19.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானத்தைத் தொடர்ந்தும் கிரகிக்கும்போது, நீங்கள் இறுதியில் தந்தைக்குச் சமமானவர்களாகி, தந்தையின் பலம் முழுவதையும் ஜீரணித்துக் கொள்வீர்கள்.

பாடல்:
எந்தச் சோடிச் சொற்களின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதனால், நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள்?

பதில்:
எழுச்சியும் வீழ்ச்சியும். சதோபிரதானும் தமோபிரதானும். சிவாலயமும் விலைமாதர் இல்லமும். இந்தச் சோடிச் சொற்களின் விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால், நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது மிகச்சரியான ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் ஞானம் இருப்பதில்லை. உங்கள் இதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடிய விடயங்களையே அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். பக்தி மார்க்கம் உங்கள் இதயத்தைத் திருப்திப்படுத்தும் மார்க்கமாகும்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தீர்கள்! இது எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த ஒரு நாடகமாகும். நீங்கள் மிக மேன்மையானவர்களும் தூய்மையானவர்களும் என்பது இப்போது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்போது மிகவும் தாழ்ந்த நிலையை அடைந்துவிட்டீர்கள். நீங்கள் தேவர்களின் முன்னிலையில் சென்று கூறுகிறீர்கள்: நீங்கள் உயர்ந்தவர்கள். நாங்களோ தாழ்ந்தவர்கள். நீங்களே அதி மேன்மையானவர்களாகவும் பின்னர் அதி தாழ்ந்தவர்களாகவும் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை இப்போது உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் மிகவும் மேன்மையானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் இருந்தீர்கள், இப்போது நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். தூய்மையானவர்கள் மேன்மையானவர்கள் எனப்படுகின்றார்கள். அது விகாரமற்ற உலகமென அழைக்கப்படுகின்றது. அங்கே உங்கள் இராச்சியம் இருந்தது, அதனை இப்போது நீங்கள் மீண்டும் ஸ்தாபிக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஒரு சமிக்ஞையைக் கொடுக்கின்றார்: நீங்களே அதி மேன்மையான சிவாலயமான சத்தியயுக வாசிகள். பின்னர் பல பிறவிகள் எடுத்ததால், அரைக் கல்பத்தின் பின்னர் நீங்கள் விகாரத்தினுள் வீழ்ந்து, தூய்மையற்றவர்களாகவும், விகாரமானவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். அரைக்கல்பத்திற்கு நீங்கள் விகாரம் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் விகாரமற்றவர்களாகவும் சதோபிரதானாகவும் ஆகவேண்டும். நீங்கள் இரண்டு சொற்களை மாத்திரம் நினைவு செய்தால் போதும். இப்போது இது தமோபிரதான் உலகமாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் சதோபிரதான் உலகின் அடையாளங்கள் ஆவார்கள். இது 5000 வருடங்களுக்கான விடயமாகும். உங்கள் இராச்சியம் சதோபிரதான் பாரதத்தில் இருந்தது. அதிமேலானதாக இருந்த பாரதம் இப்பொழுது மிகவும் சீரழிந்துவிட்டது. நீங்கள் விகாரமற்றவர்களில் இருந்து விகாரம் நிறைந்தவர்கள் ஆகுவதற்கு, உங்களுக்கு 84 பிறவிகள் எடுத்தன. அங்கு உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தாலும், அது முற்றிலும் விகாரமற்றதென்றே கூறப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் முற்றிலும் விகாரமற்றவர் என்றே அழைக்கப்படுகின்றார். அவர் மிக அழகானவராக இருந்தார், ஆனால் இப்போது அவலட்சணம் ஆகிவிட்டார். நீங்கள் இங்கமர்ந்திருப்பதால், நீங்களே சிவாலய உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். அங்கு வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. அப்பொழுதும் எங்கள் இராச்சியமே இருந்தது. ஆனால் பின்னர் அது