப் பற்றி ஒரு கூற்று உள்ளது: உண்மையானதையே உண்ணுங்கள், உண்மையானதையே அணியுங்கள். மனிதர்களாலேயே இக்கூற்று உருவாக்கப்பட்டதாயினும், தந்தை இங்கே அமர்ந்திருந்து அதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். தந்தையே அதிமேலானவர் என்றும், அதிகம் புகழப்படுபவர் என்றும், படைப்பவர் என்றும் அழைக்கப்படுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்களே அவருடைய முதற் படைப்பு. நீங்களே அந்தத் தந்தையின் குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையுடன் வசிக்கிறார்கள். அது இனிய வீடாகிய, தந்தையின் வீடு என அழைக்கப்படுகிறது. இது உங்கள் வீடு அல்ல. அவரே எங்களின் இனிமையிலும் இனிiமையான தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அமைதிதாமம் எங்கள் இனிய வீடாகும். சத்தியயுகமும் எங்கள் இனிய வீடு என அழைக்கப்படுகிறது. ஏனெனில் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் அமைதி நிலவுகிறது. இங்கே லௌகீகத் தாய்மார்களினதும், லௌகீகத் தந்தைமார்களினதும் வீட்டில் அமைதியின்மையே நிலவுகின்றது, உலகிலும் அமைதியின்மையே காணப்படுகிறது. அங்கே ஒவ்வொரு வீட்டிலும், உலகம் முழுவதிலும் அமைதி நிலவுகின்றது. சத்தியயுகம் ஒரு சிறிய, புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது. இப்பழைய உலகம் மிகவும் பெரியது. சத்தியயுகத்தில் அமைதியும், சந்தோஷமும் நிலவுகின்றன. அங்கே எந்தக் குழப்பம் எனும் கேள்வியே இல்லை. ஏனெனில் நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியான அமைதியைப் பெற்றிருப்பீர்கள். குருமார்களும், புனிதர்களும் ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார்கள்: புத்திர பாக்கியம் உண்டாகட்டும்! நீடூழி வாழ்க! அவர்கள் கொடுக்கின்ற அந்த ஆசீர்வாதங்கள் புதியவையல்ல. அவற்றை நீங்கள் இயல்பாகவே உங்கள் ஆஸ்தியாகத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை ஞாபகப்படுத்துகின்றார். துன்பம் உலகில் நிலவும்பொழுது பக்தி மார்க்கத்திலுள்ள சகல சமயத்தவர்களும் ஒரேயொரு பரலோகத் தந்தையை நினைவுசெய்கின்றார்கள். இவ்வுலகம் பழையதும், தூய்மையற்றதும் ஆகும். புதிய உலகில் சந்தோஷமே நிலவுகிறது. அங்கு அமைதியின்மையின் சுவடேதும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையாகவும், தெய்வீகக் குணங்கள் உடையவர்;களாகவும் ஆக வேண்டும். இல்லையேல் நீங்கள் பெருந் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். உங்கள் கர்மக்கணக்குகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு உதவும் தர்மராஜாவும், தந்தையுடன் இருக்கின்றார். நீதிமன்றமும் இருக்கும். நிச்சயமாகப் பாவங்களுக்கான தண்டனையும் இருக்கும். நல்ல முயற்சி செய்பவர்கள் தண்டனையை அனுபவம் செய்ய மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காகத் தண்டனையைப் பெறுகிறீர்கள். அது கர்ம வேதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இராவணனுடைய அந்நிய இராச்சியம், இதில் எல்லையற்ற துன்பமே உள்ளது. இராம இராச்சியத்தில் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. நீங்கள் பலருக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். ஆனால் சிலரால் மாத்திரமே உடனடியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனையோர் புரிந்துகொள்வதற்குக் காலம் எடுக்கின்றது. குறைவாகப் புரிந்துகொண்டால், அவர்கள் தாமதமாகவே