28.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கு ஆத்மாவில் அதிகளவு ஒளி இருக்கும். ஞானமுள்ள ஆத்மாக்கள் பிரகாசிக்க ஆரம்பிப்பார்கள்.

பாடல்:
எக் குழந்தைகளை மாயையினால் சிறிதளவேனும் துன்புறுத்த முடியாது?

பதில்:
உறுதியான யோகிகளும், யோக சக்தியினால் தங்கள் பௌதீகப் புலன்களை குளிர்மை ஆக்குபவர்களும், யோகத்தில் நிலைத்திருப்பதற்கு மாத்திரம் முயற்சி செய்பவர்களும் ஒருபொழுதும் மாயையினால் சிறிதளவேனும் துன்புறுத்தப்பட மாட்டார்கள். நீங்கள் உறுதியான யோகிகள் ஆகும்பொழுதே, நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு, முதலில் தூய்மை தேவைப்படுகின்றது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அறியாமையினால், ஆத்மாக்களாகிய நீங்கள் மந்தமாகிவிட்டீர்கள். வைரங்களில் பிரகாசம் உள்ளது, ஆனால் கற்கள் அவ்வாறில்லை. இதனாலேயே கூறப்பட்டுள்ளது: நீங்கள் கற்களைப் போன்று மந்தமாகி விட்டீர்கள். பின்னர், நீங்கள் ஞானோதயம் பெறும் போது, ஒரு இரசவாதக் கல்லைப் போன்றவர் ஆகுகிறீர்கள என்று கூறப்படுகின்றது. ஆத்ம ஒளி அறியாமையினால் மங்கலாகிவிட்டது. அது முற்றிலும் மந்தமாகவில்லை; இது மந்தம் என்றே அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் ஒரே வகையானவர்கள். எனினும், சரீரங்கள் அனைத்தும் வேறுபட்டவையாகும். பல்வேறு வகையான சரீரங்கள் உள்ளன, ஆனால் ஆத்மாக்கள் அனைவரும் ஒரே வகையானவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையின் குழந்தைகள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். உங்களிடம் இந்த ஞானம் அனைத்தும் இருந்தது, ஆனால் அது படிப்படியாக மறைந்துவிட்டது. இறுதியில் எதுவுமே எஞ்சியிருக்காதவாறு அது மறைந்துவிடுவதால், அது அறியாமை என்று அழைக்கப்படுகின்றது. நீங்களும் அறியாமையில் இருந்தீர்கள். ஞானக்கடலின் மூலமாக நீங்கள் இப்பொழுது ஞானமுள்ளவர்கள் ஆகுகின்றீர்கள். ஓர் ஆத்மா மிகவும் சூட்சுமமானவர்; அவரை இக் கண்களால் பார்க்க முடியாது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி, உங்களை ஞானம் நிறைந்தவர்கள் ஆக்கும்பொழுதே, நீங்கள் உஷார் அடைகின்றீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்கும். இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் இருள் சூழ்ந்துள்ளது, அதாவது, ஆத்மாக்கள் மங்கலாகி விட்டார்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், ஒளி ஏற்றப்படும். பின்னர் நீங்கள் ஞானமுள்ளவர்கள் ஆகுவீர்கள். தந்தை எவரையும் அவதூறு செய்வதில்லை. அவர் நாடகத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர் குழந்தைகளுக்குக் கூறியுள்ளார்: அனைவரும் முட்டாள்தனமான புத்திகளைக் கொண்டவர்கள் ஆகிவிட்டார்கள். யார் இதைக் கூறுபவர்? தந்தையே ஆவார். குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் உங்களுடைய புத்தி மிகவும் அழகானவை ஆகிவிட்டன. நீங்கள் இப்பொழுது அதை உணர்கின்றீர்கள், இல்லையா? நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுவிட்டீர்கள். ஞானம் ஒரு கல்வி என்று அழைக்கப்படுகின்றது. தந்தையின் கல்வியினால் எங்களுடைய தீபங்கள் ஏற்றப்பட்டுவிட்டன. இதுவே உண்மையான தீபாவளி என்று அழைக்கப்படுகின்றது. எங்களுடைய குழந்தைப் பருவத்தில், மக்கள் சிறிய மண்விளக்குகளில் எண்ணெய் ஊற்றி அவற்றை ஏற்றுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்கின்றது. எவ்வாறாயினும், அதனால் தீபாவளி வர மாட்டாது. உள்ளேயிருக்கின்ற ஆத்மாவே மங்கலாகிவிட்டார். தந்தை வந்து ஆத்மாவின் ஒளியை ஏற்;றுகின்றார். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்துக் கற்பிக்கின்றார். ஒரு பாடசாலையில், அவர்களுக்கு ஓர் ஆசிரியர் கற்பிக்கின்றார். அந்தக் கல்வி எல்லைக்குட்பட்டது, ஆனால் இந்த ஞானமோ எல்லையற்றதாகும். சாதுக்கள் அல்லது புனிதர்கள் எவராவது உங்களுக்குக் கற்பிக்கின்றார்களா? படைப்பவரின் அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கின்றீர்களா? எப்பொழுதாவது எவராவது வந்து அதை உங்களுக்குக் கற்பித்ததுண்டா? எவராவது வேறு எங்கேயாயினும் இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார்களா என்று பாருங்கள்! ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு இதைக் கற்பிப்பதால், நீங்கள் அவருடன் கற்க வேண்டும். தந்தை எதிர்பாராத விதத்தில் வருகின்றார். அவர் வரப் போகின்றார் என்று அறிவிப்பதற்காக முரசைக் கொட்ட மாட்டார். அவர் எதிர்பாராத விதத்தில் வந்து பிரவேசிக்கின்றார். அவர் அங்கங்களைப் பெறும்வரையில், அவரால் ஒரு சப்தத்தையும் எழுப்ப முடியாது. ஓர் ஆத்மாவும் அவயங்களின்றி, எந்தச் சப்தத்தையும் எழுப்ப முடியாது. அவர் ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும்பொழுது மாத்திரமே அவர் சப்தத்தை எழுப்புகின்றார். நீங்கள் இதை மக்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, உங்களை எவரும் நம்ப மாட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கும்பொழுதே, நீங்கள் அதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கமுடியாது. விநாசக் காட்சியைக் காண்பதற்கு எவரும் விரும்ப மாட்டார்கள். தந்தையே வந்து இந்தக் காட்சியை அருள்கின்றார். நாடகத்திற்கேற்ப, பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெற விரும்புபவர்கள், தொடர்ந்தும் வருவார்கள். ஞானம் பலருக்கும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்! எண்ணற்ற மக்கள் பல்வேறு கிராமங்களிலிருந்தும் வருகின்றார்கள். பரமாத்மாவுடன் ஆத்மாக்களுக்கான இந்த மேளா, ஒருமுறை மாத்திரமே இடம்பெறுகின்றது. அவர் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். தந்தை வந்து புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். ஒளியேற்றப்பட்டவர்கள், பின்னர் சென்று ஏனையோருக்கு ஓளியேற்றுவார்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். நீங்கள் அனைத்து விடயங்களுக்காகவும் உங்களுடைய புத்தியைப் பயன்படுத்த வேண்டும். பக்திமார்க்கத்தில், இருள் உள்ளது. ஞானத்தைக் கொடுக்கக்கூடிய ஒரேயொரு தந்தையே தேவைப்படுகின்றார். அவர் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். பழைய உலகில் ஞானத்தைப் பெற முடியாது. இன்னமும் 40,000 வருடங்கள் உள்ளன என மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். 40,000 வருடங்களின் பின்னர் கடவுள் வந்து, நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்து, தமக்கு சற்கதி அருள்வார் என அவர்கள் நம்புகிறார்கள். அறியாமை நிலவுகின்றது என்பதே அதன் அர்த்தமாகும். அதுவே அறியாமை என்ற இருள் என அழைக்கப்படுகின்றது. அறியாமையில் இருப்பவர்கள் இந்த ஞானத்தை கொண்டிருக்க வேண்டும். பக்தியை ஞானம் என அழைக்க முடியாது. இந்த ஞானம் எதுவுமே ஆத்மாக்களிடம் இல்லை. மந்த புத்திகளைக் கொண்டிருப்பதினால், அவர்கள் பக்தியை ஞானம் என்று எண்ணுகிறார்கள். ஒரு புறத்தில் அவர்கள் “ஞான சூரியன் வரும்பொழுது, ஒளியேற்றப்படும்” என்று கூறுகின்றார்கள், ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பாடுகின்றார்கள்: ஞானசூரியன் உதிக்கும்பொழுது…. அவர்கள் யாரை ஞானசூரியன் என்று அழைக்கின்றார்கள்? அவர் எப்பொழுது வந்தார் என்பது எவருக்கும் தெரியாது. கலியுகம் முடிவுறும்பொழுது, ஒளியேற்றப்படும் என்று ஒரு பண்டிதரைப் போன்றோர் கூறுவர். தந்தை வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்கின்றீர்கள். ஓர் ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றார், ஆனால் அவர்கள் அனைவரும் ஒரேயளவுக்குக் கற்க மாட்டார்கள். ஒரு கல்வியில், ஒருபொழுதும் அனைவருக்கும் ஒரேயளவு புள்ளிகள் இருக்க மாட்டாது. எல்லையற்ற தந்தை வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். பழைய உலகின் விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. இந்த நேரத்தில் மாத்திரமே, நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுவதுடன், தந்தையுடன் யோகத்தைக் கற்க வேண்டும். நினைவு செய்வதன் மூலமே உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: நான் வந்து இந்தச் சரீரத்தைக் கடனாக எடுக்கின்றேன், அதாவது, நான் சங்கமயுகத்தில் மாத்திரமே சடப்பொருளின் ஆதாரத்தைப் பெறுகின்றேன். இந்த வார்த்தைகளும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாபா ஏனைய சமயநூல்களின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஒரு கீதையே உள்ளது. இது இராஜயோகக் கல்வியாகும். அவர்கள் கீதை என்னும் பெயரைக் கொடுத்துள்ளார்கள். ஆரம்பத்தில், எழுதப்பட்டுள்ளது: “கடவுள் பேசுகின்றார்”, ஆனால் யார் கடவுள் என்று அழைக்கப்படுகின்றார்? கடவுள் அசரீரியானவர், அவருக்குச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அதுவே ஆத்மாக்கள் வசிக்கின்ற, அசரீரி உலகமாகும். சூட்சும வதனம் ஓர் உலகம் என்று அழைக்கப்பட முடியாது. இது பௌதீக, சரீர உலகமாகும், ஆனால் அதுவோ ஆத்மாக்களின் உலகம் ஆகும். முழு நாடகமும் இங்கு நடிக்கப்படுகின்றது. அசரீரி உலகிலுள்ள ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ் சிறியவர்கள். பின்னர் தங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு இங்கு அவர்கள் வருகின்றார்கள். இந்த எண்ணங்கள் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் மாத்திரம் பதியப்பட்டுள்ளன. இது ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. வேதங்களும் சமயநூல்களும் ஞானமல்ல, அவை பக்தி மார்க்கத்துக்குரியவை ஆகும். பாபா சந்நியாசிகள் பலரைச் சந்தித்தது போன்று, நீங்கள் சந்தித்ததில்லை. பாபா அதிகளவில் அவர்களுடைய சகவாசத்தில் இருந்தார்; அவர் பல குருமார்களையும் ஏற்றுக் கொண்டிருந்தார். அவர்களிடம் வினவப்பட்டது: நீங்கள் ஏன் துறவறத்தை மேற்கொண்டு உங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் துறந்தீர்கள்? அவர்கள் கூறுவார்கள்: விகாரத்தினூடாகப் புத்தி சீரழிந்துவிடுவதனால், நாங்கள் எங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் விட்டுச் சென்றோம். நல்லது, நீங்கள் சென்று காடுகளில் வசிக்கின்றீர்கள். ஆகவே, பின்னர், நீங்கள் உங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் நினைவுசெய்வதுண்டா? அவர்கள் பதிலளித்தார்கள்: ஆம். ஒரு சந்நியாசி வீட்டுக்குத் திரும்பிச் சென்றதையும் பாபா பார்த்தார். இதுவும் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கு வயதாகும்பொழுது, அவர்கள் ஓய்வுபெறும் ஸ்திதிக்குள் செல்கின்றார்கள். இளமைப் பருவத்தில் ஒருவர் ஓய்வுபெற மாட்டார். பல ஆடையற்ற இளைஞர்கள் கும்பமேளாவுக்குச் செல்கின்றார்கள். தங்களுடைய பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் போதைவஸ்துகளை உட்கொள்கின்றார்கள். உங்களிடம் பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்தக்கூடிய யோகசக்தி உள்ளது. யோகசக்தி மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அவர்கள் இறுதியில் குளிர்மையடைகின்றார்கள். சில குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, மாயை என்னைப் பெருமளவுக்குத் துன்புறுத்துகின்றாள். அங்கு அத்தகைய விடயங்கள் இருக்க