இரண்டு கலைகளினால் குறைவடைந்தது. கலைகள் படிப்படியாகக் குறைவடைந்து, திரேதாயுகத்தில் இரண்டு கலைகள் குறைவடைந்தன. பின்னர் நீங்கள் விகாரமானவர்களாகி, படிப்படியாக வீழ்ச்சியடைந்து, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இது விகாரமான உலகம் என அழைக்கப்படுகின்றது. மக்கள் தொடர்ந்தும் நச்சுக்கடலில் மூழ்கி மூச்சுத்திணறுகின்றார்கள். அங்கு நீங்கள் பாற்கடலில் வாழ்ந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உலக வரலாற்றையும் புவியியலையும், உங்கள் 84 பிறவிகளின் கதையையும் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் அவர்களின் இராச்சியத்தில் விகாரமற்றவர்களாக இருந்தோம். அங்கு தூய இராச்சியம் இருந்தது, அது முழுமையான சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. பின்னர் திரேதாயுகத்தில் அது அரைச் சுவர்க்கமாகியது. இது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தையே வந்து உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இராவணன் மத்திய காலப்பகுதியில் வந்தான். இறுதியில், இந்த விகார உலகம் அழிய உள்ளது. பின்னர் நீங்கள் ஆரம்ப காலத்திற்குச் செல்வதற்கு நீங்கள் தூய்மையாக வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்களை ஒரு சரீரமெனக் கருதாதீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் சத்தியம் செய்தீர்கள்: பாபா, நீங்கள் வரும்போது நான் உங்களுக்கு மாத்திரமே உரியவனாக இருப்பேன். ஆத்மா தந்தையுடனேயே பேசுகின்றார். ஸ்ரீகிருஷ்ணர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையல்ல. அசரீரியான சிவபாபாவே ஆத்மாக்களின் தந்தையாவார். நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்தும், பாரதம் எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்தும் பெறுகின்றது. இதனாலேயே சத்தியயுகம் சிவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபாபா வந்து தேவதர்மத்தை ஸ்தாபிக்கின்றார். இது எப்போதும் நினைவுகூரப்பட வேண்டும். இது சந்தோஷத்திற்குரிய ஒரு விடயமாகும். நாங்கள் மீண்டும் ஒருமுறை சிவாலயத்திற்குச் செல்கின்றோம். யாராவது ஒருவர் மரணித்தால், அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் உண்மையில் எவரும் அங்கு செல்வதில்லை. அவை யாவும் உங்கள் இதயத்தை சந்தோஷப்படுத்துவதற்காக பக்தி மார்க்கத்தில் கூறப்பட்ட பொய்க் கதைகளே ஆகும். நீங்களே உண்மையில் சுவர்க்கத்திற்குச் செல்லவுள்ளீர்கள். அங்கு நோய்கள் போன்ற எதுவுமே இருப்பதில்லை. அங்கு நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள். தந்தை சிறு குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவது போன்று, அனைத்தையும் மிக இலகுவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் வெளியில் எங்கு வாழ்ந்தாலும், உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோரமுடியும். இதில் தூய்மையே முதலாவதும், பிரதானமானதும் ஆகும். உங்கள் உணவும், பானமும் தூய்மையாக இருக்கட்டும். மக்கள் சிகரெட்டை அல்லது புகையிலை போன்றவற்றை தேவர்களுக்குப் படைக்கின்றார்களா? அவர்கள் முட்டையையோ, புகையிலையையோ கிராந்திற்கு முன்னால் படைக்கின்றார்களா? அவர்கள் கிராந்தை குரு கோபிந்தின் சரீரம் போன்று புனிதமாகக் கருதுகின்றார்கள். அவர்களுக்கு கிராந்தின் மீது அதிக மரியாதை உள்ளது. சீக்கியர்கள் அதனை தங்கள் குருவின் சரீரத்தைப் போல் புனிதமானதாகக் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும் குரு நானக் கிராந்தை எழுதவில்லை. நானக் அவதாரமே எடுத்தார். சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதன் பின்னரே, அவர்கள் கிராந்தை எழுதினார்கள். அவர் வந்த பின்னர், தொடர்ந்து பலரும் சீக்கிய சமயத்திற்கு