பக்தி செய்ய ஆரம்பித்தவர்கள் என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்திலிருந்து பக்தி செய்துள்ளவர்கள் முதல் இலக்கத்தைப் பெற வேண்டும் என்பதால், ஞானத்தை மிக விரைவில் புரிந்துகொள்வார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் இனிய வீட்டிலிருந்து இங்கே வருகிறீர்கள் என்பதை அறிவீர்கள். மௌனமும், ‘அசைவும்’ ‘பேச்சும்’ உள்ளன. குழந்தைகள் திரான்சில் சென்ற பின்னர், அங்கேயுள்ள அனைத்தும் அசைவே என்று விபரிக்கின்றார்கள். திரான்சுக்கும் ஞான மார்க்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். அவ்வளவே; வேறு எதுவும் இல்லை. தந்தை அசரீரியானவர்; அவருடைய குழந்தைகள், அதாவது, இச்சரீரங்களில் உள்ள ஆத்மாக்களும் அசரீரியானவர்களே. இதில் எந்தக் கேள்வியும் எழுவதில்லை. ஆத்மாக்களின் அன்பு ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தை மீதே உள்ளது. அனைவருடைய சரீரமும் தூய்மையற்றது. எனவே நீங்கள் தூய்மையற்ற சரீரங்கள் மீது அன்பு கொண்டிருக்க முடியாது. ஆத்மாக்கள் தூய்மையாகினாலும் அவர்களுடைய சரீரங்கள் தூய்மையற்றதாகவே உள்ளன. இத்தூய்மையற்ற உலகில் சரீரங்கள் தூய்மையாகுவதில்லை. ஆத்மாக்கள் இங்கேயே தூய்மையாக வேண்டும்; அப்பொழுது மாத்திரமே இப்பழைய சரீரங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்து தூய்மையாகுவதே ஆத்மாக்களின் கடமை. ஆத்மாக்கள் தூய்மையாக உள்ளபொழுது அவர்களுக்குத் தூய சரீரங்கள் தேவைப்படுகின்றன. அவை புதிய உலகில் பெறப்படும். ஆத்மாக்கள் தூய்மையாகட்டும்! ஆத்மாக்கள் ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தையுடனேயே யோகம் செய்ய வேண்டும். அவ்வளவுதான். இந்தத் தூய்மையற்ற சரீரத்தைத் தொடவும் கூடாது. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறார். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சத்தியயுகத்திலிருந்து கலியுகம்வரை நீங்கள் உங்கள் சரீரங்களில் தங்கியிருந்தீர்கள். அங்கே ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டும் தூய்மையாக இருக்கின்றன. நீங்கள் அங்கே விகாரத்தில் ஈடுபடுவதில்லை என்பதால் ஆத்மாக்களோ அல்லது உங்கள் சரீரங்களோ விகாரமானவை ஆகுவதில்லை. வல்லபாச்சாரிகள் (ஒரு பகுதியினர்) பிறர் தங்கள் சரீரங்களைத் தொடவேனும் அனுமதிப்பதில்லை. அந்த ஆத்மாக்கள் விகாரமற்றவர்களோ அல்லது தூய்மையானவர்களோ இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். வல்லபாச்சாரிப் பிரிவு தாம் உயர்ந்த குலத்திற்குரியவர்கள் என்று கருதுகின்றனர். அவர்கள் தங்கள் சரீரங்களைத் தொட அனுமதிப்பதில்லை. தாங்கள் விகாரம் உடையவர்களும், தூய்மையற்றவர்கள் என்பதையும், தங்கள் சரீரங்கள் களங்கத்தின் (விகாரத்தின்) மூலம் உருவாக்கப்பட்டவை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தை வந்து, இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுது, அவர்கள் தங்கள் சரீரங்களை மாற்ற வேண்டும். பஞ்ச தத்துவங்கள் தூய்மையாகும்பொழுதே, உங்கள் சரீரமும் தூய்மையாக முடியும். சத்தியயுகத்தில் பஞ்ச தத்துவங்களும் தூய்மையாக இருப்பதால், சரீரங்களும் தூய்மையாக இருக்கின்றன. தேவர்களால் இந்தத் தூய்மையற்ற பூமியில் பாதத்தைப் பதிக்கவோ அல்லது தூய்மையற்ற சரீரங்களைக் கொண்டிருக்கவோ முடியாது. ஆத்மாக்கள், அவர்களுடைய