31.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவைக் கொண்டிருப்பதுடன், இக்கல்வியிலும் முழுக் கவனம் செலுத்துங்கள். நினைவைக் கொண்டிருப்பதனால், நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள், கற்பதனால் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள்.

பாடல்:
புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு, நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி என்ன?

பதில்:
புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு, அனைத்தின் மீதும் நீங்கள் கொண்டுள்ள பற்றை அகற்றி விடுங்கள். நீங்கள் உங்களது செல்வம், குழந்தைகள் அல்லது வீடு போன்றவற்றை நினைவு செய்யக்கூடாது. சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள், அப்பொழுதே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக்கொள்வீர்கள். நீங்கள் ஒரு மிகவும் முக்கியமான பரீட்சையில் சித்தியெய்தப் போகின்றீர்கள் என்ற போதையை உங்கள் புத்தி கொண்டிருக்க வேண்டும். எங்களின் கல்வி மிக முக்கியமானது. துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அந்த அதியன்பிற்கினிய பாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரே உங்களுக்குக் கற்பிப்பதால், குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய தூய பெருமையைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவே கற்கின்றார். ஆத்மா தனது சம்ஸ்காரங்களைச் சுமந்து செல்கின்றார், சரீரம் சாம்பலாகி விடுகின்றது. எனவே, தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்பதுடன், யோகத்தையும் பயில்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை உங்களை நினைவில் நிலைத்திருக்குமாறும், அதனால் உங்களது பாவங்கள் அழிக்கப்படும் எனவும் உங்களுக்குக் கூறியுள்ளார். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைத் தூய்மையாக்குபவர் என அழைக்க முடியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் இவ்வாறு அழைக்கப்படுவார்களா? இல்லை, ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். ஒரேயொருவர் மாத்திரமே முழு உலகையும் தூய்மையாக்குபவர். அவர் உங்கள் தந்தை ஆவார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் நினைவுசெய்கின்ற ஒரேயொருவரே அதியன்பிற்கினிய எல்லையற்ற தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்: பாபா, வாருங்கள்! வந்து, எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்! இது அதே உலகமாகும்; அனைவரும் இச்சக்கரத்திற்குள் வர வேண்டும். தந்தை 84 பிறவிகளின் சக்கரத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாவே சம்ஸ்காரங்களைத் தன்னுடன் சுமந்து செல்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த மரண பூமியை விட்டு நீங்கி, அமரத்துவ உலகிற்குச் செல்வதற்காக, அதாவது, நரகத்திலிருந்து சுவர்க்கத்திற்குச் செல்வதற்காகவே கற்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை மீண்டும் ஒருமுறை உலகின் அதிபதிகள் ஆக்குவதற்காகவே வருகின்றார். நீங்கள் மிகவும் முக்கியமான பரீட்சையொன்றில் சித்தியெய்தப் போகின்றீர்கள். அதி மகத்தான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். பாபா இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கும் நேரத்தில் உங்கள் போதை அதிகரிக்கின்றதா? பாபா அதிக விசையுடன் உங்கள் போதையை அதிகரிக்கச் செய்கின்றார். தந்தை உங்களை அமரத்துவ உலகிற்குத் தகுதி வாய்ந்தவர்களாக்;குவதற்காக வருகின்றார். இங்கு தகுதிவாய்ந்தவர்கள் எவருமே