வந்தனர். முன்னர் கிராந் மிகவும் சிறியதாகவும், அது கையாலும் எழுதப்பட்டது. இப்போது அவர்கள் கீதையை ஸ்ரீகிருஷ்ணரின் வடிவமெனக் கருதுகின்றார்கள். குரு நானக்கின் கிராந் நினைவுகூரப்படுவதைப் போன்று, ஸ்ரீகிருஷ்ணரின் கீதையும் நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள்: “கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகின்றார்.” இது அறியாமை என அழைக்கப்படுகின்றது. ஒரேயொரு பரமதந்தை, பரமாத்மாவிடம் மாத்திரமே ஞானம் உள்ளது. கீதையின் மூலமே சற்கதி கிடைத்தது. தந்தையிடம் மாத்திரமே அந்த ஞானம் உள்ளது. ஞானத்தின் மூலம் பகலும் பக்தியின் மூலம் இரவும் உள்ளது. தந்தை இப்போது கூறுகின்றார்: ஆத்மாக்கள் தூய்மையாக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான முயற்சி செய்யப்பட வேண்டும். ஞானம் முற்றாக வீசி எறியப்படக்கூடிய அளவிற்கு, மாயையின் புயல் பலமாக வீசும். பின்னர் உங்களால் மற்றவர்களுடன் ஞானத்தைப் பேச முடியாது போய்விடும். முதலாவது விகாரமான காமம், உங்களுக்கு அதிக தொல்லை தருகின்றது. அதனை விடுவதற்கே அதிக காலம் எடுக்கின்றது. உண்மையில், ஜீவன் முக்தியானது ஒரு விநாடியில் பெறப்படுகின்ற ஒன்றாகும். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதிபதி (வாரிசு) ஆகுகின்றார். சிவபாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் இனங்கண்டுள்ளதால், நீங்கள் ஓர் ஆஸ்திக்கு உரிமையைக் கோருகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். கீதை சிவபாபாவினால் உரைக்கப்பட்டது. அவரே கூறுகின்றார்: தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நான் இந்தச் சாதாரண சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். கிருஷ்ணர் சாதாரணமானவர் அல்ல. அவர் பிறப்பெடுக்கும்போது, எங்கும் ஒளி வீசி, அது பெருமளவு உணரப்பட்டதால், ஸ்ரீ கிருஷ்ணர் இன்றுவரை நினைவு கூரப்படுகின்றார். எவ்வாறாயினும் புராணங்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவையாகும். ஆங்கிலத்தில் அவை தத்துவ ஞானம் என அழைக்கப்படுகின்றது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே, ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். அவரே கூறுகின்றார்: நானே உங்கள் ஆன்மீகத் தந்தை. நானே ஞானக் கடல். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் கற்கின்றீர்கள். நீங்களும் ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள். அதன் பின்னர் இறுதியில் நீங்கள் தந்தையைப் போலாகுவீர்கள். எந்தளவிற்கு நீங்கள் கிரகிக்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தந்தையை நினைவுசெய்வதன் மூலம் அந்தப் பலத்தை நீங்கள் அதிகரித்துக்கொள்வீர்கள். நினைவு என்பது கூர்மை சக்தி என அழைக்கப்படுகின்றது. வாள்களிலும் வித்தியாசம் உள்ளது. ஒரு வாள் 100 ரூபாய்க்கும் இன்னொன்று 3 முதல் 4 ஆயிரம் ரூபாய்களுக்கும் வாங்கப்படுகின்றது. பாபாவுக்கு இதில் அனுபவம் உண்டு. வாளுக்கு அதிக மரியாதை வழங்கப்படுகின்றது. குரு கோபிந்தின் வாளுக்கும் அதிக மரியாதை வழங்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு யோகத்தின் பலமும் அவசியமாகும். ஞான வாளிலும் சக்தி இருக்க வேண்டும். அந்த சக்தி இருக்கும்போதே, மக்களால் விரைவாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நாடகத்திற்கு ஏற்ப தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு தந்தையை அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்த நினைவின் மூலம் உங்கள் பாவங்களும் அதிகளவு அழிக்கப்படுகின்றது. தூய்மையாக்குபவரான தந்தை உங்களுக்கு வழிமுறைகளைக் காட்டுகின்றார். பின்னர், அவர் ஒரு சக்கரத்தின் பின்னரும் வந்து, இதே வழிமுறையில் ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் இவரை