22.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே‚ நீங்கள் கல்பம் முழுவதும் சகலகலாவல்ல பாகங்களை நடித்துள்ளீர்கள். உங்களின் பாகங்கள் இப்போது முடிவடைந்துவிட்டன. நீங்கள் வீடு திரும்ப வேண்டும்.

பாடல்:
எந்த வார்த்தைகளால் குழந்தைகளான நீங்கள் உங்களின் பாக்கியத்தைப் புகழ்கிறீர்கள்?

பதில்:
நாங்கள் பிராமணர்கள்‚ உச்சிக்குடுமிகள். அசரீரியான இறைவன் இங்கே அமர்ந்திருந்து‚ எங்களுக்குக் கற்பிக்கிறார். உலகில்‚ மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஆனால்‚ இங்கோ இறைவனே எமக்குக் கற்பிக்கிறார். அதனால் நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள்.

கேள்வி:
இந்த நாடகத்தில் அதியுயர்ந்த பதவி யாருடையது?

பதில்:
அசரீரியான தந்தையினுடையது. அவரே ஆத்மாக்களான உங்கள் எல்லோருடைய தந்தையும் ஆவார். ஆத்மாக்கள் எல்லோரும் நாடகத்தின் இழையால் கட்டப்பட்டுள்ளார்கள். தந்தையின் பதவியே‚ எல்லாவற்றிலும் அதியுயர்ந்த பதவியாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களிடம் கேட்கிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே‚ உங்களின் வீடான‚ அமைதிதாமம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் அதை மறக்கவில்லைத்தானே? 84 பிறவிகளின் சக்கரம் இப்போது முடிவடைந்துவிட்டது. அது எப்படி முடிவடைந்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். சத்தியயுகத்தில் இருந்து கலியுகத்தின் இறுதிவரை எவராலும் இதைக் கேட்க முடியாது. தந்தை மட்டுமே இனிமையிலும் இனிமையான‚ அன்பிற்குரிய குழந்தைகளான உங்களிடம் கேட்கிறார்: நீங்கள் இப்போது வீட்டுக்குப் போக விரும்புகிறீர்களா? நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டும். பின்னர்‚ சந்தோஷதாமத்திற்குச் செல்ல வேண்டும். இது சந்தோஷதாமம் இல்லை. இது ஒரு பழைய உலகம்‚ துன்பதாமம். ஆனால்‚ அவை அமைதி மற்றும் சந்தோஷ தாமங்கள். நீங்கள் இப்போது இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட்டு‚ முக்தி தாமத்திற்குத் திரும்ப வேண்டும். முக்தி தாமம்‚ அதாவது‚ அமைதிதாமம்‚ உங்களின் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. அது உங்களின் வீடு. பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள். அங்கே தூய்மை‚ அமைதி‚ சந்தோஷம் மட்டுமே இருக்கும். நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள். இதையே மக்கள் பாடுகிறார்கள். மக்கள் தந்தையை அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே‚ எங்களை இந்தத் தூய்மையற்ற உலகில் இருந்து அப்பால் எடுத்துச் செல்லுங்கள்! இங்கே அதிகளவு துன்பம் உள்ளது! எங்களைச் சந்தோஷத்திற்குள் எடுத்துச் செல்லுங்கள்! உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? எல்லோரும் சுவர்க்கத்தை நினைக்கிறார்கள். ஒருவர் தனது சரீரத்தை விட்டதும்‚ அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்: அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். யார் சென்றது? ஆத்மா. சரீரம் எங்கேயும் செல்வதில்லை. ஆத்மாவே செல்கிறார். இப்போது‚ குழந்தைகளான உங்களுக்கு மட்டுமே அமைதி