சரீரங்கள் இரண்டும் தூய்மையாக இருக்கின்றன. இதனாலேயே அவர்கள் சத்தியயுகத்தில் மாத்திரமே பாதத்தைப் பதிக்கிறார்கள். இது ஒரு தூய்மையற்ற உலகாகும். ஆத்மாக்கள் பரமாத்மாவாகிய பரலோகத் தந்தையை நினைவுசெய்கிறார்கள். ஒருவர் உங்களுடைய பௌதீகத் தந்தை, மற்றவர் உங்கள் சரீரமற்ற தந்தை ஆவார். சரீரமற்ற தந்தை நினைவுகூரப்படுகிறார், ஏனெனில் நீங்கள் நிச்சயமாக அத்தகையதொரு சந்தோஷ ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகிறீர்கள். இதனாலேயே உங்களால் அவரை நினைவுசெய்யாமல் இருக்க முடியாது. நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகி விட்டபொழுதிலும், இன்னமும் அந்தத் தந்தையை நிச்சயமாக நினைவுசெய்கிறீர்கள். எவ்வாறாயினும், கடவுள் சர்வவியாபி என்று கூறுகின்ற, தவறான கற்பித்தல்களை மக்கள் பெறுகிறார்கள். மனிதர்கள் மனிதர்களாகவே பிறக்கிறார்கள் என்ற விடயத்தில் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தந்தை வந்து, இந்தத் தவறுகளை விளங்கப்படுத்துகிறார். தந்தை 'மன்மனாபவ!" என்ற ஒரேயொரு மந்திரத்தை மாத்திரமே கொடுக்கிறார். அதன் அர்த்தம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். இந்த அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள், அவ்வளவுதான். இதன் மூலம் நீங்கள் தூய்மையாக முடியும். தேவர்கள் தூய்மையானவர்கள். தந்தை இப்பொழுது வந்து, உங்களை மீண்டும் அவர்களைப் போன்று தூய்மையாக்குகின்றார். அவர் உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன்னிலையில் வைக்கிறார். ஒரு சிற்பியால் மனிதனின் முகத்தைப் பார்த்து, நேரடியாக சிற்பத்தை உருவாக்க முடியும். அவை உயிரற்ற சிலைகளாக இருப்பினும், அந்த நபர் உயிருள்ள வடிவத்தில் தங்கள் முன்னால் இருப்பது போன்று தோற்றமளிக்கின்றன. இங்கே தந்தை உங்களிடம் கூறுகிறார்: நீங்கள் உயிர்வாழும் இலக்ஷ்மி, நாராயணர்கள் ஆகவேண்டும். நீங்கள் எவ்வாறு அவர்கள் போன்று ஆகுவீர்கள்? இந்தக் கல்வியின் மூலமும், தூய்மையின் மூலமும் நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவீர்கள். இது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான பாடசாலை. அந்தச் சிற்பிகள் பல சிற்பங்களை உருவாக்குகிறார்கள், அது கலை என அழைக்கப்படுகிறது. அவர்கள் அதேமாதிரியான முகத்தை உருவாக்குகிறார்கள். இங்கே அதேமாதிரியான முகம் என்ற கேள்வி இல்லை. அவை உயிரற்ற வடிவங்கள், ஆனால் நீங்கள் அங்கே இயல்பாகவே இவ்வாறு உயிருள்ள வடிவங்கள் ஆகுவீர்கள். பஞ்ச தத்துவங்களினாலான சரீரங்கள் உயிருள்ளதாக இருக்கும். அந்த உயிரற்ற வடிவங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. அவை தேவர்களை ஒத்ததாக இருக்க முடியாது, ஏனெனில் தேவர்களின் புகைப்படத்தை எடுக்க முடியாது. அவர்களின் காட்சிகளைத் திரான்சில் பெற்றாலும், அவர்களால் தேவர்களின் புகைப்படத்தை எடுக்க முடியாது. அவர்கள் தேவர்களின் காட்சியைப் பெற்றதாகக் கூறினாலும், அவர்களால் அந்த வடிவத்தை உருவாக்க முடியாது. வேறு எவராலும் உருவாக்க முடியாது. நீங்கள் தந்தையிடமிருந்து ஞானத்தை எடுத்து முடித்த பின்னர், உங்களால் மாத்திரமே அவ்வாறு ஆக முடியும். அப்பொழுதே நீங்கள் முன்னைய கல்பத்தில் எவ்வாறு இருந்தீர்களோ அதேபோன்று ஆகுவீர்கள். இது அத்தகைய அற்புதமான, ஓர் இயற்கையான நாடகம்! தந்தை இங்கமர்ந்திருந்து, இயற்கையின் அற்புதமான