அனைத்தையும் துறக்கச் செய்து, தனது இரதம் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டதால், நீங்கள் அனைவரும் அங்கே ஓடி வந்தீர்கள். அத்தகைய ஒரு கவர்ச்சி தந்தையிடம் இருந்தது. இப்போது நீங்களும் அதேபோன்று முழுமையடைய வேண்டும். நீங்களும் வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகுவீர்கள். எவ்வாறாயினும் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது! நீங்கள் சத்தியயுக ஆரம்பத்திலிருந்து கலியுக இறுதிவரை உலகச் சக்கரத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்போது இது சங்கம யுகமாகும். உங்களைத் தூய்மையாக்குவதற்கு தந்தை நிச்சயமாக வரவேண்டும். தூய்மை என்றால் சதோபிரதான் என்று அர்த்தமாகும். உங்களுக்குள் கலப்படம் தொடர்ந்தும் படிப்படியாகக் கலக்கின்றது. இப்போது, எவ்வாறு அந்தக் கலப்படத்தை அகற்றுவது? ஆத்மா உண்மையானவராக இருக்கும்போது, ஆபரணமும் உண்மையாக உள்ளது. அதாவது சரீரம் அழகாக உள்ளது. ஆத்மா பொய்மையாகும்போது, சரீரமும் தூய்மையற்றதாகின்றது. இவரும் ஞானத்தைப் பெறுவதற்கு முன்னர் வழிபாடு செய்தார். அவர் இலக்ஷ்மி நாராயணனின் மிகப் பெரிய வர்ணப் படத்தை கதியில் வைத்திருப்பதுண்டு. அவர் அதிக அன்புடன் அவரை நினைவு செய்தார். அவர் வேறு எவரையும் நினைவு செய்யவில்லை. அவரின் எண்ணங்கள் வெளியில் வேறு எங்காவது அலைந்தால் தன்னைத் தானே அறைந்து கொள்வார். மனம் ஏன் அலைகின்றது? நான் ஏன் ஒரு காட்சியையும் பெறுவதில்லை? அவர் பக்தி மார்க்கத்தில் இருந்திருந்தாலும், விஷ்ணுவின் காட்சி கிடைத்ததுமே அவர் நாராயணன் ஆகவில்லை. நிச்சயமாக முயற்சி செய்யப்பட வேண்டும். இலக்கும் குறிக்கோளும் முன்னாலேயே உள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள உயிரற்ற விக்கிரகங்கள் முன்னர் உயிருள்ள ரூபங்களாக இருந்தனர். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்காகவே வந்துள்ளார். அவர் உங்களை சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாற்றுகின்றார். நீங்கள் அவர்களின் இராச்சியத்தில் இருந்தீர்கள். நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவதற்காக முயற்சி செய்வதால், அவர்களை மிக நன்றாகப் பின்பற்ற வேண்டும். பிரம்மா ஒரு தேவன் என்று அழைக்கப்படுவதில்லை. விஷ்ணுவை தேவன் என்று அழைப்பது சரியானது. மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் ‘குரு பிரம்மா, குரு விஷ்ணு….’ என்று கூறுகின்றார்கள். இப்பொழுது விஷ்ணு யாரின் குரு ஆவார்? அனைவரையுமே அவர்கள் குரு என்று தொடர்ந்தும் அழைக்கின்றார்கள். அவர்கள் ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்’ என்று கூறுகின்றார்கள். அவர்கள் இவரை குரு என்றும் அவரை பரமாத்மா என்றும் அழைக்கின்றார்கள். தந்தையே அனைவரிலும் அதி மகத்துவமானவர். பிறருக்குக் கற்பிப்பதற்காகவே நாங்கள் அவரிடமிருந்து இதைக் கற்கின்றோம். சற்குரு உங்களுக்கு எதனை விளங்கப்படுத்துகிறாரோ, அதனை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். உங்கள் குருவே உங்கள் தந்தையும் ஆசிரியரும் என்று நீங்கள் கூறுவதில்லை. இல்லை. ஆகையால் நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் சிவாலயத்தில் இருந்தோம். இப்பொழுது விலைமாதர் இல்லத்தில் உள்ளோம். நாங்கள் மீண்டும் ஒருமுறை சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும். அவர்கள் தாம் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பதாகக் கூறினாலோ அல்லது ஒளி, ஒளியுடன் கலப்பதாகக் கூறினாலோ ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் ஆவார்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உங்களுக்கென்றொரு சொந்தப் பாகம் பதிவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் நடிகர்கள் என்பதால் உங்கள் சொந்தப் பாகத்தை