தாமத்தையும் சந்தோஷதாமத்தையும் பற்றித் தெரியும். வேறு எவருக்கும் அவற்றைப் பற்றித் தெரியாது. அமைதிதாமம் என்றால் என்னவென்றும் சந்தோஷதாமம் என்றால் என்னவென்றும் ஞானம் குழந்தைகளான உங்களின் புத்திகளில் உள்ளது. நீங்கள் சந்தோஷதாமத்தில் இருந்தீர்கள். இப்போது துன்ப தாமத்தில் இருக்கிறீர்கள். செக்கன்கள்‚ நிமிடங்கள்‚ மணித்தியாலங்கள்‚ நாட்கள் மற்றும் வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போது‚ 5000 வருடங்களில் வெகு சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தந்தை தொடர்ந்து குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார். இது மிகவும் இலகுவானது. இதில் குழப்பம் அடைய வேண்டியதில்லை. ஓர் ஆத்மா எப்படி 84 பிறவிகள் எடுக்கிறார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். நூறாயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்ததை நினைவில் வைத்திருப்பது எவருக்கும் சிரமமே. இது 5000 வருடத்திற்குரிய விடயமாகும். வர்த்தகர்கள் தமது கணக்குப் புத்தகங்களில் ஒரு சுவஸ்திகாவை வரைந்து‚ அதை கணேஷ் என்று அழைக்கிறார்கள். கணேஷும் யானையின் தும்பிக்கையுடன் காட்டப்படுகிறார். மக்கள் பணத்தைச் செலவழித்து‚ சித்திரங்கள் போன்றவற்றை வரைகிறார்கள். ஆனால்‚ அது காலத்தின் வீண்விரயம் என்றே அழைக்கப்படுகிறது. உங்களிடம் அதிகளவு வலிமை உள்ளது. ஒரு காரில் பெற்றோல் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதைப் போன்று‚ அது நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவடைகிறது. நீங்கள் இப்போது மிகவும் பலவீனம் ஆகிவிட்டீர்கள். பாரதம் 5000 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தது? எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. செல்வம் அபரிமிதமாக இருந்தது. அவர்கள் எப்படி அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள்? அவர்கள் இராஜயோகத்தைக் கற்றிருந்தார்கள். இதில் யுத்தம் என்ற கேள்வியே இல்லை. இவை ஞான ஆயுதங்கள் எனப்படுகின்றன. இங்கே பௌதீகமான எதுவும் கிடையாது. ஞான ஆயுதங்களே உள்ளன. ஞானம் மற்றும் விக்கியான் - ஞானமும் நினைவும் - என்ற ஆயுதங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. நீங்கள் முழு உலகையும் ஆட்சி செய்கிறீர்கள். தேவர்கள் அகிம்சாவாதிகள் எனப்படுகிறார்கள். குழந்தைகளான உங்களுக்கு இப்போது மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கான கற்பித்தல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த எல்லையற்ற ஆஸ்தியை‚ எல்லையற்ற தந்தையிடமிருந்து 5000 வருடங்களுக்கு ஒரு முறை நாங்கள் பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஆத்மாக்களையே குறிக்கிறது. இதில் பௌதீகமான யுத்தம் போன்ற கேள்வியே இல்லை. ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். அதனால் அவர்கள் தூய்மை ஆகுவதற்காகத் தந்தையை அழைக்கிறார்கள். தந்தை இப்போது கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே‚ நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். இது உயிர்வாழ்பவர்களின் உலகம். அது ஆத்மாக்களின் உலகம். அதை உயிர்வாழ்பவர்களின் உலகம் என்று அழைக்க முடியாது. நீங்கள் தொலைதூர வாசிகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்களான எங்களின் வீடு பிரம்மாந். நீங்கள் ஆகாயத்திற்கும் அப்பால்‚ சூரியனோ அல்லது சந்திரனோ இல்லாத இடத்தில் அங்கே வசிக்கிறீர்கள் என்பது உங்களின் புத்திகளில் இருக்க வேண்டும். அந்த இடத்து வாசிகளான நாங்கள்‚ எமது பாகங்களை நடிக்க இங்கே வந்துள்ளோம். நாங்கள் எமது பாகங்களை 84 பிறவிகளுக்கு நடிக்கிறோம். எல்லோராலும் 84 பிறவிகளை எடுக்க முடியாது. ஆத்மாக்கள் மேலே இருந்து மெதுவாகக் கீழே இறங்கி வருகிறார்கள். நாங்கள் சகலகலாவல்லவர்கள். சகல வகையான பணிகளையும் செய்பவர்கள்‚ சகலகலாவல்லவர்கள் எனப்படுகிறார்கள். நீங்களும் சகலகலாவல்லவர்கள். உங்களின் பாகங்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உள்ளது. இது இப்போது இந்தச் சக்கரத்தின் முடிவாகும். அப்படியிருந்தும்‚ ஆத்மாக்கள் இன்னமும் தொடர்ந்து மேலே இருந்து கீழிறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். பல குழந்தைகள் இன்னமும் மேலேயே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கீழே வருகிறார்கள். வளர்ச்சி தொடர்ந்தும் இடம்பெறுகிறது. ‘ஹம்ஸோ’ என்பதன் அர்த்தத்தைத் தந்தை குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாடகத்தைப் பற்றியோ‚ அதன் காலப்பகுதியையோ அல்லது அதன் ஆரம்பம்‚ மத்தி‚ இறுதிபற்றியோ தெரியாது. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்: தற்சமயம்‚ நீங்கள் அந்தச் சரீரங்களில் உள்ள பிராமணர்கள். சிவபாபா உங்களை பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தத்தெடுத்து‚ உங்களுக்குக் கற்பிக்கிறார். குறைந்தபட்சம் நீங்கள் இந்தளவை நினைவு செய்ய வேண்டும்: தந்தை எங்களுக்குக் கற்பிக்கிறார். அவரே இறைவன்‚ அதிமேலானவர். ஆத்மாக்கள் எல்லோரும் இந்த நாடகத்தின் இழையில் கோர்க்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில்‚ நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். அதன்பின்னர்‚ நீங்கள் ஷத்திரிய தர்மத்திற்குள் சென்றீர்கள். அதாவது‚ நீங்கள் சூரிய வம்சத்தில் இருந்து சந்திர வம்சத்திற்குள் சென்றதுடன்‚ அத்தனை பிறப்புக்களையும் எடுத்தீர்கள். நீங்கள் இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். முதலில்‚ உங்களுக்கு இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. இது குலங்களின் குட்டிக்கரணம் என்பதைத் தந்தை இப்போது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சூத்திரர்களில் இருந்து‚ நீங்கள் இப்போது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பிராமணர்களில் இருந்து‚ பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். அவர்கள் பல்வகை ரூபத்தைக் காட்டுகிறார்கள். நீங்கள் எப்படிக் கீழே வந்தீர்கள் என்றும்‚ பின்னர் பிராமணக் குலத்திற்குள் வந்தீர்கள் என்றும் பின்னர் தேவ வம்சத்திற்குள் சென்றீர்கள் என்றும் இந்த ஞானம் உங்களின் புத்திகளில் உள்ளது. பிராமணர்களான நீங்கள் இப்போது உச்சிக்குடுமியினர். உச்சிக்குடுமியே எல்லாவற்றிலும் அதிமேலானதாகும். உங்களுடையதைப் போன்ற உயர்ந்த குலத்தைக் கொண்டவர்கள் என