இல்லை. நீங்கள் தகுதி வாய்ந்தவர்களாகிய தேவர்களின் விக்கிரகங்களை வழிபடுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். பாபா இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களை முழு உலகினதும் அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே, அந்தப் போதை அதிகரிக்க வேண்டும். நீங்கள் இங்கிருக்கும்போது உங்கள் போதை அதிகரிப்பதாகவும், வெளியில் செல்லும் பொழுது, அது குறைவடைவதாகவும் இருக்கக்கூடாது. குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, நாங்கள் உங்களை மறந்து விடுகின்றோம். நீங்கள் எங்களுக்குக் கற்பித்து, எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குவதற்கு, தூய்மையற்ற உலகிற்கு, தூய்மையற்ற சரீரத்திற்குள் வருகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலக இராச்சியம் என்ற மாபெரும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மறைமுகமானவர்கள். எனவே, அத்தகைய மேன்மையான கல்வியில் நீங்கள் மிக நன்றாகக் கவனம் செலுத்த வேண்டும். நினைவு யாத்திரையை மாத்திரம் கொண்டிருந்தால் போதாது, கற்பதும் அவசியமாகும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்ற ஞானம் உங்கள் புத்தியில் சுழன்று கொண்டிருக்க வேண்டும். பாபா பெரும் விசையுடன் உங்கள் போதையை அதிகரிக்கச் செய்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவருமே உங்களைப் போன்று முக்கியஸ்தர்கள் ஆகமுடியாது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். உங்களைத் தவிர வேறு எவராவது எப்பொழுதாவது உலக அதிபதிகளாக ஆகுகிறார்களா? கிறிஸ்தவர்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்தார்கள். எவ்வாறாயினும், உங்களைத் தவிர வேறு எவருமே உலக அதிபதிகள் ஆகுவதற்கு நியதி அனுமதியளிக்காது. தந்தையால் மாத்திரமே உங்களை அவ்வாறு ஆக்க முடியும். வேறு எவருக்குமே இந்தச் சக்தி இல்லை. குழந்தைகளாகிய உங்கள் புத்தி மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். பாபா தொடர்ந்தும் தேவையான அளவு ஞானாமிர்தத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் பாபாவை பெருமளவு நினைவு செய்வதாக எண்ணி, வெறுமனே திருப்திப்படக்கூடாது. நினைவின் மூலமாகவே நீங்கள் தூய்மையாகுவீர்கள், ஆனால் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் நீங்கள் பெற வேண்டும். அனைவரும் தண்டனை பெற்றாவது தூய்மையாகவே வேண்டும். எவ்வாறாயினும், தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார். அனைவரும் அமைதிதாமத்திற்குச் செல்வார்கள். அனைவரும் அங்கு சென்று வெறுமனே அமர்ந்திருப்பார்களா? அத்தகைய ஆத்மாக்களுக்கு எவ்விதப் பெறுமதியும் கிடையாது. மீண்டும் கீழிறங்கி வந்து சுவர்க்கத்தில் ஆட்சி செய்பவர்களே பெறுமதி வாய்ந்தவர்களாவர். நீங்கள் உலக இராச்சியத்தைக் கோருவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் இராச்சியத்தைக் கொண்டிருந்தீர்கள், பின்னர் மாயை உங்களிடமிருந்து அதை அபகரித்தாள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை இராவணனாகிய மாயையை வெற்றிகொள்ள வேண்டும். நீங்களே உலக அதிபதிகள் ஆகவேண்டும். நீங்கள் இப்பொழுது இராவணனை வெற்றிகொள்ளுமாறு செய்யப்படுகின்றீர்கள், ஏனெனில், இராவண இராச்சியத்தில் நீங்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். இதனாலேயே மனிதர்கள் குரங்குகளுடன் ஒப்பிடப்படுகின்றார்கள். குரங்குகளே அதிகளவு விகாரம் நிறைந்தவை. தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். 