நீங்கள் நடிக்க வேண்டும். அவை என்றுமே அழிக்கப்பட முடியாதவையாகும். முழு உலகத்தைச் சேர்ந்த ஆத்மாக்களும் தத்தமது பாகத்தை நடிக்க வேண்டும். புதிதாக ஒரு காட்சி எடுக்கப்படுவதைப் போன்றுள்ளது. எனினும் இந்த அநாதியான படம்பிடித்தல் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது. இது நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கும் ஓர் அற்புதமான நட்சத்திரமாகும். ஒருபோதும் இது அழிக்கப்படுவதில்லை. முன்னர், உங்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. உலக அதிசயம்! “சுவர்க்கம்” என்ற வார்த்தையைக் கேட்டதும் உங்கள் இதயம் சந்தோஷமடைகின்றது. இப்பொழுது இது சத்தியயுகம் அல்ல. இது கலியுகமாகும். ஆகவே மறுபிறப்பும் கலியுகத்திலேயே இடம்பெறுகின்றது. நீங்கள் அனைவரும் நிச்சயமாக அங்கு செல்லவேண்டும். ஆனால் தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யோக சக்தியினால் தூய்மையாகின்றீர்கள். தூய உலகை தந்தையாகிய கடவுளே ஸ்தாபிக்கின்றார். பின்னர் இராவணன் அதை நரகமாக்குகிறான். இதனைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். அது தொன்றுதொட்டு இடம்பெறுகின்றது என்று அவர்கள் கூறுனாலும் அது எப்பொழுது ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. ஏனெனில் அவர்கள் நூறாயிரம் வருடங்கள் எனக் கூறுவதால் அதனை அரைப் பங்காகப் பிரிக்க முடியாதுள்ளது. கலியுகத்தின் கால எல்லை 40,000 வருடங்கள் என அவர்கள் கூறுகிறார்கள். எனவே மக்கள் காரிருளில் இருக்கிறார்கள். அறியாமை உறக்கத்திலிருந்து விழித்தெழுவது அவர்களுக்குக் கடினமாக உள்ளது. அவர்கள் தாமாக எழுவதில்லை. இது சங்கமயுகம், இப்பொழுதே தந்தை வந்து உங்களுக்குத் தூய்மையாகின்ற பாதையைக் காட்டுகின்றார். தூய்மையாகும்போது, தூய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்படும். இப்பொழுது உலக சனத்தொகை மிகவும் அதிகரித்துள்ளது. சத்தியயுகத்தில், உலக சனத்தொகை மிகக் குறைவாகவே இருக்கும். நீங்கள் இப்பொழுது நிச்சயமாக மாயையை வெற்றிகொண்டு தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகிறார்: மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் தூய்மையாகுவதிலேயே அவள் பல தடைகளை ஏற்படுத்துகிறாள். தூய்மையாகுவதற்கான தைரியத்தை நீங்கள் பேணுகின்றீர்கள். ஆனால் மாயை வந்து உங்களை என்ன நிலைக்குத் தள்ளுகின்றாள் என்று பாருங்கள். அவள் உங்களைக் குத்தி, கீழே வீழ்த்துகின்றாள். அதனால் நீங்கள் சேமித்த அனைத்தும் முடிவடைந்துவிடும். பின்னர் நீங்கள் அதிக முயற்சி செய்யவேண்டும். சிலர் வீழ்ந்துவிடுவார்கள். பின்னர் அவர்கள் தங்கள் முகத்தையேனும் காட்டுவதில்லை. எனவே, அவர்களால் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது. முழு முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் தோல்வியடையக் கூடாது. இதனாலேயே சிலர் தூய திருமணமும் செய்கிறார்கள். திருமணம் செய்த பின்னர், அத் தம்பதியினரால் தூய்மையாக இருப்பது சாத்தியமற்றது என்று சந்நியாசிகள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அது சாத்தியமாகும், ஏனெனில் அதில் பெரும் பேறு உள்ளது. நீங்கள் இந்த ஒரு இறுதிப் பிறவியில் தூய்மையாகினால், சுவர்க்கத்தில் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். அத்தகையதொரு பெரும் பேற்றைப் பெறுவதற்காக, இந்த ஒரு பிறவியில் நீங்கள் தூய்மையாக இருக்க முடியாதா? குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நிச்சயமாக நாங்கள் தூய்மையாக இருப்போம். சீக்கியர்கள் தூய்மைக்கான ஒரு காப்பு அணிந்துள்ளார்கள். நூல் போன்ற எதனையும் நீங்கள் இங்கே கட்டவேண்டிய அவசியமில்லை. இது புத்திக்கான விடயமாகும். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். புத்திரிகள் ஞானத்தைப் பலருக்கும் கொடுக்கின்றார்கள். எனினும் அந்த முக்கியஸ்தர்களின் புத்தியில் அது இருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில், இவர்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்பதை மிகத் தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். நாங்கள் சிவபாபாவிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக வேண்டும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். வேறு எவராலும் இதனைக் கூறமுடியாது. அனைத்திற்கும் முதலில் நீங்கள் இதனை அவர்களின் புத்தியில் இருக்கச்செய்ய வேண்டும்: விகாரமற்றதாக இருந்த பாரதம் இப்பொழுது விகாரமாகியுள்ளதால், அதனை எவ்வாறு மீண்டும் விகாரமற்றதாக ஆக்க முடியும்? கடவுள் பேசுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவ்வளவே! நீங்கள் இந்தளவையேனும் கூறினால், அதுவே மகா பாக்கியமாகும். எனினும் உங்களால் இந்தளவேனும் கூறமுடியாதுள்ளது. நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். தந்தை திறப்பு விழாவை ஆரம்பித்து வைத்துள்ளதால், கருவிகளாகிய நீங்கள் மீதியைச் செய்கிறீர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அத்திவாரம் இடப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது சேவைத்தளங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது கீதைக்குப் பொருத்தமாக உள்ளது. கீதையிலும் கூறப்படுகின்றது: ஓ குழந்தாய், காமத்தை வென்றால் நீங்கள் 21 பிறவிகளுக்கு உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகாவிட்டாலும் பிறருக்காவது அதனை விளங்கப்படுத்துங்கள். பிறரை ஈடேற்றுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் பின்னர் தாமே வீழ்ந்துவிடுகின்றார்கள். காமமே மிகப்பெரிய எதிரியாகும். அது உங்களை நேரடியாகச் சாக்கடைக்குள் விழச்செய்துவிடும். காமத்தை வென்ற குழந்தைகள் மாத்திரமே உலகை வென்றவர்களாகுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த இறுதிப் பிறவியில் உங்கள் பேறுகள் அனைத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்து, நிச்சயமாகத் தூய்மையாகுங்கள். மாயையின் தடைகளால் தோல்வியடையாதீர்கள்.

2. உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன் வைத்து, முழு முயற்சி செய்யுங்கள். தந்தை பிரம்மா முழு முயற்சி செய்து, சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறியதைப் போன்று, அவரைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமருங்கள். ஆத்மாவை சதோபிரதான் ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஒரு கதாநாயக நடிகராகி, விளையாட்டுக்களை விளையாடுவதைப் போல் சகல பிரச்சனைகளையும் வெற்றி கொள்வீர்களாக.

சூழ்நிலைகளோ அல்லது பிரச்சனைகளோ எத்தகையதாக இருந்தாலும், அந்தப் பிரச்சனைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். ஆனால், சகல உரிமைகளையும் கொண்டிருந்து, நீங்கள் விளையாட்டுக்களை விளையாடுவதைப் போல், அந்தப் பிரச்சனைகளை வெற்றி கொள்ளுங்கள். புறத்தே, அழுகின்ற ஒரு பாகத்தை நீங்கள் கொண்டிருக்கக்கூடும். ஆனால், அவை அனைத்தும் ஒரு விளையாட்டே என்ற உணர்வு உங்களுக்குள்ளே இருக்க வேண்டும். இது நாடகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடகத்தில் நாம் கதாநாயக நடிகர்கள். கதாநாயக நடிகர்கள் என்றால் மிகச்சரியான பாகங்களை நடிப்பவர்கள் என்று அர்த்தம். ஆகவே, எந்தவொரு பெரிய பிரச்சனையையும் ஒரு விளையாட்டாகக் கருதி, அதை இலேசாக்குங்கள். எந்தவிதமான சுமைகளையும் கொண்டிராதீர்கள்.

சுலோகம்:
சதா இந்த ஞானத்தைக் கடையுங்கள். நீங்கள் சதா மலர்ச்சிநிறைந்தவர்களாக இருப்பீர்கள். அத்துடன் மாயையின் கவர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.