வேறு யாரைக் கருத முடியும்? தந்தையான இறைவன் வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் மிகுந்த பாக்கியசாலிகள். குறைந்தபட்சம்‚ உங்களின் பாக்கியத்தைச் சிறிது புகழுங்கள்! வெளியுலகில்‚ மனிதர்களே மனிதர்களுக்குக் கற்பிக்கிறார்கள். இங்கே‚ இது அசரீரியான தந்தை. ஒவ்வொரு கல்பமும்‚ அந்தத் தந்தை ஒரு தடவை வந்து உங்களுக்கு இந்த ஞானத்தை வழங்குகிறார். எல்லோரும் கற்கிறார்கள். சிலர் சட்டத்தரணி ஆகுவதற்கான அறிவைக் கற்று‚ சட்டத்தரணிகள் ஆகுகிறார்கள். அங்கே‚ மனிதர்களே மனிதர்களுக்குத் தொடர்ந்தும் கற்பிக்கிறார்கள். இவை இறைவனின் வாசகங்கள். மனிதர்களை ஒருபோதும் இறைவன் என்று அழைக்க முடியாது. அந்த ஒரேயொருவர் அசரீரியானவர். அவர் இங்கே வந்து‚ குழந்தைகளான உங்களுக்குக் கற்பிக்கிறார். கல்வியானது சூட்சுமவதனத்திலும் கற்க முடியாது. அசரீரி உலகிலும் கற்க முடியாது. இங்கேயே கற்பித்தல் இடம்பெறுகிறது. இதில் குழப்பம் அடைய வேண்டிய தேவை இல்லை. பாடசாலையிலுள்ள மாணவர்கள் எப்போதாவது தாம் குழம்பி உள்ளோம் என்றோ அல்லது தமக்கு நம்பிக்கை இல்லை என்றோ சொல்வார்களா? அவர்கள் கற்றுத் தமது அந்தஸ்தைப் பெறுகிறார்கள். எப்படி இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் உலக அதிபதிகள் ஆகினார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தந்தையினூடாகவே அப்படி ஆகினார்கள். தந்தை சத்தியத்தையே சொல்வார். இறைவன் உங்களுக்கு பிழையான எதையும் சொல்ல மாட்டார். இது மிகவும் முக்கியமான பரீட்சையாகும். இந்த வேளையில்‚ இது மக்களின் மீது மக்களின் ஆட்சி. இங்கே மன்னர்களோ அல்லது அரசிகளோ இல்லை. அவர்கள் சத்தியயுகத்தில் இருந்தார்கள். ஆனால்‚ இப்போது‚ கலியுக இறுதியில் இல்லை. இது மக்களாட்சி எனப்படுகிறது. அவர்கள் கௌரவர்களைப் பற்றியும் பாண்டவர்களைப் பற்றியும் கீதையில் எழுதியுள்ளார்கள். எவ்வாறாயினும்‚ நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் எல்லோருக்கும் ஆன்மீக வீட்டுக்கான பாதையைக் காட்டுகிறீர்கள். அது ஆத்மாக்களான உங்களின் ஆன்மீக வீடாகும். ஆத்மாக்கள் பிறவி எடுத்துத் தமது பாகங்களை நடிக்கிறார்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இவை தெரியாது. சாதுக்களோ அல்லது சந்நியாசிகள் போன்ற எவருக்கும் படைப்பவரையும் அல்லது படைப்பின் ஆரம்பம்‚ மத்தி‚ இறுதி பற்றித் தெரியாது. அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். எவ்வாறாயினும்‚ அதைக் கணக்கிட முடியாது – அதை அரைவாசியாகப் பிரிக்க முடியாது. சந்தோஷதாமம் அரைவாசி நிரம்பியிருக்கும். துன்பதாமம் அரைவாசி நிரம்பியிருக்கும். இது தூய்மையற்ற‚ விகாரமான உலகம். ஆனால் அந்த உலகமோ விகாரமற்றது. தந்தையே அதிமேலானவர். ஆனால் அவர் மிகவும் சாதாரணமாக இருக்கிறார்! மக்கள் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் போன்றவர்களைச் சந்திக்கும்போது‚ அவர்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள். தூய்மையற்ற உலகில்‚ தூய்மையற்ற மனிதர்கள்‚ தூய்மையற்ற மனிதர்களை மட்டுமே பார்க்கிறார்கள். தூய்மையானவர்கள் மறைமுகமாக இருக்கிறார்கள். புறத்தே‚ எதுவும் புலப்படுவதில்லை. தந்தை