விடயங்களைப் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மனிதர்கள் இந்த விடயங்களைப் பற்றி சிந்திப்பதுமில்லை. அவர்கள் தேவர்களின் சிலைகளின் முன்னால் சென்று, வணங்குகிறார்கள். அவர்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டாலும், எப்பொழுது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் மீண்டும் எப்பொழுது வருவார்கள் என்பதோ அல்லது அவர்கள் வரும்பொழுது என்ன செய்வார்கள் என்பதைப் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியாது. சூரிய வம்சத்திற்கும், சந்திர வம்சத்திற்கும் உரியவர்களாக இருந்தவர்கள்‚ வாழ்ந்து‚ பின் சென்று விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த ஞானத்தைக் கற்பதனால், அவர்கள் மீண்டும் அதேபோன்று ஆகுவார்கள். இது ஓர் அற்புதமே. எனவே தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: அவ்வாறான முயற்சியைச் செய்வதால், நீங்கள் அதேபோன்ற தேவர்களாக மீண்டும் ஆகுவீர்கள். நீங்கள் முன்னர் சத்திய, திரேதா யுகங்களில் மேற்கொண்ட செயல்களையே செய்வீர்கள். இது அத்தகைய அற்புதமான ஞானம்! உங்கள் இதயம் சுத்தமாக இருக்கும்பொழுது மாத்திரமே, இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க முடியும். இந்த விடயங்கள் வேறெவரினதும் புத்தியிலும் இருக்க மாட்டாது; இதற்கு, உங்களுக்கு முயற்சி தேவை. முயற்சி செய்யாமல், உங்களால் பலனைப் பெற முடியாது. தந்தை தொடர்ந்தும் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். அனைத்தும் நாடகத்திற்கு ஏற்பவே நிகழ்ந்தாலும், நீங்கள் இன்னமும் முயற்சி செய்ய வேண்டும். 'அது நாடகத்தில் இருக்குமாயின் என்னால் முயற்சி செய்ய முடியும்" என நீங்கள் அமர்ந்திருந்து நினைக்கக்கூடாது. 'அது என்னுடைய பாக்கியத்தில் இருந்தால், நிச்சயமாக முயற்சி இருக்கும்;" போன்ற நியாயமற்ற எண்ணங்களைப் பலர் கொண்டிருக்கிறார்கள். ஆ! முயற்சி செய்ய வேண்டியவர்கள் நீங்களே! முயற்சியின் பின்னரே வெகுமதி உள்ளது. 'முயற்சியா அல்லது வெகுமதியா மகத்தானது" என மனிதர்கள் வினவுகிறார்கள். வெகுமதியே மகத்தானது. ஆயினும், முயற்சியின் மூலமே வெகுமதி உருவாக்கப்படுவதால், முயற்சியே மகத்தானது எனக் கூறப்படுகின்றது. முயற்சி செய்வதனாலேயே மனிதர்கள் அனைத்தையும் பெறுகிறார்கள். இதற்குத் தவறான அர்த்தத்தைக் கூறுகின்ற, அத்தகைய கல்லுப் புத்தியையுடைய சிலரும் இருக்கிறார்கள். இது அவர்களின் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. அவர்கள் வீழ்ந்துவிடுகிறார்கள். இங்கே குழந்தைகளாகிய நீங்களே முயற்சி செய்வதற்குத் தூண்டப்படுகிறீர்கள். உங்களுக்கு இரவுபகலாக விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் நிச்சயமாக உங்கள் நடத்தையைச் சீர்திருத்த வேண்டும். முதற்தரமான நடத்தை என்பது தூய்மையாக இருப்பதாகும். எவ்வாறாயினும், தேவர்கள் தூய்மையானவர்கள். அவர்கள் வீழும்பொழுது, அவர்களுடைய நடத்தை சீர்கெட்டு, முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். உங்கள் நடத்தை முதற்தரமானதாக இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பின்னர் நீங்கள் முற்றாக வீழ்ந்துவிட்டீர்கள். அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. இதிலேயே பெருஞ் சிரமம் உள்ளது. இது இராவண இராச்சியம் என்பதால், மக்களின் கண்கள் அவர்களை அதிகளவு