84 பிறவிகள் எடுக்கையில் தேவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டனர். தந்தை கூறுகின்றார்: உங்கள் செல்வம், உடைமைகள், உங்கள் குழந்தைகள், உங்கள் சரீரம் போன்ற அனைத்திலிருந்தும் பற்றை அகற்றிவிடுங்கள். செல்வந்தர்கள் செல்வத்திற்காக மரணிக்கின்றார்கள்; அவர்களால் தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் பணத்தை விட்டுச்செல்ல முடியாதுள்ளது. அவர்கள் இராவணனின் சிறைக்குள் இருப்பார்கள். பல மில்லியன்கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினராலேயே அனைத்தின் மீதும் உள்ள தங்கள் பற்றை நீக்கி, குரங்குகளிலிருந்து தேவர்களாக மாற முடியும். செல்வந்தர்களும், பல மில்லியன்களை உடையவர்களும் பணத்திற்காகவே மரணிப்பார்கள்; அவர்கள் பணத்தைத் தங்களின் கைப்பிடிக்குள் வைத்திருப்பார்கள். அவர்களது முழு வாழ்க்கையும் அதற்குள்ளேயே அடங்கியிருக்கிறது. நாள் முழுவதும் அவர்கள் தங்களது மாளிகைகள், குழந்தைகள் போன்றவற்றையே நினைவு செய்கிறார்கள். அந்த நினைவுடனேயே அவர்கள் மரணிப்பார்கள். தந்தை கூறுகின்றார்: இறுதியில் எதுவுமே நினைவு செய்யப்படக்கூடாது. என்னை மாத்திரம் நினைவு செய்வதனால், உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்பட முடியும். செல்வந்தர்களின் பணம் மண்ணோடு மண்ணாகி விடும், எனெனில், அப்பணம் பாவத்தின் மூலமாகவே பெறப்படுவதால், அதனால் எவ்விதப் பயனும் கிடையாது. தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு. நான் ஏழைகளைச் செல்வந்தர்களாகவும், செல்வந்தர்களை ஏழைகளாகவும் ஆக்குவேன். உலகம் மாறவேண்டும். அம்மக்கள் தங்கள் செல்வத்தையிட்டுப் அதிகளவு போதை கொண்டிருக்கின்றார்கள்: நாங்கள் இந்தளவு செல்வம், ஆகாய விமானங்கள், மோட்டர் கார்கள், மாளிகைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் தந்தையை நினைவு செய்வதற்கு எவ்வளவுதான் கடுமையாக முயற்சி செய்தாலும், அவர்களின் நினைவு ஸ்திரமாக இருக்க முடியாது. நியதி அதை அனுமதிக்காது. பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே வெளித்தோன்றுவார்கள். ஏனையோர் தொடர்ந்தும் பணத்தை மாத்திரமே நினைவு செய்வார்கள். தந்தை கூறுகின்றார்: உங்களது சரீரம் உட்பட, நீங்கள் காண்கின்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள். அதில் சிக்கிக் கொள்வதால், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியாது. தந்தை உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுவார். நீங்கள் ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணர் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். எனவே, அதற்காக முழுமையான யோகத்தைக் கொண்டிருப்பது அவசியம் ஆகும். நீங்கள் ஒரேயொரு சிவபாபாவைத் தவிர வேறு எதனையும், அதாவது, உங்கள் செல்வம், உங்கள் குழந்தைகள் போன்ற எதனையும் நினைவு செய்யக்கூடாது. அப்பொழுதே உங்களால் அனைத்திலும் அதிமேலான புலமைப் பரிசிலைக் கோரி, ஓர் உயர்ந்த பரிசையும் பெற முடியும். அம்மக்கள் அமைதி பற்றி ஆலோசனை வழங்கும்போது, சதப் பெறுமதி வாய்ந்த பதக்கத்தையே பெறுவதுடன், அதனையிட்டுக் களிப்படைந்தவர்களாகவும் ஆகுகின்றனர். நீங்கள் இப்பொழுது என்ன பரிசைப் பெறுகின்றீர்கள்? நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஐந்து முதல் ஆறு மணித்தியாலங்கள் வரை யோகத்தில் நிலைத்திருந்தால், இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகிவிடுவீர்கள் என்றில்லை, இல்லை, நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். இறுதியில் ஒரேயொரு சிவபாபா மாத்திரமே நினைவு செய்யப்பட வேண்டும்; வேறு எவருமே நினைவு செய்யப்படக் கூடாது. நீங்கள் அதிமகத்தான தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள் எனவும், பின்னர் மாயை உங்களைத் தூய்மையற்ற, பூஜிப்பவர்கள் ஆக்கிவிட்டாள் எனவும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். மக்கள் உங்களை வினவுகின்றனர்: நீங்கள் பிரம்மாவை ஒரு தேவராக அல்லது கடவுளாக நம்புகின்றீர்களா? அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் பிரம்மாவைக் கடவுள் என்று கூறுவதில்லை. வந்து, இதனைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் மிகச் சிறந்த படங்கள் உள்ளன. திரிமூர்த்தி, சக்கரம், விருட்சம் ஆகிய படங்கள் முதற்தரமானவை. இப்படங்கள் ஆரம்பத்திலிருந்தே உள்ளன, அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெளிநாட்டவர்களிடம் இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைக் கொண்டு சென்றால், அவர்களால் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியாது. திரிமூர்த்தி, சக்கரம், விருட்சம் ஆகிய படங்களே பிரதானமான படங்கள். யார் எந்நேரத்தில் வருகின்றார்கள், ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் எப்பொழுது முடிவடைகின்றது, பின்னர் அந்த ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பவர் யார், எவ்வாறு ஏனைய சமயங்கள் அனைத்தும் முடிவடைகின்றன போன்ற விடயங்கள் அவற்றில் காட்டப்பட்டுள்ளன. சிவபாபாவே அதி மேலானவர் என்பதையும், பின்னர் எவ்வாறு பிரம்மா விஷ்ணுவாகவும், விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றார் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இவ்விளக்கங்களைக் கொடுப்பதற்காகவே இப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காட்சிகளுக்காக மாத்திரமே சூட்சுமலோகம் உள்ளது. தந்தை முதலில் சூட்சுமலோகத்தையும், பின்னர் பௌதீக உலகத்தையும் உருவாக்குகின்றார். பிரம்மா ஒரு தேவர் அல்லர். விஷ்ணு ஒரு தேவர் ஆவார். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே காட்சிகளைப் பெறுகின்றீர்கள். மனித குலத்தின் தந்தையாகிய பிரம்மா இங்கேயே உள்ளார். பிரம்மாவுடன் பின்னர் தேவர்கள் ஆகுகின்ற பிராமணர்கள் உள்ளனர். தேவர்கள் எப்போதும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் தேவதைகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தேவதைகளாகிய பின்னர், சென்று ஒரு தேவரின் அந்தஸ்தைப் பெறுகின்றனர். அவர்கள் கருப்பை என்னும் மாளிகையிலிருந்து பிறப்பெடுப்பார்கள். உலகம் தொடர்ந்தும் மாற்றமடைகின்றது. நீங்கள் மேலும் முன்னேறும்போது, அனைத்தையும் காண்பீர்கள்; நீங்கள் மிகவும் உறுதியானவர்கள் ஆகுவீர்கள். சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணர் ஆகுவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் சித்தியடையாது விட்டால் பிரஜைகள் ஆகுவீர்கள். சந்நியாசிகளால் இவ்விடயங்கள் எதனையும் விளங்கப்படுத்த முடியாது. அவர்கள் இராமரை ஓர் அரசராகப் போற்றினாலும், அவர்கள் அவரது கௌரவத்தை முற்றிலும் அழித்துவிட்டார்கள். அங்கு எவ்வாறு அநீதியான விடயங்கள் இருக்க முடியும்? அவ் விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்க விடயங்களாகும். இதனாலேயே மாயையும் பொய், சரீரமும் பொய் என்பது நினைவுகூரப்படுகின்றது. மாயையே ஐந்து விகாரங்கள் என அழைக்கப்படுகின்றது, செல்வம் அல்ல. செல்வம், செழிப்பு என அழைக்கப்படுகின்றது. மாயை என்றால் என்ன என்பதுகூட மனிதர்களுக்குத் தெரியாது. தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: பரமாத்மாவாகிய நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் உங்களை என்னை விடவும் அதி மேன்மையானவர்களாக ஆக்குகின்றேன். நீங்கள் மிகவும் மேன்மையான கல்வியைக் கற்கின்றீர்கள். மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை என நினைவுகூரப்படுகின்றது. தேவர்கள் சத்தியயுகத்திலும், மனிதர்கள் கலியுகத்திலும் உள்ளனர். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். அவர் அனைத்தையும் உங்களுக்கு அத்தகையதோர் இலகுவான முறையில் கூறுகின்றார். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகுவதுடன், பிரஜைகள் பலரையும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் சத்தியயுகத்தில் இருந்த அளவு பிரஜைகளை நீங்கள் உருவாக்குகின்றீர்கள். சத்தியயுகம் இருந்தது, அது இப்பொழுது இல்லை. ஆனால் அது மீண்டும் ஒருமுறை இருக்கும். அந்நேரத்தில் இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருப்பார்கள். அவர்களின் உருவங்கள் இன்னமும் இருக்கின்றன. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். பின்னர் அது மறைந்துவிடும். துவாபர யுகத்தில் பக்திமார்க்கம் ஆரம்பமாகும்போது, இராவண இராச்சியமும் வருகின்றது. உலகச் சக்கரம் எவ்வாறு தொடர்ந்து சுழல்கின்றது என்பதை வெளிநாட்டவர்களுக்கும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். ஏனைய சமயத்தவர்கள் இலக்ஷ்மி நாராயணன் படத்துடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கமாட்டார்கள். இதனாலேயே பாபா திரிமூர்த்தி மற்றும் விருட்சப் படங்களே முக்கியமானவை எனக் கூறுகின்றார். இவை முதற்தரமானவை. விருட்சம், சக்கரம் ஆகிய படங்களிலிருந்து எச்சமயம் எப்போது வருகின்றது என்பதையும், கிறிஸ்து எப்போது வருகிறார் என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஏனைய சமயங்கள் அனைத்தும் கல்பத்தின் இரண்டாவது அரைப் பாகத்தில் இருக்கிறது, சூரிய, சந்திர வம்சங்களே கல்பத்தின் முதல் அரைப் பகுதியில் இருக்கின்றன. இது 5000 வருடங்கள் கொண்ட ஒரு நாடகமாகும். ஞானம், பக்தி, விருப்பமின்மை என்பன உள்ளன. ஞானம் பகலும், பக்தி இரவும் ஆகும். அதன்பின்னர் எல்லையற்ற விருப்பமின்மை உள்ளது. இப்பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது என்பதால் நீங்கள் அதனை மறந்துவிட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தூய்மையாக்குபவர் யார் என்பதையும் நீங்கள் நிரூபிக்க வேண்டும். ‘சீதையின் இராமரே தூய்மையாக்குபவர்’ என மக்கள் தொடர்ந்தும் இரவு பகலாகப் பாடுகின்றனர். காந்தி கீதையைப் படிப்பது வழக்கம். அவரும் 'ஓ, தூய்மையாக்குபவரே! சீதைகள் அனைவரினதும் இராமரே!" எனப் பாடினார். ஏனெனில் நீங்கள் அனைவரும் மணவாட்டிகளான சீதைகள். தந்தையே மணவாளன் ஆவார். அவர்கள் பின்னர் பாடுகின்றனர்: இராமரே ரகு குலத்து அரசர்…. இப்பொழுது, அவர் திரேதா யுகத்து அரசர் ஆவார். முழு விடயத்தையும் அவர்கள் குழப்பி விட்டார்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து கைதட்டிப் பாடுகின்றார்கள். நானும்கூட பாடியதுண்டு. நானும் ஒரு வருடமாக, காதியையே (பருத்திக் கைத்தறி ஆடைகள்) அணிந்தேன். இவரும் (பிரம்மா) காந்தியைப் பின்பற்றுபவராக இருந்தார்; அவர் அனைத்திலும் அனுபவம் பெற்றுள்ளார் என்பதைத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். முதலாவதாக இருந்தவர் இறுதியானவர் ஆகிவிட்டார். அவர் மீண்டும் முதலாமவர் ஆகுவார். நீங்கள் ஏன் பிரம்மாவின் படத்தை எங்கும் வைத்திருக்கின்றீர்கள் என மக்கள் உங்களைக் கேட்கின்றார்கள். அவர் ஏன் விருட்சத்தின் உச்சியில் நிற்பதாகக் காட்டப்படுகின்றார் என அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இத்தூய்மையற்ற