ஞானம் நிறைந்தவர் என்றும் ஆனந்தம் நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை எல்லாவற்றாலும் நிறைந்திருக்கிறார். இதனாலேயே‚ அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மனிதரினதும் பதவியின் புகழ் வெவ்வேறானது. ஆலோசகர் ஒருவர் ஆலோசகர் என்றே அழைக்கப்படுகிறார். பிரதம மந்திரி‚ பிரதம மந்திரி என்று அழைக்கப்படுகிறார். அவரோ இறைவன்‚ அதிமேலானவர். அசரீரியான தந்தையின் பதவியே அதிமேலான பதவியாகும். நாம் அனைவரும் அவரின் குழந்தைகள். நாம் எல்லோரும் பரந்தாமத்தில் தந்தையுடன் வசிக்கிறோம். அதுவே எமது வீடு. இங்கே‚ எல்லோரும் தனக்கேயுரிய தனித்துவமான பாகத்தைப் பெற்றுள்ளார்கள். சிலர் ஒரு பிறவிக்கு மட்டும் தமது பாகங்களை நடித்துவிட்டு‚ மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது மனித உலகின் பல்வகை விருட்சம் ஆகும். இரண்டு பேர் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஆத்மாக்கள் எல்லோரும் ஒன்றுபோல் இருப்பார்கள். ஆனால்‚ இரண்டு சரீரங்கள் ஒன்றுபோல் இருக்க மாட்டாது. அவர்கள் நாடகத்தில்‚ ஒத்த முகங்களைக் கொண்ட இரண்டு பேர்களைக் காட்டுவார்கள். மனைவிக்கு யார் தனது கணவன் என்ற குழப்பம் ஏற்படும். இது ஓர் எல்லையற்ற நாடகம். இங்கே இரண்டு பேர் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவரின் முகச்சாயல்களும் வெவ்வேறானவை. அவர்களின் வயது ஒன்றாக இருந்தாலும்‚ சாயல்கள் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் சாயல்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன. இது எல்லையற்றதோர் நாடகமாகும். எனவே‚ நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும். முழு உலகினதும் ஆரம்பம்‚ மத்தி‚ இறுதி பற்றிய ஞானம் உங்களின் புத்திகளில் உள்ளது. ஒவ்வொருவரும் நாடகத்தில் தமது பாகங்களில் என்ன இருக்கிறதோ‚ அதை மட்டுமே நடிப்பார்கள். இந்த நாடகத்தில் எவரையும் பிரதியீடு செய்ய முடியாது. இது ஓர் எல்லையற்ற நாடகம். ஆத்மாக்கள் தொடர்ந்து பிறப்பு எடுக்கிறார்கள். ஒவ்வொருவரின் சாயல்களும் வெவ்வேறானவை. பல்வகை சாயல்கள் உள்ளன. இந்த ஞானம் அனைத்தும் உங்களின் புத்திகளால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இங்கே புத்தகங்கள் போன்றவை இல்லை. கீதையின் கடவுள் ஒரு புத்தகத்தைத் தனது கைகளில் எடுத்து வருவாரா? அவரே ஞானக்கடல். அவர் ஒரு புத்தகத்தைக் கொண்டுவரவில்லை. பக்தி மார்க்கத்திலேயே அவர்கள் சமயப் புத்தகங்களை எழுதுகிறார்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இரண்டு வினாடிகள் ஒன்றுபோல் இருக்க முடியாது. எல்லாமே குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சக்கரம் முடிவடையும்போது‚ அது மீண்டும் ஆரம்பிக்கும். நீங்கள் இப்போது கற்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தந்தையையும் படைப்பையும் தெரியும். நீங்கள் உங்களின் பாகங்களை நடிப்பதற்காக அசரீரி உலகில் இருந்து இங்கே வந்துள்ளீர்கள். மேடை மிகவும் பெரியது. எவராலும் அதை அளக்க முடியாது. எவராலும் அதன் முடிவிற்குச் செல்ல முடியாது. எவராலும் கடலின் அல்லது வானத்தின் எல்லையை அடைய முடியாது. இதனாலேயே‚ அவை முடிவற்றவை