ஏமாற்றுகின்றன. அங்கே உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றாது. நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெறுகிறீர்கள். இதனாலேயே, “தர்மமே சக்தி” எனக் கூறப்படுகிறது. சர்வசக்திவான் தந்தை வந்து, இந்தத் தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர், ஆனாலும், அவர்கள் அதை மனித வடிவங்களின் மூலம் செய்கிறார்கள். அந்தத் தந்தை ஞானக்கடல். அவரது புகழ், தேவர்களின் புகழிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே, அத்தகைய தந்தையை நீங்கள் ஏன் நினைவுசெய்யக்கூடாது? விதையான அந்த ஒரேயொருவரே ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். அவர் 'சத்தியமானவர், உயிருள்ளவர், பேரானந்த சொரூபம்" என்று ஏன் அழைக்கப்படுகிறார்? அவரிலிருந்தே (விதையானவர்) விருட்சம் வெளிவருகின்றது என்பதை விருட்சத்தின் விதையானவர் அறிவார். எவ்வாறாயினும், அந்த விதைகள் உயிரற்றவை. அவற்றின் ஆத்மாக்கள் உயிரற்றவை என்றாலும், மனித ஆத்மாக்கள் உணர்வுள்ளவர்கள். உயிருள்ள ஆத்மாவை ஞானக் கடல் எனவும் அழைக்கலாம். மரம் சிறியதிலிருந்து பெரிதாக வளர்வதால், அதில் நிச்சயமாக ஆத்மா உள்ளது, ஆனால் அதனால் பேச முடியாது. பரமாத்மாவிற்கு அதிக புகழ் உள்ளது; அவரே ஞானக் கடலாவார். இந்தப் புகழ் ஆத்மாக்களுக்கு உரியதல்ல. இந்தப் புகழ் பரமாத்மாவிற்கு மாத்திரமே பாடப்படுகிறது. அவர் ஈஸ்வர் என அழைக்கப்படுகிறார். அவருடைய உண்மையான பெயர் பரமாத்மாவான பரமதந்தை. “பரம்” என்றால் மேலானது என்று அர்த்தம். மக்கள் அவரையிட்டுப் பாடுகின்ற புகழ் மிகவும் சக்திவாய்ந்தது. இப்பொழுது நாளுக்கு நாள், அவரது புகழ் குறைவடைகிறது, ஏனெனில் அவர்களுடைய புத்தி முதலில் சதோவாக இருந்தது, பின்னர் இரஜோவாகி, இப்பொழுது தமோபிரதானாகி விட்டது. தந்தை வந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பழைய உலகைப் புதியதாக்குவதற்கு, நான் 5000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறேன். சத்தியயுகம் சத்தியமானது, அங்கே நடப்பவையெல்லாம் சத்தியமானது என்று நினைவுகூரப்படுகிறது. (சீக்கியர்களின் புனிதநூலாகிய, கிராந் சாகிப்பில் எழுதப்பட்டுள்ளது.) சில நல்ல வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன, ஏனெனில் அவர்கள் அந்தளவு தூய்மையற்றவர்கள் அல்ல. பின்னர் வருபவர்கள், அந்தளவிற்குத் தூய்மையற்றவர்கள் அல்ல. பாரத மக்கள் முற்றிலும் சதோபிரதானாக இருந்தார்கள். அவர்களே தங்களுடைய பல பிறவிகளின் இறுதியில் முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். இவ்வாறு சமய ஸ்தாபகர்களையிட்டுக் கூற முடியாது. அவர்கள் அதிகளவு சதோபிரதானாகவோ அல்லது அதிகளவு தமோபிரதானாகவோ ஆகுவதில்லை. அவர்கள் அதிகளவு சந்தோஷத்தையோ அல்லது அதிகளவு துன்பத்தையோ அனுபவம் செய்வதில்லை. யாருடைய புத்தி அதிகளவு தமோபிரதான் ஆகியுள்ளது? அனைத்துச் சமயங்களிலும், முதலில் தேவர்களாக இருந்தவர்களே அதிகளவு வீழ்ந்துள்ளார்கள். பாரதம் மிகவும் புராதனமானது என்பதால், மக்கள் அதன் புகழைப் பாடுகிறார்கள். நீங்கள் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், இந்நேரத்துப் பாரதம் மிகவும் வீழ்ந்து விட்டது. பாரதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியுமே, தேவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியுமாகும். நீங்கள் இதைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் புத்தியை