மாட்டாது. நீங்கள் யோகத்தில் உறுதியாகும்பொழுது, பௌதீகப் புலன்கள் கட்டுப்படுத்தப்படும். பௌதீகப் புலன்கள் குளிர்மையடையும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. அங்கு இதைப் போன்று அழுக்கானது எதுவும் இருக்காது. அத்தகைய சுவர்க்க பூமிக்கு உங்களை அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். அவர் உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார், மாயையோ உங்களைத் தகுதியற்றவர்கள் ஆக்குகின்றாள், அதாவது, ஜீவன்முக்தி தாமமாகிய, சுவர்க்கத்துக்குச் செல்வதற்குத் தகுதியற்றவர்கள் ஆக்குகின்றாள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். அதற்குத் தூய்மையே முதன்மையானதாகும். நீங்களும் பாடுகின்றீர்கள்: பாபா, நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! தூய்மை என்றால் தூய்மையே. நினைவுகூரப்படுகின்றது: ஏன் நாங்கள் அமிர்தத்தைத் துறந்து நஞ்சைப் பருக வேண்டும்? அதன் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரைக்கும் துன்பத்தை விளைவிப்பது நஞ்சு என அழைக்கப்படுகின்றது. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களைப் பல தடவைகள் சந்தித்துள்ளார். தாழ்ந்தவராக இருப்பதிலிருந்து நீங்கள் அதிமேன்மையானவர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். ஓர் ஆத்மா தூய்மையாகும்பொழுது, அவருடைய ஆயுட்காலம் நீண்டதாகுகின்றது. அவர் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் - அனைத்தையும் பெறுகின்றார். உங்களால் இதை ஒரு பலகையில் எழுத முடியும்: ஒரு விநாடியில் 21 சந்ததிகளுக்கான ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம். நீங்கள் தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தியை 21 பிறவிகளுக்குப் பெறுகின்றீர்கள். சில குழந்தைகள் ஒரு பலகையைப் போடுவதற்கும் பயப்படுகின்றார்கள். அனைவரின் வீடுகளுக்கும் வெளியே ஒரு பலகையை வைக்க வேண்டும். நீங்கள் சத்திரசிகிச்சை நிபுணரின் குழந்தைகள், இல்லையா? நீங்கள் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் - அனைத்தையும் பெறுவதால், பின்னர் நீங்கள் அதை ஏனையோருக்குக் கொடுக்க வேண்டும். உங்களால் அதைக் கொடுக்க முடியும் எனின், ஏன் நீங்கள் அதை ஒரு பலகையில் எழுதக்கூடாது? பின்னர் மக்கள் வந்து இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் ஆரோக்கியமும், செல்வமும், மற்றும் தூய்மையும் இருந்தன என்பதைப் புரிந்துகொள்வார்கள். ஒரு விநாடியில் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியை நீங்கள் பெறுகின்றீர்கள். மக்களிற் பலரும் உங்களிடம் வருவார்கள். உங்களால் அமர்ந்திருந்து விளங்கப்படுத்த முடியும்: இந்தப் பாரதம் “தங்கச் சிட்டுக்குருவி” ஆக இருந்தது. அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களே முதலில் 84 பிறவிகளையும் எடுப்பவர்கள். அவரே முதல் இலக்கத்தை உடையவராகவும்; பின்னர் இறுதி இலக்கமாகவும் ஆகுகின்றார். தந்தை கூறுகின்றார்: உங்களுடைய 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைந்து விட்டது. அது மீண்டும் ஆரம்பமாக வேண்டும். எல்லையற்ற தந்தை மாத்திரம் வந்து உங்களை இந்த அந்தஸ்தை அடையச் செய்கின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துகொண்டு, தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோர வேண்டும், ஆனால் கல்வியும் இருக்க வேண்டும். நீங்களே சுய தரிதனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். இங்கு வருகின்ற புதியவர்களால் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். ஆத்மாவே சுயம் என்று அழைக்கப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். தூய்மையாக இருந்த ஆத்மாவாகிய நான், ஆரம்பத்திலிருந்து 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளேன். நீங்கள் முதலில் சிவனை வழிபட்டீர்கள் என்று தந்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் கலப்படமற்ற பக்தர்களாக இருந்தீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இதை விளங்கப்படுத்த முடியாது. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்களே முதலில் பிறவி எடுக்கின்றவர்கள். ஒரு நபர் செல்வந்தராக இருக்கும்பொழுது, அவருடைய முன்னைய பிறவியில் அத்தகைய செயல்களைப் புரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அது அவருடைய கடந்த காலச் செயல்களின் கணக்காக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. நல்லது, எந்த விதமான செயல்களை இலக்ஷ்மியும் நாராயணனும் புரிந்தார்கள்? தந்தை இங்கமர்ந்திருந்து அதை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் தங்களுடைய 84 பிறவிகளையும் பூர்த்திசெய்துவிட்டார்கள், அவர்கள் முதல் இலக்கப் பிறவிக்குள் செல்ல வேண்டும். கடவுள் சங்கமயுகத்தில் மாத்திரமே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வருகின்றார். பாபா உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள்; புரிந்துகொள்கின்றீர்கள். எப்படியிருப்பினும், நீங்கள் மறந்து விடுவீர்கள். செயல், நடுநிலைச் செயல், பாவச்செயலின் ஆழமான தத்துவத்தைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். இராவண இராச்சியத்தில், உங்களுடைய செயல்கள் பாவம் மிக்கவை ஆகும். அங்கு (சத்தியயுகத்தில்) உங்களுடைய செயல்கள் நடுநிலையானவை ஆகும். அங்கு இராவண இராச்சியம் இருப்பதில்லை. அங்கு விகாரங்கள் இருப்பதில்லை. அங்கு, யோகசக்தி இருக்கும், ஏனெனில் யோகசக்தியினாலே நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். ஆகவே, நிச்சயமாக, ஒரு தூய்மையான உலகமும் தேவைப்படுகின்றது. பழைய உலகம் தூய்மையற்றதும் புதிய உலகம் தூய்மையானதும் ஆகும். அது விகாரமற்ற உலகம், இது விகாரமான உலகம் ஆகும். தந்தை மாத்திரமே வந்து விலைமாதர் இல்லத்தைச் சிவாலயமாக ஆக்குகின்றார். சத்தியயுகம் சிவாலயம் ஆகும். சிவபாபா வந்து உங்களைச் சத்தியயுகத்துக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்துக்குச் சென்று அவர்களை வினவ முடியும்: அவர்கள் எவ்வாறு தங்களுடைய அந்தஸ்தை அடைந்தார்கள் என்பதும் அவர்கள் எவ்வாறு உலகின் அதிபதிகள் ஆகினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தந்தை கூறுகின்றார்: அது உங்களுக்குத் தெரியாது; அது எனக்கு தெரியும். எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் அவர்களின் அந்தஸ்தை அடைந்தார்கள் என்பதைத் தந்தையின் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரம் அவர்களுக்குக் கூற முடியும். அவர்களே முழுமையான 84 பிறவிகளையும் எடுத்தவர்கள்;. பின்னர் தந்தை அதிமங்களகரமான சங்கமயுகத்தில் வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து உங்களுக்கு இராச்சியத்தையும் கொடுத்தார். அதற்கு முன்னர், நீங்கள் முதல் இலக்கத் தூய்மையற்றவர்களாக இருந்து, பின்னர் முதல் இலக்கத் தூய்மையானவர்கள் ஆகினீர்கள். முழு இராச்சியமும் உள்ளது. யார் அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார்கள் என்பதிலிருந்து அனைத்தும் உங்களுடைய படங்களில் தெளிவாக உள்ளன. பரமாத்மாவாகிய பரமதந்தையே அதிமேலானவர். தேவர்களால் இதைக் கற்பிக்க முடியாது. கடவுள் மாத்திரம் ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுவதுடன் அதைக் கற்பிக்கின்றார். அவரே தந்தை, ஆசிரியர், சத்குரு எனவும் அழைக்கப்படுகின்றார். ஆரம்பத்திலிருந்து சிவனை வழிபட்டு வந்தவர்களால் மாத்திரம் இவ் விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயங்களைக் கட்டியவர்களை உங்களால் வினவ முடியும்: நீங்கள் இந்த ஆலயத்தைக் கட்டியுள்ளீர்கள், ஆனால் அவர்கள் எவ்வாறு தங்களுடைய அந்தஸ்தைப் பெற்றார்கள்? அது எப்பொழுது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது? பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்கள் இப்பொழுது எங்கு உள்ளார்கள்? நீங்கள் அவர்களுக்கு 84 பிறவிகளின் கதையைக் கூறும்பொழுது, அவர்கள் மிகவும் சந்தோஷமடைவார்கள். உங்களுடைய சட்டைப்பையில் ஒரு படம் இருக்கட்டும். உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். ஆரம்பத்திலிருந்து சிவனை வழிபட்டு வந்தவர்களே, இதைத் தொடர்ந்து செவிமடுத்துச் சந்தோஷம் அடைவார்கள். அவர்கள் உங்களுடைய குலத்துக்குரியவர்கள் என்பதைப் பின்னர் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நாளுக்கு நாள், பாபா உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறைகளைக் கற்பிக்கின்றார். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்ற புரிந்துணர்வை நீங்கள் இப்பொழுது பெற்றுவிட்டீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான சத்தியயுக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இக்கல்வியினூடாக மாத்திரம் நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பல தலைப்புக்கள் உள்ளன. நீங்கள் அவர்களுக்கு பரமாத்மாவாகிய பரமதந்தையின் சுயசரிதையை கூறவேண்டும். இதனை நீங்கள் 'விலைமாதர் இல்லம் என்றால் என்ன, சிவாலயம் என்றால் என்ன' என்ற தலைப்பில் எடுத்துரைக்கலாம். இலக்ஷ்மி நாராயணனின் 84 பிறவிகளின் கதை என்பதும் ஒரு தலைப்பாகும். உலகில் எவ்வாறு அமைதி இருந்தது, பின்னர் அது எவ்வாறு அமைதியற்றதாகியது, இப்பொழுது எவ்வாறு மீண்டும் ஒருமுறை அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதும் ஒரு தலைப்பு ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மேன்மையானவர்களாக வேண்டுமாயின், நினைவு சக்தியின் மூலம் ஆத்மாவைத் தூய்மை ஆக்குங்கள். பௌதீகப் புலன்களினூடாக பாவச் செயல்கள் எவற்றையும் செய்ய வேண்டாம்.

2. ஞானமுள்ளவர்களாகி, ஆத்மாக்களை விழித்தெழச் செய்கின்ற சேவையைச் செய்யுங்கள். ஆத்மா என்னும் தீபத்தினுள் ஞானமும் யோகமும் என்ற எண்ணெயை ஊற்றுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்களுடைய புத்தியைச் சுத்தமாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் புள்ளி ரூபத்தில் ஸ்திரமாகுவதன் மூலம், உங்களின் மனதையும் புத்தியையும் எந்தவிதமான எதிர்மறையான ஆதிக்கத்தில் இருந்தும் பாதுகாப்பாக வைத்திருந்து, ஒரு விசேடமான ஆத்மா ஆகுவீர்களாக.

நீங்கள் ஒவ்வொரு பருவகாலத்திலும் உங்களை அந்தப் பருவகாலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக விசேட கவனம் செலுத்துகிறீர்கள். மழைக்காலம் ஏற்படும்போது, ஒரு குடையையும் ரெயின்கோட் போன்றவற்றையும் உங்களுடன் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறீர்கள். குளிர் காலத்தில், நீங்கள் குளிரில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை அணிவீர்கள். அதேபோல், தற்சமயம், மாயை உங்களின் மனதிலும் புத்தியிலும் எதிர்மறையான உணர்வுகளையும் நோக்கங்களையும் உருவாக்கும் விசேடமான பணியைச் செய்யும்போது, நீங்கள் குறிப்பாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைச் செய்வதற்கான இலகுவான வழிமுறை, உங்களைப் புள்ளி ரூபத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்வதே. ஒரு வியப்புக்குறி அல்லது கேள்விக்குறியைப் போடுவதற்குப் பதிலாக, முற்றுப்புள்ளி வைத்து, ஒரு விசேடமான ஆத்மா ஆகுங்கள்.

சுலோகம்:
கீழ்ப்படிவான ஆத்மா என்பவர், ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் செயலிலும் 'ஆம், எனது பிரபுவே' எனச் சொல்வார்.