உலகின் இறுதியில் விருட்சத்தின் உச்சியில் அவர் நின்றுகொண்டிருப்பது மிகவும் தெளிவாக இருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணரும் உச்சியிலேயே காட்டப்பட்டுள்ளார். இரு பூனைகள் சண்டையிடும்போது அவைகளுக்கிடையே இருந்து வெண்ணெயைக் ஸ்ரீகிருஷ்ணர் பெறுகின்றார். தாய்மார்கள் காட்சிகளைப் பெறுகின்றனர். அவருடைய வாயில் வெண்ணெயோ, அல்லது சந்திரனோ இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் உலக இராச்சியமே அவருடைய வாயில் இருக்கின்றது. இரு பூனைகள் சண்டையிடுகின்றன, அவைகளுக்கிடையே உள்ள வெண்ணெயைத் தேவர்களாகிய நீங்கள் பெறுகின்றீர்கள். அந்த வெண்ணெய் உலக இராச்சியத்தைக் குறிக்கின்றது. குண்டுகளை உற்பத்தி செய்வதில் அவர்கள் பல முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உடனடியாகவே மரணிக்கக்கூடிய அத்தகைய பொருட்களையே அவர்கள் இப்போது பயன்படுத்துகின்றார்கள். ஹிரோசிமா காலத்தில் நடந்தது போன்று அவர்கள் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க மாட்டார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அரைக்கல்பத்திற்குச் சந்தோஷமாக இருக்கிறீர்கள். அங்கு சண்டையிடுதல் போன்ற எதனதும் சுவடேனும் கிடையாது. அவையனைத்தும் பின்னரே ஆரம்பமாகியது. அப்போது இவ் விடயங்கள் எதுவும் இருக்கவில்லை, எதிர்காலத்திலும் அவை இருக்காது. சக்கரம் மீண்டும், மீண்டும் சுழலும். தந்தை அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார், குழந்தைகளாகிய நீங்கள் அதனை மிகச்சரியாகக் கிரகித்து, உங்களை இறை சேவையில் ஈடுபடுத்த வேண்டும். இது ஒரு தீய உலகம்; இது நச்சாறு எனவும் அழைக்கப்படுகின்றது. தந்தை உங்களை மேன்மையானவர்களாகக் கருதுமளவிற்கு நீங்கள் உங்களை மேன்மையானவர் எனக் கருதுவதில்லை எனத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மிக மேன்மையான குலத்திற்குரியவர்களாக இருப்பதால், மகத்தான போதையைக் கொண்டிருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியைச் சிறந்ததாக்குவதற்கு, தினமும் தேவையான அளவு ஞானாமிர்தத்தைப் பெறுங்கள். நினைவைக் கொண்டிருப்பதுடன் நீங்கள் நிச்சயமாக இக்கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இக்கல்வியின் மூலமே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்.

2. நாங்கள் அதி மேன்மையான குலத்திற்கு உரியவர்கள், கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! இந்தப் போதையில் நிலைத்திருங்கள். ஞானத்தைக் கிரகிப்பதுடன் இறை சேவையிலும் மும்முரமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
திடசங்கற்பம் நிறைந்தவராகவும், திருப்தி என்ற சிறப்பியல்பையும் கொண்டிருப்பதன் மூலம் எந்தவொரு கடினமான பரீட்சையிலும் வெற்றியீட்டுவீர்களாக.

திருப்தி பிராமணர்களின் விசேட குணமாகும். நீங்கள் பெற்றிருக்கின்ற பாகத்தில் திருப்தியாக இருப்பதே முன்னேற்றம் அடைவதாகும். என்ன நடந்தாலும், எவரேனும் உங்களை அவதூறு செய்தாலும், அருள்பவரின் குழந்தைகளாகிய நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் திருப்தியற்றவர்கள் ஆக முடியாது. உங்களையிட்டு நீங்கள் திருப்தி கொண்டிருப்பதுடன் பிறரையிட்டும் திருப்தியாக இருக்க வேண்டும். இதற்கு, எவ்வளவு கடினமான பரீட்சையாயினும் நீங்கள் திருப்தியாகவே இருப்பீர்கள் என்பதில் திடசங்கற்பம் கொண்டிருங்கள். அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் வெற்றியீட்டுவீர்கள்.

சுலோகம்:
சந்தோஷமாக இருப்பவர்களின் இதயங்களில், சந்தோஷ சூரியன் மிகப் பிரகாசமாக உதயமாகின்றான்.