எனப்படுகின்றன. முன்னர்‚ அவர்கள் அந்த விடயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அதிகளவு முயற்சி செய்யவில்லை. ஆனால்‚ இப்போது அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். விஞ்ஞானமும் இப்போதே இருக்கிறது. அதன்பின்னர்‚ அது எப்போது மீண்டும் ஆரம்பிக்கும்? அது அவர்களின் பாகங்களில் உள்ளபோது. எனவே‚ இந்த விடயங்கள் எவையும் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. இந்த ஞானத்தைக் கூறிய ஒரேயொருவரின் பெயருக்குப் பதிலாக‚ இந்த ஞானத்தைக் கேட்டவரின் பெயரைப் போட்டுவிட்டார்கள். இவர் அவலட்சணமான ஆத்மா. ஆனால் அந்த ஒருவரோ அழகான ஆத்மா. அவலட்சணமானவர்‚ அந்த ஒரேயொருவர் கூறியதைக் கேட்டு‚ அழகானவர் ஆகினார். இந்த ஞானத்தினூடாக நீங்கள் மேன்மையான அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். இது ஒரு கீதை பாடசாலை. யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார்? அமரத்துவ பூமிக்காக இறைவன் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இதனாலேயே‚ இது அமரக்கதை என்று அழைக்கப்படுகிறது. அவர் நிச்சயமாக இதை சங்கமயுகத்திலேயே கூறியிருக்க வேண்டும். சென்ற கல்பத்தில் அதைக் கற்றவர்கள் வந்து மீண்டும் அதைக் கற்பார்கள். அத்துடன் தமது அந்தஸ்தை வரிசைக்கிரமமாகப் பெறுவார்கள். இங்கே நீங்கள் எத்தனை தடவைகள் வந்துள்ளீர்கள்? எண்ணற்ற தடவைகள். இந்த நாடகம் எப்போது ஆரம்பித்தது என யாராவது உங்களைக் கேட்டால்‚ அது அநாதியாகத் தொடர்கிறது என நீங்கள் சொல்வீர்கள். எண்ணுதல் என்ற கேள்வியே இல்லை. கேட்கின்ற எண்ணமேனும் இருக்காது. சமயநூல்களில்‚ அவை பக்தி மார்க்கத்தின் கதைகள். அவற்றை அவர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள். இங்கே‚ பல மொழிகள் உள்ளன. ஆனால்‚ சத்தியயுகத்தில்‚ பல மொழிகள் இருக்காது. நீங்கள் இப்போது ஒரு தர்மம்‚ ஒரு மொழி‚ ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். அமைதியைத் தாபிப்பதற்கான ஆலோசனை கூறுபவர்களுக்காக அவர்கள் தொடர்ந்தும் பரிசுகள் வழங்குகிறார்கள். முழு உலகிலும் எப்படி அமைதியைத் தாபிப்பது என சிவபாபா உங்களுக்கு அறிவுரை கூறுகிறார். அவருக்கு நீங்கள் என்ன பரிசு கொடுப்பீர்கள்? உண்மையில்‚ அவரே உங்களுக்குப் பரிசை வழங்குகிறார். அவர் எதையும் பெற்றுக் கொள்வதில்லை. இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நேற்றுத்தான் அவர்களின் இராச்சியமாக இருந்தது. இப்போது‚ வாழ்வதற்கே போதியளவு இடமில்லை. அங்கே இரண்டு அல்லது மூன்று மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கான தேவை இல்லை. மரக் கட்டடங்களுக்கான தேவையும் அங்கே இல்லை. அங்கே தங்கத்தாலும் வெள்ளியாலுமே கட்டடங்கள் கட்டப்படும். அங்கே விஞ்ஞானத்தின் விசையால் மிக விரைவாகக் கட்டடங்கள் கட்டப்படும். இங்கே விஞ்ஞானத்தினூடாக சந்தோஷமும் அதேவேளை துன்பமும் ஏற்படுகின்றன. அதனூடாக முழு உலகமும் அழிக்கப்படவுள்ளது. இது பொம்பியின் வீழ்ச்சி எனப்படுகிறது. மாயையின் அதிகளவு பகட்டு காணப்படுகிறது. இது செல்வந்தர்களுக்கு சுவர்க்கம் போன்றுள்ளது. இதனாலேயே அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. முன்னர்‚ உங்களுக்கும் எதுவும் தெரியவில்லை. தந்தை இங்கே வந்து உங்களுக்கு நேரடியாகக் கற்பிக்கிறார். வெளியுலகில் குழந்தைகளே மற்றவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். அவர்கள் தமது நண்பர்கள் உறவினர்கள் போன்றவர்களையும் தொடர்ந்து நினைக்கிறார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நாளுக்குநாள் நீங்கள் தொடர்ந்து நினைவு யாத்திரையில் பலம் வாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் வேறு எதையும் நினைக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களின் வீட்டையும் இராச்சியத்தையும் மட்டுமே நினைப்பீர்கள். உங்களின் தொழில் போன்றவற்றை நினைக்க மாட்டீர்கள். எங்கேயாவது அமர்ந்திருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மக்கள் மரணிப்பதைப் போல் நீங்களும் உடனடியாக இறப்பீர்கள். அப்போது துன்பம் என்ற கேள்வியே இல்லை. அங்கே வைத்தியசாலைகள் போன்றவை எவையும் இருக்காது. தந்தையை நீங்கள் அறிந்து கொண்டதும் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். உங்களுக்கு இந்த உரிமை உள்ளது. எல்லோருக்கும் இந்த உரிமை இல்லை. ஏனென்றால் எல்லோரும் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான‚ அன்புக்குரிய‚ எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்‚ தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்‚ நினைவுகளும்‚ காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆன்மீக வழிகாட்டியாகி‚ எல்லோருக்கும் ஆன்மீக வீட்டுக்கான வழியைக் காட்டுங்கள். நீங்கள் இந்த ஞானம்‚ யோகம் என்ற ஆயுதங்களால் முழு உலகையும் ஆள வேண்டும். இரட்டை அகிம்சாவாதிகள் ஆகுங்கள்.

2. 84 பிறவிகளின் சகலகலாவல்ல பாகங்களை நடித்தவர்கள்‚ இந்த வேளையில் சகலகலாவல்லவர்கள் ஆகவேண்டும். நீங்கள் சகல வகையான சேவைகளையும் செய்ய வேண்டும். எல்லையற்ற பல்வகை நாடகத்தில் ஒவ்வொரு நடிகரின் பாகத்தையும் அவதானிக்கும்போது‚ நீங்கள் மலர்ச்சிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
உங்களின் அழியாத ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் ஒரு புயலையும் (தூஃபான்) பரிசாக (தோஃபா) மாற்றுகின்ற மேன்மையான பிராமண ஆத்மா ஆகுவீர்களாக.

ஊக்கமும் உற்சாகமும் பிராமணர்களின் பறக்கும் ஸ்திதியின் இறக்கைகள் ஆகும். சதா இந்த இறக்கைகளுடன் தொடர்ந்து பறவுங்கள். இந்த ஊக்கமும் உற்சாகமும் பிராமணர்களான உங்களின் சகல சக்திகளிலும் மகத்தானவை ஆகும். உங்களின் வாழ்க்கை வரட்சியானதல்ல. உங்களிடம் சதா ஊக்கம்‚ உற்சாகம் என்ற பழரசமும் இனிமையும் உள்ளன. ஊக்கமும் உற்சாகமும் சிரமமான எதையும் இலகுவானது ஆக்குகிறது. ஊக்கமும் உற்சாகமும் உள்ள ஆத்மாக்கள்‚ ஒருபோதும் மனவிரக்தி அடைவதில்லை. உற்சாகம்‚ புயல்களைப் பரிசாக மாற்றுகிறது. உற்சாகம் உங்களை எந்தவிதப் பரீட்சைகள் அல்லது பிரச்சனைகளையும் களிப்பாக இருப்பதை அனுபவம் செய்ய வைக்கிறது. இத்தகைய அழியாத ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணுபவர்கள்‚ மேன்மையான பிராமணர்கள் ஆவார்கள்.

சுலோகம்:
அமைதியின் ஊதுபத்தியை சதா ஏற்றி வையுங்கள். அமைதியின்மையின் துர்நாற்றம் முடிந்துவிடும்.