உபயோகிக்க வேண்டும். நாங்கள் சதோபிரதானாக இருந்தபொழுது அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தோம். பின்னர் நாங்கள் தமோபிரதானாக இருப்பதால், அதிகளவு துன்பத்தையும் அனுபவம் செய்கிறோம். நான்கு பிரதான சமயங்கள் உள்ளன: தேவ தர்மம், இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம். இவற்றின் மூலமே விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது. தாங்கள் எந்தச் சமயத்திற்கு உரியவர்கள் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தங்கள் தர்மம் தெரியாததால், தங்கள் தர்மத்தைக் கைவிட்டு விட்டார்கள். உண்மையில் அவர்களுடைய தர்மமே பிரதானமானது, ஆனால் அவர்கள் அதை மறந்து விட்டார்கள். அம்மக்கள் தங்களுடைய சமயத்தில் நேர்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதைப் புத்திசாலிகளும் விவேகமானவர்களும் புரிந்துகொள்கிறார்கள். இல்லாவிட்டால், பாரதம் முன்னர் எவ்வாறு இருந்தது, இப்பொழுது அது என்னவாகி விட்டது? தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? அவர் இங்கமர்ந்திருந்து, முழு வரலாற்றையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஆட்சிசெய்தீர்கள், அரைக்கல்பத்தின் பின்னர் இராவண இராச்சியத்தில் உங்கள் செயல்களும் உங்கள் தர்மமும் சீரழிந்து விட்டன. நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தேவ சமுதாயத்திற்கு உரியவர்களாக ஆகுகிறீர்கள். கடவுள் பேசுகிறார்: தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்தி, உங்களைக் கடவுளின் சமுதாயத்திற்கு உரியவர்களாக ஆக்குகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இதயத்தின் சுத்தத்தினால், தந்தையின் அற்புதமான ஞானத்தை உங்கள் வாழ்வில் கிரகித்துக் கொள்ளுங்கள். முயற்சி செய்வதனால் மேன்மையான வெகுமதியை உருவாக்குங்கள். 'நாடகம்!" எனக் கூறி, முயற்சி செய்வதை நிறுத்தி விடாதீர்கள்.

2. இராவண இராச்சியத்தில் உங்கள் குற்றப் பார்வையினால் ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, ஞானமாகிய உங்கள் மூன்றாவது கண்ணால் பார்ப்பதைப் பயிற்சி செய்யுங்கள். முதல் இலக்க நடத்தையான தூய்மையைக் கிரகியுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் பிராமண வாழ்க்கையின் ஜாதகத்தை அறிந்திருப்பதன் மூலம் மகாபாக்கியசாலிகளாகி சதா சந்தோஷமாக இருப்பீர்களாக.

உங்கள் பிராமண வாழ்க்கை புதியதாகும். பிராமணர்களாகிய நீங்கள் ஆரம்பத்தில், தேவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது பிரம்மகுமார், பிரம்மகுமாரிகள் ஆகியுள்ளீர்கள். பிராமணர்களின் ஜாதகத்தில் முக்காலமுமே அனைத்திலும் அதிசிறந்ததாகும். நடந்தவை அனைத்தும் நன்மைக்கே, இப்பொழுது நடப்பதும் நன்மையே, இனி நடக்கப் போவதும் மிக மிக நன்மைக்கே. உங்களுடைய பிராமண வாழ்வின் ஜாதகம் சதா நன்றாகவே உள்ளது. இதற்கான உத்தரவாதம் உள்ளது. எனவே, சதா சந்தோஷமாக இருங்கள், ஏனெனில் பாக்கியத்தை அருள்பவரான தந்தை, தானே உங்களுடைய மேன்மையான பாக்கிய ரேகையை வரைந்துள்ளதுடன், உங்களை தனக்குரியவராகவும் ஆக்கியுள்ளார்.

சுலோகம்:
நிலையான ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, ஒரேயொரு தந்தையுடன் அனைத்து உறவுமுறைகளை கொண்டிருப்பதன் இனிமையை எடுத்துக் கொள்ளுங்கள்.